ஜெயபாலன் த

ஜெயபாலன் த

ஜனாதிபதித் தேர்தலும் தமிழ் வாக்காளர்களும் : த ஜெயபாலன்

Karuna_Election_Campaignதற்போது வன்னி யுத்தம் முடிவடைந்த நிலையில் தமிழ் மக்களின் ஏகபிரதிநிதிகளாக தங்களை அறிவித்து வந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பு இராணுவத் தளபதி ஜெனரல் சரத்பொன்சேகாவுடன் அரசியல் சீட்டுக்கட்டி ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தப் போவதாக சன்னதம் ஆடியது. ஆனால் இறுதியில் ரிஎன்ஏ சம்பந்தரின் பந்தை லாவகமாக ஆடிய மகிந்த ராஜபக்சவின் பிரச்சாரக் குழு சிக்ஸரே அடித்துவிட்டது. இடதுசாரித் தலைமைகளுடன் இணைந்து ஒரு முற்போக்கு அணி ஒன்றை உருவாக்க முயற்சிக்காமல் ஜெனரல் சரத் பொன்சேகாவை வெல்ல வைக்கப் போகின்றோம் என்றும் அரசியல் சாணக்கியம் என்றும் கூறி தமிழ் மக்களின் அரசியலை சாக்கடைக்குள் தள்ளியது ஆர் சம்பந்தன் – மாவை சேனாதிராஜா – சுரேஸ் பிரேமச்சந்திரன் கூட்டு. இன்று வீழ்ந்தும் மீசையில் மண்படவில்லையென கதையளக்கின்றனர்.

‘தமிழ் தேசியக் கூட்டமைப்புதான் தமிழ் மக்களின் அரசியல் தலைமைத்துவம் ” எனத் தமிழ் மக்கள் தெரிவித்து இருக்கிறார்களாம் என்று கதையளக்கின்ற சுரேஸ் பிரேமச்சந்திரன் கூட்டு சரத்பொன்சேகாவை ஆதரிக்கும்படி தமிழ் மக்களைக் கேட்டுக் கொள்வதற்கு முன்பாகவே தமிழ் மக்கள் ஜெனரல் சரத்பொன்சேகாவுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்துக்கொண்டனர். இது காகம் இருக்க பனம் பழம் வீழ்ந்த கதையே. ஜெனரல் சரத்பொன்சேகாவுக்கு தமிழ் மக்கள் மத்தியில் வீழ்ந்த வாக்குகள் மகிந்த சகோதரர்களின் குடும்ப ஆட்சிக்கு எதிராகவும் புலிகளுக்கு ஏற்பட்ட தோல்விக்கான பழிவாங்கும் வாக்குகளே அல்லாமல் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு வீழ்ந்த வாக்குகள் அல்ல.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் ஜனவரி 7ல் தேசம்நெற்க்கு தெரிவித்தது போல் ‘இந்த ஜனாதிபதித் தேர்தல் முடிவானது ஜனாதிபதியைத் தெரிவு செய்வது மட்டுமல்ல தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும் ஒரு பரிசோதணைக் களமாக அமைய உள்ளது. தமிழ் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்கள் அனைவரையும் வாக்களிப்பில் கலந்துகொள்ளுமாறும் சரத் பொன்சேகாவிற்கு வாக்களிக்குமாறும் கேட்டுக் கொண்டுள்ளது. இந்நிலையில் தமிழ் மக்கள் வாக்களிப்பில் கலந்து கொள்ளாமல் இருப்பது தமிழ் தேசியக் கூட்டமைப்பை நிராகரிப்பதாகவே கொள்ள வேண்டும்” என தமிழ் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

இந்த அடிப்படையில் பார்க்கையில் நாடு முழுவதும் 74 வீதமான மக்கள் வாக்களித்து இருக்கையில் யாழ் மாவட்டத்தில் 15 வீதமான மக்களே தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆதரித்த வேட்பாளரான ஜெனரல் சரத்பொன்சேகாவுக்கு வீழ்ந்துள்ளது. இது தான் சுரேஸ் பிரேமச்சந்திரன் கூறும் ”தமிழ் தேசியக் கூட்டமைப்புதான் தமிழ் மக்களின் அரசியல் தலைமைத்துவம்”  என்பதன் லட்சணம்.

சுரேஸ் பிரேமச்சந்திரனும் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் ஜெனரல் பொன்சேகாவுடன் இணைந்து வடக்கு கிழக்கு – இணைந்த தமிழ் தாயகம் என்றெல்லாம் றீல் விட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கூட்டாளிகள் – ஜெனரல் சரத் பொன்சேகா, யூஎன்பி, ஜேவிபி அப்படியெல்லாம் ஒன்றுமில்லை என அறிக்கைகளை வெளியிட்டனர். அது ஒருபுறம் இருக்க லண்டனில் சுரேஸ் பிரேமச்சந்திரனின் சகோதரர் வட்டுக்கோட்டைத் தீர்மானத்திற்கு வாக்கெடுப்பு நடாத்துகிறார். இலங்கை வாழ் தமிழ் மக்கள் பொதுவாக புலம்பெயர் தமிழ் மக்களிடம் இருந்து பொருளாதார மற்றும் உதவிகளை எதிர்பார்க்கின்றனரே அல்லாமல் தங்களுக்கான அரசியல் தலைமைத்தவத்தையோ அல்லது அரசியல் புத்திஜீவிதத்தையோ எதிர்பார்க்கவில்லை என்பது சுரேஸ் பிரேமச்சந்திரனுக்கும் அவரது சகோதரருக்கும் இன்னும் சரிவரப் புரியவரவில்லை. இன்னும் சில புலம்பெயர் புலி ஆதரவு புலி எதிர்ப்பு புத்திஜீவிகளால் இன்னமும் தங்கள் அரசியல் அடையாளத்தை தக்க வைப்பதற்கு அப்பால் சிந்திக்க முடியவில்லை. அதிஸ்டவசமாக மக்கள் இவர்களைக் கண்டுகொள்வதும் இல்லை.

Buses_on_Election_Duty_25thJan10தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினரான போதும் சுயேட்சையாகப் போட்டியிட்ட எம் கெ சிவாஜிலிங்கம் நாடு முழுவதும் பத்தாயிரத்துக்கும் குறைவான வாக்குகளையே பெற்றிருந்தார். எம் கெ சிவாஜிலிங்கம் ஓரளவு அறியப்பட்ட இடதுசாரி அரசியல் வாதிகளைக் காட்டிலும் சில ஆயிரம் வாக்குகளை அதிகம் பெற்றிருந்தார். குறிப்பாக சிறிதுங்க ஜெயசூரிய, விக்கிரமபாகு கருணாரட்ன ஆகிய இடதுசாரிக் கட்சி வேட்பாளர்களைக் காட்டிலும் எம் கெ சிவாஜிலிங்கம் சற்று அதிகமான வாக்குகளைப் பெற்றிருந்தார். ஆனால் இந்த வாக்குகளால் எம் கெ சிவாஜிலிங்கம் எவ்வித திருப்தியையும் அடைய முடியாது. குறிப்பாக தமிழ் பேசும் சிறுபான்மையின மக்கள் மாறி மாறி இனவாதத் தலைமைகளைத் தெரிவு செய்வதிலும் அவற்றுடன் கூட்டுவைத்து அரசியல் நடத்துவதிலுமே ஆர்வம் காட்டுகின்றனரே ஒழிய ஒரு மாற்றத்தை ஏற்படுத்தவதற்கான அரசியல் முதிர்ச்சியும் தூர நோக்கும் அவர்களிடம் இல்லை என்பது மீண்டுமொருமுறை நிரூபிக்கப்பட்டு உள்ளது.

மிக மோசமான அவலத்தை ஏற்படுத்திய வன்னி யுத்தம் முடிவடைந்து சில மாதங்களுக்கு உள்ளாகவே நடைபெற்ற தேர்தலில் தங்கள் அரசியல் இருத்தலை தக்க வைப்பதை மட்டுமே கணக்கில் கொண்டு எய்தவனை நோவதா அம்பை நோவதா என்று அரசியல் பேசியது தமிழ் தேசியக் கூட்டமைப்பு. ஜெனரல் சரத்பொன்சேகாவோடு வில்லுடைக்க சுயம்வரம் சென்றவர்கள் தற்போது மண் கவ்வித் திரும்பியுள்ளனர்.

MR_Poster_Jaffnaஇவர்கள் ஒருபுறம் இருக்க மகிந்த ராஜபக்சவின் தோளோடு தோள் நின்ற ஈபிடிபி, புளொட், ஈபிஆர்எல்எப், ரிஎம்விபி மற்றும் கருணா அம்மான் போன்றவர்களுடைய அரசியலும் அம்மணமாக்கப்பட்டு விட்டது. இவர்கள் மக்களில் இருந்து வெகு தொலைவிலேயே உள்ளனர். மீண்டும் பதவிக்கு வரும்போது இவர்களின் ஆயுதங்களைக் களைவேன் என்று மகிந்த ராஜபக்ச ஒரு உறுதிமொழியை தமிழ் மக்களுக்கு வழங்கி இருந்தாலே மகிந்த ராஜபக்சவுக்கு தமிழ் மக்கள் அளிக்கும் வாக்குகள் அதிகரித்து இருக்கும். ஜெனரல் சரத்பொன்சேகாவுக்கு தமிழ் மக்கள் வாக்களித்தமைக்கு முக்கியமான காரணங்களில் ஒன்று தமிழ் ஆயுதக் குழுக்களின் ஆயுதங்களைக் களைவேன் என அவர் உறுதியழித்து இருந்தது. யாழ்ப்பாணம், மன்னார், மட்டக்களப்பு, வவுனியா போன்ற தமிழ் மாவட்டங்களில் உள்ள வாக்காளர்களுடன் உரையாடிய போது, அவர்கள் தமிழ் ஆயுதக் குழுக்களின் செயற்பாடுகள் மீது மிகுந்த அதிருப்தியை வெளியிட்டு வருகின்றனர். தமிழ் ஆயுதக் குழுக்களின் அடாவடித்தனங்கள் பற்றிய அச்சம் அவர்களிடம் நிறையவே உள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகள் மீது வன்னி மக்கள் எவ்வளவு வெறுப்பை வெளிப்படுத்துகின்றனரோ அதேயளவு வெறுப்பை ஏனைய தமிழ் ஆயுதக் குழுக்கள் தொடர்பாகவும் தமிழ் மக்கள் வெளிப்படுத்தி வருகின்றனர்.

தமிழ் மக்கள் ரிஎன்ஏ உட்பட எந்தவொரு தமிழ் அரசியல் தலைமை மீதும் நம்பிக்கை கொண்டிருக்கவில்லை என்பதையே வெளிப்படுத்தி வருகின்றனர். கடந்த காலங்களில் தொடர்ச்சியாக தமிழ் சந்தர்ப்பவாத அரசியல் தலைமைகளின் அரசியல் முடிவுகளால் அம்மக்கள் மிக மோசமான வாழ்வை எதிர்கொண்டிருந்தனர். இதன் வெளிப்பாடாக தமிழ் அரசியல் தலைமைகள் மீதான நம்பிக்கையீனம் பரவலாகக் காணப்படுகின்றது. தற்போதுள்ள தமிழ் அரசியல் தலைமைகள் தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை முன்னெடுக்கின்ற தகமையை இழந்துள்ளனர். இதுவே தமிழ் பிரதேசங்களின் அரசியல் யதார்த்தமாக உள்ளது.

அரசியலமைப்பும் பாராளுமன்றத் தேர்தலும்

ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் அரசியல் அமைப்புச் சபை ஒன்றை உருவாக்குவதற்கான ஆணையை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கோருவார் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த அரசியல் அமைப்புச் சபை தற்போது நடைமுறையில் உள்ள அரசியலமைப்பை மாற்றியமைத்து புதிய அரசியல் அமைப்பை உருவாக்கும். இதற்கு பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைக் கொண்டு ஆட்சியமைப்பதன் மூலமே சாத்தியம் ஏற்படும். அந்த ஆணையையே ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இம்முறை கோரவுள்ளார்.

தற்போது நடைமுறையில் உள்ள தேர்தல் முறையின்படி எந்தவொரு கட்சியும் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் ஆட்சி அமைப்பதற்கான வாய்ப்பு குறைவாகவே உள்ளது. அதற்கு தேர்தல் முறையை மாற்றி அமைக்க வேண்டும். அதனாலேயே 17வது திருத்தச் சட்டதுக்கு ஆளும்கட்சி அழுத்தம் கொடுத்து வருகின்றது. அதனை நிறைவேற்றவும் பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை அரசுக்கு தேவையாக உள்ளது.

இந்தப் பெரும்பான்மையைப் பெற்று தேர்தல் முறையை மாற்றி அமைக்க குறிப்பாக ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்கள் சிலரையாவது வாங்க அரசு முயற்சிக்கலாம்.

இவ்வாறான மாற்றங்களுக்கு ஊடாக அரசியல் அமைப்பை அரசு மாற்றி அமைத்தாலும் அது இலங்கையில் உள்ள சிறுபான்மை இனங்களின் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு உதவும் வகையில் மாற்றி அமைக்கப்படுமா என்பது சந்தேகத்திற்கு உரியதே. இது பற்றிய தெளிவான அறிவிப்பு எதனையும் ஜனாதிபதி வெளியிடவில்லை.

ரிஎன்ஏ உட்பட தமிழ் அரசியல் கட்சிகள் அனைத்துமே அடுத்த நான்கு வருடத்தில் தங்கள் அரசியல் எதிர்காலத்தை எவ்வாறு தக்க வைத்துக் கொள்ளலாம் என்பதையொட்டியே தங்கள் காய்களை நகர்த்துவர். தமிழ் மக்களின் எதிர்காலம் பற்றிய அக்கறை பெரும்பாலும் தமிழ் அரசியல் கட்சிகளால் வெளிப்படுத்தப்படவில்லை. இனிமேலாவது அவ்வாறு வெளிப்படும் என்று எதிர்பார்ப்பதும் தவறு.

வே பிரபாகரனின் மரண அத்தாட்சிப் பத்திரம் இந்தியாவுக்கு வழங்கப்பட்டது.

Pirabakaran 2007தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் மரணமடைந்ததை இலங்கை அரசு இந்திய அரசுக்கு உறுதிப்படுத்தி உள்ளது. வே பிரபாகரன் மரணமடைந்ததை உறுதிப்படுத்தம் ஆவணங்களை இலங்கை அரசு இந்தியாவின் மத்திய புலனாய்வுப் பிரிவான சிபிஐ க்கு அளித்துள்ளதாக மத்திய உள்நாட்டு அமைச்சர் ப சிதம்பரம் உறுதிப்படுத்தி உள்ளார்.

வே பிரபாகரனது உடல் மே18ல் சர்வதேசத்திற்கும் காட்டப்பட்ட நிலையிலும் தமிழ் மக்கள் தரப்பில் குறிப்பாக தமிழீழ விடுதலைப் புலி ஆதரவாளர்களின் பக்கத்தில் அதனை பல்வேறு காரணங்களுக்காகவும் ஏற்றுக்கொள்ளாத நிலை காணப்பட்டது. பிரபாகரனது மரணத்தை ஏற்றுக் கொள்ளாததற்கு வழங்கப்பட்ட காரணங்களில் இலங்கை அரசு இந்தியாவுக்கு பிரபாகரனின் மரணத்தை உறுதிப்படுத்தி ஆவணங்களைச் சமர்ப்பிக்கவில்லை என்பதும் ஒன்று. தற்போது அதுவும் செய்யப்பட்டு உள்ளது.

Pirabakaran V & Mahathayaதமிழீழ விடுதலைப் புலிப் போராளிகள் பல்லாயிரம் பேருக்கும் அஞ்சலிகள் செலுத்தப்பட்ட போதும் அதன் தலைவருக்கு இதுவரை தமிழீழ விடுதலைப் புலிகளின் பிரதான பிரிவினர் இதுவரை எவ்வித அஞ்சலியும் செலுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்னர் படுகொலை செய்யப்பட்ட மாத்தையா மற்றும் அவருடன் கொல்லப்பட்டவர்களுக்கும் புலிகள் அஞ்சலி செலுத்தி இருக்கவில்லை.

அரசின் மீள்குடியேற்றமும் மக்களது மீளாத்துயரும் : த ஜெயபாலன்

Rehabilitation_Wanniஇலங்கையின் ஆறாவது ஜனாதிபதித் தேர்தல் முடிவடைந்து மீண்டும் விட்ட இடத்தில் இருந்து ஆட்சியைத் தொடர்வது ஏற்கனவே நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற பணிகளை தொடருவதற்கு உதவும் என்ற வகையில் விரும்பியோ விரும்பாமலோ மக்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர். தலையிடிக்கு தலைப்பாகையை மாற்றுவது மருந்து அல்ல என்பதையும் அவர்கள் ஏற்றுக் கொள்கின்றனர். நடைபெற்ற தேர்தல் முடிவுகளோ தேர்தலோ அவர்களுக்கு ஒரு விடயமே அல்ல. அவர்களுடைய சுமைகள் அத்தேர்தலை விடவும் கடுமையானது கொடுமையானது.

அரசாங்கம் மீள்குடியேற்றத்தின் இரண்டாம் கட்டத்தை அமுல்படுத்தப் போவதாக அறிவிக்க உள்ளது. இதன்படி 1000 குடும்பங்கள் மீள்குடியேற்றப்பட உள்ளதாகவும் தெரிவிக்கின்றனர். இந்த மீள்குடியேற்றங்களின் பின் என்ன நிகழ்கின்றது.

இலங்கையில் நான் தங்கியிருந்த நாட்கள் பெரும்பாலும் வன்னியில் இருந்து இடம்பெயர்ந்து வந்தவர்களுடனேயே கழிந்தது. அவர்களில் ஒரு குடும்பத்தினரின் வாழ்வியலைப் பகிர்ந்துகொள்வது வன்னி மக்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகளை வெளிப்படுத்துவதாக அமையும்.

மூன்று தலைமுறையைச் சேர்ந்த தாய், தந்தை அவர்களின் இரு புதல்விகள் அவர்களின் கணவர்கள் அவர்களின் பிள்ளைகள் என ஒன்பது பேர் கொண்ட குடும்பம். அவர்கள் விவசாயத்திலும் அரச தொழில்களிலும் ஈடுபட்டு தன்னிறைவாக வாழ்ந்தவர்கள். தங்களது சம்பாத்தியத்தின் மூலம் சிறுகச் சிறுக சேமித்து தங்களது அடிப்படை வசதிகளையும் ஏற்படுத்திக் கொண்டு வாழ்ந்தனர்.

வயதான தாய் தந்தை மூத்த மகள் ஆசிரியை அவருடைய கணவர் அரச உத்தியோகஸ்தர் அவர்களுக்கு பெண்ணும் ஆணுமாக இரு குழந்தைகள். சிறுவர் படையில் சேர்க்கப்படக் கூடிய பருவம். கடைசி மகள் சங்கத்தில் வேலை கணவர் அச்சகத்தில் வேலை. அவர்களுக்கு ஒரு குழந்தை சிறுவர் படையணியில் சேர்க்க முடியாது. கைக் குழந்தை. அத்துடன் அவர் கர்ப்பணித் தாய்.

ஜனவரி 3 கிளிநொச்சி அரச படைகளின் கைகளில் வீழ்ச்சி அடைய கிளிநொச்சியில் உள்ள தங்கள் கிராமத்தில் இருந்து வெளியேறுகிறார்கள். தங்கள் வாழ்நாளில் சேமித்தவை தங்கள் உணவுத் தேவைக்கான நெல் இவற்றுடன் இவர்களது பயணம் ஆரம்பித்தது. ஆனால் அவர்கள் இப்பயணம் இவ்வளவு நீண்டது என்றோ இவ்வளவு கொடுமையானது என்றோ இவர்கள் கனவிலும் எதிர்பார்க்கவில்லை. கிளிநொச்சியில் இருந்து ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு பொருள் பண்டத்தையும் இழந்து இறுதியில் ஒவ்வொரு முடிச்சுடன் புதுமாத்தளன் வந்தடைந்தனர். அதற்குள் நடந்த கொடூரங்களை விபரிப்பதற்கு தமிழ் அகராதியில் வார்த்தைகளே இல்லை. தங்கள் எதிரிக்குக் கூட அப்படி நடந்துவிடக்கூடாது என்று அவர்கள் கடவுளை வேண்டுகின்றனர்.

அரச படைகளின் தாக்குதல்களில் இருந்து எப்படியாவது தப்பிவிட வேண்டும் என்று தப்பியோட முற்பட்ட போதெல்லாம் தங்களை துப்பாக்கி முனையில் ஈவிரிக்கமற்றுத் தாக்கிய தமிழீழ விடுதலைப் புலிகளை அவர்கள் திட்டாத நாளில்லை. ‘ஆமிக்காரன் தான் எங்களுக்கு செல் அடிக்கிறான் என்றால் இவன்களும் சேர்ந்து தான் எங்களுக்கு செல் அடித்தாங்கள்.’ என்று குமுறினார் அந்த வயதான தாய். ‘அவங்கள் எங்களை மனிசராயே நடத்தேல்லை’ என்று அவர் புலம்பினார். தங்கள் குடும்பத்துடன் தப்பியோட முற்பட்டவேளை சுடுவதற்கு துப்பாக்கியை லோட் பண்ணி நீட்டியபோது நாங்கள் இங்க இருந்து எங்கயும் போகமாட்டோம் என்று பிள்ளைகளையும் கட்டி அணைத்து கதறி அழுதாள் ஆசிரியையான மூத்த மகள். லோட் பண்ணிய துப்பாக்கியால் அருகில் நின்ற ஒருவரை சுட்டுக்கொன்றதாம் அந்தப் புலி.

சனங்கள் தப்பியோடத் தயாராய் நிற்கின்ற இடங்களில் எல்லாம் தங்கள் குறும்தூர செல்களால் புலிகளே மக்கள் மீது தாக்குதலை நடத்தி படுகொலை செய்துள்ளதாயும் அவர்கள் கூறுகின்றனர். அந்த யுத்தத்தில் அரசாங்கமும் புலிகளும் மக்களுக்கு எதிராக கொலைத் தாக்குதலை நடாத்தி உள்ளனர். பல நேரங்களில் செல் தாக்குதலை அரசாங்கம் செய்கிறதா அல்லது புலிகள் செய்கிறார்களா என்பதையே தங்களால் ஊகிக்க முடியவில்லை என அவர்கள் கூறுகின்றனர்.

மரணத்தின் வலியும் கொடுமையும் தினம் தினம் கொல்ல எங்கு தங்கள் பிள்ளைகளை பறிகொடுத்து விடுவோமோ என்ற பயம் தான் அவர்களை மிகவும் கொடுமைப்படுத்தியிருந்தது. செல் வீச்சுக்கள் வருகின்ற போது அனைவரும் ஒன்றாக தங்கள் குழந்தைகளை அனைத்தபடி ஒன்றாகப் படுத்துக் கொண்டனர். மரணம் சம்பவித்தால் அது அத்தணை பேருக்குமானதாக இருக்க வேண்டும் என்றே அவர்கள் கடவுளை வேண்டிக்கொண்டு இருந்தனர்.

கர்ப்பிணித்தாயான இரண்டாவது மகள் நாளுக்கு நாள் அவருடைய சிசுவும் வளர்ந்தது. தாய்மையின் வலி அதன் உபாதைகள் இவற்றுக்கு மத்தியில் மரணத்தின் கொடுமை. வாழ்வில் மிக மென்மையாக பேணப்பட வேண்டிய தாய்மைக்காலம் மிக்க கொடுமையானதாக அமைந்தது.

இவற்றில் இருந்தெல்லாம் தப்பி வந்தபோது இலங்கை இராணுவம் பிடித்தால் சித்திரவதை செய்யும், கற்பழிப்புச் செய்யும் என்றெல்லாம் சொல்லப்பட்ட கதைகளைக் கேட்டு வந்தவர்களுக்கு இலங்கை இராணுவம் தண்ணீரும் பிஸ்கட்டும் கொடுத்து அவர்களை குண்டு வீச்சும் செல்வீச்சும் இல்லாத இடத்திற்கு அனுப்பி வைத்தது ஆறுதல் அளித்தது.

ஆனால் அந்த அறுதலைத் தவிர அவர்களுக்கு வன்னி முகாம்கள் எவ்வித நம்பிக்கையையும் கொடுக்கவில்லை. அவர்களின் ஆளுமையை ஆற்றலை சிதறடித்தது. மரணத்தின் கொடுமையில் இருந்து தப்பியவர்கள் நோயின் கொடுமையில் துவண்டனர். சுகாதாரமற்ற சுவாத்தியம். வாட்டி வதைக்கின்றி கடுமையான வெப்பம். அடிப்படை வசதிகளற்ற சூன்யமான எதிர்காலம் அவர்களை வாட்டியது.

நிறைமாதக் கர்ப்பிணியான இரண்டாவது மகள் எல்லைகளற்ற மருத்துவர்களின் தரமான கவனிப்பில் தன் கவலைகளையெல்லாம் மறக்கும் வகையில் தன் யுத்தகால பெண் குழந்தையைப் பெற்றெடுத்தார். அதனால் அவர்கள் முகாமைவிட்டு வெளியேற அனுமதிக்கப்பட்டனர். யாழ்ப்பாணத்தில் உள்ள கணவனின் குடும்பத்தவருடன் இணைந்து கொண்டனர்.

மற்றைய ஆசிரியையான மூத்தவளும் முகாமைவிட்டு வெளியேறி மன்னாரில் தனது கணவருடைய குடும்பத்துடன் இணைந்து கொண்டார்;.

இவ்வாறாக வன்னி முகாம்களில் உள்ள 300 000 மக்களில் 200 000 மக்கள் முகாம்களைவிட்டு வெளியேறியுள்ளனர். ஆனால் இவர்கள் மீள்குடியேற்றப்பட்டார்களா என்றால் அது மிக நியாயமான கேள்வியே?

Rehabilitation_Wanniஇன்றும் வன்னி முகாம்களில் 100 000 வரையானவர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். 200 000 மக்கள் வெளியேறியுள்ள நிலையில் இப்போது வன்னி முகாம்களில் உள்ளவர்களின் நிலை ஒப்பீட்டு அளவில் பரவாயில்லாமல் உள்ளதாக அம்முகாமில் இருந்து உறவினர்களைச் சந்திப்பதற்காக வந்த ஒருவர் தெரிவித்தார். இதே கருத்தை வெளியிட்ட மற்றுமொருவர் தான் வேலை செய்வதற்காக வெளியே வந்ததாகவும் தங்கள் சொந்த இடத்திற்கே செல்ல விரும்புவதாகவும் தெரிவித்தார்.

இவர்களிடையே எதிர்காலம் பற்றிய நம்பிக்கை பலவீனமானதாகவே இருந்தது. ஏதோ வாழ்ந்தாக வேண்டி உள்ளதே என்ற எண்ணமே ஏற்பட்டது. வன்னி முகாம்களில் கிடைக்கும் தேவைக்கு அதிகமான பொருட்களை விற்று தமக்குத் தேவையான பொருட்களை வாங்கும் நடைமுறையையும் வவுனியா நகரில் பார்க்கக் கூடியதாக இருந்தது.

Rehabilitation_Wanniவவுனியாப் பகுதியில் மீள்குடியேற்றம் என்ற பெயரில் மேற்கொள்ளப்பட்டுள்ள குடியேற்றங்கள் அடிப்படை வசதிகளற்ற மாட்டுத் தொழுவங்கள் என்றே சொல்ல முடியும். தலைக்குமேல் கூரை இருந்தால் அது மீள்குடியேற்றம் ஆகிவிடாது என்பதனை அரசு புரிந்துகொள்ளவில்லை. அரசின் எந்தவொரு கட்டிட விதிமுறையும் தற்போது மீள்குடியேற்றத்திற்கு அமைக்கப்பட்டுள்ள வீடுகள் மனிதக் குடியிருப்புக்கு உகந்தது என்ற சான்றிதழை வளங்காது. இந்த மீள் குடியேற்றங்கள் துரிதகதியில் மிகக் குறுகிய காலத்தில் அமைக்கப்பட்டது என்று சொல்லப்பட்டாலும் அவற்றை தரமானதாக அமைக்க அரசு இதுவரை வன்னி மக்களுக்கு காத்திரமான உறுதி மொழியை அளிக்கவில்லை. குறைந்தபட்சம் அவர்களை தங்கள் சொந்த இடங்களுக்கு அனுப்பி இருந்தாலே அவர்கள் தங்கள் வாழ்வை புனர்நிர்மாணம் செய்திருப்பார்கள்.

Rehabilitation_Wanniவன்னி முகாமில் இருந்து வெளியேறிய பின்னர் குறிப்பிட்ட ஆசிரியையான மகள் சங்கத்தில் வேலை செய்த மகள் இருவரது குடும்பங்களும் மன்னாரிலும் யாழ்ப்பாணத்திலும் உள்ளனர். இவர்களது தாயும் தந்தையும் யாழ்ப்பாணத்துக்கும் மன்னாருக்கும் மாறி மாறிப் பயணிக்கின்றனர். இவர்களில் ஆசிரியையான மகளுக்கு சில மாதங்களுக்கு உள்ளாகவே வெவ்வேறு இடங்களுக்கு ஆசிரியை வேலை மாற்றப்பட்டு உள்ளது. பிள்ளைகள் மன்னாரில் கல்வி கற்க. தாய் வவுனியாவில் கற்பிக்க தந்தை கிளிநொச்சியில் வேலை செய்ய அந்தக் குடும்பம் சிதறிப் போய் வாழ்கிறது. ஆசிரியை மன்னாருக்கு மாற்றலாகி சில வாரங்களுக்கு உள்ளாகவே அவரை கிளிநொச்சிக்கு மாற்றம். கடந்த ஓராண்டு காலமாக அவர்களுடைய இரு பிள்ளைகளின் கல்வியும் மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளது. அவர்களால் நிலையான இடத்தில் இருந்து கல்வியைத் தொடர முடியவில்லை. குழந்தைகளுக்கு பெற்றோர் அண்மையாக இருந்தும் அவர்கள் இருவரும் அங்கும் இங்குமாக வாழ வேண்டிய நிலையுள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகள் மீது நம்பிக்கை கொண்டிருந்த இம்மக்களுக்கு அவர்கள் செய்த கொடுமை அரசு மீதான எதிர்ப்புணர்வை மட்டுப்படுத்தி உள்ளது. இவர்களிடையே பெரும்பாலும் தமிழீழ விடுதலை புலிகளின் தலைமைக்கு எதிரான உணர்வுகளும் அவர்களின் போராட்டத்தின் மீதான வெறுப்பும் மேலோங்கி உள்ளது. இந்த யுத்தத்தில் இருந்து தப்பிய சிறுவர்கள் கூட மிகக் கடுமையான சொற்களால் புலிகளின் தலைமையையும் தலைவரையும் திட்டினர். அவற்றை இங்கு நேரடியாகக் குறிப்பிடுவது பொருத்தமற்றது என்பதால் அவற்றைத் தவிர்க்கின்றேன்.

Rehabilitation_Wanniதன்னிறைவோடு அடிப்படை வசதிகளோடு வாழ்ந்த குடும்பம் இன்று மன்னாரில் கணவரின் குடும்பத்தினரின் உதவியால் அவர்களின் சமையலறையில் வாழ்கின்றனர். இப்போது அதுதான் அவர்களுடைய வரவேற்பறை, படுக்கையறை, சமையலறை எல்லாமே. அதில் இரு பாக்குகள் (bags)) இருக்கும் அதற்குள் தான் அவர்களுடைய சகல பொருட்களும் வைக்கப்பட்டு இருக்கும். அவர்களுக்குள்ள ஒரே நம்பிக்கை அவர்கள் இருவருமே அரச உத்தியோகத்தர்கள் என்பதால் மாதம் தவறாமல் அவர்களுக்கு நிச்சயம் சம்பளம் கிடைக்கும். மற்றுப்படி காற்றில் அடிபட்ட பட்டம் போல் அவர்களுடைய வாழ்வு 2009 ஜனவரியில் இருந்து அங்கும் இங்கும் அலைந்து கொண்டுள்ளது.

சங்கத்தில் வேலை செய்தவருக்கு இப்போது வேலையில்லை. அச்சகத்தில் வேலை செய்த கணவருக்கும் வேலையில்லை. அவர்களுக்குள்ள ஒரே சந்தோசம் அவர்களுக்குப் பிறந்த குழுந்தை சுகநலமாகப் பிறந்தது என்பது தான். மட்டுப்படுத்தப்பட்ட அரச உதவியில் தமது சொந்த இடங்களுக்கு எப்போது திருப்பிச் செல்வோம் என்ற ஏக்கத்தில் தினம் தினம் காலத்தை ஓட்டுகின்றனர்.

அரசாங்கத்தின் மீள் குடியேற்றம் என்பது அனுமான் வாலைப் போல் தொடரும் மீளாத்துயராகவே நீண்டு செல்கின்றது. தங்கள் சொந்த இடங்களில் இருந்து வேரறுக்கப்பட்டு பல்வேறு பகுதிகளிலும் சிதறவிடப்பட்டுள்ள இம்மக்கள் மீண்டும் தங்கள் சொந்த இடங்களில் வேரூன்றி வாழவே விரும்புகின்றனர். அதற்கான வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்காதவரை அரசின் மீள்குடியேற்றம் மீளாத்துயராகவே அமையும். இது அவர்களின் வாழ்நிலையை மேலும் மேலும் மோசமாக்கும்.

Rehabilitation_Wanniதமிழீழ விடுதலைப் புலிகளின் போராட்டம் தங்கள் வாழ்வியலை அழித்துவிட்டதாக எண்ணும் வன்னி மக்கள் தங்கள் வாழ்வு பல ஆண்டுகளுக்கு பின் தள்ளப்பட்டு விட்டதாக உணர்கின்றனர். இப்படியெல்லாம் இல்லாமல் இருந்திருந்தால் எங்கள் பிள்ளைகளும் படித்து ஒரு நல்ல நிலைக்கு வந்திருக்க முடியும் என தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார் அந்த ஆசிரியையானவர். தங்களை கிளிநொச்சிக்கு செல்ல அனுமதித்தாலும் முதலில் தானும் கணவரும் சென்று நிலைமைகளைப் பார்த்து கண்ணி வெடி, மிதிவெடிப் பயங்கள் இல்லை என்பதை உறுதிப்படுத்திய பின்னரே பிள்ளைகளைக் கூட்டிச் செல்ல முடியும் என்கிறார் அந்த ஆசிரியை. அதுமட்டுமல்ல மீண்டும் பலவந்தமாக பிள்ளைகளை பிடித்து இயக்கத்தில் சேர்ப்பார்களோ என்ற பயமும் அவரிடம் இன்னமும் உள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகள் முற்றாக தோற்கடிக்கப்பட்டு விட்டார்கள் என்ற அரசின் பிரச்சாரத்தை அவரால் முழுமையாக நம்பமுடியவில்லை.

ஆனாலும் தங்கள் சொந்த இடத்திற்குச் சென்றும் மீண்டும் தங்கள் வாழ்வை தாங்களே மீள்நிர்மாணம் செய்ய ஆரம்பிக்கும் நாளுக்காக அவர்கள் காத்திருக்கின்றனர்.

மேனனின் இலங்கை வருகையும் அவரது அரசியல் பார்வையும்

sivashankar.jpgஇந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன் விரைவில் இலங்கை வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது. நேற்று (ஜனவரி 31) தமிழ் நாடு முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியைச் சந்தித்த அவருடன் வன்னி முகாம்களில் உள்ள மக்களின் மீள்குடியேற்றம் மற்றும் அரசியல் தீர்வு தொடர்பாக உரையாடியதாக மேனன் செய்தியாளர்களுக்கு தெரிவித்துள்ளார்.

வன்னி மக்களின் மீள்குடியேற்றத்திற்கு இந்தியா உதவி வரவதாகவும் அதிகாரப் பரவலாக்கம் தொடர்பாக அனைத்தத் தரப்பினரும் உடன்படக் கூடிய வகையில் ஏற்பாடு செய்யப்படும் எனவும் சிவசங்கர் மேனன் தெரிவித்துள்ளார்.

சிவசங்கர் மேனன் மகிந்த ராஜபக்ச சகோதரர்களின் அரசுடன் மிக நெருக்கமான உறவுகளைக் கொண்டுள்ள இந்திய ராஜதந்திரி. வடக்கு மாகாணசபைத் தேர்தலில் தேசியக் கட்சிகளே பலமடைய வேண்டும் என்ற எண்ணப்பாட்டை சிவசங்கர் மேனன் கொண்டிருந்ததாக தேசம்நெற்க்கு கிடைக்கும் தகவல்கள் தெரிவித்து இருந்தன. சிறுபான்மை தேசிய இனங்களின் அரசியலைப் பலவீனப்படுத்தி இலங்கைத் தேசிய அரசியலை முன்னிலைப்படுத்துகின்ற ஒரு போக்கை சிவசங்கர் மேனன் ஆதரிப்பதாகவும் தேசம்நெற்க்கு கிடைத்த தகவல்கள் உறுதிப்படுத்துகின்றன.

நாம் இந்தியர் என்பது போல் நாம் இலங்கையர் என்ற பொது அரசியல் அடையாளத்தை நோக்கி இலங்கை நகர்வதையே சிவசங்கர் மேனன் போன்றவர்கள் விலியுறுத்துவதாக தொரியவருகின்றது.

பாராளுமன்றத்துக்கான தேர்தல் ஏப்ரல் முற்பகுதியில்! தமிழ் பகுதிகளிலும் விறுவிறுப்பான தேர்தல் இடம்பெறும்!!

இலங்கைப் பாராளுமன்றத்துக்கான தேர்தல் ஏப்ரல் மற்பகுதியில் பெரும்பாலும் ஏப்ரல் 9ல் நடைபெறும் என தேசம்நெற்க்குத் தெரியவருகின்றது. இது தொடர்பான அறிவித்தல்கள் பெப்ரவரி 5 அல்லது 9ம் திகதிகளில் வெளியாகலாம் எனவும் தெரியவருகின்றது.

உலகின் மிகப்பெரும் அமைச்சரவையைக் கொண்ட சிறிய நாடுகளில் ஒன்றான இலங்கையின் தற்போதைய பாராளுமன்றத்தின் காலம் எதிர்வரும் ஏப்ரல் மாதத்தில் முடிவடையவுள்ளது.

பாராளுமன்றத் தேர்தலுக்கான பொது வேட்பாளர்களைத் தெரிவு செய்வதில் கட்சிகள் ஏற்கனவே தீவிரமாக ஈடுபட்டு உள்ளன.

இத்தேர்தல்கள் தமிழ் மக்களுக்கு குறிப்பிடத்தக்க அரசியல் தீர்வு எதனையும் முன்வைக்கமாட்டாது போனாலும் தமிழ் அரசியல் தலைமைகளின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கின்ற தேர்தலாக இது அமைய உள்ளது. அதனால் இத்தேர்தல் தமிழ் பகுதிகளிலும் மிகவும் விறுவிறுப்பாகவே அமைய உள்ளது.

இலங்கையின் 6வது ஜனாதிபதியாக மீண்டும் மகிந்த ராஜபக்ச : த ஜெயபாலன்

MR_Posters இலங்கையின் 6வது ஜனாதிபதித் தேர்தலில் மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியாவது உறுதியாகி வருகின்றது. ஏற்கனவே தேசம்நெற் இணையத்தில் எதிர்வு கூறப்பட்டது போல தற்போதைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவே மீண்டும் ஆட்சிபீடம் ஏறவுள்ளார். யாழ்ப்பாண வாக்காளர்களின் எதிர்பார்ப்புக்கு மாறாகவே இலங்கையின் ஜனாதிபதித் தேர்தல் அமையும் என்பது மீண்டும் ஒரு தடவை நிருபணமாகி உள்ளது.

இலங்கை நேரப்படி காலை ஆறுமணி வரை வெளியான முடிவுகளில்  மகிந்த ராஜபக்ச 60 வீத வாக்குகளைப்பெற்று முன்னணியில் உள்ளார். இரண்டாவது நிலையில் உள்ள ஜெனரல் சரத் பொன்சேகா 22 வீத வாக்குகளையே பெற்றுள்ளார்.

வெளியான தபால் வாக்குகளிலும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவே முன்னணியில் உள்ளார்.

இதுவரை வெளியான முடிவுகளின் படி ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச எதிர்பார்க்கப்பட்டதிலும் பார்க்க அதிகப்படியான வாக்கு வித்தியாசத்தில் முன்னணியில் உள்ளார்.

தேர்தல் – 70 வீதமான வாக்குகள் பதிவு :

ஜனவரி 26 இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களே தங்கள் வாக்குகளைச் செலுத்துவதற்கான நடைமுறையைக் கொண்டிருக்கவில்லை. சராசரியாக 70 வீதமான வாக்குப் பதிவுகளுடன் ஒப்பீட்டளவில் குறைந்த அளவு வன்முறையுடன் இடம்பெற்றது. ஆனால் எதிர் பார்க்கப்பட்டது போலவே தமிழ் பகுதிகளில் வாக்குப் பதிவுகள் மந்தமாகவே இடம்பெற்றுள்ளது.

தேர்தல் ஜனவரி 26 காலை ஏழு மணிக்கு ஆரம்பிப்பதற்கு சில மணிநேரங்களுக்கு முன்பாக யாழ்ப்பாணத்தில் 13 இடங்களில் குண்டுவெடிப்புச் சம்பவங்கள் இடம்பெற்றன. இக்குண்டு வெடிப்புச் சம்பவங்கள் குறிப்பிடத்தக்க பாதிப்புக்களை ஏற்படுத்தப்படாத போதும் யாழ் மக்கள் மத்தியில் ஒரு அச்சத்தை ஏற்படுத்தி இருந்தது.

இன்றைய தேர்தலில் பிரதான வேட்பாளரான சரத்பொன்சேகா தேர்தலில் வாக்களிக்க முடியாத நிலையில் காணப்பட்டார். தேர்தலில் ஒருவர் வாக்களிக்க முடியாது இருப்பது அவர் தேர்தலில் போட்டியிடுவதை தவிர்ப்பதற்கான காரணமாக அமையாது என தேர்தல் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

மற்றுமொரு வேட்பாளரான விக்கிரமபாகு கருணாரட்ண வாக்களிக்க வந்த போது தனது அடையாளத்தை உறுதிப்படுத்தும் சான்றுகள் எதனையும் கொண்டிருக்கவில்லை. அதனால் அவர் தேர்தல் ஆணையாளரின் விசேட அனுமதியின் கீழ் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டார்.

இந்த ஜனாதிபதித் தேர்தலில் 14 088 500 வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றிருந்தனர். கடந்த தேர்தலைவிட இத்தேர்தலில் 761340 வாக்காளர்கள் புதிதாக வாக்களிப்புப் பட்டியலில் இணைக்கப்பட்டனர். மொத்த வாக்காளர்களில் சராசரியாக 70 வீதமானவர்கள் வாக்களித்து உள்ளனர். தமிழ் பகுதிகளில் பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள்:

Jaffna  721,359
Vanni 266,975
Batticaloa 333,644
Digamadulla 420,835
Trincomalee 241,133

தமிழ் வாக்காளர்களின் முக்கிய மாவட்டமான யாழ் மாவட்டத்தில் குறைந்தளவு வாக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இங்கு 21 வீதமான வாக்குகளே பதிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்கள் தேர்தலை பகிஸ்கரிக்காமல் எதிர்க்கட்சி வேட்பாளர் சரத்பொன்சேகாவுக்கு ஆதரவளிக்குமாறு பிரச்சாரம் செய்ததிருந்த போதும் தமிழ் வாக்காளர்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பினை நிராகரித்துள்ளனர். தமிழ் தேசியக் கூட்டமைப்பு சரத்பொன்சேகாவை ஆதரித்த போதும் தமிழ் மக்கள் வாக்களிப்பை பெரும்பாலும் நிராகரித்துள்ளனர்.  

2010 ஜனவரி 27ல் இலங்கையின் 6வது ஜனாதிபதி ஜெனரல் சரத் பொன்சேகாவா? : த ஜெயபாலன்

MR_Postersஜனவரி 26ல் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் இரு பிரதான வேட்பாளர்களில் எவர் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்படுவார் என்பது பல லட்ச ரூபாய்களுக்கான கேள்வியாக உள்ளது. இரு வேட்பாளர்களுக்கும் இடையே கடுமையான போட்டி நிலவுவது தற்போது ஊடகங்களில் வெளிப்படுத்தப்பட்டு உள்ளது.  2005 நவம்பர் தேர்தலுக்குப் பின்னான சில மாதங்களுக்கு உள்ளாகவே மாவிலாறு அணையைத் தடுத்து வலிந்த யுத்தத்திற்கு அழைப்பு விட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் 2009 நடுப்பகுதியில் முற்றாக அழிக்கப்பட்ட நிலையில் 2010 தேர்தல் இடம்பெறுகின்றது. 1982 முதல் 2005 வரை இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தல்களில் தமிழ் மக்கள் வாக்களித்த முறையைப் பார்க்கும் போது பின்வரும் விடயங்களை அவதானிக்கக் கூடியதாக இருக்கும்.

1982_P_Election_SL , 1988_P_Election_SL , 1994_P_Election_SL , 1999_P_Election_SL , 2005_P_Election_SL

1. யாழ்ப்பாண மக்கள் பெரும்பாலும் ஜனாதிபதித் தேர்தலில் மிகக்குறைந்த வீதமாகவே வாக்களித்து உள்ளனர். 1982 தேர்தலிலேயே ஆகக் கூடுதலாக 50 வீதத்திற்கும் சற்றுக் குறைவாக வாக்களித்து உள்ளனர். அதன் பின்னர் இடம்பெற்ற தேர்தல்களில் 1988, 1999 தேர்தல்களில் 20 வீதமானவர்களே வாக்களித்து உள்ளனர். 1994ல் இடம்பெற்ற தேர்தலில் 3 வீதமும் 2005 தேர்தலில் ஒரு வீதமானவர்களுமே வாக்களித்துள்ளனர்.

1982  தேர்தல் தமிழ் மக்களின் அரசியல் வரலாற்றை நிர்ணயித்த மிக முக்கியமான காலத்தில் நடந்த மிக முக்கியமான ஜனாதிபதித் தேர்தல். மிக மோசமான இனவாதத்தை கக்கிக் கொண்டிருந்த ஐக்கிய தேசியக் கட்சி அளிக்கப்பட்ட வாக்குகளில் 20 வீதத்தை தக்க வைத்துக் கொண்டது. 35 வீதமான வாக்குகள் சிறிலங்கா சுதத்திரக் கட்சிக்கும் 40 வீதமான வாக்குகள் தமிழ் கொங்கிரஸிற்கும் கிடைத்தது.

இதில் முக்கிய அம்சம் என்னவென்றால் இலங்கையில் திட்டமிட்ட முறையில் இன ஒடுக்குமுறையை ஸ்தாபனமயப்படுத்தியது ஐக்கிய தேசியக் கட்சி. சிங்களவனின் முதுகுத் தோலில் செருப்புத் தைப்போம் போன்ற வீர வசனங்களைக் கக்கிக் கொண்டிருந்த தமிழீழக் கோரிக்கையை முன் வைத்த தமிழர் விடுதலைக் கூட்டணி அன்றும் ஐக்கிய தேசியக் கட்சியை நிராகரிக்குமாறு தமிழ் மக்களைக் கேட்டுக் கொள்ளவில்லை. மாறாகத் தேர்தல் முடிவுவரை மௌனமாக இருந்துவிட்டு தேர்தலுக்கு அண்மையாக விடுமுறையில் வெளிநாடு சென்றனர். தேர்தலுக்கு முதல் நாள் வெளியான பத்திரிகைச் செய்தி தமிழர் விடுதலைக் கூட்டணி ஐக்கிய தேசியக் கட்சியை ஆதரிப்பதாக தெரிவித்தது. தேர்தலுக்குப் பின் நாடு திரும்பியவர்கள் அத்தவறான செய்திக்கு எதிராக சட்டநடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை. எடுக்கவும் முடியவில்லை. ஏனென்றால் அதுவொரு திட்டமிட்ட தவறு.

2. தமிழ் பகுதிகளில் வாக்களிக்கப்பட்ட முறையைப் பார்க்கையில் யாழ்ப்பாணத்தில் வாக்களிக்கப்பட்ட முறை வடக்கு கிழக்கின் ஏனைய பகுதிகளில் வாக்களிக்கப்பட்ட முறையுடன் ஒத்திருக்கவில்லை. ஜனாதிபதித் தேர்தல்களில் யாழ்ப்பாண மக்கள் கூடுதலாக ஆதரவு தெரிவித்த வேட்பாளருக்கு அல்லாமல் அடுத்த வேட்பாளருக்கே வடக்கு கிழக்கின் ஏனைய பகுதிகளில் வாக்களிக்கப்பட்டு உள்ளது.

1991 வரை யாழ்ப்பாணம், வன்னி தேர்தல் தொகுதிகள் சிறுதொகையான முஸ்லீம் மக்களைக் கொண்டிருந்தாலும் அவற்றை ஒற்றையினச் சமூகமாகவே பார்க்க முடியும். மட்டக்களப்பு தமிழ் – முஸ்லீம் சமூகங்களைக் கொண்ட ஒரு தேர்தல் தொகுதியாக உள்ளது. திருகோணமலை பெரும்பாலும் தமிழ் – முஸ்லீம் – சிங்கள இனங்கள் வாழுகின்ற மூவினங்களின் தேர்தல் தொகுதியாக உள்ளது. திகாமடுல்ல சிங்கள – முஸ்லீம் சமூகங்களைக் கொண்ட தேர்தல் தொகுதியாக உள்ளது. இவ்வகையான இனப்பரம்பலின் பின்னணியிலேயே ஜனாதிபதித் தேர்தல் நோக்கப்படும்.

யாழ்ப்பாணம் தவிர்ந்த வடக்கு, கிழக்கின் ஏனைய பகுதிகளில் மக்கள் வேறுபட்ட முறையில் வாக்களித்து இருப்பது ஓரளவு அப்பகுதிகளின் இனப்பரம்பலுடன் தொடர்புபட்டு இருந்தாலும் குறிப்பாக வன்னி, மட்டக்களப்பு மாவட்டங்கள் யாழ்ப்பாணத்தைப் போன்ற தமிழ் மக்கள் செல்வாக்குள்ள தேர்தல் தொகுதிகள். அப்படி இருந்தும் யாழ்ப்பாணத்தில் வாக்களிக்கப்பட்ட முறையில் இருந்து வன்னி மட்டக்களப்பு தேர்தல் தொகுதிகளில் வாக்களிக்கப்பட்ட முறை வேறுபட்டு இருப்பது மாறுபட்ட அரசியல் பார்வையை வெளிப்படுத்தி உள்ளது.

1982, 1988, 1999 ஆகிய மூன்று ஜனாதிபதித் தேர்தல்களிலும் 20 வீதத்திற்கும் அதிகமாக தமிழ் மக்கள் வாக்களிப்பில் கலந்துகொண்டிருந்தனர். யாழ்ப்பாணத்தில் மட்டும் 1999ல் 19.18 வீதமான மக்களே வாக்களித்து இருந்தனர். 1994, 2005 ஜனாதிபதித் தேர்தல்களின் போது யாழ்ப்பாணத்தில் முறையே 2.97 வீதமும் 1.21 வீதமும் ஆனவர்களே வாக்களித்து இருந்ததால் அத்தரவுகளை ஒப்பீட்டுக்கு பயன்படுத்துவதைத் தவிர்த்து உள்ளேன்.

1982, 1988 ஜனாதிபதித் தேர்தல்களின் போது யாழ்ப்பாணத்தில் மக்கள் ஐக்கிய தேசியக் கட்சியைவிட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு கூடுதலான வாக்குகளைச் செலுத்தி இருந்தனர்.

1982ல் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஐக்கிய தேசியக் கட்சியைவிட யாழ்ப்பாணத்தில் 15 வீதமான வாக்குகளை அதிகம் பெற்றிருந்தது. ஆனால் வடக்கு கிழக்கின் ஏனைய தேர்தல் தொகுதிகளில் ஐக்கிய தேசியக் கட்சி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைவிட 15 வீதத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றிருந்தது.

1988ல் இந்த முரண்பாடு இன்னும் அதிகமானதாகக் காணப்பட்டது. யாழ்ப்பாணத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி, ஐக்கிய தேசியக் கட்சியைவிட 8 வீதமான வாக்குகளை அதிகம் பெற்றுக் கொள்ள வன்னி, மட்டக்களப்பு தேர்தல் தொகுதிகளில் ஐக்கிய தேசியக் கட்சி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைவிட 30 வீதமான வாக்குகளை அதிகம் பெற்றுக்கொண்டது.

1999ல் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஐக்கிய தேசியக் கட்சியைவிட 3 வீதம் அதிக வாக்குகளை யாழ்ப்பாணத்தில் பெற்றுக் கொண்டது. ஆனால் வன்னி மட்டக்களப்பு தேர்தல் தொகுதிகளில் ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைவிட முறையே 45 வீதமும் 25 வீதமும் அதிக வாக்குகளைப் பெற்றுள்ளது.

மட்டுப்படுத்தப்பட்ட அளவில் சுதந்திரமாக இடம்பெற்ற இத்தேர்தல்கள் வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் அரசியல் தெரிவில் இருந்த வேற்றுமையை வெளிப்படுத்தி நிற்கின்றது.

3. யாழ்ப்பாண வாக்காளர்களுக்கும் தென்னிலங்கை வாக்காளர்களுக்கும் இடையேயும் ஒரு முரண்நகையான உறவுள்ளது. யாழ்பாண வாக்காளர்களின் தெரிவுக்கு மாறாகவே இலங்கையின் அரசுத் தலைவர் தெரிவு செய்யப்பட்டு உள்ளார். 1982, 1988 ஜனாதிபதித் தேர்தலின் போது யாழ்ப்பாண வாக்காளர்கள் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வேட்பாளரை ஆதரித்த போது ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளரே ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டார்.

ஆனால் 1994இல் யாழ்ப்பாணத்தில் குறைந்தளவு வீதத்தினரே வாக்களித்திருந்த போதும் சமாதானத்தின் பெயரில் போட்டியிட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வேட்பாளருக்கு 95 வீதத்திற்கும் அதிகமான வாக்குகள் கிடைத்தது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சார்பில் போட்டியிட்ட சந்திரிகா குமாரதுங்க யாழ் வாக்காளர்களாலும் தென்னிலங்கை வாக்காளர்களாலும் சமாதானப் புறாவாகத் தெரிவு செய்யப்பட்டார்.

1999ல் யாழ் வாக்காளர்கள் போட்டியிட்ட ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வேட்பாளர்களுக்கு தெளிவான சமிஞ்சையை வழங்கவில்லை. ஐக்கிய தேசியக் கட்சி 43 வீதமான வாக்குகளையும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி 46 வீத வாக்குகளையும் பெற்றன. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சார்பில் போட்டியிட்ட சந்திரிகா குமாரதுங்க இரண்டாவது தடவையாக ஜனாதிபதியானார்.

2005 தேர்தலில் யாழ்ப்பாண வாக்காளர்களுடைய விருப்பத்திற்கு மாறாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சார்பில் மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியானார். இத்தேர்தலில் தமிழ் மக்களுடைய வாக்களிக்கும் உரிமையை தமிழீழ விடுதலைப் புலிகள் பலவந்தமாகத் தடுத்தமையினால் தமிழ் மக்கள் வாக்களிப்பில் கலந்துகொள்ளவில்லை. அவர்கள் சுதந்திரமாக தங்கள் வாக்குகளை அளிக்க அனுமதிக்கப்பட்டு இருந்தால் அன்று மகிந்த ராஜபக்ச தோல்வி அடைந்திருக்கலாம்.

மட்டுப்படுத்தப்பட்ட சுதந்திரத்துடன் யாழ்  – சிங்கள வாக்காளர்களுக்கு பொதுவாக இல்லாத தேர்தல் விஞ்ஞாபனத்துடன் நடத்தப்பட்ட முதல் இரு ஜனாதிபதித் தேர்தல்களும் யாழ்  – சிங்கள வாக்காளர்களின் தெரிவில் பாரிய வேறுபாட்டைக் காட்டி நிற்கின்றன. யாழ் வாக்காளர்களுடைய தெரிவுக்கு மாறாகவே இலங்கையின் ஜனாதிபதியை இலங்கையர்கள் தெரிவு செய்துள்ளனர்.

இலங்கையில் இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தல்களில் தமிழ் பகுதிகளைப் பொறுத்தவரை 2010 தேர்தலுடன் ஓரளவு ஒப்பிடக் கூடிய தேர்தலாக 1982 ஜனாதிபதித் தேர்தலை எடுத்துக் கொள்ள முடியும். பிரதான ஜனாதிபதி வேட்பாளர்கள் தமிழ் பகுதிகளுக்கு விஜயம் செய்வது, தமிழ் மக்களுடைய நடைமுறைப் பிரச்சினைகள் தொடர்பாக வெளியிடப்படும் அறிக்கைகள், தமிழீழ விடுதலைப் புலிகள் உட்பட தமிழ் ஆயுதக் குழுக்கள் பலவீனப்பட்டு உள்ள நிலைமை, தமிழ் வேட்பாளர் ஒருவர் போட்டியிடுவது என்பன இத்தேர்தலை 1982 தேர்தலுடன் ஒப்பிடக் கூடிய நிலையை ஏற்படுத்தி உள்ளது. மேலும் 1982ல் தமிழர் விடுதலைக் கூட்டணி ஜிஜி பொன்னம்பலத்தை ஆதரிக்கவில்லை. அதே போல் தமிழ் தேசியக் கூட்டமைப்பு எம் கெ சிவாஜிலிங்கத்தை ஆதரிக்கவில்லை. 1982 ஜனாதிபதித் தேர்தல் போன்று மும்முனைகளில் தமிழ் பகுதிகளின் வாக்கு பதியப்படும். ஐக்கிய தேசியக் கட்சிக் கூட்டு, ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக் கூட்டு, தமிழ் வேட்பாளர் என வாக்குகள் செலுத்தப்படும்.

இந்தப் பின்னணியிலும் கடந்த கால தேர்தல் முடிவுகளில் இருந்தும் பின்வரும் முடிவுக்கு வர முடியும். ஆனால் இது முடிந்த முடிவாக அமைய வேண்டும் என்ற அவசியம் இல்லை.
1. 1982 தேர்தலைப் போன்று 2010 தேர்தலிலும் தமிழ் மக்களுடைய வாக்குகள் மும்முனைகளில் செலுத்தப்படும்.
2. தமிழ் வேட்பாளரான எம் கெ சிவாஜிலிங்கம் கணிசமான தமிழ் வாக்குகளைப் பெறுவார். ஆனால் அவரது வாக்குகள் ஜனாதிபதித் தெரிவுக்காக மற்றுமொரு வாக்குக் கணக்கெடுப்பை ஏற்படுத்தும் அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்துமா என்பது சந்தேகமே.
3. இரு பிரதான வேட்பாளர்களில் யாழ்ப்பாணத்தவர்கள் மத்தியில் பொன்சேகா விருப்பத்திற்கு உரியவராக உள்ளார். தமிழ் தேசியக் கூட்டமைப்பும் அவரை வெளிப்படையாக ஆதரிக்கின்றது.
4. யாழ்ப்பாணத்தவர்களின் அரசியல் தெரிவில் இருந்து மாறுபட்ட தெரிவையே வடக்கு கிழக்கின் ஏனைய பாகங்களில் உள்ளவர்கள் மேற்கொள்வதால் வடக்கு கிழக்கின் ஏனைய பாகங்களில் மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவான நிலை இருக்கும்.
5. யாழ்ப்பாணத்தவர்களின் தெரிவுக்கு மாறாகவே இலங்கையின் ஜனாதிபதி வெற்றி பெற்றிருப்பதால் 2010 ஜனாதிபதித் தேர்தலில் யாழ்ப்பாணத்தில் பெரும்பான்மை வாக்குகள் ஜெனரல் பொன்சேகாவுக்கு அளிக்கப்பட்டால் அவர் நாட்டின் ஜனாதிபதியாவதற்கான வாய்ப்பு குறைவாகவே இருக்கும்.

கடந்தகால தேர்தல்களில் தமிழ் மக்கள் வாக்களித்த முறையைக் கீழுள்ள இணைப்புகளில் காணலாம்:

1982_P_Election_SL

1988_P_Election_SL

1994_P_Election_SL

1999_P_Election_SL

2005_P_Election_SL

”சிவாஜிலிங்கம், சிறிகாந்தா அமைப்பில் இருந்து நீக்கப்பட்டது என வெளியான செய்தி மோசடியானது” ரெலோ தலைவர்

Selvam Adaikalanathan TNA_TELOஜனாதிபதித் தேர்தலுக்கான நாட்கள் அண்மிக்க அண்மிக்க தேர்தல் பிரச்சாரங்கள் சேறடிப்புப் பிரச்சாரங்களாகவும் மாறி வருகின்றது. இரு பிரதான வேட்பாளர்களும் தங்கள் கொள்கையினதும் நன்மதிப்பின் அடிப்படையில் வாக்கு கேட்பதற்குப் பதிலாக மற்றவரின் பலவீனத்திலும் மற்றவரை குற்றம்சாட்டுவதன் மூலமும் தங்களைப் பலப்படுத்த முயல்கின்றனர். இந்த சேறடிப்புப் போட்டியில் தமிழ் ஊடகங்களும் தங்களை இணைத்துக் கொண்டுள்ளன. இதன் ஒரு வெளிப்பாடாக சுயேட்சையாகத் தேர்தலில் போட்டியிடும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எம் கெ சிவாஜிலிங்கம் அவர் அங்கம் வகித்த ரெலோ அமைப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக மோசடியான செய்தி பரவலாக வெளியிடப்பட்டுள்ளது.

‘தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவாஜிலிங்கம் மற்றும் ஸ்ரீகாந்தா ஆகியோர் தமிழீழ விடுதலை இயக்கம் (ரெலோ) அமைப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக ரெலோ அமைப்பின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் மற்றும் செயலளார் பிரசன்னா ஆகியோர் கையொப்பமிட்டு அறிக்கை வெளியிட்டுள்ளனர்’ என அச்செய்திகள் தெரிவிக்கின்றன. ‘குறித்த இருவரும் கட்சியின் அனைத்து பதவி நிலைகளில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளனர்’ என்றும் அச்செய்தி தெரிவிக்கின்றது. இச்செய்தி கொழும்பில் இருந்து வெளியாகும் தமிழ் பத்திரிகையொன்றிலும் அதனைத் தொடர்ந்து இணைய ஊடகங்களிலும் பிரித்தானியத் தமிழ் தொலைக்காட்சி ஒன்றிலும் வெளியிடப்பட்டு உள்ளது.

‘கட்சியின் நிலைப்பாட்டிற்கு முரணாக சிவாஜிலிங்கம் ஜனாதிபதித் தேர்தலில் சுயேட்சையாக போட்டியிடத் தீர்மானித்தமை தொடர்பில் அவர் மீது கட்சி தலைமை நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், சிவாஜிலிங்கத்திற்கு ஆதரவு வழங்கியமை காரணமாக ஸ்ரீகாந்தா கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர்’ என்றும் அச்செயிதியில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

பெரும்பாலும் எதிர்க்கட்சி வேட்பாளர் சரத்பொன்சேகாவுக்கு ஆதரவளிக்கும் இந்த ஊடகங்கள் எம் கெ சிவாஜிலிங்கத்திற்கு கிடைக்கும் வாக்குகளைத் தடுப்பதற்காகவே இவ்வாறான பிரச்சாரங்களில் ஈடுபடுவதாக லண்டனில் உள்ள எம் கெ சிவாஜிலிங்கத்தின் ஆதரவாளர் ஒருவர் தேசம்நெற்க்குத் தெரிவித்தார்.

இச்செய்தி தொடர்பாக ரெலோ இயக்கத்தின் தலைவர் செல்வம் அடைக்கலநாதனுடன் தொடர்பு கொண்ட போது இச்செய்தி முற்றிலும் மோசடியானது எனத் தெரிவித்தார். இச்செய்தியை வெளியிட்ட ஊடகங்கள் அதனை வெளியிடுவதற்கு முன் தன்னுடன் அச்செய்தியின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்த தவறி இருந்ததாகவும் அவர் குற்றம்சாட்டினார். இத்தவறான செய்தி தொடர்பான அறிக்கை விரைவில் ரெலோ அமைப்பினரால் வெளியிடப்படும் எனவும் அவர் கூறினார்.

ரெலோ இயக்கத்தினுள் பிளவை ஏற்படுத்துவதற்காக மேற்கொள்ளப்படுகின்ற இவ்வாறான முயற்சிகளை வன்மையாகக் கண்டித்த அவர் ரெலோ அமைப்பின் பழமையான திருமலை மாவட்ட லெற்றர் ஹெட்டில் எழுதப்பட்டு தனது கையொப்பத்தை இட்டு அனுப்பப்பட்ட அறிக்கையை ஆதாரமாகக் காட்டியே இச்செய்தி வெளியிடப்பட்டதாகவும்  அக்கையொப்பம் தன்னுடையதல்ல அது மோசடியானது என்றும் அவர் தெரிவித்தார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் சரத் பொன்சேகாவுக்கு ஆதரவளிக்க முன்வந்த போதும் பெரும்பாலான தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் சரத் பொன்சேகாவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்யத் தயங்குகின்றனர். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஒரு பிரவு சரத் பொன்சேகாவுக்கும் இன்னுமொரு பிரிவு மகிந்த ராஜபக்சவுக்கு மறைமுகமாகவும் மற்றுமொருபிரிவு சுயேட்சை வேட்பாளர் எம் கெ சிவாஜிலிங்கத்துக்கு ஆதரவாகவும் செயற்படுகின்றது.

இம்மோசடிச் செய்தி எம் கெ சிவாஜிலிங்கத்தின் மீதான ஒரு சேறடிப்பு முயற்சியாகவே அமைந்துள்ளது.

தமிழர்கள் சமாதானத்தைப் பெற மேயர் ரொபின் வேல்ஸ் பொங்கல் வாழ்த்து!!!

Mayor_and_Cllr_Pongal_14Jan10”இலங்கைத் தமிழர்களுக்கு கடந்த ஆண்டு மிகுந்த நெருக்கடியான ஆண்டு. எதிர்வரும் ஆண்டுகளில் அவர்கள் சமாதானத்தைப் பெறவேண்டும்” என நியூஹாம் மேயர் ரொபின் வேல்ஸ் இன்று தெரிவித்தார். லண்டனில் மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஒரே மேயரான ரொபின் வேல்ஸ் இன்று (டிசம்பர் 14) நியூஹாமில் இடம்பெற்ற பொங்கல் நிகழ்வில் கலந்து கொண்டு இதனைத் தெரிவித்தார். இன்றைய நிகழ்வில் நியூஹாம் பிரதான வீதியான ஹைஸ்ரீற் நோத்தில் உள்ள அலங்கார விளக்குகளை ஏற்றி வைத்து உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

உலகிலேயே அதிகமாக பல்வேறு இனத்தவர்கள் இணைந்து வாழ்கின்ற  நகரமாக நியூஹாம் உள்ளது எனக் குறிப்பிட்ட மேயர் இங்குள்ள 86 வீதமான மக்கள் மகிழ்ச்சியுடன் வாழ்வதாகக் குறிப்பிட்டார். தமிழ் மக்கள் நியூஹாமிற்கு வழங்கியுள்ள பங்களிப்பையிட்டு தான் மகிழ்ச்சி அடைவதாகத் தெரிவித்த மேயர் இன்றைய பொங்கல் நிகழ்வில் கலந்துகொள்வதையிட்டு பெருமைப்படுவதாகவும் தெரிவித்தார்.

இந்நிகழ்வின் ஏற்பாட்டாளரான கவுன்சிலர் போல் சத்தியநேசன் உரையாற்றுகையில் தமிழ் மக்கள் பிரித்தானியாவுக்கு கணிசமான அளவில் வர ஆரம்பித்து 25 ஆண்டுகள் ஆகின்றது என்றும் நியூஹாம் தமிழ் மக்களுக்கு இருப்பிடம் வழங்கவில்லை அவர்களுக்கு உன்னதமான வீடாகி உள்ளது என்று தெரிவித்தார். தமிழ் மக்கள் இதுவரை அனுபவித்த துயரங்கள் நீங்கி எதிர்காலத்தில் அவர்கள் சமாதானத்துடன் வாழ்வதற்கு வழியேற்படும் என அவர் தெரிவித்தார்.

Mayor_Pongal_14Jan1075 பேர்வரை கலந்துகொண்ட இந்நிகழ்வின் இறுதியில் பொங்கல் சிற்றுண்டிகள் பரிமாறப்பட்டது. ஐரோப்பாவிலேயே பல்லினங்கள் நெருக்கமாகவும் பெரும்பான்மையாகவும் வாழும் நகரமாக நியூஹாம் அமைந்துள்ளது. வீதியால் பயணித்தவர்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டு பொங்கல் சிற்றுண்டிகளைச் சுவைத்து மகிழ்ந்தனர்.

கடந்த 10 ஆண்டுகளாக இந்நிகழ்வு தொடர்ச்சியாக இடம்பெற்ற போதும் தனிப்பட்ட கோபதாபங்களுடன் சில விசமத்தனமான பிரச்சாரங்களும் இடம்பெற்றுவருவது குறிப்பிடத்தக்கது. இவற்றையெல்லாம் மீறியும் இந்நிகழ்வு இடம்பெற்று வருவது இதன் சிறப்பம்சம். இந்நிகழ்வில் கலந்துகொள்ள வேண்டாம் என்று கேட்டு தனக்கு 5 தொலைபேசி அழைப்புகளிற்கு மேல்வந்ததாக கலந்துகொண்ட ஒரு வர்த்தகர் தேசம்நெற் க்குத் தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில்  ”நாங்கள் எல்லாவற்றிற்கும் எதிராகவே செயற்பட்டு பழகிவிட்டோம். இப்போது பொங்கலுக்கும் எதிராக நோட்டிஸ் விடுகிற அளவுக்கு வந்துவிட்டோம்” எனச் சலிப்புடன் தெரிவித்தார்.

இந்நிகழ்வுக்கு எதிராக விடப்பட்ட துண்டுப் பிரசுரம்:

நியூஹாம் வாழ் தமிழ் உறவுகளே!
உங்களுக்குத் தெரிந்தவை தான்
முள்ளிவாய்க்காலில் நடந்தேறிய
மரண ஓலங்கள்
உயிர்ப்பலிகள்
கற்பழிப்புகள்
பொருளாதாரத் தகர்ப்புகள்
இன்றும் முட்கம்பித் தடுப்பு முகாமில்
ஏதும் இன்றி நிற்கதியாகத்
தவிக்கும் தமிழ் உறவுகள்…..

தொப்புள் கொடி உறவுகளே!
இவைகளை நாம் எளிதில் மறந்துவிட முடியுமா?
இன்றைய காலகட்டத்தில் இனம்சார்ந்த குதூகல வைபவங்கள் எங்களுக்கு வெறுப்பெற்றவில்லையா?

இந்த நிலையில் தமிழ் தேசியத்திற்கு தொடர்ச்சியாகத் துரோகம் இழைப்பவர்களால் 14.01.2010 இல் பொங்கல் விழா என்ற பெயரால்  நடைபெறவுள்ள கொண்டாட்டம்  எங்களுக்கு அவசியம் தானா?

இனமான உணர்வுடன்  நிதானமாகச் சிந்திக்கும் ஒவ்வொரு தமிழரும் இந்தக் கொண்டாட்டத்தை பகிஸ்கரிப்பார்கள் என்பது நிச்சயம்.

சிந்தியுங்கள் அன்பான
நியூஹாம் தமிழ் உறவுகளே!

இதற்குப் பின்னாலுள்ள நபர்கள் தங்கள் சுய விளம்பரத்திற்காக தமிழ் மக்களின் அவலங்களைப் பயன்படுத்திக் கொள்வதாகக் குற்றம்சாட்டிய கவுன்சிலர் போல் சத்தியநேசன் இவ்வாறான சமூகப் பீடைகள் தவிர்க்க முடியாமல் ஒவ்வொரு சமூகத்திலும் காணப்படுவதாகவும் இவர்களை உதறிக்கொண்டு சமூகம் தன் பயணத்தைத் தொடரும் என்றும் தேசம்நெற்க்குத் தெரிவித்தார்.

இன்றைய பொங்கல் நிகழ்வில் நியூஹாம் வர்த்தகர்கள் பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் சமய ஸ்தாபனங்கின் பிரதிநிதிகள் எனப் பல்வேறு தரப்பினரும் கலந்துகொண்டனர்.

._._._._._.

ஈஸ்ற்ஹாமில் 10வது ஆண்டாக பொங்கல் விளக்குகள் ஏற்றப்பட உள்ளன

Paul_Sathyanesan_Cllrதமிழ் மக்கள் செறிந்து வாழுகின்ற நகரமான ஈஸ்ற்ஹாமில் 10வது ஆண்டாக பொங்கல் விளக்குகள், வியாழக்கிழமை 14ம் திகதி மாலை 4 மணிக்கு ஏற்றப்பட உள்ளன. மத வேறுபாடுகளுக்கு அப்பால் உலகத் தமிழ் மக்கள் ஒன்றாகக் கொண்டாடும் விழாவாக தமிழர் விழாவாக தைப்பொங்கல் அமைந்துள்ளது. ஈஸ்றஹாம் பொங்கல் விழாவின் போது ஈஸ்ற்ஹாம் நகரபிதா தெருவிளக்குகளை ஏற்றி வைப்பார்.

கடந்த 10 ஆண்டுகளாக ஈஸ்ற்ஹாம் நகரசபையின் அணுசரனையுடன் கவுன்சிலர் போல் சத்தியநேசன் இந்நிகழ்வை ஏற்பாடு செய்து நடாத்தி வருகின்றார். வழமை போல் இம்முறையும் இந்து கிறிஸ்தவ இஸ்லாம் மதப் பிரதிநிதிகளும் இந்நிகழ்வில கலந்து சிறப்பிப்பார்கள் என கவுன்சிலர் சத்தியநேசன் தெரிவித்தார்.

ஈஸ்ற்ஹாம் மகாலட்சுமி ஆலயம் முன்பாக உள்ள தெரு வெளியில் மக்கள் ஒன்றாகக் கூடி மேளவாத்தியத்துடன் நகரபிதாவால் தெருவிளக்குகள் ஏற்றி வைக்கப்படும். அனைத் தொடர்ந்து நகரபிதாவினதும் மற்றும் சிலரினதும் சிற்றுரைகளும் இடம்பெற்று பொங்கல் சிற்றுண்டிகள் பரிமாறப்படும்.

இவ்வாண்டும் வழமைபோன்று இலங்கையிலும் உலகிலும் சமாதானத்தை வேண்டி இப்பொங்கல் விளக்குகளை ஏற்றி வைப்போம் என ஏற்பாட்டாளர் கவுன்சிலர் போல் சத்தியநேசன் தெரிவித்தார்.

சென்ற ஆண்டில் நாட்டில் நிலவிய யுத்தநிலையைக் காரணம் காட்டிச் சிலர் இந்நிகழ்வை இடைநிறுத்த முற்பட்ட போதும் சமாதானத்துக்காக நடாத்தப்படும் இந்நிகழ்வை கவுன்சிலர் சத்தியநேசன் தொடர்ந்தும் நடாத்தி வருகின்றார்.

இந்நிகழ்வு சிறிய அளவில் இடம்பெற்றாலும் உலகத் தமிழர்களின் உழைக்கு மக்களின் இந்நிகழ்வை ஐரோப்பிய நாடோன்றில் தொடர்ச்சியாக நடாத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

பொங்கல் தொடர்பாக கவுன்சிலர் சத்தியநேசன் வெளியிட்ட பொங்கல் செய்தியில் ”உலகத் தமிழர்களின் தினமான பொங்கல் நாளில் சமாதானமும் அமைதியும் மலர்ந்து அனைவரும் இன்புற்றிருக்க அனைவருக்கும் எனது தைப்பொங்கல் வாழ்த்துக்கள்!!!”  எனத் தெரிவித்துள்ளார்.