பாத்திமா ஆயிஷா

பாத்திமா ஆயிஷா

கொடூரமாக கொலை செய்யப்பட்ட 9 வயது சிறுமி – கொலையாளி வழங்கியுள்ள வாக்கு மூலம் !

பண்டாரகம, அட்டுலுகமவில் ஒன்பது வயது சிறுமி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக கொட்டு ரொட்டி தயாரிக்கும் நபர் ஒருவர் உண்மையை வெளிப்படுத்தியுள்ளார்.

ஒன்பது வயதுடைய பாத்திமா ஆயிஷாவின் கொலைச் சம்பவத்தின் பிரதான சந்தேகநபராக கொட்டு ரொட்டி தயாரிப்பாளர் கைது செய்யப்பட்டதாக சி.ஐ.டி. அறிவித்தது.

28 வயதான பிரதான சந்தேகநபர் அதேபகுதியில் முஸ்லிம் காலனியில் வசிப்பவராவார் என்றும் அவர் போதைப்பொருள் (ஐஸ்) க்கு அடிமையானவர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட சிறுமி காணாமல் போவதற்கு முன்னர் கோழி இறைச்சி வாங்குவதற்காக இறைச்சிக் கடைக்கு சென்றுள்ளார்.

முதற்கட்ட விசாரணையில் சந்தேக நபர் சிறுமிக்கு முன்னதாக கடையை விட்டு வெளியேறி புதருக்கு பின்னால் மறைந்திருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்நிலையில் கையில் இறைச்சியுடன் தனது வீட்டை நோக்கி நடந்து கொண்டிருந்தபோது, ​​சந்தேக நபர் சிறுமியை பிடித்து அருகிலுள்ள புதர் காட்டுக்குள் இழுத்துச் சென்றுள்ளார்.

சந்தேக நபரின் பிடியில் இருந்து தப்பிக்கும் முயற்சியில் சிறுமி கூக்குரலிட்ட போதும் சிறுமியை அருகில் உள்ள சதுப்பு நிலத்தில் சில மீட்டர் தூரத்திற்கு இழுத்துச் சென்றுள்ளார்.

அதற்கு முன்னதாக சிறுமியின் வாயில் துணி ஒன்று திணித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேக நபர் சிறுமியின் முகத்தை சேற்று நீரில் தள்ளி, அவரது முதுகில் முழங்களால் அழுத்தியுள்ளதால் சிறுமி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொல்லப்பட்ட சிறுமி பாத்திமா ஆயிஷாவுக்கு விவைாக நீதி பெற்றுத்தருவதாக கூறியுள்ளார் மிருசுவில் படுகொலை குற்றவாளியை விடுவித்த கோட்டாபாய ராஜபக்ச !

உயிரிழந்த ஆயிஷாவின் குடும்பத்தினருக்கு இரங்கலை தெரிவித்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, விரைவாக நடவடிக்கை எடுத்து நீதியை பெற்றுத்தருவதாக உறுதியளித்துள்ளார்.

“ஈவிரக்கமற்ற முறையில் கொல்லப்பட்ட சிறுமி பாத்திமா ஆயிஷாவின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவிக்கின்றேன்.

இந்த கொடூர குற்றத்திற்கு அவரது குடும்பத்தினருக்கு விரைவில் நீதி கிடைக்க நான் உறுதியளிக்கிறேன். சிறுமி ஆயிஷா சுவர்க்கம் செல்ல எனது பிரார்த்தனைகள்.” என டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

பண்டாரகம – அட்டலுகம பகுதியைச் சேர்ந்த 9 வயதுடைய பாத்திமா ஆயிஷா நேற்றையதினம் காணாமல் போயிருந்த நிலையில் இன்று 28 ஓடைக்கு அருகில் சடலமாக மீட்கப்பட்டார்.

இந்நிலையில் அவரது மரணத்திற்கான காரணத்தை கண்டறிய பிரேத பரிசோதனை இன்று நடைபெறும் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

……………………………………

மிருசுவில் படுகொலை

யாழ்ப்பாணம் – மிருசுவில் பகுதியில் வைத்து 19 டிசம்பர் 2000ஆம் ஆண்டு ராணுவத்தினரால் பிடிக்கப்பட்ட எட்டு தமிழர்களின் சடலங்கள், கழுத்தறுக்கப்பட்ட நிலையில், மலசலக் குழியொன்றிலிருந்து மீட்கப்பட்டன. மேற்படி நபர்கள் கடத்தப்பட்ட மறுநாள் 20ஆம் தேதி இந்தப் படுகொலை இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறு படுகொலை செய்யப்பட்ட எட்டுப் பேரில் 05 வயது சிறுவனும், பதின்ம வயதுடைய மூவரும் அடங்குவர்.

மிருசுவில் பிரதேசத்தில் தமிழர்கள் எட்டுப் பேரை கழுத்தை அறுத்து படுகொலை செய்த குற்றத்துக்காக மரண தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்ட முன்னாள் ராணுவ சார்ஜன்ட் சுனில் ரத்நாயக்க என்பவர், ஜனாதிபதி கோத்தாபாய ராஜபக்ஷ வழங்கிய பொதுமன்னிப்புக்கு இணங்க விடுவிக்கப்பட்டிருந்தார்.

இது போலவே சிறுமி ஹிசாளினி முன்னாள் அமைச்சர் ரிசாட் பதியுதீன் வீட்டில் பணிக்கமர்த்தப்பட்ட நிலையில் தீக்காயங்களுடன் இறந்திருந்தார். அது தொடர்பாகவும் ஆரம்பத்தில் பெரிதாக பேசப்பட்டு பின்னர் அனைவரும் மறந்து விட தீர்வே கிடைக்கவில்லை. இது தொடர்பில் ராஜபக்ஷ தரப்பு பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை.

இந்த நிலையில் ஜனாதிபதி கோத்தாபாய ராஜபக்ஷவின் காலத்தில் இன்னுமொரு கொலை நடந்துள்ளது. இது பற்றி வாய்திறந்துள்ளார் கோட்டாபாய. முன்னைய இரு சம்பவங்களின் போதும் கோத்தாபாய தான் ஜனாதிபதியாக இருந்தார். இப்போது திடீரென இது பற்றி ஜனாதிபதி பேசியிருப்பது அவர் மீது இப்போது இலங்கையில் ஏற்பட்டுள்ள எதிர்ப்பலைகளை சமாளிப்பதற்கானது போலவே தோன்றுகிறது.

இதற்காவது ஒழுங்கான தீர்ப்பு கிடைக்குமா ?

காணாமல்போன 9 வயது சிறுமி சடலமாக மீட்பு !

பண்டாரகம – அட்டலுகம பகுதியில் வைத்துக் காணாமல்போன 9 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சிறுமியின் வீட்டுக்கு அருகாமையில் உள்ள சதுப்பு நிலத்தில் இருந்து சடலம் பிரதேச மக்களால் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

CCTV கமராக்கள் பொருத்தப்பட்டும் அவை செயலிழந்துள்ள வீடொன்றில் இருந்து சுமார் 150 மீற்றர் தொலைவில் இருந்தே குறித்த சிறுமியின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

சம்பவத்தில் பாணந்துறை அட்டுலுகமஅல் கஸ்ஸாலி மகா வித்தியாலயத்தில்  கல்வி கற்கும் பாத்திமா ஆயிஷா என்ற மாணவியே உயிரிழந்துள்ளார்.

இவர் நேற்று (27) காலை 10 மணியளவில் தனது வீட்டிலிருந்து 200 மீற்றர் தொலைவில் உள்ள கடைக்கு சென்றிருந்த நிலையில் காணவில்லை என அறிவிக்கப்பட்டது.

இதனையடுத்து, சிறுமியின் பெற்றோர் மற்றும் பிரதேச மக்கள் சிறுமியை தேடியுள்ளதோடு, பின்னர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடும் பதிவு செய்திருந்தனர்.

இந்நிலையில் சிறுமியின் மரணம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.