பைசர்

பைசர்

அனைத்து அநியாயங்களுக்கும் பின்னிருப்பது லாபம் ஒன்றே! கொரோனா உயிரிழப்புகளும் இந்த லாபத்தினால் தான்!!!

இந்த கொரோனா பரவல் என்னவோ இயற்கைக்கும் மனிதனுக்கும் ஏற்பட்ட ஒவ்வாமையின் விளைவு என்றே ஆய்வுகள் உறுதிப்படுத்துகின்றன. ஆனால் இன்று ஈராண்டுகள் கடந்தும் கொரோனாவை மருத்துவ உலகம் கட்டுப்படுத்த முடியாமல் இருப்பது இயற்கையை மீறிய சக்தியால் அல்ல. சில மனிதர்களை அல்ல பண முதலைகளை ஆட்டி வைக்கின்ற லாபம் என்கின்ற போதையால். இதனை விளக்குவது ‘குவான்டம் மக்கனிக்ஸ்’ அளவுக்கு ஒன்றும் பெரிய விசயம் அல்ல. பாலர் வகுப்புக்குச் செல்லும் பிள்ளைக்கும் விளங்கப்படுத்தக் கூடிய அடிப்படைக் கணிதம். ஆனால் என்னவோ பிரதமர் பொரிஸ் ஜோன்சனின் தலைமையில் உள்ள பிரித்தானிய கொன்சவேடிவ் அரசுக்கு மட்டும் ஏறுதில்லை.

பிரித்தானிய மண்ணில் உலகப் பிரசித்திபெற்ற ஒகஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் அனுசரணையோடு பிரித்தானியாவைத் தளமாகக் கொண்ட அஸ்ராசெனிக்கா – AztaZeneca வால் தயாரிக்கப்பட்ட வக்சினே முதன் முதலில் மேற்கு நாடுகளில் அங்கிகரிக்கப்பட்ட வக்சீன். இந்த வக்சீன் தயாரிப்பில் பொதுப்பணம் பெருமளவில் முதலீடு செய்யப்பட்டு இருந்தது. பொதுமக்கள் பலரும் இந்த பரீட்சார்த்த பரிசோதணைகளுக்கு மனமுவந்து தங்களை ஒப்படைத்தனர். அதே போல் அமெரிக்க நிறுவனமான பைசர் – Pfizer ஜேர்மனியின் பயோன்ரெக் BioNTech நிறுவனத்தோடு சேர்ந்து கொரோனாவுக்கு எதிரான வக்சீனை உருவாக்கும் வேலைகளில் ஈடுபட்டது. ஜேர்மனி மற்றும் ஐரோப்பிய நாடுகள் கணிசமான அளவு பொதுப்பணத்தை குவித்திருந்தன.

அஸ்ராசெனிகா பிரித்தானியாவில் அங்கீகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து அமெரிக்கவும் சில வாரங்களிலேயே பைசர் வக்சீனை அங்கீகரித்தது. பிரித்தானியாவும் பைசர் வக்சீனை அங்கீகரித்தது. ஆனால் இன்று வரை அமெரிக்கா அஸ்ராசெனிக்கா வக்சீனுக்கு அங்கீகாரம் வழங்கவில்லை. பிரித்தானியாவோ பைசருடைய பூஸ்ரர் – booster வக்சீனைத் துரிதப்படுத்தி வருகின்றது.

மருத்துவ செலவீனங்களின் அடிப்படையில் இந்த வக்சீன்களின் அடிப்படையான எம்ஆர்என்ஏ வக்சீனை உருவாக்குவதற்கு அடிப்படையான செலவு 76 பென்ஸ் – 76 pence (£0.76) (ஒரு வக்சீனைத் தயாரிக்க ஒரு பவுண்டிலும் பார்க்க குறைவான செலவு) என செல்பீல் பல்கலைக்கழக மருத்துவ வக்சீன் ஆய்வாளர் பேராசிரியர் ஒருவர் தெரிவிக்கின்றார். இதனை அஸ்ராசெனிக்கா மூன்று பவுண்களுக்கு விற்பனை செய்கின்றது. இதன் விலை மிகவும் கண்ணியமானது. இவ்வாறான வக்சீன்களை உருவாக்குவதற்கு நீண்டகால ஆய்வுகள் பரிசோதணைகள் மற்றும் அவற்றை சேமிப்பது, பாதுகாப்பான முறையில் எடுத்துச் செல்வது போன்ற போக்குவரத்து என அதற்கு மேலதிகமான நிர்ணயிக்கப்பட்ட செலவீனங்கள் இருக்கும். தயாரிக்கும் வக்சீன்களின் எண்ணிக்கை கூடக் கூட ஒரு வக்சீனுக்கான நிர்ணயிக்கப்பட்ட செலவீனம் குறைந்து செல்லும். இதனையே எக்ககொமிஸ் ஒப் ஸ்கேல் என்பார்கள். ஒரு பொருளை பெரும்தொகையில் உற்பத்தி செய்கின்ற போது மேலதிகமான நிர்ணயிக்கப்பட்ட செலவீனம் குறையும்.

ஆஸ்ராசெனிக்கா மூன்று பவுண்களுக்கு விற்பனை செய்யும் வக்சீனை பைசர் கடந்த ஆண்டு எட்டுப் பவுண்களுக்கு விற்பனை செய்தது. இந்த ஆண்டு இந்த பூஸ்ரர் வக்சீனை 22 பவுண்களுக்கு விற்பனை செய்கின்றது. முன்னைய ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு பைசர் தனது வருமானத்தை 7 பில்லியன் அமெரிக்க டொலராக 134 வீதத்தால் அதிகரித்து இருக்கின்றது. செல்வந்த நாடுகளுக்கு மட்டும் தனது வக்சீன்களை விற்பனை செய்து லாபமீட்டும் பைசர் நிறுவனம் உலகின் ஏனைய பாகங்களுக்கு வெறும் கண்துடைப்பிற்கு ஒரு சில மில்லியன் வக்சீன்களையே வழங்க முன்வந்திருந்தது. அதுவும் உடனடியாக வழங்கப்படவில்லை.

மேலும் உலக சுகாதார நிறுவனம் ஆரம்பம் முதல் ஒரு விடயத்தை மிகத் தெளிவாக குறிப்பிட்டு வருகின்றது. அதாவது எல்லா நாடுகளிலும் கொரோனா கட்டுப்படுத்தப்படாவிட்டால் ஒரு கொரோனாவில் இருந்து தப்ப முடியாது. தற்போது பரவி வருகின்ற ‘ஒமிகுரொன் – Omicron கொரோனா அதற்கு சிறந்த எடுத்துக்காட்டு, உலகிலேயே மிகக் கூடுதலான வக்சீன் போடப்பட்ட சனத்தொகையுடைய, ஒரு தீவுமான பிரித்தானியாவில் ஒமிகுரோன் வேகமாகப் பரவி வருகின்றது. காரணம் உலகின் ஏனைய பாகங்களில் மக்கள் தொகையில் ஓரிருவீதமானோருக்கு கூட வக்சீன் கிடைக்கவில்லை. லாபத்தை மட்டுமே நோக்கமாகக் கொண்ட மருத்துவ முதலைகளான இந்த மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் இதனை எப்படி தயாரிப்பது என்ற தொழில்நுட்பத்தை வழங்க மறுக்கின்றன.

பொதுமக்களின் வரிப்பணத்தை வழங்கி அரசுகள் ஆய்வுகளை மேற்கொள்ள உதவின, மக்கள் தங்களை பரிசோதணைகளுக்கு ஒப்படைத்திருந்தனர். ஆனால் லாபத்தை சுரட்டுவதற்காக பைசர் போன்ற நிறுவனங்கள் கொரோனாவை முற்றாக அழிந்து போகவிடாமல் செய்வதற்கான நடவடிக்கைகளில் திட்டமிட்டு செயற்பட்டு வருகின்றது என பிரித்தானியாவின் நம்பகமான தொலைக்காட்சி நிறுவனமான சனல் 4 channel 4, டிசம்பர் 10 டிஸ்பச்சஸ் – dispatches என்ற ஆவணப்படத்தினூடாக குற்றம்சாட்டியுள்ளது.

மேலும் பைசர் ஏனைய வக்சீன்களின் தரத்தை குறிப்பாக அஸ்ராசெனிக்காவின் தரத்தை திட்டமிட்டமுறையில் மழுங்கடிக்கும் பிரச்சாரத்திற்கு ஒரு துணை நிறுவனத்தை பயன்படுத்தி வருகின்றது. அஸ்ராசெனிகா பின்விளைவுகளை ஏற்படுத்தும் என்ற தொனியிலும் புற்றுநோயை உருவாக்கும் என்ற தொனியிலும் இந்த பிரச்சாரங்கள் சுகாதார அமைப்புகள் மத்தியில் பரவலாக பரப்பப்பட்டு வருகின்றது. இந்தக் குற்றச்சாட்டுகளில் எவ்வித உண்மையும் இல்லை. இந்த பிரச்சாரங்களினால் நான் வக்சீன் போடச் சென்றபோது அஸ்ராசெனிக்காவை போடுவதில் என்னையும் அறியாதவொரு பயம் இருந்தது. ஆனால் பல லட்சம் மில்லியன் பேர் தற்போது அஸ்ராசெனிக்கா வக்சீனைப் பயன்படுத்தி உள்ளனர். ஆனால் பைசர் நிறுவனம் பரிசோதணை காலத்தில் பல தில்லுமுல்லுகளில் ஈடுபட்டதுடன் அவற்றை வெளிக்கொணர்ந்த ஒருவரை வேலை நீக்கம் செய்திருந்தது. தற்போதைய நிலையில் இவ்விரு வக்சீன்களுமே விலையைத் தவிர நோய்த்தடுப்பை பொறுத்தவரை ஒரே மாதிரியான தாக்கத்தையே ஏற்படுத்தி உள்ளன.

மேலும் பைசருடன் செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தப்படி பைசருக்கு எதிராக வழக்குகள் வந்தால் அவை பிரித்தானியாவில் நடத்தப்பட முடியாது என்றும் அவைபற்றி வெளியே தெரியப்படுத்தக் கூடாது என்றும் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளதையும் சனல் 4 அம்பலப்படுத்தி உள்ளது. இவ்வாறான மோசமான உடன்படிக்கைகள் பிரித்தானிய பிரதமர் பொரிஸ்ஜோன்ஸனின் ஆட்சியில் மட்டுமே நடக்கின்றது. வேறு எந்தவொரு நாடும் இவ்வான அதிகூடிய விலையில் வக்சீனை வாங்கவோ மோசமான உடன்படிக்கைகளில் கையெழுத்திடவோ இல்லை.

இந்த லாபம் மீதான காதல் ஒன்றும் பல்தேசியக் கொம்பனிகளுக்கு மட்டும் உரித்தானது அல்ல. கண் மருத்துவப் பரிசோதகராக இருக்கின்ற இங்கிலாந்தில் வாழும் மௌலியா செல்வராஜா இலங்கையில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் கண் சிகிச்சை முகாமை நடாத்தி வறுமைக் கோட்டில் இருக்கும் ஏழை எளிய மக்களுக்கு இலவச கண்ணாடியை வழங்குவதற்கு திட்டமிட்டு இருந்தார். இவ்வாறான ஒரு சிகிச்சை முகாம் பல இடர்பாடுகளுக்கு மத்தியில் முல்லைத்தீவில் இறுதியில் நடாத்தி முடிக்கப்பட்டது. ஆனால் இவ்வாறான ஒரு முகாமை யாழ்ப்பாணத்தில் நடத்துவதற்கு முடியவில்லை. அதற்கு முட்டுக்கட்டை போட்டது வேறு யாரும் அல்ல யாழ்ப்பாணத்தில் தனியார் கண் சிகிச்சை நிலையங்களை நடாத்தி வந்த தமிழ் கண்மருத்துவர்கள். இவ்வாறு ஒவ்வொரு விடயத்திலுமே லாபமே நோக்கமாகின்ற போது அவை பல்வேறு அநியாயங்களுக்கும் இட்டுச்செல்கின்றது.

இன்று புற்றுநோய் காரணமாக பல்லாயிரம் பேர் உயிரிழக்கின்றனர். இந்தப் புற்றுநோயை ஏற்படுத்துவதில் புகைத்தல் முக்கிய காரணியாக இருக்கின்றது. சிகரெட் பாவனைக்கு வந்த காலங்களிலேயே அது உணரப்பட்டும் இருந்தது. ஆனால் அது உயிராபத்தை ஏற்படுத்தும் என்று தெரிந்தும் தான் அதன் விற்பனை முடக்கிவிடப்பட்டு பல லட்சம் பேர் புகைத்தலுக்கு அடிமையாக்கப்பட்டனர். லாபத்திற்காக.

பாலம் கட்டும் பொறியியலாளர்கள் ஏன் கட்டுமானத்தில் ஏற்ற பொருட்களைப் பயன்படுத்துவதில்லை? 2017இல் கிறீன்பெல் ரவர் – Greenfell Tower எரிந்து 80 வரையான குடியானவர்கள் கொல்லப்பட என்ன காரணம்? தீப்பிடிக்காத பொருட்களில் அமைக்கப்படவேண்டிய க்ளேடிங் – cladding கிங்கு பதிலாக இலகுவில் தீப்பற்றக்கூடிய க்ளேடிங் – cladding கை பயன்படுத்தியது. ஏன்? உணவுப் பொருட்களில் கலப்படம் எதற்கு? உற்பத்தியைக் கூட்டினால் சுற்றாடல் மாசடையும் என்று தெரிந்தும் ஏன் ஆடம்பரப் பொருட்களை மிதமிஞ்சி உற்பத்தி செய்கின்றோம்?

மதுபானத்திற்கு பல லட்சம் பேர் அடிமையாகின்றனர். குடும்ப வன்முறையில் இருந்து தன்னுணர்வு இழப்பு என்று மரணத்திற்கும் இட்டுச்செல்கின்றது. ஆனால் குடிக்கும் தண்ணீரின் விலையிலும் பியரின் விலை குறைவாக இருக்கின்றது. ஏன்?

அவ்வளவு ஏன் இந்த சிற்றின்பங்கள் எல்லாவற்றையும் திறந்து பேரின்பப் பெருவாழ்வு பெறுவோம் என்று எம் பெருமானின் சன்நிதானத்துக்கு போனால் ஜயா அர்சினைக் ரிக்கற் கேட்கின்றார். ஏன்?

உலகின் மிகச் சிறந்த பொருளியல் சிந்தனையாளர்கள் அடம் சிமித் – கார்ள் மார்கஸ். முற்றிலும் முரண்பட்ட பொருளியல் சிந்தனைகள். கைத்தொழில் புரட்சிக்கு வித்திட்ட காலகட்டத்தில் பிறந்த அடம் சிமித் ஒவ்வொரு மனிதனும் மற்றையவர்களைப் பற்றி எண்ணாமல் தனது நலனின் அடிப்படையில் மட்டும் செயற்பட்டால் எம்மை அறியாமலேயே மறைத்திருக்கின்ற கைகள் சமூகத்தை நேர்வழியில் இட்டுச்செல்லும் என்கிறார். அவரின் கருதுகோள் என்னவென்றால் சந்தைக்கு பொருட்களை கொண்டுவருபவர்கள் தங்களுடைய பொருட்களுக்கு என்ன விலையை நிர்ணயித்தாலும் இறுதியில் அங்கு இயற்கையான சமநிலையொன்று கொண்டு வரப்படும் என்கிறார். அதாவது அதீத லாபம் வைத்து பொருட்களை ஒருவர் விற்றால் அவரிடம் இருந்து யாரும் பொருட்களை கொள்வனவு செய்ய மாட்டார்கள். மாறாக பொருட்களை மிகக்குறைவான விலைக்கு விற்றால் அப்படி விற்பவரால் செலவை ஈடுசெய்ய முடியாது. ஆகவே சந்தை எப்போதும் ஒரு சமநிலையைப் பேணும். அதனை கட்டுப்படுத்த வேண்டியதில்லை.

அடம் சிமித் சொன்னதை இவ்வாறும் எமது மொழியில் சொல்லலாம்: யார் எக்கேடுகெட்டாலும் பரவாயில்லை, நான் லாபமீட்டினால் போதும் என்று ஒவ்வொருவரும் செயற்பட்டால் சந்தை இதையெல்லாம் சீராக்கி, சமநிலைக்கு கொண்டுவரும். நடக்கின்ற காரியமா?

ஆடம் சிமித் வாழ்ந்த காலத்துக்கு நூறாண்டுகளுக்குப் பின் கைத்தொழில் புரட்சி முடிவுக் காலகட்டத்தில் பிறந்த கார்ள் மார்க்ஸ் லாபத்தின் கொடுமைகளை உணர்கின்றார். வறுமையில் பிறந்து வறுமையில் வாழ்ந்து வறுமையில் இறந்தவர் அதன் கொடுமையை துல்லியமாக எதிர்வு கூறியும் உள்ளார். அடம் சிமித் இன் மாயக் கைகள் எதையும் வழிநடத்தாது என்பதையும் லாபம் தனிநபர்களை நோக்கி குவியும் என்பதையும் அந்த லாபம் உற்பத்தி சாதனங்களை பெருக்கி அந்த சந்தையையே கட்டுப்படுத்தும் எனபதையும் வியாபார நிறுவனங்களின் வளர்ச்சியை முளையிலேயே அறிந்து இற்றைக்கு 200 ஆண்டுகளுக்கு முன் பிறந்த கார்ள் மார்ஸ் அன்றே பைசர் போன்ற நிறுவனங்களின் கேடித்தனங்களைச் சுட்டிக்காட்டி இருந்தார்.

இவ்வாறான நிறுவனங்கள் லாபத்திற்காக எதனையும் செய்யும் என்பதை தெளிவுபடுத்தி இருந்தார். இன்று பைசர் தனது லாபத்திற்காக உலக மக்களின் உயிர்களோடு விளையாடிக்கொண்டிருக்கிறது. பைசர் மட்டுமல்ல சில குட்டி ஜம்பவான்களும் தான்.

வடக்கில் பைசர் தடுப்பூசி மையங்களை உருவாக்குங்கள் – சுரேஷ் பிரேமச்சந்திரன்

கொழும்பு இராணுவ வைத்தியசாலைகளில் போடும் பைசர் தடுப்பூசியை வட மாகாணத்தில் யாழ்ப்பாணம், வவுனியா போன்ற இடங்களிலே போடுவது பலருக்கு வாய்ப்பாகுமென முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

இன்று (30) யாழில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

மாகாணங்களை தாண்டிச் செல்ல தடை செய்யப்பட்டிருக்கின்ற நிலையில், அவ்வாறு செல்வதாக இருந்தால் பல்வேறுபட்ட அனுமதியைப் பெற்று செல்ல வேண்டிய சூழ்நிலை காணப்படுகிறது. ஆகவே வெளிநாடுகளிற்கு செல்வோருக்கு பைசர் தடுப்பூசியை பெற்றுக் கொள்ள இலகுவாக வடமாகாணத்தில் யாழ்ப்பாணம், வவுனியா போன்ற இடங்களில் தடுப்பூசிகளை ஏற்றுவதற்கான ஒழுங்கு செய்யப்பட வேண்டும்.

மாகாணங்களை தாண்டி பிரயாணம் செய்ய முடியாத சூழலில் இவ்வாறு கொழும்புக்குச் சென்று தடுப்பூசியை பெறும் நடவடிக்கை சிறந்த ஒன்றாக இருக்க முடியாது. ஆகவே இங்கு எவ்வளவு மாணவர்கள் தடுப்பூசிக்கு விண்ணப்பம் செய்திருக்கிறார்களோ அவர்களுக்குரிய தடுப்பூசிகளை உரிய பகுதிகளில் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கவேண்டும்.

ஆகவே, இலங்கை அரசாங்கம், சுகாதார பிரிவு இதிலே தலையிட்டு வட மாகாணத்தில் குறிப்பாக யாழ்ப்பாணம், வவுனியா, மட்டக்களப்பு போன்ற இடங்களில் தடுப்பூசி மையங்களை உருவாக்குவதன் மூலம் குறித்த மாணவர்களுக்கு பைசர் தடுப்பூசியை பெற்றுக் கொள்ள இலகுவாக இருக்கும்.

வடமாகாண ஆளுநரும், பாராளுமன்ற உறுப்பினர்களும் மாணவர்கள் நலன் கருதி தடுப்பூசியை வடக்கு மாகாணத்தில் பெற்றுக்கொடுக்க ஆவண செய்ய வேண்டும் என்றார்.