13வது திருத்தச்சட்டம்

13வது திருத்தச்சட்டம்

“21ம் திருத்தத்துக்கு 13ஆம் திருத்தத்துடன் எவ்வித சம்பந்தமும் கிடையாது.”- எம்.ஏ.சுமந்திரன் விசனம் !

21 ஆம் திருத்தம், ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரத்தை குறைக்கின்ற ஒரு சட்டமூலம் என மக்கள் மத்தியில் பிரசாரம் செய்தாலும்கூட, உண்மையிலேயே 19ஆம் திருத்தத்தில் இருந்ததைக்கூட அதிலே அடைய முடியாத சூழ்நிலை இருப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

திருகோணமலையில் நேற்று ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட அவர், 19ஆம் திருத்தத்தில், ஜனாதிபதிக்கு அமைச்சுப் பதவிகளை வகிக்க முடியாது என்பதை சுட்டிக்காட்டினார்.

இந்த நிலையில், தற்போது நீதியமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷவினால் முன்வைக்கப்பட்டுள்ள 21ஆம் திருத்த வரைவில், ஜனாதிபதி எத்தனை அமைச்சுகளையும் தம்கீழ் வைத்திருக்க முடியும் என்று குறிப்பிடப்பட்டுள்ளதாக, ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

அதேநேரம், அதிலே 13ஆம் திருத்தத்துடன் எவ்வித சம்பந்தமும் கிடையாது என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கூறியுள்ளார்.

“13 வது திருத்தச்சட்டத்தை நாம் ஆதரித்த போதே எல்லோரும் ஆதரித்திருந்தால் இத்தனை அழிவுகள் இங்கு நடந்திருக்காது.” – அமைச்சர் டக்ளஸ்

“13 வது திருத்தச்சட்டம் நல்லதொரு ஆரம்பம், இதை நாம் ஆரம்பத்தில் இருந்தே வலியுறுத்தி வந்த போது எமக்கு பக்க பலமாக சகலரும் இருந்திருந்தால் இத்தனை அழிவுகள் இங்கு நடந்திருக்காது.” என  அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் வெளியீட்டுப் பணியகத்தின் கிளை காரியாலயத்தினை யாழ் மாவட்ட செயலகத்தில் அங்குரார்ப்பணம் செய்து வைக்கும் நிகழ்வினை தொடர்ந்து இடம்பெற்ற ஊடகவியலாளர்களுடான சந்திப்பின் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தொடர்ந்தும் உரையாற்றிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா,

“கரை காண விரும்பும் கப்பலுக்கு ஒளி காட்டும் கலங்கரை விளக்காக ஊடகங்கள் திகழ வேண்டும். நிமிர்ந்தெழ விரும்பும் மக்களுக்கு அறிவூட்டும் கல்வியாக ஊடகங்கள் இருக்க வேண்டும். அரசியல் தலைமைகளின் கருத்துக்களை மக்களிடம் எடுத்து செல்வது போல், மக்களின் ஆழ்மன விருப்பங்களையும் கண்டறிந்து அரசியல் தலைமைகளிடம் சொல்ல வேண்டும்.

 

எங்கெல்லாம் மக்கள் சகல உரிமைகளும் பெற்று வாழ்கின்றார்களோ, அங்கெல்லாம் ஊடகங்களும் மக்களை வழி நடத்தி சென்றிருக்கின்றன. போரியலின் பக்கம் கவனம் செலுத்திய ஊடகங்கள் போரியலில் வதை பட்ட மக்களின் வாழ்வியலின் மீதும் அதிக கவனம் செலுத்தியிருக்க வேண்டும். துப்பாக்கி முனைகளை விடவும் பேனா முனைகளே வலிமையானவை,.. ஆகவே ஊடகவியலாளர்களே வலிமை மிக்க போராளிகள், அழிவாயுதங்களை ஏந்திய காலங்கள் முடிந்து விட்டன, இன்று நீங்கள் அறிவாயுதங்களை ஏந்த வேண்டும். ஊடகமும் அறிவாயுதங்களில் ஒன்று.

 

தமிழ் மக்களின் உரிமையை நோக்கிய பயணத்தில் 13 வது திருத்தச்சட்டம் நல்லதொரு ஆரம்பம், இதை நாம் ஆரம்பத்தில் இருந்தே வலியுறுத்தி வந்த போது எமக்கு பக்க பலமாக சகலரும் இருந்திருந்தால் இத்தனை அழிவுகள் இங்கு நடந்திருக்காது. காலம் கடந்தாவது இன்று எமது யதார்த்த வழிமுறைக்கு பலரும் வந்திருப்பதை நான் வரவேற்கின்றேன். ஆனாலும், இன்று அதனை ஆதரிக்கின்றவர்களும் எதிர்க்கின்றவர்களும் உண்மையை மறைத்து பொய்யான அரசியல் நலன்களுக்காகவே அதனை செய்கின்றனர்.

 

அது எமது மக்களுக்கு விமோசத்தினை தரப்போவதில்லை. இனி நாம் என்ன செய்ய வேண்டும்? எங்கிருந்து தொடங்க வேண்டும்? இவைகள் குறித்த ஆழ்மன உணர்வுகளும் உறுதியும் சகலருக்கு இருக்க வேண்டும். அடுத்து வரும் சந்ததிக்கு நாம் எதை விட்டு செல்லப்போகின்றோம்? எதை உருவாக்கி கொடுக்க போகிறோம்? இவைகள் குறித்த தொலை தூர பார்வையும் சமூக அக்கறையும் ஊடகங்களுக்கும் இருக்க வேண்டும். தமிழ் மக்கள் மத்தியில் அரசியல் சமூக பொருளாதார மாற்றங்களையே நாம் விரும்புகின்றோம். அதை நோக்கியே உழைத்து வருகின்றோம்” என்று தெரிவித்தார்.

“தமிழ் பேசும் மக்களின் சார்பாக தலையிடுவதற்கு இந்தியாவுக்கு சட்டரீதியான உரிமை உண்டு.” – சி.வி. விக்கினேஸ்வரன்

“வடக்கு, கிழக்கில் தமிழ் பேசும் மக்களின் சார்பாக தலையிடுவதற்கு இந்தியாவுக்கு சட்டரீதியான உரிமையும் தார்மீகக் கடப்பாடும் உள்ளது.” வடமாகாண முன்னாள் முதலமைச்சரும் யாழ் மாவட்ட எம். பி யுமான சி.வி. விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார் .

ஏழு தமிழ் கட்சிகளின் கடிதம் ஸ்ரீ மோடிக்கு அனுப்பப்பட்டதற்கும் உத்தேச புதிய அரசியலமைப்புக்கும் ஏதாவது தொடர்பு உள்ளதாவென அவரிடம் எழுப்பப்பட்டிருந்த கேள்வியொன்றுக்கு பதிலளிக்கையில் இதனை தெரிவித்திருக்கும் அவர், இது தொடர்பில்  மேலும் கூறியிருப்பதாவது,

அநேகமாக ஆம். வடக்கு மற்றும் கிழக்கில் தமிழ் பேசும் மக்கள்தொடர்பாக புதிய அரசியலமைப்பில் பயனுள்ள மாற்றங்களை நாங்கள் எதிர்பார்க்கவில்லை. 1972 மற்றும் 1978 இன்இரண்டு முன்னைய அரசியலமைப்புகள் மீதான விவாதத்தை தமிழ் பாராளு மன்ற உறுப்பினர்களால் உத்தியோகபூர்வமாக எதிர்க்கவும் புறக்கணிக்கவும் மட்டுமே முடிந்தது. வடக்கு ,கிழக்கு தமிழ் பேசும் மக்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்காத அரசியலமைப்பை பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படுவதிலிருந்து தடுக்கக்கூடியதாக எதுவும் சாத்தியமற்றதாகவிருந்தது.

இம்முறையும் சிங்கள பெரும்பான்மை அரசாங்கம் வடக்கு, கிழக்கில் உள்ள தமிழ் பேசும் மக்களின் உள்ளக சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்காமல் அவர்களின் நலன்களுக்கு விரோதமான அரசியலமைப்பை கொண்டுவரும். 1978 ஒற்றையாட்சிஅரசியலமைப்பு இன்று தமிழ் பேசும் மக்களுக்கு வழங்கும் ஒரேயொரு வலுக் குறைந்த நன்மை பதின்மூன்றாவது திருத்தமாகும்.

1987 ஆம் ஆண்டு மாகாண சபை முறையை அறிமுகப்படுத்தி வடக்கு, கிழக்கில் உள்ள தமிழ் பேசும் மக்களுக்கு அரசியல் நன்மைகளை வழங்குவதற்கு இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையில் கலந்துரையாடல்கள் இடம்பெற்ற போதிலும், அதனை அமுல்படுத்தும் போது ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்த்தனா நாடளாவிய ரீதியில் மாகாணசபை முறைமையை பிரயோகிப்பதை தேர்ந்தெடுத்தார். இப்போது அவர்கள் மாகாண சபைகளை வெள்ளை யானை என்று குறிப்பிடுகிறார்கள். சிங்களவர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் அவ்வாறு இருக்ககூடும்.

ஆனால் இலங்கை பூராகவும் உள்ள வடக்கு, கிழக்கு தமிழர்கள், முஸ்லிம்கள் மற்றும் மலையகத் தமிழர்களின் பார்வையில் அவர்களின் தனித்துவத்தை பிரதிபலிக்கும் வகையில் மாகாணசபை மட்டுமே உறுதியான சட்டரீதியான நிறுவனமாக உள்ளது.

வடக்கு – கிழக்கு தமிழர்களின் பார்வையில் மாகாணசபை முறைமை எடுத்துவிட்டால் இந்த நாட்டில் நாம் மற்றொரு சிறுபான்மை இனமாக மாறிவிடுவோம். உண்மையில் வடக்கு, கிழக்கில் தமிழ் பேசும் மக்களே பெரும்பான்மையாக உள்ளனர். ஏழு மாகாணங்களிலுமுள்ள பெரும்பான்மையினர் இரண்டு மாகாணங்களிலுமுள்ள பெரும்பான்மையினரை முழு தீவு முழுவதும் சிறுபான்மையினராக மாற்ற முடிந்தது.

தமிழர்கள் 3000 ஆண்டுகளுக்கும் மேலான நீண்ட வரலாற்றைக் கொண்டுள்ளனர். ஒரு பழமையான மொழியைப் பேசுகிறார்கள், தீர்க்கமான தாயகங்களைக் கொண்டுள்ளனர், பெரும்பான்மையான சிங்களவர்களிடமிருந்து வேறுபட்ட மதங்களையும் கலாசாரங்களையும் பின்பற்றுகிறார்கள். சர்வதேச உடன்படிக்கைகளின் அடிப்படையில் தமிழர்களுக்கு சுயநிர்ணய உரிமை உண்டு. வடக்கு, கிழக்கு தமிழ் பேசும் மக்களுக்கு முழுமையான அதிகாரப்பகிர்வை வழங்காமல், ஒற்றையாட்சி அரசியலமைப்பிலிருந்து பதின்மூன்றாவது திருத்தத்தை நீக்கினால், எங்களுடையது என்று அழைக்கக்கூடிய எந்த வொரு உறுதியான சட்டரீதியான நிறுவனமும் இல்லாமல் நாங்கள்நிராதரவாகிவிடுவோம் .

நாங்கள் அறிமுகப்படுத்த முயற்சித்திருந்த பிரயோசனமான பொருளாதாரத் திட்டங்களை அரசாங்கம் அதனது தரப்பில் தடுத்து ஊறுவிளைவித்தபோதும் வடமாகாண முதலமைச்சர் என்ற ரீதியில் வடக்கில் மாசுபடுத்தும் திட்டங்களை அறிமுகப்படுத்துவதற்கு விரும்பத்தகாத சக்திகள் மேற்கொண்ட முயற்சிகளை என்னால் தடுக்க முடிந்தது.

வடக்கு, கிழக்கு மக்களைப் பொறுத்த வரையில் மாகாணசபை வலுக்குறைந்ததாகவும் வினைத்திறனற்றதாகவும் இருந்த போதிலும், ஏனைய இடங்களில் பெரும்பான்மை சிங்களம் பேசும் இடங்கள் என்பதற்கு மாறாக தமிழ் பேசுபவர்கள் என்ற சட்டரீதியான அங்கீகாரத்தை வடக்கு கிழக்கு மக்களுக்குஇப்போதும் வழங்குகின்றது. மாகாணசபையை அகற்றினால் வடக்கு, கிழக்கில் தமிழ் பேசும் மக்களை இலகுவில் சிறுபான்மையினராக முழு நாட்டிலும் கட்டுப்படுத்த முடியும். ஒரு நாடு ஒரே சட்டம் என்ற கருத்தீடானது புதிய அரசியலமைப்பில் மாகாண சபைகளை கைவிடுவதை கற்பனைசெய்து பார்க்கக்கூடியதொரு முன்னோடியாக இருக்கின்றது.

மாகாண சபை முறைமையை நீக்குவதை புதிய அரசியலமைப்பு வரைபின் உள்ளடக்கம்கொண்டிருக்கின்றது என்று சிங்கள பத்திரிகையில் வெளிவந்திருந்ததை அமைச்சர்கள் இப்போது மறுத்து வருகின்ற போதிலும், நாங்கள் ஸ்ரீ மோடிக்கு எமது கடிதத்தை அனுப்பிய போது இதனை முன்னரேயே எதிர்வுகூறியிருந்தோம்.  புதிய அரசியலமைப்பின் முழு நோக்கமும் பதின்மூன்றாவது திருத்தத்தை நீக்கி, இலங்கை விவகாரங்களில் இந்தியா குரல் கொடுப்பதைத் தடுப்பதாகும். இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் போது இந்தியா இலங்கைக்கு உதவவில்லை என்றால், கொழும்பில் அரசுக்கு பாதகமான எதுவும் நடந்திருக்கும்.

அந்த நேரத்தில் இலங்கைக்கு இந்தியாவிடம் உதவி கேட்பதைத் தவிர வேறு வழியில்லை (இப்போது சீனாவின் நோக்கத்தைப் புரிந்து கொண்டது போல). இந்தியா தனது பங்கிற்கு தமிழர்கள் சார்பாக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. தமிழர்களின் பிரதிநிதிகளோ அல்லது புலிகளின் தலைவர்களோ இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடவில்லை. எனவே, இலங்கை அரசாங்கம் நாடளாவிய ரீதியில் சிங்கள பௌத்த பெரும்பான்மை அரசாங்கத்தை உருவாக்க முயற்சிக்கும் போது வடக்கு, கிழக்கில் தமிழ் பேசும் மக்களின் சார்பாக தலையிடுவதற்கு இந்தியாவுக்கு சட்டரீதியான உரிமையும் தார்மீகக் கடப்பாடும் உள்ளது.

பதின்மூன்றாவது திருத்தத்தை அமுல்படுத்துமாறு கோரியமை , அது தமிழர்களாகிய எமக்கு போதுமான அதிகாரங்களை வழங்கியதற்காக அல்ல, மாறாக அது அகற்றப்பட்டால் நாம் முற்றிலும் சக்தியற்றவர்களாகிவிடுவோம் என்பதற்காகவே . வடக்கு கிழக்கு தமிழ் பேசும் மக்களுக்கு பாதகமாக இடம்பெறும் எந்தவொரு விடயத்தையும் கேள்விக்குட்படுத்தும் வகையில் மாகாண சபை முறைமையை அறிமுகப்படுத்திய பூர்வாங்க கலந்துரையாடல்களில்பங்கேற்றவராக இப்போதுஇந்தியாவை நாம் கொண்டிருக்கிறோம். வடக்கு , கிழக்கைப் பொறுத்த வரையில் இலங்கை அரசாங்கம் ஒருதலைப்பட்சமாக மாகாண சபைகளை நீக்க முடியாது. பதின்மூன்றாவது திருத்தத்தை அமுல்படுத்துமாறு கோருவதன் மூலம் எமது இனப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வை நாங்கள் தேடவில்லை. நிரந்தர தீர்வு கிடைக்கும் வரை மாகாண சபைகளை வைத்திருக்க முயல்கிறோம். நாங்கள் கருதும் நிரந்தரத் தீர்வு கூட்டு சம்மேளனமேதவிர , குறைவானத்து அல்ல.

இலங்கையில் பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு சர்வதேச சமூகத்திற்கும் தார்மீகக் கடமை உள்ளது. இலங்கையின் பழங்குடி மக்கள் அடக்குமுறைக்குட்படுத்தப் படுத்தப்படும்போதும், பாரபட்சம் காட்டப்படும்போதும் அலட்சியமாக இருக்க முடியாது. பயங்கரவாத தடைச்சட்டம் தொடர்ந்திருப்பது அரசாங்கத்தின் திட்டங்களை குறிக்கின்றது.

இத்தகைய சூழ்நிலையில், ஒரே நாடு ஒரே சட்டம் என்ற முழக்கத்தின் கீழ் சிறுபான்மையினருக்கு பாதுகாப்பற்றதான சிங்கள பௌத்த அரசாங்கத்தை அமைப்பதற்காக புதிய அரசியலமைப்பைக் கொண்டுவருவதற்கான இலங்கை அரசாங்கத்தின் இரகசிய நோக்கங்களை சுட்டிக்காட்டும் வகையில் ஸ்ரீ மோடிக்கு கடிதம் அனுப்பத் தீர்மானித்தோம்.” என அவர் பதிலளித்துள்ளார்.

13 ஐ இல்லாது செய்யக்கோரி முன்னணியினர் சவப்பெட்டியுடன் ஊர்வலம் – கிட்டுபூங்கா பிரகடனத்தில் குறிப்பிடப்பட்ட விடயங்கள் !

13ஆவது திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி யாழ்ப்பாணத்தில் ஆர்ப்பாட்ட பேரணியில் ஈடுபட்டிருந்தது. 

இன்று முற்பகல் 10.30 அளவில் நல்லூரில் உள்ள திலீபனின் நினைவு தூபிக்கு அருகிலிருந்து ஆரம்பித்த இந்த பேரணி கிட்டு  பூங்காவரையில் முன்னெடுக்கப்பட்டது. அதனை தொடர்ந்து முன்னணியின் தலைவரான கஜேந்திரகுமார் உரையாற்றியிருந்தார்.

13 ஆம் திருத்தச் சட்டத்தினுள் முடக்கும் சதிக்கு எதிரான கிட்டுபூங்கா பிரகடனம்

தமிழர்களின் அரசியல் அபிலாசைகளை 13 ஆம் திருத்தத்திற்குள் முடக்கும் சதி முயற்சியை முறியடிப்போம்’ என்ற நோக்கத்துடன்; தமிழ் மக்களினதும், வெகுசன அமைப்புக்களினதும் பங்குபற்றலுடன் நடைபெறும் தமிழ் தேசிய அரசியல் அபிலாசைகளை வெளிப்படுத்தும் போராட்டத்தில், 2022 தை 30 இன்று, கிட்டு பூங்காவில் நாம் அனைவரும் திரண்டுள்ளோம்.

சிங்கள பௌத்த மேலாதிக்க ஒடுக்குமுறைக்கு எதிராகப் போராடிவரும் தமிழ்த் தேசமானது – தனது அடிப்படையான அரசியல் உரிமைகளான வடக்கு கிழக்கு இணைந்த தாயகம், தமிழ்த் தேசம் அதன் இறைமை, சுயநிர்ணய உரிமை அடிப்படையிலான தீர்வில் எப்போதுமே உறுதியாக இருக்கும் என்ற செய்தியைச் சிங்கள தேசத்திற்கும், இலங்கைத் தீவின் மீது கரிசனை கொண்டிருக்கும் சர்வதேச சக்திகளுக்கும் இத் தொடர் போராட்டம் வலியுறுத்திக் கூற விரும்புகின்றது.

சிங்கள பௌத்த பெரும்பான்மை மக்களின் ஏகோபித்த வாக்குகளால் ஆட்சிப்பீடம் ஏறியுள்ள இன்றைய அரசாங்கத்தால் இலங்கைக்கான நான்காவது அரசியலமைப்பு கொண்டுவரப்படவுள்ளது. அதை இந்த வருடத்துக்குள் நிறைவேற்றவுள்ளதாக இவ்வரசாங்கத்தால் பிரகடனப்படுத்தப்பட்டும் உள்ளது. அது இறுக்கமான ஒற்றையாட்சிக்கு உட்பட்டதாகவே அமையும் என்பதையும், அரசாங்கம் உறுதிப்படக் கூறியுள்ளது.

May be an image of one or more people, people standing and outdoors

இந்த அரசியலமைப்பை ஒரு தலைப்பட்டசமாக நிறைவேற்றுவதற்குரிய மூன்றில் இரண்டு பெரும்பான்மையையும் இந்த அரசாங்கம் கொண்டுள்ளது. இலங்கையில் கொண்டுவரப்பட்ட மூன்று அரசியலமைப்புக்களும் இதே போன்றதொரு சிங்கள பெரும்பான்மைப் பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டே நிறைவேற்றப்பட்டிருந்தது. அச்சந்தர்பங்களிலெல்லாம் தமிழ்த் தலைமைகள் அந்த ஒற்றையாட்சி அரசியல் யாப்புக்களை எதிர்த்திருந்ததுடன், வடக்கு கிழக்கு இணைந்த தாயகம், தமிழ்த் தேசம் அதன் இறைமை, சுயநிர்ணய உரிமை அடிப்படையிலான தீர்வை வலியுறுத்தி வந்ததன் விளைவாகவே, தமிழர்களுக்கு இனப்பிரச்சினையொன்று உண்டு என்னும் விடயத்தைத் தக்கவைக்கக்கூடியதாக இருந்தது.

குறிப்பாக, சிங்கள அரசு தமிழருடைய உரிமைக்கான ஆயுதப் போராட்டத்தை பயங்கரவாதமாக சித்தரித்து, இங்கு பயங்கரவாத பிரச்சினை மட்டுமே உள்ளதாகக் கூறி, போரை முடிவுக்குக் கொண்டு வந்து 13 வருடங்கள் கழிந்துள்ள நிலையிலும், இன்றுவரை தமிழ் மக்களுக்கு இனப்பிரச்சினை தொடர்ந்தும் இருக்கிறது என்கின்ற நிலையை நாம் தக்கவைத்திருப்பதற்கான ஒரேயொரு காரணம், இந்த நாட்டின் பிரதான சட்டமாக இருக்கும் மூன்று அரசியலமைப்புக்களையும் தமிழ் மக்கள் நிராகரித்திருந்தமையேயாகும்.

இவ்வாறிருக்க, 1980 களில் இலங்கையை மையமாகக் கொண்டிருந்த அமெரிக்க – இந்திய பூகோளப்போட்டி காரணமாகவே இந்தியா தனது நலனை அடைவதற்காக தமிழர்களின் இனப்பிரச்சினையைக் கையிலெடுத்திருந்தது. 1987 இல் இலங்கையானது, இந்திய நலன்சார்ந்து செயற்பட தயாரான நிலையில், இந்தியா தனது தேசிய பாதுகாப்பு நலன்களை உறுதிப்படுத்தி, சிங்கள தரப்புடன் உடன்பட்ட பின்னர், எந்த ஒற்றையாட்சிக் கெதிராக தமிழ்த் தரப்பை பயன்படுத்தியதோ, அதே ஒற்றையாட்சிக்குள்ளான 13 ஆம் திருத்தத்தையே தமிழ்க்களுக்கான தீர்வாக இலங்கை அரசு முன்வைத்திருந்த நிலையில், தமிழ்த் தரப்பை இந்தியா கைவிட்டிருந்தது.

இந்நிலையில் அப்போதிருந்த தமிழ்த் தரப்புகளாலும் ஒற்றையாட்சிக்குட்பட்ட 13 ஆம் திருத்தச் சட்டம் நிராகரிக்கப்பட்டிருந்தது. இதன் பின்னர் தமிழீழ விடுதலைப் புலிகளின் நேர்மையான தலைமைத்துவத்தின் காரணமாக ஒற்றையாட்சிக்குள் முடக்கும் செயற்பாடுகள் அனைத்தும் தடுக்கப்பட்டிருந்தது. 2005 இன் பின்னர், இந்திய சீனா பூகோளப்போட்டி மீண்டும் இலங்கையில் உருவாகியிருந்த பின்னணியிலேயே ஒரு இனப்படுகொலையூடாக போராட்டம் மௌனிக்கப்பட்டிருந்தது. இதன் பின்னர், இந்தியா மீண்டும் தனது ஆதிக்கத்திலுள்ள தமிழ்த் தரப்புக்களைப் பயன்படுத்தி, தமிழ் அரசியலை ஒரு துருப்புச்சீட்டாகக் கையாண்டு இலங்கை அரசோடு பேரம்பேசி வருகின்றது.

இலங்கை, சீனாவின் விவகாரத்தில் இந்திய நலன்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படாத வகையில் செயற்படுமானால், இந்திய ஆதிக்கத்துக்குட்பட்ட தமிழ் தரப்புக்களைப் பயன்படுத்தி, தமிழரின் அரசியலை ஒற்றையாட்சிக்குள்ளான 13ஆம் திருத்தத்திற்குள் முடக்குவதற்கும் இணங்கியுள்ளது.

இந்தப் பின்னணியிலேயே, இந்திய ஆதிக்கத்துக்குட்பட்ட தமிழ்த் தரப்புகளான இலங்கை தமிழரசுக் கட்சி, தமிழீழ விடுதலைக் கழகம் (ரெலோ), ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (டி.பி.எல்.எவ்;) தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, மற்றும்; தமிழ் மக்கள் கூட்டணி, ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி(ஈ.பி.ஆர்.எல்.எவ்.), தமிழ்த் தேசியக் கட்சி உள்ளிட்ட தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியும் இணைந்து 13 ஆம் திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துமாறு கோரி கூட்டாக கையொப்பமிட்ட கடிதத்தை 18-01-2022 அன்று இந்திய தூதுவரிடம் கையளித்துள்ளனர்.

இதன்மூலம், 13 ம் திருத்தச்சட்டத்திலுள்ள சரத்துக்கள் புதிய அரசியலமைப்பிலும் உள்வாங்கப்படும் பட்சத்தில், இந்திய ஆதிக்கத்துக்குட்பட்ட வடக்கு கிழக்கு தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள், புதிய ஒற்றையாட்சி அரசியலமைப்புக்கு ஆதரவு வழங்குவதனூடாக, தமிழ் மக்கள் ஒற்றையாட்சியை ஏற்றுக் கொண்டுவிட்டார்கள் என்ற நிலைமையையே உருவாக்கி, நாட்டிலுள்ள அனைத்து இனங்களும் ஏற்றுக்கொண்ட ஒரு அரசியலமைப்பை உருவாக்கிவிட்டதாகவும், இனப்பிரச்சினை இதனூடாக தீர்க்கப்பட்டு விட்டதாகவும் உலகுக்கு பறைசாற்றுவதற்கு தயாராகிறார்கள்.

இந்த ஆபத்திலிருந்து தமிழ்த் தேசத்தை மீட்டெடுப்பதற்கு, தமிழ்த் தேச மக்கள் அணிதிரள்வதன் ஊடாகவே தடுத்து நிறுத்த முடியும் என்னும் யாதார்த்தத்தை விளங்கிக் கொண்டு, இந்தத் தொடர் போராட்டம் பின்வருவனவற்றை பிரகடனப்படுத்துகிறது :

• தமிழ்த் தேச மக்கள் தொடர்ச்சியாக ஒற்றையாட்சியை நிராகரித்து, தமிழ்த் தேசத்தை அங்கீகரிக்கின்ற ஒரு தீர்வை 70 வருடங்களுக்கு மேலாக வலியுறுத்தி வந்திருக்கின்ற நிலையிலே, 2009 இல் இனவழிப்புக்கு உள்ளாக்கப்பட்ட பின்னரும், ஒற்றையாட்சியை நிராகரித்தும், தமிழ்த் தேசத்தின் அங்கீகாரத்தைக் கோரியும் ஒவ்வொரு தேர்தல்களுடாகவும் தங்களது ஏகோபித்த ஆணையை வழங்கி வந்திருக்கிறார்கள்.

• வடக்கு கிழக்கு இணைந்த தாயகம், தமிழ்த் தேசமும் – அதன் இறைமையும், சுயநிர்ணய உரிமையையும் அங்கீகிக்கப்படுகின்ற தீர்வுக்குப் பதிலாக – ஒற்றையாட்சிக்குள் இருக்கக்கூடிய ஒரு கட்டமைப்பாக (13 ஆம் திருத்தச் சட்டமாகவோ அல்லது வேறு வடிவத்திலோ) இருக்குமானால் அவ்வகையான செயல், தமிழ் மக்களுடைய ஆணைக்குத் துரோகம் இழைக்கும் வகையிலேயே அமையும் என்ற விடயத்தை இப்போராட்டம் பிரகடனப்படுத்துகிறது.

• தமிழ் மக்கள் – காலம் காலமாக வழங்கிவரும் தமிழ்த் தேச அங்கீகாரத்துக்குரிய ஆணையை மீறி, ஒற்றையாட்சிக்கு உட்பட்ட 13 ஆம் திருத்தத்தையோ அல்லது வேறு எந்தவொரு திருத்தத்தையோ வலியுறுத்துகின்ற தரப்புக்கள், அம்முயற்சியை கைவிட வேண்டுமென இப்போராட்டமூடாக வலியுறுத்துகிறோம்.

• இந்திய அரசானது இலங்கையோடு நல்லுறவை பலப்படுத்திக்கொள்வதையோ அல்லது தனது பூகோள -அரசியல் நலன்களைப் பேணுவதையோ அல்லது தென் ஆசிய பிராந்திய வல்லரசாக தன்னை நிலைநிறுத்திக்கொள்வதையோ ஈழத்தமிழ் மக்கள் எதிர்க்கவில்லை. இந்தியாவை எமது நட்புசக்தியாகவே கருதுகின்றோம். இந்தியாவின் தேசிய நலன்களைப் பேணுவதில் எமக்கு மிகுந்த விருப்பமும் அக்கறையும் ஈடுபாடும் உண்டு. ஆனால் தமிழ் மக்கள் தமது நட்பு சக்தியாக கருதும் இந்தியா, தனது பூகோள நலன்களைப் பூர்த்திசெய்வதற்காக தமிழ் மக்களைப் பலிக்கடாவாக்கி, தமிழ் மக்களின் நலன்களை முற்றாகப் புறக்கணிக்கும் செயற்பாட்டை நிறுத்துமாறு கோருகின்றோம்.

• தமிழ்மக்கள் 70 வருடங்களுக்கு மேலாக தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்ற வடக்கு கிழக்கு இணைந்த தாயகத்தில், தமிழ்த் தேச அங்கீகாரத்தையும் – அதனுடைய தனித்துவமான இறைமையையும் – சுயநிர்ணய உரிமையையும் முழுமையாக அனுபவிக்கக் கூடிய ‘சமஸ்டி’ அடிப்படையிலான தீர்வை அடைய இந்திய அரசும் ஏனைய நட்பு நாடுகளும் இலங்கையை வலியுறுத்த வேண்டும் என்றும் இப்போராட்டம் கோருகின்றது.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி

(அகில இலங்கை தமிழ் காங்கிரஸ்)

தமிழ்த் தேசியப் பேரவை

(படங்கள் – குமணன் – முல்லைத்தீவு ஊடகவியலாளர்)

“கோட்டாயாய அரசின் முகவர்களாக மாறியுள்ள கஜேந்திரர்கள்.” – சுரேஷ் பிரேமச்சந்திரன் சாடல் !

“தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் கோட்டாபய அரசாங்கம் எதை செய்ய நினைக்கிறார்களோ அதனை வடக்கில் நிறைவேற்றுகிறார்கள். அதாவது தற்போது அரசின் நிகழ்ச்சி நிரலுக்கு வடக்கின் முகவர்களாக செயற்படுகின்றார்கள் என்றுதான் கூற வேண்டும்.” என ஈழ மக்கள் புரட்சிகர முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விருந்தினர் விடுதி ஒன்றில் தமிழ் தேசிய கட்சிகளின் தலைவர்கள் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே சுரேஸ் பிரேமச்சந்திரன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

13வது திருத்தச் சட்டத்தினை நாம் தமிழரின் தீர்வாக ஒரு போதும் ஏற்கவில்லை அதனை ஏற்க போவதும் இல்லை. ஆனால் தற்போதுள்ள பூகோள அரசியல் நிலையில் தமிழ் மக்களை பாதுகாக்க அதாவது வடக்கில் இராணுவ மயமாக்கல், சிங்கள குடியேற்றங்களைத் தடுத்து தமிழ் மக்களின் உரிமையை பாதுகாப்பதற்காக ஏற்கனவே இந்தியாவின் தலையீட்டில் ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட அரசியல் சாசனத்தில் உள்ள 13வது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்துமாறு கோரியே 6 தமிழ் கட்சிகள் ஒன்றிணைந்து இந்திய பிரதமருக்கு கடிதம் ஒன்றின் மூலம் அனுப்பி வைத்துள்ளோம்.

அந்த கடிதத்தின் தொடர்ச்சியாக நாம் டெல்லி சென்று இந்திய பிரதமரை சந்தித்து அடுத்தகட்டமாக முன்னெடுக்கப்பட வேண்டிய விடயங்கள் தொடர்பில் நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளோம். தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் மக்கள் மத்தியில் போலிப் பிரசாரத்தினை மேற்கொள்வது போல நாங்கள் 13 வது திருத்தச்சட்டத்தை தீர்வாக ஏற்றுக் கொள்ளவில்லை ஏற்றுக் கொள்ளப் போவதுமில்லை.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் கோட்டாபய அரசாங்கம் எதை செய்ய நினைக்கிறார்களோ அதனை வடக்கில் நிறைவேற்றுகிறார்கள். அதாவது தற்போது அரசின் நிகழ்ச்சி நிரலுக்கு வடக்கின் முகவர்களாக செயற்படுகின்றார்கள் என்றுதான் கூற வேண்டும்.

குறிப்பாக அரச தலைவர் தேர்தலில் கோட்டாபய போட்டியிடும் போது வடக்கு மக்களின் வாக்களிப்பு எனக்கு தேவையில்லை ஆதனால் தேர்தலை புறக்கணியுங்கள் என்று கூறியிருந்தார். அதனையே அந்த தேர்தலின் போது தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் செய்திருந்தார்கள்.

அதாவது அந்த தேர்தலை புறக்கணிக்குமாறு கூறியிருந்தார்கள் தற்போது கோட்டாபய கூறுகின்றார் 13வது திருத்தம் தேவையில்லை அபிவிருத்தி மட்டும் போதும் என, அதேபோல் அரசாங்கத்தில் உள்ளவர்களும் அதனை கூறுகின்றார்கள்.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியினரும் வடக்கில் அந்தக் கோரிக்கையினையே செயற்படுத்துகின்றார்கள். கட்சியிலிருந்து மணிவண்ணன் பிரிந்து சென்றுவிட்டதால் தமது கட்சியை மணிவண்ணன் கொண்டு சென்று விடுவார் என்பதற்காக கட்சியில் உள்ளோருக்கு ஏதாவது ஒரு வேலையை கொடுக்க வேண்டும் தானே அதற்காகத்தான் 13வது திருத்தச் சட்டத்தினை சவப்பெட்டியில் வைத்து மக்கள் மத்தியில் ஊர்வலமாக கொண்டு செல்கிறார்கள்.

அவர்கள் தமது கட்சியை காப்பாற்றுவதற்காக இவ்வாறு போலி பிரச்சாரத்தினை மேற்கொள்கிறார்கள். மக்களை ஏமாற்றி கோட்டாபய அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் செயற்படுகின்றார்கள் எனவே மக்கள் போலிப் பிரசாரங்களை நம்ப கூடாது எனவும் தெரிவித்தார்.

“ஒவ்வொருவரும் தலைவராக வேண்டும் என்பதற்காக மக்களை கூறுபோடுகின்றனர்.” – த.கலையரசன்

“அரசியல் ரீதியாக வந்தவர்கள் ஒவ்வொருவரும் தலைவர்களாக வேண்டும் என்பதற்காக மக்களைக் கூறுபோடுகின்ற செயற்பாடுகளே தமிழ் மக்கள் மத்தியில் முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது..” என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் த.கலையரசன் தெரிவித்தார்.

தமிழ்த் தேசியக் கட்சிகள் இந்தியப் பிரதமருக்கு அனுப்பியுள்ள கடிதம் மற்றும் அதற்கொதிரான பிரச்சாரங்கள் தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

தமிழ் மக்களின் பிரச்சனை தொடர்பில் இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் மூலம் கைச்சாத்திடப்பட்ட 13வது திருத்தச்சட்டம் தொடர்பிலான பல விடயங்கள் தற்போது பேசப்பட்டுக் கொண்டிருக்கின்றது. எமது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினைப் பொருத்தமட்டில் வடக்கு கிழக்கு தமிழ் மக்களுக்கான நிலையான தீர்வினை நோக்கிய பயணத்தில் நீண்ட காலமாக ஈடுபட்டுக் கொண்டிருக்கிறோம். அந்த அடிப்படையில் நாங்கள் இந்த நாட்டில் சமத்துவான சமஸ்டி அடிப்படையிலான தீர்வினை வலியுறுத்தி வருகின்றோம்.

1987ம் ஆண்டு இலங்கை –  இந்திய ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டதன் பிற்பாடு இந்தப் 13வது திருத்தச் சட்டம் கைச்சாத்திடப்பட்டது. அந்த வேளையில் வடகிழக்கு இணைந்ததான மாகாணசபை இருந்ததை நாம் அனைவரும் அறிவோம். அந்த மாகாணசபை நீண்ட காலம் இயங்க முடியாமல் கலைக்கப்பட்ட வரலாறும் உண்டு. அதன் பின் இணைந்த வடகிழக்கு 2008ம் ஆண்டு வடக்கு வேறு கிழக்கு வோறாகப் பிரிக்கப்பட்டு கிழக்கு மாகாணசபைக்கான தேர்தல் நடைபெற்றது.

இந்த நாட்டில் நீண்டகாலமாக நிலவும் தமிழ் மக்களின் பிரச்சனைகளைத் தீர்க்க வேண்டும் என்பதில் ஆட்சி செய்த எந்த அரசாங்கமும் முழு மனதுடன் செயற்படவில்லை என்பதைத்தான் இந்த நாட்டில் இருக்கும் அரசியல் சூழல் இன்றுவரைக்கு எடுத்துக் காட்டிக் கொண்டிருக்கின்றது.

நாங்கள் இந்த நாட்டில் சமாதானத்துடன் வாழ விரும்புகின்றோம். ஏனைய சமூகங்களைப் போன்று சமத்துவத்துடன் வாழ வேண்டும் என்ற அடிப்படையில் தான் இன்றுவரைக்கும் நாங்கள் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றோம். ஆனால், அண்மைக்கால செயற்பாடுகள் தமிழர்கள் மத்தியில் ஒற்றுமை இல்லை என்பதனையே காட்டி நிற்கின்றது. இன்று நேற்றல்ல நீண்டகாலமாக எமக்குள் இருக்கின்ற பிரச்சனை ஒற்றுமையின்மையே.

இருக்கின்ற மாகாணசபை அதிகாரங்களைத் தூக்கி எறிந்து விட்டு எமது மக்களுக்கான தீர்வினைப் பெறமுடியாது. இந்திய வல்லரசினூடாக ஏற்படுத்தப்பட்ட இந்த அதிகாரத்தை வைத்தே நாங்கள் எங்களுடைய தீர்வை நோக்கிய பயணத்தை முன்நகர்த்திக் கொண்டு செல்ல வேண்டும்.

இணைந்த வடகிழக்கு பிரிக்கப்பட்டு இன்று கிழக்கு மாகாணம் நாளுக்கு நாள் பறிபோய்க்கொண்டிருக்கின்றது. எங்களுடைய அதிகாரங்கள் இழக்கச் செய்யப்பட்டு கிழக்கு மாகாணத்தின் எமது இனப்பரம்பல் குறைக்கப்படுகின்ற ஒரு சூழலில் எங்களுடைய இனத்தின் ஒற்றுமையையும் இருப்பையும் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு ஒவ்வொரு தமிழர்களுக்கும் இருக்கின்றது.

ஆனால் இன்று ஏற்கனவே நடைமுறையில் இருக்கின்ற 13வது திருத்தச் சட்டம் என்கின்ற விடயத்திலே தேசியத்தோடு பயணிக்கின்ற தமிழ் கட்சிகள் ஒப்பமிட்டு இந்தியப் பிரதமருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதம் தொடர்பில் பல கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன. எமது தலைவர்கள் ஒரு உறுதியான நிலையான கட்டமைப்போடு இருந்து கொண்டிருக்கின்றார்கள். அவர்கள் இந்தப் 13வது திருத்தச் சட்டம் மாத்திரம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்ற அடிப்படையில் செயற்படுகின்றவர்கள் அல்ல. இந்த 13வது திருத்தச்சட்டம் உருவாக்கப்பட்ட போது அதிகாரஙகள் இல்லை என்கின்ற விடயத்தை விலியுறுத்தியவர்கள் எமது தலைவர்களே, இதனை ஏற்றக் கொள்ள வேண்டும். ஆனாலும் இதனை முழுமையாக இல்லாமல் செய்து விட்டு எமது தீர்வு தொடர்பிலான எமது எதிர்கால அரசியலை முன்னெடுக்க முடியாது.

எனவே இதனை அடிப்படையில் வைத்துக் கொண்டு எமக்கான அதிகாரப் பகிர்வு என்ற அடிப்படையில் சமஷ்டியை நோக்கிய பயணத்தில் சென்று கொண்டிருக்கின்றோம். இதனைப் புரிந்து கொள்ள முடியாதவர்கள் இதனை விமர்சனம் செய்துகொண்டிருக்கின்றார்கள். மக்கள் மத்தியில் போலிப் பிரச்சாரங்களை முன்னெடுத்துக் கொண்டிருக்கின்றார்கள்.

தமிழர்களுக்கு எந்தத் தீர்வையும் வழங்கக் கூடாது என்பதில் இந்த அரசாங்கம் முன்முரமாகக் கடும் தீவிரவாதப் போக்கோடு செயற்பட்டுக் கொண்டிருக்கின்றது. அண்மைக் காலங்களில் எங்களின் அதிகமான தொண்மையான இடங்கள் சுவீகரிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது. இந்த நிலையில் நாங்கள் எமது சமூகத்தின் இருப்பு, ஒற்றமை என்ற விடயத்தில் இருந்து மாற முடியாத சூழ்நிலையில் இருக்கின்றோம்.

அதுமாத்திரமல்லாமல் இந்த நாட்டின் தலைவர் கோட்டபாய ராஜபக்ஷ அவர்கள் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டதன் பிற்பாடு தமிழர் தரப்புடன் பல பேச்சுக்கள் நடாத்தப்பட வேண்டும் என்ற கருத்துக்களை முன்வைத்திருந்தாலும் இற்றைவரைக்கும் ஆக்கபூர்வமான நடவக்கைகள் எதுவும் முன்னெடுக்கப்படவில்லை என்பது அனைவரும் அறிந்ததே.

எனவே இவ்வாறான விடயங்களையெல்லாம் நாங்கள் கருத்திற் கொண்டு எமது சமூகத்தின் எதிர்கால இருப்பு தொடர்பிலும் நாங்கள் முன்நின்று உழைக்க வேண்டியவர்களாக இருக்கின்றோம். குறிப்பாக கிழக்கு மாகாணம் மிகவும் மோசமாக பொருளாதார ரீதியாக ஏனைய சமூகங்களின் ஆக்கரமிப்புக்குள் உட்பட்ட பிரதேசமாக ஆக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது.

ஒற்றுமை என்று பேசி அரசியல் ரீதியாக வந்தவர்கள் ஒவ்வொருவரும் தலைவர்களாக வேண்டும் என்பதற்காக மக்களைக் கூறுபோடுகின்ற செயற்பாடுகளே தமிழ் மக்கள் மத்தியில் முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது. இதனை எமது மக்கள் தான் முதலில் புரிந்து கொள்ள வேண்டும். மக்களுக்காக, இனத்திற்காக, எமது இருப்புக்காகப் போராடுகின்ற கட்சி எது, அதனை எவ்வாறு நாங்கள் வளப்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற விடயங்களை ஆராய்ந்து எதிர்காலத்தில் அந்த விடயத்தில் எமது மக்கள் உறுதியாக இருந்து செயற்பட வேண்டும் என்று தெரிவித்தார்.

“13 ஆவது திருத்தம் மூலம் தமிழ் மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படாது.” – சி.வி.விக்னேஸ்வரன்

13 ஆவது திருத்தம் மூலம் தமிழ் மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படாது. ஆனால் சிறிய சிறிய அலுவல்களை பார்த்துக்கொள்ள முடியும் என நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

13 ஆவது திருத்தம் தொடர்பில் தமிழ் கட்சிகள் ,இந்திய பிரதமர் மோடிக்கு அனுப்பி வைத்துள்ள கடிதம் தொடர்பில்,தெளிவு படுத்தும் ஊடகவியாளர் சந்திப்பு யாழ்ப்பாணத்தில் இன்று நடைபெற்றது. இதன் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில்,

எம்மிடம் ஒரு முனை மடிந்த மண் வெட்டி உள்ளது. புது மண்வெட்டி வருவதற்கு காலம் எடுக்கும். இந்த நிலையில், இந்த பழைய மண் வெட்டியை பயன்படுத்தி என்றாலும் சிறிய வேலையை செய்ய வேண்டும். புதிய மண் வெட்டி வரும் வரும் என்று இருப்பதில் அர்த்தம் இல்லை.

இதை போல தான் 13 ஆவது ,திருத்தம். தமிழ் மக்களின் பிரச்சினைகள் இதன் மூலம் தீர்க்கப்படாது.ஆனால் சிறிய சிறிய அலுவல்களை பார்த்துக்கொள்ள முடியும் என்று தான் கூறுகின்றோம். நாம் இப்போது இருக்கும் நிலையில் இராணுவ ஆட்சி வடக்கு கிழக்கில் அதிகரிக்கிறது.சிங்கள குடியேற்றம் நடைபெறுகிறது.

நாம் ஒன்றுமே செய்ய முடியாமால் நிற்கிறோம். இதற்கு இருக்கும் சட்டம் ஒன்றை நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும் என்றார்.

“இந்தியாவால் கொண்டுவரப்பட்ட 13 திருத்தத்தை தீர்வாக நாங்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டோம்.” – கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

“இந்தியாவால் கொண்டுவரப்பட்ட 13 திருத்தத்தை தீர்வாக நாங்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டோம்.” என தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.

தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

தமிழர்களுடைய தீர்வு விடயத்தில் தமிழர்களுக்கு என்ன தேவை என்பதை தமிழர்கள்தான் கூறமுடியும் அதனை எவரும் கூற முடியாது ,திணிக்கவும் முடியாது 13 ஆவது திருத்தத்தை தீர்வாக ஒருபோதும் ஏற்க முடியாது. நாம் அதில் தெளிவாகவுள்ளோம். 13ம் திருத்தத்தை தமிழ் மக்களை ஏற்று கொள்ளவைப்பது தமிழர்களுடைய அபிலாசைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பது தமிழர் தேசத்தை அழிப்பதற்கான ஒரு நடவடிக்கையாகத்தான் நாம் அதனை பார்க்கின்றோம். இதற்கு நாம் ஒருபோதும் ஒத்துழைக்கபோவதில்லை் நாங்கள் இதனை எதிர்ப்பதை இந்தியா தமக்கு எதிராக பார்க்கிறது என்றால் அது இந்தியாவின் முடிவு.

ஆனால் எங்கள் மக்களுடைய நலன்கள் எவருக்கும் நாங்கள் பேரம்பேசி கைவிடத் தயாரில்லை . தமிழ் மக்களின் இனப்பிரச்சினை தீர்வுக்காக நேர்மையாக செயற்படுகின்ற எந்த நாட்டுடனும் நாங்கள் பயணிக்க மாட்டோம் என கூறவில்லை. மாறாக அனைவரையும் கேட்டுக்கொள்வது தமிழர்களுடைய அடிப்படை அபிலாசைகள் குறிப்பாக திம்பு கோட்பாடுகளில் கூறப்பட்ட அடிப்படை அபிலாசைகள் முழுமையாக பூர்த்தி செய்யக கூடிய வகையிலே அவர்களுடைய ஆதரவை எமக்கு தரவேண்டும் என்ற அடிப்படயில்தான் நாம் கோரிவருகின்றோம்.

இதனை தமிழ்தேசிய மக்கள் முன்னணியாக நாம் அனைவருக்குமே எங்களுடைய தீர்வு யோசனைகளை வழங்கியிருக்கிறோம். மக்கள் பேரவையால் அங்கிகரிக்கப்பட்ட தமிழ் தேசம் அங்கிகரிக்கப்பட்ட தமிழ்தேசத்தின் இறைமை அங்கிகரிக்கப்பட்ட ,தமிழ்தேசம் தன்னுடைய சுயநிர்ணய உரிமையை முழுமையாக அங்கிகரிக்கப்பட கூடிய சமஸ்டி தீர்வைத்தான் நாங்கள் கோரியிருக்கின்றோம். இதை நோக்கியதாக இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுத்து அதேவேளை சிங்கள மக்களுக்கு உண்மையை எடுத்து கூறுவதற்கு அவர்கள் தயார் என்றால் அவர்களை அரவணைத்து அவர்களுடன் பயணிப்போம். இதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை.

இந்தியாவுடன் எமக்கு எந்த பிரச்சினையும் இல்லை. இந்தியா 13 ஆவது திருத்தத்தை தமிழ்மக்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதில் தவறில்லை ஏன் என்றால் அது வல்லரசு. தன்னுடைய தேவைக்காக அதனை கூறுகிறது. இங்கு யார் பிழை என்றால் தமிழ் மக்களுடைய வாக்குகளை பெற்று தமிழ் மக்களுடைய நலன்களுக்காக குரல்கொடுக்காமல் இந்தியாவினுடைய எடுபிடிகளாக இருக்கூடிய துரோகிகள் தான் பிரச்சினை.

ஒற்றையாட்சியை நிராகரிக்கின்றோம் சமஸ்டிதான் தேவை என மக்களிடம் ஆணை பெற்று அதற்கு நேர் எதிராக 34 வருடத்திற்கு முன்பாகவே எடுத்து எடுப்பிலே நிராகரித்த 13 ஆவது திருத்தத்தை இன்று நடைமுறப்படுத்த கேட்பது என்றால் அந்த துரோகிகளுக்கு எதிராக செயற்படுவோம்.

நாங்கள் எந்த நாட்டையும் எதிரியாக பார்க்க தயாரில்லை இந்தியா கேட்கும் போது இந்தியாவின் பக்கத்தில் நியாயம் இருக்கும். ஆனால் ஒற்றையாட்சியாக இருக்கும் 13 திருத்தத்தை ஏற்றுக்கொள்ளமுடியாது என்றார்.

மேலும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக கேள்வி எழுப்பிய போது,

நாம் மாகாணசபை தேர்தலில் போட்டியிடுவது 13ஐ கோரும் தரப்புக்களிற்கே பிரச்சனையாக இருக்கும். நாம் மாகாணசபையை கைப்பற்றி, அந்த வெற்றுக்கோசத்தை அம்பலப்படுத்தி விடுவோம் என்று அவர்கள் அஞ்சுகிறார்கள். அதனால் கட்டாயம் நாம் தேர்தலில் போட்டியிட முடிவு செய்துள்ளோம்.

கடந்தமுறை இராயப்பு யோசெப் தலைமையில் நடந்த ஒரு கூட்டத்தில், மாகாணசபை தேர்தலில் போட்டியிட்டு வென்று, இதிலுள்ள ஓட்டைகளை அம்பலப்படுத்தி, இதை தாண்டி அரசியலை கொண்டு செல்ல செயற்படுவோம் என தமிழ் தேசிய கூட்டமைப்பினர் வாக்குறுதியளித்தனர். மக்களை பகிஸ்கரிக்க அழைப்பு விட வேண்டாமென்றார்கள். அதை நம்பினோம். ஆனால் அதை அவர்கள் செய்யவில்லை.

ஒரு அதிகாரமுமில்லாத ஒன்றை தமிழ் மக்களிடம் திணித்து, வரப்போகிற அரசிலமைப்பில் 13வது திருத்தம் உள்ளதாக கூறி மக்களை ஆதரிக்க வைக்கும் முயற்சியை முறியடிக்க நாம் போட்டியிட வேண்டும்.

நாம் 13ஆம் திருத்தத்தை நிராகரிக்கிறோம். எமக்கு மாகாணசபை தேர்தலில் போட்டியிட விரும்பவில்லை. கடந்த தேர்தலை எமது கட்சி பகிஸ்கரித்தது. ஆனால் மக்களை பகிஸ்கரிக்க கோரவில்லை. மாகாணசபை முறைமையின் அதிகாரமற்ற தன்மையை அம்பலப்படுத்தாமல், அதை ஏற்றுக்கொள்ளும் நிலைக்கு கூட்டமைப்பு சென்றுள்ளதால், மாகாணசபை முறையை அம்பலப்படுத்தும் பொறுப்பை நாமே ஏற்க வேண்டும் என்றார்.

சிங்கள மயமாகவுள்ள வடக்கு – எச்சரிக்கிறார் சி.வி.விக்கினேஸ்வரன் !

மாகாண சபைத் தேர்தல்கள் நடைபெறாமல் இன்றைய நிலை தொடர்ந்தால் வடமாகாணம் மிக விரைவில் மத்தியின் முழுக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டு சிங்கள மயமாகிவிடும் என சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

வாராந்த கேள்வி பதிலில் இந்த விடயத்தை தெரிவித்துள்ள அவர் மேலும் தெரிவித்த போது ,

மாகாண சபைத் தேர்தல்கள் நடைபெறாமல் இன்றைய நிலை தொடர்ந்தால் வடமாகாணம் மிக விரைவில் மத்தியின் முழுக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டு சிங்கள மயமாகிவிடும். இந்தநிலை ஏற்பட்டால் சமஷ்டிக்கோ, கூட்டுச் சமஷ்டிக்கோ, சுய நிர்ணய உரிமைக்கோ போராடுவது அர்த்தமற்றதாகப் போய்விடும்.

மாகாண சபைத் தேர்தல்கள் நடைபெறாததால் ஒட்டுமொத்த சிறுபான்மையினரும் பாதிக்கப்பட்டுள்ள காரணத்தினாலேயே மலையக மற்றும் முஸ்லீம் தலைவர்களும் நம்மோடு இணைந்துள்ளனர்.

இன்றைய நிலையில் சட்ட ரீதியாகத் தமிழ்ப் பேசும் மக்களுக்கு இருக்கும் ஒரே பிடிமானம் போதிய அதிகாரமற்ற 13வது திருத்தச் சட்டம் ஒன்றே. அதை நீக்கினால் மத்திய அரசாங்கம் துணிந்து வடக்கு கிழக்கை ஆக்கிரமித்துவிடும்.

ஒற்றையாட்சியின் கீழ் எமது அரசியல் பிரச்சனைகளுக்குத் தீர்வு கிடைக்காது என குறிப்பிட்ட விக்னேஸ்வரன், சில முக்கிய நடைமுறைப் பிரச்சனைகளை பதின்மூன்றாம் திருத்தச்சட்ட அமுலாக்கத்தின் ஊடாக நாம் கையாளலாம் என கூறினார்.

13வது திருத்தம் தேவையில்லாதது. மஹிந்தவின் வழிக்கு வாருங்கள் என்கிறார் எம்.ஏ.சுமந்திரன் !

“பிரதமருமான மஹிந்த ராஜபக்ஷ 13க்கு அப்பால் சென்று அர்த்தபுஷ்டியான தீர்வைத் தருவோம் என்கிறார். ஆனால் சில தமிழ் கட்சித் தலைவர்களோ 13ஆம் திருத்தத்தை அமுல்படுத்த கோருகின்றனர்.” என  தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

நேற்று (11.12.2021) மாலை 3 மணியளவில் சுன்னாகத்திலுள்ள தனியார் விருந்தினர் விடுதி ஒன்றில் “தமிழர் தம் அபிலாசைகளில் சர்வதேச நாடுகளின் கரிசனை தொடர்பாக சாணக்கியர்களின் கருத்துப் பகிர்வு” என்ற தலைப்பில் நடைபெற்ற நிகழ்விலேயே அவர் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

தேர்தலில் படித்த ஆற்றலுள்ள இளைஞர்களுக்கு முன்னுரிமை என்று நாங்கள் தீர்மானித்தோம். ஆனால் அது வேட்புமனுவில் காணப்படவில்லை. 2022ஆம் ஆண்டு தமிழ் மக்களைப் பொறுத்தவரை மிக முக்கியமான ஒரு ஆண்டாக இருக்கலாம் . சாணக்கியன் போன்ற ஐந்தாறு இளைஞர்களை நாங்கள் களமிறக்கியிருந்தால் நாட்டையே தலைகீழாக மாற்றி இருப்போம் மாறுகின்ற உலகத்திலேயே நாங்கள் நிறைய மாற்றங்களை உள்வாங்க வேண்டும்.

சமஷ்டி என்ற சொல் அன்றும் இருந்தது இன்றும் இருக்கின்றது. ஆனால் சமஷ்டிக்கான விளக்கம் தற்போது மாறிவிட்டது. சம்பந்தன் பிரித்தானிய உயர்ஸ்தானிகரை சந்தித்த பொழுது பிரித்தானியாவில் அன்றிருந்ததைப் போன்று இலங்கையிலும் யாப்பை அறிமுகப்படுத்தினீர்கள். ஆனால் இன்று உங்கள் நாடு எங்கேயோ சென்றுவிட்டது. ஆனால் எமது நாடோ பின்னோக்கி சென்றுவிட்டது என்றார்.

சம்பந்தன் அன்றைய சிந்தனையோடு இருக்கவில்லை. புதியதையும் உள்வாங்குகிறார். அதனாலேயே இன்றும் அவர் எமக்கு தலைவராக இருக்கின்றார்.

13க்கு அப்பால் நாங்கள் செல்வதற்கு முயற்சித்துக் கொண்டிருக்கும் பொழுது,13ஐ அமுல்படுத்த ஒன்றுகூடுகிறோம் என்று சில கட்சிகள் சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. அப்போதைய ஜனாதிபதியும் இன்றைய பிரதமருமான மஹிந்த ராஜபக்ஷ 13க்கு அப்பால் சென்று அர்த்தபுஷ்டியான தீர்வைத் தருவோம் என்கிறார். ஆனால் சில தமிழ் கட்சித் தலைவர்களோ 13ஆம் திருத்தத்தை அமுல்படுத்த கோருகின்றனர்.

13ஆம் திருத்தம் அடிப்படையிலேயே பழுதுபட்டது அதனை திருத்த முடியாது என இந்த நாட்டின் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் கூறுகின்றார். 13ஆம் திருத்தத்தின் சில முக்கியமான நல்ல விடயங்கள் உள்ளன. அவற்றையும் சேர்த்துக் கொண்டு அதையும் தாண்டிய அதிகாரப்பகிர்வை நாம் எதிர்பார்த்து நிற்கின்றோம் என்றார்.