ராஜபக்ஷ அரசு

ராஜபக்ஷ அரசு

“பட்டினியால் மக்கள் செத்து மடிவதற்குள் ராஜபக்ஷக்கள் உடன் பதவி விலக வேண்டும்.” – சந்திரிகா குமாரதுங்க விசனம் !

“இலங்கையின் தற்போதைய நிலைமை படுமோசமடைந்துள்ளது. இந்தப் பேராபத்திலிருந்து நாட்டை மீட்பதற்கு அரசிடம் எந்தத் திட்டங்களும் இல்லை. எனவே, அரசு உடன் பதவி விலகுவதே சிறந்தது.” என  முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“நாட்டின் பொருளாதாரம் அதளபாலத்துக்குள் சென்ற பின்னர் சர்வக்கட்சி மாநாட்டைக் கூட்டி இனி ஒன்றும் செய்ய முடியாது. இந்த அரசு புத்திஜீவிகள் மற்றும் பொருளாதார விற்பன்னர்களின் ஆலோசனைகளைக் கேட்காமல் அதிகார மமதையில் ஆட்சி நடத்தியதால்தான் நாடு இப்படிச் சீரழிந்துள்ளது. இதை ஜனாதிபதியும் அவர் தலைமையிலான அரச தரப்பினரும் இன்னமும் புரிந்துகொள்ளாமல் செயற்படுகின்றனர்.

இந்த ஆட்சிக்கு ஆணை வழங்கிய 69 இலட்சம் பேர் உள்ளிட்ட அனைத்து மக்களும் இன்று வீதிகளில் பொருட்களைக் வாங்க வரிசையாக நிற்கின்றனர். பொருட்களின் விலையேற்றத்தாலும் பொருட்களின் பற்றாக்குறையாலும் மக்கள் இன்று திண்டாடுகின்றனர்.

எனவே, பட்டினியால் மக்கள் செத்து மடிவதற்கு முன் இந்த அரசு உடன் பதவி விலக வேண்டும். அப்போதுதான் நாட்டையும் மக்களையும் மீட்டெடுக்கும் வகையில் ஜனநாயக ஆட்சி மலரும்” – என்றார்.

“எதிர்காலத்தில் அரசாங்கத்தின் அமைச்சர்கள் மீது மக்கள் கல்லெறிவார்கள்..” – இராஜாங்க அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க

“எதிர்காலத்தில் அரசாங்கத்தின் அமைச்சர்கள் மீது மக்கள் கல்லெறிவார்கள்..” என இராஜாங்க அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க தெரிவித்துள்ளார்.

மேலும் நாட்டை அரசியல் ரீதியாக அபிவிருத்தி செய்வதில் அரசதலைவர் கோட்டாபய ராஜபக்ச  தனிமையான பயணத்தை மேற்கொள்வார் என்றால் அவர் பதவியில் இருந்து விலக வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இணைய வழியில் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும் அவர் தெரிவித்த போது ,

நாட்டின் அபிவிருத்திக்கு அமைச்சரவையை கோட்டாபய நியமிக்க வேண்டும். அரசாங்கத்தின் உயர் பதவிகளுக்கு சரியான அரச உத்தியோகத்தர்களை நியமித்து அமைச்சரவை மற்றும் அரச அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் அரசதலைவர் நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல வேண்டும்.

ஐந்தாண்டு பதவிக் காலத்தை நிறைவு செய்ய முடியாமல் அரசாங்கம், வீழ்ச்சியடையும் என நம்புகிறேன். ஐந்து வருடங்களுக்குப் பின்னர் மீண்டும் நாடாளுமன்றத் தேர்தலை நடத்த வேண்டியிருக்கும்.

அரசாங்கத்தின் தற்போதைய செயற்பாடுகளுக்கு முகங்கொடுத்து எதிர்காலத்தில் அரசாங்கத்தின் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது மக்கள் கல்லெறிவார்கள்.

இதேவேளை, எல்என்ஜி விநியோகம் மற்றும் எல்என்ஜி மின் உற்பத்தி நிலையங்களை அமெரிக்க நிறுவனத்திற்கு மாற்றுவதை தனிப்பட்ட ரீதியில் எதிர்ப்பதாக இராஜாங்க அமைச்சர் விக்கிரமநாயக்க தெரிவித்துள்ளார்.

சில நாட்களுக்குள் இந்த அரசு வெடித்துச்சிதறும் – இராஜாங்க அமைச்சர் ஆருடம் !

அரசாங்கம் செயற்படும் விதத்தைப் பார்க்கும் போது இன்னும் சில நாட்களில் அரசாங்கம் வெடித்துவிடும் என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தின் இந்த நடவடிக்கை குறித்து தாம் உண்மையான அக்கறை கொண்டுள்ளதாகத் தெரிவித்த அவர், இதன் மூலம் புதிய குழுவொன்று அதிகாரத்தைப் பெற்றுக்கொள்ளும் என தாம் கருதுவதாகவும் தெரிவித்தார்.

இவ்வாறானதொரு நிலையை எதிர்பார்த்து 2019 இல் மக்கள் மாற்றத்தை மேற்கொண்டார்களா என்ற கேள்வி எழுந்துள்ளதாகவும் அவர் கூறினார்.

கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

”சத்திரசிகிச்சை வெற்றி – நோயாளர் மரணம்” – ராஜபக்ஷ அரசின் வரவு செலவுதிட்டம் தொடர்பில் சிறீதரன் !

“ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அரசின், நிதி அமைச்சர் பஸில் ராஜபக்சவால் சமர்ப்பிக்கப்பட்ட 2022ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத்திட்டம் ”சத்திரசிகிச்சை வெற்றி – நோயாளர் மரணம்” என்பதைப் போன்றது.” என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் நேற்று (13) சபையில் தெரிவித்தார்.

வரவு – செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

வரவு – செலவுத் திட்டத்தினூடாக சொல்லப்படுகின்ற திட்டங்கள், அறிவிக்கப்பட்டுள்ள செலவீனங்கள் தொடர்பில் பல்வேறு விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. ஆனால், இவற்றை எந்த வருமானத்தில் இறுதியில் கையாளப்போகின்றீர்கள்? இந்த அரசு அதிகமான கடன்களையும் கடனுக்கான வட்டியையும் செலுத்த வேண்டியுள்ளது.

ஆகவே, கடனும்  வட்டியும் செலுத்த வேண்டிய அரசால் 2022ஆம் ஆண்டிலே எவ்வாறு அபிவிருத்திப் பணிகளை செம்மையாக மேற்கொள்ள முடியும்? குறிப்பாக 80 ஆண்டுகளுக்கு மேலாக இலங்கையின் தலா வருமானம், தனி நபர் வருமானமெல்லாம் சிங்கப்பூர், ஜப்பான் நாடுகளை விடவும் உயர்ந்த நிலையிலேயே இருந்தது. ஆனால், இன்று இலங்கையில் தனிநபர் வருமானங்கள் எவ்வளவு தூரத்துக்குக் கீழ் நிலைக்கு வந்துள்ளன என்பதை அவதானிக்க முடியும்.

சிங்கப்பூர், ஜப்பான் நாடுகளில் இவை மேல் நிலைக்கு வந்துள்ளன என்றால் அந்த நாடுகளில் வாழ்கின்ற மக்களுக்கிடையில் இருந்த ஒற்றுமை உணர்வுகளும் அங்கு கட்டி வளர்க்கப்பட்ட இன சௌஜன்யமுமே காரணம். ஆனால், இலங்கையில் 70 ஆண்டுகளுக்கு மேல் போரும் இனவாதமும் கைகூடியிருந்த காரணத்தால் இங்கு சரியான பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பி இன ஒற்றுமையோடு இந்த நாட்டைக் கட்டியெழுப்பக்கூடிய தலைவர்கள் உருவாக்கப்படாமை இந்த நாட்டின் மிகப்பெரும் துர்ப்பாக்கிய நிலை.

இனியும் இந்தச் சந்தர்ப்பத்தை இந்த நாடு இழக்கப் போகின்றதா? அல்லது சரி செய்யப்போகின்றதா? என்பதனை காலம்தான் தீர்மானிக்க வேண்டும். இப்போதுகூட ஒரு காலம் கனிந்திருக்கின்றது. தமிழ்த் தேசிய இனத்தை சிங்கள தேசிய இனத்துடன் இணைத்து தமிழ் மக்களுக்கான உரித்துக்களை வழங்கி பொருளாதாரத்தைக் கட்டி வளர்க்க முடியும் என்பதனை நீங்கள் மறந்து விடக்கூடாது.

ஆனால், அவ்வாறில்லாமல்  இங்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ள கோட்டாபய ராஜபக்ச அரசின் நிதி அமைச்சர் பஸில் ராஜபக்சவின் 2022 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத்திட்டம் ”சத்திரசிகிச்சை வெற்றி – நோயாளர் மரணம்” என்பதாகவே உள்ளது” – என்றார்.