அரசாங்கத்திற்கு எதிரான மக்களின் போராட்டத்துக்குத் தலைவணங்கி தனது அமைச்சுப் பதவியைத் துறந்துள்ளதாக நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
பொருளாதார நெருக்கடியால் மக்கள் மிகவும் கொதிப்படைந்துள்ளனர். அரசாங்கத்திற்கு எதிராக வீதிகளில் இறங்கி அவர்கள் போராடி வருகின்றனர். இந்த நிலைியில் அனைத்து அமைச்சர்களும் பதவி விலகியுள்ளதாக தினேஷ்குணவர்த்தன அறிவித்திருந்தார்.
ஊடகங்களிடம் இது தொடர்பில் நாமல் ராஜபக்ச மேலும் தெரிவித்துள்ளதாவது,
“நாடு என்றுமில்லாத பொருளாதார நெருக்கடியைச் சந்தித்துள்ளது. இன்னமும் உரிய தீர்வு காணப்படவில்லை. இதற்கு அரச தலைவர் தலைமையிலான அமைச்சரவை தான் பொறுப்புக்கூற வேண்டும். இந்நிலையில், மக்களின் போராட்டத்துக்குத் தலைவணங்கியும் , புதிய அமைச்சரவையை நியமிக்குமாறு வலியுறுத்தியும் அமைச்சுப் பதவியைத் துறந்துள்ளேன்.
புதிய அமைச்சரவை தொடர்பிலும், பொருளாதார நெருக்கடிக்கான தீர்வு குறித்தும் அரச தலைவரும் பிரதமரும் இணைந்து உரிய நடவடிக்கைகளை எடுப்பார்கள் என்று நம்புகின்றேன்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.