ரணில் விக்கிரமசிங்க

ரணில் விக்கிரமசிங்க

ஐ.தே.க கட்சியின் யாழ்ப்பாண மாவட்ட அமைப்பாளராக அருண் சித்தார்த்..? – ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கூறியது என்ன..?

ஐக்கிய தேசியக் கட்சியின் யாழ்ப்பாண மாவட்ட அமைப்பாளராக அருண் சித்தார்த் நியமிக்கப்பட்டுள்ளார் என நேற்றைய தினம் யாழ்ப்பாணத்தில்  தனியார் மண்டபத்தில் இடம்பெற்ற சந்திப்பின்போது ஜக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்ட தலைவரும் முன்னாள் நிதி அமைச்சருமான ரவி கருணாநாயக்க குறித்த விடயத்தை தெரிவித்தார்.

 

இதேவேளை ஐக்கிய தேசியக் கட்சியின் யாழ்ப்பாணம் கிளிநொச்சி மாவட்டங்களின் பிரதான அமைப்பாளராக முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் செயற்பட்டு வருகிறார். குறித்த கூட்டத்தில் இதுவரை காலமும் கட்சியின் ஆதரவாளர்களாக உறுப்பினர்களாக இருந்த பலரும் பங்கேற்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

 

இந்த நிலையில் யாழ்ப்பாண மாவட்டத்திற்கு ஐக்கிய தேசிய கட்சியின் புதிய அமைப்பாளர் ஒருவரை இன்னும் உத்தியோகப்பூர்வமாக தெரிவு செய்யவில்லை என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். ஐ.தே.க நிர்வாகக்குழு உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

 

ஐக்கிய தேசிய கட்சியின் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இருப்பினும் இந்த மறுசீரமைப்புகள் தொடர்பில் இதுவரையில் உத்தியோகப்பூர்வமாக தீர்மானங்கள் எடுக்கப்பட வில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

 

இதேவேளை, தனது யாழ்ப்பாண விஜயத்தில் அங்கஜன் ராமநாதன் கூட இருப்பார் என்றும், உத்தியோகப்பூர்வ நியமனங்கள் வழங்குவதற்கு முன்னர் எதிர்ப்புகள் காணப்படுமாயின் அவை கருத்தில் கொள்ளப்படும் என்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

 

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக ரணில் விக்கிரமசிங்க – நாமல் ராஜபக்ஷ

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின், ஜனாதிபதி வேட்பாளர் பட்டியலில் ரணில் விக்கிரமசிங்க உள்ளடக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

 

“ஜனாதிபதி தேர்தல் இந்த ஆண்டு செப்டம்பர் மாதத்திற்கு முன்பதாக நடத்தப்படுமென தாம் எதிர்பார்க்கின்றோம்.

 

எமது கட்சியின் எதிர்கால ஜனாதிபதி வேட்பாளர்களில் ரணில் விங்கிரமசிங்கவும் ஒருவர். எமது கட்சியின் ஆதரவுடனே அவர் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டார்.

 

எனவே ரணில் விக்கிரமசிங்க எங்களுடன் இணைந்து செயற்படுகின்றார்.

 

இந்த ஆண்டு செப்டம்பர் மாதத்திற்குள் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படும் என எதிர்பார்க்கின்றோம்.

 

ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர்கள் பட்டியலில் ரணில் விக்கிரமசிங்கவின் பெயரும் உள்ளது என்பதை கூறிக்கொள்கின்றோம்” என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச மேலும் தெரிவித்தார்.

“தமிழீழ விடுதலைப் புலிகள் அன்று ரணில் விக்கிரமசிங்கவை நம்ப வேண்டாம் என்று கூறிய விடயம் இன்று நிதர்சனமாகியுள்ளது.” – கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

“தமிழீழ விடுதலைப் புலிகள் அன்று ரணில் விக்கிரமசிங்கவை நம்ப வேண்டாம் என்று கூறிய விடயம் இன்று நிதர்சனமாகியுள்ளது.” என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.

ஜனாதிபதியை பாராட்டவேண்டும் ஏனென்றால் சரியான தரப்புகள் யார், ஏமாற்றக்கூடிய தரப்புகள் யார்? ஏமாற தயாரில்லாத தரப்புகள் யார் என்பதை அவர் சரியாக கண்டுபிடித்துள்ளதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.

 

ஒரு தெளிவான நிலைப்பாட்டை அறிவித்த பிறகாவது தமிழ் மக்களை தொடர்ந்தும் ஏமாற்றுகின்ற செயல்பாடுகளிலே ஏனைய அரசியல் கட்சிகளும் தலைவர்களும் ஈடுபடக்கூடாது என்பதை அவர்களிடம் பகிரங்கமாக கேட்டுக் கொள்கின்றோம் எனவும் தெரிவித்தார்.

 

மட்டு. ஊடக அமையத்தில் நேற்று (22) பிற்பகல் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

 

இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர்,

ஒன்றரை வருடங்களுக்கு முன்பாகவே சர்வதேச சமூகத்திற்கு இனப்பிரச்சினைக்கு தீர்வு எட்டப்பட வேண்டும் என்ற அடிப்படையில் முதல் சுற்று பேச்சுவார்த்தைகள் ஆரம்பித்தது.  இந்த பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கும் போதே தமிழ் தேசிய மக்கள் முன்னணி மிக தெளிவாக சொன்னது இவை அனைத்தும் ஒரு நாடகம், இலங்கை பொருளாதார ரீதியில் வங்குரோத்து நிலைக்கு தள்ளப்படடுள்ள நிலையில் பிச்சை கேட்கும் நாடாக மாறியிருக்கின்ற நிலையில் இந்த நிலைமை உருவாகுவதற்கான அடிப்படை காரணமே இனப்பிரச்சினைக்கு தீர்வு இல்லாமல் அதுவொரு யுத்ததிற்கு இட்டுச் சென்று இறுதியில் அந்த யுத்திற்காக முன்னெடுக்கப்பட்ட செயற்பாடுகள் தான் கடனுக்குள் இலங்கை மூழ்குவதற்கு முக்கிய காரணியென்றும் இன்று வரவு செலவிட்டத்தில் சுமார் 15 வீதம் பாதுகாப்புக்கு என ஒதுக்கப்படுகின்றது. என்றால் நாடு முன்னேற முடியாது, இனப்பிரச்சினை தீர்க்கப்படவேண்டும் என்ற நிபந்தனை முன்வைக்கப்பட்ட சூழலில் இனப்பிரச்சினையை தீர்ப்பதற்கு தான் திட்டம் ஒன்றை வைத்துள்ளதாக காட்டுவதற்கு எடுக்கப்படுகின்ற நாடகமே தவிர ரணில் விக்ரமசிங்க ஒருபோதும் இந்த பிரச்சினையை தீர்க்கமாட்டார் என்று கூறி நாங்கள் சவால் விட்டோம்.

தமிழ் தேசிய மக்கள் முன்னணி இந்த பேச்சு வார்த்தைகளில் கலந்து கொள்வதாகயிருந்தால் சிங்கள மக்களுக்கு ரணில் விக்ரமசிங்க தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தமிழர் தேசத்தினை அங்கீகரிக்கின்ற இறைமையினை அங்கீகரிக்கின்ற ஒரு சமஸ்டி தீர்வு, பேச்சுவார்த்தைகள் ஒற்றையாட்சியை தாண்டி இந்த பிரச்சினை சமஸ்டியின் அடிப்படையில் தீர்க்கப்படுவதாக அமையும் என்ற உண்மையினை ரணில் விக்ரமசிங்க சிங்கள மக்களுக்கு வெளிப்படையாகவே கூறினால் இந்த பேச்சுவார்த்தைகளில் நாங்கள் நம்பிக்கை கொள்ள முடியும்.

 

அதனை செய்யாமல் வெறுமனே தீர்வுக்கு வாருங்கள் பேசுவோம்,பெப்ரவரி 4 ஆம் திகதிக்கு முன்னர் தீர்வினை கொடுப்போம் என்பதெல்லாம் பம்மாத்து, அப்பட்டமான பொய்கள், சர்வதேச நெருக்கடிகளை சமாளித்தப்பது மட்டுமேயாகும். அதனாலேயே பேச்சுவார்த்தைக்கு செல்வதற்கு மறுத்தோம். நாங்கள் ஏமாறுவதற்கும் தயாரில்லை, ஏமாற்றப்படுவதற்கும் தயாரில்லை.

 

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தொடர்ந்தும் தமிழினத்தை ஏமாற்றி தமிழ் அரசியல்வாதிகளை பாவித்து தன்னுடைய அடுத்ததேர்தலில் வெற்றி பெறுவதற்கான நிகழ்ச்சி நிரலை கொண்டு செல்வதற்காக மட்டும் செல்லும் இந்த பாதை தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஏற்றுக்கொள்ளாது. எங்களை ஏமாற்ற முடியாது என்பதற்காக எங்களுக்கு அழைப்பே விடுக்கப்படவில்லை.

 

அதற்காக ஜனாதிபதியை பாராட்டவேண்டும் ஏனென்றால் சரியான தரப்புகள் யார், ஏமாற்றக்கூடிய தரப்புகள் யார் ஏமாற தயாரில்லாத தரப்புகள் யார் சரியா கண்டுபிடித்துள்ளார்.

 

ஜனாதிபதி பேச்சுவார்த்தை ஆரம்பித்த காலம் தொடக்கம் கூறிவந்த பொய்யை நேற்றைய சந்திப்பில் வெளிப்படையாகவே ஏற்றுக்கொண்டுள்ளார்.

 

அடுத்த தேர்தலின் பின்னர் ஒரு வருடத்திற்குள் தீர்வு வழங்குவேன் என்று கூறியிருக்கின்றார். கடந்த ஒன்றரை வருடமாக சொன்ன பொய்யை நம்பி ஏமாந்தவர்கள் தற்போது கூறும் புதிய பொய்யையும் நம்பி ஏமாறப்போகின்றார்களா? என்ற கேள்வியிருக்க இவ்வாறான ஒரு தெளிவான நிலைப்பாட்டை அறிவித்த பிறகாவது தமிழ் மக்களை தொடர்ந்தும் ஏமாற்றுகின்ற செயல்பாடுகளிலே ஏனைய அரசியல் கட்சிகளும் தலைவர்களும் ஈடுபடக்கூடாது என்பதை அவர்களிடம் பகிரங்கமாக கேட்டுக் கொள்கின்றோம்.

 

தற்போது இனப்பிரச்சினை தொடர்பில் பேசுவதற்கு தயாரில்லை, தேர்தலின் பிறகுதான் பேசலாம் என்று ரணில் விக்ரமசிங்க இவ்வாறான தெளிவான செய்தியை வழங்கிய பின்னரும் தமிழர் தரப்பு அவருக்கு முன்டுகொடுக்குமானால் வெறுமனே ரணில் விக்ரமசிங்கவை பாதுகாப்பதற்கு மட்டுமே அவர்கள் செயற்படுகின்றார்கள் என்று நிரூபிக்கப்படும்.

 

தயவுசெய்து நீங்கள் எடுக்கும் தமிழ் வாக்குகளுக்கு நேர்மையாக நடந்து கொள்ளுங்கள். தமிழ் மக்களை தொடர்ந்து ஏமாற்றிக்கொண்டிருக்கின்ற ரணில் விக்ரமசிங்கவும் ராஜபக்ஸ தரப்பையும் தொடர்ந்து காப்பாற்ற வேண்டாம்.

இந்த 13 ஆவது திருத்தம் ஒற்றை ஆட்சிக்குள் இருக்கின்ற விடயம் அதில் உச்ச நீதிமன்றம் ஆழமான ஒரு தீர்ப்பை வழங்கியிருப்பதாகவும் கிட்டத்தட்ட முப்பது தீர்ப்புகள் இந்த 13 ஆம் திருத்தத்திற்குள் அதிகாரம் பகிரப்பட முடியாது ஒற்றையாட்சி இருக்கும் வரைக்கும் அதிகார பகிர்வு நடக்கவே நடக்காது என்று மிகத் தெளிவாக சொல்லி இருக்கின்ற சூழ்நிலையில் அந்த உண்மை தமிழ் தேசிய மக்கள் முன்னணி அம்பலப்படுத்தி இன்று மக்களும் அதை உணரத் தொடங்கி இருக்கின்ற இந்த சூழ்நிலையில் அந்த உண்மையை மூடி மறைத்து ஏதோ தாங்கள் சரியானதற்காக தான் தொடர்ந்தும் இருப்பதாக காட்டிக் கொல்வதற்காக இப்போது 13 ஆவது திருத்தம் என்பதனை பெரிய அளவில் வலியுறுத்தாமல் அவர்கள் ஒரு புது உபாயத்தை இன்று நமது மக்கள் மத்தியில் காட்டப் போகின்றார்கள்.

 

அது என்னவென்றால் இந்திய இலங்கை ஒப்பந்தம் முழுமையாக அமல்படுத்த வேண்டும். இந்த ஒப்பந்தத்தை அமல்படுத்த வேண்டும் என்கின்ற புதிய கோஷத்தை கதைப்பதன் ஊடாக 13 ஆம் திருத்தத்தை மெல்ல அமைதியாக வலியுறுத்துவதை மூடி மறைக்கலாம் என்று நினைக்கின்றார்கள்.

 

அனைவருக்கும் தெரியும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியை தவிர்ந்த மற்றைய அனைத்து தரப்பினர்களும் 13 ஆவது திருத்தையும் இந்திய இலங்கை ஒப்பந்தத்தையும் ஒன்றாகத்தான் பார்க்கின்றனர். நாங்கள்தான் அதனை பிரித்து பார்க்கின்றோம். நாங்கள் தான் கூறுகின்றோம் இந்திய இலங்கை ஒப்பந்தத்தை நிராகரிக்கவில்லை அதில் குறைபாடுகள் இருந்தாலும் அதனை நாங்கள் நிராகரிக்கவில்லை.

 

ஆனால் இந்திய இலங்கை ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துகின்ற பெயரிலே கொண்டு வந்திருக்கின்ற 13 ஆவது திருத்தத்தை தான் நாங்கள் நிராகரிக்கின்றோம்.

 

அந்த வேறுபாட்டை நாங்கள் தெளிவுபடுத்தி இந்தியாவிடமும் எமது மக்களிடமும் தெளிவாக கூறியிருக்கின்றோம். இலங்கை அரசிடமும் 13 ஆவது திருத்தத்தை நாங்கள் எக்காரணம் கொண்டும் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை இதில் ஆரம்பப் புள்ளி கூட இல்லை. இந்த யதார்த்தம் மக்கள் மத்தியில் இன்றைக்கு தெளிவாகிக் கொண்டு வருகின்ற இந்த சூழ்நிலையில் அதே நேரம் இந்த தமிழ் தரப்புகள் தொடர்ந்து 13 வலியுறுத்த விரும்புகின்ற ஆனால் வெளிக்காட்ட முடியாது தேர்தலும் வருகின்றது தேர்தலில் ஒற்றை ஆட்சியை வலியுறுத்தி சென்றால் மக்கள் நிராகரிப்பார்கள் என்கின்ற பயம் இருக்கின்றது இதனால் அவர்கள் நினைக்கின்றார்கள் தாங்கள் கெட்டித்தனமாக 13 பெரிதாக கதைக்காமல் இந்திய இலங்கை ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துவோம் என்று சொன்னால் அதிலிருந்து தப்பலாம் என நினைக்கின்றார்கள்.

 

தமிழருக்கு நன்றாக தெரியும் இந்த ரணில் விக்ரமசிங்க எதுவுமே செய்யப் போவதில்லை என்று அவருக்கு ஒரு எண்ணம் இருந்தாலும் கூட ஒன்றும் செய்ய மாட்டார்.

 

ஏனென்றால் தேர்தல் வரப்போகின்றது தேர்தலில் வெள்ளம் வேண்டும் என்பதனை தான் சிந்திக்கப் போகின்றார். ஆகவே கடைசி வரைக்கும் அவருக்கு எண்ணம் இருந்தாலும் அவர் செய்யப் போவதில்லை. உண்மையிலேயே அவருக்கு அப்படிப்பட்ட எண்ணமே கிடையாது.

 

இதனை தெளிவாக விளங்கிக் கொண்டுதான் நாங்கள் தொடர்ச்சியாக இவருடைய ஆட்சியை நம்பாதீர்கள் இவருடைய வார்த்தைகளை நம்பாதீர்கள் என மக்களுக்கு தொடர்ச்சியாக கூறிக் கொண்டு வருகின்றோம்.

 

இந்த ரணில் விக்கிரமசிங்க நம்பாதீர்கள் என தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கமும் கூட 2005 ஆம் ஆண்டு எமது மக்களிடம் சொன்னார்கள்.

அன்றைக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் இந்த உண்மையை மக்களிடையே சொல்ல மக்கள் குழம்பி விட்டனர். தமிழ் ஆய்வாளர்கள் குழம்பினர். ஏதோ புலிகள் வந்து பிழையாக இந்த விடயங்களை கணக்குப்போகின்றார்கள் என்று. எந்த அளவு தூரத்திற்கு ஒரு தீர்க்கதரிசனம் என்பது இன்று இந்த ரணில் விக்ரமசிங்கவின் செயல்பாடுகளினால் நிரூபித்து இருக்கின்றார். அதுதான் உண்மை.

 

ஆகவே இந்த ரணில் விக்கிரமசிங்கமிடம் வந்து உண்மையைக் கூறினால் எதையும் எதிர்பார்க்க முடியாது ராஜபக்ஷர்களிடம் எதிர்பார்ப்பதை போன்று ரணில் விக்கிரமசிங்கமிடம் இருந்து எதிர்பார்ப்பது. ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஏதோ உள் மனதிலே செய்ய வேண்டும் என நினைத்தால் அடுத்த தேர்தலுக்கு முன்னர் ஏதோ ஒன்று செய்ய வேண்டும் என நினைத்தால் ஆக குறைந்தது இந்த பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழே ஆண்டாண்டாக எந்தவிதமான சாட்சியங்களும் இல்லாமல் குற்ற ஒப்புதல் வாக்குமூலம் இல்லாத போலியான பொய்யான வாக்குமூலம் பெற்று சிறையில் இன்று வாடிக் கொண்டிருக்கின்ற நம்முடைய அரசியல் கைதிகளை விடுதலை செய்யுங்கள்.

 

அதை செய்து இந்த பயங்கரவாத தடுப்புச் சட்டம் நீங்களே வந்து மிக கொடூரமான ஒரு சட்டம் என்று சொல்கின்ற நிலையில் அதற்காவது மதிப்பு கொடுங்கள். 2015 இல் உங்களுடைய அரசாங்கம் உலகத்துக்கு சென்று கூறியது பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை அமல்படுத்துவதை நாங்கள் நிறுத்துவோம் என்று அந்த சட்டத்தை அமல்படுத்துவது யாவது அந்த சட்டத்தை பயன்படுத்தி மட்டக்களப்பு மாவட்டத்தில் கிட்டத்தட்ட 11 பேரை கைது செய்தீர்கள். சர்வதேச மட்டத்திலேயே வருகின்ற கடும் அழுத்தத்தினால் ஒரு சிலரை பிணையில் விடுவித்து இருக்கின்றீர்கள்.

 

அந்த விடயத்திலாவது ஒரு மனசாட்சியை தொட்டு இந்த பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழே எடுத்திருக்கின்ற இந்த நடவடிக்கைகளை வாபஸ் பெறுங்கள் என்பதை நாங்கள் கேட்டுக் கொள்ள விரும்புகின்றோம். ஆக குறைந்தது வேறு ஒன்றும் வேண்டாம். எனில் எமக்குத் தெரியும் நீங்கள் ஒன்றும் செய்யப் போவது இல்லை என்று. எங்களது மக்களை தொடர்ந்தும் ஏமாற்ற வேண்டாம் நமது மக்களும் ஏமாறக்கூடாது எதையும் எதிர்பார்க்க வேண்டாம் செய்யப் போவதில்லை இதையாவது செய்யுங்கள்.

 

நீங்களே ஒப்புக் கொண்டிருக்கின்றீர்கள் இது ஒரு மிக மோசமான கொடூரமான ஜனநாயக விரோதமான சட்ட ஒழுங்குக்கு மாறான ஒரு சட்ட வரைவு என்பதனை நீங்களே ஒப்புக் கொண்டிருக்கின்ற வகையில் ஆகக் குறைந்தது நடந்த அநியாயம் கடந்த மாதம் நீங்களே அனுமதித்த நீங்களே கூறினீர்கள் நினைவு கூறலாம் என்று அப்படிப்பட்ட ஒரு சட்டத்தின் கீழ் தொடர்ந்து நீங்கள் பிடிக்கிற தன்மையை நிறுத்துங்கள் பிடித்திருப்பவர்களை விடுதலை செய்யுங்கள் என தெரிவித்தார்.

“ரணில் விக்ரமசிங்கவின் தலைமையிலான அரசாங்கம் யாரும் எதிர்பார்க்காத வகையில் நாட்டை மீட்டெடுத்துள்ளது.” – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பெருமிதம்!

வட மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றுசேர்ந்து நேரடியாக இந்தியாவுக்கே சென்று பாண்டிச்சேரி மற்றும் தமிழ் நாட்டு அரசு உட்பட இந்திய ஊடகங்களுடன் கலந்துரையாடுவதே சிறந்த தீர்வாக அமையும் என்று என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (12) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இவ்வாறு தெரிவித்தார்.

இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த அவர்,

“பொருளாதார ரீதியில் வீழ்ச்சியடைந்த நாடாக இருந்த எமது நாட்டை, மீண்டும் மீட்டெடுக்கும் வகையில், தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையிலான அரசாங்கம் யாரும் எதிர்பாராத வகையில் ஒரு சிறப்பான வரவு செலவுத்திட்டத்தை முன்வைத்துள்ளது.

யுத்தம் மற்றும் கோவிட் தொற்று போன்ற பல்வேறு காரணங்களால் எமது நாடு பின்னடைவை அடைந்திருந்தது. இலங்கை எப்படி நெருக்கடிகளில் இருந்து இவ்வாறு மிக வேகமாக மீண்டு வந்தது என்று எனது வெளிநாட்டு உத்தியோகபூர்வ விஜயங்களின் போது அந்நாட்டவர்கள் ஆச்சரியமாகக் கேட்கின்றார்கள்.

 

அதற்கு ஜனாதிபதியின் வழிகாட்டல், சிறப்பு ஆளுமை, அதற்கு பக்க பலமாக இருந்து இந்த அரசாங்கத்தை முன்னெடுப்பவர்கள் தான் காரணம் என்று நான் அவர்களுக்கு கூறி வருகின்றேன்.

அதேபோன்று இலங்கை மக்களும் இந்த நெருக்கடிகளை விளங்கிக்கொண்டு அரசாங்கத்திற்கு ஒத்துழைத்து வருகின்றார்கள் என்பதையும் நான் அங்கு குறிப்பிடுகின்றேன். 2024 ஆம் ஆண்டின் வரவு செலவுத்திட்டத்தில் கடற்றொழில் அமைச்சுக்காக சுமார் 8400 மில்லியன்கள் ஒதுக்கப்ட்டுள்ளது. அதில் 6077 மில்லியன்கள் மூலதனச் செலவாகவும் 2323மில்லியன் ரூபாய் மீண்டுவரும் செலவாகவும் ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்த நிதியை பயன்படுத்தி கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரம் உட்பட அவர்களின் முன்னேற்றத்திற்கும் நாட்டின் அபிவிருத்திக்கும் எவ்வாறு நாங்கள் சிறப்பாக முன்னெடுக்கலாம் என்றும் எதிர்காலத்தில் அதனை ஒரு அடிப்படையாக வைத்து முன்னேறலாம் என்றும் வகுத்திருக்கின்றோம்.

அரசாங்கத்தின் இந்த நிதி ஒதுக்கீட்டுக்கு மேலதிகமாக எமது நாட்டின் கடற்றொழிலை வளப்படுத்தும் வகையில் மேலும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு தனியார் முதலீடுகளையும் ஊக்குவித்து வருகின்றோம். மேலும், எரிபொருள் விலை உயர்வு எமது கடற்றொழிலாளர்களின் தொழிலில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய பிரதான விடயமாக உள்ளது.

 

பல்வேறு காரணங்களால் சர்வதேச சந்தையில் எரிபொருள் விலை அதிகரிக்கும்போது இலங்கையிலும் அதன் விலைகள் அதிகரிக்கின்றன. இதற்கு அரசாங்கத்தைக் குறை கூற முடியாது.

கிடைக்கும் அனைத்து சந்தர்ப்பங்களையும் செயற்திறன் மிக்க வகையில் பயன்படுத்தி இந்நாட்டின் கடற்றொழில் துறையை முன்னேற்றும் வகையிலேயே எமது திட்டங்களை வகுத்து செயற்படுகின்றோம்.

எரிபொருள் செலவு போன்ற உற்பத்திச் செலவுகளைக் குறைக்க பல்வேறு மாற்று வழிமுறைகளை பயன்படுத்தவும் திட்டமிட்டு வருகின்றோம். அந்த வகையில், படகுகளில் Battery Motors பயன்படுத்தி மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடுவது குறித்தும் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றோம்.

இது மீனவர்களின் உற்பத்திச் செலவைக் குறைப்பதுடன் எரிபொருள் பிரச்சினைக்கும் தீர்வாக அமையும். அது தொடர்பில் பரீட்சார்த்த நடவடிக்கைகளிலும் ஈடுபட்டுள்ளோம். அதேபோன்று கடற்றொழில் சட்டத்தைப் பொறுத்தவரை எமது அமைச்சு திருத்தப்பட்ட புதிய கடற்றொழில் சட்டமொன்றை தயாரித்து வருகின்றது.

 

அது தற்போது சட்ட வரைவு என்ற நிலையிலேயே உள்ளது. ஆனால் இதனைப் பற்றி சரியாக விளங்கிக்கொள்ளாமலும் உள்நோக்கத்திலும் பலர் தவறான கருத்துகளைக் கூற முற்படுகின்றார்கள். இது ஒரு வரைபே அன்றி முடிவல்ல. துறைசார் நிபுணர்களில் கருத்துகளையும் பெற்றே இதனை முன்னெடுக்கவுள்ளோம்.

இந்திய மீனவர்கள் அத்துமீறி இலங்கை கடல் பரப்பில் கடற்றொழில் நடவடிக்கைகளில் ஈடுபடும் பிரச்சினையைப் பொறுத்தவரை, அது இரு நாடுகளுக்கும் இடையிலான விடயம் என்பதால் இராஜதந்திர ரீதியிலேயே அதனை அணுக வேண்டியுள்ளது.

 

இந்திய அரசியலமைப்பின் பிரகாரம் மீன்படி விடயம் மாநில அரசின் அதிகாரத்திற்கு உட்பட்டது. எனவே அது தொடர்பில் வட மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றுசேர்ந்து நேரடியாக இந்தியாவுக்கே சென்று பாண்டிச்சேரி மற்றும் தமிழ் நாட்டு அரசு உட்பட இந்திய ஊடகங்களுடன் கலந்துரையாடுவதே சிறந்த தீர்வாக அமையும் என்பதே எனது நிலைப்பாடாகும்.” என டக்ளஸ் தேவானந்தா மேலும் தெரிவித்தார்.

 

 

 

“சர்வதேச விசாரணைகளுக்கு இடம் கொடுக்க முடியாது என கூறிய ரணில் ; ஓர் முதுகெலும்பு உள்ள தலைவர்.” – கோட்டாபய பெருமிதம்!

சர்வதேச விசாரணைகளுக்கு அனுமதி இல்லை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தமையை பாராட்டுவதாக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில்,

“ஜனாதிபதியின் பதவியிலிருந்து நான் விலகியபோது புதிய ஜனாதிபதி பதவிக்கு ரணில் விக்ரமசிங்கவைப் பரிந்துரைத்திருந்தேன். அதற்கமைய நாடாளுமன்றம் அவரைப் புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்தது.

ரணில் விக்ரமசிங்க முதுகெலும்பு உள்ள சிறந்த தலைவர் என்பதை அவர் ஒவ்வொரு சந்தர்ப்பங்களிலும் நிரூபித்துக் காட்டி வருகின்றார்.

இலங்கை இறைமையுள்ள நாடு. இங்கு வெளிச்சக்திகளின் தலையீடுகளுக்கு இடமில்லை. நாடாளுமன்றத்தை மீறி எவரும் முடிவுகளை எடுக்க முடியாது.

நாடாளுமன்றத் தீர்மானங்களுக்கு மதிப்பளித்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க செயற்பட்டு வருகின்றார். உண்மையில் அவர் சிறந்த தலைவர்” என்றார்.

புதிய கல்வி முறைகளை உருவாக்கும் போது மாணவர் பாராளுமன்றங்களின் கருத்துக்களை பெற தீர்மானம் !

21ஆம் நூற்றாண்டுக்குப் பொருத்தமான புதிய கல்வி முறையை தயாரிப்பதற்கான பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்தார்.

இதற்காக வெளிநாடுகள், துறைசார் நிபுணர்கள், மாணவர் பாராளுமன்றம் ஆகிய தரப்புக்களின் ஆலோசனைகளும் பெறப்படும் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

இன்னும் இரண்டு வாரங்களில் நிறுவப்படவுள்ள அரசியல் கட்சிகளின் மறுசீரமைப்பு தொடர்பான புதிய ஆணைக்குழுவில், மாணவர் பாராளுமன்றங்களின் கருத்துக்களையும் யோசனைகளையும் வழங்க முடியும் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

இரத்தினபுரி சீவலி மத்திய கல்லூரியின் மாணவர் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் நேற்று (05) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற சந்திப்பிலேயே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இரத்தினபுரி சீவலி கல்லூரியின் மாணவர் பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் 140 மாணவர்கள் ஜனாதிபதி அலுவலகத்தை பார்வையிடுவதற்கான சுற்றுலாப் பயணத்தை மேற்கொண்டிருந்த நிலையில், ஜனாதிபதி அலுவலகத்தின் பிரதான கேட்போர் கூடத்தில் இந்தச் சந்திபப்பு நடைபெற்றது.

ஜனாதிபதி அலுவலகத்தின் வரலாறு மற்றும் இந்நாட்டு அரச நிர்வாக செயற்பாடுகளில் முக்கிய தீர்மானங்களை மேற்கொள்ளும் இடம் என்ற வகையில் அதன் செயற்பாடுகள் தொடர்பில் மாணவர்களுக்கு விளக்கமளித்த ஜனாதிபதி, மாணவர்களின் கேள்விகளுக்கும் பதிலளித்தார்.

எதிர்காலத்தில் குறைந்தபட்சம் 10 பல்கலைக்கழகங்களையாவது நாட்டில் உருவாக்க எதிர்பார்த்துள்ளதாகவும், மாணவர் கடன் திட்டங்களின் ஊடாக இங்கிலாந்து, அமெரிக்கா போன்ற நாடுகளில் உயர்கல்வியை பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்புக்களைப் பெற்றுக்கொடுக்க எதிர்பார்த்திருப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

மாணவர்கள் தமது எதிர்காலத்தை திட்டமிடுவதற்கு தேவையான பாடங்களை தெரிவுசெய்வதற்கான சந்தர்ப்பம் அந்த பல்கலைக்கழகங்களின் ஊடாக வழங்கப்படுமெனவும், புதிய தொழில்நுட்ப கல்லூரிகளை நிறுவுதல் உட்பட கல்வித்துறையின் பல்வேறு சீர்த்திருத்தங்கள் தொடர்பிலும் ஆராயப்பட்டு வருவதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

பல்கலைக்கழக மாணவர் பாராளுமன்றத்தின் செயற்பாடுகள் தொடர்பிலும் மாணவர்களிடத்தில் கருத்துகளை கேட்டறிந்த ஜனாதிபதி, அதற்கான சபாநாயகர், பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்கானவர்களைத் தெரிவுசெய்த பின்னர், அதன் முதல் கூட்டத்தை இந்நாட்டின் முதலாவது பாராளுமன்றம் கூடிய தற்போதைய ஜனாதிபதி அலுவலகத்தின் கேட்போர் கூடத்தில் நடத்துமாறும் கேட்டுக்கொண்டார்.

இரத்தினபுரி சீவலி மத்திய கல்லூரியின் மாணவர் பாராளுமன்றத்தின் முன்னாள் பிரதிநிதிகளான மாணவர் குழுவொன்றும் இச்சந்திப்பில் கலந்துகொண்டதோடு, தமக்கு கிடைக்காமல் போன வாய்ப்பை, தமது சகோதர மாணவர் குழுவுக்குப் பெற்றுத் தந்தமைக்காக ஜனாதிபதிக்கு நன்றி தெரிவித்தனர்.

இரத்தினபுரி சீவலி மத்திய கல்லூரியின் அதிபர் நீல் வதுகாரதவத்த, ஆசிரியர்கள் சிலரும் இந்தச் சந்திப்பில் கலந்துகொண்டிருந்தனர்.

தமிழ் மக்களின் வாக்குகளுக்காக போலி நாடகம் போடுகிறார் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க – கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு!

தழிழ் மக்களின் வாக்குகளை பெற்றுக் கொள்ள வேண்டும் என்பதற்காகவே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க போலியான நாடகங்களை முன்னெடுத்துள்ளதாக தழிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குற்றம் சுமத்தியுள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்துரைக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.அத்துடன் தழிழ் கட்சிகளின் கோரிக்கைகளுக்கு செவி சாய்ப்பது போன்ற நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ள போதிலும் தழிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வினை பெற்றுக் கொடுப்பதற்கு அவர் முன்வரவில்லை என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.இவ்வாறான நிலையில் சட்டத்தில் ஏற்பாடுகள் இல்லாத மாகாண குழுவொன்றை அமைப்பதற்கான வேலைத்திட்டங்களை ஜனாதிபதி முன்னெடுத்துள்ளார்.ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு சார்பானவர்களை இணைத்துக் கொள்வதற்காகவே மாகாண சபை குழு நியமிக்கப்பட்டுள்ளதாகவும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

“நாட்டிற்கு வருமானம் ஈட்டுவதற்கான சரியான வழிமுறையொன்று விரைவில் தயாரிக்கப்படும்.” – ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க

இலங்கையின் பொருளாதாரத்தை வலுவாக்குவதற்கான பொருளாதார முகாமைத்துவக் கொள்கை தயாரிப்பு பணிகள் எதிர்வரும் மாதத்திற்குள் நிறைவு செய்யப்படும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

மேற்படி பொருளாதார முகாமைத்துவக் கொள்கையை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து நிறைவேற்றிக்கொள்ள எதிர்பார்த்துள்ளதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

நாட்டின மிகச்சிறந்த 40 வர்த்தகர்களுக்கு விருது வழங்குவதற்காக ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று (20) நடைபெற்ற பிஸ்னஸ் டுடே விருது வழங்கல் நிகழ்வில் உரையாற்றியபோதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இலங்கையின் வர்த்தகத் துறையில் விஷேட செயல்திறனை வெளிப்படுத்தும் நிறுவனங்களை பாராட்டும் நோக்கில் மேற்படி விருது வழங்கும் விழா பிஸ்னஸ் டுடே சஞ்சிகையினால் வருடாந்தம் நடத்தப்படுகிறது.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க,

நாம் இரு வருடங்களுக்கு முன்னதாக இறுதியாக சந்தித்திருந்த சந்தர்ப்பத்தில் கடுமையான நெருக்கடிகளுடன் கூடிய இரு வருடங்களின் பின்னரான சந்திப்பு எவ்வாறு அமைந்திருக்கும் என கணிக்க முடியாமல் இருந்திருந்தாலும் தற்போது நாம் நெருக்கடியிலிருந்து மீள்வதற்குரிய பாதைக்குள் பிரவேசித்துள்ளோம்.

இருப்பினும் ஸ்திரமானதும் அபிவிருத்தியை நோக்கி நகர்வதுமான பொருளாதார கட்டமைப்பை உருவாக்க நாம் நீண்ட தூரம் செல்ல வேண்டியிருக்கும். வொஷிங்டனில் நடைபெற்ற வசந்த கால அமர்வுகளில் பங்கேற்கச் சென்றிருந்த இராஜாங்க அமைச்சரும் மத்திய வங்கியின் ஆளுநரும் பல்தேசிய நிறுவனங்கள் நமக்கு உதவ முன்வந்துள்ளது என்ற நற்செய்தியுடன் இந்நிகழ்வில் பங்கேற்றுள்ளனர்.

அதேநேரம் சர்வதேச நாணய நிதியத்தின் பரிந்துரைகளை அமுல்படுத்த வேண்டிய கட்டாயத்தில் நாம் இருப்பதால் மறுசீரமைப்பு நடவடிக்கைகளை ஆரம்பிக்க வேண்டியது அவசியமாகும். அது தொடர்பில் ஜப்பான், இந்தியா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளின் நிதி அமைச்சர்களுடனும் பரிஸ் கிளப் பிரதானியுடனும் சூம் தொழில்நுட்பம் ஊடாக கலந்துரையாடியிருந்தோம். நாம் முன்னேறிச் செல்வதற்கான ஊக்குவிப்பை அவர்கள் வழங்கியிருந்தனர். அதேபோல் சீனாவுடனான பேச்சுவார்த்தைகளும் தொடர்ச்சியாக இடம்பெறுகிறன.

நாம் நெருக்கடிகளிலிருந்து துரித கதியில் மீண்டு வந்துள்ளமை வியப்புக்குரியதாக இருந்தாலும், உங்களால் தாங்கிக்கொள்ள கூடிய கடினமாக தீர்மானங்கள் பலவற்றை மேற்கொள்ள உள்ளமை எனது வாழ்விலும் கடினமான காலமாகும் என்றே கூறுவேன்.

நீண்ட கால தீர்வுகள், மற்றும் இடைப்பட்ட காலங்களில் பெற்றுக்கொள்ளக்கூடிய தீர்வுகள் பற்றி தேடியறிவதால் நல்ல பலன்களைப் பெற்றுக்கொள்ள முடியும். எல்லாவற்றுக்கும் பணம் அவசியம் என்பதால் வருமானம் ஈட்டிக்கொள்ளும் பிரச்சினையே நம்முன் பெரிதாக நிற்கிறது. அதனால் வருமானத்தை ஈட்டிக்கொள்ளும் வழிமுறைகளையும் தேடி அறிய வேண்டும்.

சில காலங்களுக்கு முன்பு உங்களிடத்திலும் உங்களது நிறுவனங்களிடத்திலும் வரி சேகரிப்பது மாத்திரமே அதற்குரிய வழியாக காணப்பட்ட போதிலும், தற்போது சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தைகளே அதற்குரிய சரியான வழிமுறையாக தெரிகிறது. எதிர்காலத்தில் மாற்றங்கள் ஏற்படலாம்.

வருமானம் ஈட்டுவதற்கான சரியான வழிமுறையொன்று விரைவில் தயாரிக்கப்படும், அதற்கான பணிகளுக்கு திறைசேரியும் தயாராக வேண்டியது அவசியமாகும். நாம் மேம்படுத்த வேண்டிய பல துறைகள் உள்ளன. கடன் மறுசீரமைப்புச் செயற்பாடுகளையும் முன்னெடுப்பது அவசியமாகும். எனினும் கடன் மறுசீரமைப்புச் செயற்பாடுகள் குறித்து எவரும் அச்சம் கொள்ள தேவையில்லை.

அதேபோல் கடன் மறுசீரமைப்பு செயற்பாடுகளின் போது கடன் வழங்குநர்களுக்கு நாமும் பங்களிப்புக்களை வழங்க வேண்டியது அவசியமாகும். சலுகைகளைப் பெற்றுக்கொள்ளவும் நமது அர்பணிப்புக்கள் அவசியமாகிறது. மறுமுனையில் திறைசேரி அதற்குரிய மாற்று வழிமுறைகளையும் ஆராய்ந்து வருகிறது.

நாம் கடன் மறுசீரமைப்புக்களை செய்ய தவறும் பட்சத்தில் நாம் கடுமையான நெருக்கடிக்கு முகம்கொடுக்க நேரிடும். எவ்வாறாயினும் மேற்படி செயற்பாட்டிற்கான மாற்று வழிகள் மக்களுக்கு நெருக்கடியாக அமைந்திருக்காது என்ற உறுதியை வழங்குகிறேன்.

அதற்காக இம்மாதத்திற்குள் சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத்திட்டத்திற்கு பாராளுமன்ற அனுமதியைப் பெற்றுக்கொள்ள நாம் எதிர்பார்த்துள்ள அதேநேரம். மே மாத இறுதிக்குள் பொருளாதார முகாமைத்துவக் கொள்கை தயாரிப்பு பணிகளை நிறைவு செய்யவும் எதிர்பார்த்துள்ளோம். பொருளாதார ஸ்திரத் தன்மைக்கான குழுவின் அறிக்கையும் தற்போது நிறைவடைந்துள்ள நிலையில் ஜனாதிபதி அலுவலக அதிகாரிகளால் மீளாய்வு செய்யப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.” எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

“ராஜபக்ஷர்களை பாதுகாப்பதற்காகவே 134 உறுப்பினர்கள் ரணிலை ஜனாதிபதியாக தெரிவு செய்தார்கள்.” – விமல் வீரவன்ச

“ராஜபக்ஷர்களை பாதுகாப்பதற்காகவே 134 உறுப்பினர்கள் ரணில் விக்கிரமசிங்கவை ஜனாதிபதியாக தெரிவு செய்தார்கள்.” என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.

மொனராகலை பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துக் கொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

2019 ஆம் ஆண்டு நாட்டு மக்கள் சிறந்த மாற்றத்திற்காக கோட்டபய ராஜபக்ஷ தலைமையில் ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்தினார்கள். ஆட்சிமாற்றத்திற்கு முன்னின்று செயற்பட்டோம்.நாட்டு மக்களின் எதிர்பார்ப்பு நிறைவேறவில்லை, மாறாக ராஜபக்ஷர்களின் எதிர்பார்ப்பு நிறைவேறியது.

குடும்ப ஆட்சி காரணமாக நாட்டு மக்கள் 2015 ஆம் ஆண்டு நாட்டு மக்கள் ராஜபக்ஷர்களை புறக்கணித்தார்கள். இந்த நிலை மீண்டும் தோற்றம் பெறாது, வரலாற்று பாடத்தை ராஜபக்ஷர்கள் கற்றுக்கொண்டுள்ளார்கள் என எதிர்பார்த்தோம் ஆனால் எமது எதிர்பார்ப்பு இறுதியில் பொய்யானது.

2015 ஆம் ஆண்டுக்கு முன்னர் அமைச்சரவையை பகுதியளவில் ஆக்கிரமித்த ராஜபக்ஷர்கள் 2020 ஆம் ஆண்டு அமைச்சரவையை முழுமையாக ஆக்கிரமித்தார்கள். போதாதற்கு ரோஹித ராஜபக்ஷவை தேசிய பட்டியல் ஊடாக பாராளுமன்றத்திற்கு கொண்டு வரும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. எமது கடும் எதிர்ப்பால் அந்த முயற்சியை ராஜபக்ஷர்கள் கைவிட்டார்கள்.

முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ பொருளாதாரம் தொடர்பில் அடிப்படை தகைமை இல்லாத பஷில் ராஜபக்ஷவை நிதியமைச்சராக நியமித்து அரசியல் ரீதியில் பாரிய தவறு செய்து இறுதியில் நாட்டை விட்டு தப்பிச் சென்றார்.நாடு வங்குரோத்து நிலை அடைவதற்கு ராஜபக்ஷ குடும்பம் பொறுப்புக் கூற வேண்டும்.

ராஜபக்ஷர்களை பாதுகாப்பதற்காகவே பொதுஜன பெரமுனவின் 134 உறுப்பினர்கள் ரணில் விக்கிரசிங்கவை ஜனாதிபதியாக தெரிவு செய்தார்கள்.  மக்களால் புறக்கணிக்கப்பட்ட ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாட்டு மக்களின் வாக்குரிமையை கேள்விக்குள்ளாக்கியுள்ளார். போராடியேனும் நாட்டு மக்களின் வாக்குரிமையை வெல்வோம் என்றார்.

2030 வரை ஜனாதிபதி ரணில் தான் !

தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க 2030 ஆம் ஆண்டு வரை இந்த நாட்டின் ஜனாதிபதியாக பதவி வகிப்பார் என முன்னாள் இராஜாங்க அமைச்சர்  தெரிவித்துள்ளார்.

நாட்டை கட்டியெழுப்புவதற்காக ஜனாதிபதி  ரணில் விக்ரமசிங்க அர்ப்பணிப்புடன் செயற்படுகிறார் என அவர் தெரிவித்துள்ளார்.

அடுத்த தேர்தலில் நாட்டின் ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க மீண்டும் தெரிவு செய்யப்படுவார். அனைத்து போட்டியாளர்களும் ரணில் விக்ரமசிங்கவின் திறமைக்கு அப்பால் உள்ளதாக அவர் தெரிவித்தார்.