தமிழீழ விடுதலை இயக்கம்

தமிழீழ விடுதலை இயக்கம்

காணாமல் போனவர்களை நீங்கள் கொன்றுவிட்டீர்கள், நீங்கள் கொலைக் குற்றவாளிகள்,” – கோவிந்தன் கருணாகரம் ஜனா

காணாமல் போனவர்களுக்கு நீங்கள் மரணச் சான்றிதழ் கொடுக்கப்போகின்றீர்கள் என்றால் நீங்கள் அவர்களைக் கொன்றுவிட்டீர்கள், நீங்கள் கொலைக் குற்றவாளிகள்,” என தமிழீழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமும், பாராளுமன்ற உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் ஜனா தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியின் ஐநா உரை மற்றும், ஐரோப்பிய ஒன்றிய குழுவினரின் சந்திப்பு போன்றன தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

சிலரிடம் இரண்டு முகங்கள் இருக்கும். ஒருவருக்கு ஒரு முகமும், இன்னொருவருக்கு இன்னொரு முகத்தையும் காட்ட முடியும். ஆனால் இந்த ஜனாதிபதியும், அவரது அரசாங்கமும் பல முகங்களை வைத்திருக்கிறார்கள்.
தங்களுக்கு விருப்பமானவர்களுக்கு விருப்பமான முகத்தைக் காட்டிக் கொள்கின்றார்கள். அந்தவகையிலே ஜனாதிபதி அவர்கள் ஐக்கிய நாடுகள் சபையில் சென்று உரையாற்றும் போது ஏதோ தான் தமிழ் மக்களுக்கு நல்லது செய்யத் தயாராக இருப்பதாகவும், புலம்பெயர் அமைப்புகள் என்னுடன் பேச வாருங்கள், இலங்கைக்கு வாருங்கள் என்றெல்லாம் அழைப்பு விடுத்திருக்கின்றார்.

உண்மையிலேயே மஹிந்த ராஜபக்சவின் கடந்த ஆட்சியிலே புலம்பெயர் பல அமைப்புகளுக்கும், புலம்பெயர் நாடுகளில் வாழும் பலருக்கும் தடையுத்தரவு விதித்தவர்கள் இவர்கள். 2015ல் ஏற்பட்ட நல்லாட்சியில் அந்தத் தடையுத்தரவுகள் தளர்த்தப்பட்டாலும், கோட்டபாய ராஜபக்ஷ அவர்கள் ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்பு மீண்டும் அவர்களுக்குத் தடையுத்தரைவைப் போட்டுவிட்டு தற்போது இலங்கைக்கு வாருங்கள் என்னுடன் பேசுங்கள் என்பது ஒரு வேடிக்கையான விடயம்.

காணாமல் போனவர்களுக்கு மரணச் சான்றிதழ் கொடுக்கின்றேன் என்று சொல்லியிருக்கின்றார். காணாமல் போனவர்களுக்கு நீங்கள் மரணச் சான்றிதழ் கொடுக்கலாம். ஆனால், உங்களிடம் கையளிக்கப்பட்டவர்கள் எங்கே? தங்களது மனைவிமார், பெற்றோர்கள் முன்னிலையில் அவர்களினால் நூற்றுக் கணக்கான தமிழ் மக்கள், முன்னணிப் போராளிகள், முக்கிய விடுதலைப் போராட்ட இயக்கமான ஈரோஸின் தலைவராக இருந்த பாலகுமார் மற்றும் அவரது மகன் போன்றோலெல்லாம் உங்களிடம் கையளிக்கப்பட்டவர்கள். அவர்களுக்கும் நீங்கள் மரணச் சான்றிதழ் கொடுக்கப்போகின்றீர்கள் என்றால் நீங்கள் அவர்களைக் கொன்றுவிட்டீர்கள் என்பதுதான் உண்மை. எனவே நீங்கள் கொலைக் குற்றவாளிகள், நீங்கள் தண்டனை பெற வேண்டியவர்கள். நீங்கள் அப்பட்டமான கொலையைச் செய்து விட்டு அவர்களுக்கு மரணச்சான்றிதழ் கொடுக்கின்றீர்கள் என்பதை நீங்களே ஏற்றுக் கொள்கின்றீர்கள். என்ற வகையிலேயே இந்த மரணச் சான்றிதழ் விடயத்தை நாங்கள் பார்க்கின்றோம்.

அதற்கும் மேலாக பயங்கரவாதத் தடைச்சட்டத்தை மீள்பரிசீலனை செய்வதற்கு முயற்சிப்பதாகக் கூறுகின்றீர்கள். ஐரோபிய ஒன்றியப் பாராளுமன்றம் உங்களுக்கான ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகைளை அடுத்த சித்திரையில் இருந்து நிறுத்துவதற்கு இருக்கின்றார்கள். அதற்கிடையில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்குமாறு கேட்டிருக்கின்றார்கள். நாங்கள் ஐரோப்பிய ஒன்றிய குழுவிடம் கேட்டுள்ள விடயம் பயங்கரவாத் தடைச்சட்டத்தை மீள்பரிசீலனை செய்வது அல்லது அதில் ஏதாவது திருத்தத்தைக் கொண்டு வருவதல்ல, முற்றுமுழுதாகப் பயங்கரவாதத் தடைச்சட்டம் நீக்கப்பட வேண்டும் என்பதே தமிழீழ விடுதலை இயக்கத்தின், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு என்று தெரிவித்தார்.

“சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தை முற்றுமுழுதாக நிர்மூலமாக்கிய வரலாறு டெலோவுக்கே உண்டு.” – கருணாகரம் ஜனா பெருமிதம் !

தமிழீழ விடுதலை இயக்கத்திற்கு நெடிய நீண்ட வரலாறு இருக்கின்றது எனவும் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தை முற்றுமுழுதாக நிர்மூலமாக்கிய வரலாறு டெலோவுக்கே உண்டு எனவும் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழீழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமுமான கோவிந்தன் கருணாகரம் ஜனா தெரிவித்துள்ளார்.

தமிழீழ விடுதலை இயக்கம் (டெலோ) தொடர்பில் அண்மைக் காலங்களில் வெளிவந்த கருத்துக்கள் தொடர்பில் குறிப்பிடுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை ஆரம்பிப்பதற்கு முயற்சி எடுத்த அமைப்பு முதலாவதாகச் சந்தித்த கட்சி தமிழீழ விடுதலை இயக்கம் தான். அதனைத் தொடர்ந்து தான் ஏனைய கட்சிகளை அந்த அமைப்பு சந்தித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது. தமிழீழ விடுதலை இயக்கத்திற்கு ஒரு பெரிய நீணட வரலாறு இருக்கின்றது. தமிழீழ விடுதலை இயக்கம் தான் ஆயுதப் போராட்ட இயக்கங்களிலே முதன் முதலாக ஆரம்பிக்கப்பட்ட இயக்கம். இதில் சில காலம் தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் கூட இருந்ததாக வரலாறுகள் உண்டு.

தமிழீழ விடுதலை இயக்கம் தான் ஒரு பாதுகாப்புப் படையினரின் அறணை முற்றுமுழுதாக அழிப்பு நடவடிக்கையினை மேற்கொண்டு அதனைக் காணொளியாகப் படைத்தது. 1984ம் ஆண்டு சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தை முற்றுமுழுதாக நிர்மூலமாக்கிய வரலாறு டெலோவுக்கே உண்டு. ஆயுதப் போராட்ட இயக்கங்களுக்குள் பல முரண்பாடுகள் ஏற்பட்டது வெளிப்படையான உண்மை. 2001லே கடந்த கால கசப்பான சம்பவங்களை மறந்து நாங்கள் எல்லோரும் ஒன்றாகினோம். இன்னுமொரு உண்மையும் இருக்கின்றது, ஆயுதப் போராட்ட இயக்கங்களாக இருந்து அரசியற் கட்சிகளாக போராட்ட இயக்கங்கள் பதிவு செய்யப்பட்டதன் பின்பு 1989ம் ஆண்டில் இருந்து இன்றுவரைக்கும் தொடர்ச்சியாக நடைபெற்ற ஒவ்வொரு பாராளுமன்றத் தேர்தல்களிலும் தமிழீழ விடுதலை இயக்கம் மாத்திரம் தான் பாராளுன்ற உறுப்புரிமையை வகித்திருந்தது.

ஆனால் வரலாறு தெரியாத சில பாராளுமன்ற உறுப்பினர்கள், தமிழ்த் தேசியத்தின் குழந்தைப் பிள்ளைகள், 2009 ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்டதன் பின்னர் தமிழ்த் தேசியத்துக்குள் வந்தவர்கள் கூறுகின்றார்கள் தமிழீழ விடுதலை இயக்கம் டெலோவும் ஒரு கட்சி என்று மக்களுக்குக் காண்பிப்பதற்காக ஜெனீவாவுக்கு அனுப்பிய கடிதத்தில் கையொப்பம் வைத்துள்ளது என்று. தமிழீழ விடுதலை இயக்கத்திற்கு நெடிய நீண்ட வரலாறு இருக்கின்றது. எமது கட்சியின் 50வது ஆண்டு பூர்த்தியை நாங்கள் 2019ம் ஆண்டு கொண்டாடியுள்ளோம். 52வது ஆண்டிலே தமிழீழ விடுதலை இயக்கம் பயணித்துக் கொண்டிருக்கின்றது. இந்த விடயங்கள் தெரியாமல் கருத்துக்கள் கூறுவது சிறுபிள்ளைத் தனமானது.

கட்சியிலே தேசியத்துடன் நீண்ட காலம் இருக்க வேண்டும், வளர வேண்டும், பக்குவம் அடைய வேண்டும், அதற்குப் பின்பு இந்த வரலாறுகளைச் சரியாகப் படிக்க வேண்டும். எம்மைப் பொருத்தமட்டில் சுமார் 39 வருடங்களாக போராட்டம், அரசியல் தமிழ் மக்களின் பிரச்சினைகள் என்ற வரலாற்றுடன் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். எங்களுக்கு கடந்த கால வரலாற்றினை யாரும் சொல்லித் தரத் தேவையில்லை. ஆனால் சிலருக்கு இந்த வரலாறுகளை யாராவது சொல்லிக் கொடுக்க வேண்டும் அல்லது ஏதாவது புத்தகத்தில் படித்துத் தெரிந்துகொள்ள வேண்டும். இந்த வரலாறுகளைப் பற்றி அறிய வேண்டுமாக இருந்தால் அவற்றைச் சரியானவர்களிடம் கேட்டு அறிந்து கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார்