செய்திகள்

செய்திகள்

செய்திகள்

கிளிநொச்சியில் குழு மோதல் – இளம்குடும்பஸ்தர் பலி !

கிளிநொச்சி -பிரமந்தனாறு பகுதியில் இரு குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் நடுவீதியில் வைத்து ஒருவர் குத்திக்கொலை செய்யப்பட்டுள்ளதுடன் மேலும் மூவர் காயமடைந்துள்ளனர் .

இச்சம்பவமானது இன்று பிற்பகல் (4) இடம்பெற்றுள்ளது.

பிரமந்தனாறு பகுதியில் உள்ள பாடசாலையில் இன்று(4) பிற்பகல் விளையாட்டு போட்டி நடைபெறுவதற்கு ஏற்பாடாக இருந்த நிலையில் பாடசாலையில் வைத்து இரு குழுக்களிடையே ஏற்பட்ட பிரச்சனை ஒன்றின் விளைவாக இரண்டு தரப்புகளுக்கு இடையில் பாடசாலை வளாகத்தில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து பாடசாலை நிர்வாகம் இருதரப்புக்களையும் சமரசம் செய்து பாடசாலை வளாகத்தை விட்டு அனுப்பியிருந்தனர்.

 

தொடர்ந்தும் குறித்த இரண்டு தரப்பினரும் புன்னை நீராவி பிள்ளையார் ஆலய சந்தி பகுதியில் மீளவும் வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டிருந்தனர்.

இது தொடர்பில் பிரதேச மக்களால் ஏற்கனவே காவல்துறையினருக்கு தகவல் வழங்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு சென்ற தரும்புரம் காவல்துறையினர் இருவரை கைது செய்து பின்னர் அவர்களை மீளவும் இறக்கி விட்டு சிறிது தூரம் சென்ற பின்னரே இத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கத்திக்குத்து தாக்குதலுக்கு இலக்காகியவர் வைத்தியசாலை கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்துள்ளார்.

 

இதேவேளை பாடசாலை இல்ல விளையாட்டுப் போட்டிக்கு தருமபுரம் காவல்துறையினரை அழைத்திருந்தபோதும் பாடசாலைக்கு காவல்துறையினர் சமூகம் அளித்திருக்கவில்லை.

 

காவல்துறையினரின் பக்க சார்பான செயற்பாடும் தூண்டுதலுமே இக்கொலைக்கான காரணம் எனவும் பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.

 

பல தடவை கத்திக்குத்துக்கு இலக்கான 32 வயதுடைய சவரிமுத்து ஜோன் பற்றிக் என்ற குடும்பஸ்தரே இதன்போது உயிரிழந்துள்ளார்.

கத்திக்குத்து தாக்குதலை நடத்திய சந்தேகத்தில் தர்மபுரம் காவல்துறையினரால் இதுவரை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

“இனவாதமற்ற தேசிய ஒருமைப்பாடுக்காக அனைவரும் குரல் கொடுக்க வேண்டும்.” – யாழில் அனுரகுமார திஸ்ஸநாயக்க !

இனவாதமற்ற தேசிய ஒருமைப்பாடுக்காக அனைவரும் குரல் கொடுக்க வேண்டும் எனவும் இலங்கையில் தமிழ் மற்றும் சிங்களம் தொடர்பில் காணப்படும் பிளவுகள் ஆட்சியாளர்களால் மேற்கொள்ளப்பட்டதாகவும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

 

யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம்(04) நடைபெற்ற ஆசிரியர் சேவை சங்கத்தின் மாநாட்டில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

 

அத்தோடு, இலங்கை அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதாக கூறி மக்களுடன் ஒப்பந்தமொன்றை மேற்கொள்வதற்காக தான் யாழ்ப்பாணத்துக்கு பயணத்தை மேற்கொள்ளவில்லை, எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில்,

“ஆட்சியாளர்கள் நம்மை வேறு பிரிக்கும் அரசியலிலேயே தொடர்ந்தும் ஈடுபடுகிறார்கள், அரசியல் நலனுக்கான இனவாத அரசியலே அவர்களது முதன்மையான நோக்கமாக இருந்தது.

எமது மூதாதையர்கள் காலம் தொடங்கி அனைத்து ஆட்சியாளர்கள் இனவாதத்தை மக்கள் மனதில் விதைத்தார்கள்.இதனால் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணம் யுத்தத்தை எதிர்நோக்க வேண்டியிருந்தது.

 

இதனால் பாரியளவில் பாதிக்கப்பட்ட மக்களாக வடக்கு மக்கள் இருக்கிறார்கள். இன்றும் அவர்களில் போராட்டத்துக்கு நீதி கிடைக்கவில்லை. எனினும், எமது தலைமுறையினர் இவ்வாறு இருக்க கூடாது. எமது கட்சி எதிர்கால சந்ததியனரை மாற்றியமைக்கும். அவர்களின் சிந்தனைகளை மாற்றும்.

எதிர்கால சந்ததியினருக்கான சரியான பாதையை நாம் உருவாக்குவோம். எமக்கு இனவாத அரசியல் தேவையா? எமது சந்ததியினர் எதிர்நோக்கிய யுத்தத்தை எதிர்கால சந்ததியினர் எதிர்நோக்க வேண்டுமா?

 

இவ்வாறான பேதங்களும் போரும் அற்ற புதிய நாடு புதிய ஆட்சி உருவாக வேண்டும். இதுவே எமது நோக்கம். தேசிய மக்கள் சக்தியின் நோக்கம். இனவாதமற்ற தேசிய ஒருமைப்பாடுக்காக அனைவரும் குரல் கொடுக்க வேண்டும்.” என தெரிவித்துள்ளார்.

கிராமத்திற்குள் நுழைந்த வன்முறைக் கும்பலை மடக்கிப் பிடித்த மக்கள் – யாழில் சம்பவம்!

யாழ். ஊர்காவற்துறை – மெலிஞ்சிமுனை பகுதியில் இன்றையதினம் தாக்குதல் ஒன்றினை நடாத்துவதற்கு சென்ற வன்முறைக் கும்பல் ஒன்றை ஊர் மக்கள் மடக்கிப் பிடித்துள்ளனர்.

 

இச்சம்பவம் குறித்து மேலும் தெரிவிக்கையில்,

 

பாடசாலை ஒன்றில் கல்வி கற்ற 2012ஆம் ஆண்டு உயர்தரப் பிரிவு மாணவர்கள் வாட்ஸப் சமூக ஊடகம் ஒன்றில் குழுவாக செயற்பட்டு வந்தனர்.

 

இந்நிலையில் அந்த குழுவில் இருந்த, இருவருக்கிடையே முரண்பாடு ஏற்பட்டது. இந்நிலையில் முரண்பாட்டில் ஈடுபட்ட ஒருவரை தாக்குவதற்காக இன்னொருவர் ஊருக்கு வெளியில் இருந்து வன்முறைக் கும்பல் ஒன்றினை வரவழைத்துள்ளார்.

 

அந்தவகையில் ஆயுதங்களுடன் வந்த வன்முறைக் கும்பல் தாக்குதலை நடாத்த முயன்றவேளை ஊரில் உள்ள மக்கள் அனைவரும் ஒன்றுதிரண்டு குறித்த கும்பலை மடக்கிப் பிடித்து ஊர்காவற்துறை பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.

 

இந்நிலையில் ஊர்காவற்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இஸ்ரேலுக்கு ஆயுதத் தடை விதிக்கும் பிரேரேணை நாளை ஐ.நாவில் !

இஸ்ரேலுக்கு ஆயுதத் தடை விதிக்கும் பிரேரேணை ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் நாளை (06) பரிசீலிக்கப்படவுள்ளது.

 

காஸாவில் இனப்படுகொலைக்கான ஆபத்து உள்ளதால் இஸ்ரேலுக்கு ஆயுதத் தடை விதிக்க வேண்டும் என இப்பிரேரணையில் கோரப்பட்டுள்ளது.

 

57 நாடுகள் அங்கம் வகிக்கும் இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் சார்பில் பாகிஸ்தர்ன இப்பிரேரணையை முன்வைத்துள்ளது.

 

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் 47 நாடுகள் அங்கம் வகிக்கின்றன. இதன்படி, பிரேரணை நிறைவேற்றப்படுதற்கு 24 நாடுகளின் ஆதரவு தேவை.

 

எனினும், ஏதேனும் நாடுகள் வாக்களிப்பில் பங்குபற்றாமல்விட்டால், குறைந்த எண்ணிக்கையான வாக்குகளுடனும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட முடியும்.

அகழ்வாய்வுக்கு நிதி இல்லை – தொடர்ந்தும் கிடப்பில் போடப்பட்டது கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி அகழ்வுப் பணி !

முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குதொடுவாய் பகுதியில் 29.06.2023 அன்று கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைகுழி அகழ்வு தொடர்பான வழக்கு இன்று வியாழக்கிழமை (04) முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் இடம்பெற்றது.

 

முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன் முன்னிலையில் இடம் பெற்ற வழக்கு விசாரணைகளில் முல்லைத்தீவு மாவட்ட சட்ட வைத்திய அதிகாரி கனகசபாபதி வாசுதேவா, முல்லைத்தீவு மாவட்ட செயலக பிரதம கணக்காளர் மயில்வாகனம் செல்வரட்ணம், கொக்கிளாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி,கொக்கிளாய் பகுதி கிராம அலுவலர், சட்டத்தரணிகளான வி கே நிறஞ்சன், கணேஸ்வரன் மற்றும் காணாமல் போனோர் அலுவலகம் சார்பாக சட்டத்தரணி துஷ்யந்தினி ஆகியோர் முன்னிலையாகியிருந்தனர்.

 

இந்நிலையில், அகழ்வு பணியினை நடாத்த இன்னும் நிதி கிடைக்கபெறவில்லை எனவும் தற்போது அகழ்வுப்பணிக்கென போடப்பட்டுள்ள பாதீடு அதிகமாக காணப்படுவதாக அமைச்சு தெரிவித்துள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட செயலக பிரதம கணக்காளர் மயில்வாகனம் செல்வரட்ணம் அவர்களால் நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், பாதீடு சீர்செய்து அனுப்பி நிதியினை பெறுக்கொள்ள நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளது. அத்தோடு, குறித்த வழக்கு விசாரணை வைகாசி மாதம் 16 ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

 

முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குதொடுவாய் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைகுழியின் முதல் கட்ட அகழ்வானது 06.09.2023 அன்று ஆரம்பமாகி பதினொரு நாட்கள் நடைபெற்று 17 உடற்பாகங்கள் மீட்கப்பட்ட நிலையில் இடைநிறுத்தப்பட்டிருந்தது.

 

மீண்டும் அகழ்வின் இரண்டாம் கட்ட பணிகள் கடந்த 20.11.2023 அன்று ஆரம்பிக்கப்பட்டு தொடர்ச்சியாக ஒன்பது நாட்கள் நடைபெற்று மொத்தமாக 40 எலும்புக்கூட்டு தொகுதிகள் மீட்கப்பட்டுள்ளதுடன் இரண்டாம் கட்ட அகழ்வுபணி இடைநிறுத்தப்பட்டிருந்தது.

 

அத்தோடு, அகழ்வு ஆய்வு நடவடிக்கையின் இறுதி நாட்களில் மேற்கொள்ளப்பட்ட ஸ்கான் பரிசோதனை மூலம் மனித புதை குழிக்கு மேற்கு பக்கமாக இரண்டு மீற்றர் நீளத்திற்கு உடலங்கள் காணப்படுவதாக பரிசோதனை மூலம் கண்டறியப்பட்டிருந்தது. அதனையடுத்து, குறித்த அகழ்வுப்பணி இவ்வருடம் மார்ச் மாதம் நடைபெற திட்டமிடப்பட்டிருப்பத நிலையில் நிதி கிடைக்கப்பறாமையினால் இன்றைய தினத்துக்கு தவணையிடப்பட்டிருந்தது.

 

கடந்த வழக்கின்போது அகழ்வாய்வு நடவடிக்கையில் ஈடுபட்ட தொல்லியல் திணைக்கள பேராசிரியர் ராஜ் சோமதேவ அவர்களினால் இடைக்கால அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டிருந்த நிலையில் கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியில் மீட்கப்பட்ட எச்சங்கள் 1994 ஆண்டு தொடக்கம் 1996 ஆம் ஆண்டு காலப்பகுதிக்குரியவை என தெரிவிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் திடீர் விபத்துக்களால் தினசரி 35 மரணங்கள்!

திடீர் விபத்துக்களால் இலங்கையில் நாளாந்தம் 32 தொடக்கம் 35 வரையான மரணங்கள் பதிவாகின்றதாக சுகாதார அமைச்சின் தொற்றா நோய்கள் பிரிவின் விசேட வைத்திய நிபுணர் சமிதா சிறிதுங்க தெரிவித்துள்ளார்.

 

ஒவ்வோர் ஆண்டும் பத்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் திடீர் விபத்துக்களால் உயிரிழப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

வாகன விபத்துக்கள், நீரில் மூழ்குதல், விஷமாகுதல் போன்ற விபத்துக்களால் உயிரிழப்புகள் ஏற்படுவதாக சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட வைத்திய நிபுணர் சமித சிறிதுங்க சுட்டிக்காட்டியுள்ளார்.

 

இதேவேளை, ஏப்ரல் மாதத்தில் வாகன விபத்துக்கள் அதிகரிக்கக்கூடும் என்பதால், அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொலிஸ் மா அதிபர் பணிப்புரை விடுத்துள்ளதாக கொழும்பு போக்குவரத்து பிரிவின் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் கமல் புஸ்பகுமார தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து போதைப்பொருள் விற்பனை !

யாழ்ப்பாணத்தில் பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட ஆறு பேரை புதன்கிழமை (03) புதன்கிழமை யாழ்ப்பாண மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் கைது செய்துள்ளனர்.

 

கைது செய்யப்பட்டவர்கள் குருநகர் மற்றும் நாவாந்துறை பகுதியை சேர்ந்த 18 வயதிற்கும் 21 வயதிற்கும் இடைப்பட்டவர்கள் என்றும் , பொலிஸ் நிலையத்தில் அவர்களைத் தடுத்து வைத்து தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 

யாழ்ப்பாணம் புறநகர் பகுதியில் உள்ள பிரபல ஆண்கள் பாடசாலைக்கு அருகில் வைத்து போதைப்பொருள் வியாபாரத்தில் கும்பல் ஒன்று ஈடுபட்டு வருவதாக பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்குக் கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸ் குழுவினர் , போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டிருந்த இருவரை மடக்கிப் பிடித்தனர். அவர்களிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் மேலும் மூவரைக் கைது செய்தனர்.

 

பாடசாலைக்கு அருகில் வைத்து கைது செய்யப்பட்ட ஐவரையும் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்துள் ளனர்.

 

அதேவேளை . நாவாந்துறை பகுதியில் முச்சக்கர வண்டியில் போதை மாத்திரை விற்பனையில் ஈடுபட்ட நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்ய முற்பட்ட வேளை முச்சக்கர வண்டியுடன் தப்பியோடியவரை பொலிஸார் துரத்திய போது , முச்சக்கர வண்டியை , நாவாந்துறை சந்தை பகுதியில் கைவிட்டுத் தப்பி செல்ல முற்பட்ட வேளை பொலிஸார் அவரை கைது செய்தனர்.

 

அவ்வேளை முச்சக்கர வண்டியை சோதனையிட்ட போது அதனுள் இருந்து 300 போதை மாத்திரைகளை பொலிஸார் மீட்டனர்.

 

அதனை அடுத்து சந்தேக நபரைக் கைது செய்த பொலிஸார் , முச்சக்கர வண்டியையும் மீட்டு பொலிஸ் நிலையம் கொண்டு சென்று சந்தேக நபரிடம் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

வாய்ப்புற்று நோயினால் இலங்கையில் தினமும் மூவர் பலி !

இலங்கையில் வாய் புற்றுநோயினால் தினமும் 3 பேர் உயிரிழப்பதாக மஹரகம வாய் சுகாதார நிறுவனத்தின் விசேட வைத்திய நிபுணர் டொக்டர் நிலந்த ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

 

மேலும் இலங்கையில் நாளாந்தம் சுமார் 6 வாய் புற்றுநோயாளிகள் கண்டறியப்படுவதாக அவர் கூறினார்.

 

வாய் சுகாதாரம் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் செயலமர்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே டொக்டர் நிலந்த ரத்நாயக்க இதனைத் தெரிவித்தார்.

 

இந்நிலையில் இலங்கையில் 5 வயதுடைய குழந்தைகளில் 63 வீதமானோர் பற்கள் சிதைந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

 

பெரும்பாலான குழந்தைகள் இரவு உறங்கச் செல்வதற்கு முன் பல் துலக்குவதில்லை என பாடசாலை சுகாதார ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளதாக விசேட வைத்திய நிபுணர் டொக்டர் நிலந்த ரத்நாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.

ஆசிரியர்கள் மாணவர்களுக்குத் துன்பம் இழைப்பதை ஒருபோதும் ஏற்க முடியாது. – வடக்கு ஆளுநர் சார்ள்ஸ்

பாடசாலை மாணவர்கள் மீது தண்டனை என்ற பெயரில் துன்புறுத்தல்கள் அதிகரித்து வரும் நிலையில், வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸினால் விசேட அறிவித்தல் ஒன்று விடுக்கப்படுகிறது.

 

கற்பித்தல் செயற்பாடுகளை மேற்கொண்டு மாணவர்களை வளப்படுத்த வேண்டிய ஆசிரியர்களே, மாணவர்களை அடித்து, துன்புறுத்தி வைத்தியசாலைகளில் அனுமதிக்கும் சம்பவங்கள் அண்மைக் காலமாக அதிகரித்துள்ளன. கடந்த சில மாதங்களுக்குள் இவ்வாறாக செயற்பட்ட ஆசிரியர்கள் தொடர்பில், ஆளுநரின் செயலகத்தால் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு பின்னர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

 

நேற்று பதிவாகிய மூன்று சம்பவங்கள் தொடர்பில் கௌரவ ஆளுநரின் பணிப்புரைக்கு அமைய உடனடி விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

 

“எழுத்தறிவித்தவன் இறைவன்” எனும் கூற்றுக்கு அமைய, இறைவனாக போற்றப்படக்கூடிய ஆசிரியர்கள் மாணவர்களுக்குத் துன்பம் இழைப்பதை ஒருபோதும் ஏற்க முடியாது.

 

கற்றலில் சிக்கல்களை எதிர்நோக்கும் மாணவர்களை எவ்வாறு கற்றலில் ஈடுபடச் செய்வது என்ற யுக்தியை கண்டறிந்து அவர்களுக்கான கற்றல் செயற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும்.

 

அதற்காகவே ஆசிரியர்களுக்கான விசேட பயிற்சிகள் வழங்கப்பட்டு, அரசினால் ஆசிரிய நியமனம் வழங்கப்படுவதோடு, மாதாந்த கொடுப்பனவும் வழங்கப்படுகிறது.

 

எனினும், ஒருசில ஆசிரியர்கள் மாணவர்களின் நிலையை அறியாது அவர்களை அடித்து துன்புறுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆகவே, தற்போது பதிவாகியுள்ள இந்த சம்பவங்கள் தொடர்பில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இனிவரும் காலங்களில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறாதிருக்க பாடசாலை அதிபர்களும், ஆசிரியர்களும் தங்களின் பொறுப்புக்களை உணர்ந்து கடமைகளை மேற்கொள்ள வேண்டும். அவ்வாறின்றி பொறுப்பற்ற வகையில் செயற்படும் அதிபர், ஆசிரியர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை அறியத்தருவதாக வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் தெரிவித்துள்ளார்.

யாழ்.அனலைதீவில் இந்தியாவின் மின் உற்பத்தி நிலையங்களுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு!

யாழ்ப்பாணம் அனலைதீவு பகுதியில் புதிதாக நிா்மாணிக்கப்படவுள்ள சூரிய கலங்கள் மற்றும் காற்றாலை மின் உற்பத்தி திட்டங்களுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று வியாழக்கிழமை (04) நடைபெற்றது.

 

இலங்கை இந்திய அரசுகள் ஏற்படுத்திக்கொண்ட இணக்கப்பாட்டுக்கு அமைய இந்திய தனியார் நிறுவனத்தின் நிதி உதவியுடன் மின் உற்பத்தி நிலையங்கள் அமைக்கப்படவுள்ளது.

 

அந்நிலையில் இந்திய நிறுவனத்தின் மின் பொறியியலாளர் தினேஷ் பாண்டியன் முன்னிலையில் இன்றைய தினம் அடிக்கல் நாட்டும் நிகழ்வு இடம்பெற்றது.