லிற்றில் எய்ட்

லிற்றில் எய்ட்

மூன்றாம்நிலைக் கல்வி தொழிற்கல்வி ஆணைக்குழு ஆணைக்குழு அங்கிகாரம் அளித்துள்ளது! மூன்றாம் நிலைக்கல்வி தொழிற்கல்வியை வழங்கும் மையமாக லிற்றில் எய்ட் தரம் உயர்ந்துள்ளது!!!

அரச அங்கீகாரம் பெற்ற சான்றிதழ்களை வழங்கக்கூடிய மூன்றாம் நிலைக்கல்வி தொழிற்கல்வியை வழங்கும் மையமாக லிற்றில் எய்ட் அங்கீகரிக்கப்பட்டு உள்ளது என லிற்றில் எய்ட் திறன்விருத்தி மையத்தின் இயக்குநர் ஹம்சகௌரி சிவஜோதி தெரிவிக்கின்றார். கிளிநொச்சி திருநகரில் பதின்னான்கு ஆண்டுகள் தொடர்ச்சியாக இயங்கி வருகின்ற லிற்றில் எய்ட் யுத்தம் முடிவுக்கு வந்த மே 18, 2009இல் லண்டனிலும் பின்னர் இலங்கையிலும் பொது அமைப்புகள் ஆணைக்குழுவின் கீழ் பதிவு செய்யப்பட்டது. இது வரை ஆயிரத்து ஐந்நூறுக்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி கற்று வெளியேறிய நீண்ட வரலாற்றைக் கொண்ட லிற்றில் எய்ட் நீண்டகால முயற்சியைத் தொடர்ந்து, அங்கீகாரம் பெற்ற தொழிற்கல்வி நிறுவனமாக மாறியுள்ளது. இந்நிலையை எட்டுவதற்கு தனக்கு ஊக்கத்தை அளித்த லண்டன் லிற்றில் எய்ட் நிறுவனத்தினருக்கும் இம்முயற்சிக்கும் தனக்கு முழு ஒத்துழைப்பையும் தந்து உதவிய சக ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் ஹம்சகௌரி சிவஜோதி தன்னுடைய நன்றிகளைத் தெரிவித்தார்.

லிற்றில் எய்ட் அமைப்பானது மாணவர்களுக்கு தொழிற்கல்வியை வழங்கி அவர்களை பொருளாதார செயற்பாடுகளுக்கு தயார்படுத்துவதுடன் மட்டும் நின்றுவிடாமல் அவர்களுடைய தலைமைத்துவப் பண்புகளை வளர்த்துவிடுவதன் மூலமும் அவர்களுடைய ஆளுமைகளை விருத்திசெய்வதன் மூலமும் அடுத்த தலைமுறையை செப்பனிடுவதிலும் கண்ணும் கருத்துமாகச் செயற்படுவதாக லிற்றில் எய்ட் ஸ்தாபகர் த ஜெயபாலன் தெரிவிக்கின்றார். அதனையொட்டிய சமூக விழிப்புணர்வு நடவடிக்கைகளையும் லிற்றில் மேற்கொள்வதாக மையத்தின் துணை இயக்குநர் பா கஜீபன் தெரிவிக்கின்றார். அவர் மேலும் குறிப்பிடுகையில் நாளை டிசம்பர் 17 அன்று “நான் போதைப்பொருள் பாவனைக்கு எதிரானவள் / எதிரானவன்” என்ற தொனிப்பொருளில் லிற்றில் எய்ட் மாணவர்கள் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றை கிளிநொச்சியின் மையப்பகுதியில் மேற்கொள்ள உள்ளதாகத் தெரிவித்தார். இக்கவனயீர்ப்புப் போராட்டத்தில் தற்போது லிற்றில் எய்ட் இல் கல்விகற்கின்ற மாணவர்களும் லிற்றில் எய்ட் இன் பழைய மாணவர்களும் கூட்டாக ஈடுபடவுள்ளனர். கவனயீர்ப்புப் போராட்டத்தின் முடிவில் லிற்றில் எய்ட் பழைய மாணவர்களின் ஒன்று கூடல் திருநகர் லிற்றில் எய்ட் மையத்தில் நடைபெறவுள்ளது.

மாணவர்களுடைய வளர்ச்சியுடன் மட்டும் நின்றுவிடாமல் தமது ஆசிரியர்களையும் மேலதிக பயிற்சிகள் கற்கை நெறிகளுக்கு அனுப்பி அவர்களது திறனையும் ஆற்றலையும் வளர்ப்பதிலும் லிற்றில் எய்ட் கவனம் செலுத்தி வருகின்றது. ஒவ்வொரு மாணவ மாணவியரது வெற்றிக்குப் பின்னும் ஆசிரியர்களது உழைப்பு உன்னதாமானது. அந்த வகையில் லிற்றில் எய்ட் தனது ஆசிரியர்களது முன்னேற்றத்திலும் அவர்களது பொருளாதார எதிர்கால முன்னேற்றத்திலும் கவனம்கொண்டு அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளையும் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

மூன்றாம் நிலைக்கல்வி தொழிற்கல்வி மையமாக லிற்றில் எய்ட் க்கு அங்கிகாரம் கிடைக்கப்பெற்றதற்கு லிற்றில் எய்ட் ஆசிரியர்களது அயராத உழைப்பைப் பாராட்டிய லிற்றில் எய்ட் தலைவர் க நத்தகுமார் (சிவன்) லிற்றில் எய்ட் தனது இலக்கில் தொடர்ந்து பயணிப்பதற்கான தொடர்ச்சியான பொருளாதார பலத்தை உருவாக்க வேண்டும் எனத் தெரிவித்தார். கடந்த சில ஆண்டுகளில் க நந்தகுமார் தலைமையில் லிற்றில் எய்ட் கணிசமான வளர்ச்சியை எட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்த வளர்ச்சிக்கு பலவகையிலும் ஒத்துழைத்தவர்கள் தங்களை வெளிப்படுத்தாமல் இன்னமும் அந்த ஆதரவை வழங்கி வருகின்றமைக்கு தனது நன்றிகளையும் அவர் பகிர்ந்து கொண்டார்.

லிற்றில் எய்ட் செயலாளர் ஆர் சுகேந்திரன், டொக்டர் பொன் சிவகுமார் மற்றும் லிற்றில் எய்ட் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் தமது தொழிற்கல்வி மையம் அடுத்த நிலைக்கு நகர முன்றாம்நிலை தொழிற்கல்வி ஆணைக்குழு அங்கிகாரம் வழங்கியுள்ளதையிட்டு மகிழ்ச்சியைத் தெரிவித்துள்ளனர். தற்போது கிளிநொச்சியில் முதன்மைத் தொழிற்கல்வி நிலையமாக வளங்களைக் கொண்ட நிலையமாக ஜேர்மன் ரெக் இருந்தபோதும் அங்கு கிளிநொச்சி மாணவர்கள் பெருமளவில் இல்லை. அந்த வகையில் இன்றைய நிலையில் கிளிநொச்சியில் கிளி மாணவர்களுக்கு இலவசமாக அங்கிகாரம் பெற்ற முன்றாம் நிலைக் கல்வி தொழிற்கல்வியை வழங்கும் முதன்மை நிறுவனமாக லிற்றில் எய்ட் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

கிளிநொச்சி மாவட்டத்தின் கல்வி வளர்ச்சியில் தன்னை முக்கியதொரு அங்கமாக இணைத்துள்ள லிற்றில் எய்ட் திறன்விருத்தி மையம்இ கிளிநொச்சி கல்வி வலயத்தின் வேண்டுகோளின் அடிப்படையில் முன்பள்ளி ஆசிரியர்களுக்கான ஆங்கிலக் கல்விப் பயிற்சி நெறியையும் அண்மையில் ஆரம்பித்துள்ளது. 40 முன்பள்ளிகளின் ஆசிரியர்கள் லிற்றில் எய்ட் இல் ஆசிரியர்களுக்கான ஆங்கிலக் கல்விப் பயிற்சியைப் பெற்றுவருகின்றனர். இவர்களுக்கான ஆங்கில வகுப்புகளை கனடாவில் மொழிபெயர்ப்பியலில் செயற்பட்ட தற்போது யாழ் பல்களைக்கழகத்தின் வருகைதரு விரிவுரையாளராக உள்ள மணி வேலுப்பிள்ளை வழங்கி வருகின்றார். இவர்களுக்கு ஆரம்ப கணணிப் பயிற்சியையும் அளிப்பதற்கு தற்போது ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாட்டை லண்டனில் உள்ள தொழிலதபர் ஒருவர் மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. இவர் லிற்றில் எய்ட் இல் விடியோ எடிட்டிங் கற்கை நெறிக்காண கணணிகளையும் அன்பளிப்புச் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

லிற்றில் எய்ட் அதன் பெயருக்கமைவாக சிறிய நிறுவனமாக இருந்த போதும் அதன் செயற்பாடுகள் மிகவும் பரந்தும் ஆழமான தாக்கத்தை கிளிநொச்சி மண்ணில் ஏற்படுத்தி வருகின்றது. சுயதொழில் வாய்ப்பு பயிற்சி நெறிகள், உள்ளுர் உற்பத்திகளை ஊக்குவித்தல், ஆளுமை தலைமைத்துவப் பயிற்சிகள், இளவயதுத் திருமணங்கள் – வீதி விபத்துக்கள் – போதைப்பொருள் பாவன தொடர்பான கவனயீர்ப்புப் போராட்டங்கள் என லிற்றில் எய்ட் ஒரு சமூக இயக்கமாக செயற்ப்ட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. கிளிநொச்சி ஆளுமைகளை ஆவணப்படுத்துவது, சமூக செயற்பாட்டாளர்களை அடையாளம் கண்டு கௌரவிப்பது என லிற்றில் எய்ட் இன் செயற்பாடுகள் பரந்து விரிந்து செல்வது குறிப்பிடத்தக்கது. இவற்றோடு லிற்றில் எய்ட் ஈலிங் கனகதுர்க்கை அம்மன் ஆலயத்தின் அனுசரணையோடு முப்பது வரையான யுத்தத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் சிறார்களுக்கு கல்வி உதவி அளித்து வருகின்றது. அவ்வாறு உதவி பெற்ற மாணவர்கள் அண்மைய கபொத சாதாரண தரப் பரீட்சையில் சாதனை நிகழ்த்தி உள்ளனர். த புகழரசன் 9A, த கலைக்குமரன் 8A 1B, அ தர்சிகா 7A 2B, மா தேனன் 2A 5B 1C, சி நிரேகா 3A 3B 1C 1S எடுத்துள்ளனர். த புகழரசனின் பாடசாலை வரலாற்றில் இவ்வாறான பெறுமேறுபெற்றது இதுவே முதற்தடவை.இவர்களது அடுத்த கட்ட கல்விச் செயற்பாடுகளுக்கும் லிற்றில் எய்ட் தன்னாலான உதவிகளை வழங்கி வருகின்றது.

லிற்றில் எய்ட் க்கு வழங்கப்படுகின்ற ஒவ்வொரு சிறு உதவியும் சிந்தாமல் சிதறாமல் வினைத்திறனுடன் பயன்படுத்தப்படுவதானாலேயே தான் தொடர்ந்தும் அவர்களுக்கு நிபந்தனையில்லாமல் முடிந்த உதவியை வழங்கி வருவதாக நீண்ட காலமாக நிதிப்பங்களிப்பைச் செய்துவருகின்ற பெயர்குறிப்பிட விரும்பாத லிற்றில் எய்ட் குடும்ப உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார். தற்போது லிற்றில் எய்ட் குடும்பத்துடன் ஜேர்மனியில் உள்ள நண்பர்களும் இணைந்து மாதாந்தம் ஒரு லட்சம் ரூபாய் லிற்றில் எய்ட் செயற்பாடுகளுக்கு வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. தற்போது லிற்றில் எய்ட் மாதாந்த செலவீனம் 6 லட்சத்தை எட்டியுள்ளது. இதனை லிற்றில் எய்ட் இலும் அதன் இலக்கிலும் நம்பிக்கை கொண்டபலர் செலுத்தி வருகின்றனர்.

புதிய வரவு செலவுத் திட்டத்தில் உள்ளுர் உற்றத்திகளை விருத்தி செய்ய எவ்வித நிதியும் ஒதுக்கப்படவில்லை! இளைஞர்களே அதிகம் பாதிக்கப்படவுள்ளனர்!! கிளிநொச்சி லிற்றில் எய்ட் இல் சமத்துவக் கட்சியின் பொதுச்செயலாளர் மு சந்திரகுமார்

நாடு அடிப்படைத்தேவைகளுக்கு பிச்சைப் பாத்திரம் ஏந்துகின்ற நிலையிலும் உள்ளுர் உற்பத்திகளைப் பெருக்க அரசு எவ்வித நிதியும் ஒதுக்கவில்லை என்றும் அரசினுடைய இவ்வகையான தூரநோக்கற்ற செயற்பாடுகள் இளைஞர் யுவதிகளையே அதிகம் பாதிக்கும் என்றும் சமத்துவக் கட்சியின் பொதுச்செயலாளர் மு சந்திரகுமார் தெரிவித்தார். நவம்பர் 20ம் திகதி கிளிநொச்சி லிற்றில் எய்ட் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போது தெரிவித்தார். அமரத்துவமடைந்த லிற்றில் எய்ட் நிறுவனத்தின் முன்னாள் இயக்குநர் சிவஜோதியின் ஞாபகார்த்த விருது வழங்கும் நிகழ்வில் உரையாற்றிய மு சந்திரகுமார், அதிகரித்துள்ள அரச உத்தியோகத்தர்கள் இருப்பதற்கே அலுவலகங்களில் இருக்கைகள் இல்லை எனத் தெரிவித்தார். அவர் தொடர்ந்தும் பேசுகையில் அரசு இனிமேல் அரச ஊழியர்களை விலத்துவது பற்றி தீவிரமாக சிந்திப்பதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர பாராளுமன்றத்தில் குறிப்பி;ட்டதாக மு சந்திரகுமார் அங்கு தெரிவித்தார்.

இந்நிகழ்வின் இறுதியில் இயல், இசை, நாடகக் கலைஞர்கள் வள்ளிபுரம் ஏழுமலைப்பிள்ளை, கணேஸ் விஜயசேகரன், பார்வதி சிவபாதம், செல்லத்துரை விந்தன் ஆகியோர் அவர்களுடைய சேவைக்காக பாராட்டப்பட்டு கௌரவிக்கப்பட்டனர். இவர்களில் பார்வதி சிவபாதம் அவர்கள் இவ்வாண்டுக்கான 2022 சிவஜோதி ஞாபகார்த்த விருதை வெற்றிகொண்டார். 2022 சிவஜோதி ஞாபகார்த்த விருதை கிழக்குமாகாண சிரேஸ்ட்ட கலாச்சார அலுவலர் வி குணபாலாவும் சிவஜோதியுடைய தந்தையும் இணைந்து பார்வதி சிவபாதம் அவர்களுக்கு வழங்கி கௌரவித்தனர். மற்றைய கலைஞர்களுக்கு ரூபாய் 5000 மும் அவர்களின் சேவையை கௌரவிக்கும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டனர்.

‘தனது குழந்தைப் பருவம் முதல் இயல் இசை நாடகத்துறையில் தடம் பதித்து பதின்ம வயதிலும் அதில் ஈடுபட்டு கலைத்துறையிலேயே வாழ்க்கைத் துணையையும் தேர்ந்து கலைத்துறையில் தன் அடுத்த தலைமுறையையும் தடம்பதிக்க வைத்தமைக்காக இயல் இசை நாடகத்துறையில் பார்வதி சிவபாதமும் அவருடைய குடும்பத்தினரும் ஆற்றிய பங்களிப்பை கௌரவிப்பதற்காக அவருக்கு இவ்விருது வழங்கப்பட்டதாக காணொலியூடான தன்னுடைய பகிர்வில் லிற்றில் எய்ட் ஸ்தாபகர் த ஜெயபாலன் தெரிவித்தார்.

மு சந்திரகுமார் தன்னுடைய உரையில் ‘இவ்வாண்டு இறுதியுடன் சில ஆயிரம் பேர் அறுபது வயதையெட்டுபவர்கள், ஓய்வுபெறப் போகின்றனர். அந்த வெற்றிடங்கள் எதுவுமே நிரப்பப்படாது’ எனக் குறிப்பிட்டிருந்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில் இராணுவ சேவைகளில் 15 ஆண்டுகள் சேவையாற்றியவர்கள் ஓய்வு பெறலாம் என்றும் தெரிவிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார். சிங்கள மக்கள் மத்தியிலேயே இராணுவத்தினரின் எண்ணிக்கை அதிகரித்து இருக்கின்றது என்ற எண்ணம் ஏற்பட்டிருப்பதைச் சுட்டிக்காட்டிய அவர் மேற்கத்தைய சார்புடைய அரசு தற்போது இருப்பக்கரம் கொண்டு போராட்டங்களை அடக்கி ஒடுக்குவதைப் பற்றி சர்வதேசமும் தற்போது பெரிதாகக் கண்டுகொள்வதில்லை எனத் தெரிவித்தார்.

இளைஞர்களுக்கு இனிவரப் போகும் காலங்கள் மிகச்சவாலானதாக அமையும் எனத் தெரிவித்த மு சந்திரகுமார் ‘கிளிநொச்சி மண்ணில் லிற்றில் எய்ட் செய்யும் பணிகள் அளப்பெரியது. பல நூற்றுக்கணக்கான மாணவர்கள் தொழில்நுட்ப கல்வியைக் கற்று வெளியேறுகின்றனர். லிற்றில் எய்ட் ஸ்தாபகர் த ஜெயபாலன் இளைஞர் – யுவதிகளின் எதிர்காலம் விருத்தி குறித்து மிகுந்த கவனம்கொண்டுள்ளார்’ எனக் குறிப்பிட்ட மு சந்திரகுமார், இன்னும் 15 வருடங்களுக்கு அரச உத்தியோகங்கள் கிடைக்க வாய்ப்பில்லை என்றும் கிளிநொச்சியில் உள்ள இளைஞர் – யுவதிகளுக்கு லிற்றில் எய்ட் ஒரு சிறந்த வாய்ப்பு எனத் தெரிவித்தார்.

அறிவு நடத்தை மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் – கிழக்கு மாகாண சிரேஸ்ட்ட கலாச்சார அலுவலர் வி குணபாலா:

‘அறிவு – திறன் – மனப்பாங்கு என்ற மூன்று அம்சங்கள் எங்களின் நடத்தை மாற்றத்தை ஏற்படுத்துகின்றது. பரீட்சைக்காக மட்டுமல்லாமல் அதற்கு அப்பாலும் மாணவர்கள் தங்கள் அறிவை வளர்த்துக்கொள்ள வேண்டும்’ என்று நிகழ்வுக்குத் தலைமை தாங்கிய கிழக்கு மாகாண சிரேஸ்ட்ட கலாச்சார அலுவலர் வி குணபாலா தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில் ‘கருத்துக்களை சிந்தனைகளை கொள்கைகளை உருவாக்கியவர்களே வளர்த்தெடுக்க வேண்டும் என்ற அவசியமில்லை அதனை பின்பற்றுபவர்களே பின்நாட்களில் அதனை வளர்த்தெடுக்கின்றனர். சிவஜோதியின் எண்ணங்களும் அவ்வாறே, இன்று பலர் மத்தியிலும் விதைக்கப்பட்டு வளர்க்கப்படுகின்றது’ எனத் தெரிவித்தார்.

‘சிவஜோதியொரு பன்முக ஆளுமை நல்ல கலைஞர்’ எனத் தெரிவித்த வி குணபால ‘நாங்கள் கலைஞர்களை உருவாக்கத் தேவையில்லை, எங்கள் மத்தியில் நல்ல சுவைஞர்கள், விமர்சகர்கள், ஆய்வாளர்கள் உருவாக வேண்டும’; எனத் தெரிவித்தார். வி குணபாலா தனது உரையில் வாசிப்பின் அவசியத்தை வலியுறுத்தி ‘எல்லாவற்றையும் அனுபவித்து உணர்ந்துகொள்ள ஆயள் போதாது ஆனால் பல அனுபவங்களை வாசித்து அனுபவித்துக்கொள்ள புத்தகங்கள் நிச்சயம் உதவும்’ என்பதைச் சுட்டிக்காட்டினார்.

வி குணபாலாவின் தலைமையுரையைத் தொடர்ந்து பத்தி எழுத்தாளர், நூலாசிரியர், கலை இலக்கிய விமர்சகர் சி கருணாகரன் சிவஜோதி நினைவுச் சிறப்புரை நிகழ்த்தினார்.

அறிவு மட்டும் போதாது. நல்ல எண்ணங்களும் இளையோருக்கு ஊட்டப்பட வேண்டும் – எழுத்தாளர் சி கருணாகரன்:

இளையோரை விருத்தி செய்தல்: அறிவு – ஆற்றல் – ஆளுமை – பண்பு – செயல்திறன் என்ற தலைப்பில் சிவஜோதியின் இளையதலைமுறையினரை முன்நிறுத்தும் தன்மையை விதந்துரைத்தார். தற்போது போதைப்பொருள் மற்றும் மதுப்பாவனைகள் அதீதமாக இருப்பதைச் சுட்டிக்காட்டிய கருணாகரன் சர்வதேச என்ஜிஓக்களின் புரஜகட் கலாச்சாரத்தால் இவற்றைத் தடுத்து நிறுத்த முடியாது என்றும் இது இளைஞர்களின் தவறல்ல அவர்களை நல்வழிப்படுத்தாத பெற்றோர்கள் ஆசிரியர்கள் என் போன்ற சமூகத்தினரதும் தவறு எனச்சுட்டிக்காட்டினார்.

கிளிநொச்சி மண்ணில் மட்டும் வேலைவாய்ப்புகள் இல்லாமல் 20,000 இளைஞர்கள், யுவதிகள் என்ன செய்வதென்று தெரியாமல் பொழுதை வீணடிப்பதாகக் குறிப்பிட்ட கருணாகரன், மண்ணின் மைந்தர் என்று மார்தட்டிக்கொள்ள ஆட்கள் இருக்கின்றனர் ஆனால் மண்ணுக்கு சேவை செய்ய ஆட்கள் இல்லை எனக் குறைப்பட்டார். ‘அரசோ வெளிநாட்டுக்கு போய் உழைத்து வரச்சொல்லி இலவசமாகக் கல்வியைக் கொடுத்து அவர்களுக்கு வேண்டிய பயிற்சியையும் கொடுத்து அவர்களை வெளிநாட்டுக்கு அனுப்புகின்றது. எங்கள் நாட்டில் உள்ள வளங்களை வைத்து உற்பத்திகளைப் பெருக்க இளைஞர்கள் முன்வர வேண்டும் என்று தன்னுரையில் கருணாகரன் கேட்டுக்கொண்டார்.

‘இன்று கிராமங்களிலும் கூட பட்டதாரிகள் இல்லாத வீடுகள் இல்லை என்ற அளவுக்கு வந்துவிட்டது. அப்படி இருந்தும் அறிவான சமூகத்தில் இவ்வாறான போதைப் பழக்கங்கள் தலைவிரித்தாடுவது எதனால்?’ என அவர் கேள்வி எழுப்பினார். அதனால் அறிவு மட்டும் போதாது எனக் குறிப்பிட்ட அவர், ‘நல்ல எண்ணங்கள் வளர்த்தெடுக்ப்பட வேண்டும் அதற்கு இயல், இசை, நாடகம், ஓவியம் என கலையம்சங்களும் அவர்களுக்கு ஊட்டப்பட வேண்டும்’ எனத் தெரிவித்தார்.

‘கடந்த 12 ஆண்டுகள் லிற்றில் எய்ட் கிளிநொச்சி மண்ணில் கணணித் தொழில்நுட்பத்துடன் ஆளுமையையும் வளர்க்கின்றது. இங்கு புரஜக்ற் கலாச்சாரம் இல்லை. புரஜக்ற் எழுதி நிதிசேகரிப்பு நடைபெறுவதில்லை. மாணவர்களே சிரமதானம் செய்கின்றனர். மாணவர்களே பெயின்ற் அடிக்கின்றனர். அதுவொரு குடும்பமாகச் செயற்படுகின்றது’ என்றும் கருணாகரன் தனதுரையில் குறிப்பிட்டார்.

லிற்றில் எய்ட் மாணவர்களின் தமிழ் வாழ்த்துடன் ஆரம்பமான நிகழ்வுக்கு லிற்றில் எய்ட் மாணவி செல்வி குகப்பிரியா வரவேற்று உரைநிகழ்த்தினார். ஆசிரியர் பி தயாளன் நிகழ்வைத் தொகுத்து வழங்கினார். கிளிநொச்சி ஜெயந்திநகர் மீனாட்சி அம்மன் ஆலயப் பிரதம குரு முத்துக்குமார குருக்கள் சிவஸ்ரீ மகேஸ்வரநாத சர்மா சிவஜோதியின் நினைவுகளைக் குறிப்பிட்டு ஆசியுரை வழங்கினார்.

அவரைத் தொடர்ந்து கிளிநொச்சி கருணா நிலைய வண பிதா எஸ் கே டானியல் சிவஜோதியுடைய நண்பரும் கூட ஆன்மீகத்துக்கூடாகவே ஒழுக்கத்தை கொண்டுவர முடியும் எனத் தெரிவித்தார். பொறுப்பற்ற கடமையுணர்வற்ற மனிதர்களைக் கண்டு சிவஜோதி தார்மீகக் கோபம் கொள்வதாகக் கூறிய அவர் ‘கடவுள் ஏன் இவ்வாறானவர்களுக்கு நல்ல சிந்தனையை வழங்குவதில்லை?’ எனத் தன்னிடம் கேட்டபார் என்றும் வண பிதா எஸ் கே டானியல் தன்னுடைய ஆசியுரையில் குறிப்பிட்டார். முன்னைய நிகழ்வு சிவஜோதி ஞாபகார்த்த அரங்காக நடைபெற்றது.

மூட்டை சுமப்பவளுக்கு கூள் காறிக்கு எப்படி திருமணம் ஆகும் என்றெல்லாம் பேசப்பட்ட கிளி ‘அக்காச்சி’ பிராண்டின் தற்போதைய மதிப்பு ஒரு கோடியை ரூபாயை எட்டும்!

ஓகஸ்ட் 29 மற்றும் 20ம் திகதிகளில் கிளிநொச்சியில் இடம்பெற்ற உள்ளுர் உற்பத்திப் பொருட்களின் கண்காட்சியிலும் விற்பனையிலும் கலந்துகொண்ட ‘அக்காச்சி’ பிராண்டின் உரிமையாளர் அனுஜா ராஜ்மோகன், லிற்றில் எய்ட் இல் இடம்பெற்ற கலந்துரையாடலில் “சின்னச் சின்ன தொழில்களை உருவாக்கும் சக்தியைப் பெறுங்கள், உங்களுக்கும் அயலவர்களுக்கும் தேவையான பொருட்களை செய்கின்ற சிறு உற்பத்தியார்களாக மாறுங்கள்” எனத் தெரிவித்தார். “நான் பட்ட வலிகளை வார்த்தைகளில் சொல்லிவிட முடியாது” எனத் தெரிவித்த அவர் “பதின்மப் பருவத்தில் பத்தாம் வகுப்போடு கல்வியை நிறுத்திவிட்டு மூட்டைகளை சுமந்ததையும் கூழ் விற்றதையும் கிண்டல் பண்ணி எனக்கு திருமணமாகாது குடும்ப வாழ்வு அமையாது என்றெல்லாம் உறவுகள் ஒதுக்கி வைத்தனர்” என்றும் தன்னுடைய வலி மிகுந்த அனுபவங்களை அங்கு வந்திருந்த தொழில்முனைவோரோடு பகிர்ந்து கொண்டார். “அன்று அவர்களின் நையாண்டிகளைச் செவிமடுத்து இருந்திருந்தால் இன்று இந்த ‘அக்காச்சி’ என்ற பிராண்ட் உருவாகியிராது. நான் இந்த மேடையிலும் ஏறியிருக்க முடியாது. ஒரு மூலையில் ஒதுக்கப்பட்டு இருப்பேன்” என்றும் அனுஜா ராஜ்மோகன் தன்னுடைய இன்றைய நிலையை இட்டு பெருமைப்பட்டுக் கொண்டார். அனைவரது பாராட்டுக்களையும் சபையில் இருந்து பெற்றார்.
ஓகஸ்ட் 29 அன்று கிளிநொச்சி மாவட்ட செயலக சிறுகைத் தொழில் அபிவிருத்தி பிரிவு கச்சேரி மற்றும் மனிதவலு அபிவிருத்தி பிரிவு, கிரிசலிஸ் (Chrysalis) ஆகியன உள்ளுர் உற்பத்திப் பொருட்களுக்கான கண்காட்சசியும் விற்பனையும் மேற்கொண்டது.இக்கண்காட்சியில் லிற்றில் எய்ட் நிறுவனம் தனது மணவர்களால் உருவாக்கப்பட்ட ஆடைகள் மற்றும் கைவினைப் பொருட்களை விற்பனை செய்து 15,000 ரூபாய் வரை லாபமீட்டியது. ஓகஸ்ட் 20 அன்று லிற்றில் எய்ட் நிறுவனத்திலும் உள்ளுர் உற்பத்திப் பொருட்களுக்கான கண்காட்சியும் விற்பனையும் அத்துடன் கலந்துரையாடலும் இடம்பெற்றது.
இவ்விற்பனையின் மூலம் லிற்றில் எய்ட் 40,000 ரூபாவரை லாபமீட்டியதுடன் பல்வேறு தொழில்முனைவோருக்கும் தங்கள் பொருட்களை சந்தைப்படுத்தவும் விற்பனை செய்வதற்குமான வாய்ப்பு வழங்கப்பட்டு இருந்தது. இவ்விரு கண்காட்சியிலும் விற்பனையிலும் பல்வகைப்பட்ட உணவுப் பொருட்கள், தைத்த ஆடைகள், தையல் அலங்காரங்கள், ஆபரணங்கள் மற்றும் கைவினைப் பொருட்கள் என்பன காட்சிப்படுத்தப்பட்டு விற்பனையும் மேற்கொள்ளப்பட்டது. ஒவ்வொரு தொழில் முனைவோருக்கும் பயனுள்ள வகையில் எதிர்காலத்தில் தங்கள் சந்தை வாய்ப்புகளைத் தூண்டும் நோக்கோடு இக்கண்காட்சியும் விற்பனை நிகழ்வும் மேற்கொள்ளப்பட்டது. பல தொழில்முனைவோர் இந்நிகழ்வுகளின் மூலம் பொருட்களுக்கான கட்டளைகளை (ஓடர்) பெற்றதாக தெரிவித்தனர்.
ஓகஸ்ட் 20இல் லிற்றில் எய்ட் இல் இடம்பெற்ற தொழில்முனைவோருக்கான கண்காட்சி கலந்துரையாடலை கிளிநொச்சியில் மிகுந்த நன்மதிப்பைப் பெற்ற விவேகானந்தா கல்லூரியின் அதிபர் ஜெயா மாணிக்கவாசகர் திறந்து வைத்தார். லிற்றில் எய்ட் இன் செயற்பாடுகள் அடுத்த கட்டத்திற்குச் சென்றுவிட்டதை இந்த தொழில்முனைவோருக்கான கண்காட்சி எடுத்துக்காட்டுவதாகக் குறிப்பிட்ட அவர் நாங்கள் கற்பித்து அனுப்புகின்ற மாணவர்களை லிற்றில் எய்ட் இப்பிரதேசத்தின் தொழில்முனைவோரோக்கி அவர்களாலும் முடியும் என்று காட்டியுள்ளது எனத் தெரிவித்தார். லிற்றில் எய்ட் இல் கல்வி பயிலும் மாணவர்கள் கிளிநொச்சி நகரத்தில் உள்ள பாடசாலைகளில் இருந்து வருபவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
தொழில்முனைவோருக்கு உதவும் அலுவலராகவும் அதேசமயம் லிற்றில் எய்ட் நம்பக்கை சபை உறுப்பினராகவும் செயற்படும் எஸ் தேவதாஸ் அவர்கள் ‘தொழில்முனைவோருக்கான களம் கிளிநொச்சி’ என்ற தொனிப் பொருளில் உரையாற்றினார். “மூலப்பொருட்கள் மூலப்பொருட்களாகவே விற்பனை செய்யப்படுகின்றது” என்பதை அவர் சுட்டிக்காட்டினார். மூலப்பொருட்களை முடிவுப்பொருட்களாக்கி அவற்றுக்கு வெவ்வேறு வழிகளில் பெறுமதியைச் சேர்க்க வேண்டியதன் அவசியத்தை அவர் அங்கு அழுத்தமாகத் தெரிவித்தார். கிளிநொச்சி உணவு உற்பத்தியில் தன்னிறைவு அடைவதோடு ஏனைய பிரதேசங்களுக்கும் குறிப்பாக தமிழர்கள் பரந்து வாழுகின்ற மேற்கு நாடுகளுக்கும் பொருட்களை ஏற்றுமதி செய்பவர்களாக ஆகமுடியும் என்பதை அவர் வலியுறுத்தினார். உள்ளுரில் கிடைக்கின்ற சத்தான உணவுகள் பற்றி நாங்கள் கண்டுகொள்ளாமல் இருப்பதையும் அவர் அங்கு சுட்டிக்காட்டினார்.
கிளிநொச்சி மாவட்டத்தின் பிரதித் திட்டமிடல் பணிப்பாளர் கேதீஸ்வரன் உரையாற்றுகையில் தொழில் முனைவோருக்கு உள்ள பல்வேறு உதவித் திட்டங்களைப் பற்றியும் சுட்டிக்காட்டி தொழில்முனைவோர் ஆர்வத்தோடும் நிதானத்தோடும் தங்கள் தொழில்முயற்சிகளை வளர்த்தெடுக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.
லிற்றில் எய்ட் மாணவியாக இருந்து அதன் உதவித் தையலாசிரியராக தையல் வீட்டுத் தோட்டம் என்று தொழில்முயற்சிகளிலும் ஈடுபட்டுவரும் தமிழினி லிற்றில் எய்ட் இன் ஒரு முன்மாதிரியான தொழில்முனைவோர். தான் யாரிலும் எதற்காகவும் தங்கி இருப்பதில்லை என்று குறிப்பிடும் மூன்று குழந்தைகளின் தாயான இவர் வீட்டில் இருந்தவாறே தன்னால் தனது தேவைக்கதிகமாக பணத்தை ஈட்ட முடிகிறது என்றும் இதனை ஒவ்வொருவராலும் செய்ய இயலும் என்றும் தெரிவித்தார். தமிழினி வீட்டுத் தோட்டத்து ‘வோட்டர் மெலன்’ மிக அருமையான சுவையோடு இருந்ததாகக் குறிப்பிட்ட லிற்றில் எய்ட் இயக்குநர் ஹம்சகௌரி சிவஜோதி தமிழினி ‘சென்றவாரம் வோட்டர் மெலன்களை விற்று 30,000 சம்பாதித்து இருந்ததாகக் குறிப்பிட்டார். அவர் வீட்டிலேயே தையல் சேவையை வழங்குகிறார். கை வினைப் பொருட்களைத் தயாரிக்கின்றார். கம்பளி ஆடைகளை நெய்கின்றார். அவர் மிகவும் விவேகமான சுறுசுறுப்பான தொழில்முனைவர் என்பதில் தான் பெருமைப்படுவதாகக் குறிப்பிட்டார்.
இக்கண்காட்சியும் கலந்துரையாடலும் லிற்றில் எய்ட் ஆசிரியர்கள் மாணவர்கள் திறம்பட ஒழுங்கமைத்திருந்தனர்.
“வெளிநாடுகளில் குறிப்பிடத்தக்க வழங்கள் எதுவும் இல்லாமல் அந்நாடுகள் செல்வந்த நாடுகளாக உள்ளன. ஆனால் இந்நாட்டில் அளவுக்கு மிஞ்சிய வளங்கள் இருந்தும் கவனிப்பார் இல்லாமலே பூத்துக் காய்த்து கனி தரும் மரங்கள் இருந்தும் நாங்கள் வறிய நாடுகளாக இருப்பது வேதனையளிக்கின்றது” என லிற்றில் எய்ட் ஸ்தாபகர் த ஜெயபாலன் குறிப்பிட்டார். ‘தொழில்முனைவோர் ஒரு பார்வை’ என்ற தலைப்பில் அவர் உரை நிகழ்த்தினார். “பிரித்தானியாவில் ‘அப்பிள்’ உள்ளங்கையளவு பழம். அதிலிருந்து முடிவுப்பொருட்களாக குளிர் பானங்கள், ஏராளமான உணவு வகைகள் (அப்பிள் பை, அப்பிள் ரேன்ஓவர், அப்பிள் சோர்ஸ், அப்பிள் கேக், அப்பிள் ஸ்ரப்பிங்,..) குடிபானங்கள் உருவாக்கப்பட்டு ஆண்டு முழுவதும் பயன்படுத்தப்படுகின்றது. ஆனால் எம் நாட்டில் கனியும் அந்தப் பெரிய பிலாப்பழத்தில் நாங்கள் முடிவுப் பொருளாக குறிப்பிடப்படும் படியாக எதையும் செய்வதில்லை. இந்நிலை மாற்றப்பட்ட வேண்டும்” என த ஜெயபாலன் தன்னுரையில் குறிப்பிட்டார்.
“தொழில்முனைவோர் ஒரு நாட்டின் ஒரு பிரதேசத்தின் முதகெலும்பானவர்கள். அவர்களே அங்கு எழுகின்ற பிரச்சினைகளுக்கு தீர்வு காணக்கூடியவர்கள். இன்று இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி மிகவும் வரவேற்கப்படக் கூடியது. ஏனெனில் இலங்கை மக்கள் மாற்று வழியில் சிந்திக்க வேண்டும். தொழில்முனைவோர் இப்போதுள்ள நெருக்கடியை தீர்க்கும் வகையில் புதிய பொருட்களை உற்பத்தி செய்ய வேண்டும். இப்போதுள்ள உற்பத்தி முறைகளில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். நாடு சுயஉற்பத்தியில் ஈடுபட்டு இறக்குமதியைக் குறைத்து இந்த பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள வேண்டும். அதற்கு தொழில்முனைவோருக்கு ஊக்கமும் ஆக்கமும் அளிக்கப்பட வேண்டும் என்றும் கூறி த ஜெயபாலன் தனனுரையை நிறைவு செய்தார்.
லிற்றில் எய்ட் இனால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வில் சில நூறுபேர் கலந்து சிறப்பித்தனர். தொழில்முனைவோரும் தங்கள் பொருட்களை அறிமுகப்படுத்தியதோடு விற்பனையிலும் ஈடுபட்டு இருந்தனர்.

‘என் எண்ண ஓட்டத்தில்…’ நூல் வெளியீடும்! ‘சிவஜோதி நினைவுப் பரிசு’ (ஒரு லட்சம் ரூபாய்) – அறிவிப்பும்!

‘என் எண்ண ஓட்டத்தில்…’ என்ற தலைப்பில் அமரர் சிவஜோதி வயீத்தீஸ்வரனின் ஆக்கங்களின் தொகுப்பு வருகின்ற 18ம் திகதியன்று கிளிநொச்சி லிற்றில் எய்ட் மண்டபத்தில் நடைபெறவுள்ளது. லிற்றில் எய்ட் திறன் விருத்தி மையத்தின் இணைப்பாளராகப் பணியாற்றி குறுகிய காலத்தில் அம்மண்ணின் மைந்தனான சிவஜோதியின் 50வது பிறந்ததினத்தையொட்டி இந்நூல் வெளியீடு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. சிவஜோதியின் பிறந்த தினமான நவம்பர் 18 இலேயே இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சிவஜோதி எழுதிய கட்டுரைகள், மேற்கொண்ட நேர்காணல்கள், நூல் விமர்சனங்கள், ஆகியவற்றின் தொகுப்பாக இந்நூல் வெளியிடப்படுகின்றது. தேசம் வெளியீடாக வரும் இந்நூலை திருமதி ஹம்சகௌரி சிவஜோதி தொகுத்துள்ளார். நாடகக் கலை, நாடகக் கலைஞர்களுடனான நேர்காணல், பேராசிரியர் கா.சிவத்தம்பி மற்றும் பேராசிரியர் வசந்தி அரசரட்ணம் ஆகிய கல்வியியலாளர்களின் நேர்காணல்கள் என பல்வேறு வகையான ஆக்கங்களையும் தாங்கி இந்நூல் வெளிவருகின்றது.

சிவஜோதியை ஆண்டுதோறும் நினைவு கூருகின்ற வகையில் சிவஜோதி நினைவுப் பரிசு ஒன்றை வழங்கவும் சிவஜோதி நினைவுக்குழு தீர்மானித்துள்ளது. மேலும் சிவஜோதி ஒரு நாடகக் கலைஞர் என்பதாலும்; நாடகக் கலையில் தீவிர ஆர்வத்தைக் கொண்டிருந்ததாலும் நாடகக் கலைக்காக தங்களை அர்ப்பணித்த ஒரு கலைஞருக்கு அல்லது நாடகக் கலைக்கு சேவையாற்றுகின்ற அமைப்பு ஒன்றுக்கு ஒரு லட்சம் ரூபாய் சன்மானம் வழங்கவும் தீர்மானிக்கப்பட்டு உள்ளது. அதன்படி சன்மானத்தை பெறுகின்றவருக்கு அல்லது அமைப்புக்கு அந்நிகழ்வில் ஹம்சகௌரி சிவஜோதி ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்குவார்.

இந்நிகழ்வில் சிவஜோதி நினைவாக லிற்றில் எய்ட் இல் கற்கும் மாணவ மாணவியருக்கு யாழ் விக்ரோரியாக் கல்லூரி பழைய மாணவர்கள், அவர்களுக்கு வேண்டிய பாடசாலை சீருடைகளை வழங்க உள்ளனர். சிவஜோதி யாழ் சுழிபுரம் விக்ரோரியாக் கல்லூரியின் மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது.

சிவஜோதியின் நினைவு நிகழ்வுகளை ஆண்டுதோறும் மேற்கொள்ளவும், நாடகக் கலைக்கு உழைக்கின்றவர்களையும் அமைப்புகளையும் கௌரவிக்கும் வகையிலும் ஆண்டுதோறும் சிவஜோதி நினைவுப்பரிசை வழங்கவும் சிவஜோதி நினைவுக்குழு தீர்மானித்து உள்ளது. அதற்காக சிவஜோதி ஞாபகார்த்த நிதியம் ஒன்று லிற்றில் எய்ட் இல் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. சிவஜோதி நேசித்த நாடகக் கலைக்கு ஊக்கமும் ஆக்கமும் அளிக்க முன்வருபவர்கள் இந்நிதியத்திற்கு நிதி வழங்குவதன் மூலம் அதனைச் செய்ய முடியும்.

சிவஜோதி ஞர்பகார்த்த நிதியத்துக்கு நிதி வழங்க விரும்புபவர்கள் கீழுள்ள வங்கிக் கணக்கிற்கு தங்கள் நிதியை வழங்க முடியும்.
வங்கி: HNB
கணக்கின் பெயர்: Little Aid Skill Development Centre (Gurantee) Limited
வங்கிக் கணக்கு இலக்கம்: 146020176746

இவ்வாண்டுக்கான சிவஜோதி நினைவுப் பரிசைப் பெறும் நாடகக் கலைஞர் அல்லது நாடக்குழு நவம்பர் 18 அன்று அறிவிக்கப்படும்.

இந்நிகழ்வில் அனைவரையும் கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு சிவஜோதி ஞாபகார்த்த குழு அழைப்புவிடுத்துள்ளது. இந்நிகழ்வை சிவஜோதி முன்நிலை உறுப்பினராக இருந்து இயக்கிய மக்கள் சிந்தனைக் கழகம் மற்றும் லிற்றில் எய்ட் அமைப்பு என்பன இணைந்து ஏற்பாடு செய்துள்ளன.

– சிவஜோதி ஞாபகார்த்த குழு –

வடக்கு – கிழக்கு எதிர்காலக் கல்விக்கு 22 மில்லியன் ரூபாய் பெறுமதியான 50000 வரையான நூல்கள் – லிற்றில் எய்ட்!

மூன்று தசாப்த கால யுத்தத்தால் பாதிக்கப்பட்டு கல்வியில் வீழ்ச்சியடைந்த தமிழ் சமூகத்தை மீண்டும் மேன்நிலைப்படுத்த; லிற்றில் எய்ட் பல்வேறு கல்வி நடவடிக்கைகளிலும் மாணவர்களின் ஆளுமை விருத்தியிலும் மிகக் கவனம் எடுத்து வருகின்றது. அதன் ஒரு முக்கிய நகர்வாக இன்று அதிகாலை 11,000 கிலோ கிராம் நிறை கொண்ட 50,000 வரையான சிறுவர்களுக்கான ஆங்கில நூல்கள் லிற்றில் எய்ட் நிறுவனத்தைச் சென்றடைந்தது. இந்நூல்களின் இலங்கைச் சந்தைப் பெறுமதி 22 மில்லியன் ரூபாய்கள் என மதிப்பிடபடுகின்றது. ஸ்கொட்லாந்தில் உள்ள புக் அப்ரோட் என்ற சர்வதேச நிறுவனத்துடன் கடந்த பத்து ஆண்டுகளாகச் செயற்பட்டு வரும் லிற்றில் எயட், காலத்திற்குக் காலம் தமிழ் பிரதேசங்களில் உள்ள பாடசாலைகள் மற்றும் நூலகங்களுக்கு சிறுவர்களுக்கானபல்வேறு துறைசார்ந்த ஆங்கில நூல்களை அனுப்பி வருகின்றது. இதன் தொடர்ச்சியாக இன்று கிளிநொச்சியயை வந்தடைந்த நூல்கள் தமிழ் பகுதிகளில் உள்ள 100க்கும் மேற்பட்ட பாடசாலை மற்றும் நூலகங்களுக்கு வழங்கப்பட இருக்கின்றது.

எம் வி ரக்னா என்ற கப்பலில் டிசம்பர் 22இல் இலங்கை வந்தடைந்த நூல்கள் இன்று கிளிநொச்சியில் உள்ள லிற்றில் எய்ட் நிறுவனத்தில் இறக்கப்பட்டது (படங்கள்). 22 ‘பலட்களில்’ கொண்டுவரப்பட்ட நூல்கள் தறகாலிகமாக லிற்றில் எய்ட் நிறுவனத்தின் ஒருங்கிணைப்பாளராகப் பணியாற்றும் துளசிகன் மேற்பார்வையில் இறக்கப்பட்டது, வடக்கில் வாசிப்பு பழக்கத்தை ஊக்குவித்துவரும் சிறகுகள் அமைப்பினர் லிற்றில் எய்ட் நிறுவனத்தோடு கரம்கோர்த்து இந்தப் பணிகளில் ஈடுபட்டனர். நடுநிசியில் மழையயையும் பொருட்படுத்தாமல் நூல்கள் பத்திரமாக லிற்றில் எய்ட் நிறுவன மண்டபத்தில் இறக்கப்பட்டது.

இப்பணிகளில் லிற்றில் எய்ட் அறங்காவல் சபை உறுப்பினர்கள் குகன், தயாளன் ஆகியோரும் ஈடுபட்டு இருந்தனர். தமிழ் பகுதிகளில் நூல்களும் நூலகங்களும் நூலகவியலாளர் என் செல்வராஜாவின் ஈடுபாடு இல்லாமல் இல்லை. 2012இல் நூலகவியலாளர் என் செல்வராஜா லிற்றில் எய்ட் ஸ்தாபகர் த ஜெயபாலன் ஆகியோர் இஸ்கொட்லாந்திற்கு நேரடியாகச் சென்று அவ்வமைப்பினருடன் இறுக்கமான உறவை ஏற்படுத்தி இருந்தோம். அதன் பயனாகவே இவை சாத்தியமாகி வருகின்றது. இந்நூல்களை சேகரித்து கொழும்புத்துறைமுகம் வரை அனுப்பி வைப்பதற்கு ஏற்பட்ட பத்து இலட்சம் ரூபாய்கள் வரையான செலவை புக் அப்ரோட்டே பொறுப்பேற்று இருந்தமை குறிப்பிடத்தக்கது. கொழும்பு சுங்கத் திணைக்களத்தில் ‘கிளியரன்ஸ்’ அனுமதி பெற்று லிற்றில் எய்ட் நிறுவனத்திற்கு இவ்வளவு தொகையான நூல்களைக் கொண்டு சேர்ப்பது லிற்றில் எய்ட் பொறுப்பாக இருந்தது, அதற்கான நிதியயை சேகரிப்பதில் லிற்றில் எய்ட் தலைவர் என் கதிர் செயலாளர் என் சுகேந்திரன் ஆகியோருடைய உழைப்பு குறிப்பிடத்தக்கது.

நல்ல நூல்கள், நல்ல நண்பர்கள்!
வாசிப்பதால், மனிதன் பூரணமடைகின்றான்!!
ஆகவே வாசிப்பை நேசிப்போம்!!!

லிற்றில் எய்ட்.