செய்திகள்

செய்திகள்

செய்திகள்

படிக்கவில்லை என கூறி மாணவனை கடுமையாக தாக்கிய ஆசிரியை வவுனியாவில் கைது !

வவுனியா சுந்தரபுரம் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் தரம் இரண்டில் கல்வி பயிலும் மாணவன் மீது ஆசிரியர் கண்மூடித்தனமாக தாக்கியதில் மாணவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு நான்கு நாட்களின் பின்னர் குறித்த ஆசிரியர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

 

குறித்த ஆசிரியர் இன்று(07) காலை கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த மூன்றாம் திகதி பாடசாலை முடிந்து வீட்டிற்கு சென்ற சிறுவனின் முகத்திலும் தலையிலும் அடிகாயங்கள் காணப்பட்டதை அடுத்து பெற்றோர் சிறுவனிடம் விசாரித்ததில் அவரது ஆசிரியை தாக்கியதாக தெரிவித்துள்ளார்.

இதையடுத்து சிறுவனின் தந்தை குறித்த ஆசிரியருக்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு சிறுவனை தாக்கியதற்கான காரணம் என்ன மற்றும் காலிற்கு கீழ் அடித்து இருக்கலாமே என்றும் தெரிவித்துள்ளார்.

இதற்கு பதிலளித்த ஆசிரியர், உங்கள் மகனுக்கு அ, ஆ தெரியவில்லையென்றும், அதனாலேயே அடித்ததாகவும் மற்றும் அடிக்கும் போது சிறுவன் அங்கும் இங்கும் ஓடியதால் முகத்தில் அடிபட்டுவிட்டது என்றதோடு மகனுக்கு அடிக்காமல் கொஞ்சுவதா என ஆசிரியர் கேட்டுள்ளார்.

காயமடைந்த சிறுவன் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டமையுடன் காவல்துறையினரிடம் முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கடந்த நான்கு நாட்களாக சிறுவன் மீது தாக்குதல் மேற்கொண்ட ஆசிரியரை கைது செய்யப்படாமையினால் சமூக வலைத்தளங்களில் பொலிஸாருக்கு எதிரான கருத்துக்கள் வலுப்பெற்றிருந்தன.

 

இதையடுத்து வவுனியா ஈச்சங்குளம் பொலிஸார் இன்று காலை குறித்த ஆசிரியரை கைது செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

உயர் அதிர்காரிகளின் அறிவுறுத்தல்களுக்கு அமையவே மாணவர்களை பொலிஸ் நிலையம் அழைத்து விசாரணை செய்தோம் – மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் தெள்ளிப்பழை பொலிஸார்!

பொலிஸ் உயர் அதிகாரிகளின் அறிவுறுத்தலுக்கு அமையவே பாடசாலை மாணவர்களை பொலிஸ் நிலையம் அழைத்துச் சென்று, விசாரணைகளை முன்னெடுத்தோம் என தெல்லிப்பழை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

தெல்லிப்பழை யூனியன் கல்லூரியில் அண்மையில் நடத்தப்பட்ட இல்ல மெய்வல்லுனர் போட்டியின்போது, கார்த்திகை பூ அலங்காரம் செய்யப்பட்டமை தொடர்பில், மாணவர்கள் மற்றும் பாடசாலை நிர்வாகத்தினரிடம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.

 

இது தொடர்பில் ஆசிரியர் சங்கத்தினால் மனிதவுரிமை ஆணைக்குழுவிடம் யாழ்.பிராந்திய அலுவலகத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.

 

முறைப்பாட்டுக்கமைய, விசாரணைகளை முன்னெடுத்த மனிதவுரிமை ஆணைக்குழு, பொலிஸாரின் வாக்கு மூலத்தினை பெறுவதற்காக, தெல்லிப்பழை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியை கடந்த வெள்ளிக்கிழமை, மனித உரிமை ஆணைக்குழுவின் யாழ்.பிராந்திய அலுவலகத்தில் முன்னிலையாகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டது.

 

அதற்கிணங்க, யாழ். மனித உரிமை ஆணைக்குழுவில் முன்னிலையான பொலிஸ் உத்தியோகஸ்த்தர் ஒருவர், பொறுப்பதிகாரி விடுமுறையில் இருப்பதாகக் கூறி சம்பவம் தொடர்பிலான வாக்கு மூலத்தை வழங்கியுள்ளார்.

 

குறித்த வாக்குமூலத்தில், தமக்கு பொலிஸ் உயர் அதிகாரிகள் வழங்கிய அறிவுறுத்தலின் பிரகாரமே மாணவர்களை பொலிஸ் நிலையத்துக்கு அழைத்து விசாரணை செய்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

 

வாக்கு மூலங்களை பதிவு செய்துள்ள மனித உரிமை ஆணைக்குழுவின் பிராந்திய இணைப்பாளர், சம்பவம் தொடர்பான மேலதிக நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

தமிழ் மக்களுக்கு நிரந்தர அரசியல் தீர்வு கிடைக்கும் வரை தமிழரசு கட்சி போராடும் – இரா.சாணக்கியன்

தமிழ் மக்களுக்கு நிரந்தர அரசியல் தீர்வு கிடைக்கும் வரை தமிழரசு கட்சி போராடும் எனவும் மக்களின் வரிப்பணத்தில் இடம்பெறும் அபிவிருத்தித் திட்டங்கள் மக்களுக்கு திருப்தி அளிக்காதவிடத்து வடக்கில் அமைச்சருக்கு வெள்ளிக்கிழமை நடந்த அதே நிலை கிழக்கிலும் உள்ள அமைச்சர்களுக்கும் நடக்கும். மக்களால் அவர்களும் வெகுவிரைவில் துரத்தியடிக்கப்படுவார்கள். ஜனாதிபதி தேர்தலை தீர்மானிக்கும் முக்கிய சக்தியாக தமிழ் மக்கள் காணப்படுவார்கள் என பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார்.

 

மட்டக்களப்பு மாவட்டம் போரதீவு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட திக்கோடை கிராமத்தில் நேசக்கரங்கள் சமூக நல அமைப்பின் சாதனையாளர் பாராட்டு விழா நேற்று சனிக்கிழமை (06) அறிவொளி கல்வி நிலையத்தில் அமைப்பின் தலைவர் ந.கதிரவன் தலைமையில் நடைபெற்றது.

 

இதன்போது கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்,

 

இந்த நாட்டிலே வாழ முடியாத அளவிற்கு விலைவாசிகள் அதிகரித்துள்ளன. செலவுகள் அதிகரித்துள்ளன. இதனால் தற்காலத்தில் கிராமங்களிலுள்ள இளைஞர்கள் மத்திய கிழக்கு நாடுகளிலே தொழிலுக்காகச் சென்றுள்ளனர். எதிர்காலத்தில் தேர்தல்கள் வரும்போது அதில் மக்கள் தீர்க்கமான முடிவெடுக்கும்போது, மாற்றங்களை நாம் கொண்டுவரலாம். ஜனாதிபதித் தேர்தலிலே சாணக்கியன் எம்.பியை போட்டியிட வைக்கலாமே என சிங்கள சகோதரர் வினவியதாக அதிபர் ஒருவர் என்னிடம் தெரிவித்தார்.

 

இந்த நாட்டிலே ஜனாதிபதித் தேர்தல் வருவதற்கான சந்தர்ப்பம் உள்ளது. ஜனாதிபதித் தேர்தலிலே பேரம் பேசுவதற்காக பலர் அணி அணியாக சேர்ந்துகொண்டு செல்கின்றார்கள். கிழக்கிலுள்ள முஸ்லிம் மக்கள் அனைவரும் ஒன்றிணைந்தால தாம் பேரம் பேசும் சக்தியாக திகழலாம் என ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். அது அவர்களின் நிலைப்பாடு.

 

ஆனால் தமிழ் சமூகமாகிய நாங்களும், எங்களை பலப்படுத்த வேண்டிய காலப்பகுதி இதுவாகும். இலங்கைத் தமிழரசுக் கட்சி 1949ஆம் ஆண்டிலிருந்து இந்த நாட்டிலே தமிழ் மக்களுக்கு ஒரு அரசியல் தீர்வினை நோக்கி செயற்பட்டுக்கொண்டு வருகின்றது. அதற்காக நாங்கள் மக்களுக்குக் காட்டும் வழியிலே மக்கள் நின்று செயற்பட்டால் எமது பிரச்சினைகளை தீர்த்துக்கொள்வதற்கு அது ஒரு சந்தர்ப்பமாக அமையும். எனவே, நாங்கள் அனைவரும் ஒரே அணியாக நின்று செயற்பட்டால் நாங்கள்தான் இந்த நட்டில் அடுத்த ஜனாதிபதி யார் என்பதைத் தீர்மானிக்கும் சக்தியாக இருப்போம் என்றார்.

 

இதன்போது பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனால் சாதனையாளர்களுக்கான நினைவுச் சின்னமும் வழங்கப்பட்டன.

நாடளாவிய ரீதியில் உணவுப்பாதுகாப்பின்மை நிலைவரம் தீவிரமடைந்துவருதிறந்து – உலக உணவுத் திட்ட அறிக்கை!

2023 நவம்பர் மாதம் மேற்கொள்ளப்பட்ட மதிப்பீட்டின்படி நாடளாவிய ரீதியில் உணவுப்பாதுகாப்பின்மை நிலைவரம் தீவிரமடைந்துவருவதாகவும், இதன்விளைவாக பெருந்தோட்டப்பகுதி மக்கள் பாதிப்படைந்திருப்பதாகவும் 2023 ஆம் ஆண்டுக்கான உலக உணவுத்திட்டத்தின் வருடாந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

 

ஐக்கிய நாடுகள் சபையின் முகவரமைப்புக்களின் ஒன்றான உலக உணவுத்திட்டம் கடந்த இருவருடங்களாகப் பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்துவரும் இலங்கைக்கு பல்வேறு வழிகளிலும் உதவிகளை வழங்கிவருகின்றது.

 

அதன்படி கடந்த ஆண்டில் இலங்கையின் பொருளாதார நிலைவரம், உணவுப்பாதுகாப்பு நிலை, வழங்கப்பட்ட உதவிகள் போன்ற தகவல்களை உள்ளடக்கி உலக உணவுத்திட்டத்தினால் வெளியிடப்பட்டுள்ள 2023 ஆம் ஆண்டுக்கான வருடாந்த அறிக்கையில் சேர்க்கப்பட்டுள்ள முக்கிய விடயங்கள் வருமாறு,

 

உணவு மற்றும் விவசாய அமைப்புடன் இணைந்து கடந்த ஆண்டு மார்ச் மாதம் நாம் முன்னெடுத்த உணவுப்பாதுகாப்பு மதிப்பீட்டின் பிரகாரம் நாடளாவிய ரீதியில் 17 சதவீதமானோர் மிதமான உணவுப்பாதுகாப்பின்மை நிலைக்கு முகங்கொடுத்திருப்பதாகக் கணிப்பிடப்பட்டது.

 

கடந்த 2022 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த நிலைவரம் ஓரளவு முன்னேற்றமடைந்திருப்பினும், அன்றாட கூலித்தொழிலாளர்கள், பெண் தலைமைத்துவக் குடும்பங்கள், பெருந்தோட்டப்பகுதிகளில் பணிபுரிவோர் உள்ளடங்கலாக வறிய மற்றும் நலிவுற்ற சமூகப்பிரிவினர் தற்போதும் மிகையான சவால்களுக்கு முகங்கொடுத்துவருகின்றனர்.

 

கடந்த ஆண்டு மார்ச் மாதம் மேற்கொள்ளப்பட்ட மதிப்பீட்டின் தொடர்ச்சியாக நவம்பர் மாதம் மேற்கொள்ளப்பட்ட மதிப்பீட்டில் உணவுப்பாதுகாப்பு நிலைவரம் மிகமோசமடைந்துவருவது கண்டறியப்பட்டதுடன், குறிப்பாக பெருந்தோட்டப்பகுதிகள் இதனால் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

 

பொருளாதார நெருக்கடியை அடுத்து உணவுப்பொருள் உற்பத்தி மற்றும் விநியோகத்தில் ஏற்பட்ட வீழ்ச்சியின் காரணமாக நாட்டின் போசணை மட்டம் வெகுவாகப் பாதிப்படைந்துள்ளது. 2023 இல் 5 வயதுக்குக் குறைந்த சிறுவர்களில் 120,230 பேர் மிதமான மந்தபோசணை நிலைக்கு முகங்கொடுத்துள்ளனர்.

 

மேலும் இலங்கை அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுவரும் சமூகப்பாதுகாப்பு செயற்திட்டங்கள் நாட்டின் மொத்த சனத்தொகையில் 27 சதவீதமானோரைச் சென்றடைந்திருப்பதுடன், இந்தப் பெறுமதி ஏனைய அயல்நாடுகளுடன் ஒப்பிடுகையில் மிக உயர்வானதாகும். இருப்பினும் இச்செயற்திட்டங்களை ஒருங்கிணைத்தல், முறையான கண்காணிப்பை மேற்கொள்ளல் போன்றவற்றில் அரசாங்கம் பல்வேறு சவால்களுக்கு முகங்கொடுத்துள்ளது.

 

உலக உணவுத்திட்டத்தின் இவ்வருடாந்த அறிக்கையின் பிரகாரம் இலங்கைக்கான முதலாம் கட்ட உதவி வழங்கலின் ஊடாக சுமார் ஒரு மில்லியன் பாடசாலை மாணவர்களுக்கு பாடசாலை உணவும், 1.2 மில்லியன் பேருக்கு நிதி மற்றும் உணவுசார் உதவிகளும் வழங்கப்பட்டுள்ளன.

 

அதுமாத்திரமன்றி பாடசாலை உணவு வழங்கல் திட்டத்தைத் தொடர்ந்து முன்னெடுப்பதற்காக 12,817 மெட்ரிக் தொன் அரிசி, சோளம், சோயா என்பன பாடசாலைகளுக்கு வழங்கப்பட்டுள்ளன. அத்தோடு பொருளாதார நெருக்கடியினால் மிகமோசமாகப் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சுமார் 11.7 மில்லியன் டொலர் பெறுமதியான நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.

வட-கிழக்கில் பொதுமக்களின் காணிகளை அடிப்படையாகக்கொண்டு எழுந்திருக்கும் குழப்பங்கள் சமூக ஒருமைப்பாடு தொடர்பில் தீவிர கரிசனைகளைத் தோற்றுவித்துள்ளது – ஐ.நா அறிக்கை!

இவ்வாண்டில் நிலைபேறான அபிவிருத்தியை அடைந்துகொள்வதற்கான இலங்கையின் இயலுமையானது வரி வருமானத்தை அதிகரித்தல், சமூகப்பாதுகாப்பு செயற்திட்டங்களை வலுப்படுத்தல், நிதியியல் – கட்டமைப்பு மறுசீரமைப்புக்களை மேற்கொள்ளல் ஆகிய செயற்திறன்மிக்க மறுசீரமைப்புக்களிலேயே தங்கியிருப்பதாக சுட்டிக்காட்டியுள்ள ஐக்கிய நாடுகள் சபை, இவ்வருடம் தேசிய தேர்தல்கள் நடைபெறவிருக்கும் பின்னணியில் இவை அரசியல் களத்தில் வலுவான தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்வுகூறியுள்ளது.

 

அதேவேளை வட, கிழக்கு மாகாணங்களில் மதவழிபாட்டு இடங்கள் மற்றும் பொதுமக்களின் காணிகளை அடிப்படையாகக்கொண்டு எழுந்திருக்கும் குழப்பங்கள் சமூக ஒருமைப்பாடு தொடர்பில் தீவிர கரிசனைகளைத் தோற்றுவித்திருப்பதாகவும் ஐ.நா தெரிவித்துள்ளது.

 

ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கிளை அலுவலகத்தினால் வெளியிடப்பட்டுள்ள 2023 ஆம் ஆண்டுக்கான வருடாந்த அறிக்கையில் மேற்கூறப்பட்ட விடயம் உள்ளடங்கலாக கடந்த ஆண்டில் இலங்கையின் சமூக, பொருளாதார நிலைவரம், ஐக்கிய நாடுகள் சபையின் முகவரமைப்புக்களால் இலங்கைக்கு வழங்கப்பட்ட உதவிகள், முன்னெடுக்கப்பட்ட திட்டங்கள், அடையப்பட்ட முன்னேற்றங்கள், இவ்வாண்டில் இலங்கை தொடர்பான இலக்குகள் போன்ற பல்வேறு விடயங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.

 

தேசிய ரீதியில் முன்னுரிமைக்குரிய விடயங்களையும், நிலையான அபிவிருத்தி இலக்குகளையும் அடைந்துகொள்வதற்கு ஐக்கிய நாடுகள் சபையினால் இலங்கைக்கு வழங்கப்பட்ட உதவிகளையும், அரசாங்கம் மற்றும் சிவில் சமூக அமைப்புக்களுடன் இணைந்து கூட்டு இணக்கப்பாடு எட்டப்பட்ட 2023 – 2027 வரையான ஐ.நா நிலையான அபிவிருத்தி ஒத்துழைப்பு செயற்திட்டத்துக்கு அமைய அடையப்பட்ட முன்னேற்றங்களையும் இவ்வறிக்கை வெளிக்கொண்டுவந்திருப்பதாக இலங்கைக்காக ஐ.நா வதிவிடப்பிரதிநிதி மார்க்-அன்ட்ரூ பிரென்ச் தெரிவித்துள்ளார்.

 

‘2023 இல் இலங்கைக்கான எமது மனிதாபிமான உதவிகள் மீட்சி மற்றும் நிலைபேறான அபிவிருத்தி என்பவற்றை நோக்கி நிலைமாற்றமடைந்தன. அது இலங்கை மக்களின் மீண்டெழும் தன்மையையும், எமது முகவர்களின் அர்ப்பணிப்பையும் வெளிக்காட்டும் வருடமாக அமைந்திருந்தது. சமூகப்பாதுகாப்பை உறுதிப்படுத்தும் அதேவேளை, மறுசீரமைப்புக்களை மேற்கொள்வதற்கும், வறுமையைத் தணிப்பதற்கும் இலங்கையால் முன்னெடுக்கப்பட்டுவரும் முயற்சிகளுக்கு தொடர்ச்சியான ஒத்துழைப்பை வழங்க நாம் தயாராக இருக்கின்றோம். எதிர்வரும் வருடத்தில் தேர்தல்கள் நடைபெறவுள்ள நிலையில், இலங்கை நிலைபேறான அபிவிருத்திக்கான தேசிய இலக்கை அடைந்துகொள்வதற்கு நாம் உதவுவோம்’ எனவும் அவர் உறுதியளித்துள்ளார்.

இலங்கை தொடர்பான ஐ.நாவின் வருடாந்த அறிக்கையின்படி 2023 இல் நாடளாவிய ரீதியில் சுமார் 2 இலட்சம் பேருக்கு நிதிசார் உதவிகளும், 2 மில்லியனுக்கு மேற்பட்டோருக்கு உணவுப்பொருள் உதவிகளும் வழங்கப்பட்டுள்ளன.

 

அதேவேளை ‘2022 இல் தீவிர பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்திருந்த இலங்கையில் 2023 இல் மீட்சிக்கான குறிகாட்டிகள் தென்பட்டன. வெளிநாட்டுப்பணவனுப்பல்கள், சுற்றுலாத்துறை வருமானம் மற்றும் ஏற்றுமதி வருமானம் என்பவற்றில் ஏற்பட்ட தொடர் அதிகரிப்பு எரிபொருள், உணவு, மருந்து போன்ற அத்தியாவசியப்பொருட்களின் இறக்குமதியை இலகுபடுத்தியது. எவ்வாறிருப்பினும் பொருளாதார மற்றும் மனிதவள அபிவிருத்தி நிலைவரம் தொடர்ந்தும் சவால் மிக்கதாகவே காணப்பட்டது’ என ஐ.நாவின் வருடாந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

 

‘2023 மார்ச் மாதம் நடாத்துவதற்கு உத்தேசிக்கப்பட்டிருந்த உள்ளுராட்சி மன்றத்தேர்தல்கள் நிதிநெருக்கடியைக் காரணங்காட்டி பிற்போடப்பட்டமை ஜனநாயக நிர்வாகம் தொடர்பில் கரிசனைகளைத் தோற்றுவித்திருந்தது. 2024 இல் தேசிய தேர்தல்களைத் தொடர்ந்து 2025 இல் மாகாணசபை மற்றும் உள்ளுராட்சி மன்றத்தேர்தல்கள் நடாத்தப்படுமென ஜனாதிபதி அறிவித்தார். அதேபோன்று பிரதானமாக பொருளாதார கொள்கைத்தீர்மானங்களால் தூண்டப்பட்ட சில ஆர்ப்பாட்டங்கள் சட்ட அமுலாக்கப்பிரிவினரால் மிகக்கடுமையான முறையில் கையாளப்பட்டன. சமூகங்களுக்கு இடையிலான அமைதியின்மை, குறிப்பாக வட, கிழக்கு மாகாணங்களில் மதவழிபாட்டு இடங்கள் மற்றும் மக்களின் காணிகளை அடிப்படையாகக்கொண்ட குழப்பங்கள் என்பன சமூக ஒருமைப்பாடு தொடர்பில் தீவிர கரிசனைகளைத் தோற்றுவித்துள்ளன’ என்றும் ஐ.நா அதன் அறிக்கையில் விசனம் வெளியிட்டுள்ளது.

 

மேலும் ‘2023 இல் அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்ட நிகழ்நிலைக்காப்பு சட்டமூலம், ஒளிபரப்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு சட்டமூலம், பயங்கரவாத எதிர்ப்புச்சட்டமூலம், அரச சார்பற்ற அமைப்புக்கள் தொடர்பான சட்டமூலம் என்பவற்றுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியிருந்ததுடன், போதைப்பொருள் கடத்தலுக்கு எதிராக இலங்கை அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட ‘யுக்திய’ செயற்திட்டம் மனித உரிமை மீறல்களுக்கு வழிகோலுவதாக தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் பல்வேறு தரப்பினராலும் குற்றஞ்சாட்டப்பட்டது’ என அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இந்நிலையில் 2024 இல் நிலைபேறான அபிவிருத்தியை அடைந்துகொள்வதற்கான இலங்கையின் இயலுமையானது வரிவருமானத்தை விரிவுபடுத்தல், சமூகப்பாதுகாப்பு செயற்திட்டங்களை வலுப்படுத்தல், நிதியியல் மற்றும் கட்டமைப்பு ரீதியான மறுசீரமைப்புக்களை மேற்கொள்ளல் ஆகிய செயற்திறன்மிக்க மறுசீரமைப்பு நடவடிக்கைகளில் தங்கியிருப்பதாக சுட்டிக்காட்டியுள்ள ஐக்கிய நாடுகள் சபை, இவ்வருடம் தேசிய தேர்தல்கள் நடைபெறவுள்ள பின்னணியில் இவை அரசியல் களத்தில் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தும் எனக் குறிப்பிட்டுள்ளது.

 

இவ்வாறானதொரு பின்னணியில் இலங்கையின் நிலைபேறானதும், அனைவரையும் உள்ளடக்கியதுமான மீட்சிக்கு உதவுதல், நிலையான சமாதானத்தை உறுதிசெய்தல், ஊழல் மோசடிகளை உரியவாறு கையாள்வதற்கும், ஆட்சியியல் நிர்வாகத்தை மேம்படுத்துவதற்கும் ஒத்துழைப்பு வழங்கல், காலநிலைமாற்ற சவால்களைக் கையாள்வதற்கான நடவடிக்கைகளை ஊக்குவித்தல் ஆகியவற்றுக்கே இவ்வாண்டு தாம் முக்கியத்துவம் வழங்கவிருப்பதாக இவ்வருடாந்த அறிக்கை ஊடாக இலங்கையிலுள்ள ஐ.நா அலுவலகம் தெரிவித்துள்ளது.

பொன்னாவெளி மக்களின் நியாயமான கோரிக்கைகளை ஒருபோதும் நிராகரிக்க முடியாது. – மு. சந்திரகுமார்

தாங்கள் காலம் காலமாக வாழ்ந்த பூர்வீக நிலங்கள் பாதிக்கப்பட்டு தங்களின் இருப்பு கேள்விக்குள்ளாக்கப்பட்டு மக்களுக்கும் பிரதேசத்துக்கும் ஆபத்தை ஏற்படுத்தும் முதலீட்டு முயற்சிகளை தங்களது பிரதேசத்துக்குள் அனுமதிக்காதீர்கள் என்ற பொன்னாவெளி மக்களின் நியாயமான கோரிக்கைகளை ஒருபோதும் நிராகரிக்க முடியாது. அவர்களின் கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டு முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளை சமத்துவக் கட்சி வன்மையாக கண்டிக்கிறது என அக்கட்சியின் பொதுச் செயலாளர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மு. சந்திரகுமார் தெரிவித்துள்ளார்.

 

பொன்னாவெளியில் நேற்று (05) இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

 

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது :

 

பொன்னாவெளி பிரதேசத்தில் மேற்கொள்ளப்படவுள்ள சுன்னக்கல் அகழ்வு காரணமாக அப்பிரதேசத்தில் ஐந்துக்கு மேற்பட்ட கிராமங்கள் முற்றுமுழுதாக பாதிக்கப்படும்.

 

100 மீற்றருக்கு மேல் ஆழத்தில் மேற்கொள்ளப்படவுள்ள சுன்னக்கல் அகழ்வு காரணமாக அந்த பிரதேசம் முழுவதும் உவராக மாறிவிடும். இதனால் காலம் காலமாக பூர்வீகமாக வாழ்ந்து வந்த மக்கள் தங்களின் சொந்த நிலத்தை விட்டு வெளியேறவேண்டிய துர்ப்பாக்கிய நிலைமை உருவாகும். எனவே தங்களது பிரதேசத்தில் முன்னெடுக்கப்படவுள்ள சுன்னக்கல் அகழ்வு நடவடிக்கையினை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என அம்மக்கள் தெரிவிப்பதில் எவ்வித தவறும் இல்லை.

 

அந்த மக்கள் இன்றைக்கு 270 நாட்களை கடந்து அமைதி வழியில் தங்களது நிலத்தை பாதுகாக்க போராடி வருகின்றார்கள். எனவே அவர்களின் நியாயமான போராட்டத்தை மதித்து நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமே தவிர, வன்முறைகளை தூண்டிவிடும் வகையில் வெளி பிரதேசங்களிலிருந்து மக்களை அழைத்துச் சென்று இனத்துக்குள்ளே மோதவிட்டு அதில் தங்களின் சுயலாபங்களை நிறைவேற்றிக்கொள்ளும் மிக மோசமான நடவடிக்கைகளை மக்களோடு நின்று சமத்துவக் கட்சியும் வன்மையாக கண்டிக்கிறது.

 

மேலும், பொன்னாவெளி மக்களோடு நாம் தொடர்ந்தும் நிற்போம். அவர்களின் நியாயமான கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை குரல் கொடுப்போம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

அநுரகுமார திஸாநாயக்கவின் பேச்சில் தமிழர்களுக்கான நம்பிக்கை ஒளிக்கீற்று எதுவும் தென்படவில்லை – சிறீதரன் காட்டம் !

அநுரகுமார திஸாநாயக்க யாழ்ப்பாணத்தில் ஆற்றிய உரையில் தமிழர்களுக்கான நம்பிக்கை ஒளிக்கீற்று எதுவும் தென்படவில்லை எனவும், மாறாக ஏனைய சிங்களத் தலைவர்களை விடவும் தமிழர் நலன்கள் தொடர்பான மிகக் குறைந்தளவிலான கரிசனையுடனேயே அவர் பேசியிருக்கின்றார் எனவும் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான எஸ்.சிறிதரன் விசனம் வெளியிட்டுள்ளார்.

 

யாழ்ப்பாணத்தில் கடந்த வியாழக்கிழமை (04) நடைபெற்ற இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் வட மாகாண மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றிய தேசிய மக்கள் சக்தியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான அநுரகுமார திஸாநாயக்க, ‘எமக்கு வாக்களியுங்கள் என்றோ, 13 பிளஸ் தருகின்றோம் அல்லது சமஷ்டியை தருகின்றோம் – எமக்கு வாக்களியுங்கள் என்றோ கூறுவதற்காக நான் இங்கு வரிவல்லை. வடக்கு, கிழக்கு, தெற்கு என்ற பிரதேச பேதங்களும், இன, மதபேதங்களுமின்றி நாம் அனைவரும் கூட்டு முயற்சியுடன் ஒன்றிணையவேண்டும். நாட்டை புதியதொரு பாதையில் கொண்டுசெல்லவேண்டும். தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதை முன்னிறுத்தி ஒன்றிணைந்து அரசாங்கத்தை அமைக்க முன்வருமாறு வடக்கின் அரசியல் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கின்றேன்’ என்று தெரிவித்தார்.

 

இது குறித்து கருத்து வெளியிட்ட இலங்கை தமிழ் அரசுக் கட்சித் தலைவர் எஸ்.சிறிதரன், அநுரகுமார திஸாநாயக்கவின் உரையில் தமிழர்களுக்கான நம்பிக்கை ஒளிக்கீற்று எதுவும் தென்படவில்லை எனவும், மாறாக, ஏனைய சிங்களத் தலைவர்களை விடவும் தமிழர் நலன்கள் தொடர்பான மிகக் குறைந்தளவிலான கரிசனையுடனேயே அவர் பேசியிருக்கின்றார் எனவும் சுட்டிக்காட்டினார்.

 

அதேபோன்று யுத்தம் தீவிரமடைந்திருந்த காலகட்டத்தில் சுமார் 40,000 இராணுவ வீரர்களை இணைத்தமை, இந்திய – இலங்கை ஒப்பந்தத்தின் ஊடாக ஏற்படுத்தப்பட்ட வடக்கு, கிழக்கு இணைப்பை பிரிப்பதில் முன்னின்று செயற்பட்டமை, யுத்தத்தில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டபோது அதுகுறித்து குறைந்தபட்சம் அனுதாபம் கூட வெளியிடாமை போன்ற பல்வேறு பிரச்சினைக்குரிய விடயங்கள் அநுரகுமார திஸாநாயக்க தரப்பில் காணப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

 

அண்மைய காலங்களில் வட, கிழக்கு மாகாணங்களில் பௌத்த பிக்குகளின் பங்கேற்புடன் இடம்பெற்றுவரும் அத்துமீறல்கள் தொடர்பில் அநுரகுமார திஸாநாயக்க ஒருமுறைகூட கண்டனத்தை வெளிப்படுத்தவில்லை எனக் குறிப்பிட்ட சிறிதரன், இன மதவாதமற்ற, அனைத்து மக்களுக்குமான சிறந்த தலைவர் என்ற ரீதியில் அநுரகுமார திஸாநாயக்க முதலில் தன்னை முன்னிலைப்படுத்தவேண்டும் என்று வலியுறுத்தினார்.

 

மேலும், 13 ஆவது திருத்தம் அல்லது சமஷ்டி முறையிலான தீர்வு குறித்து எவ்வித உத்தரவாதத்தையும் வழங்குவதற்கு தான் வரவில்லை என்று கூறுபவருக்கு தமிழ் மக்கள் எந்த அடிப்படையில் வாக்களிப்பார்கள் என்று கேள்வி எழுப்பிய சிறிதரன், அநுரகுமார திஸாநாயக்க தமிழர்களிடத்தில் மாத்திரமன்றி, சிங்கள மக்கள் மத்தியிலேயே இன்னமும் தன்னை ஒரு சிறந்த தலைவனாக காண்பிக்கவில்லை என்றார்.

“எனக்கு வந்தால் ரத்தம். அடுத்தவனுக்கு வந்தால் தக்காளி சட்னியா”  – சுஜி கூல் என்ற பெண் தாக்கப்பட்டமை தொடர்பான தேசம் திரை காணொளி!

சுஜி கூல் என்ற பெண் தாக்கப்பட்டது தமிழ் தேசியவாதிகளின் ஆணாதிக்கத்தையும் – தன்கீழ் உள்ளவர்களை அடக்கும் அவர்களின் மனோநிலையையுமே வெளிப்படுகின்றது.

 

 

மனித உரிமைகள் செயற்பாட்டாளர் நளினி ரத்னராஜாவுடன் பரபரப்பான ஓர் கலந்துரையாடலை காண கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்..!

இலங்கையில் சுமார் 57 இலட்சத்து 77 ஆயிரம் பேர் வறுமையில் !

இலங்கையில் சுமார் 57 இலட்சத்து 77 ஆயிரம் பேர் வறுமையில் வாடுவதாக உலக வங்கியின் அண்மைய அறிக்கை கூறுவதாக பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதார மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களத்தின் பேராசிரியர் வசந்த அத்துகோரள தெரிவித்துள்ளார்.

 

அதிக பணவீக்கம், மக்களின் வருமானம் அதிகரிப்பு, வேலை இழப்பு மற்றும் வருமானம் வீழ்ச்சி போன்ற காரணங்களால் இவர்கள் வறுமையில் வாடுவதாக உலக வங்கி சுட்டிக்காட்டியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறைந்த நடுத்தர வருமானம் பெறும் மற்றும் ஒரு நாளைக்கு 3.65 டொலர் என்ற வரம்பை கணக்கில் எடுத்துக்கொண்டு உலக வங்கி நடத்திய ஆய்வில் இந்தத் தகவல் தெரியவந்துள்ளது.

இதற்கிடையில், வறுமையில் வாடும் மக்களின் எண்ணிக்கை இந்த ஆண்டு இரண்டு இலட்சமாகவும், அடுத்த ஆண்டு மூன்று இலட்சமாகவும் குறையும் என்று வங்கி கணித்துள்ளது.

 

இதேவேளை இலங்கையின் அபிவிருத்தி முன்னேற்றம் தொடர்பாக உலக வங்கி வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

மாவீரர் நாளை தடுப்பதற்கான அனைத்து சட்டங்களையும் அமுல்படுத்துவதற்கு, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது – பொலிஸ் மா அதிபர் தேசபந்து

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் அனுஸ்டிக்கப்படுகின்ற மாவீரர் நாளை தடுப்பதற்கான அனைத்து சட்டங்களையும் அமுல்படுத்துவதற்கு, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

 

இராணுவத்தின் முன்னாள் புலனாய்வு அதிகாரியான ஆனந்த ஜயமான்னவினால் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு நேற்றையதினம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டிருந்தது.

 

மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களான கரலியத்த மற்றும் மாயாதுன்னே, கோரையா ஆகியோர் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டிருந்தது.

 

இதேவேளை வழக்கின் பிரதிவாதிகள் சார்பில் மன்றில் முன்னிலையான அரசாங்க சட்டத்தரணி ஷமிந்த விக்ரம, மகாவீரர் கொண்டாட்டங்கள் தொடர்பில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள் தொடர்பான முழுமையான அறிக்கையை தாம் சமர்ப்பித்துள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

 

இதனைத் தொடர்ந்து பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் நீதிமன்றில் நேற்று வாக்குமூலமொன்றையும் வழங்கியிருந்தார்.

 

வடக்கு கிழக்கிலுள்ள மாவீரர் துயிலும் இல்லங்களில் இடம்பெறுகின்ற நினைவு நாளுக்கு எதிராக சட்டத்தை சிறந்த முறையில் அமுல்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பொலிஸ் மா அதிபர் மன்றில் குறிப்பிட்டிருந்தார்.

 

இவ்வாறான சட்டவிரோத நிகழ்வுகள் தொடர்பில் அதிகபட்சமாக சட்டத்தை தொடர்ந்து அமுல்படுத்தவுள்ளதாக நீதிமன்றில் அரசாங்கம் சார்மாக முன்னிலையான சட்டத்தரணியும் குறிப்பிட்டுள்ளார்.

 

முன்வைக்கப்பட்ட உண்மைகளை பரிசீலித்த மனுதாரர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி, இந்த சட்டவிரோத செயல் தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுப்பதாக பொலிஸ் மா அதிபர் நீதிமன்றில் உறுதிமொழி வழங்கியிருப்பதால், இந்த மனுவை தொடர வேண்டிய அவசியமில்லை என்றும் குறிப்பிட்டார்.

 

இதன்படி, குறித்த மனுவை வாபஸ் பெறுவதற்கு அனுமதி வழங்குமாறு சட்டத்தரணி நீதிமன்றில் கோரிக்கை விடுத்தார்.

 

இதனைத் தொடர்ந்து மனு மீதான விசாரணையை நிறைவு செய்வதாக மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்கள் குழாம் அறிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.