தேனீ

தேனீ

ஜெமினி – தேனீ – கருத்துச் சுதந்திரம்: கருத்துச் சுதந்திரம் மறுக்கப்பட்ட சமூகத்தில் ஒரு சுதந்திர வேட்கைகொண்ட மனிதன்

சரத்து 19: ஒவ்வொருவரும் சுயாதீனமான கருத்துக்களைக் கொண்டிருக்கவும் அதனை வெளிப்படுத்தவும் உரிமையுடையவர்கள். இந்த உரிமை என்பது இடையூறற்று கருத்துக்களைக் கொண்டிருக்கவும் தகவல்களையும் கொள்கைகளையும் தேடவும் எந்த ஊடகத்தினூடாகவும் எல்லைகளைக் கடந்தும் அதனை வெளிப்படுத்தவுமான உரிமையயை உள்ளடக்குகின்றது. – ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைப்பிரகடனத்தின் 19வது சரத்து.

Article 19: Everyone has the right to freedom of opinion and expression; this right includes freedom to hold opinions without interference and to seek, receive and impart information and ideas through any media and regardless of frontiers.

இந்தக் கருத்துச் சுதந்திரத்தை நிலை நாட்டுவதற்காகப் போராடிய விரல்விட்டு எண்ணக்கூடிய ஊடகங்களில் ‘தேனீ’ இணையத்தளத்தின் பாத்திரம் மிகமுக்கியமானது. அதற்குப் பின்நின்ற ஜெமினியின் – கங்காதரனின் உழைப்பு மதிப்பிட முடியாதது.

இலங்கையின் உள்நாட்டு யுத்தம் தமிழர்களை உலகெங்கும் புலம்பெயர நிர்ப்பந்தித்த போது, யுத்தத்தின் ஆரம்ப காலகட்டங்களில் வடக்கு கிழக்கை விட்டு, ஆரம்ப நாட்களில் புலம்பெயர்ந்தவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் அராஜகப் போக்கினால் பாதிக்கப்பட்ட மாற்று இயக்கத்தைச் சார்ந்தவர்களே. இலங்கையில் மறுக்கப்பட்ட கருத்துச் சுதந்திரத்தை, தாங்கள் புலம்பெயர்ந்த தேசங்களில் அவர்கள் கட்டியெழுப்ப முற்பட்டனர்.

ஆனாலும் மிகக் கூறுகிய காலத்தினுள்ளேயே கட்டமைப்பு ரீதியாக மிகப்பெரும் பலத்துடன் இருந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதிக்கம், புலம்பெயர் தேசங்களிலும் கோலோச்ச ஆரம்பித்தது. கருத்துச் சுதந்திரத்திற்கு எதிரான அரசியல் வன்முறையானது; அரசியல் படுகொலைவரை சென்றது. பாரிஸ், பேர்ளின், லண்டன், ரொறொன்ரோ, சிட்னி என வன்முறைகள் தொடர்ந்து சில படுகொலைகளும் நிகழ்ந்தது.

ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட மிகப்பெரும் பொருளாதார, அரசியல், பலம்பொருந்திய கட்டமைப்பாக இருந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் அராஜகத்திற்கு எதிராக தனியன்களாக; தங்களுடைய நாளாந்த குடும்பச் சுமைகளுடன், ஒரு சமூகத்தின் கருத்துச் சுதந்திரத்திற்காக ஒரிரு ஆண்டுகள் அல்ல கால்நூற்றாண்டாக போராடி வருவது என்பது சாதாரணமானதல்ல.

1990க்களின் பிற்பகுதியில் இணையத் தொழில்நுட்பம் வீச்சுப்பெறத்தொடங்கியது. இலங்கைத் தமிழர்களின் கருத்துச் சுதந்திரத் தளத்திலும் இது அதிர்வை ஏற்படுத்தியது. ஆரம்பத்தில் பாரம்பரிய ஊடகங்களான பத்திரிகைகள், சஞ்சிகைகள், வானொலி ஊடாக தங்கள் கருத்துச் சுதந்திரத்தை நிலைநாட்டப் போராடியவர்கள்; அதற்கான கூட்டு உழைப்பை பெறுவதிலும், அதற்கான அதீத செலவீனங்களை தாங்க முடியாத நிலையிலும் தத்தளித்தனர். தங்களுடைய உழைப்பை வழங்குகின்ற அதேசமயம், தங்களுடைய வருமானத்தையும் செலவிட்டே இந்த கருத்துச் சுதந்திரத்திற்கான உரிமைப் போராட்டத்தை நடத்தினர். இணையத்தின் வருகை இந்தச் செலவீனங்களை மிகமிக குறைத்துக்கொண்டது. வாசகர் பரப்பை நாட்டின் எல்லைகளைக் கடந்தும் விரித்துச் சென்றது.

தங்களுடைய உழைப்பினை மட்டும் வைத்துக்கொண்டு கருத்துச் சுதந்திரத்திற்காகப் போராட முடியும் என்ற ஒரு நிலையயை இணையத்தொழில்நுட்பம் வழங்கியது. உலெகெங்கும் பரந்திருந்த மாற்றுக் கருத்தாளர்களை இணைக்கின்ற தளமாக ‘தேனீ’ யயை ஜெமினி என எல்லோராலும் அறியப்பட்ட கங்காதரன் உருவாக்கினார்.

தேனீ, தேசம்நெற் (தேசம், லண்டன் உதயன், லண்டன் குரல்), ரிபிசி வானொலி என விரல்விட்டு எண்ணக் கூடிய ஊடகங்களே 1990க்களின் பிற்பகுதி முதல் தமிழீழ விடுதலைப் புலிகளின் பிரச்சாரங்களுக்கு சவாலாக செயற்பட்டு வந்தன. இணையத் தளங்கள் 2000ம் ஆண்டிற்குப் பின் வீச்சுப்பெற்று வந்தது. வன்னி யுத்தத்தின் போது தாயகத்தின் உண்மை நிலவரங்கள் மூடிமறைக்கப்பட்டு மக்கள் ஒரு மய உலகிற்குள் தள்ளப்பட்டிருந்த போது பாதிக்கப்பட்ட மக்களின் குரலாக ஒலித்தது இந்த ஊடகங்கள் மட்டுமே.

இந்தப் பின்னணியிலேயே ஜெமினி – கங்காதரனின் வரலாற்றுப் பாத்திரத்தை என்னால் மதிப்பிட முடிகின்றது. ஒரு தனிமனிதனின் உழைப்பு ஒரு சமூகத்தின் கருத்துச் சுதந்திரத்தை தக்க வைத்துக்கொள்வதில் எவ்வளவு ஆதிக்கம் செலுத்தி இருக்கும் என்பதற்கு தேனீ இணையமும் ஜெமினியின் உழைப்பும் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு என்றால் அது மிகையல்ல.

ஜெமினி – கெங்காதரனை ஸ்ருட்காட் ஜேர்மனியில் ஒரு சில கூட்டங்களில் சந்தித்து பேசியதைத் தவிர எனக்கு அவருடன் அவ்வளவு உறவு இருந்ததில்லை. அவருடைய அரசியல் நிலைப்பாடுகளுடனும் எனக்கு அவ்வளவு உடன்பாடும் இருந்ததில்லை. ஆனால் அவருக்கு சமூகத்தின் மீது இருந்த நேசமும் அதற்காக அவர் செய்த தன்னலமற்ற அர்ப்பணிப்பும் எனக்கு ஜெமினி மீது எப்போதும் ஒரு மரியாதையயை ஏற்படுத்தியது. இரவோடு இரவாக அரசியல் ஞானம்பெற்ற ‘கீ போர்ட் மார்க்ஸிட்டுக்கள்’ மத்தியில் தான் நம்பிய அரசியல் கருத்துக்களுக்கா இறுதிவரை போராடிய ஒரு தன்னலமற்ற போராளி ஜெமினி. அப்படிப்பட்ட ஒரு போராளியயை இக்கொடிய நோய் கொண்டு போனது கருத்துச் சுதந்திரத்தை மதிக்கின்ற ஒவ்வொருவருக்கும் ஏற்பட்ட பேரிழப்பே.

“I disapprove of what you say, but I will defend to the death your right to say it”. Voltaire
“உன்னுடைய கருத்தோடு எனக்கு உடன்பாடில்லை, ஆனால் அதனைச் சொல்வதற்கு உனக்குள்ள உரிமைக்காக எனது உயிரைக்கொடுத்தும் போராடுவேன்”. வோல்ரயர்

த ஜெயபாலன்
ஆசிரியர் தேசம் – தேசம்நெற்.