செய்திகள்

செய்திகள்

செய்திகள்

வவுனியா சிறைச்சாலையில் உணவகம், சிகையலங்கார நிலையம் என்பன திறந்துவைப்பு !

வவுனியா சிறைச்சாலையில் உணவகம், சிகையலங்கார நிலையம் என்பன திறந்துவைக்கப்பட்டதுடன், விடுதிக்கான அடிக்கல்லும் சிறைச்சாலை ஆணையாளர் நாயகத்தால் நட்டு வைக்கப்பட்டது.

வவுனியா ஏ9 வீதியோரமாக சிறைச்சாலையுடன் இணைந்த வளாகத்தில் இன்று (11) இந்த நிகழ்வு நடைபெற்றது.

வவுனியா சிறைச்சாலையில் நீண்டகாலமாக தண்டனை பெற்று தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளை கொண்டு உணவகம் மற்றும் சிகையலங்கார நிலையம் என்பன நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

இந்த உணவகம் மற்றும் சிகையலங்கார நிலையம் என்பவற்றினை நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளே நடத்தவுள்ளனர். அவர்கள் சிறையில் உள்ள காலத்தை பயனுள்ள வகையில் பயன்படுத்துவதற்கும், அவர்களது மனநிலையில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இவ்விரு நிலையங்களையும் சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் துசார உப்புல் தெனிய திறந்துவைத்தார். அத்துடன், விடுதி ஒன்றை நிர்மாணிப்பதற்கான அடிக்கல்லும் நட்டுவைக்கப்பட்டது.

வவுனியா சிறைச்சாலை அத்தியட்சகர் கே.ஏ.எஸ்.அபயரட்ண தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் துசார உப்புல் தெனிய, இராணுவத்தின் வன்னி கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் தினேஸ் நாணயக்கார, சிறைச்சாலை உத்தியோகத்தர்களின் பொறுப்பதிகாரி ஏ.டீ.புத்திக்க பெரேரா, பௌத்த மதகுருமார், சிறைச்சாலை உத்தியோகத்தர்கள், பொலிஸ் அதிகாரிகள், சிறைச்சாலை நலன் பேணும் அமைப்பினர், சிறைக் கைதிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

கொக்கட்டிச்சோலையில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வாரம்!

கிழக்கில் மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலையில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வாரத்தை முன்னிட்டு  தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சியினரால் இன்று சனிக்கிழமை (11) கஞ்சி வழங்கும் நிகழ்வு ஆரம்பித்துவைக்கப்பட்டது.

2009 மே 18 முள்ளிவாய்க்காலில் தமிழ் மக்களுக்கு எதிராக இடம்பெற்ற இனப்படுகொலையை முன்னிட்டு மே 11ஆம் திகதி தொடக்கம் 18ஆம் திகதி வரை கஞ்சி வாரம் அனுஷ்டிக்கப்படுகிறது.

வருடாவருடம் கஞ்சி வாரம் இடம்பெற்றுவரும் நிலையில், இம்முறை தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சியினர், கிழக்கில் மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை மகிழடித்தீவில் 1990ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட 152 பொதுக்களின் நினைவாக அமைக்கப்பட்ட நினைவுத்தூபியருகில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் வாரத்தை கட்சியின் தேசிய அமைப்பாளர் த.சுரேஸ் தலைமையில் ஆரம்பித்துவைத்தனர்.

இதன்போது கட்சியின் ஆதரவாளர்கள் மற்றும் அப்பகுதியில் வசிப்பவர்களுக்கு கஞ்சி வழங்கப்பட்டது.

இந்த நாட்டில் சுயலாப தேவைக்காக ஜனாநாயக உரிமைகளைப் பயன்படுத்துகின்றனர். – நாமல் ராஜபக்ச குற்றச்சாட்டு!

இலங்கையில் ஆட்சிக் கவிழ்ப்பை முன்னெடுப்பதற்காக மே 9 காலிமுகத்திடல் பேராட்டத்திற்கு வழிவகுத்ததாக சிறிலங்கா பொதுஜன பெரமுனவின்் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு நேற்று (09) கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்

“மே 9 தாக்குதல் இடம்பெற்று இன்றுடன் 2 வருடங்கள் பூர்த்தியாகின்றது. போராட்டத்தை விட அதனை முன்னெடுத்தவர்கள் பயங்கரவாதிகளாகச் சித்தரிக்கப்பட்டுள்ளனர்.போராட்டத்தில் காயமடைந்தவர்கள் இன்னும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். சொத்துக்கள் வாகனங்கள் என்பன சேதமாக்கப்பட்டன.

இந்த நாட்டில் சுயலாப தேவைக்காக ஜனாநாயக உரிமைகளைப் பயன்படுத்துகின்றனர்.

நாட்டு மக்கள் புத்திசாலிகள். எனவே போலி வாக்குறுதிகளை வழங்கி அரசியல் இலாபம் தேடுபவர்களிடம் ஏமாற மாட்டார்கள் என்ற நம்பிக்கை உள்ளது“. என நாமல் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ரஷ்யாவின் இராணுவ சேவைக்காக இலங்கை இளைஞர்களை அனுப்பும் வியாபாரம் – எச்சரிக்கிறார் அமைச்சர் மனுஷ நாணயக்கார !

ஆட்கடத்தல்காரர்கள் சிலர் இணைந்து ரஷ்யாவின் இராணுவ சேவைக்காக இலங்கை இளைஞர்களை அனுப்பும் வியாபாரம் இந்த நாட்களில் மேற்கொண்டு வருகின்றனர். இந்த வியாபாரத்தில் யாரும் சிக்கிக்கொள்ள வேண்டாம் எனத் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார்.

சுற்றுலா வீசா ஊடாக ரஷ்யா இராணுவ சேவையில் இணைந்துகொண்டு பல்வேறு நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ள சில குடும்பத்தினர் வியாழக்கிழமை (9) அமைச்சரைச் சந்தித்து கலந்துரையாடியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்குத் தொடர்ந்து தெரிவிக்கையில்.

ரஷ்யா இராணுவத்தில் உயர் சம்பளத்துடன் தொழில் பெற்றுத்தருவதாகத் தெரிவித்து ஓய்வுபெற்ற இராணுவத்தினர் இதற்காக இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர். என்றாலும் அவர்கள் வென்கர் கூலிப்படையில் சேவைக்காகச் செல்லவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அவர்கள் அங்கு முன்னணி பாதுகாப்பு வலயத்தில் கடமைக்காக நிறுத்தப்பட்டுள்ளனர். அதேநேரம் அவர்களுக்கு பல மாதங்களாக அவர்களுக்குரிய சம்பளமும் வழங்காமல் இருப்பதாக அவர்களின் உறவினர்கள் தெரிவித்தனர்.

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் இலங்கை அரசாங்கத்தின் அனுமதியின்றி எந்த நபரையும் யுத்த சேவைக்காக வெளிநாடு ஒன்றுக்கு அனுப்புவதில்லை. அதேபோன்று சுற்றுலா விசா ஊடாக தொழிலுக்காக வெளிநாடுகளுக்குச் செல்ல வேண்டாம் என எந்தளவு அறிவுறுத்தல் மேற்கொண்டாலும் இவ்வாறு தொழிலுக்குச் சென்று பல்வேறு நெருக்கடிகளுக்கு முகங்கொடுக்கின்றனர்.

ஆட்கடத்தல் தொடர்பில் கிடைக்கப்பெறும் முறைப்பாடுகளை விசாரிப்பதற்காக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் சட்டத்தின் பிரகாரம் பணியகத்துக்கு அதிகாரம் இல்லை. இந்த முறைப்பாடுகள் குற்ற விசாரணை திணைக்களத்தினாலேயே விசாரிக்கப்படுகின்றன. அதனால் எந்த சந்தர்ப்பத்திலும் சுற்றுலா விசா ஊடாக தொழிலுக்காக வெளிநாடுகளுக்குச் செல்ல வேண்டாம் என  இலங்கை மக்களை கேட்டுக்கொள்கிறேன் என்றார்.

தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீராப் பிரச்சினையாக வைத்திருந்து அரசியல் ஆதாயம் தேடுவோரின் விருப்பமே தமிழ் பொதுவேட்பாளரை நிறுத்தும் முயற்சி –

தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீராப் பிரச்சினையாக வைத்திருந்து அரசியல் ஆதாயம் தேடுவோரின் விருப்பமே தமிழ் பொதுவேட்பாளரை நிறுத்தும் முயற்சி என்று  அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் தீவக அமைப்பாளர்கள் மற்றும் முக்கியஸ்தர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே செயலாளர் நாயகத்தினால் குறித்த விடயம் வலியுறுத்தப்பட்டுள்ளது.

சமகால அரசியல் நிலவரங்கள், அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் வேலைத் திட்டங்கள் மற்றும் வரவுள்ள தேர்தல் தொடர்பான முன்னெடுப்புக்கள் போன்றவை தொடர்பிலும், அவை சரியான முறையில் மக்களை சென்றடைவதை உறுதிப்படுத்துவதற்கு வழங்க வேண்டிய ஒத்துழைப்புக்கள் தொடர்பாகவும் தெளிவுபடுத்தும் வகையில் குறித்த கலந்துரையாடல் அமைந்திருந்தது.

இதன்போது, தேர்தலில் எமது கட்சியின் வாக்குப்பலத்தை அதிகரிப்பு செய்ய வேண்டிய அவசியம் தொடர்பாக வலியுறுத்திய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா,

“தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளையும் அவலங்களையும் அரசியல் கோஷங்களாக பயன்படுத்தி குறுகிய அரசியல் ஆதாயம் தேடும் தரப்புக்கள், தமது நலன்களுக்காக தமிழ் மக்களை இன்னுமொருமுறை பலிக்கடாவாக்க முனைகிறார்கள்.

இவ்வாறான முட்டாள்தனமான முயற்சிகள் கடந்த காலங்களில் ஆயுதப் போராட்ட குழுக்களினாலும் மிதவாத தமிழ் தலைமைகளினாலும் பலமுறை முன்னெடுக்கப்பட்டன.

ஆனால் அவற்றினால் எமது மக்களுக்கு எந்தவித நன்மைகளும் கிடைக்கவில்லை. மாறாக மீளமுடியாத பின்னடைவுகளையே ஏற்படுத்தியிருந்தன.

எனினும், நடைமுறை சாத்தியமான சிந்தனையோ, சரியான வேலைத்திட்டத்தினை முன்வைத்து அதற்காக உழைக்கும் குணாம்சமோ இல்லாதவர்கள், எமது மக்களை உணர்ச்சியூட்டும் தோற்றுப்போன வழிமுறையையே மீண்டும் கையில் எடுத்து தம்மை அரசியலில் நிலைநிறுத்த முனைகிறார்கள்.

ஆனால், ஈ.பி.டி.பி. ஆகிய நாங்கள், எமது மக்களுக்கு சரியான வழியை காட்டுகின்ற தனித்துவமான தரப்பு என்ற அடிப்படையிலேயே செயற்பட்டு வருவதுடன் தேர்தல்களுக்கும் முகங்கொடுத்து வருகின்றோம்.

மக்கள் எதிர்கொள்ளுகின்ற அன்றாடப் பிரச்சினைகள் முதல் அபிவிருத்தி உள்ளடங்கலான அரசியல் தீர்வு வரையிலான மூன்று ‘அ’ க்களுக்கும் முன்னுரிமை அடிப்படையில் தீர்வுகளை முன்வைக்க கூடிய ஒரு கட்சியாக ஈ.பி.டி.பி மட்டும் தான் இருக்கின்றது.

இதில் அனைவரும் தெளிவாக இருப்பதும் அவசியம்.

கடந்த 34 வருடங்களாக பல்வேறு விடயங்களில் அவை நிரூபிக்கப்பட்டு இருக்கின்றன. அதற்கு நாம் கட்டி வளர்த்துள்ள தேசிய நல்லிணக்கமும் கணிசமான பங்களிப்பை செய்திருக்கிறது.

எனவே, அடுத்த வரவுள்ள தேர்தல் என்பது தமிழ் மக்களை வெற்றியின் கதானாயகர்களாக அடையாளப்படுத்தும் வகையில் எமது செயற்பாடுகளும் மக்களுக்கான தெளிவுபடுத்தல்களும் அமைய வேண்டும்.

அதன்மூலம் தமிழ் மக்களின் அபிலாசைகளை அடைவதற்கான வழியை பிரகாசமாக்க முடியும்” என்றும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கொழும்பு மாவட்டத்தில் போதைப்பொருளுக்கு அடிமையானோரின் எண்ணிக்கை 11 லட்சமாக அதிகரிப்பு!

கொழும்பு மாவட்டத்தில் போதைப்பொருளுக்கு அடிமையானோரின் எண்ணிக்கை சுமார் பதினொரு இலட்சமாக அதிகரித்துள்ளதாக காவல்துறை மா அதிபர் தேசபந்து தென்னக்கோன்  தெரிவித்துள்ளார்.

மேலும் போதைப்பொருள் விநியோகத்தை கட்டுப்படுத்துவது போன்றே போதைப்பொருளுக்கு அடிமையானவர்களுக்கு புனர்வாழ்வு அளிக்கும் நடவடிக்கைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், “கொழும்பு மாவட்டத்தில் சுமார் 256 இடங்களில் போதைப்பொருளுக்கு அடிமையானவர்களுக்கு புனர்வாழ்வு அளிக்கப்படுகிறது.

போதைப்பொருளுக்கு அடிமையானவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு காரணமாக போதைப்பொருள் விற்பனையும் அதிகரித்துள்ளது.

இந்த நிலையில், போதைப்பொருள் வர்த்தகத்தையும் பயன்பாட்டையும் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் காவல்துறையினரால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது” என காவல்துறை மா அதிபர் தெரிவித்துள்ளார்.

ரஸ்ய எல்லையில் உள்ள கொலைகளங்களில் உயிரிழக்கும் இலங்கையின் இராணுவ வீரர்கள்!

பலகுழுக்களால் இலங்கையிலிருந்து வெளிநாட்டு வேலைக்காக சேர்க்கப்பட்ட நூற்றுக்கணக்கான முன்னாள் படைவீரர்கள் ரஸ்ய எல்லையில் உள்ள கொலைகளங்களில் உயிரிழக்கின்றனர் என அங்கிருந்து தப்பிய முன்னாள் படைவீரர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

தொலைக்காட்சியொன்றின் பேட்டியில் கருத்து தெரிவித்துள்ள அவர் இலங்கையை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட முன்னாள் படைவீரர்கள் உயிரிழந்துள்ளனர் இதே எண்ணிக்கையிலானவர்கள் டொனெட்ஸ்க் போன்ற பிராந்தியங்களில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைபெற்றுவருகின்றனர் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

ஓய்வுபெற்ற முன்னாள் அதிகாரிகளே என்னை ரஸ்ய உக்ரைன் போர்முனையில் பணியாற்ற தெரிவு செய்தனர் அதற்காக 1.6 மில்லியன் செலுத்தினேன் முகாமில் உதவியாளராக பணியாற்றும் வேலை என தெரிவித்தனர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்திய பிரஜையான ரமேஸ் என்பவரே இந்த நடவடிக்கைகளின் சூத்திரதாரி என தெரிவித்துள்ள அவர் ரஸ்யாவில் தமிழில் பேசிய ஒருவர் எங்களை வரவேற்றார் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

சுற்றுலாபயணிகளுக்கான விசாவில் செல்லும் இலங்கையர்களை வாக்னெர் கூலிப்படையில் இணைத்துக்கொள்ளப்படுவதற்காக ரஸ்ய மொழி ஆவணமொன்றில் கைச்சாத்திடவேண்டும் என கேட்டுக்கொள்ளப்படுவார்கள் என தெரிவித்துள்ள முன்னாள் படைவீரர் சட்டத்தரணி போன்று தோற்றமளித்த இந்திய பெண் ஒருவர் எங்களிற்கு உதவினார் அவர் முகாம் உதவியாளராக பணிபுரிவதற்கான ஒரு வருட கால ஒப்பந்தம் என தெரிவித்தார் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

என்னையும் 33 இலங்கையர்களையும் ரொஸ்டொவ்வில் உள்ள முகாமிற்கு கொண்டு சென்றார்கள் அங்கு 14 நாட்கள் பயிற்சி அளித்தார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

நான் அந்த முகாமிலிருந்தவேளை 70 இலங்கையர்கள் காணப்பட்டனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் 103 காட்டு யானைகள் புகையிரதங்களில் மோதி உயிரிழப்பு !

2015 ஆம் ஆண்டு முதல் இதுவரையான காலப்பகுதியில் மாத்திரம் 103 காட்டு யானைகள் புகையிரதங்களில் மோதி உயிரிழந்துள்ளன. காட்டு யானைகளைப் பாதுகாப்பதற்குப் புகையிரத திணைக்களத்துடன் ஒன்றிணைந்து விசேட செயற்திட்டங்களை முன்னெடுத்துள்ளோம் என வனஜீவராசிகள் மற்றும் வனவளங்கள் பாதுகாப்பு அமைச்சர் பவித்ரா தேவி வன்னியராச்சி தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (9) இடம்பெற்ற அமர்வின் வாய்மூல விடைக்கான வினாக்களின் போது முன்வைத்த கேள்விகளுக்குப் பதிலளிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியதாவது,

2015 ஆம் ஆண்டு முதல் 2024 ஆம் ஆண்டு நிறைவடைந்த நான்கு மாத காலப்பகுதியில் மாத்திரம் 103 காட்டு யானைகள் புகையிரதங்களில் மோதி உயிரிழந்துள்ளன.

காட்டு யானைகள் புகையிரதங்களில் மோதுவதைத் தடுப்பதற்கு முறையான பொறிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன.

இதற்கமைய புகையிரத திணைக்களம் மற்றும் வனஜீவராசிகள் பாதுகாப்பு அமைச்சு ஒன்றிணைந்து புகையிரத பாதைகளில் காட்டு யானைகள் பயணம் செய்யும் இடங்கள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.இந்த பகுதிகளை விசேட பாதுகாப்பு பகுதிகளாகவும்,கண்காணிப்பு பகுதிகளுக்காகவும் அறிவிப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

காட்டு யானைகள் கடக்கும் பகுதிகள் குறித்து புகையிரத சாரதிகளுக்கு தெளிவுபடுத்தவும்,புகையிரத பாதைகளில் வளைவு பகுதிகளைக் காட்டு யானைகள் கடக்கும் போது அவைகளை முன்கூட்டியே அவதானிக்கும் வகையில் விசேட இயந்திரங்கள் பொருத்துவதற்கும்,புகையிரத பாதை வளைவுகளைத் தொடர்ந்து பராமரிப்பதற்கும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது என்றார்.

இலங்கை பிரஜை இல்லாத ஒருவர் தேர்தலில் போட்டியிட முடியாது – மகிந்த தேசப்பிரிய

இலங்கையின் பிரஜை அல்லாத ஒருவர் அரசியல் கட்சியொன்றை பதிவு செய்வதற்கு நாட்டின் சட்டத்தில் எந்த தடையுமில்லை என முன்னாள் தேர்தல்கள் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

இலங்கை சட்டத்தின்படி இலங்கை பிரஜை இல்லாத ஒருவர் தேர்தலில் போட்டியிட முடியாது தேர்தலில் வாக்களிக்க முடியாது நாடாளுமன்ற உறுப்பினராக முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்புமனுக்களில் டயனா கமகே கையெழுத்திடவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

புலிகளிடமிருந்து கை மாறும் முள்ளிவாய்க்கால் நினைவெழுச்சி – து.சேனனுடனான கலந்துரையாடல்!

மே மாதம் 11 மற்றும் 12ம் திகதிகளில் முள்ளிவாய்க்கால் கண்காட்சி நிகழ்வை பிரித்தானியாவில் இயங்கும் இளைய தலைமுறையினர் அமைப்பான தமிழ் சொலிடாரிட்டி அமைப்பு ஏற்பாடு செய்துள்ளது. நியூமோல்டனில் மோல்டன் றோட்டில் உள்ள மனோர் பார்க் ஹோலில் இக்கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. யுத்தம் முடிவடைந்து 15 ஆண்டுகளுக்குப் பின் முள்ளிவாய்க்கால் நிகழ்வு தங்களை தமிழீழ விடுதலைப் புலிகள் என்று பறைசாற்றி வரும் அமைப்புகளின் பிடியிலிருந்து விடுபட்டுக்கொண்டுள்ளது. தங்களை தமிழீழ விடுதலைப் புலிகளின் பிரதிநிதிகளாக பறைசாற்றுகின்ற உலகின் பல்வேறு பாகங்களிலும் இயங்கும் அமைப்புகள் படிப்படியாக தாயகத்தில் வாழ்கின்ற தமிழ் மக்களின் அபிலாசைகளைக் கைவிட்டதால் தமிழ் சொலிடாரிட்டி இந்த முள்ளிவாய்க்கால் கண்காட்சியை ஏற்பாடு செய்துள்ளதாக தமிழ் சொலிடாரிட்டி அமைப்பினை கட்டியெழுப்பியவர்களில் ஒருவரும் கொமிற்றி போர் வேர்கஸ் இன்ரநஷனலின் (Committee for Workers International) செயலாளருமாகிய சேனன் தேசம்நெற்ககுத் தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில், தங்களைப் புலிகளின் பிரதிநிதிகளாகக் காட்டிக்கொள்ளும் இவ்வாறான அமைப்புகளிடம் எந்தவிதமான அரசியல் தெளிவோ அரசியல் திட்டமிடலோ இல்லையெனச் சுட்டிக்காட்டும் சேனன் இவர்கள் காலாவதியாக நீண்டகாலம் ஆகிவிட்டது எனத் தெரிவித்தார். அதனால் நினைவு தினங்களாக ஒரு மரண வீடாக நிகழ்வுகளை நடாத்தி காலத்தை விரயமாக்காமல் இந்த நினைவுகளை மக்களை எழுச்சியடையச் செய்யும் வகையிலும் அதனை ஒரு அரசியல் சக்தியாக மாற்றுகின்ற வகையிலும் தமிழ் சொலிடாரிட்டி இந்நிகழ்வை ஏற்பாடு செய்திருப்பதாக சேனன் தெரிவித்தார். அவர் தேசம்நெற் க்கு வழங்கிய நேர்காணல் இதோ..!

இது தொடர்பான தேசம் திரை காணொளியை காண கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்..!