ஹர்ஷ டி சில்வா

ஹர்ஷ டி சில்வா

இணையவழி பாதுகாப்பு சட்டமூலத்தின் பொருளாதார விளைவுகளை அரசாங்கம் பரிசீலிக்க வேண்டும் – ஹர்ஷ டி சில்வா

சமூக ஊடகங்களை ஒழுங்குபடுத்த வேண்டிய தேவையிருப்பினும் இணையவழி பாதுகாப்பு சட்டமூலத்தின் பொருளாதார விளைவுகளை அரசாங்கம் பரிசீலிக்க வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.

“இ-வணிகம் ஏற்படுத்தும் விளைவுகளை ஒருவர் கவனிக்க வேண்டும். நமது இளைஞர்களை இ-வணிகம் மூலம் பொருளாதாரத்தில் பங்கு கொள்ளச் செய்ய வேண்டும். இது போன்ற சட்டங்கள் இந்த வாய்ப்புகளை தடுக்கும்,” என்றார்.

“மற்றொருவர் சமூக ஊடகங்களில் தேவையற்ற இடுகையைப் பதிவேற்றுவதால், பேஸ்புக் மற்றும் யூ டியூப் போன்ற சேவை வழங்குநர்களை குற்றவாளிகளாக நீங்கள் கருத முடியாது,” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

வரி அதிகரிப்பினால் உற்பத்தியாளர்கள் மற்றும் நுகர்வோர் ஆகிய இருபாலரும் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது – ஹர்ஷ டி சில்வா

வரவு செலவுத் திட்டத்தின் மூலம் வரி அதிகரிப்பினால் உற்பத்தியாளர்கள் மற்றும் நுகர்வோர் ஆகிய இருபாலரும் பாதிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் வரவு செலவுத் திட்டம் நிறைவேற்றப்பட்டதால் தாங்கள் வெற்றி பெற்றோம் என்ற எண்ணத்தில் அரசாங்கம் இருந்தால் அது தவறு என அவர் வலியுறுத்தினார்.

முன்னைய தலைவர்கள் வரிகளை குறைப்பதற்கு மோசமான தீர்மானத்தை எடுத்ததன் காரணமாகவே இன்று இலங்கை இவ்வாறானதொரு நிலையை அனுபவித்து வருவதாக தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர், அவ்வாறு செய்வது நடைமுறைச் சாத்தியமற்றது எனவும் தெரிவித்துள்ளார்.

 

“உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்பு இலங்கையின் பணக்காரர்களையன்றி ஏழை மக்களையே பாதிக்கிறது.” – ஹர்ஷ டி சில்வா

உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்பு என்பது சாதாரண உழைக்கும் மக்களை மாத்திரமல்ல பணக்காரர்களையும் பாதிக்கும் வகையில் மேற்கொள்ளப்பட வேண்டுமென அரசாங்க நிதி தொடர்பான குழுவின் தலைவர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் அவ்வாறு செய்யாத காரணத்தினால் எதிர்க்கட்சிகள் இந்த பிரேரணையை எதிர்த்ததாக பாராளுமன்ற உறுப்பினர் சுட்டிக்காட்டியுள்ளார்.

“பொதுவாக இந்த வருங்கால வைப்பு நிதி என்பது உழைக்கும் மக்கள் ஓய்வு பெற்ற பிறகு எதிர்காலத்தில் செலவழிக்க வேண்டிய ஒரே நிதியாகும். இந்த நிதி என்ன ஆனது என்பதை நான் தொடர்ந்து காண்பித்தேன். எடுத்துக்காட்டாக, 2022 ஆம் ஆண்டில் இந்த நிதியின் உறுதியான வருவாய், உண்மையானது. அவர்களின் சேமிப்பின் மீதான வருமானம் -47.

 

உதாரணத்திற்கு, நம் மகளுக்கு திருமணம் செய்து வைக்க 100 பேரை அழைக்க நினைத்தால், இந்த வருங்கால வைப்பு நிதியில் இருந்து திருமணத்திற்கு கொஞ்சம் பணம் செலவழிக்கலாம் என நினைத்தால், இப்போது 100 பேருக்கு பதிலாக 50 பேரையே அழைக்கலாம்.

 

அது உண்மை. உள்ளூர் கடன் மறுசீரமைப்பு சுமையும் அதே நிதியில் வைக்கப்பட்டுள்ளது. அங்குதான் நியாயம் பற்றிய கேள்வி எழுந்தது. இதை ஒட்டுமொத்தமாக அனைவரிடமும் பகிர்ந்து கொண்டால், ஏதோ ஒரு வகையில் நியாயப்படுத்தலாம். இது உழைக்கும் மக்களுக்கு மட்டுமல்ல, பணக்காரர்கள் மற்றும் வங்கி உரிமையாளர்களுக்கும் பொருந்தும்.

இதன் முழு சுமையும் வருங்கால வைப்பு நிதி மற்றும் ETF நிதியின் மீது சுமத்தப்பட்டதால் எதிர்க்கட்சியாகிய நாங்கள் அதை கடுமையாக எதிர்த்தோம்…”

“உள்நாட்டு கடனை இரத்து செய்யாமல் மறுசீரமைப்பு சாத்தியமில்லை.” – ஹர்ஷ டி சில்வா

உள்நாட்டு கடனை இரத்து செய்யாமல், எவ்வாறு இந்த மறுசீரமைப்புச் செயற்பாட்டை மேற்கொள்ள முடியும் என்பதே தமது நிலைப்பாடாக இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா குறிப்பிட்டுள்ளார்.

உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்பு தொடர்பாக அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கு விளக்கமளிக்கும் விசேட அமர்வு ஒன்று, மத்திய வங்கியின் ஆளுநரினால் நடத்தப்பட்டது.

இதில் கலந்து கொண்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா மேற்படி தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

“மத்திய வங்கியின் ஆளுநர், உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு தொடர்பான தெளிவுப்படுத்தல் ஒன்றை வழங்கியிருந்தார்.

ஜனாதிபதி, எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்டவர்களும் இதில் கலந்து கொண்டிருந்தார்கள்.

உள்நாட்டு கடனை இரத்து செய்யாமல், எவ்வாறு இந்த செயற்பாட்டை மேற்கொள்ள முடியும் என்பதே எமது நிலைப்பாடாக இருக்கிறது.

அரசாங்கமும், உள்நாட்டுக் கடனை இரத்து செய்யப் போவதில்லை என்று தெரிவித்துள்ளது.

இதனால், வங்கிக் கட்டமைப்பிற்கு ஏதேனும் பாதிப்பு ஏற்படுமா? அல்லது சேமித்த பணத்திற்கு ஏதேனும் பாதிப்பு ஏற்படுமா என்ற அச்சம் சமூகத்தில் நிலவி வருகிறது.

அத்தோடு, ஊழியர் சேமலாப நிதியத்திற்கும் பாதிப்பு ஏற்படும் என்ற கருத்து நிலவி வருகிறது.

ஆனால், மத்திய வங்கியின் ஆளுநரோ இவை எதற்கும் பாதிப்பு ஏற்படாது என்று தெரிவித்துள்ளார்.

சனிக்கிழமை இதுதொடர்பாக நாடாளுமன்றில் விவாதம் நடைபெறவுள்ளது” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

நிபந்தனைகளை பூர்த்தி செய்யப்படாவிட்டால் கடன் மறுசீரமைப்பு திட்டத்திற்கு ஆதரவில்லை – ஹர்ஷ டி சில்வா

சில நிபந்தனைகளை பூர்த்தி செய்யப்படாவிட்டால், ஜூலை முதலாம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு திட்டத்திற்கு பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி ஆதரவளிக்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசாங்கம் கடன் குறைப்பு நடவடிக்கைக்கு சென்றால், உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு திட்டத்தை தமது கட்சி ஆதரிக்காது என்றும் வைப்பாளர்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.

அதேநேரம், உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்புத் திட்டத்தை ஜூன் 28-ஆம் திகதி அமைச்சரவையில் சமர்ப்பித்து, ஜூன் 29-ஆம் திகதி பொது நிதிக் குழுவுக்குப் பரிந்துரைத்து, சனிக்கிழமையன்று பாராளுமன்றத்தில் ஒப்புதல் பெறுவதற்கான திட்டங்களை எதிர்க்கட்சிகள் கேட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற நிலத்தில் கஞ்சாவை பயிரிடுங்கள் – டயானாவுக்கு ஹர்ஷ டி சில்வா பதில் !

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள வெற்று நிலத்தில் மாதிரி கஞ்சா பயிர்ச்செய்கையை மேற்கொள்ளுமாறு தெரிவித்துள்ளார்.

சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சரின் அறிக்கைக்கு பதிலளிக்கும் வகையில் இது அமைந்துள்ளது.

இலங்கையில் கஞ்சா பயிரிடுவது சட்டவிரோதமானது அல்ல எனவும், கஞ்சா ஏற்றுமதி மூலம் பாரிய அளவிலான அந்நிய செலாவணியை ஈட்டமுடியும் எனவும் சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் திருமதி டயானா கமகே தெரிவித்தார்.

கஞ்சா ஏற்றுமதி மூலம் டொலர்களை சம்பாதிப்பதை தாம் ஏற்றுக்கொள்ளவில்லை எனவும் கஞ்சாவை விற்பனை செய்து அபிவிருத்தியடைந்த நாடுகள் உலகில் இல்லை எனவும் ஹர்ஷ டி சில்வா இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

அரச நிறுவனங்களை தனியார் மயமாக்குமாறு IMF கோரிக்கை..? – ஹர்ஷ டி சில்வா விளக்கம் !

இலங்கையில் உள்ள 40 அரச நிறுவனங்களை தனியார் மயமாக்குமாறு சர்வதேச நாணய நிதியம் கோரியுள்ளதாக வெளியான செய்திகளில் உண்மையில்லை என எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.

40 அரச நிறுவனங்களை தனியார் மயமாக்குமாறு சர்வதேச நாணய நிதியம் கோரியுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்த கருத்து ஊடகங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் நிதி நிபந்தனையை அரசாங்கம் பாராளுமன்றத்தில் பிரேரணையாக முன்வைக்கும் போது அந்த பிரேரணைக்கு எதிர்க்கட்சி ஆதரவளிக்கும் எனவும் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல கூறியிருந்தார்.

எவ்வாறாயினும் சர்வதேச நாணய நிதியமோ அல்லது வேறு எந்தத் தரப்பினரோ இலங்கை அரசாங்கத்திற்கு அவ்வாறான நிபந்தனையை விதிக்கவில்லை என ஹர்ஷ டி சில்வா டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும், நாட்டின் நிதி நெருக்கடிக்கு மத்தியில் அரசாங்கத்திற்கு சொந்தமான நிறுவனங்களின் சீர்திருத்தம் மிகவும் முக்கியமானது என அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஹர்ஷ டி சில்வாவிடம் நான் அப்படி கூறவுயில்லை – மாலைத்தீவின் முன்னாள் ஜனாதிபதி நிராகரிப்பு ! !

தன்னை மேற்கோள் காட்டி பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்த கூற்றை மாலைத்தீவின் முன்னாள் ஜனாதிபதியும், சபாநாயகருமான மொஹமட் நஷீட் நிராகரித்துள்ளார்.

சவூதி அரேபிய  இளவரசர் மொஹமட் பின் சல்மானை அணுகி இலங்கைக்கு உதவுமாறு தான் கோரியதாக மாலைத்தீவின் முன்னாள் ஜனாதிபதியும் தற்போதைய சபாநாயகருமான மொஹமட் நஷீத் தன்னிடம் கூறினார் என்று ஹர்ஷ டி சில்வா குறித்த ஊடக சந்திப்பில் கூறினார். அத்துடன், இலங்கையிடம் சரியான திட்டங்கள் இல்லை என்று குறித்த கோரிக்கையை நிராகரிப்பதாக சவூதி அரேபிய இளவரசர் சபாநாயகர் நஷீடிடம் கூறியதாக ஹர்ஷ டி சில்வா மேலும் தெரிவித்தார்.

மேலும், ஐக்கிய அரபு இராச்சிய ஜனாதிபதியிடம் நஷீட் பேசியதாகவும், இலங்கை விற்க தயாராக உள்ள சொத்துக்களின் பட்டியலை குறித்த ஜனாதிபதி கேட்டதாகவும் ஹர்ஷ டி சில்வா கூறினார். இந்த நிலையில், இலங்கைக்கு உதவுவதற்கு வெளிநாடுகள் தயாராக இல்லை என பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா, தன்னை மேற்கோள் காட்டி தெரிவித்த கூற்றுக்கு பதிலளித்த சபாநாயகர் மொஹமட் நஷீட், பல நாடுகள் இலங்கைக்கு உதவ தயாராக இருப்பதாக தான் நம்புவதாகவும், மேலும் உதவிகள் கிடைக்கப்பெறும் என்றும் தெரிவித்துள்ளார்.

எங்களுக்கு பின்வந்த வியட்னாம், பங்களாதேஷ் கூட உலகத்துடன் இணைந்து விட்டன. ஆனால் நாம் ..? – ஹர்ஷ டி சில்வா விசனம் !

சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து கடனைப் பெறுவது எளிதான விடயம் அல்ல”  என நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கருத்துரைக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். அங்கு மேலும் பேசிய அவர்,

கலந்துரையாடல் மேற்கொள்வதற்கு நாளை அல்லது நாளை மறுதினம் சர்வதேச நாணய நிதிய அதிகாரிகள் இலங்கை வருகின்றார்கள். ஆனால் ஊழியர்கள் நிலை ஒப்பந்தம் கையெழுத்தாக இன்னும் ஒன்றரை மாதங்கள் ஆகும்.

கடன் பெறுவதென்றால் சர்வதேச நாணய சபை அனுமதி வழங்க வேண்டும். அதைச் செய்ய நிறைய வேலைகள் செய்ய வேண்டியுள்ளது. நிதி நிர்வாகத்தை மாற்ற வேண்டும். அரசின் வருவாயை அதிகரிக்க வேண்டும். செலவைக் குறைக்க வேண்டும். மானியங்கள் பற்றி சிந்திக்க வேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாக, கடன் மறுசீரமைப்பைப் பற்றி நாம் சிந்திக்க வேண்டும். அது எளிதானது அல்ல.

முன்னைய அரச தலைவர்களின் நடவடிக்கைகள் காரணமாகவும் நாங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளோம். அவர்கள் தவறான முடிவுகளை எடுத்தார்கள் அதுவே தற்போது நாடு எதிர்கொண்டுள்ள நெருக்கடிகளிற்கு காரணம்.

எங்களுக்குப் பின் வந்த பங்களாதேஷ், வியட்நாம் போன்ற நாடுகள் உலகத்துடன் இணைந்து ஏற்றுமதி செய்து முன்னேறிய போது நாம் என்ன செய்தோம் ?

மத்திய கிழக்கு நாடுகள் கூட இலங்கைக்கு உதவ தயாரில்லை. தற்போதைய சூழ்நிலையில் கூட சவுதிஅரேபியாவும் ஐக்கிய அரபு இராச்சியமும் இலங்கைக்கு உதவிவழங்க தயாரில்லை.

நாம் நம் நாட்டைச் சுற்றிச் சுவர்களைக் கட்டினோம், வரிகளை நிறைய உயர்த்தினோம், உலகில் சேர வேண்டிய சில வாய்ப்புகளை இழந்து உலகை விட்டு வெளியேறினோம். அனைத்து நாடுகளுடனும் மோதிக் கொண்டிருக்கின்றோம்.

சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து கடன் பெற இந்த ஆண்டு இறுதி வரை காத்திருக்க வேண்டும்.அதற்கு முன் பணம் பெற முடியாது.

கடன் குறித்த பேச்சுவார்த்தை முடிந்ததும் ஊழியர்கள் நிலை ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவார்கள். அநேகமாக அதற்கு இன்னும் ஒரு மாதம் ஆகலாம்.

ஆனால் அந்த ஒப்பந்தத்தில் இருந்து பணம் பெற முடியாது. பணத்தைப் பெறுவதற்கு, சர்வதேச நாணய நிதியத்தின் ஒப்புதல் தேவை. அதைச் செய்ய நிறைய வேலைகள் தேவைப்படும்.

அதாவது நிதி நிர்வாகத்தில் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும். எளிமையாகச் சொன்னால், அரசின் வருவாயை அதிகரிக்க வேண்டும். செலவைக் குறைக்க வேண்டும். மானியங்கள் பற்றி சிந்திக்க வேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாக, அந்தக் கடன்களை மறுசீரமைக்கும் ஒரு நேர்மறையான திட்டத்திற்கு நாம் செல்ல வேண்டும். அது எளிதானது அல்ல” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

‘மிகவும் பாதிக்கப்படக்கூடிய சமூகங்களை கண்டறிந்து அவர்களின் சமூகப் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.” – ஹர்ஷ டி சில்வா

“வறுமையின் அபாயத்தைக் குறைக்க, மிகவும் பாதிக்கப்படக்கூடிய சமூகங்களை அரசாங்கம் கண்டறிந்து அவர்களுக்கு சமூகப் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.” என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.

இன்று (30) ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.  அங்குமேலும் பேசிய அவர்,

“சொந்தமாகத் தொழில் செய்யும் ஒருவருக்கு, வாழ்க்கைச் செலவு அதிகரிக்கும்போது, ​​அவர்கள் விற்கும் பொருட்களின் விலையை அதிகரிக்கலாம். அவர்கள் பணவீக்கத்துக்கு ஏற்ப நிர்வகிக்கிறார்கள். அதேசமயம், நிலையான சம்பளம் பெறுபவர்கள்தான் இந்த நெருக்கடியின் போது பொருளாதார ரீதியாக பாதிக்கப்படும் அபாயத்தில் உள்ளனர்.

பொருட்களின் விலை உயர்வால், நிலையான சம்பளம் பெறும் தனி நபர்களுக்கு அவர்களின் ஊதியத்தில் உயர்வு இல்லை. அதனால் அவர்கள் மிகவும் பாதிக்கப்படுகிறார்கள். அரசுத் துறையிலும் நல்ல ஊதியம் பெறும் ஊழியர்களும், நல்ல ஊதியம் பெறாத சிலரும் உள்ளனர். எனவே இரு தரப்பினரையும் ஒரே மாதிரியாக நடத்துவது நியாயமற்றது. இது குறித்து ஆராயப்பட வேண்டும், இரு தரப்பினருக்கும் ஒரே மாதிரியான சமூகப் பாதுகாப்பை வழங்க முடியாது.

 

வறுமையின் அபாயத்தைக் குறைக்க, மிகவும் பாதிக்கப்படக்கூடிய சமூகங்களை அரசாங்கம் கண்டறிந்து அவர்களுக்கு சமூகப் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.

தனியார் துறையில் இருந்தாலும், அத்தகைய நபர்களை அரசு கண்டறிந்து அவர்களுக்கு உதவ வேண்டும். ஜனாதிபதி, கோத்தபாய ராஜபக்ஷ மற்றும் அவரது குழுவினரே நாட்டை இந்த நிலைக்குக் கொண்டு வந்துள்ளனர், அவர்களே இப்போது பொறுப்பேற்று சரியானதைச் செய்ய வேண்டும். இந்த அரசாங்கம் தனது தேசத்தின் மக்களை தோல்வியடையச் செய்துள்ளது என்பதை முழு உலகமும் இப்போது உணர்ந்துள்ளது.

 

இலங்கையின் பொருளாதாரத்தின் வீழ்ச்சிக்கு பொருளாதாரத் தலைவர்களின் அலட்சியமே காரணம் எனவும் சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் குறிப்பிட்டுள்ளார். எனவே, கோத்தபாய ராஜபக்ஷ தவறு செய்திருந்தால், அப்பாவி மக்கள் குற்றம் சாட்டப்பட வேண்டியதில்லை, தண்டிக்கப்பட வேண்டியதில்லை.

கடந்த 2 ஆண்டுகளில் அரசாங்கம் 1.5 டிரில்லியன் ரூபாவுக்கு மேல் அச்சிடப்பட்டுள்ளது.  பணத்தை அச்சடிப்பதன் மூலம் பொருளாதாரம் தொடர்ந்து வீழ்ச்சியடையும்.

பணத்தை அச்சடிப்பதன் மூலம் ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைகிறது, இதனால் வாழ்க்கைச் செலவு உயரும் என்பதை நாங்கள் முன்னறிவித்துள்ளோம். ஆனால், இதனால் குடிமக்கள் பாதிக்கப்பட முடியாது என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். எனவே அரசாங்கம் மற்ற வரவு செலவுத் திட்டங்களில் குறைக்கும் வழிகளை ஆராய வேண்டும் மற்றும் அதற்குப் பதிலாக குடிமக்களுக்கு நிவாரணம் வழங்க நிதியைப் பயன்படுத்த வேண்டும். தேவையற்ற வீதிகள் மற்றும் கூடுதல் செலவினங்களை உருவாக்குவது நிறுத்தி வைக்கப்பட வேண்டும். அதற்குப் பதிலாக அந்த நிதி நாட்டுக்கு தேவையானவற்றை வழங்குவதற்கு ஒதுக்கப்பட வேண்டும்” என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.