நிரோஜன் பாலசிங்கம்

நிரோஜன் பாலசிங்கம்

பணமோசடியில் ஈடுபட்ட இரு லண்டன் தமிழர்களுக்கு பதினொரு ஆண்டுகள் தண்டனை!

 

லண்டன் குயின்ஸ்வே யில் செவர்னியர் – லண்டன் நகர் அழகியல் பொருட்களை விற்ககும் கடையில் பணமாற்றுச் சேவையை மேற்கொண்டவரும் அங்கு பணியாற்றியவரும் மொத்தமாக 11 வருடங்கள் சிறைத்தண்டனை பெற்றுள்ளனர். 2016 முதுல் 2018 வரை கிட்டத்தட்ட ஒரு மில்லியன் பவுண்கள் நாணய மாற்றை இவர்கள் செய்துள்ளனர். கடையை நடாத்தி வந்த ரவிராஜ் கணேஸ்பரன் (61) மற்றும் அவருடைய கடையில் பணியாற்றிய நிரோஜன் பாலசிங்கம் ஆகியோருக்கே இத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது. ரவிராஜ் கணேஸ்பரன் கடையை நடாத்த நிரோஜன் பாலசிங்கம் உள்ளுரிலும் வெளிநாட்டிலும் அவருக்கான மோசடி வாடிக்கையாளர்களைத் தேடிக்கொடுத்து வந்ததாக நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டது.

லுல்சிம் புலாக்கி என்பவர் பணக்கட்டுக்கள் கொண்ட முதுகப்பையோடு கடைக்குள் நுழைவதை நோட்டமிட்ட பொலிஸார் கடையை முற்றுகையிட்டதில் கடையினுள் £140,000 பவுண்கள் இருந்துள்ளது. ஈஸ்ற்ஹாமில் வாழும் ரவிராஜ் கணேஸ்பரனுக்கு 5 ஆண்டுகளும் ஈலிங்கில் வாழும் நிரோஜன் பாலசிங்கத்திற்கு ஆறு ஆண்டுகளும் சிறைத்தண்டணை விதிக்கப்பட்டது. இவ்வழக்கு சவுத்வார்க் கிரவுன்கோர்ட்டில் நடைபெற்றது.

உலகின் கருப்பு பணம் அதிகம் உலாவுமிடங்களில் ஒன்றாக பிரித்தானியா உள்ளது. உலகின் மிகப்பெரும் மோசடியாளர்களின் கூடாரமாகவும் பிரித்தானியா இருக்கின்றது. உலகின் வெவ்வேற நாடுகளில் பணமோசடிகளில் ஈடுபட்டவர்களுக்கும் பிரித்தானியா புகலிடமாக இருக்கின்றது. சென்றவாரம் வெளியான பன்டோரா அறிக்கைகளில் சம்பந்தப்பட்டவர்கள் பிரித்தானியாவில் இருப்பதுமட்டுமல்ல பிரித்தானிய அரசின் ஆட்சியாளர்களுடன் நெருக்கமானவர்களாகவும் உள்ளனர்.

இவ்வாறான பணமோசடி காரணமாக பிரித்தானிய வீதிகளில் கத்திக்குத்துகளும் கொலைகளும் இடம்பெற்று வருகின்றது. பணத்தின் மீது வெறிகொண்டு பணத்தைக்கொண்டு எதையும் சாதிக்கலாம் என்ற எண்ணத்தில் செயற்படுவதன் விளைவுகள் பாரதூரமாகிவிடுகின்றது.