பிள்ளையான்

பிள்ளையான்

கிறிஸ்தவ மக்கள் மறக்க முடியாத செயலை செய்து விட்டு அவர்களுக்கு வாழ்த்து வேறு சொல்கிறார் பிள்ளையான் –

கிறிஸ்தவ மக்களுக்கு அவர்களுடைய முக்கிய நாட்களில் மறக்க முடியாத செயலை செய்து விட்டு நல்லவர் போல் நேற்று (25) கிறிஸ்துமஸ் மக்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார் சிவநேசதுரை சந்திரகாந்தன் என்று பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார்.

 

மட்டக்களப்பு புனித மரியால் பேராலயத்தில் கிறிஸ்மஸ் ஆராதனையின் போது சுட்டுக் கொல்லப்பட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப்பரராஜசிங்கம் அவர்களின் படுகொலைக்கு நீதிகோரிய போராட்டமும் நினைவேந்தல் நிகழ்வு நேற்று நடைபெற்றது.

 

நத்தார் திருப்பலி பூஜையின்போது ஆயுதக்குழுவினால் சுட்டுக்கொல்லப்பட்ட முன்னாள் தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினரும் மனித உரிமைகள் செயற்பாட்டாளருமான மாமனிதர் அமரர் ஜோசப்பரராஜசிங்கத்தின் 18 ஆவது நினைவு தினம் நேற்று மட்டக்களப்பில் அனுஸ்டிக்கப்பட்டது.

 

25-12-2005ஆம் ஆண்டு மட்டக்களப்பு புளியந்தீவு புனித மரியால் தேவாலயத்தில் நள்ளிரவு நத்தார் ஆராதனையின்போது இவர் சுட்டுக்கொல்லப்பட்டதுடன் அவரது மனைவி படுகாயமடைந்திருந்தார்.

 

அமரர் ஜோசப்பரராஜசிங்கத்தின் 18வது நினைவு தினம் நேற்று மாலை மட்டக்களப்பில் இலங்கை தமிழரசுக்கட்சியின் வாலிபமுன்னணியின் ஏற்பாட்டில் நடாத்தப்பட்டது.

 

இதன்போது புனித மரியால் பேராலயத்திற்கு முன்பாக கவன ஈர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப்பரராஜசிங்கத்தின் படுகொலைக்கு நீதிவேண்டும்,படுகொலையாளிகளை சட்டத்தின் முன்பாக நிறுத்து,கொலையாளிகள் சொகுசுவாழ்க்கை வாழ அனுமதித்தது யார் போன்ற கோசங்கள் எழுப்பப்பட்டதுடன் நிகழ்வு நடைபெறும் இடத்திற்கு ஊர்வலமாக வருகைதந்தனர்.

 

மட்டக்களப்பு,சார்ள்ஸ் மண்டபத்தில் தமிழரசுக்கட்சியின் வாலிப முன்னணியின் மட்டக்களப்பு மாவட்ட தலைவர் கே.சோபனன் தலைமையில் நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது.

 

இதன்போது அமரர் ஜோசப்பரராஜசிங்கத்தின் திருவுருவப்படத்திற்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு ஈகச்சுடர் ஏற்றப்பட்டு அகவணக்கம் செலுத்தப்பட்டது.மலர் மாலையினை பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் ,மட்டக்களப்பு மாவட்ட தலைவர் சோபனன் ஆகியோர் அணிவித்தனர்.

 

இந்த நிகழ்வில் தமிழ் தேசிய அரசியலும் பெண்களும் என்னும் தலைப்பில் கிழக்கு பல்கலைக்கழக சிரேஸ்ட விரிவுரையாளர் திருமதி புளோரிடா சிமியோன் சிறப்புரையாற்றினார்.

 

இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள்,கட்சியின் முக்கியஸ்தர்கள்,சிவில் சமூக செயற்பாட்டாளர்கள்,மதத்தலைவர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

கொலைக்குற்றச்சாட்டில் அமைச்சர் பிள்ளையான் விரைவில் கைது..?

பல்வேறு கொலை குற்றச்சாட்டுக்களின் கீழ் இராஜாங்க அமைச்சர் சிவனேசத்துரை சந்திரகாந்தன் விரைவில் கைது செய்யப்படலாம் என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

 

ஏப்ரல் 21 தாக்குதல் மற்றும் தற்போதைய தேசிய பாதுகாப்பு தொடர்பில் எதிர்க்கட்சி கொண்டுவந்துள்ள சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

 

இதேவேளை நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனின் கருத்திற்குப் பதிலளித்த இராஜாங்க அமைச்சர் சிவனேசத்துரை சந்திரகாந்தன்,

மக்கள் பிரதிநிதி என்ற வகையில் தனக்கு வழங்க வேண்டிய மரியாதை தொடர்பில் சுமந்தின் முதலில் தெரிந்துக் கொள்ள வேண்டும் எனக் குறிப்பிட்டார்.

 

மேலும் ஒரு சட்டத்தரணியாக இந்த விடயங்களை சுமந்திரன் தெரிந்து கொள்ள வேண்டுமெனவும் தெரிவித்த சந்திரகாந்தன், இவ்வாறான இழிவான கருத்துக்களை நாடாளுமன்றத்தில் வெளியிடுவதற்கு சபாநாயகர் அனுமதி வழங்க கூடாது எனவும் சபையில் வலியுறுத்தினார்.

ஈஸ்டர் குண்டுத் தாக்குதலின் சூத்திரதாரி பிள்ளையான்..? – ஹிருணிக்கா பிரேமச்சந்திர

பிள்ளையான் ஈஸ்டர் குண்டுத் தாக்குதலுக்கு சூத்திரதாரியாக இருக்கலாம் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிக்கா பிரேமச்சந்திர ஊகம் வெளியிட்டுள்ளார்.

பணத்துக்காக தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பைக் காட்டிக் கொடுத்துவிட்டு, தனியாகப் பிரிந்து கட்சி வளர்த்த பிள்ளையான் ஈஸ்டர் குண்டு தாக்குதலுக்கு சூத்திரதாரியாக இருக்க மாட்டாரா..? என ஹிருணிக்கா பிரேமச்சந்திர கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,

ஈஸ்டர் குண்டு தாக்குதலில் இலங்கையர்கள் மட்டுமல்லாமல் இலங்கையின் அழகை ரசிக்க வந்த சுற்றுலா பயணிகளும் இந்த குண்டு வெடிப்பில் சிக்கி உயிரிழந்துள்ளனர்.

பல நாடுகளைச் சேர்ந்தவர்கள் எமது நாட்டுசுற்றுலா துறையை ஊக்குவிக்க முயன்றவர்களை கொலை செய்தது ராஜபக்ச அரசாங்கம் என்பது தெட்டத் தெளிவாக விளங்குகின்றது.

அரச புலனாய்வுத் துறையில் ஒரு முஸ்லிம் பிரதானியை வைத்துக்கொண்டு சகல விடயங்களையும் செய்துவிட்டு இன்று ஏதும் தெரியாத போல் நடிப்பது வேடிக்கையாக இருக்கின்றது.

உயிரிழந்த மக்களுக்கான நீதி கிடைக்க வேண்டும் யாராக இருந்தாலும் தண்டனை வழங்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

“கிழக்கு மாகாண மக்களின் முடிவுகளை யாழ்ப்பாண தலைவர்கள் எடுக்க வேண்டிய எந்த தேவையும் இல்லை.” – தேசம் நேர்காணலில் இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் !

கிழக்கு மாகாண மக்களின் அரசியல், பொருளாதார, கல்வி முன்னேற்றம் தொடர்பான விடயங்களில் யாழ்ப்பாண தலைவர்கள் தலையிட வேண்டிய எந்த அவசியமும் இல்லை என இராஜாங்க அமைச்சர் சிவனேசத்துரை சந்திரகாந்தன் தேசம் திரை நேர்காணலில் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பான முழுமையான தேசம் திரை காணொளியை காண கீழேயுள்ள Link ஐ Clickசெய்யுங்கள்.

 

“சிங்களவனை காட்டி தமிழ் மக்களை தமிழ்தேசிய அரசியல்வாதிகள் உசுப்பேற்றிக்கொண்டிருக்கிறார்கள்.” – சிவனேசதுரை சந்திரகாந்தன் 

“பாலம் கட்டினால் சிங்களவன் வருவான், ஏழை எழிய மக்களுக்கு சிங்களம் புகட்டக்கூடாது, என தமிழ் மக்களை தமிழ்தேசிய அரசியல்வாதிகள் உசுப்பேற்றிக்கொண்டிருக்கிறார்கள்.” என கிராமிய வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார்.

புனரமைக்கப்பட்ட களுவாஞ்சிகுடி கண்ணகை அம்மன் வீதியை திறந்து வைக்கும் நிகழ்வு கடந்த வியாழக்கிழமை(31) மாலை ஊடகத்துறை அமைச்சர் பந்துல குணவர்த்தன அவர்களின் பங்கேற்புடன் இடம்பெற்றது. இதன்போது கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையியே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

“அடுத்து வருகின்ற வரவு செலவுத் திட்டத்திலும், உலக வங்கி, மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கி ஆகிய திட்டங்களிலும் அதிகளவு நிதி ஒதுக்கீடுகளை மட்டக்களப்பு மாவட்டத்திற்கு பெற்றுக் கொள்ள வேண்டும் என்பதுவே நாம் அடைய நினைக்கும் இலக்காகவுள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒரு சிக்கலான சூழ்நிலை இருந்தபோது எமது கட்சியை மட்டக்களப்பு மக்கள் மீட்டெடுத்தார்கள். அதன் பெறுமதியை நாம் அரசாங்கத்துடன் இணைந்து பல பணிகளை மேற்கொண்டு வருகின்றோம்.

இந்நிலையில் மக்களுக்கு நாம் முன்வைத்த கோரிக்கைகயை நிறைவேற்றுவதில் பல தடைகள் உள்ளன. ஆனாலும் சற்றுக்காலம் தாழ்த்தியாவது அவற்றை நிறைவேற்றிக் கொடுப்போம் என நாம் நம்புகின்றோம். 1960 ஆம் ஆண்டு கட்டப்பட்ட பட்டிருப்பு பாலத்தை நாம் பார்வையிட்டோம். அப்பாலம் குண்டுகள் வைத்து தகர்க்கப்பட்ட பாலமாகும். அதனை செப்பனிடுவதற்கு 1300 மில்லியன் ரூபாய் நிதி தேவையாகவுள்ளது.

 

1956 ஆம் ஆண்டு ஸ்ரீ சட்டம் கொண்டு வரப்பட்டது. ஸ்ரீ சட்டத்தின் பின்னர்தான் சீ.மூ.இராசமாணிக்கம் ஐயாவும் தமிழரசுக் கட்சியில் இணைந்து கொண்டார். ஒரு சிங்கள எழுத்துக்காகவேதான் அவர் அக்கட்சியில் இணைந்து கொண்டார். அதற்காக எமது தமிழ் தலைவர்கள் வாகனங்களில் ஸ்ரீ எழுத்தை நீக்கிவிட்டு அ எழுத்தை பொருத்திக் கொண்டு மட்டக்களப்புக்கு வந்தார்கள். பின்னர் பட்டிருப்புத் தொகுதியிலே சீ.மூ.இராசமாணிக்கம் ஐயா அவர்கள் நாடாளுமன்றத்திலே இருந்தார். தமிழரசுக் கட்சியின் நூற்றாண்டு வரலாறு தோற்றுப்போன வரலாறாகும். இரண்டு தலைமுறைகள் அழித்துவிட்ட வரலாறாகும். அழிந்துள்ள இந்த வரலாற்றிலேயேதான் நாம் நிற்கப்போகின்றோமா என சிந்திக்க வேண்டும்.

இராசமாணிக்கம் ஐயா பிறந்த இடம் மண்டூர் அவர் மண்டூருக்கு கட்டிக் கொடுத்த பாலம் எங்கே? அவரது காலத்தில் செய்யப்பட்ட அபிவிருத்திகள் எங்கே? அவர் மக்களுக்காக செய்த பணி ஒன்றுமே இல்லை. மாறாக பாலம் கட்டினால் சிங்களவன் வருவான், ஏழை எழிய மக்களுக்கு சிங்களம் புகட்டக்கூடாது, என சாதாரண மக்களை உசுப்பேற்றி விட்டார்கள்.

தற்போது 2 தலைமுறைகள் கடந்து தற்போது என்ன நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. விடுதலைப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்ட பின்னர் பொலிஸில்  சேரமுடியாது, சிங்களவர்களுடன் சேர்ந்து நிர்வாகம் செய்ய முடியாது, ஏனைய பணிகளைச் செய்யமுடியாது, போன்ற நிலமைகளை களுவாஞ்சிகுடி மக்கள் இன்னமும் நினைத்துப் பார்க்க முடியாமல் இருக்க முடியாது.

அழிந்து புதைக்கப்பட்ட எமது இளைஞர்களுக்குச் சொல்லும் கருத்து என்ன? அல்லது இந்த மக்களுக்கு நாம் கட்டும் வழி என்ன? இன்னமும் துவேசத்தனமாகப் பேசி இந்த மக்களை எந்த இடத்திற்குக் கொண்டு செல்லப்போகிறோம், அதற்கான இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக என்றால் ஒன்றும் இல்லை.

இதுதான் பாரம்பரிய மேட்டுக்குடி அரசியல் வரலாறாகும். ஏனெனில் அவர்கள் அவர்களது வாரிசுகளுக்காகத்தான் செயற்படுகின்றார்களே தவிர மற்றவர்களின் கருத்துக்களை அவர்கள் ஏற்றுக் கொள்வது கிடையாது. அதற்கு உதாரணம் இந்த மண்ணிலேயே நிகழ்ந்திருக்கின்றது.

எந்தப் அப்பாவிப் பிள்ளைகளை உசுப்பேற்றி துப்பாக்கிகளைக் கொடுத்து மரணிக்க வைத்தார்களோ, எந்தப் பிள்ளைகளை சிங்களமும், ஆங்கிலுமும் கற்கக் கூடாது என உசுப்பேற்றினார்களோ அவர்களுடைய பிள்ளைகள் தற்போதிருக்கும் நிலமைகளை நினைத்துப் பார்த்தால் மக்களுக்கு விளங்கும் என நினைக்கின்றேன்.

சாமானிய மனிதர்களை வாழவைப்பதுதான் அரசியல் என“ அவர் இதன்போது தெரிவித்தார்.

மக்கள் பிரச்சினைகளை கவனத்தில் கொள்ளாது மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி குழுக்கூட்டம் – பெண்ணின் கழுத்தை நெரித்த பொலிஸார் !

மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டம், மக்களையும், மக்கள் பிரதிநிதிகளையும் புறந்தள்ளி மக்களின் பிரச்சினைகளை கணக்கில் எடுக்காது நடைபெற்றமையால்,  பல சர்ச்சைகளை ஏற்படுத்தி உள்ளது.

இன்று காலை ஆரம்பிக்கப்பட்ட மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் தங்களது பிரச்சினைகளை முன்வைப்பதற்காக சென்ற பொதுமக்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளை புறந்தள்ளி, முக்கியமாக இராஜாங்க அமைச்சர், நாடாளுமன்ற உறுப்பினர்களை வெளியில் நிற்க வைத்து பிரதான கதவை பூட்டி விட்டு மாவட்ட அபிவிருத்தி குழு தலைவரான பிள்ளையானும், மாவட்ட அரசாங்க அதிபரும் இணைந்து  அபிவிருத்தி குழு கூட்டத்தை நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மயிலத்தமடு, மாதவனை பிரதேச பண்ணையாளர் பிரச்சினை, மகாவலி அபிவிருத்தி அதிகாரசபை ஊடாக சூரிய கலங்களை நிறுவுவதற்காக விவசாய காணிகளை கையகப்படுத்துவது சம்பந்தமான பிரச்சினை, மணல் அனுமதிப் பத்திரம் வழங்கல் தொடர்பான பிரச்சினைகள், வாகரை மீனவர்கள் பிரச்சினை, காணிகளை காப்ரேட் நிறுவனங்களுக்கு வழங்குவது தொடர்பான பிரச்சனைகள் உள்ளிட்ட பல்வேறு மக்கள் பிரச்சினைகள் தொடர்பாக மக்கள் முறைப்பாடு வழங்கச் சென்றுள்ளனர்.

இவ்வாறு மக்கள் பிரச்சினையை ஆராய வேண்டிய மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டம் இவற்றை எல்லாம் கணக்கில் எடுக்காது பிரச்சினைகளை தெரிவிக்க வந்த பொதுமக்களையும், பொதுமக்களுக்காக குரல் கொடுக்க வந்த இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன், நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன்,  ஊடகவியலாளர்கள் என அனைவரையும் மாவட்ட செயலகத்திற்கு வெளியே வைத்து பூட்டி விட்டு மாவட்ட அபிவிருத்தி குழு தலைவர் பிள்ளையானும், மாவட்ட அரசாங்க அதிபர், அதிகாரிகளும் இணைந்து அபிவிருத்தி குழு கூட்டத்தை நடத்தியதால் மாவட்ட செயலகத்திற்கு வெளியே பெரும் அமளிதுமளி ஏற்பட்டது.

வெளியே போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே ஏற்பட்ட தள்ளுமுள்ளினால் பெண் ஒருவரின் கழுத்தை காவல்துறையினர் நெரித்தமையால் அப்பெண் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 

மாவட்ட மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு பதிலாக மாவட்ட அரசியல்வாதிகளின், மாவட்ட முதலாளிகளின், கார்ப்பரேட் கொம்பனிகளின் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்கும் இடமாக இது போன்ற மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டங்கள் பயன்படுத்தப்படுகின்றது என்பதே உண்மை எனவும் மக்கள் விசனம் வெளியிட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

இதன்போது ஆர்ப்பாட்டத்திற்கும் தனது ஆதரவினைத் தெரிவித்த இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன், பொதுமக்களின் கருத்துக்கள் பெற்றுக்கொள்ளப்படாமல், ஒரு சில அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் முன்னெடுக்கும், செயற்பாடுகள் காரணமாக மாவட்டம் பல கஸ்டங்களை எதிர்கொள்வதற்கான சந்தர்ப்பங்கள் உள்ளதாக இதன்போது இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.

ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட நிலையில், மாவட்ட அபிவிருத்திக் கூட்டத்திற்கு செல்வதற்கு அனுமதியை பொலிஸாரிடம் கோரிய நிலையில், பொலிஸார் இராஜாங்க அமைச்சரையும், பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் மற்றும் ஊடகவியலாளர்களையும் மாவட்டச் செயலகத்திற்குள் செல்வதற்கு அனுமதித்தனர்.

இதன்போது மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம், மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தலைமையில் நடைபெற்றுக்கொண்டிருந்த நிலையில், பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன், மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் கலந்துகொள்ளச் சென்று, மேற்கொண்ட நடவடிக்கைகள் காரணமாக குழப்ப நிலையேற்பட்டது.

மக்கள் வெளியே போராடிக்கொண்டிருக்கும் நிலையில், அவர்களின் கோரிக்கையினை நிறைவேற்றிவிட்டு அல்லது அவர்களின் கோரிக்கை தொடர்பில் சரியான பதிலை வழங்கி விட்டு, மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தை நடத்துங்கள் என்று கோரிய நிலையில், மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில், மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருக்கும் பாராளுமன்ற உறுப்பினருக்கும் இடையே வாய்த்தர்க்கம் ஏற்பட்டது.

இதைத்தொடர்ந்து, மாவட்டச் செயலகத்தின் காணி தொடர்பில் தன்னால், தகவல் அறியும் சட்டத்தில் கோரப்பட்ட தகவல்கள்வழங்கப்படாத காரணத்தினை கோரிய நிலையில், அது தொடர்பான விளங்கங்கள் மாவட்ட அரசாங்க அதிபர், மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ஆகியோரால் வழங்கப்பட்ட போதிலும்,அதனை ஏற்றுக்கொள்ளதாக இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன், 30 வருடமாக நிலத்தினைப் பாதுகாப்பதற்காகவே தமிழ் மக்கள் போராடிய நிலையில், இன்று அந்த நிலத்திற்குஆபத்தான நிலையேற்பட்டுள்ளதால், இங்கு அதற்கான சரியான தெளிவுபடுத்தல்கள் வழங்கப்படாத நிலையில், இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்வதில் பயனில்லை எனத் தெரிவத்து, இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் வெளியேறிச் சென்றார்.

அதைத் தொடர்ந்து, இரா. சாணக்கியனும், சில வினாக்களை, அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் எழுப்பிய நிலையில், அதற்கு உரிய பதில் கிடைக்காததையடுத்து, இரா.சாணக்கியனும் கூட்டத்தில் வெளிநடப்புச் செய்தார். இதன் பின்னர் அபிவிருத்திக் குழுக்கூட்டம் சுமூகமாக இடம்பெற்றது.

“அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா முதுகெலும்பு உள்ள துணிவான அரசியல்வாதி.” – இரா.சாணக்கியன் பாராட்டு!

“அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா போன்று துணிவுடன் நில்லுங்கள்,ஒரு முதுகெலும்பு உள்ளவராயிருங்கள்.” என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் ; சிவநேசதுரை சந்திரகாந்தனுக்கு தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு,களுவாஞ்சிகுடியில் உள்ள அவரது அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர், “ முன்னாள் அமைச்சரும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளருமான பசில்ராஜபக்ஸ அவர்கள் யாழில் வீணைச்சின்னத்திலும் கிழக்கில் மட்டக்களப்பில் படகு சின்னத்திலும் பொதுஜன பெரமுன போட்டியிடுவதாக தெரிவித்திருந்தார்.

படகு என்பது மட்டக்களப்பு மாவட்டத்தில் மொட்டின் முகவராகவே உள்ளது என்பதை நாங்கள் கடந்த காலத்தில் தெரிவித்துவருகின்றோம்.

பொதுஜன பெரமுனவின் மாவட்ட அமைப்பாளர் சந்திரகுமார் என்பவர் மூன்று பகுதிகளில் போட்டியிடப்போவதாக தெரிவித்திருந்த செய்திவெளிவந்திருந்தது.ஆனால் வேட்பு மனுக்கான கட்டுப்பணத்தினை அவர் செலுத்தியிருந்தபோதிலும் அவர்கள் வேட்பு மனு தாக்கல் செய்தது தொடர்பில் அறிவிக்கப்படவில்லை.

அப்போதே சந்தேகம் தெரிவிக்கப்பட்டது.அன்று எழுந்த சந்தேகங்கள் அனைத்தையும் பசில் ராஜபக்ஸ அவர்கள் படகு கட்சியின் ஊடாகத்தான் பொதுஜன பெரமுன கட்சி போட்டியிடுகின்றது என்பதை உறுதியாக தெரிவித்துள்ளார்.

2019ஆம் ஆண்டிலிருந்து இந்த நாட்டினை நாசமாக்கிய பொதுஜன பெரமுன கட்சி,நாட்டின் விவசாயிகளை நடுத்தெருவில் கொண்டுவந்துவிட்ட கட்சி,எரிபொருள் தட்டுப்பாட்டை நாட்டில் ஏற்படுத்தியவர்கள்,எங்களது பிரதேசத்திலிருந்த மண் வளங்களை கொள்ளையிட்டவர்கள் இந்த பொதுஜன பெரமுனவினை சோந்தவர்கள்.

இவ்வாறு பொதுஜன பெரமுன என்ற கட்சியின் ஜனாதிபதி நாட்டினை விட்டு ஓடவேண்டிய சூழ்நிலையில் அக்கட்சியின் பிரதமர்து பதவியை இராஜினாசெய்த நிலையிலும் அதன் தேசிய அமைப்பாளர் அமெரிக்க சென்று ஒழிந்த சூழ்நிலையினையும் இந்த நாட்டில் ஏற்பட்டிருந்தது.
பொதுஜன பெரமுனவின் காரியாலம் மட்டக்களப்பு உட்பட அனைத்து பகுதிகளிலும் மக்களினால் அடித்து நொறுக்கப்பட்ட நிலையில் பொதுஜன பெரமுன என்ற கட்சி இங்கு போட்டியிட முடியாத நிலையில் மொட்டு சின்னத்திற்கு பதிலாக படகு சின்னத்தில் களமிறங்கி இந்த மாவட்ட மக்களை ஏமாற்றுவதற்கு சிவநேசதுரை சந்திரகாந்தன் எடுத்த முயற்சியை வன்மையாக கண்டிக்கின்றேன்.

பொதுஜன பெரமுனவில் போட்டியிடுவது என்றால் அதனை தைரியமாக சொல்லுங்கள்.கட்சியின் செயலாளர் சொல்கின்றார் தனித்து படகில் போட்டியிடுகின்றோம் என்று ஆனால் எஜமான பசில் ராஜபக்ஸ கூறுகின்றார் மொட்டு படகில் போட்டிபோடுகின்றது என்று கூறுகின்றார்.

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா போன்று துணிவுடன் நில்லுங்கள்,ஒரு முதுகெலும்பு உள்ளவராகயிருங்கள்.டக்ளஸ் தேவானந்தா தாங்கள் பொதுஜன பெரமுன கட்சி என்று தைரியமாக ஏற்றுக்கொள்கின்றார்.

ஆனால் நீங்கள் மட்டும் இங்கு இரட்டைவேடம் போடுகீன்றீர்கள்.மட்டக்களப்பு மாவட்ட மக்களை தொடர்ந்து ஏமாற்றமுடியும் என்று நினைக்கின்றீர்களா?

மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி எங்களுக்கு போட்டியில்லை.ஆனால் மாவட்ட மக்களை தொடர்ந்த நீங்கள் ஏமாற்றமுடியாது.நேற்றைய தினம் வாழைச்சேனை பிரதேசசபையினை தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி இழந்துள்ளது.

இது முதலாவது அடியாகும்.நாங்கள் நினைத்திருந்தால் வாகரையினையும் கைப்பற்றியிருப்போம்.ஆனால் அந்த மக்களால் நீங்கள் துரத்தியடிக்கப்படவேண்டும் என்பதற்காக விட்டிருக்கின்றோம்.வட்டாரங்களில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியினர் பிச்சையெடுப்பதுபோன்று வேட்பாளர்களை தேடி அலைகின்றனர்.” என தெரிவித்தார்.

“முறையற்ற கொள்கைகளை வகுத்து வடக்கு – கிழக்கை நாசமாக்கியவர்கள் யாழ்ப்பாண மேட்டுக்குடியினர்.” – அமைச்சர் பிள்ளையான்

மரணம் வரையிலும் சம்பந்தன் ஐயா போன்றவர்கள் இலங்கையின் அரசியலை ஊகித்துக்கொள்ளவில்லையென்பது மிகவும் கவலையான விடயம் என இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்தார்.

உள்ளுராட்சிமன்ற தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யும் பணிகள் மாவட்ட தேர்தல் அலுவலகங்களில் நடைபெற்றுவருகின்றன.

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ளுராட்சிமன்றங்களில் போட்டியிடுவதற்கான கட்டுப்பணத்தினை நேற்றைய தினம் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி மேற்கொண்டது.

தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவரும் இராஜாங்க அமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் தலைமையில் இந்த கட்டுப்பணம் செலுத்தப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் காத்தான்குடி தவிர்ந்த உள்ளுராட்சிமன்றங்களில் போட்டியிடவுள்ளதாக இதன்போது இராஜாங்க சந்திரகாந்தன் தெரிவித்தார்.

இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர்,

”பிராந்திய மட்டத்தில் அரசியல் கட்டமைப்புகள் பலப்படுத்தப்படவேண்டும். அந்த அடிப்படையில் கடந்த காலத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் சிதைவும் கிழக்கு சார்ந்த ஒரு கூட்டமைப்புக்கான சாத்தியத்தினை அதிகரித்துள்ளது.

அந்தடிப்படையில் கிழக்கு மாகாணத்தினை மையப்படுத்திய அனைவரையும் போராட்ட அமைப்புகளிலிருந்து வெளியேறியவர்கள்,  போராட்டத்தின் வலிதெரிந்த அமைப்புகளோடும் நாங்கள் பேச்சுவார்த்தைகளை நடாத்தியிருக்கின்றோம்.

இருந்தபோதிலும் அவர்கள் இன்னமும் போலித்தேசியவாதிகளை நம்பியிருக்கின்றார்கள். அது தோல்வியில்முடியும் என நம்புகின்றேன். இருந்தபோதிலும் கிழக்கு மாகாணத்தில் ஒரு கூட்டமைப்பினை உருவாக்குவதற்கு நாங்கள் கலந்து பேசிவருகின்றோம்.

இந்த நாட்டின் அரசியலில் இவ்வளவு காலமும் சீரழிந்து சின்னாபின்னமாகி பொருளாதார இழப்புகளுக்கு காரணமாகயிருந்தவர்கள் கொள்கையினை வகுத்தவர்கள், தாங்கள் மட்டும் என்ற எண்ணக்கருக்களை உருவாக்கிய யாழ்ப்பாணத்தில் பிறந்த சிலர் தாங்கள் மாத்திரந்தான் என்ற எண்ணக்கருவினைக் கொண்டவர்களைத்தான் மேட்டுக்குடிகள் என்று சொல்கின்றோமேயொழிய வடபகுதியிலிருக்கும் எல்லோரையும்சொல்லவில்லை.

அவர்கள் இப்போதும் தங்களது ஆதிக்கத்தினை நிலைநாட்டுவதற்கு பலமாக போராடிக் கொண்டிருக்கின்றார்கள். அதன் தீர்மானத்தின் ஒரு பகுதியே இன்று தமிழ் தேசிய கூட்டமைப்பு சிதைந்துள்ளதாகும். அந்த மேட்டுக்குடியின் சித்தாந்ததின் எடுக்கப்பட்ட முடிவுகளே இதற்கு காரணம்.

சுமந்திரனை நாங்கள் சட்டத்தரணியென்றே நினைத்தோம்.  ஆனால் கணக்கு வாத்தியார் போல கணக்கு படிப்பிக்கின்றார் தொழில்நுட்பம் தொடர்பாக  அவருக்குத்தான் அந்த கணக்கு தெரியும். எனக்கு தெரியாது.

இன்று வடகிழக்கு இணைப்பு மாகாணசபை தொடர்பில் பேசும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் அன்றைய நிலைப்பாட்டை யாரும் மறந்துவிடக்கூடாது. 2008ஆம்ஆண்டு நாங்கள் தேர்தலில் போட்டியிடமாட்டோம் கொள்கை ரீதியான முரண்பாடு என பல விமர்சனங்களை செய்தார்கள்.

2008ஆம் ஆண்டு நான் முதலமைச்சராக வந்தபோது என்னை வரவிடாமல்செய்வதற்கு முஸ்லிம் காங்கிரசுக்கு ஆதரவு வழங்கினார்கள். இரண்டாவது முறை தவறவிட்டு அடுத்ததடவை முதலைமைச்சர் பதவியை தமிழ்தேசிய கூட்டமைப்பு எடுக்கவேண்டும் என்று சம்பந்தர் ஐயாவிடம் சென்று கதைத்தோம்.

கிழக்கில் போராடியவர்கள் பல இழப்புகளை சந்தித்தவர்கள் என்ற அடிப்படையில் கிழக்கில் தமிழ் தேசிய கூட்டமைப்பினை சேர்ந்தவர் முதலமைச்சராக வரவேண்டும் என்பதற்காக எனது முழு ஆதரவினையும் தருகின்றேன் என சம்பந்தர் ஐயாவிடம் கூறியபோது அதனை உதாசீனம் செய்தார்.

அதனால் அமைச்சர் ஹாபீஸ் சொல்வது உண்மையில்லை. நாங்கள் சாதகமான விடயங்களை ஊகித்துக்கொள்கின்றோம். சம்பந்தன் ஐயா போன்ற தலைவர்கள் மரணம் வரையிலும் இலங்கையின் அரசியலை ஊகித்துக்கொள்ளவில்லையென்ற என்ற கவலை எனக்கு இன்னும் இருக்கின்றது.” என தெரிவித்தார்.

மக்கள் பிரச்சினைகளை பற்றி பேசாது நாடாளுமன்றில் சிறுபிள்ளைகள் போல சண்டை போட்டுக் கொண்டிருக்கும் வட-கிழக்கு தமிழ் எம்பிக்கள் !

நேற்றைய நாடாளுமன்ற அமர்வின் போது (நவ 21.2022) “தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன், மூன்று கோடியினைப் பெற்றுக்கொண்டு கனடாவிற்கு ஆட்களை அனுப்புகின்றார்.”என நாடாளுமன்ற உறுப்பினர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்திருந்தார்.

 

இந்தநிலையில்; “கனடாவிற்கு ஆட்களை கடத்தி சம்பாதிக்க வேண்டிய தேவை எனக்கு இல்லை.” எனவும்  இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் முன்வைத்த சகல குற்றச்சாட்டுக்களையும் நிராகரிக்கிறேன் எனவும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் தெரிவித்துள்ளார்.

 

இதன் போது மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி குழு தலைவர் சந்திரகாந்தனின் காணி அபகரிப்பு மோசடி தொடர்பில் விசாரணை செய்ய விசேட குழு ஒன்றை நியமிக்குமாறும் சபைக்கு வருகை தந்திருந்த ஜனாதிபதியிடம் வலியுறுத்தினார்.

பாராளுமன்றத்தில் இன்று  இடம்பெற்ற விவாதத்தின் போது ஒழுங்குப் பிரச்சினையை முன்வைத்து உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாரந்தன் நேற்று (நவ. 21)நான் சபையில் இல்லாதபோது எனது பெயரை குறிப்பிட்டு ஒருசில விடயங்களை முன்வைத்துள்ளார்.

அது தொடர்பில் விளக்கமளிக்க வேண்டும். காணி அபகரிப்பு தொடர்பில் ஒரு குழுவை நியமிக்குமாறு ஜனாதிபதியிடம் வலியுறுத்துகிறேன்.

காணி அபகரிப்பு தொடர்பில் என்னிடம் உள்ள ஆவணங்களை தருகிறேன்,இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனிடம் உள்ள ஆவணங்களையும் பெற்றுக் கொள்ளுங்கள்.

கனடாவிற்கு  ஆட்களை கடத்துவதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார். ஆட்களை கடத்தி சம்பாதிக்க வேண்டிய தேவை எனக்கு இல்லை. ஆட்கடத்தல் தொடர்பில் சந்திரகாந்தனிடம் கேட்க வேண்டும்.

அவுஸ்ரேலியாவிற்கு ஆட்கடத்தல் தொடர்பில் ஏபிசி என்ற செய்தி நிறுவனம் கடந்த செப்டெம்பர் மாதம் 22ஆம் திகதி வெளியிட்ட செய்தியில் சந்திரகாந்தனின் சகோதரர் என குறிப்பிடப்படும் அகிலகுமார் சந்திரகாந்தன் என்பவர் ஆட்கடத்தலில் ஈடுப்படுகிறார் என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த செய்தி பத்திரத்தை சபைக்கு சமர்ப்பிக்கிறேன்.

மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தின் தலைவர் இராஜாங்க அமைச்சர் சந்திரகாந்தனின் மோசடி செயற்பாடுகள் தொடர்பில் விசாரணை செய்ய விசேட குழுவை நியமியுங்கள்.

மோசடி தொடர்பான சகல ஆவணங்களையும் சமர்ப்பிக்க தயார். ஆகவே இராஜாங்க அமைச்சர் சந்திரகாந்தன் சிவநேசதுரை சந்திரகாந்தன் முன்வைத்த அனைத்து குற்றச்சாட்டுக்களையும் முழுமையாக நிராகரிக்கிறேன் என்றார்.

……….

உண்மையிலேயே இந்த தமிழ் பேசும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களை பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்த தமிழ் மக்கள் தொடர்பில் கிஞ்சித்தும் யோசிப்பதாக தெரியவில்லை. வடக்கில் ஈ.பி.டி.பி கட்சியினர் குறிப்பாக அக்கட்சியின் தலைவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தமிழ்தேசியக்கட்சிகளை குறிப்பாக கூட்டமைப்பினரை மலினப்படுத்திக்கொண்டிருக்கிறார். அதற்கு கூட்டமைப்பினர் பதில் கூறிக்கொண்டிருக்கின்றனர். இது தவிர கிழக்கில் பிள்ளையான் , வியாழேந்திரன் ஆகியோர் ஒரு குழுவில் நிற்க அவர்களை இரா.சாணக்கியன், கலையரசன் உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்ற அமர்வில் தாக்கியும் – அதற்கு பதிலாக பிள்ளையான், வியாழேந்திரன் ஆகியோர் கூட்டமைப்பினரையும் தாக்கி பேசி வருவது வழமையாகிவிட்டதே தவிர மக்கள் பிரச்சினைகளை இவர்கள் பேசுவதாக தெரியவில்லை.

நேற்றைய அமர்வில் மீனவர்களையும் கவனத்தில் கொண்டு பட்ஜெட்டை தயாரியுங்கள் என வலியுறுத்தி நாடாளுமன்ற உறுப்பினர் திலிப் வெதராச்சி நேற்று (21) பாராளுமன்றத்தின் நடுவில் தரையில் அமர்ந்து போராட்டம் ஒன்றை நடத்தியிருந்தார். இது தவிர கட்சி அரசியல் தொடர்பில் பல வாதங்களும் – முரண்களும் காணப்பட்டாலும் கூட மலையக தோட்டத் தொழிலாளர்களின் உரிமைகள் தொடர்பான ஆரோக்கியமான பல நடவடிக்கைகளை மலையக தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன்னெடுத்துக் கொண்டிருக்கின்றனர்.  இப்படியாக பல தென்னிலங்கை, மலையக நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களை நாடாளுமன்றம் தெரிவுசெய்த மக்களுக்காக ஏதாவது செய்துவிட வேண்டும் என செயற்பட்டுக்கொண்டிருக்க வடக்கு – கிழக்கில் இருந்து தமிழ் மக்கள் தெரிவு செய்த நாடாளுமன்ற உறுப்பினர்களோ தங்களுடைய சொந்த – சுய விருப்பு –  வெறுப்பு அரசியலை செய்யும் சண்டைக்களமாக நாடாளுமன்றத்தை பாவித்துக்கொண்டிருக்கின்றனர். நாடாளுமன்றத்தில் பேசப்பட வேண்டிய – வலியுறுத்த வேண்டிய பல பிரச்சனைகள் வடக்கு- கிழக்கில் மலிந்து போய் காணப்பட நமது பாராளுமன்ற உறுப்பினர்கள் குழாயடி சண்டை பிடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

தமிழ் மக்கள் சுதாகரித்து கொள்ள வேண்டியது காலத்தின் கட்டாயமாகிறது. புலி ஆதரவு  அரசியல் பேசுவவோரையும் – தேர்தல் கால வீர வசனங்களை பேசுவதையும் கைவிட்டு உண்மையாகவே மக்கள் பிரச்சினைகளுக்காக செயற்படும் தலைவர்களை தெரிவு செய்து நாடாளுமன்றம் அனுப்ப முன்வராத வரை இங்கு எதுவும் மாறப்போவதில்லை.

 

மூன்று கோடி ரூபாவுக்கு கனடாவிற்கு ஆட்களை அனுப்பும் இரா.சாணக்கியன் – நாடாளுமன்றில் பிள்ளையான் !

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன், மூன்று கோடியினைப் பெற்றுக்கொண்டு கனடாவிற்கு ஆட்களை அனுப்புகின்றார் என நாடாளுமன்ற உறுப்பினர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று(திங்கட்கிழமை) இடம்பெற்ற 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தின் போது உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

தங்களுக்கு ஒழுக்கத்தினை கற்பிப்பதற்கு முன்னர், கூட்டமைப்பிலுள்ள சாணக்கியனுக்கு ஒழுக்கத்தினை கற்பிக்க வேண்டும் எனவும் சிவநேசதுரை சந்திரகாந்தன் எம்.ஏ சுமந்திரனிடம் தெரிவித்துள்ளார்.