மாத்தையா

மாத்தையா

பாகம் 14: மட்டு கச்சேரி துப்பாக்கி கொள்ளையும் – தராக்கி சிவராமின் அரசியல் நுழைவும் – இன்று ஜனநாயகம் பேசுவோரின் கொலைமுகங்களும்

களுதாவளையிலிருந்து பாரிஸ் வரை
ஒர் அரசியல் போராளியின் வாழ்வின் பயணம்!

அசோக் யோகன் கண்ணமுத்துவுடன் ஒர் உரையாடல்! : தோழர் அசோக் யோகன் கண்ணமுத்துவின் சாட்சியம் பகுதி 14 (ஒலிப் பதிவு செய்யப்பட்ட திகதி 09.08.2021). இந்த உரையாடல் அசோக் யோகன் கணணமுத்துவின் பேச்சுமொழியில் எந்த மாற்றமும் இன்றி பிரசுரமாகின்றது.

பாகம் 14

தேசம்: தோழர் மட்டக்களப்பு சிறை உடைப்பை பற்றி கதைத்தோம். அதுக்குப்பிறகு அதாவது எண்பத்தி மூன்று செப்டம்பருக்கு பிறகு, மட்டக்களப்பில் செயற்பாடுகள் எப்படி இருந்தது? குறிப்பா உங்கட செயற்பாடுகள்… ?

அசோக்: புளொட் தீவிரமாக இயங்க முடியாமல் போய் விட்டது. நாங்க அதற்குப் பிறகு மிகக் கடுமையாக தேடப்பட்டோம். வாசுதேவா மற்ற முக்கிய தோழர்கள் எல்லாம் சிறை உடைப்பு சம்பந்தப்பட்ட ஆட்களோட அப்படியே யாழ்ப்பாணம் போயிட்டாங்க. கொஞ்சம் பேர் இந்தியாவுக்கு போய்விட்டார்கள். மிக மிக மோசமான கெடுபிடி அந்த காலகட்டத்தில். ஏனைய தமிழ் பிரதேசங்களிலும் மிகக் கடுமையாகதான் இருந்தது. யாழ்ப்பாணம் தவிர்ந்த, ஏனைய மாவட்டங்களில் புளொட்டினுடைய நடவடிக்கை மட்டுப்படுத்தப்பட்டு தான் இருந்தது. அதான் முழுப்பேரும் யாழ்ப்பாணம் போக வேண்டி வந்தது.

தேசம்: யாழ்ப்பாணத்தில ஏன் அவ்வளவு தூரம் தேடுதல்கள் ஒன்றும் நடக்கேல? யாழ்ப்பாணம் முழுமையாக தமிழ் பிரதேசமாக இருந்தபடியாலா அல்லது ஏற்கனவே போலீஸ் நிலையங்கள் மூடப்பட்டுவிட்டதா அந்த காலகட்டத்தில்?

அசோக்: நான் நினைக்கிறேன் அந்த காலகட்டத்தில் ஏனைய பிரதேசங்களை விட யாழ்ப்பாணத்தில் பொலிஸ் நிலையங்கள் குறைவாகத்தான் இருந்திருக்கும் என்று. முழுக்க முழுக்க தமிழ் பிரதேசங்களாக இருந்தபடியால், எங்களுக்கு ஒழிந்து கொள்வதற்கான சாத்தியங்கள் இருந்தது. ஆனா மட்டக்களப்பில் இவ்வாறான பாதுகாப்பு சூழல் இல்லை. ஒரு பக்கம் கடல் மறு பக்கம் ஆறு. மட்டக்கிளப்பின் புவியியல் அமைப்பை பார்த்தீங்க என்றால், கடலோரக் கிராமங்கள் எங்க பகுதிகளில் கூட. இவற்றல் மறைந்து வாழ்வது கஷ்டம். அப்படி இல்லாவிட்டால் காட்டுக்குப் போக வேண்டும். அல்லது படுவான்கரைக்குப் போக வேண்டும். கொஞ்ச தோழர்கள் படுவான்கரையில் ஒழிந்து வாழும் சூழல் இருந்தது. மற்ற ஆட்கள் யாழ்ப்பாணம் போயிட்டாங்க.

தேசம்: அந்தக் காலகட்டத்தில் தான் நான் நினைக்கிறேன் கச்சேரியில் ஒரு துப்பாக்கி பறிமுதல் நடந்தது என்று. அது எதற்காக மேற்கொள்ளப்பட்டது? எப்படி மேற்கொள்ளப்பட்டது?

அசோக்: மட்டக்களப்பு சிறை உடைப்புக்கு பிற்பாடு, அதை புளொட் தான் செய்வதென்று என்று இருந்தது. அதற்கான வரைபடங்கள், ரெக்கி எல்லாம் ஒரு தோழர் பார்த்து தந்தவர். எங்களுக்கு நம்பிக்கையான தோழர் அவர். அவர்தான் எல்லா ஆயத்தங்களும் செய்தவர்.

மட்டக்களப்பு சிறை உடைப்பு சம்பவம் நடந்தவுடனே மிக கெடுபிடி இருந்ததால, முக்கியமான தோழர்கள் எல்லாருமே வெளியில போயிட்டாங்க. நானும் ஈஸ்வரனும்தான் தான் மிஞ்சினது. அப்ப எங்களால் எதுவும் செய்ய முடியாமல் போய்விட்டது. அந்த நேரத்தில் எனக்கு தனிப்பட்ட வகையிலான நண்பர்கள் சிலர் இதனை செய்ய முடிவு செய்தாங்க. இவர்கள் புளொட்டோட கொஞ்சம் உறவே ஒழிய, புளொட்டில வேலை செய்யவில்லை. அவர்கள் சுயமாக இயங்க வேண்டும் என்று நீண்ட காலமாக எண்ணி இருந்தார்கள். அவங்கள் தாங்கள் இந்த கச்சேரியை செய்யப்போகிறோம் என்று சொல்லி அதைச் செய்தார்கள்.

தேசம்: வேறு அமைப்புகளோடு சேர்ந்தா அல்லது …

அசோக்: இல்லை. அவர்கள் என்னுடைய நண்பர்கள். சின்ன சின்ன அதிருப்திகள் இருந்தது புளொட் தொடர்பாக. எங்களிட்ட ஆட்க்ஷன் இல்லை என்று சொல்லி அதிருப்தி இருந்தது அவங்களிடம். நான் முன்னர் கதைத்த நாக படை வேறு, இவங்க வேறு.

உண்மையில் இந்த நடவடிக்கைக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை. அவங்கள் மிகக் கடுமையான நெருக்கடிக்குள்ள அதை செய்தாங்க. அந்த ஆயுதங்கள் என்னுடைய களுதாவளை கிராமத்தில்தான் புதைக்கப்பட்டது.

அடுத்த நாள் போய் பார்த்தபோது புதைத்த இடத்தில் ஒன்றுமில்லை. அப்போ இவங்களுக்கு பெரிய அதிர்ச்சி.

அது என்ன நடந்தது என்று கேட்டால், எங்களுடைய ஊரில் அதிகாலையில் கரையோரமாக கடலில் மீன்பிடித்துக் கொண்டிருப்பது வழமை.

கடற்கரையை அண்டிய பகுதி ஒன்றில் ஆயுதங்களை மறைவாக புதைக்கும் போது, கடற்கரையில் கரைவலையில் மீன் பிடித்துக் கொண்டிருந்தவர்கள், இவங்கள் புதைத்ததைக் கண்டுட்டாங்க. அவங்களுக்கு என்ன சாமான் என்று தெரியாது, பிறகு தோண்டி பார்த்திருக்கிறாங்கள் துப்பாக்கி. எங்கட கிராமத்து ஆக்கள் அவங்க. எல்லாரும் ஒன்டு ரெண்டு என எடுத்து தங்கள் வீடுகளுக்கு கொண்டு போய்விட்டார்கள். மொத்தம் 67 துப்பாக்கிகள் என நினைக்கிறேன்.

பிறகுதான் கேள்விப்பட்டிருக்கிறார்கள் இப்படி கடற்கரையிலிருந்த ஆட்கள் கொண்டு போய்விட்டார்கள் என்று. என்னிடம் வந்து சொன்னாங்க. அப்போ நான் தேடப்பட்டு கொண்டிருக்கிற நேரம். நானும் நேரடியாக போகேலாது. போனாப் பிரச்சனை வந்திடும். நான் நண்பர்களிடம் சொன்னேன், நீங்க போய் கேளுங்க என்று. இவங்க போய் எடுத்தவங்களிடம் கேட்ட போது, அவர்கள் கொடுக்க மறுத்து விட்டார்கள். அவங்களுக்கு இதன்ற பிண்ணனி அபாயம் எதுவும் தெரியாது.

பிறகு நானும், தோழர்கள் பணிக்ஸ்சும், கராட்டி அரசனும் போய் வாங்கி, இன்னொரு இடத்திற்கு மாத்தினோம். நான் போனதால் நாங்கள் தான் இதைச் செய்தோம் என நினைத்து, பொலிஸ் என்னை கடுமையாக தேடத் தொடங்கி விட்டார்கள். அதற்குப் பிறகு, நான் தோழர் ஈஸ்வனிடம் இந்த துப்பாக்கி சம்பந்தப்பட்ட விடயங்களை பொறுப்புக் கொடுத்துவிட்டு, என்னுடைய கிராம சூழலை விட்டு மட்டக்களப்புக்கு டவுனுக்கு வந்துட்டேன்.

அங்க ஒழித்துக் கொண்டிருக்கும் போது, இந்த நண்பர்களுக்கும், ஈஸ்வரனுக்கும், எனக்குமான கம்யூனிகேஷன் இல்லாம போயிட்டுது. அப்போ இந்த கம்யூனிகேஷன் ஏற்படுத்துவதற்கான நம்பிக்கையான ஒருவர் எனக்கு கட்டாயம் தேவை. அப்போது எனக்கு தெரிந்த நண்பர் ஒருவர் சொன்னார் சிவராமை பயன்படுத்தலாம் என்று. சிவராமை எனக்கு முதலே தெரியும். என் நண்பர் கவிஞர் வீ. ஆனந்தனின் நண்பன் சிவராம். அத்தோடு, மட்டக்களப்பில் வாசகர் வட்டம் ஒன்று இருந்தது. அதற்கூடாகவும், சிவராமை எனக்கு தெரியும். அடிக்கடி சந்தித்து கொள்ளுவோம். ஆனால் பெரிய நெருக்கம் இல்லை எங்களுக்குள்ள. அப்போ சிவராமை கூப்பிட்டு, சிவராமுக்கு ஊடாகத்தான் அந்த நண்பர்களோடும், ஈஸ்வரனோடும் தொடர்களை ஏற்படுத்திக் கொண்டேன்.

தேசம்: பிற்காலத்தில் தராக்கி என்று அழைக்கப்பட்ட சிவராமும் இவரும் ஒருவர்தானே..

அசோக்: ஆம். ஒருவர்தான். ஏனென்றால் சிவராமின் பேக்ரவுண்ட் ரோயல் பெமிலி. அப்போ பொலிசாருக்கு சந்தேகம் வராது. அப்போ சிவராமை வைத்துக்கொண்டுதான் கம்யூனிகேஷன் செய்கிறோம். அந்த பிரச்சினை தீர்ந்ததற்குப் பிறகு நான் யாழ்ப்பாணம் வந்துட்டேன். ஈஸ்வரன் வவுனியா போட்டார்.

தேசம்: துப்பாக்கிகளுக்கு பிறகு என்ன நடந்தது?

அசோக்: துப்பாக்கிகளுக்கு பிறகு என்ன நடந்தது என்று கேட்டால், துப்பாக்கிகள் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. ஒரு பத்து, பதினைந்து துப்பாக்கிகள் இடங்கள் மாறும் மாறும்போது பல்வேறு பிரச்சினையால் விடுபட்டு போய் விட்டது. அது அவங்களுக்கு கிடைக்கல. ஒரு ஐந்து ஆறு தோழர்கள். அந்நேரம் அவங்களுக்கு வேற அமைப்புகளும் இல்லை. அவங்களுடைய சிந்தனைக்கும், செயற்பாட்டிற்கும் ஏற்றது புலிகளாகத்தான் இருந்தது. புலிகளோடு சேர்ந்து விட்டார்கள். அதுல முக்கியமா என்னுடைய நண்பன் மாறன் சின்னத்தம்பியும் ஒருவர். பிறகு அவர் புலியை விட்டு விலகி இருந்ததாகவும், இந்திய இராணுவ காலத்தில் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும் பிற்காலங்களில் அறிந்தேன்.

கொஞ்ச காலத்திற்கு பிறகு, யாழ்ப்பாணத்தில் நான் இருந்த போது, என்னுடைய நண்பர் வந்து சொன்னார் மட்டக்களப்பில் இருந்து, என்னை பார்ப்பதற்கு ஒருவர் வந்திருக்கிறார் என்று. அங்க போனா, நாலைந்து பேரோட எல்.ரீ.ரீ.ஈ மாத்தையா நிக்கிறார்.

தேசம்: உங்களை வரச்சொன்னது மட்டக்களப்பைச் சேர்ந்த மாறனா?

அசோக்: இல்லை. என்னிடம் வந்து சொன்னவர் யுனிவர்சிட்டி யில் படிக்கும் நண்பர். என்னை தேடி வந்தவர் யார், என்ன பெயர் என்று அவரிடம் நான் கேட்ட போது, தனக்கு தெரியாது என்றும், தன்னிடம் என்னை விசாரித்தபடியால் வந்து சொன்னதாக கூறினார். ஆனால், அவர் புலிக்கு வேலை செய்தவர் என்று பிறகுதான் தெரியும். காலப்போக்குல புலிக்கு உளவாளியா வேலை செய்தார் என்று கேள்விப்பட்டேன்.

துப்பாக்கி சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் தங்கட இயக்கத்திற்கு வந்துவிட்டார்கள் என்றும், குறிப்பிட்ட துப்பாக்கிகளை நாங்கள் தரவில்லை என்று சொல்லி அவற்றை தர வேண்டும் என்றும் மாத்தையா சொல்கின்றார்.

அந்த துப்பாக்கிகளால் பெரிய பிரயோசனம் இல்லை. எல்லாம் சொட் கண். அத்தோட, மாத்தையாவோடு நிற்கிற ஆட்களில், துப்பாக்கி சம்பவத்தில் ஈடுபட்ட யாரும் இல்லை. ஆனால் இவர் கேட்கிறார். அப்ப நான் நடந்த சம்பவங்களை விளங்கப்படுத்தினேன், இதுதான் நடந்தது என்று சொல்லி.

தேசம்: அதுல மாத்தையாவும் வேறு யாரும் வந்தது புலிகளிலிருந்து?

அசோக்: மாத்தையாவை மட்டும் தான் எனக்கு தெரியும். மற்றவர்களைக் காட்டி, இவங்களும் துப்பாக்கி சம்பவத்தில் சம்பந்தப்பட்டவங்க என்று மாத்தையா என்னிடம் சொல்கிறார். ஆனா யாருமே சம்பந்தப்பட்ட ஆக்களா எனக்கு தெரியல.

அப்போ நான் சொன்னேன், உங்களுக்கு நன்மை செய்ய போய்த்தான் நாங்களும் தேடப்பட்டு இவ்வளவு சிக்கல் பட்டது. உங்களுக்கு கடைசியா ஒரு பத்து, பதினைந்து துப்பாக்கி தான் இல்லாமல் போனது. அதை பாதுகாத்து உங்களுக்கு தருவதற்கு எவ்வளவு கஷ்டப்பட்டோம் என தெரியுமா என கேட்டேன். இல்ல நீங்கள் ஏமாத்தி போட்டீங்கள். உங்கள் மீது நடவடிக்கை எடுப்போம் என்று சொல்லி, பிறகு அதுல முரண்பட்டு போயிட்டாங்க. பிறகு காலப்போக்கில் அதில் ஒருவரை நான், இந்தியாவில் தற்செயலாக சந்திக்க நேர்ந்தது.

தேசம்: யாரை..

அசோக்: மாத்தையாவோடு வந்த அந்த நாலு ஐந்து பேரில் ஒருத்தரை. அப்போ அவர் சொன்னார் உங்களுக்கு எல்லாம் வெடி இருக்கு என்று.

தேசம்: மட்டக்களப்பிலிருந்து நீங்கள் யாழ்ப்பாணம் போவதற்கு முதலில் மட்டக்களப்பு சிறை உடைப்பில் பயன்படுத்தபட்ட ஆயுதங்கள் தொடர்பா ஒரு சுவாரசியமான கதை இருப்பதாக சொல்லிட்டு அதை நிப்பாட்டிட்டீங்க.

அசோக்: நான் முன்னர் சொல்லி இருப்பேன் என்று நினைக்கிறேன் எறிகுண்டு செய்ததது பற்றி. பால் டின்னில ஜெலட்டின் வைத்து, திரி வைத்து, நெருப்பு கொளுத்தி எறிய வேண்டும் என்ற அடிப்படையில் செய்யப்பட்டது அது… அவற்றில் எதுவுமே பயன்படுத்தப்படவில்லை. எங்கட வீடு ஒரு தென்னந்தோப்பு. அங்க தேங்காய் உரித்த பிறகு, தேங்காய் மட்டை எல்லாம் பெருசா குமிச்சு வைத்திருப்பார்கள். மிஞ்சின கைக்குண்டுகள் எல்லாவற்றையும், அதுக்குள்ள நான் ஒழித்து வைத்துவிட்டேன். ஒரு நாள் அம்மா தேங்காய் மட்டை குவியலுக்கு நெருப்பு வைத்து எரித்து இருக்கிறா. இவற்றிக்கு என்ன நடந்தது என்று தெரியல. பார்த்தா எல்லாம் எரிஞ்சி போய்விட்டது.

தேசம்: ஒண்டும் வெடிக்கேல?

அசோக்: ஒன்றுமே வெடிக்கேல. அப்ப யோசித்துப் பார்த்தன் நாங்கள் இதுகளை வைத்துக்கொண்டுதான் சிறையை உடைக்க வெளிக்கிட்டு இருக்கிறோம். அம்மா நெருப்பு வைக்கும் போது வெடித்திருந்தால் பெரிய பிரச்சனை ஆகியிருக்கும். ஆனால் ஒன்றும் வெடிக்காமல், அப்படியே எரிந்து போயிட்டுது. கொஞ்ச காலத்துக்குள்ள தான். நீண்ட காலமும் இல்லை.

தேசம்: அந்த நேர சம்பவங்கள், திட்டமிடல்கள் எல்லாம் ஒரு சிறுபிள்ளைத்தனமாகவும் இருந்திருக்கிற மாதிரி தெரியுது…?

அசோக்: சிறுபிள்ளைத்தனம் என்பதைவிட அதீத நம்பிக்கை இருந்தது எங்களிடம். அந்த நம்பிக்கையும், நல்ல திட்டமிடலும்தான் அந்த வெற்றிக்கு காரணம்.

தேசம்: உங்களுடைய பேனா நட்பு என்பதும் அதனூடாக நீங்கள் எடுத்துக்கொண்ட தொடர்புகளும் தான் கூடுதலாக அரசியலுக்கும், அதற்குப் பிறகு இயக்கத்துக்கும், இயக்கங்களுக்கு இடையேயான உறவுகளுக்கும் உதவியாக இருந்திருக்கும் என நினைக்கிறேன்?

அசோக்: ஒரு பன்முக பார்வை கொண்ட தன்மையையும், ஜனநாயக பண்புகளையும் பேனா நட்பு தந்தது. உரையாடல் தானே வாழ்வை எம் பயணத்தை தீர்மானிப்பவை. எவ்வளவு முரண்பாடுகள் இருந்தாலும் உரையாடுவோம். அது எங்களுக்கு நிறைய பண்புகளை வளர்த்தது. பேனா நண்பர்கள் புளொட்டுக்குள்ள வந்தது குறைவு. ஆனால் தொடர்புகள் இருந்தது. அந்தக் காலம் யூத் கவுன்ஸில் இருந்தது, விளையாட்டு முகாம் எல்லாம் நடந்தது. அதுக்குள்ள நிறைய நண்பர்கள் கிடைத்து, அவங்க நிறைய பேர் புளொட்டுக்குள்ள வந்திருக்கிறார்கள். பெரிய ஒரு நெட்வொர்க் இருந்தது. பென் பிரண்ட், யூத் கவுன்ஸில் என்றெல்லாம் எங்களை நம்பி ஒரு கிரவுட். அதற்கான நம்பிக்கையை நாங்கள் கொடுத்தோம். வேறு இயக்கங்களுக்குள்ளும் என் பேனா நண்பர்கள் ஒருசிலர் இருந்துள்ளனர்.

மட்டக்களப்பில் இருக்கும் போது, எல்லா அமைப்புகளோடும் எங்களுக்கு தொடர்பும் உறவும் இருந்தது. முக்கியமாக அங்க வேலை செய்த ஈபிஆர்எல்எஃப், ஈரோஸ், புலிகளுக்கு வேலை செய்த முழுப் பேரோடையும் எங்களுக்கு உறவு இருந்தது.

உமைகுமாரன், இறைகுமாரன் கொல்லப்பட்ட பின்பும், எங்களுக்குள்ள ஒரு உறவு இருந்தது தானே நாங்க பேசினம் கதைத்தோம்…

தேசம்: யாழ்ப்பாணத்தில வேலை செய்யேக்கை உங்களுக்கு எப்படியான சூழல் இருந்தது ?

அசோக்: குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகு நாங்க மட்டகளப்பில் நிற்கமுடியாமல் போய்விட்டது. ரகுமான் ஜான், கேசவன், பார்த்தன், சலீம், செல்வன், ஜென்னி முழுப்பேரும் திருணோமலையிலிருந்து யாழ்ப்பாணம் வந்துட்டார்கள்.

வவுனியா தான் எங்கட பிரதான முக்கிய தளமாக இருந்தது. வவுனியாவில் தங்கராஜா தோழர் எல்லாரும் இருந்தவங்கள். யாழ்ப்பாணத்தில் அமைப்பை மிகத் தீவிரமாக கட்டமைக்க வேண்டும் என்று முடிவு செய்யப்படுகிறது. அது வரைக்கும் யாழ்ப்பாணத்தில் யுனிவர்சிட்டியில் இரண்டு தோழர்கள் வேலை செய்தவர்கள் சத்தியமூர்த்தியும், கேதீஸ்வரனும். கேதீஸ்வரன் திருகோணமலை, சத்தியமூர்த்தி யாழ்ப்பாணம். குமரன் தோழர் யாழ்ப்பாண மாவட்ட பொறுப்பாளராக இருந்தார். பெரிதாக மக்கள் அமைப்பு வேலைகள் எதுவும் நடக்கல்ல.

தேசம்: இப்பவும் அவர்கள் இருக்கிறார்களா?

அசோக்: தோழர் குமரன் இங்க பிரான்சில் இருந்தவர். இறந்து விட்டார். சத்தியமூர்த்தி இலங்கையில் இருக்கிறார். கேதீஸ்வரன் காந்திய வாகனத்தில் போய், யாழ்ப்பாண பௌத்த விகாரையடியில் இராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்டவர்.

அந்த காலகட்டத்தில் யாழ்ப்பாணத்தில மற்ற இயக்கங்கள் தீவிரமாக வேலை செய்து கொண்டிருந்தது. அப்போ நாங்களும் வேலை செய்ய வேண்டும் என்று நானும், தங்கராஜா தோழரும் யாழ்ப்பாணம் போறோம். ஏனென்றால் அரசியல் வகுப்பு எடுக்க வேண்டியிருந்தது. அமைப்பு வடிவங்களை உருவாக்க வேண்டி இருந்தது.

தேசம்: தங்கராஜா தோழர் எந்த பகுதியை சேர்ந்தவர்…

அசோக்: அவர் மலையகத்தை சேர்ந்தவர். இப்போது, இந்தியாவில் தான் இருக்கிறார். அவர் ஜே.வி.பி இல் இருந்து வந்தவர்.

தேசம்: மலையகத்தை சேர்ந்த தோழர்களும் கணிசமான அளவில் இருந்தார்களா?

அசோக்: நிறைய முக்கியமான தோழர்கள் ஆதவன், மாணிக்கம் என்று ஒரு தோழர் முக்கியமானவர். மாணிக்கம்பிள்ளை என்ற ஒரு தோழர் இருந்தவர். பெரியண்ணன் என்று சொல்லி வவுனியா அவர். நிறைய தோழர்கள் இருந்தார்கள்.

நாங்க யாழ்பாணம் போகும்போது, அங்கு பெரிதாக அமைப்பு வடிவம் இருக்கவில்லை. நாங்க போய்த்தான் அவற்றை ஒழுங்கமைக்கின்றோம். யாழ்ப்பாண மாவட்டத்திற்கு பொறுப்பாக இருந்த தோழர் குமரன், நெருக்கடிகளால் எதுவும் செய்ய முடியல்ல. குமரன் பின்தளம் போய், கரையோரப் பொறுப்புக்களை, கடல் போக்குவரத்துக்களை பார்க்க வேண்டி இருந்ததால், மாவட்ட பொறுப்பாளராக நேசன் என்று சொல்லி, இப்போது கனடாவில் இருக்கிறார். அவரை நியமிக்கிறார். தளப் பொறுப்பாளாராக தோழர் சலீம் பொறுக்பெடுக்கிறார். அவர் பொறுப்பெடுத்து மூன்று மாதத்திலேயே திருநெல்வேலியில் வைத்து இராணுவத்தால் கைது செய்யப்பட்டு விட்டார். அதற்குப் பிறகு தோழர் கேசவன் தளப்பொறுப்பாளராக வருகின்றார்.

இக் காலங்களில் நாங்கள் அமைப்பை கட்டுவதற்கான தீவிர முயற்சியில் ஈடுபடுகிறோம். தொழிற்சங்கங்கள், மாணவர் இயக்கங்கள், பெண்கள் அமைப்பு என உருவாக்குகின்றோம். இவ் அமைப்புக்களை சேர்ந்த தோழர்களுக்கு பாசறைகள் வைத்து அரசியல் வகுப்புக்கள் நடாத்துகிறோம்.

தேசம்: தளத்தில் வந்து மத்திய குழுவைச் சேர்ந்த தோழர்களில் நீங்கள் ஒருவர், மற்ற தோழர்கள் யார் யார்…?

அசோக்: மத்திய குழு உருவாக்கப்படவில்லை. இந்த நேரத்தில் தற்காலிக மத்திய குழு இருக்கிறது . இது பற்றி முன்னமே கதைத்துள்ளோம்.

தொழிற்சங்கங்களுக்கு முக்கியமாக ஐபி, ஜீவன், ராஜன், பிரசாத், முத்து, ரகு, கௌரிகாந்தன், இளவாலை பத்தர், கிருபா அவங்க எல்லாம் இருக்கிறாங்கள். பிறகு மாணவர் அமைப்புகள் டெசோ உருவாக்கப்பட்டு, தீபநேசன், குருபரன், ஜபார், மகிழ்ச்சி, அர்ச்சுனா, தமிழ், தம்பா, தனஞ்சயன், சிவகுமார், விமலேஸ்வரன், லவன், சுகந்தன், திரிலிங்கம் ஞானம், போல், பாபு, இப்படி நிறைய தோழர்கள். பெண்கள் அமைப்பில் நிறைய தோழர்கள் வேலை செய்தவங்க. மாணவர் அமைப்பிலும் நிறைய பெண் தோழர்கள் வேலை செய்தவர்கள் பெயர்கள் வேண்டாம்.

மக்கள் அமைப்பில் உரும்பிராய் குமார், சீலன், விபுல், இளங்கோ, பரணீதரன், கதீர், இப்படி நிறைய. கொக்குவில் தோழர்கள் நிறையப்பேர். நாதன், சிவானந்தன், செல்வன், ஆனந்தன், தோழர்கள் பெயர்களை ஞாபகப்படுத்த முடியாமல் உள்ளது.

தேசம்: நான் நினைக்கிறேன் அந்த காலகட்டத்தில் புளொட்டில் தான் ஆகக்கூடுதலான தோழர்கள் இருந்தார்கள் என்று.

அசோக்: ஓம். ஒப்பிட்டளவில் புளாட் அமைப்பில்தான் கூடுதலான தோழர்கள் இருந்திருப்பார்கள் என நினைக்கிறன். மாணவர் அமைப்பு டெசோவின் இருந்த தோழர்கள் பாசறைகளில் கலந்து கொண்டார்கள். உண்மையில் டெசோவும், தொழிற்சங்கமும், பெண்கள் அமைப்பும் அரசியல்ரீதியாக வளர்ச்சி கொண்ட தோழர்களை கொண்டிருந்தது. யாழ்ப்பாணத்தில் என்ன நடந்தது என்று கேட்டால், யாழ்ப்பாண நிர்வாக அமைப்பு குறிப்பாக மக்கள் அமைப்பு பொறுப்பாளர்களை, மாவட்ட அமைப்பாளராக நியமிக்கப்பட்ட நேசனும், கண்ணாடிச் சந்திரனும்தான் தீர்மானிச்சாங்க. எங்களுக்கு அங்கு பெரிதாக யாரையும் தெரியாது. பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட இந்த தோழர்களுக்கு அரசியல் சார்ந்த வரலாற்று புரிதலும், கோட்பாட்டு ரீதியான புரிதலும் இல்லை. அவர்கள் வெறும் நிர்வாகிகளாகத்தான் இருந்தாங்க.

அவர்களுக்கு கீழ வேலை செய்ற தோழர்கள் அரசியல் வகுப்புக்கு வந்தாங்க. கீழ் மட்டங்களில் வேலை செய்த தோழர்கள், மற்றும் மாணவர் அமைப்புகள் தொழிற்சங்கங்களில் வேலை செய்தவர்கள் அரசியல் ரீதியாகவும், சிந்தனை ரீதியாகவும், ஒரு மாக்சிச ஐடியோலொஜி உள்ளவர்களாகவும், முற்போக்கான எண்ணம் கொண்டவர்களாகவும் இருந்தார்கள். அப்ப எங்களுக்கு அவங்களோட வேலை செய்றது லேசாக இருந்தது.

தேசம்: நான் திருப்பியும் பேனா நண்பர்கள் என்ற விடயத்திற்கு வாரன். உங்கள் பேனா நண்பர்களில் சிலர் பிற்காலத்தில் விடுதலைப்புலிகளில் இயங்கியதாக ஒரு தடவை சொன்னது ஞாபகம் உள்ளது. அதைப்பற்றி சொல்லமுடியுமா?

அசோக்: யாழ்ப்பாணத்தில ஒரு பேனா சிநேகிதி இருந்தவ. யாழ்ப்பான யூனிவர்சிட்டியில் எம் ஏ செய்தவா. பல்கலைக்கழக மறுமலர்ச்சிக் கழகத்தில் வேலை செய்து, அப்படியே புலிக்கு போயிற்றாங்க. பிறகு புலிகளிலிருந்து வெறியேறிட்டாங்க. அவங்களால்தான் திலீபன் உறவு எனக்கு வந்தது.

தேசம்: உண்ணாவிரதம் இருந்து இறந்த திலீபன்

அசோக்: ஓம். ஒரளவு எங்களுக்கு யாழ்ப்பாணத்தில, பேசக் கூடிய உறவுகள், எல்லா அமைப்புகளிடமும் இருந்தது.

தேசம்: இது ஒன்றும் யாழ்ப்பாணத்திலிருந்த தோழர்களுக்கு இடையில் இருக்கேல. ஏன் ?

அசோக்: அப்படி முழுமையாக சொல்லமுடியாது. அரசியல் வளர்ச்சி கொண்ட, ஜனநாயகப் பண்பு கொண்ட தோழர்கள் மத்தியில் உரையாடல்கள் இருந்தன. இது எல்லா இயக்கங்களுக்கும் பொருந்தும். ஆனால் பெரும்பான்மை கொண்டதாக, ஆதிக்கம் கொண்டதாக ஏனைய சக்திகள்தான் இருந்தன. அதுதான் பிரச்சனை. இயக்கங்களோடு பல்வேறு முரண்பாடுகள் வரேக்க நான்தான் அனேகமா பேச்சுவார்த்தைக்கு போறது. சுழிபுரம் படுகொலை தொடர்பாக கூட நான்தான் பேச்சுவார்த்தைக்கு போனான். அதைப் பிறகு கதைக்கலாம் என்று நினைக்கிறேன்

ஈபிஆர்எல்எஃப் க்கு இன்டலெக்சுவல் வட்டம் ஒன்று இருந்தது. நிறைய இடதுசாரி தோழர்களுடன் எல்லாம் உறவை வளர்த்து இருந்தாங்க. புளொட்டுக்கு அந்த நேரத்தில் இவ்வாறான தொடர்புகளும், உறவுகளும் இருக்கவில்லை.

நாங்க போனதற்குப் பிறகுதான், ஓரளவு இடதுசாரித் தோழர்கள், இலக்கிய துறை சார்ந்த நண்பர்களோடு உறவுகளை ஏற்படுத்திக் கொள்ளமுடிந்தது. உரையாடலுக்கான உறவை அவர்களுடைய கருத்தை உள்வாங்குவதற்கான உறவை நாங்கதான் ஏற்படுத்தி கொண்டோம். இதில சந்திச்ச தோழர்களில்
நாகராஜா, கௌரிகாந்தன், முத்து, ஜெயபாலன் போன்றவங்க அரசியல் வகுப்புக்கள் எங்களுக்கு எடுத்தவங்க. அந்த நேரத்தில்தான் நாங்கள் சுவர் என்ற பத்திரிகையும் வெளியிட்டோம்.

தேசம்: அது டெசோ மாணவர் அமைப்பு சார்ந்ததா?

அசோக்: இல்லை இல்லை. அப்ப யாழ்ப்பாணத்தில் புதுசு என்ற சஞ்சிகை வெளி வந்திருந்தது. நல்ல காத்திரமான இலக்கிய சஞ்சிகை அது. சபேசன், ரவி அருணாசலம், இளவாலை விஜயேந்திரன் போன்றவங்க சேர்ந்து வெளியிட்டார்கள். சபேசன், ரவி அருணாசலம் அவங்களோட எனக்கு ஒரு நட்பு ஒன்று இருந்தது. தோழர் கேதீஸ்வரனும் இவங்களோடு நட்பாக இருந்தார். நாங்களும் ஒரு இலக்கிய பின்புலத்திலிருந்து வந்த ஆட்கள் தானே. அப்ப இலக்கிய சஞ்சிகை வெளியிடலாம் என்ற ஒரு ஐடியா இருந்தது. எங்க நோக்கம் என்னவென்றால் புளொட்டினுடைய அரசியல் சாராமல், ஆரோக்கியமான உரையாடலுக்கான ஒரு சுதந்திர தளமாக அந்த இலக்கிய சஞ்சிகையை கொண்டு வர வேண்டும் என்ற ஒரு ஐடியா இருந்தது. அப்போது வழி செல்லத்துரை என்றொரு தோழர் இருந்தவர். இப்ப கனடாவில் இருக்கிறார். அவரோட கதைத்த போது, நல்ல முயற்சி செய்யலாம் என்றார். அதன் பின்பு தோழர்கள் கேசவன், ரகுமான் ஜான், கேதிஸ்வரனோடு கதைத்து கொண்டு வரலாம் என முடிவு செய்கிறோம்.

தேசம்: வலி செல்லத்துரை என்பது அவர் வலிகாமம் என்பதாலா ?

அசோக்: இல்லை இல்லை. அவர் புன்னாலைக் கட்டுவனைச் சேர்ந்தவர். வழி என்று ஒரு பத்திரிகை வெளியிட்டவர். பிறகு சபேசனோடு இது பற்றி கதைக்கிறம். அதற்கு பிறகு நாங்கள் ஒரு சுவர் என்ற பெயரில் சஞ்சிகை ஒன்று கொண்டு வாறதுக்கு கமிட்டி ஒன்று உருவாக்கி, அந்தக் கமிட்டியில் சபேசன், ரவி அருணாச்சலம், நான், ஜீவன், வழி செல்லத்துரை, கேதீஸ்வரன் முதலாவது சஞ்சிகையை கொண்டு வந்தம். சஞ்சிகை ஒரு ஆரோக்கியமான உரையாடல் தளமாக இருந்தது. பல பேரின் படைப்புக்கள் அதில் வெளிவந்தன. இரண்டாவது சஞ்சிகை கொண்டு வரேக்க இயல்பாகவே இயக்கவாதம் தெரியும்தானே, அந்தக் கவிதை பிழை, கட்டுரை பிழை என்று சொல்லி. அதுல பெரும் பிரச்சனை எடுத்தது கண்ணாடி சந்திரன்.

தேசம்: அவர் உங்கட குழுவில் இருக்கிறாரா?

அசோக்: குழுவில் இல்லை. ஆனால் அவர் ஒரு அதிகார மையமாக மாறிவிட்டார் அந்த நேரம்.

தேசம்: இந்த சஞ்சிகை வெளியிடுவதற்கான ஆதரவைப் புளொட் தான் தந்தது.

அசோக்: இது சம்பந்தமாக தோழர்கள் ரகுமான் ஜான், கேசவன் ஆட்களோட எல்லாம் கதைத்து ஓகே பண்ணிட்டாங்க. பிறகு ரகுமான் ஜான் இந்தியாவுக்கு போயிட்டார். இங்கே இருந்தது கேசவன் தோழர்தான். முதலாவது நிதி புளொட் தந்தது. பிறகு கண்ணாடிச் சந்திரன் பிரச்சனை கொடுக்க தொடங்கிவிட்டார். கேசவன் தோழரும் கண்ணாடிச் சந்திரனின் அதிகார மையத்தோடு அக்காலங்களில் ஐக்கியமாகிக் கொண்டிருந்தார். நேசன், கண்ணாடிச் சந்திரன் போன்றவர்களின் அதிகார தன்னிச்சையான போக்குகளை கண்டிக்காமல், அவர்களோடு தாராளவாதம் கொண்டவராக இருந்தார். இரண்டாவது பத்திரிகையை வெளியிடுவதற்கு எங்களிடம் பணம் இல்லை. அந்த நேரம் யாரிடமும் இப்படி பிரச்சினை என்று சொல்லவில்லை.பிறகு நாங்கள் ஸ்டாப் பண்ணிட்டோம்.

தேசம்: இதுல ரகுமான் ஜான், நேசன், கண்ணாடிச் சந்திரன் மூன்று பேரும் பிறகு தீப்பொறி உருவாக்கினம். இவர்கள்தான் அதிகார மையங்களை உருவாக்குகின்றார்கள்…

அசோக்: இதை நீங்கள் வரலாற்று ரீதியாக பார்த்தீர்களென்றால், இப்படி இந்த அதிகார மையம் உருவாகுவதற்கான அடிப்படைக்காரணங்களும், அதன் சூழலும், அது பற்றிய அரசியல் பார்வையும் எங்களுக்கு அவசியம். ஏனென்றால், இப்ப நாங்கள் எடுத்த உடனேயே எல்லாரும் தலைமை மீது தானே குற்றச்சாட்டு வைக்கிறம். தலைமையில் ஒரு அதிகார மையம் உருவாகிய அதே நேரம், தளத்திலும் ஒரு அதிகார மையம் உருவாகுது. கண்ணாடிச் சந்திரன், நேசன் போன்றவர்கள் அந்த அதிகார மையத்தை உருவாக்குகின்றனர்.

அதற்கு தோழர் கேசவனும் துணை போகின்றார். உதாரணமாக பார்த்தீர்கள் என்றால், பார்த்தன் தான் இராணுவப் பொறுப்பாளராக இருந்தவர் தளத்துக்கு. அந்த காலகட்டத்தில் கொலைகளும், கொள்ளை நடக்கவில்லை. நாங்கள் அரசியல் மயப்படுத்தும் வேலைகளில் ஈடுபட்டு கொண்டிருந்தோம்.

தேசம்: அந்தக் காலகட்டத்தில் நல்ல ஒரு உறவு ஒன்று இருந்தது.

அசோக்: ஓம் நிச்சயமாக. புளொட் அமைப்பின் வேலைத்திட்டங்கள் யாழ்ப்பாணத்தில் சுமூகமாகப் போய்க் கொண்டிருந்தது. வேறு அமைப்புகள் சில நடவடிக்கைகளில் ஈடுபட்டாலும் கூட, புளொட் எந்த விதமான தவறான நடவடிக்கைகளிலும் ஈடுபடவில்லை. பார்த்தன் மட்டக்களப்புக்கு போய் போலீசில் பிடிபட்டு கொலை செய்யப்பட்டபோது, ராணுவ பொறுப்பாளர் இல்லாத ஒரு காலம் வருது.

தேசம்: பார்த்தன் என்பது ஜெயச்சந்திரன். ஜென்னியின் துணைவர்…

அசோக்: ஓம். அந்த இடைவெளியில் ஒரு ராணுவ பொறுப்பாளர் அவசியம் என்ற வகையில் கண்ணாடிச் சந்திரன் நியமிக்கப்படுகிறார். பார்த்தனுக்கும் எங்களுக்கும் இடையில் ஒரு ஆரோக்கியமான உரையாடல் இருந்தது, தோழமை இருந்தது. கண்ணாடிச் சந்திரனிடம் அது இல்லாமல் போய் விட்டது. இவர் மற்றவர்களை தோழமையோடு எப்பவும் அணுகுவதில்லை. எப்போதும் அதிகாரத்தனம்தான்.

நேசனைப் பொறுத்தவரை, அரசியல் ரீதியில் எந்த வளர்ச்சியும் அற்றவர். வெறும் நிர்வாகி. சொல்லப் போனால், கண்ணாடிச் சந்திரனின் அடிமையாகவே இருந்தார். குமரன் தோழரிடம் நான் பகிடியாக கேட்பதுண்டு. எப்படி நேசனை கண்டுபிடிச்சீங்க என்று.

தேசம்: பார்த்தன், நீங்கள், மற்றது வாசுதேவா எல்லாரும் காந்தியத்திலிருந்து அரசியல் மயப்படுத்தப்பட்டு வாறீர்கள். கண்ணாடிச் சந்திரனின் பின்னணி என்ன?

அசோக்: அவர் மொரட்டுவை யூனிவர்சிட்டியில் ஆர்க்கிட்டெக் படித்துக் கொண்டிருந்தவர். படிக்க முடியாத சூழல் வருதுதானே. அப்போது புளொட்டிக்கு வருகின்றார்.

தேசம்: இவரைப் போன்றவர்களுக்கு அரசியல் வளர்ச்சியும், இராணுவப் பயிற்சியும் இருக்கேல

அசோக்: எதுவும் இல்லை..

தேசம்: அப்போ என்ன என்று அந்த பொறுப்பான பதவிக்கு வாறினம்?

அசோக்: இவர் ரகுமான் ஜானின் நெருங்கின நண்பர். யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் இவங்க இருவரும் படித்தவர்கள். இவர் வந்த பிண்ணனி பற்றி முன்னர் கதைத்திருக்கிறோம்.

தேசம்: அதற்காக, இவ்வாறு பொறுப்பு கொடுக்க முடியுமா?

அசோக்: இவ்வாறுதான் அதிகார துஷ்பிரயோகங்கள் தளத்தில் உருவாகியது. பிற்காலத்தில் ரகுமான் ஜான் தோழருடன், கண்ணாடிச் சந்திரன் பற்றி கதைக்கும் போது, கண்ணாடிச் சந்திரன் பிற்போக்கான ஆள் என்றும், தன் ஊரில் நடந்த சாதிய கலவரம் ஒன்றில் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிராக செயற்பட்டவர் என்று சொன்னார். அப்ப கேட்டேன், இப்படிப்பட்டவரை எந்த எந்த அடிப்படையில் கொண்டு வந்தீர்கள் என்று. தனக்கு அப்போது தெரியாது என்றும், பின்னர்தான் தான் அறிந்ததாகவும் சொன்னார். நான் இன்றைக்கும் மதிக்கும் தோழர்களில், ரகுமான் ஜான் தோழர் முக்கியமானவர். ஆனால் அவரின் பலவீனம், தனிப்பட்ட நட்புக்களுக்கு இயக்கத்தினுள் முக்கியத்துவம் கொடுத்தது.

தேசம்: பொருளாதார ரீதியில் கண்ணாடிச் சந்திரன் எப்படியான பின்னணியை கொண்டிருந்தார்.

அசோக்: நான் பகிடியா சொல்லுறது, கண்ணாடி சந்திரனை அவருடைய காருக்காகத்தான், புளொட்டில் சேர்த்தது என்று சொல்லி. அவரின் சொந்த காரிலதான் வருவார்.

தேசம்: செல்வந்த குடும்பத்தை சேர்ந்தவர்.

அசோக்: ஓம். அதிகார வர்க்கமாக யாழ்ப்பாணத்தில் ஒரு குரூப் அப்போதே உருவாகிவிட்டது. அந்த நேரத்தில் எனக்கும் இவர்களுக்கும் முரண்பாடு தொடங்கி விட்டது.

தேசம்: யாழ்ப்பாணத்தின் இயல்பா இது… ?

அசோக்: மத்தியதர வர்க்கத்தின் இயல்பு இது. மத்திய தர வர்க்கம் அதிகாரத்துக்கான அபிலாசை கொண்டது. அதற்காக எந்த சமரசமும், எந்த தவறுகளையும் செய்யத் துணியும்.

தேசம்: மத்திய தர வர்க்கம் என்றால், கிழக்கு மாகாணத்தில் மத்தியதர வர்க்கம் இருக்குத்தானே

அசோக்: மத்தியதர வர்க்கத்தில் அபிலாசைகள், எதிர்பார்ப்புக்கள் நடத்தைகள் எல்லாம் எங்கும் ஒன்றாகத்தான் இருக்கும். இயல்பாக எம் எல்லோரிடமும் இந்த குணாம்சம் இருக்கும். அது அதிகாரத்திற்கு ஆசைப்படும். தன்னைச் சற்றி விம்பங்களை ஏற்படுத்தும். அனைத்து சொகுசுகளையும் அனுபவிக்க விரும்பும். இவற்றில் இருந்து விடுபடவேண்டுமென்றால் மார்க்சிய கல்வி அவசியம். இடதுசாரிய பண்பாட்டு வாழ்வு அவசியம். பன்முகத்தன்மை பார்வை, சமூக அக்கறை இருக்க வேண்டும். இல்லாட்டி அதிகாரமும் தன்னிச்சையான போக்குகளும்தான் அதிகரிக்கும். இவைகள் இயக்கத்தை அழித்துவிடும்.

கண்ணாடிச் சந்திரன், நேசன் இவங்க இரண்டு பேரிடமும் இந்த அதிகாரமும், தன்னிச்சையான போக்குகளும் நிறைய இருந்தது. இரண்டு பேரும் சேர்ந்து செய்த விடயங்கள் பலருக்கும் தெரியாது.

உதாரணமாக, கிளிநொச்சி மாவட்டத்தில் வட்டக்கச்சி என்ற ஒரு கிராமம் இருக்கு. அங்க டெசோ மாணவர் அமைப்பு தொடர்பாக அமைப்பு கட்டுவதற்கு வட்டக்கச்சி மகா வித்தியாலயத்திற்கு போயிருந்தேன். மாணவர்களோடு கதைத்த பின், அதிபர் வந்து சொன்னார், டீச்சர் ஒருத்தர் உங்களோட கதைக்க வேண்டுமாம் என்று சொல்லி. அந்த ரீச்சருக்கு நான் புளொட் என்று தெரியும். போனவுடனே சொன்னா, அவங்களின்ர உறவினரை புளொட் சுட்டு கொலை செய்து போட்டுது என்று. எனக்கு ஒன்றும் புரியவில்லை. ஒரே குழப்பம். அவங்க ஆதாரமா சொல்லுறா புளொட் தான் கொலை செய்து போட்டுது என்று. நீங்க எல்லாம் எந்த அடிப்படையில் மாணவர் அமைப்பை கட்ட வாறீங்கள்? கொலைகார இயக்கம் அது இது என்று கடுமையாக பேசினாங்க. எனக்கு ஒன்றுமே தெரியாது. வட்டக்கச்சியில் புளொட் கொலை செய்த மாதிரி நான் அறியல அப்போ.

அதுக்கு பிறகு, அங்க அமைப்பு கட்ட முடியாமல் போய்விட்டது. நான் யாழ்ப்பாணத்துக்கு திரும்பி வாறேன். அப்ப பொறுப்பாளராக இருந்தவர் தோழர் கேசவன். அவரிடம் நான் சொன்னேன் இப்படி ஒரு படுகொலை நடந்தது என்று. தோழர் கேசவன் மறுத்திட்டார். கிளிநொச்சி தோழர்கள் பலருக்கும் இது தெரியாது. ரகசியமாக செய்யப்பட்டிருக்கு. எப்படியோ அந்த டிச்சருக்கு தெரிந்து விட்டது.

பிறகு எனக்கு கிளிநொச்சி தோழர்களுக்கு ஊடாக தெரியவந்தது புளொட் தான் செய்தது என்று சொல்லி. பிறகு கேசவன் ஒத்துக்கொண்டார். அப்போது நான் கேட்டேன் எந்த அடிப்படையில் முடிவு எடுத்தீர்கள் என்று. பிறகு சொன்னார், கிளிநொச்சி மாவட்ட பொறுப்பாளராக அப்ப கிளிமாஸ்டர் என்று ஒரு ஆள் இருந்தவர். அவருடைய அறிக்கையின் அடிப்படையில்தான், இந்த படுகொலை நடந்தது என்று. அப்போ நான் சொன் னேன், அவர் கொலை செய்யப்பட்டது சரியென்றால், புளொட் வெளிப்படையாக உரிமை கோர வேண்டும். பிழை என்றால், சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று. அப்போ ஓம் ஓம் என்று சொல்லிப்போட்டு, உரிமை கோரவில்லை. நான் கேள்விப் பட்டேன் , உண்மையில் அந்த கொலை, கிளி மாஸ்டருக்கும், கொலை செய்யப்பட்டவருக்கும் ஏற்பட்ட தனிப்பட்ட பிரச்சனையில், கண்ணாடிச் சந்திரனும், நேசனும் முடிவு பண்ணி, செய்த கொலை என்று.

மல்லாவிச் சந்திரன் என்று ஒருவர் இருந்தவர். அவர் மல்லாவியில் சிறுசிறு களவுகளில் ஈடுபட்டிருந்தவர். இவங்கள் அவரை விசாரணைக்காக, யாழ்ப்பாணம் கொண்டு வந்திருக்கிறார்கள். கொண்டு வந்த பிற்பாடு, அவர் கொஞ்சம் துணிவான ஆள். அவரை இந்த விஷயங்களுக்கு பயன்படுத்த தொடங்கிட்டாங்க. அவர்தான் அந்தக் கொலைக்கு அங்க பயன்படுத்தப் பட்டிருக்கிறார். கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சொல்லி எனக்கும், தோழர் கேசவனுக்கும் பிரச்சனை வந்துவிட்டது. கேசவனிடம் நான் இந்த குற்றச்சாட்டை வைத்தது, நேசனுக்கும் கண்ணாடி சந்திரனுக்கும் தெரியவந்தது. அந்த காலகட்டத்திலேயே எங்களுக்குள்ள பெரிய முரண்பாடு தோன்றி விட்டது. அந்த நேரத்தில் உமா மகேஸ்வரனின் பெரிய ஒரு விசுவாசியாக இவர்கள் மாறி விட்டார்கள். இந்த தன்னிச்சையான போக்குகளுக்கு பின் தளத்தில் இருந்தும் பெரிய ஆசீர்வாதம் கிடைத்தது. உமா மகேஸ்வரனை முதல் முதல் தளத்தில், பெரிய ஐயா என அழைத்தவர்கள் இவர்கள்தான். அவ்வளவு விசுவாசம்.

அந்த நேரம் ஒட்டிசுட்டானில் ஒரு சம்பவம் நடந்தது கேள்விப்பட்டிருக்கிறீர்களா? சுப்ரமணியம் அல்லது சண்முகநாதன் என்று சொல்லி ஒரு இன்ஸ்பெக்டர். மிக அருமையான ஆள். விடுதலை இயக்கங்களுக்கு எல்லாம் பெரும் ஆதரவு கொடுத்தவர்.

தேசம்: அவர் போலீஸ் அதிகாரியா. ?

அசோக்: ஓம். போலீஸ் பொறுப்பதிகாரி. ஆனால் அவரை இவங்கள் படுகொலை செய்திட்டாங்கள். அதுவும் தனிப்பட்ட பிரச்சனைகளுக்காக. புளொட் என்று தெரியாது.