வட்டுக்கோட்டை

வட்டுக்கோட்டை

யாழில் இளைஞனை கடத்தி படுகொலை செய்த சம்பவம் – கைது செய்யப்பட்டவர்களுக்கு விளக்கமறியல்!

யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பகுதியில் இளைஞனை கடத்தி படுகொலை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவர்களில் நால்வரை எதிர்வரும் 28ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

கடந்த திங்கட்கிழமை தனது மனைவியுடன் காரைநகருக்கு மோட்டார் சைக்கிளில் சென்று விட்டு வீடு திரும்பியவர்களை பொன்னாலை பால பகுதியில் உள்ள கடற்படையின் முகாம் முன்பாக வைத்து வன்முறை கும்பல் கடத்தி சென்றது.

 

கணவனை ஒரு வாகனத்திலும், மனைவியை ஒரு வாகனத்திலும் கடத்திய வன்முறை கும்பல், மனைவியை சித்தங்கேணி பகுதியில் இறக்கி விட்டு சென்றது. கணவனை கடத்தி சென்றவர்கள் கணவனை கடுமையான சித்திரவதைக்கு உள்ளாக்கி படுகாயங்களுடன் வட்டுக்கோட்டை வைத்திய சாலை முன்பாக வீசி சென்றனர்.

 

படுகாயத்துடன் காணப்பட்டவரை வைத்தியசாலை பணியாளர்கள் மீட்டு யாழ். போதனாவில் அனுமதித்த நிலையில் உயிரிழந்தார்.

 

சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் வட்டுக்கோட்டையில் ஒரு இளைஞனை கைது செய்தனர். அதேவேளை கிளிநொச்சியில் பதுங்கியிருந்த அராலி பகுதியை சேர்ந்த நான்கு பேரை கைது செய்தனர்.

 

கைது செய்யப்பட்டவர்களை கடந்த புதன்கிழமை மல்லாகம் நீதவான் நீதிமன்றில் முற்படுத்தி, கிளிநொச்சியில் கைதான நால்வரிடம் மேலதிக விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும். ஆகவே அவர்களை 48 மணிநேரம் பொலிஸ் தடுப்பு காவலில் வைத்து விசாரிக்க வேண்டும் என மன்றில் விண்ணப்பம் செய்தனர்.

பொலிஸாரின் விண்ணப்பத்தை ஏற்ற, மன்று நால்வரையும் 48 மணிநேரம் பொலிஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி அளித்தது. மற்றைய சந்தேக நபரை எதிர்வரும் 20ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க மன்று உத்தரவிட்டது. அத்தோடு அன்றைய தினம் அடையாள அணிவகுப்புக்கும் கட்டளையிட்டது.

 

அந்நிலையில் பொலிஸ் காவலில் தடுத்து வைத்து விசாரணை செய்யப்பட்ட நால்வரையும் வெள்ளிக்கிழமை (15) மன்றில் முற்படுத்திய வேளை அவர்களை எதிர்வரும் 28ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க மன்று உத்தரவிட்டுள்ளது.

 

இதேவேளை இளைஞன் கடத்தப்படும் போது கடற்படை முகாமில் இருந்த நான்கு கடற்படையினரிடம் பொலிஸார் வாக்குமூலங்களை பெற்றுள்ளதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

வன்முறை கும்பல் தம்மை கடத்த முற்பட்ட வேளை கடற்படை முகாமினுள் தஞ்சம் கோரி தாம் சென்ற வேளை, கடற்படையினர் அடைக்கலம் கொடுக்காது, தம்மை அடித்து விரட்டி, கடத்தலுக்கு ஒரு வகையில் உதவி இருந்தனர் என உயிரிழந்தவரின் மனைவி குற்றம் சாட்டி வரும் நிலையில், கடற்படை முகாம் பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கமராவில் கடற்படையினர் தஞ்சம் கோரி வந்தவர்களை, விரட்டுவதும், கடற்படையின் அருகில் வைத்தே, வன்முறை கும்பல் தம்பதியினரை கடத்தி செல்லும் காட்சி நேற்றைய தினம் வியாழக்கிழமை ஊடகங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

யாழில் பொலிஸாரின் சித்திரவதைக்கு உள்ளாகி உயிரிழந்த இளைஞனின் சடலத்துடன் மக்கள்  நீதி கேட்டு போராட்டம் !

யாழ் – வட்டுக்கோட்டைப்  பொலிஸாரின் சித்திரவதைக்கு உள்ளாகி உயிரிழந்த சித்தங்கேணியை சேர்ந்த நாகராசா அலெக்ஸின் சடலத்துடன் அப்பகுதி மக்கள்  நீதி கேட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

குறித்த  இளைஞனின் இறுதி கிரியைகள் சித்தங்கேணியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று தகன கிரியைக்காக மயானத்திற்கு எடுத்து செல்லும் போது  அப்பகுதி மக்களால் குறித்த கவனயீர்ப்புப்  போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன்போது ” அலெக்ஸ் இறந்து 48 மணி நேரம் கடந்தும் இது வரையில் எவரும் கைது செய்யப்படவில்லை. பொலிஸ் விசாரணைக்குழு 48 மணி நேரத்திற்கு மேலாக  விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். எனினும் பொலிசாரின் விசாரணை மீது எமக்கு திருப்தி ஏற்படவில்லை. மாறாக அவர்கள் மீது சந்தேகம் தான் வலுத்து வருகின்றது” எனப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

பொருளாதார வங்குரோத்தை மறைக்க பிரித்தானிய அரசு அகதிகளுக்கு எதிராகத் திரும்புகிறது! முன்னணி சட்டத்தரணி கணநாதன், லண்டன் வட்டுக்கோட்டை ஒன்றிய ஒன்று கூடலில்

பிரித்தானிய அரசு, தாங்கள் எதிர்நோக்கும் பொருளாதார வங்குரோத்தை மறைக்க அகதி அந்தஸ்து கோரும் விளிம்புநிலை மக்களை பகடைக்காயாகப் பயன்படுத்துவதாக அருண் கணநாதன் தேசம்நெற்க்குத் தெரிவித்தார். பிரித்தானியாவில் உள்துறை அமைச்சுக்கு எதிராக பல தஞ்சக் கோரிக்கை வழக்குகளை முன்னெடுத்து அவற்றில் சிலதை முன்மாதிரியான வழக்குகளாக்கியவர் சட்டத்தரணி அருண் கணநாதன். அவருடைய 25 வருடகால சட்ட சேவையை கௌரவிக்கும் வகையில் அவருக்கு கௌரவிப்பும் நடந்தது. அவரோடு மருத்துவ கலாநிதி லோகேந்திரன் மற்றும் பத்மநாபஐயர் ஆகியோரும் கௌரவிக்கப்பட்டனர். இந்கிழ்விற்கு முன்னாள் யாழ் நீதிபதி விக்கினராஜா பிரதம விருந்தினராக அழைக்கப்பட்டு இருந்தார்.

அருண் கணநாதன் யாழ் வட்டுக்கோட்டை சித்தங்கேணியைச் சேர்ந்தவர், இவர் கௌரவிப்பை ஏற்று சில வார்த்தைகள் குறிப்பிட்ட போது தற்போது பிரித்தானியாவில் அரசியல் தஞ்சம்கோருவோருக்கு எதிராக அரசு கடுமையான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகவும் அவற்றுக்கு எதிராக போராட்டங்களை நடத்த வேண்டும் என்றும் அதற்கு மக்களின் ஆதரவையும் வலியுறுத்தி இருந்தார். இதனை மக்கள் போராட்டங்களில் ஈடுபட வேண்டும் என்றே சபையினர் அர்த்தப்படுத்தி இருந்தனர். இது தொடர்பாக தேசம்நெற் விளக்கம் கேட்ட போது, சட்டப் போராட்டங்களையே தான் குறிப்பிட்டதாகவும் அரசியல் தஞ்சம்கோருவோரும் அவரைச் சார்ந்தவர்களும் தங்களோடு முழுமையாக ஒத்துழைத்தாலேயே நீதியைப் பெற்றுக்கொள்ளலாம் எனத் தெரிவித்தார். ‘அரசியல் தஞ்சம் கோருவோருக்கு நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கை உங்களிடம் இருக்கின்றதா’ என தேசம்நெற் கேட்டபோது, “பிரித்தானிய நீதிமன்றங்களில் அரசின் கொள்கைகள் மீது விசனம் கொண்ட பல நீதிபதிகள் இன்னும் உள்ளனர். நாங்கள் தக்கமுறையில் சட்டப் போராட்டங்களை முன்னெடுத்தால், நீதி கிடைக்கும். அந்த நம்பிக்கை எனக்கு உண்டு” என்றார்.

தற்போதைய கொன்சவேடிவ் கட்சியின் போக்குகளை மிகக்; கடுமையாக விமர்சித்த சட்டத்தரணி அருண் கணநாதன் இக்கட்சியும் இவர்கள் சார்ந்த வலதுசாரி ஊடகங்களும் துவேசத்தைத் தூண்டி அகதி அந்தஸ்து கோரும் விளிம்புநிலை மக்களுக்கு எதிராக துவேசிகளை ஏவிவிடுவதாகக் குற்றம்சாட்டினார். சில நாட்களுக்கு முன் தீவிர வலதுசாரியான ஒருவர் இங்கிலாந்தின் கென்ற் என்ற பகுதியில் உள்ள தி வியடக்ட் அகதிகள் தடுப்பு மையத்தின் மீது தாக்குதலை நடத்தி விட்டு தானும் தற்கொலை செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது. அதிஸ்ரவசமாக இத்தாக்குதலில் இருவர் மட்டுமே சிறு காயங்களுக்கு உள்ளாகினர். இத்தாக்குதலையடுத்து இங்கு தடுத்து வைக்கப்பட்டிருந்த 700 அகதி அந்தஸ்து கோரியோர் கென்ற் பகுதியில் உள்ள மேஸ்ட்ரன் தடுப்பு மையத்திற்கு பாதுகாப்பு காரணங்களுக்காக இடமாற்றப்பட்டனர்.

ஏற்கனவே மேஸ்ட்ரன் தடுப்பு மையம் தஞ்சம் கோருவோரோல் நிரம்பி வழிக்ன்றது. 1500 பேர்களை மட்டுமே கொள்ளக் கூடிய முன்னாள் இராணுவத்தளத்தில் அரசு 4,000 பேரைத் தடுத்து வைத்திருப்பதாகவும் அங்கு பலரும் நிலத்தில் படுக்க வேண்டி இருப்பதாகவும் பத்திரிகைச் செய்திகள் தெரிவிக்கின்றன. இந்நிலை ஹமன்ஸ்வேர்த் தடுப்பு மையத்திலும் உள்ளதாக சட்டத்தரணி அருண் கணநாதன் தேசம்நெற்க்குத் தெரிவித்தார். இத்தடுப்பு மையங்களின் பாதுகாப்பு தனியார் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டு இருப்பதாகவும் இந்நிறுவனங்கள் தஞ்சம்கோருவோரை மிருகத்தனமாக நடத்துவதாகவும் அருண் கணநாதன் குற்றம்சாட்டினார். இதனை உறுதிப்படுத்தும் செய்திகள் அண்மையில் பத்திரிகைகளிலும் வெளிவந்துள்ளது. இன்று ஹெமன்ஸ்வேர்த் தடுப்பு மையத்தில் மூன்று மணிநேரங்களுக்கு மின் விநியோகம் துண்டிக்கப்பட்டு இருந்ததாகவும் கணநாதன் சுட்டிக்காட்டினார்.

சில வாரங்களுக்குள்ளேயே மூன்று பிரதமர்களைக் கண்ட பிரித்தானிய பாராளுமன்றத்தில் பிரதமரும் அவருடைய முக்கிய அமைச்சர்களும் சிறுபான்மைச் சமூகங்களாக இருந்தபோதும் அவர்களுடைய அரசியல் கொள்கைத் திட்டங்கள் மோசமான வலதுசாரித் தன்மையுடையதாகவும் சிறுபான்மையினருக்கும் விளிம்புநிலை மக்களுக்கும் எதிரானதாகவே உள்ளது. குறிப்பாக பொறிஸ் ஜோன்சன் பிரதமாராக இருந்த போது உள்துறை அமைச்சராக இருந்த முன்னாள் அமைச்சர் ப்ரித்தி பட்டேல் அவரைத் தொடர்ந்து 44 நாட்கள் பிரதமராக இருந்து நாட்டின் பொருளாதாரத்தை ஆதாள பாதாளத்துக்கு இட்டுச்சென்ற லிஸ் ரஸ் பிரதமராக இருந்த போது உள்துறை அமைச்சராக நியமிக்கப்பட்ட சுவலா ப்ரவர்மன், தனது சொந்த மின் அஞ்சலைப் பயன்படுத்தி பாதுகாப்பு விதிகளை மீறியமைக்காக லிஸ் ரஸ்ஸால் பதவியில் இருந்து தூக்கப்பட்டவர். ஆனால் தற்போதைய பிரதமர் ரிஷி சுனாக் பதவியேற்றதும் சுவலா ப்ரவர்மன் மீண்டும் உள்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார்.

இவர் இந்திய வம்சாவழியாக இருந்த போதும் பிரித்தானியாவுக்கு குடிபெயரும் அகதிகள் பற்றி மோசமான கருத்துக்களை வெளியிடுவதுடன் வலதுசாரிகளையும் துவேசிகளையும் தூண்டிவிடும் வகையிலேயே கருத்துக்களை வெளியிட்டு வருகிறார். முன்னாள் உள்துறை அமைச்சர் ப்ரிதி பட்டேல் தஞ்சம் கோரி பிரித்தானியா வருபவர்களை ருவாண்டாவுக்கு அனுப்பி வைக்க அந்நாட்டு அரசோடு ஒரு உடன்படிக்கையைச் செய்துகொண்டார். அவருடைய காலப்பகுதியில் தஞ்சம் கோரியவர்களை ருவாண்டாவுக்கு அனுப்ப எடுத்த முயற்சி முற்றிலும் தோல்வி கண்டது. பிரித்தானியாவினதும் ஐரோப்பாவினதும் நீதிமன்றங்கள் பிரித்தானியாவின் உள்துறை அமைச்சின் ருவாண்டா திட்டத்துக்கு எதிராக தீர்ப்பு வழங்கின.

நிலைமை அப்படியிருக்கையில் சுவாலா ப்ரவர்மன் “பிரித்தானியாவுக்கு தஞ்சம் கோரிவருபவர்கனை ருவாண்டாவுக்கு அனுப்புவது தனது கனவு என்று குறிப்பிட்டிருந்தார். தற்போது இன்னுமொரு படி மேலே சென்று அகதிகள் படகுகளில் பிரித்தானியா மீது படையெடுப்பதாகத் தெரிவித்துள்ளார். வாழ்வதற்கு வழியற்று நிர்க்கதியாகி அகதிகளாக வருபவர்களை ‘படையெடுக்கிறார்கள்’ என்று சுவாலா ப்ரவர்மன் குறிப்பிட்டது, அகதி அந்தஸ்து கோருபவர்கள் தொடர்பான அவருடைய நிலைப்பாட்டை மிகத் தெளிவாக எடுத்துக்காட்டுகிறது.

பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகியது முதல் பிரான்ஸ் ஆங்கிலக் கால்வாய் ஊடாக படகு மூலம் பயணிப்பவர்கள் மீதான கண்காணிப்பை கைவிட்டது. பிரித்தானியாவின் எல்லையை பாதுகாப்பது தமது பொறுப்பல்ல என பிரான்ஸ் தீர்மானித்தது. இதனால் ஆங்கிலக் கால்வாய் ஊடாக பிரித்தானியாவுக்கு வருபவர்களின் எண்ணிக்கை ஆயிரம் ஆயிரமாக அதிகரித்து வருகின்றது. இது பிரித்தானியாவின் முன்யோசணையற்ற பிரிக்ஸிற் கோரிக்கையின் பலாபலன்.

ரிஷி சுனாக் அரசு என்ன தான் தீவிர வலதுசாரித்துவத்தின் பக்கம் சாய்ந்தாலும் 2024 இல் நடைபெறும் தேர்தலில் ரிஷி சுனாக் வேறும் காரணங்களோடு அவருடைய நிறத்திற்காகவும் பிரதமராக ஏற்றுக்கொள்ளப்படமாட்டார். ஆனாலும் இவர்கள் தங்களை தீவிர வலதுசாரி துவேசிகளுடன் இணைத்துக்கொள்வார்கள்.

300 பேர்வரை கலந்துகொண்ட இந்நிகழ்வை தேவசேனா மற்றும் சந்துரு ஆகியோர் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர். இந்நிகழ்வில் பல்வேறு கலை நிகழ்வுகளும் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. வட்டுக்கோட்டையின் விருந்தோம்பல் வெளிப்பாடாக உணவை விரயம் செய்யாமல் நிகழ்வில் கலந்துகொண்டவர்கள் வீட்டுக்கும் உணவை எடுத்துச் செல்லும் வகையில் ஒழுங்குகள் செய்யப்பட்டு இருந்தது. இந்நிகழ்வு மூலம் திரட்டப்படும் நிதி வட்டுக்கோட்டை தொகுதியில் உள்ள பின்தங்கிய பகுதிகளில் உள்ள முன்பள்ளிகளின் வளர்ச்சிக்கு வழங்கப்படும் என தேவசேனா தெரிவித்தார். குறிப்பாக காட்டுப்புலம் மற்றும் மூளாய் போன்ற பகுதிகளில் உள்ள முன் பள்ளிகளின் வளர்ச்சிக்கு இந்நிதி வழங்கப்படும் என அவர் குறிப்பிட்டு இருந்தார்.

இலங்கையின் வடக்கில் உள்ள சனத்தொகை அடர்த்தி கூடிய தொகுதி வட்டுக்கோட்டை என்பது குறிப்பிடத்தக்கது. இலங்கையில் கொழும்பிற்கு அடுத்ததாக புதிய ஸ்ரைல் வருவது வட்டுக்கோட்டையிலும் மானிப்பாயிலும். காரணம் இப்பகுதிகளில் கிறிஸ்தவர்களின் தாக்கம் கணிசமான அளவில் காணப்பட்டமை. துரதிஸ்ட் வசமாக சாதிய முரண்பாடு அன்று மட்டுமல்ல இன்றும் கூர்மையாக உள்ள பிரதேசங்களில் வட்டுக்கோட்டையும் ஒன்று. இவை எல்லாவற்றுக்கும் மேலாக இன்றைய அரசியலைத் தீர்மானிக்கும் ‘தமிழீழ பிரகடனம்’ செய்யப்பட்டது வட்டுக்கோட்டையில் உள்ள பன்னாகம் என்ற இடத்திலேயே. இலங்கைத் தமிழர்களின் வரலாற்றை வட்டுக்கோட்டையைத் தவிர்த்து எழுத முடியாது. சோமசுந்தரப் புலவர், எதிர்க்கட்சித் தலைவர் அமிர்தலிங்கம், அல்பிரட் துரையப்பா, ரெலி ஜெகன் என்று முக்கிய புள்ளிகளும் இம்மண்ணில் வாழ்ந்துள்ளனர்.

வட்டுக்கோட்டை என்ன சாதி வெறியர்களின் கோட்டையா? : தேசம் வித்தியா

வட்டுக்கோட்டை – தமிழர்களின் சுயநிர்ணயத் தீர்மானத்துக்கு மட்டுமல்ல சாதிய அடக்குமுறைக்கும் பெயர் போன இடமாக மாறியுள்ளது. சாதியம் என்பது தமிழர்களில் ஆழாமாக வேரூன்றிப் போயுள்ள ஒன்று. அதிலும் யாழ்ப்பாணத்தாரிடம் அதன் தாக்கம் மிக அதிகம். பொதுவாக யாழ்ப்பாணத்தவர்கள் படித்தவர்கள் என்று சொல்லப்படுவது வழமை. ஆனால் அந்த மேதைகளிடம் கூட இந்த விடயத்தில் பகுத்தறிவை காண்பது மிக அரிது. ஏனெனில் சாதியத்தை இந்த சிந்தனை யுகத்தில் கூட வளர்த்தெடுத்ததில் பெரும் பங்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்கும் உண்டு. நீண்ட காலத்திற்குப் பின்பு சாதிய அடக்குமுறை பேசபொருளாக மாறியுள்ளது. அதற்கு காரணம் வட்டுக் கோட்டை முதலியார் கோவில் பகுதியில் இடம்பெற்ற ஒரு வாள்வெட்டு சம்பவம்.

கடந்த செப்ரெம்பர் மாதம் 19ஆம் திகதி வேலை முடித்து வீடு திரும்பிய நளவர் சமூகத்தைச் சேர்ந்த இளைஞன் ஒருவனை மது போதையிலிருந்த வெளாளம் சமூகத்தைச் சேர்ந்த இளைஞர்கள் வட்டுக்கோட்டை பேபி கடை முடக்கில் வைத்து சைக்கிளுடன் தள்ளியுள்ளனர். குறித்த இளைஞன் ஏன் என்னைத் தள்ளினீர்கள் என்று கேட்டதற்கு கள்ள குளை முறித்ததாக சாதிப் பெயரைச் சொல்லி திட்டியுள்ளார்கள். அதற்குள் தாக்குதலுக்கு உள்ளான இளைஞன் பீதியில் அவரது தந்தைக்கு அறிவித்து, அவரை வரவழைத்தார். தந்தை குறித்த இடத்திற்கு விரைந்து தன்னிலும் வயது குறைந்தவர்கள் என்றும் பாராமல் குறித்த இளைஞர்களிடம் மன்றாடி தன் மகனை அழைத்துச் சென்றுள்ளார். அவ்வாறு இருந்தும் மதுபோதையிலிருந்த வெளாம் சமூகத்தைச் சேர்ந்த இளைஞர்கள் முதலியார் கோவிலடிப் பகுதியில் உள்ள குறித்த நபரின் வீட்டுக்கு வாளோடு சென்று அட்டாகசம் புரிந்ததுள்ளனர். அந்த சம்பவத்தில் முதலில் தாக்குதலுக்குள்ளான இளைஞனின் தந்தைக்கு வாளால் வெட்ட முயற்சிக்க அவர் தனது கைகளால் தடுத்ததில் அவரது கைவிரல் துண்டிக்கப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல் குறித்த இளைஞர் குழு தகாத வார்த்தைகளால் அங்கிருந்த பெண்கள், சிறுவர்களைத் திட்டி அங்கிருந்த நளவர் சமூகத்தைச் சேர்ந்தவர்களின் வீடுகள், கடைகளிலும் தாக்குதல்களை மேற்கொண்டு பெரும் அடாவடி புரிந்துள்ளனர்.

சமூக வலைத்தளங்களில் இது தொடர்பில் பதிவிட்டோரில் பலர் நீண்ட காலத்திற்கு பின்பு சாதிக்கலவரம் தலை தூக்கியுள்ளது என்ற தொணியில் பதிவிட்டுள்ளமையை அவதானிக்க முடிகிறது. முதலில் அங்கு நடந்தது கலவரம் அல்ல. அது சாதிய அடக்குமுறை. அது ஒன்றும் மீண்டும் தலை தூக்கவில்லை. காலம் காலமாக அந்த மக்கள் மீது அரங்கேற்றப்பட்டு வருகின்றது. குறித்த சம்பவம் ஊடகங்களாலும் விதை குழுமம் போன்ற சமூக மட்ட அமைப்புகளாலும் வெளிச்சத்துக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

சாதியம் யாழ்ப்பாணத்தின் சகல இடங்களிலும் இருந்தாலும் கூட அது திரைமறைவிலேயே உள்ளது. திருமணம் போன குறித்த சில விடயங்களில் அது வெளித்தெரியும். ஆனால் வட்டுக்கோட்டை அதை அண்டிய பகுதிகள், வரணி, புத்தூர் போன்ற இடங்களில் அதன் தாக்கம் மிக அதிகம். எடுத்துக்காட்டாக சில வருடங்களுக்கு முன்பு புத்தூரில் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த மக்கள் வாழும் கலைமதிக் கிராம குடியிருப்பு பகுதிக்கு அண்மையில் நீண்டகாலமாக பயன்படுத்தப்படாமலிருந்த மயானத்தை புனரமைத்து பயன்படுத்துவதற்கு ஒடுக்கும் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் முனைந்தனர். நீண்டதொரு போராட்டத்தின் ஊடாகவே அந்த முயற்சி தடுத்துக்கப்பட்டது.

வட்டுக்கோட்டைப் பகுதியில் சமூகத்தில் தம்மை உயர்ந்தவர்கள் என்று கூறிக்கொள்ளும் சமூகத்துக்கும் ஒடுக்குமுறைக்குள்ளாகும் சமூகத்துக்கும் இடையில் வன்முறைச் சம்பவங்கள் அடிக்கடி இடம்பெறும். குறிப்பாக இந்த அடக்குமுறையாளர்கள் முட்டையில் மயிர் பிடுங்குவது போல ஏதாவது ஒரு சம்பவத்தை இழுத்து வைத்து சண்டைக்கு போவார்கள் என்கின்றார் மாவடியைச் சேர்ந்த சிறி.

குறிப்பாக அங்குள்ள அரச பாடசாலைகளில் கல்வி கற்கும் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த மாணவர்கள் இவ்வாறான சாதிய அடக்குமுறைக்கு அதிகம் உள்ளாக்கப்படுகின்றனர். உயர்சமூகம் என்று கூறிக்கொள்ளும் அடக்குமுறையாளர்களால் ஒடுக்கப்பட்ட சமூகத்தைப் பற்றி மிகத் தவறான விம்பம் கட்டமைக்கப்பட்டுள்ளது. எவ்வாறு தமிழ் சினிமா முஸ்லீம் மக்களை பயங்கரவாதிகளாக சித்தரித்துள்ளதோ அது போன்றே ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்களை வன்முறைளார்களாகவும், குற்றச் செயல்களில் ஈடுபடுவோராகவும் ஒரு விம்பத்தை இவர்கள் கட்டவிழ்த்துவிடுகின்றனர். இதனால் சமூகம் இவர்களைச் சந்தேகக் கண் கொண்டு பார்க்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதன் விளைவால் பாடசாலைகளிலும் கூட ஒடுக்கப்பட்ட சமூகத்தை சேர்ந்த மாணவர்கள் பல்வேறு சிக்கல் நிலைகளை எதிர்கொள்கின்றனர்.

இது தொடர்பில் வட்டுக்கோட்டைப் பிரதேசத்திலுள்ள ஓர் அரச பாடசாலையில் உயர்தரத்தில் கல்வி கற்கும் மாணவன் ஒருவன் தேசம்நெற்க்கு தெரிவிக்கையில், எங்களால் பள்ளிக்கூடத்துக்கு சந்தோசமா போய் வர ஏலாது. எங்களை சாதிப் பெயர் சொல்லி வெள்ளாம் அண்ணாமார் கூப்பிடுவினர். நாங்க முறைச்சுப் பார்த்தாக் கூட அடிக்க வருவினம். ரீச்சர், சேர் மார் கூட என்ன நடந்தாலும் எங்களைத் தான் பிழை சொல்லுவினம். எங்களுக்கு படிக்கவே விருப்பம் இருக்காது. இப்பிடி செய்தா யாருக்கு தான் படிக்க மனம் வரும். எங்கட இடத்தில ஓ.எல் வரைக்கும் படிக்குறதே பெரிசு” என்றார்.

அதே பாடசாலையைச் சேர்ந்த ஆசிரியை தேசம்நெற்க்கு கருத்து தெரிவிக்கையில், “பிள்ளைகள் எல்லோரையும் நாங்க சமமாகத் தான் பார்க்க வேண்டும். ஆனா எல்லா ஆசிரியரும் அப்படி நடத்தினமா என்டு எனக்கு தெரியல. உயர் சமூகப் பெண் பிள்ளைகளிடம் இவங்கள் கதைச்சா அதை யாரும் கண்டா பெரும் பிரச்சினை. இந்த வயசில காதல் அது இது என்டு நிறைய நடக்கும். அதை பக்குவமா யாரும் கையாளுறேல. சாதிய சொல்லி அடிக்கப் போடுவாங்கள். பள்ளிக்கூடத்தில ஒரு விளையாட்டுப் போட்டி ஒழுங்கா நடத்தி முடிக்குறது கூட பெரும்பாடு. பள்ளிக்கூட பிள்ளைகளால பிரச்சனை வருதோ இல்லையோ பார்க்க வாற பெடியள் ஏதாவது வம்மை வளர்ப்பாங்கள். உண்மேலயே இவங்க இப்பிடி சாதிய சொல்லி சொல்லி அவங்களை அவமானப்படுத்தினா அவங்களும் ஒரு அளவுக்கு மேல என்ன செய்வாங்கள்?” என்றார் கவலையோடு.

சாதிகள் இல்லையடி பாப்பா என்று சொல்லி வளர்க்க வேண்டிய பாடசாலைகளிலேயே சாதிய ஒடுக்குமுறை இவ்வளவு மோசமாக இருந்தால் இது தவறு என்ற எண்ணம் எங்கு தான் பிள்ளைகள் மனதில் விதைக்கப்படும்? இங்கு சுட்டிக்காட்டப்பட வேண்டிய என்னுமொரு விடயம் பாடசாலைகளில் ஆசிரியர்களாக பணிபுரிவோரில் பெரும்பான்மையானோர் யாழ்.பல்கலைக்கழக பட்டதாரிகள். அங்கு சாதியத்தை வளர்ப்பது எவ்வாறு என்று கற்று பாடசாலைகளில் கற்பிக்கின்றனர் என்றாலும் தவறிருக்காது. (முற்போக்காக சிந்திக்கின்ற விரல் விட்டு எண்ணக்கூடிய விரைவுயாளர்களுக்கும் மாணவர்களுக்கும் இது பொருந்தாது.)

அண்மையில் இடம்பெற்ற சம்பவம் கூட ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த இளைஞன் ஒருவன் குளை பிடுங்கினான் என்ற ஒரு காரணத்தை கூறியே இடம்பெற்றது. ஆனால் குறித்த இளைஞன் நான் எந்த குளையும் பிடுங்கவில்லை என்று தெளிவாக ஊடகங்களுக்கு பேட்டியளித்துள்ளான். அப்படியே அவன் குளை பிடுங்கியிருந்தால் கூட அதில் என்ன தவறு இருக்கின்றது? அதற்காக வாளெடுத்து வெட்ட போகிறார்கள் எனில் சாதி என்பது எந்தளவு தூரம் இவர்களை சுயபுத்தி அற்றவர்களாக மாற்றியுள்ளது என்று ஒரு கணம் சிந்தித்தால் தமிழ் சமூகம் எந்தளவு தூரம் மோசமான சாதி என்ற மனநோயால் பாதிக்கப்பட்டுள்ளது என்பதை நாம் உணரமுடியும்.

இதுமட்டுமல்ல வட்டுக்கோட்டையில் இந்த சாதி வெறியர்கள் ஆடும் ஆட்டம் ஒன்று இரண்டல்ல. குறிப்பாக சங்கரத்தைப் பத்திரகாளி அம்மன் கோவில் திருவிழாவுக்கு போய் அங்கு நடத்தும் கூத்துகளைப் பார்த்தாலே தெரியும். எந்தளவு சிந்தனை வளர்ச்சி குன்றிய கூட்டங்கள் என்னும் எமது சமூகத்தில் உலாவுகின்றன.

சிங்களவரிடம் சமஉரிமை கேட்டு பிரித்தானியாவில் கிளாஸ்கோவரை போர்க்கொடு தூக்கத் தெரிந்தவர்களுக்கு தங்கள் வீட்டு கோடிக்குள் தாங்கள் செய்கின்ற ஒடுக்குமுறை தெரிவதில்லை. எமது தமிழ்த் தேசியம் பேசும் கூட்டங்களுக்கு, மனித சமூகத்தை ஏற்கத் தெரியாத இப்படியொரு மந்தைக் கூட்டம் நம்மிலேயே இருப்பது கண்ணுக்கு தெரியாதா? ஏனெனில் அவர்களும் பெரும்பாலோனோர் இந்த மந்தைகளைச் சேர்ந்தவர்களே. ஏன் இப்போது நடந்த இந்த சம்பவத்தில் கூட பாதிக்கப்பட்ட மக்கள் சார்பில் எந்த தமிழ் எம்.பியும் அறிக்கை விடவில்லை. தமிழ்த் தேசியம் பேசும் எந்தவொரு சட்டத்தரணிக்கும் பாதிக்கப்பட்ட மக்கள் சார்பில் ஆரஜாக திராணியில்லை. ஏனெனில் வாக்கு வங்கி சரிந்துவிடும் என்ற பயம்.

ஈபிஆர்எல்எப், ஈபிடிபி, சமத்துவ கட்சி மற்றும் புதிய சனநாயக மார்க்ஸிய லெனினிய கட்சி ஆகிய அமைப்புகள் ஓரளவு இடதுசாரிக்கொள்கைகளுடன் சாதி மறுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன. அவர்கள் பாதிக்கப்பட்ட மக்கள் மத்தியில் வேலை செய்தபோதும் இக்கட்சிகள் இன்னமும் பிரதான நீரோட்டத்தில் இருந்து ஓரம்கட்டப்பட்ட நிலையிலேயே இன்றும் உள்ளனர். பிரித்தானியாவில் சட்டத்தரணியாகச் செயற்பட்ட ரங்கன் என் தேவராஜன் பாதிக்கப்பட்ட சமூகத்தை சென்று சந்தித்து சட்ட ஆலொசனைகளை வழங்கியும் உள்ளார்.

சாதிய பிரச்சனை பேசுபொருளாக மாறும் போதெல்லாம் ஒரு குழுவினம் இது தொடர்பில் கதைப்பதால் தான் பிரச்சனை கதைக்காவிட்டால் சாதிப் பிரிவினை காலப் போக்கில் இல்லாமல் போய்விடும் என்று ஒரு கதை சொல்வார்கள். அடக்குமுறைகளுக்கு எதிராக பேசுவோரையே குழப்பதாரிகளாக மாற்றி பூசி மெழுகிவிடுவார்கள்.

முதலியார் கோவிலடிப் பிரச்சினை தொடர்பில் அங்குள்ள சில படித்த தரப்பினரை தேசம்நெற் தொடர்பு கொண்டிருந்தது. அவர்களில் பெரும்பாலானோர் இப்பிரச்சினை தொடர்பில் பேச மறுத்துவிட்டனர். சாதிப் பிரிவினை தவறு என்று தெரிந்தாலும் அதை வெளிப்படையாகத் தெரிவித்தால் எங்கு தாமும் சமூகத்திலிருந்து புறந்தள்ளப்படுவோம் என்ற பயம் பெரும்பாலானோருக்கு உள்ளது. இந்த பயம் தான் சாதியம் என்னும் எமது சமூகத்தில் வேரூன்ற காரணமாக அமைகின்றது.

மேலும் வட்டுக்கோட்டையில் உயர் சமூகம் எனக் கூறிக்கொள்ளும் சமூகத்தைச் சேர்ந்த அரச ஊழியர் ஒருவரைத் தொடர்பு கொண்டோம். அவர் எமக்குப் பதிலளிக்கையில், உந்தப் பிரச்சனை பற்றிக் கதைச்சா எங்களையும் வெட்ட வருவாங்கள். இவங்கள் பெரிய ரவுடிகள். உள்ள கெட்ட பழக்கம் முழுக்க இருக்கு. வேலைக்கு போகாம வெளிநாட்டுக் காசில பெரிய பெரிய பைக்குகள் வாங்கி வாள்வெட்டு குரூப்போட சேர்ந்து திரிவாங்கள். இவங்களைப் பார்த்து சின்னப் பெடியங்களும் பழுதாப் போறாங்கள். இவங்களுக்கு சண்டை இழுக்க ஏதாவது வேணும். அதுக்கு தான் சாதிய சொல்லி அவனுகளோட வம்புக்கு போறாங்கள். இவனுகாளால ஊருக்க சமூகங்களுக்க பிரச்சினை. இவனுக மேல ஏகப்பட்ட பொலிஸ் கேஸ் இருக்கு. ஆனால் காசை கொடுத்து வெளில வந்துடுவாங்கள், பெரிய கேஸ் என்டா ஒழிஞ்சு திரிவானுகள். நிம்மதியா இருக்க ஏலாது. கோவில் திருவிழா கூட நிம்மதியா செய்ய ஏலாது. வேலை வெட்டியும் இல்லை. இவங்கள் கேசில பிடிபட்டாலும் சைக்கிள் வக்கீல் எடுக்க இருக்குறார். இதெல்லாம் நான் சொன்னன் என்டு தெரிஞ்சாலே என்னை வெட்ட வந்துடுவாங்கள்” என்றார் பீதியோடு.

இந்த சாதிய மனோநிலையிலிருந்து இன்னும் யாழ் சமூகம் விடுபடவில்லை என்பது துரதிஸ்டவசமானது. யாழ் பல்கலைக்கழத்தில் கூட ஒடுக்கப்பட்ட சமூகங்களைச் சேர்ந்தவர்கள் தகுதி இருந்த போதும் உயர்நிலைகளுக்கு வருவது மிகக் கடினமானது. பல்கலைக்கழகத்தின் முதலாண்டில் யார் எவர் என்று தெரியாமல் காதலில் சிக்குபவர்கள் கூட, இரண்டாம் ஆண்டில் யார் என்ன சாதி என்பது தெரிந்ததும் காதலை முடிவுக்கு கொண்டுவந்துவிடுவார்கள். பேராசிரியர் கா சிவத்தம்பி ஏன் யாழ் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக்கப்படவில்லை? அவரைக் காட்டிலும் பேரறிஞ்ஞரான ஒரு துணைவேந்தரையா யாழ் பல்கலைக்கழகம் அன்று தெரிவு செய்தது?

அன்று யாழ்ப்பாண நகர மேயராக இருந்த செல்லன் கந்தையனை கை நீட்டி அடிக்கலாம் என்று மாநகரசபை உறுப்பினர்களை அடிக்க வைத்தது என்ன? அன்று மேயர் செல்லன் கந்தையன் மாநகரசபை உறுப்பினர்களால் பிடிக்கப்பட்ட மாட்டை அவிழ்த்துவிட்டதற்காக இரு தமிழர் விடுதலைக் கூட்டணி மாடுகளால் (உறுப்பினர்களால்) தாக்கப்பட்டார். அவர்களில் ஒருவர் தான் இப்போது சங்கரி ஐயா எப்போது போவார் கதிரை எப்போது காலியாகும் என்று பார்த்துக்கொண்டிருக்கின்றார். அன்று மேயர் செல்லன் கந்தையனை மாட்டை அவிழ்த்து விட்டதைச் சொல்லி அடித்தனர். இன்று குளை வெட்டியதாகச் சொல்லி ஒரு அப்பாவி இளைஞனை அடித்து அவனின் தந்தையின் விரலைத் துண்டித்துள்ளனர்.

அப்போதைய மேயர் செல்லன் கந்தையன் யாழ் பொதுநூலகத்தை திறந்துவைக்கக் கூடாது என்பதில் வாக்கு வங்கியே அற்ற தமிழர் விடுதலைக் கூட்டணி மிக உறுதியாக இருந்தது. தமிழீழ விடுதலைப் புலிகள் அரசியல் காரணத்திற்காக யாழ் நூலகம் திறப்பதை தடுத்ததைஇ தமிழீழ விடுதலைப் புலிகளின் சாதி அரசியல் என்று இன்றும் சில மாற்றுக் கருத்துச் சாதியமான்கள் வாதிட்டு தங்கள் சாதிய சிந்தனைக்கு வெள்ளையடிக்கின்றனர்.

இப்போது யாழ்ப்பாணத்தின் சமூகப் பரம்பல் முற்றிலுமாக மாறியுள்ளது. முன்னர் ஒடுக்கும் சமூகம் 60 வீதமாகவும் ஒடுக்கப்படும் சமூகம் 40 வீதமாகவும் இருந்த நிலைமாறி ஒடுக்கும் சமூகம் பெரும்பாலும் புலம்பெயர்ந்து வெளிநாடு செல்ல அவர்களின் சனத்தொகை 40 வீதமாக வீழ்ச்சி கண்டுள்ளது. அதனால் ஒடுக்கப்படும் சமூகத்தின் சனத்தொகை 60 வீததத்தை எட்டியுள்ளது. இதே நிலையை வன்னியிலும் ஒடுக்குகின்ற தமிழர்களின் எண்ணிக்கை 40 வீதமாகவும் ஒடுக்கப்படுகின்ற மலையகத் தமிழர்களின் எண்ணிக்கை 60 வீதமாகவும் இருப்பதைக் காணலாம். ஆனால் வடமாகாண அரசியலில் இந்த சனத்தொகையை பிரதிபலிக்கும் விதத்தில் அரசியல் பிரதிநிதிகள் இல்லை. அரசியல், பொருளாதார, கல்வி, கலாச்சார விடயங்கள் அனைத்திலுமே ஒடுக்குகின்ற சமூகமே தொடர்ந்தும் கோலோச்சி வருகின்றது. வட்டுக்கோடை மட்டுமல்ல ஒட்டுமொத்த வடமாகாணமே ஒடுக்குபவர்களின் கோட்டையாகவே இன்னும் இருந்துவருகிறது.