நக்கீரா

நக்கீரா

மனித உரிமைப் போராளிக்கு சமாதானத்துக்கான நோபல்பரிசு 2010! : நோர்வே நக்கீரா

Noble_Peace_Price2010_Liu_Xiaoboவெடிபொருளான டைனமட்டையும் அதன் முக்கிய வெடிபதார்த்தமான ரிஎன்ரி யைக் கண்டுபிடித்தவரான அல்பிரெட் நோபலின் என்பவரால் ஆரம்பிக்கப்பட்டு இன்றுவரை கண்டுபிடிப்பாளர்களையும் ஆய்வாளர்களையும் கௌரவிக்கும் நிகழ்வுதான் நோபல்பரிசு. இப்பரிசுகளின் முக்கியத்துவமும் பிரபல்யமும் கொண்டது சமாதானப்பரிசு என்பதை யாவரும் அறிந்ததே. அல்பிரெட் நோபல் என்பவர் சுவீடனைப் பூர்வீகமானவராகக் கொண்டாலும் சமாதானப்பரிசை நோர்வேயில் கொடுக்க வேண்டும் என்று பணித்துச் சென்றார். அதன் காரணமாக சமாதானத்துக்கான நோபல்பரிசு நோபலின் எழுதிச்சென்ற கோட்பாட்டுக்கு இணங்க நோர்வேயிலேயே கொடுக்கப்பட்டு வருகிறது.

இதற்கு ஒரு முக்கிய காரணம் உண்டு. சுவீடன் டென்மாக் போன்ற நாடுகளின் காலணித்துவத்தின் கீழ் நோர்வே இருந்தாலும் தனது சுதந்திரத்தை, நாட்டின் விடுதலையை இரத்தம் கொலைகள் இன்றி இராஜதந்திரமுறையில் நோர்வே வென்றெடுத்தது. இதனால் சமாதானப் பரிசு வழங்குவதற்கு நோர்வேயே சரியானது என அல்பிரெட் நோபல் கருதியிருந்தார். இருப்பினும் இரண்டாம் உலகப்போரில் சுவீடன் நாசிப்படையை திறந்து விட்டு எதிர்ப்பின்றி இருந்தாலும் நோர்வே ஜேர்மன் நாசிப்படையை எதிர்த்து கெரில்லாப் போரில் ஈடுபட்டிருந்தது குறிப்பிட வேண்டியது ஒன்றாகும்.

ஒரு பேரழிவுவைத்தரும் டைனமயிட்டைக் கண்டுபிடித்தவர் சமாதானத்தை ஊக்குவிக்கும் முகமாக தனது உழைப்பின் ஒரு பகுதியை உலகிற்கு ஈர்ந்து சென்றிருக்கிறார் என்றால் இதன்பின் ஒளிந்திருக்கும் எண்ணத்தை நாம் தோண்டிப் பார்க்க வேண்டியவர்களாக இருக்கிறோம். கத்தியை நல்ல விடயங்களுக்கும் பாவிக்கலாம் கத்தியைக்கொண்டு கொலையும் செய்யலாம். அது கத்தியின் பிழையன்று. அதைப் பாவிப்பர்களின் பிழையே. அல்பிரட் நோபலின் நோக்கம் தனது கண்டுபிடிப்பு நல்லவற்றிற்கே பயன்பட வேண்டும் என்ற எண்ணத்தில்தான் சமாதானத்துக்கான பரிசை தனிப்பட முக்கியப்படுத்தினார். இன்றும் மலைகளை உடைத்து வீடுகள் கட்டவும் பாதைகள் அமைக்கவும் அவரின் கண்டுபிடிப்பே உதவுகிறது என்றாலும் பேரழிவாயுதங்கள் தயாரிப்பதற்கு இந்த ரிஎன்ரி யே துணைபோகிறது. அதனால் அல்பிரெட்டின் நோக்கம் பிழை என்று கூற இயலாது. புதிய கண்டுபிடிப்பாளர்கள் வளரவேண்டும் புதிய கண்டுபிடிப்புக்கள் உலகிற்கு வரவேண்டும் என்பதே இப்பரிசுத்திட்டத்தின் நோக்கமாகும்.

Liu_Xiaobo_wife_Liu_Xia(லீயூவும் அவர் மனைவியும்)

2010 க்கான நோபல்பரிசை நோர்வே நோபல்பரிசுக்குழு 8.10.2010 மாலை அறிவித்தது. அந்த விடயம் பல நாடுகளில் பரபரப்பையும் சீனாவில் பெரிய பூகம்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இப்பரிசானது மனித உரிமைகள் ஆர்வலரும் போராளியும் எழுத்தாளரும் ஜனநாயக விரும்பியுமான சீனத்தைச் சேர்ந்த லியூ சியாபூ (Liu Xiaobo) க்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. சீனாவில் மாற்றம் வேண்டும், மனிதஉரிமைகள் காப்பாற்றப்பட வேண்டும், அரசியல் மாற்றத்தினூடாக ஜனநாயகம் நிலைநிறுத்தப்பட வேண்டும் என்று போராடி வந்தவர்தான் லியூ. இவர் சீன அரசுக்கு எதிராகக் கிளர்ச்சி செய்தார் என்று பலஆண்டுகளாக சிறையில் அடைத்து வைக்கப்பட்டுள்ளார்.

நேற்று அதாவது 09.10.2010 காலை இந்த நோபல்பரிசுச் செய்தியை தன் கணவனுக்குச் சொல்லச் சென்ற அவரின் மனைவியை காணவில்லை என்ற அறிவித்தல் நோர்வேக்கு கிடைத்தது. லியூவின் வழக்கறிஞருடன் தொடர்பு கொண்டபோது அவரின் வாக்கு மூலப்படி வீட்டுக்காவலில் இருந்த லியூவின் மனைவியை சீனாதான் மறைத்து வைத்துள்ளது என்று அறியமுடிகிறது. லியூவுக்கு நோபல்பரிசு கொடுக்க வேண்டும் என்று பரிந்துரை செய்யப்பட்டபோது சீன வெளிநாட்டமைச்சகம் கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்தது என்பது இங்கே கருத்தில் கொள்ள வேண்டியது.

லியூவுக்கு எதற்காக நோபல்பரிசு வழங்கப்படுகிறது என்பதை நோபல்குழுவின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், முன்னாள் பிரதமரும், முன்னாள் தொழிற்கட்சிச் தலைவரும், இன்றைய ஐரோப்பா அமைச்சரச் செயலாளருமான தூர்பியோன் யாலாண்ட் குறிப்பிடுகிறார். பொருளாதார ரீதியாக சீனா முன்னேறினாலும், பல சர்வதேச உடன்படிக்கைகளை சீனா கையொப்பமிட்டாலும் அதனை மீறியுள்ளது எனவும், சீனச்சட்டம் 35ன்படி பேச்சுரிமை, கூட்டங்கள் கூடும் உரிமை, எழுத்துரிமை, ஊர்வலம்போகும் உரிமைகள் எழுத்துருவில் இருந்தாலும் அவை நடைமுறையில் மட்டறுக்கப்பட்டுள்ளது எனவும் குறிப்பிட்டார். சீனா தனது சட்டத்தையே குழிதோண்டிப் புதைத்துள்ளது என்பதை லியூவும் குறிப்பிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

http://www.youtube.com/user/thenobelprize

இந்த நோபல்பரிசை லியூவுக்கு வழங்குவதால் நோர்வே பொருளாதார ரீதியாக பல தீமைகளை அனுபவிக்கும் என்பதை அறிந்தும் நோர்வே நோபல்குழு தன்நிலை தளராது பிசகாது அப்பரிசை லியூவுக்கு அளித்துள்ளமை பாராட்டுக்குரியது என பலர் கருத்துத் தெரிவித்திருந்தனர். தீபெத்திய ஆத்மீகத் தலைவர் டலாய் லாமா நோர்வே நோபல்குழுவுக்கு தனது பாராட்டை இது ஒரு துணிகரமான செயல் என்று விமர்சித்துள்ளார். நோர்வேயின் மீன் ஏற்றுமதியின் பெரும்பகுதி சீனாவுக்கே போகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கான தடையை நோர்வே எதிர்பார்த்திருக்கிறது.

பல சீன உல்லாசப் பயணிகளிடம் செவ்விகண்ட போது பலவிதமான கருத்துக்களை அறிய முடிந்தது. அதாவது ஏன் இந்தப் பரிசை அமைப்புகளுக்குக் கொடுக்கவில்லை, சீனச்சட்டத்துக்கு எதிரான பல வழக்கறிஞர்கள் சிறையில் சீனஅரசின் சித்திரவதைகளுக்கு உள்ளாகிக் கொண்டுள்ளார்கள் அவர்களுக்குக் கொடுக்கலாமே என்ற மாதிரியான பல கருத்துக்களைத் தெரிவித்தார்கள். உலகின் பல நாடுகளும் இப்பரிசு முன்மொழிவை துணிகரமான செயல் என்று பாராட்டி வரவேற்றுள்ளமை சிறப்புக்குரியதே.

போதி மாதவா? : நோர்வே நக்கீரா

Budha_in_Jaffnaபோதி மாதவா?

வன்னிவானத்தை இருள் கவ்வியது
ஈழத்தமிழர் வாழ்வு போல்

வரிந்து கட்டிக் கொண்டு நிற்கின்றன
வெளிநாடுகளில் இருந்து
தருவிக்கப்பட்ட இடியும் மின்னலும்

சிவப்புக் கௌபோய் (cowboy)படம் எடுக்க
சீன இந்திய நடிகர்கள்

குறும்பார்வைக் குறையால்
வன்னிமந்தைகள் புலிகளாக
கண்ணீர்கள் வரிகளாக
மேய்போரே மந்தையை மேய்ந்தபோதும்
உருப்பெருக்கு வில்லைதேடி அலைந்தார்கள்
புவியியலாளர்கள்.

கண்வில்லைகள் போதாது என்று
வானவில்லைகள்

விலையுயர்ந்த வில்லைகளுக்குக் கூட
மனிதவிலைகள் தெரியவில்லை

உருப்பெருக்க வில்லைகள் ஐ.நாவிடம் இருந்தும்
கண்டுபிடிக்க முடிந்ததா மரணம்தரும் வைரசுக்களை.

வானமே வெடிகுண்டானது
அவதார புரிசர்களுக்கே
அடைக்கலம் தேவைப்பட்டது.

தலைகள் எல்லாம் கணனிகொண்டு
கொலைக்களங்கள் திரிந்தன.

கொம்பியூட்டர் கண்களில்
மக்கள் மறைந்தனர்
கணனியில் வைரசாம்

புதிய கணனியில்
புலத்துப் பணத்தில்
பணவீழம் அமைக்க
இன்றும் பலவைரசுகள்

அகதியாடு நனைகிறது என
ஓலமிடுகின்றன ஓநாய்கள்
நிலத்திலும் புலத்திலும்.

உதிரவெள்ளம் ஓடி அடங்க
பிணக்குவியல்களில் புழுக்கள் கிளம்ப
நிசப்தத்தின் மத்தியில் ஒரு நித்திய புருசன்
பிணங்களில் இருந்து பிரிந்து எழுந்தான்

உதிரம் வடியும் கண்களோடு
மனிதம் நிமிர்ந்த மார்புகளோடு
மேய்பனாக புத்தன்
விசுபரூபத்தில் போதிமாதவனாய்

மாயவனான மாதவன் கண்டு ஆதவன் அலற
சுடுகலன்கள் அனைத்தும் சுருண்டு போயின.

நிஸ்டையின் விரல்களை
நீட்டீயே காட்டி
வடக்கு கிழக்கு பிணங்களின் குவியல்
தெற்குத்திசையில் பசி பட்டிணியின் அவியல்
இதுவா தர்மம்!!
இதுவா நீதி!!!
இதுவா மனிதம்!!!!

மீண்டும் மறைந்தான்
உறைந்தது உலகம்
அறைபட்டது ஆத்மா.

விஸ்வமாக வளர்ந்த அசரீரி
அஸ்திரமாக நின்றது சமநீதி

”உலகம் எங்கணும் எல்லைகள் இல்லை
எல்லை உரிமை எவனுக்குமில்லை
மாதவ மனதில் சூனியம் இல்லை
வானம் பூமியில் வஞ்சகம் இல்லை
மனித மனங்களில் வஞ்சம் இருந்தால்
மீண்டும் வருவேன்
எரிக்கும் ஆதவனாக
சுழலும் சூறாவளியாக
சுனாமியாக.
அடங்காது போனால் கல்கியாக

எல்லா உடமையும் அனைவற்குமாகுக
பொல்லா மனநோய்கள் அணைந்து போகுக
வேதனம் என்பது வாழ்வுக்கானபின்
சீர்-தனம் எதற்கு சீர்கெட்ட மனிதா?

விகாரைகள் கட்டி
மனித விகாரம் எதற்கு
மனிதா (ஆ)லயம் கட்டு
ஆத்மா இலயிக்கும்

அரசு நடத்த அரசமரம் எதற்கு
அன்பை வளர்த்து அகிலத்தை ஆள்
ஆணவம் அழித்து கல்கியைக் கொல்

மனிதத்தின் மடியில் உலகம் உருள
அன்பின் அடியில் அடங்கும் அகிலம்”

மாதவனோடு
நோர்வே நக்கீரா
2.10.2010

ஆணி: நோர்வே நக்கீரா

TheNail_TheCrossஆணி

அவன் புனிதமானவனோ?
புண்ணியமானவனோ?
புரட்சிவாதியோ?
மீட்பனோ?
ஆடுகள் மேய்பனோ
யான் அறியேன்

முள்முடிதரித்து
மூன்று ஆணியிலோ
ஐந்து ஆணியிலோ
உயிரை இழந்த கர்த்தா என்பதை
என்வாசல் கதவுகளை உடைத்து
உக்கிரமாய் ஓதக் கேட்டேன்.

குடும்பச் சிலுவையை
சுமந்து கொண்டு
காசுக்கடவுள் அல்லாவிற்கு
சேவை செய்த ஆரியவதிக்கு
சம்பளமாய்
இருபத்திநான்கு ஆணிச்சிலுவை.
சுமப்பதற்கென்றே பிறந்ததா
இந்தப் பெண்ணினம்?

மத்திய கிழக்கில்
மன்னிக்கவும்
மத்திம கிழக்கில்
அல்லாவின் புனித
பொல்லாத பூமியில்
எம்தேசப்பெண் ஒருத்தி
சிலுவை ஏற்றப்பட்டாள்.
மனிதனே அல்லாதவனுக்கு
சேவை செய்த குற்றத்துக்காய்.

கூறான் சுமந்த
குறை மதியர்களால்
கூராணிகளால் அறையப்பட்டாள்
மனித முகங்களில்…..!!
மனித மனங்களில்…..!!!

ஐந்து ஆணியிக்குள்
ஆண்டவனுக்கே அரோகரா
மீண்டாரோ தாண்டாரோ
ஆண்டவனுக்கே தெரியாது.
இருபத்திநான்கு ஆணி ஏறியும்
மீண்டாள்
இலங்கை மீண்டாள்.

இனி
புதிய கூறானோ பைபிளோ
ஆண்டவள் ஆரியவதி என எழுதுமா?
அவள் பெண்ணென்பதால்
மீண்டும் புதையுமா?
சிதையுமா?

யேசுவின் உடலில் ஐந்து ஆணிகள்
பிரித்தது உயிர்
ஆரியவதிக்கோ
இருபத்திநான்கு ஆணிகள்
நாட்டில் மீண்டும் உயிர்த்தாள்
ஈழத்தமிழர் உடல்கள் எங்கும்
எத்தனை இலட்சம் ஆணிகள்
மரித்ததே மானிடம்.
மெனளமாய்
கைகொட்டிச் சிரித்ததே உலகம்.
மானிடம் பேசும் மானிடராலே
மானிடத்திற்கு மரணதண்டனை

ஆணிகளின் பின்னால்
அறைந்து கிடக்கிறன மனிதமும்
மானிடமும்.

சிலுவைகளுடன்
நோர்வே நக்கீரா

மீண்டும் ஒரு புதிய புரட்டாசி பதினொன்றா? :நோர்வே நக்கீரா

pst1.jpg
அமெரிக்காவின் இரட்டைக் கோபுரத்தகர்ப்புப் போன்ற பெரிய ஒரு பயங்கரவாத நடவடிக்கை நோர்வேயால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக 3 முஸ்லீம்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் இருவர் உஸ்பேக்கர்கள் என்று கருதப்படுகிறது. மற்றவர் சீனாவைச் சேர்ந்த உருகு இனத்தவராக இருக்கலாம்.

இவர்கள் வெடிகுண்டு தயாரிப்பதற்குப் பாவிக்கும் ஷய்ரோயின் பரவொக்சைட் எனும் திராவகத்தை மருந்துக்கடையில் வாங்க முயற்சித்தனர். இவர்களைத் தொடர்ந்து திரிந்த உளவுப்பொலிசார் இந்தத்திராவகத்துக்குப் பதிலாக அதேபோன்ற பாதிப்பற்ற வேறு திராவகத்தை மாறிக் கொடுக்கச் செய்தார்கள். இதன் காரணமாக நடக்கவிருந்த பெரிய பயங்கரப்பேரழிவு கொண்ட நடவடிக்கை தடுக்கப்பட்டுள்ளது. இந்த பயங்கரவாத நடவடிக்கை நோர்வேயின் தலைநகர் ஒஸ்லோவிலும் யேர்மனியில் உள்ள புயிஸ்பர்க்கிலும் நடக்க இருந்தது.

இது சம்பந்தமாகக் கைதுசெய்யப்பட்டுள்ள மூவரும் ஒஸ்லோ யேர்மனுக்கிடையில் பல தொடர்புளை ஏற்படுத்தியிருந்தனர். சென்ற வின்ரறில் வெடிகுண்டு தயாரிப்பதற்கான சகலபொருட்களும் வாங்கப்பட்டு விட்டன. இதுபற்றிய மேலதிகவிபரங்கள் துப்புத்துலக்கப்படுகிறது. பொலிசின் தியறி என்னவெனில் இந்தக்குண்டுகள் நோர்வேயில் மாத்திரம் வைக்கப்பட்டிருக்கும் என்று சொல்ல முடியாது. அயல்நாடுகள் வேறுநாடுகளிலும் வைப்பதற்குச் சாத்தியம் இருந்திருக்கும்.

யாக்கையின் வாழ்க்கை!!! நோர்வே நக்கீரா

யாக்கையின் வாழ்க்கை!!!

பூக்கள் சிரிக்க
பூமகள் சிறப்பாள்
பாக்கள் பிறக்க
பாரே சிறக்கும்.

ஐரோப்பியப் பூக்கள் மலர
மகரந்தம் பறக்கும்
மகிழ்ச்சியை அழிக்கும்.
அழகிய மலர்களின் மகரந்தங்கள்
ஐரோப்பாவில் எமக்கு அலேர்ஜி
ஐரோ மட்டும் என்றும் அலாதி

சொண்டு உண்டு உண்டு என்று
சொண்டு உண்டு
சொண்டிழந்து போனவர்கள்
பொய்வாயை மெய்வாயாக்க
செவ்வாய் செய்கிறார்கள்.
அது செவ்வாயல்ல
செய்வாய்
அழகுறச் செய்வாய்
வாய்களில் மட்டுமா பொய்
வார்த்தைகள்??

கண்கெட்டுப் போனவர்கள்
கண்விட்டுப் போய்விடாது
கண்கீறிப்போகும்
காட்சிதான் அஞ்சனமோ?
கண்களின் வஞ்சகமோ?
கண்கீறிய காயங்கள்
விண்ணேறி வலித்தாலும்
பெண்மனத்தில் இல்லைப் பேதமை
கண்கனத்துக் கொண்டாது
கண்ணீரில் சாதனை

விதியின் கரங்கள்
முகத்தில் எழுதிய
வரைபடம்தானே வயது
அதன் முதிர்வு.
விதியைக் கூட
சதிசெய்து அழிக்கும்
சாதனைதானே மேக்கப்பு (ஒப்பனை)
பெண்ணே கீப்பப்பூ

ஒப்பனையில்லா ஒப்பனை கூட
வைப்பனையாகும் முகங்களிலே
செப்பனை செய்யா கற்பனைக்களத்தில்
காளியின் காட்சியின் தரிசனமே.

கண்ணுக்குக் கலர்வில்லை
கண்மயிருக்கு மஸ்காரா
தலைமுடிக்கு விலைகொடுத்து
கலர் அடித்துக் கலைகாணும்
பொய்முடி தரிக்கும்
மெய் மடிந்த பொய் வாழ்க்கை

கலர் கலராய் கலர் அடித்து- எம்மை
கலர்மனிதர்கள் எனக் கசக்கும்
நிறமிழந்த ஐரோப்பிய
நிஜமற்ற நிதவாழ்க்கை
துவேசம்.

பாசமெல்லாம்
ஆபாசமாகி
ஊர்வேசம் போடுகிறது
ஐரோப்பா

மெய்மேல் மெய் படுத்து
பொய்போகும் வாழ்க்கையை
மெய் என்றும் காட்டும்
காக்கைகளே தின்னத்துடிக்கும்
யாக்கையின் வாழ்க்கைதான்
வாழ்க்கையா?

இச்சேர்க்கையின் சீற்றம்
இலங்கையிலும் தொற்றுதே
தமிழினத்தில் ஒர் ஐரோப்பா
ஊரில் இனி உருவாகும்.

நோர்வே நக்கீரா
11.06.2010

ஐரோப்பிய பாடல் போட்டி 2010 : விமர்சனம்- நோர்வே நக்கீரா

lena.jpg2010க்குரிய ஐரோப்பிய பாடல் போட்டி நோர்வேயில் 29.05.2010 சனிக்கிழமை மாலை 200லட்சம் நோவேயியன் குரோண்கள் செலவில் வெற்றிகரமாக வெற்றிகரமாக நடந்தேறியது. இதற்கான காரணம் ஒர் அகதியின் பாடலே. அலெக்சாண்டர் றிபாக் அகதிக்குழந்தையாக நோர்வே நாட்டில் குடிபுகுந்த இந்த இரஸ்சிய இளைஞனே சென்றவருடம் நோர்வேக்கு வெற்றியைத் தேடித்தந்து நோவேயை உலகமட்டத்தில் ஒருபடி உயர்ந்தினான். நோர்வேயின் வடபகுதியில் அகதி அந்தஸ்துக் கோரியபோது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. அன்றே அவன் திரும்பிப் போயிருந்தால் இன்று நோவே ஒருநல்ல திறமைசாலியை இழந்திருக்கும். அவனது பெற்றோர்கள் இசைவல்லுனர்கள். கம்பன் வீட்டுக் கைத்தறியும் கவிபாடும் என்பதுபோல் இசையுடன் கூடிவளர்ந்த காரணத்தாலும் மரபணுக்களில் இசைவாழ்ந்து கொண்டிருந்ததாலும் இசை சரளமாகவே அவனுக்கு வந்தது. அகதி என்பவர்கள் பணம், உயிர்பாதுகாப்பு மட்டும் தேடிவரவில்லை, திறமைகளுடனும்தான் வருகிறார்கள் என்பதை புலத்து நாடுகள் உணர்ந்து கொள்ளவேண்டியது அவசியம். தம்திறமைகளை வெளிப்படுத்துவதும். அத்திறமைகளை நாடுகள் நல்ல முறையில் பயன்படுத்துவதும் மனித உயர்வுக்கு இன்றியமையாதது. இது பிறந்தநாட்டுக்கும் புகுந்த நாட்டுக்கும் பெருமை சேர்க்கும்.

எந்தநாடு இப்போட்டியில் வெல்கிறதோ அந்த நாட்டில்தான் அடுத்த பாடல் போட்டி நடைபெறும். இது பெருமைக்குரியது மட்டுமல்ல வியாபார ரீதியாகப் பணம் பண்ணும் காரியமாகவும் மாறியுள்ளது. சென்றவருடம் 2009ல் நோர்வே வென்றகாரணத்தால் இந்தவருடம் இப்போட்டி இங்கே நடத்தப்பட்டது. பிரபல விமர்சகரான எஸ்பன் ஏ ஆமுன்சன் என்பவர் தனது விமர்சனத்தில் இம்முறை பெரும்பாலான பாடல்கள் உப்புச்சப்பில்லாத ஒரு சத்துக்குக் கூட உதவாதபாடல்கள் என்றும், பிரான்சின் பாடல் சரித்திரத்தைக் கறைப்படுத்துமாறு அமைந்தாகவும் தான் இம்முறை வந்தபாடல்களைக் கண்டு அதிர்ந்து போனதாக எபிசி செய்திகளுக்கு அழிந்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.

இம்முறை ஜேமனிய நாட்டு லேனா எனும் 19வயதுப் பெண் இப்போட்டியில் வெற்றி பெற்றாலும் அப்பாடலின் தரம்பற்றி பலர் தரக்குறைவாகப் பேசுவதையே கேட்கக்கூடியதாக இருந்தது. இதனால் பணம் கொடுத்து வெற்றியை வாங்கினார்களா என்று சந்தேகிக்கத் தோன்றுகிறது.

பிரான்ஸ், ஸ்பெயின், சர்பியா போன்ற சிலநாடுகளே தமது மொழியில் பாடல்களைப் பாடினார்கள். 80வீதமான பாடல்கள் ஆங்கில மொழியிலேயே அமைந்திருந்தது. இந்த ஐரோப்பிய பாடல் போட்டியின் ஆரம்ப காலங்களில் தமது மொழியிலேயே பாடல்கள் பாடப்பட வேண்டும் எனும் வரையறை இருந்தது. இக்காலத்தில் ஆங்கிலத்தைத் தாய்மொழியாக் கொண்ட நாடுகளின் பாடல்கள் புள்ளிகளை அதிகமாகப் பெற்றார்கள். இதனால் வரையறை தளர்த்தப்பட்டது. இதன் காரணமாக ஆங்கிலத்தை வெறுக்கும் பழைய சோவியத்து நாடுகள் ஜேர்மனி போன்ற நாடுகள் கூட ஆங்கிலத்திலேயே பாடினார்கள். இப்போட்டிக்கு வரும் பாடல்கள் தத்தமது நாடுகளில் நடுவர்களாலும் அந்நாட்டு மக்களின் புள்ளிகளாலும் வென்ற பாடல்களே. இதனால் இந்த ஐரோப்பிய நாடுகளில் ஆங்கிலத்திலே உணர்வுகள் பாடலாக்கப்படும் நிலை தென்படுகிறது. ஆங்கிலத்தில் பாடியபாடல்களில் உச்சரிப்புப்பிழையை பலர் அவதானித்திருக்கலாம். பிறமொழியில் பாடுவதாலேயோ என்னவோ பலபாடல்களில் உயிரக்காணோம். பிறமொழிப் பாடல்களால் சுயமொழி அழிப்புடன் ஆங்கிலமொழிச் சீரழிவும் சேர்ந்தே நடைபெறுவதைக் காணலாம். இது உலகமயமாதலில் ஒரு விளைவே. ஆட்சிகளையும், அதிகாரங்களையும் தன்னகத்ததே கொண்டிருந்த நாடுகளின் மொழிகள் உ.ம் ஆங்கிலம், பிரான்ஸ், இரஸ்சிய, அராபிய மொழிகள் மற்றைய மொழிகளை விழுங்கும் நிலை உருவாகியுள்ளதை உணரமுடிகிறது.

மொழி ஆய்வாளர்களின் கூற்றுப்படி 10சதவீதமான மொழிகள் பத்து வருடங்களில் இடம் தெரியாமல் போகின்றன. ஒவ்வொரு 10 வருடத்துக்கும் ஒவ்வொரு மொழிகளிலும் 10சதவீதமான மொழி கலப்படைகிறது. உலகமயமாதலினால் ஒரு புதியகாலணித்துவமே உருவாகி வருகிறது. ஆய்வாளர்களின் கூற்றை விட மிகவேகமாகவே இவை நடந்தேறுகின்றன. இதனால் சில முக்கிய மொழிகள், கலாச்சாரங்கள், நாகரீகங்கள் ஏன் இனமே அழியும் காலவரிப்பு நடைபெறுகிறது. இக்காலவரிப்பில் தமிழ்மொழியும் ஒன்று. கொன்னைத்தமிழான சென்னைத்தமிழில் இதை அழகுறக் காணலாம்.

பூகோளரீதியாக இஸ்ரேவேல் அமைந்திருப்பது மத்தியகிழக்கிலேயே. இதை எதற்காக ஐரோப்பாவிற்குள் சேர்த்து போட்டிகளில் பங்குபற்ற வைக்கிறார்கள். இதில் இருந்து ஐரோப்பியர்களின் நட்புறவும், நடுநிலையற்ற போக்கையும் காணக்கூடியதாக இருக்கிறது. இப்படி நடுநிலையற்றவர்களே இஸ்ரேலிய பாலஸ்தீன உடன்படிக்கையை ஒஸ்லோ ஒப்பந்தம் என்று உருவாக்கினார்கள். இங்கே எப்படி பாலஸ்தீனத்தின் நலன்கள் நடுநிலையுடன் கவனிக்கப்பட்டிருக்கும் என்பது கேள்விக் குறியாகிறது. இரண்டாவது உலகயுத்தத்தில் பாதிக்கப்பட்டவர்கள் என்பதற்காக இன்று பாலஸ்தீனத்துக்கு இழைக்கும் அநியாயங்களை நியாயப்படுத்த முடியாது. இஸ்ரவேலுக்கு ஐரோப்பிய பாடல் போட்டியில் இடம் உண்டு எனில் ஏன் பாலஸ்தீனத்துக்கு இது இல்லாமல் போனது?

பாடல்களின் பெறுபேறுகள் அறிவிக்கப்படும்போது எந்தநாட்டுக்கு தமது அதிகூடிய புள்ளிகளை அறிவிப்பார்கள் என்பதை நாம் முன்கூட்டியே சொல்லக் கூடியதாக இருந்தது. தம் உறவு நாடுகளுக்கும் அயல்நாடுகளுக்கும் புள்ளிகளை அள்ளி வளங்கியதைக் காணமுடிந்தது. இந்த ஐரோப்பிய பாடல் போட்டி என்பது திறமைகளை வெளிக்கொணரவோ அன்றேல் நல்ல தரமான பாடல்களை தரவோ முயற்சிக்கவில்லை என்பது எனது தாழ்மையான கருத்தாகும்.

ஸ்பானியப்பாடல் அரங்கேறி முடியும் வேளை குழுவில் இல்லாத ஒருவன் உள்ளே புகுந்து மேடையிலுள்ளவர்கள் போல் நடித்துவிட்டு இறங்கி ஓடிவிட்டான். இவ்வளவு பிரமாண்டமான பெருவிழாவில் நோவேயின் பாதுகாப்புப் போதாது என்பது பலரது குறையாக இருந்த போதிலும் நோவே போதியளவு சீரணியற்ற நகரபாதுகாவலர்களை பயன்படுத்தினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப்போலிப்பேர்வழி உடனடியாக சான்விக்கா நகரபாதுகாவலர் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டு விசாரிக்கப்பட்டு 15000 குரோண்கள் அபராதம் விதிக்கப்பட்டதாகத் தெரியவருகிறது. ஒருகாலத்தில் பெயருக்கும், தமது பிள்ளைகளை மேடையேற்றுவதற்கும், விலாசத்துக்குமாக பலர் புலிகளுக்கு பணம் கொடுத்ததைப் பலர் அறிவர். அதேபோல் ஒன்றுதான் இதுவும். இந்த ஆசாமியிடம் கேட்டபோது நான் 15000 குரோண்கள் கொடுத்து விலாசம் வாங்கியுள்ளேன் என்றாராம். இவர் ஒரு பிரபல்ய உதைபந்தாட்டம் நடந்து கொண்டிருந்தபோது வெறும் உடம்புடன் நடுமைதானத்தால் ஓடியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இது ஒரு களியாட்ட நிகழ்வாக இருந்தாலும் பயன்படுத்தப்படும் பணத்தொகை மிகப்பெரிது என்பது கருத்தில் கொள்ளப்பட வேண்டியது. எத்தனையோ நல்ல தரமான பாடல்கள் இருந்தும் முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்டபடி தீர்ப்பு ஜேர்மனிக்கு வழங்கப்பட்டது போன்று அமைந்துள்ளது. தாம்விரும்பும் நாடுகளுக்கு தரம்பாராது புள்ளியிடுவது ஒருபுறம், தமக்குப் பிடிக்காத நாடுகள், இனம் என்பதை தள்ளிவைப்பது என்பது மறுபுறம். இது துவேச வளர்ச்சிக்கு ஏதுவாக அமைந்துவிடும். இனிவருங்காலங்களிலாவது இப்படியான சீர்கேடுகள் இன்றி தரமான பாடல்களை கருத்து, இசை, காட்சி, பாவம் (பாடலின் உயிர்) போன்ற காரணிகளுக்கு முன்னுரிமை கொடுத்து தரமான பாடல்களைத் தருவார்களா?

எதிர்பார்ப்புகளுடன்
நோர்வே நக்கீரா

புலத்துத்தமிழா!! நோர்வே நக்கீரா

புலத்துத்தமிழா!!

ஊரை எண்ணி உருகினோம்
          உண்மை அறிய உயரினோம்
தாரை வார்த்து வந்த பூமி – என்றும்
         தாமரை இலைத் தண்ணீர்தானே

வேரை தேட முயல்வதனால்
         விழுதுகளில் வாழ முடிவதில்லை
ஊரை எண்ணி உளல்வதனால்
          உண்மையின் தரிசனம் தெரியதில்லை

பொக்குவாய் திறந்து என்பிள்ளை சிரிக்க
           பக்கென்று சுனாமி தெரியுதயையோ
திக்குவாய் திறந்து தீந்தமிழ் பிறக்க
          தொக்குவாய் ஒப்பாரி கேட்குதையோ

உடலிங்கு இருக்க உயிரங்கு வாழும்
          உரமிங்கு இருக்க பயிர்ரெங்கு போகும்.
கடலிங்கு இருக்க மீனெங்கு வாழும்
          கடனிங்கு இருக்க ஊரிலுடன்கட்டை ஏறும்.

சேவல் செத்த தேசத்தில்
          சேதி சொல்ல யாருமில்லை
ஏவல் செய்து வாழ்வதற்கு – காலையில்
         எகிறி அலறும் அலாரமிங்கே

பூங்காலை பிறக்கும் பூபாளம் பாடி – இங்கோ
          பனிவானம் கொட்டும் பகலள்ளி ஓடி
தேன்காலை என்று ரொட்டியைத் தின்றும்
         தேடிய பணமும் எமைத்தேடாது போகும்

வேரை அறுத்து வந்த உனக்கு
          வேற்று மண்ணில் பவுசுப்பெருக்கு
ஊரை ஊன்றிய மக்கள் தமக்கு
           உத்தமனாய் விடாதே கணக்கு

தலைவிதி தன்னை தானே தீர்க்கும்
           தலையாய கடமை தமிழர்க்குண்டு
கொலைவெறி கொண்டு ஈழம் என்று – மீண்டும்
            கொல்லநினைக்க முள்ளிவாய்காலிலுண்டு

பண்டா நினைத்ததை பிரபாகரன் முடித்தான்
            திண்டாடும் தமிழன் அரசியலைத் தொலைத்தான்
கொண்டாடும் கொடுவினம் கொடியுயர்த்தி கோலோச்ச
            மன்றாடி மகிழுதோ பின்னணியில் த.தே.முன்னணியும்

மண்ணை வேண்டிப் போராடி
           மண்ணாய் போன மன்னர்களே!
கண்ணாய் மனிதம் காட்டி
           காதலி தமிழை மனதில் ஊட்டி

தமிழ் வாழ்ந்தால் தமிழன் வாழ்வான்
          தவறிபோனால் இனத்தோடழிவான்
அமிழ் தினிய தமிழைக் காக்க
         எழுந்து வாடா இனத்தை மீட்க

பத்துப் பெத்தால் பரிசளிப்போம்
         பத்தாது போனால் பரிசகியோம்
முத்தாய் எம்மினம் முகிழ்வுறவே
         வித்தாய் விழைவோமா புலத்தினிலே

நோர்வே நக்கீரா

27.02 2010

புத்தாண்டில் புதுயாகம்: நோர்வே நக்கீரா

2010.jpgபுத்தாண்டில் புதுயாகம்

கந்தகக்காற்று ஊர்கோலம் போனது
யார் யாரோ அரக்கர்களால் – எம்தேசம்
கேவலம்…போர் கோலமானது.

பட்டாசு வெடிக்க
சட்டமில்லை என்று
பாதுகாப்புச் சட்டம் போட்டது
சமாதான நாடு.
சங்காரம் செய்யும் அழிவாயுதப்படையலின்
பிரமாக்கள் என்று
அகிலச்சான்றிதழ் பெற்றது- எம்
நோர்வேயிய நாடு.

யாகம்…விஸ்வாமித்திர யாகம்
விஸ்வமான மித்துருக்களால்;
சத்துருக்க போர் யாகம்.

யாகம் போகம் மாறியும்
தாகம் தாகமென
தியாகம் தியாகமாக -காகம்
கல்லுச் சேர்த்ததே தியாகமானது
வேள்வி…கேலியாகி…கேள்வியானது போ.

அன்று…யாகம் காக்க இராம இலக்குவர்
இன்று எம்மைக்காக்க….யார் சிக்குவர்?
இலங்கையில் இராமாயணம்
இறப்பதே இல்லையோ?

துப்பாக்கிகளுடன் தூங்கி எழுந்து
குண்டுகளிடையே குறுக்கே விழுந்து
ஊரைக்காத்த உத்தம உயிர்கள்
வன்னிமக்களாய்
வனத்தினுள் வதங்கிப் போவதோ?

வெட்டிய தலைகள் மண்ணில் வீழவுமில்லை
வேட்டுவிழுந்து உடலிலுயிர் பிரியுமில்லை
உதிரம் சொட்டும் வாளுடன் வந்து
வோட்டுக்கேட்டு வருடம் பிறக்குதே!
மனிதம் மறந்து வாழ்வு சிறக்குமோ?

தமிழன்…தமிழன் என வேதம் ஓதி
ஈழம்…ஈழம் என்று எண்ணை ஊற்றி
வேளம் வந்து வேவுபார்க்க
சிம்மம் சினந்து சிம்மாசனம் போட்டது.
மிருகம் தூக்கிய மிருகத்தியாகம்
போகமின்றி மிருகமாய் போனது போ…!

தாகம்…தாகம் எனத்தண்ணீர்தேடி
காகம் கல்லைச் சேர்த்ததே மிச்சம்.
இனியும் வேண்டாம் பகைமையின் எச்சம்.
மனிதம் வாழ்ந்தால் அமைதி நிச்சயம்.

பிறக்கும் வருடம் சிறப்பாய் பிறக்க
வீழ்ந்தவை எல்லாம் மிருகமாய் போக
எழுவது எல்லாம் மனிதராய் எழுக
மிருகம் கொண்டு மிருகமானது போதும்.
வாய்மை கொண்ட மனிதவாழுமை வேண்டும்

சாதி சாதியென்று சாய்த்து
சாதித்தது என்ன?
மனிதசாதி ஒன்றே போதும்
மதமும் வேண்டாம்
மார்க்கமும் வேண்டாம் -எமக்கு
மனித மார்க்கமே போதும் போதும்.

வாழும் காலம் மனிதராய் வாழ
புத்தாண்டுப் பெண்ணே
புதுச்சேலை கட்டிவா!!!

நோர்வே நக்கீரா
01 01 2010

போருக்கான நோபல் பரிசு கொ(கெ)டுப்பு! : நோர்வே நக்கீரா

obama-nobel.jpgசுவீடன் நாட்டில் அல்பிரெட் நோபல் என்பவர் 21.10.1833இல் இமானுவேல் அல்பிரட்டுக்கு மூன்றாவது பிள்ளையாக பிறந்தார். இவருக்கு தந்தையை அதிகம் பிடிக்காது. தாயின் செல்லப் பிள்ளையாகவே வளர்ந்தார். இரசாயனவியலில் திறமைகளைக் கொண்டு இவரே டைனமைட்டை கண்டுபிடித்தார். இதனூடாக பெருந்தொகையான செல்வம் குவிந்தது. அப்பணத்தின் ஒருபகுதி சுவீடனில் இரசாயனவியல், பௌதீகவியல் போன்றவற்றுக்கான நோபல் பரிசாகக் கொடுக்கப்பட்டாலும் சமாதானத்துக்கான பரிசை நோர்வே நாடுதான் கொடுக்கவேண்டும் என அல்பிரட் நோபல் அவர்கள் முன்மொழிந்திருந்தார். நோவேயிய ஆட்சிமன்றத்தால் தெரிவு செய்யப்படும் குழுவே சமாதானத்துக்கான நோபல் பரிசை யாருக்குக் கொடுப்பது என்பதைத் தீர்மானிக்கும்.

ஒபாமாவுக்கு எதற்கு?
2009ம் ஆண்டுக்கான 108 ஆவது சமாதானப்பரிசை ஏன் அமெரிக்க அதிபர் பராக் உபாமாவுக்கு கொடுக்கிறோம் என்பதை நோபல்குழு நோகாமலே சொன்னது. அதாவது சர்வதேச ரீதியாக இராஜதந்திரத்தைப் பலப்படுத்தியதற்காகவும் மனித ஒத்துழைப்பை ஊக்குவித்ததற்காகவுமே இப்பரிசு இவ்வருடம் வழங்கப்படுகிறது. முக்கியமாக அணுவாயுதமற்ற உலகை உருவாக்குவதற்கான ஒபாமாவின் நோக்கமும் இதில் அடங்குகிறது.

இப்பரிசுக்கான முன்மொழிவைக் கேட்டதுமே பலர் அதிர்வடைந்தனர். இது காலமுதிர்வுக்கு முன்னரே கொடுத்து விட்டார்கள் ஒபாமா வாக்களித்தபடி எதையுமே செய்யவில்லை என்று பல நோவேயிய மக்கள் குழம்பிக் கொண்டனர்.

ஒபாமா தகுதியுடையவரா?
எதையும் மிகச்சுலபமாகச் சொல்லலாம் ஆனால் செய்வது என்பதுதான் கடினமானது. சர்வேதேச ரீதியில் இராஜதந்திரத்தை ஏற்படுத்தினார் என்றால் எங்கே, எப்போ என்பதற்கான போதிய தகுந்த ஆதாரங்கள் கிடையாது. கூடிப்பேசலாம் ஆனால் நடந்தது என்ன? ஈராக்போர் முடிந்ததா? ஆப்கானிஸ்தானில் அமைதி நிலவுகிறதா? புஸ்சினால் தொடக்கி வைக்கப்பட்டு சர்வதேச சித்திரவதை முகாம் முற்றாக செயலிழந்ததா? சிலவேளை இவரது இராஜதந்திரம் இலங்கையில் பலித்திருக்கிறது எனலாம். கடைசி நேரத்தில் புலிகளுக்குக் கைகொடுப்பேன் என்று கைவிட்டது ஒரு நல்ல இராஜதந்திரி தானே. இதுபற்றி நோர்வே உயர்மட்ட இராஜதந்திரிகள் தான் நன்கறிந்திருப்பார்கள். இவர்கள் ஒபாமாவுக்கு பரிசளிப்பது ஆச்சரியத்துக்குரியது அல்லவே. இந்தப்பரிசு தனக்குத் தகுதியுடையதா? இல்லையா என்பதை உணரமுடியாத ஒபாமாவுக்கு இது பரிசல்ல, பரிசுகெடுப்பாகும். தன் சொந்தநாட்டிலே தான் கொடுத்த வாக்குறுதிகளை நடைமுறைப்படுத்த முடியாமல் ஆடிக்கொண்டிருக்கிறார். இவரது சுகாதார மீழ்கட்டமைப்பு ஊர்ந்து கொண்டிருக்கிறது.

ஒபாமா இப்பரிசை மறுத்துரைத்து தான் சொன்னதை, சமாதானத்துக்கான பங்களிப்பை செய்த பின்பு எனக்கு இந்த சமாதானப்பரிசைத் தாருங்கள் என்று கூறியிருந்தால் ஒபாமா மதிப்புக்கும், மரியாதைக்கும் உரியவரே. நோபல் குழுவாவது தன்பிழைகளை உணர்ந்திருக்கும். தான் கொடுத்த வாக்குகளை நிறைவேற்ற முடியாது என்பதை அவர் உணர்ந்திருக்க வேண்டும், இதனால் கடைசிவரையும் கிடைக்க முடியாத ஒன்றை எப்படியாவது எடுத்து விடவேண்டும் என்று எண்ணினாரோ என்னவோ?

அல்பிரெட் நோபலின் சமாதானப் பரிசுக்கான முன்மொழிவில் முக்கியமானது இராணுவம், இராணுவத் தளபாடங்கள், இராணுவப்பலக் குறைப்பு என்பது. இதை ஒபாமா செய்தாரா? ஈராக்கில் இருந்து தன் இராணுவத்தை வெளியில் எடுப்பேன் என உறுதியளித்தவர் இன்னும் அதற்காக பெருமுயற்சியை செய்யவில்லை, மாறாக 15 000 அமெரிக்கப் போர்வீரர்களை நவீன இராணுவத் தளபாடங்களுடன் அனுப்பி வைத்துவிட்டு நோர்வேக்கு நோபல்பரிசு வாங்க வருகிறார். இவர் எந்தவிதத்திலும் மற்ற அரசியல்வாதிகளில் இருந்து வித்தியாசப்படவில்லை. இது பரிசளிப்பா? பரிசு அழிப்பா? பரிசு கெடுப்பா? இப் பரிசுகெட்ட பரிசைவாங்க ஒரு பரிசளிப்பு விழாவா?

ஒரு சமாதானத்துக்கான பரிசை வாங்கவரும் ஒருவரின் பாதுகாப்புக்காக பலமில்லியின் குரோண்கள் பாவிக்கப்படுகிறது. தெருவிலே கிடக்கும் அள்ளுறுகளின் வாய்மூடிகள் உலோகங்களால் ஒட்டப்படுகிறது. பலமுக்கிய வீதிகள் போக்குவரத்துக்குத் தடைசெய்யப் படுகின்றன. ஒஸ்லோவின் முக்கிய இடங்களில் நுழைவனுமதி மறுக்கப்படுகிறது. இவர் தங்கியிருக்கும் கிராண் கொட்டல் முற்றாக வெற்றிடமாக்கப்பட்டு ஒபாமாவுடன் வந்திருப்பவர்களுக்கு மட்டுமே கொடுக்கப்பட்டிருக்கிறது. கொட்டலுக்கு வெளியே ஒபாமா வந்து கையசைக்கும் வேளை யாரும் சுடாதிருக்க குண்டுகள் துளைக்கா கண்ணாடிகள் பொருத்தப்பட்டுள்ளது. ஒபாமாவின் பாதுகாப்புக்காக அமெரிக்காவிலிருந்து தனிவிமானத்தில் எடுத்து வரப்படுகிறது லீமுசீன் எனும் மோட்டார் வண்டி. இந்த மோட்டார் வண்டியை எந்தச் சன்னமும் துளைக்காது. குண்டுகள் உடைக்காது. 13மிமீ தடிப்புடைய சிறப்புத் தயாரிப்புக் கார் கண்ணாடியை பசுக்காவே நொருக்காது. இப்படியான பாதுகாப்புகளுடன் வரும் ஒபாமாவுக்கு ஏன் மில்லியன் பணச்செலவில் பாதுகாப்பு. பரிசை எல்லாம் வெள்ளை மாளிகையில் கொடுத்துவிட்டு செலவுசெய்யும் பணத்தைப் பிரயோசனமாக வறியநாடுகளின் வளர்ச்சிக்கோ ஏன் அமெரிக்காவில் வறுமைக் கோட்டின் கீழ்வாழும் கறுப்பின மக்களின் தொழில் வாய்ப்புக்கோ பயன்படுத்தியிருக்கலாமே.

இவர் வந்து இறங்கும் விமானநிலையத்தில் இருந்து ஒஸ்லோ வரை இராணுவப்பாதுகாப்பு. இப்பகுதிகளில் அசையும் கதலிகள் (இராடார்கள்) இராணுவ வாகனங்களில் பூட்டப்பட்டு தயார் நிலையில் உள்ளது. எந்த விமானமும் எல்லைக்குள் நுழையுமுன்னரே முன்னரே சுட்டுவிழுத்தக் கூடியவாறு பீரங்கிகள் மூக்கை நீட்டிக்கொண்டு நிற்கின்றன. இவ்வளவும் எதற்கு? சமாதானப்பரிசு பெறவரும் ஒபாமாவால் நோர்வே போர்கோலம் பூண்டிருக்கிறது எனலாம்.

இராணுவத்தையோ துப்பாக்கிகளையோ தெருவில் காணாத எமது பிள்ளைகள் பயப்படுகின்றனர். இப்படியான இராணுவ பொலிஸ் நடமாட்டத்தைக் கண்டு நோபல் பரிசே அழுகிறது, நாறுகிறது. சமாதானப் பரிசுக்கே போர் பயம் என்றால் சமாதானம் எங்கே? இது பரிசா? பரிசு கெடுப்பா? ஒருவனின் வருகைக்காக நாடே போர் வேடம் தாங்குகிறது என்றால் அவன் போரைக் கொண்டுவாறான் என்றுதானே அர்த்தம். இந்தப் பரிசு கெடுப்பை எப்படி யாரிடம் சொல்லுவது. பரிசைக் கொடுத்து சமாதானத்தைப் பரிசு கெடுக்கிறார்களே.

Related News: அமெரிக்க ஜனாதிபதிக்கு நோபல் பரிசு ? : என் எஸ் குமரன்

தரிசனம்! : நோர்வே நக்கீரா

criticsதரிசனம் – (தத்துவார்த்தக் கவிதை)

உன்முகத்தையே தரிசிக்க முடியாத நீயும்
என்றுமே உன்முகத்தையே தரிசிக்கும் நானுமாகத்தானே
இந்த உலகம் உருண்டு கொண்டிருக்கிறது.
நீ உனக்குரியவனே அல்ல.

முகத்தையே தரிசிக்க முடியாத நீ
அகத்தை எப்படித் தரிசிப்பாய்?
என்விமர்சனங்கள் மட்டுமே
உன் தரிசனம்.

கண்ணாடி முன்னாடி நின்று
பின்னாடியல்லவா தேடுகிறாய்
முன்னாடி நிற்பவனே!

அலங்காரம் செய்கிறாய்
யார் யாருக்கோ அழகாய் இருக்க.
உனக்காக நீ
எப்போ அழகாய் இருக்கப்போகிறாய்?

அது நீயே அல்ல
மாயையின் விம்பம்
நீயாக நீ நினைக்கும்
உன் எதிரி

கண்ணாடியின் பின்னாடி நிற்பவனை
எட்டி அடித்துப்பார்
மறுகையால் உன்னை அறைவான்.
இனியாவது புரிந்து கொள்வாயா
உனக்கு நீயேதான் எதிரி

நீ கண்ணாடியில் காண்பதெல்லாம்
நிதர்சனமே இல்லா தரிசனங்களே.

சுயவிமர்சனம் செய்
மனக்கண்ணாடியாவது தெழிவாகும்

உன்விம்பத்தை காண்பதற்கே
கண்ணா! உனக்கு
கண்ணாடியின் சேவை தேவை.
உன்னை நீ காண்பதற்கு
சுயவிமர்சனம் தேவை.

யார் யாரோ அழகுபார்க்க
மனச்சாட்சியைக் கொன்று
அலங்காரம் செய்யும் நீ
மனமெனும் கோயிலில்
மனச்சாட்சி முன் நின்று
உனக்கு நீயே அழகு செய்
சுயவிமர்சனம் எனும் பூசை செய்

உனக்கு நீயே பூசை செய்
செய்த பாவங்களுக்கு
கண்ணீரால் அபிசேகம் செய்;
சுயமாகும்; நிதர்சனம்
உன் சுயதரிசனம்.

ஆம் நீதானே கடவுள்
நீயே தான் கடவுள்.
கடந்தும் உள்ளவன் தானே கடவுள்
கடப்பாய் உன்னை கடவுளாக.

நோர்வே நக்கீரா
4.12.2009