நூலகம்

நூலகம்

நூல்கள் அறிமுகம், விமர்சனம் மற்றும் நூல் வெளியீட்டு விழாக்கள் பற்றிய பதிவுகளும் செய்திகளும்.

“தமிழ் மக்களுக்கு நியாயமாகவும் நேர்மையாகவும் நடந்துகொள்ளாத தமிழ் தலைமைகள் எவ்வாறு அத்தமிழ் மக்களுக்கு அரசிடமிருந்து நியாயத்தைக் கோர முடியும்?” முன்ஜன்கிளப்பாக்கில் “வட்டுக்கோட்டையில் இருந்து முள்ளிவாய்க்கால் வரை” நூல் அறிமுகம்

“தமிழ் மக்களுக்கு நியாயமாகவும் நேர்மையாகவும் நடந்துகொள்ளாத தமிழ் தலைமைகள் எவ்வாறு அத்தமிழ் மக்களுக்கு அரசிடமிருந்து நியாயத்தைக் கோர முடியும்?” என்று வட்டுக்கோட்டையிலிருந்து முள்ளிவாய்க்கால் வரை நூலில் த ஜெயபாலன் முன்வைத்த விமர்சனம் இன்னமும் நிதர்சனமாகவே உள்ளது. லண்டன், கிளிநொச்சி, பாரிஸில் நடந்த நூல் அறிமுக விழாக்களின் தொடர்ச்சியாக ஜேர்மனியின் முன்ஜன்கிளப்பாக் நகரில் இந்நூல் வெளியீடு ஒக்ரோபர் 29 ஞாயிற்றுக் கிழமை நடைபெற இருக்கின்றது. மலை 4 மணிக்கு ஆரம்பமாகும் இந்நிகழ்வில் புலத் தமிழர்கள் தாயகத்தில் ஏற்படுத்தும் தாக்கம் மற்றும் உலகக் கலாச்சாரப் போக்கும் மீள் சிந்தனையும் என்ற தலைப்பிலான கலந்துரையாடலும் இடம்பெறவுள்ளது.

நூல் அறிமுகம், கலந்துரையாடல், விருந்துபசாரம் என்று இந்நிகழ்வு சிந்திக்கவும் சுவைக்கவும் ஏற்றாற் போல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தமிழ் சமூகக் கலாச்சார கல்வி அமைப்பின் தலைவி திருமிகு ஜெ கங்கா தெரிவிக்கின்றார். இந்நிகழ்வில் அரசியல் சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் கலந்துகொள்வார்கள் எனக் குறிப்பிட்ட ஜெ கங்கா முன்ஜன்கிளப்பாக்கில் அண்மைக்காலத்தில் நிகழ்கின்ற முதல் நூல் அறிமுக நிகழ்வு இதுவெனத் தெரிவித்தார்.

யுத்தம் நடைபெற்றுக்கொண்டிருந்த காலத்தில் யுத்தம் ஏற்படுத்திய உணர்வலையின் தாக்கத்தில் பதிவு செய்யப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பான இந்நூல் போன்றதொரு நூல் இனிமேல் வெளிவருவதற்கு வாய்ப்பிலை என ஹொலன்டில் வாழும் அரசியல் ஆர்வலரான ஆர் சிறிகாந்தராஜா தெரிவிக்கின்றார். நாளைய நிகழ்வில் கலந்துகொள்ள உள்ள இவர் இவ்வாறான பக்கசார்பற்ற வரலாற்றுப்பதிவுகள் எமக்கு மிக அவசியம் என அவர் சுட்டிக்காட்டினார்.

“நாங்கள் கடந்து வந்த காலகட்டம் தொடர்பாக காத்திரமான சில பதிவுகள் மட்டுமே வெளிவந்துள்ளன. வெளிக்கொணரக் கூடிய விடயங்கள் ஏராளமானவை. யுத்தம் முடிந்து ஆண்டுகள் பலவாகியும் இந்த யுத்தத்தின் அடிப்படைத் தகவல்களே சேகரிக்கப்படாத நிலையே காணப்படுகின்றது” என்று த ஜெயபாலன் தனது நூலில் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதுவரை “எத்தனை பேர் கொல்லப்பட்டனர்? எத்தனை பேர் ஊனமுற்றனர்? எத்தனை பேர் காணாமல் போயுள்ளனர்? எவ்வளவு சொத்துக்கள் இழக்கப்பட்டது? எவ்வளவு பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்? போன்ற பல கேள்விகளுக்கு இன்னமும் சரியான பதில் இல்லை” என்று தனது நூலில் சுட்டிக்காட்டியுள்ள நூலாசிரியர் தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் தலைமைகள் தங்கள் மக்களுக்கு நியாயமாகவும் அரசியல் நேர்மையுடனும் நடந்துகொள்ள வேண்டும் என்றும் கேட்டிருந்தார்.

“இலங்கையின் இனவாத அரசு மட்டுமல்ல தமிழ் மக்களுக்கு தலைமை வழங்குவதாக மக்களை ஏமாற்றும் தரப்பும் விமர்சனத்திற்குரியதே. தமிழ் மக்களுக்கு நியாயமாகவும் நேர்மையாகவும் நடந்துகொள்ளாத தமிழ் தலைமைகள் எவ்வாறு அத்தமிழ் மக்களுக்கு அரசிடமிருந்து நியாயத்தைக் கோர முடியும்?” என்ற கேள்வியையும் நூலாசிரியர் முன்வைத்துள்ளார்.

விமர்சனபூர்வமான இந்நூல் கடந்தகாலம் பற்றிய மதிப்பீட்டை மேற்கொண்டிருப்பதாக பல விமர்சகர்கள் கருத்து வெளியிட்டிருந்தனர். இந்நூல் வெளியீடு பற்றிய விபரங்கள் கீழே:

கட்டிய கணவன் கைவிட்டாலும் கற்ற கல்வி கைவிடாது: ஹர்த்தாயினி ராஜேஸ்கண்ணா; உறுதிகொண்ட நெஞ்சினாள் நூல் வெளியீடு

ஹம்சகௌரி சிவஜோதியின் ‘உறுதிகொண்ட நெஞ்சினாள்’ என்ற பத்து பெண் ஆளுமைகள் பற்றிய நூல் வெளியீடு மிகச்சிறப்பாக கிளிநொச்சி லிற்றில் எய்ட் அரங்கில் நடைபெற்றது. இந்நூல் வெளியீடு முற்றிலும் இளம் தலைமுறைப் பெண்களினாலேயே நடாத்தப்பட்டது. யாழ் பல்கலைக்கழகத்தின் மாணவர்களின் ‘மனிதம்’ குழவைச் சேர்ந்த இளம் பெண்கள் (படம்) இந்நிகழ்வை திறப்பட நடத்தினர்.

புத்தக வெளியீட்டுக்கு தலைமையேற்ற செல்வி வர்ஷனா வரதராசா இந்நூல் தன்னுள் ஏற்படுத்திய மாற்றத்தையும் இந்தப் பெண் ஆளுமைகள் பற்றிய அனுபவம் தன்னுள் ஏற்படுத்திய தாக்கத்தையும் சுட்டிக்காட்டினார்.

இப்பெண் ஆளுமைகள் பல்துறைசார்ந்த பன்முக ஆளுமைகள். பெண்ணியம் (செல்வி திருச்சந்திரன்), கல்வி (ஜெயா மாணிக்க வாசகன், சசிகலா குகமூர்த்தி, வலன்ரீனா இளங்கோவன்) இலக்கியம் (தாமரைச்செல்வி), பொறியியல்துறை (பிரேமளா சிவசேகரம்), கலைத்துறை (பார்வதி சிவபாதம், வலன்ரீனா இளங்கோவன்), அரசியல், கலை, இலக்கியம் (கலாலக்ஷ்மி தேவராஜா), விளையாட்டுத் துறை (அகிலத்திருநாயகி சிறிசெயானந்தபவன்) இவர்களோடு பொது வாழ்வில் அரசியலில் ஈடுபட்டு இனவெறியர்களை நேருக்கு நேர் எதிர்கொண்டு போராடியவர் நாகம்மா செல்லமுத்து. இவர்கள் யாரும் சமூகத்தில் இருந்து அந்நியப்பட்டு வாழவில்லை. தங்களையும் சமூகத்தில் ஒருவராகப் பிணைத்துக்கொண்டு தங்களது நாளாந்த வாழ்வியலோடு சமூகத்திற்கான சேவையை வழங்கி வந்தனர் அல்லது வழங்கி வருகின்றனர்.

கிரேக்க தத்துவஞானிகள் பிளேட்டோ, சோக்கிரட்டீஸ் ஆகியோர் தங்கள் கருத்துக்களை உரைநடையூடாகவே எடுத்துச் சென்றது போல் இந்நூலாசிரியர் ஹம்சகௌரியும் தன்னுடைய கருத்துக்களை உரைநடையூடாகவே எங்களைப் போன்ற இளம் சந்ததியினருக்கு கொண்டு சென்றுள்ளார் என நூலின் வெளியீட்டுரையை வழங்கிய செல்வி விராஜினி காயத்திரி இராஜேந்திரன் தெரிவித்தார்.

இந்நூல் ஒருவரில் அல்ல எம்போன்ற பலரில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது எனத் தெரிவித்த காயத்திரியின் கருத்துக்கள் ஏனைய ஆய்வாளர்களின் உரைகளிலும் எதிரொலித்தது. இந்நூலின் முதற் பிரதி, இந்நூலில் குறிப்பிடப்பட்ட ஆளுமைகளில் ஒருவரான அமரத்துவமடைந்த கலாலக்ஷ்மி தேவராஜா அவர்களுடைய மகள் அபிலாஷா தேவராஜாவுக்கு வழங்கப்பட்டது.

கட்டிய கணவன் கைவிட்டாலும் கற்ற கல்வி கைவிடாது: ஹர்த்தாயினி ராஜேஸ்கண்ணா

‘உறுதிகொண்ட நெஞ்சினாள் பிரதிபலிக்கும் பெண்ணியம்’ என்ற தலைப்பில் செல்வி ஹர்த்தாயினி இராஜேஸ்கண்ணா தனது நூலாய்வை மேற்கொண்டார். ‘பெண்ணியம் சார்ந்து பேசுவதை பெண்ணியம் பற்றிப் பேசுவதை விரோதமாகப் பார்க்கின்ற போக்கு இன்னமும் காணப்படுகின்றது. பெண்ணியம் பற்றிய விழிப்புணர்வு சில பெண்களுக்கே போதாமையாகவுள்ளது. போதைவஸ்துவுக்கும் மதுவுக்கும் அடிமைப்பட்டுள்ள இன்றைய நிலையிலும் அதனைச் செய்வதை பெண்ணியம் என்று வியாக்கியானப்படுத்துபவர்களும் எம்மத்தியில் உள்ளனர்’ என உணர்ச்சி பூர்வமாக உரையாற்றிய ஹர்த்தாயினி ‘சமத்துவமின்மையின் மூலங்கள் கண்டறியப்பட்டு அவை களையப்பட வேண்டும்’ என ஆணித்தரமாகத் தெரிவித்தார்.

‘இந்த ஆடை அணிந்தால் தான் நீ என் காதலியாகலாம், மனைவியாகலாம் என்ற வரைக்கும் அன்பின் பேரில் கட்டளையிடும் ஆண்கள் இன்னும் இருக்கின்றார்கள். அதற்குக் காரணம் நாங்கள் பெண்கள் தான். நாங்கள் ஏன் அதற்குப் பணிய வேண்டும்?’ என்று கேள்வி எழுப்பிய ஹர்த்தாயினி ‘பெண்களுக்கு விழிப்புணர்வு அவசியம் வேண்டும்’ என்பதை வலியுறுத்தினார். ‘இந்த நூலில் உள்ள பெண்கள், ஒரு தலைமுறைக்கு முன்னதாக பெண்கள் வெளியே செல்லவே தடைகள் இருந்த காலத்தில் சாதித்திருக்கின்றார்கள் என்றால் ஏன் எங்களால் முடியாது?’ என அவர் சபையில் இருந்த இளம் தலைமுறையினரை நோக்கி கேள்வி எழுப்பினார்.

தனதுரையில் ‘சாதாரணமான எங்கள் தாய்மாரை சகோதரிகளை பிள்ளைகளை ஏன் எங்களால் மாற்ற முடியாது?’ என்ற கேட்ட ஹர்த்தாயினி சமூகம் பாதிக்கப்பட்ட நலிந்த பெண்களுக்கே பாதிப்புகளைக் கொடுக்கின்றது. கணவரை இழந்து அல்லது கைவிடப்பட்ட பெண்கள் வாழும் அயல்வீடுகளைக் கேட்டால், இந்த சமூகம் இவர்களை எப்படிப்பார்க்கின்றது என்பதை தெரிந்துகொள்ளலாம். அப்படியிருந்தும் அப்பெண்கள் சவாலாக வாழ்கின்றனர். கட்டிய கணவன் கைவிட்டாலும் கற்ற கல்வி கைவிடாது’ என ஆக்கிரோசமாக பெண்கள் தங்கள் சுயத்தில் நிற்பதற்கு கல்வியை வலியுறுத்தினார்.

அவர் தனது உரையின் இறுதியில் இதில் உள்ள பத்தது பெண் ஆளுமைகள் மட்டுமல்ல நூலாசிரியர் ஹம்சகௌரியோடு 11 பெண் ஆளுமைகளும் திருமணத்துக்கும் பின்னும் தங்கள் அடையாளத்தை இழந்துவிடவில்லை. அவர்கள் உண்மையிலேயே முன்னுதாரணமானவர்கள். பெண்களுக்கு திருமணம் ஒரு தடையல்ல. எனது அடையாளத்தை தக்க வைக்க எனது பெண்ணியத்தை முன்னெடுக்க எனக்கு திருமணம் ஒரு தடையாக அனுமதிக்க மாட்டேன்’ எனத் தெரிவித்து தன்னுடைய விறுவிறுப்பான உரையை நிறைவு செய்தார்.

சாதியம் உணர்வு நிலையில் மாற்றம் நிகழவில்லை செல்வி மயூரகா ஸ்ரீஸ்கந்தராசா:

உறுதிகொண்ட நெஞ்சினாள் பேசும் பெண் கல்வியும் அதன் இன்றைய நிலையும் என்ற தலைப்பில் செல்வி மயூரகா ஸ்ரீகந்தராசா உரையாற்றினார். பெண்களது நிலையென்பது கயிற்றில் கட்டப்பட்ட பட்டத்திற்கு ஒப்பானதாக இன்னும் சுதந்திரம் என்பது மட்டுப்படுத்தப்பட்டதாகவே இருப்பதைச் சுட்டிக்காட்டடினார். ‘பிரேமளா சிவசேகம் அவர்கள் அன்றைய சுழலில் இலங்கையின் முதலாவது பெண் பொறியியலாளராக ஆனாது ஆச்சரியமானதாகவும் அதே சமயம் நாங்கள் என்ன செய்துகொண்டிருக்கின்றோம் என்பதை எங்களையே நாங்கள் கேட்க வைப்பதாகவும் இருக்கின்றது என மயூரகா தெரிவித்தார்.

இந்நூலில் ஆவணப்படுத்தப்பட்ட ஒவ்வொரு ஆளுமையுமே ஒவ்வொரு நூல்கள். அவர்களுடைய அனுபவங்களை நூலாசிரியர் பகிர்ந்துகொள்ள எடுத்த முயற்சி அளப்பெரியது என விதந்துரைத்தார் மயூரகா. ‘புத்தக மூலமான இந்தப் பயணம் எங்களைப் போன்ற பெண்களை எங்கள் comfort zone கொம்போர்ட் சூனில் இருந்து வெளியே வர வைக்கின்றது. செல்வி திருச்சந்திரன் குறிப்பிட்ட சாதியம் பற்றிய குறிப்புகள் மிக அருமையான பதிவு. சாதியம் எவ்வாறு சமநிலையைக் குழப்புகின்றது என்பதை அது துல்லியமாகக் காட்டுகின்றது. நாங்கள் இதனையெல்லாம் கடந்துவந்துவிட்டோமா?’ என்று கேள்வி எழுப்பிய மயூரகா ‘உணர்வுநிலையில் மாற்றம் நிகழவில்லை’ என்ற உண்மையை ஆணித்தரமாகத் தெரிவித்தார்.

‘தங்கைகளா எங்களாலும் முடியும். எழுந்து வாருங்கள்’ செல்வி நிவேதா சிவராஜா:

‘உறுதிகொண்ட நெஞ்சினரின் சமூகப் பார்வை’ என்ற தலைப்பில் செல்வி நிவேதா சிவராஜா நூல்பற்றிய தன்னுடைய ஆய்வை மேற்கொண்டார். தன்னை சமூகத்தின் மீது காதல் கொண்டவளாக ஒரு சமூகக் காதலியாக அறிமுகப்படுத்திய அவர் இந்த பத்து ஆளுமைகளும் அந்த அளுமைகளை ஆவணப்படுத்திய ஆளுமையும் தன் சிந்தனையில் பெரும் புரட்சியை ஏற்படுத்திவிட்டதாக நிவேதா தெரிவித்தார். ‘இவர்கள் எல்லோரும் எங்களைவிட ஒரு தலைமுறை கடந்தவர்கள். அவர்களுடைய சமூகம் பற்றிய பார்வை எங்களுக்கு ஒரு வழிகாட்டல். முன்ணுதாரணம். அதனையே இந்நூலைப் பதிப்பித்த தேசம் ஆசிரியர் த ஜெயபாலன் தன்னுடைய பதிப்புரையில் குறிப்பிட்டுள்ளார் என்பதைச் சுட்டிக்காட்டினார் நிவேதிதா.

‘தேசம் த ஜெயபாலன் குறிப்பிட்டது போல பெண்கள் இன்னமும் இரண்டாம் நிலையில் நோக்கப்படும் போக்கு காணப்படுகின்றது. அதனை மாற்றியமைக்க வேண்டும் என்ற கனவோடு தான் தேசம் ஜெயபாலன் இந்நூலை வெளியிட்டுள்ளார். அவருடைய அந்தக் கனவை நாங்களும் இன்று சுமக்கின்றோம்’ என்று உணர்ச்சிபூர்வமாகத் தெரிவித்த நிவேதிதா ‘தம்பிகாளா! தங்கைகளா!’ உங்களுடைய பொறுப்புக்களை நீங்கள் சுமக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

‘இந்நூலை வாசித்த பின்னரே கிளிநொச்சியில் இப்படியொரு பாடசாலை – விவேகானந்தா வித்தியாலயம் இருப்பதைத் தெரிந்துகொண்டேன். ஆரம்பத்தில் வாசிக்கும் போது ஜெயா மிஸ் என்று தோண்றியது. வாசித்து முடிக்கையில் ஜெயா அம்மா என்று அழைக்கத் தோண்றியது. அவருடைய சமூகப் பங்களிப்பு என்னை சிலிர்க்க வைத்துவிட்டது. நாங்கள் மனிதம் அமைப்பினூடாக கல்விச் செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றோம். எங்களுக்கு விவாகானத்தா வித்தியாலயத்தை பாரக்க வேண்டும் அதிலிருந்து நாங்கள் கற்க வேண்டும் என்ற ஆர்வம் பொங்கியுள்ளது’ என நிவேதிதா உணர்வுபூர்வமாக தன்னுடைய ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.

‘எங்களை நாங்களே 90’ஸ் கிட்ஸ் 2கே கிட்ஸ் (ருகெ கிட்ஸ்) என்று சொல்கின்றோம் ஆனால் நடக்கவே சலித்துக் கொள்கிறோம். ஆனால் எழுபதுக்களையும் கடந்து ஒடிவிட்டு வந்திருக்கிறார் அகிலத்திருநாயகி அமையார். இந்த ஆளுமைகள் எல்லாமே இன்னும் இம்மண்ணில் சாதனையாளர்களாக வாழ்ந்து கொண்டுள்ளனர். ஆனால் நாங்கள் இன்னும் வெளிநாட்டு மோகத்தோடு தான் இருக்கின்றோம். இங்கு எங்கள் முன்னுள்ள வாய்ப்புகளைப் பார்க்காமல் தடைகளை மட்டுமே பார்க்கின்றோம்’ என்று குறிப்பிட்ட நிவேதா மீண்டும் ‘தம்பிகளா! தங்கைகளா!’ என்று விழித்தார்.

‘இவர்கள் எங்களுக்கு முன்னுதாரணமாக இருந்து விட்டார்கள். அவர்களுடைய பொறுப்பை சரிவரச் செய்துவிட்டார்கள். நாங்கள் எங்கள் அடுத்த தலைமுறைக்கு முன்ணுதாரணமாக வேண்டாமா?’ என்று கேள்வி எழுப்பியதுடன் ‘தங்கைகளா எங்களாலும் முடியும் என்பதைக் காட்டத் தயாராகுங்கள்’ என்று அழைப்பு அறைகூவல் விடுத்தார். ‘நாங்கள் இந்த பூமியில் இருந்துவிட்டு வாடகை செலுத்தாமல் சென்றுவிடக்கூடாது. எங்கள் வாடகையை நாங்கள் செலுத்த வேண்டும்’ என்ற பொறுப்பை அழுத்தம் திருத்தமாகக் குறிப்பிட்டு நிவேதா தன்னுரையை நிறைவு செய்தார்.

நிகழ்வின் இறுதியில் ஹம்சகௌரி சிவஜோதி நூலில் உள்ள ஆளுமைகளோடு தனக்கும் தன்னுடைய கணவருக்கும் இருந்த உறவுபற்றி கனத்த இதயத்தோடு சில அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார். இறுதியாக சிவஜோதியின் தந்தையார் நன்றி தெரிவித்து நிகழ்வை முடிவுக்கு கொண்டு வந்தார்.

நவம்பர் 20இல் நடைபெற்ற இந்நிகழ்வில் இருநூறு பேருக்கு மேற்பட்ட சமூக செயற்பாட்டாளர்கள், கலைஞர்கள், எழுத்தாளர்கள், மாணவர்கள் கலந்துகொண்டனர். இந்நிகழ்வில் கலந்துகொண்டவர்களும் நிகழ்வைத் திறம்பட ஏற்பாடு செய்தவர்களும் இளையவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

லட்சங்கள் சம்பளம் பெறும் பேராசிரியர்கள் ஆய்வுகளை மேற்கொள்வதில்லை – பௌசர் : கூட்டத்தின் பின்னணியில் மயூரன் அம்பலவாணர் அம்பலமாகினார்!

இலங்கையில் உள்ள பேராசிரியர்கள் லட்சக்கணக்கில் உழைக்கின்ற போதும் ஆய்வுகளை மேற்கொண்டு நூல்களை வெளிக்கொணர்வதில்லை என லண்டன் புறநகர்ப் பகுதியான நியூமோல்டனில் நடைபெற்ற ‘கிழக்கு மண்’ நூல்வெளியீட்டில் சமூக அரசியல் செயற்பாட்டாளர் பௌசர் தெரிவித்தார். வைத்திய கலாநிதி சி சிவச்சந்திரனின் ‘கிழக்கு மண்’ நூல்வெளியீட்டின் போதே அவர் இக்கருத்தை முன்வைத்திருந்தார். சி சிவச்சந்திரன் ஒரு மருத்துவ கலாநிதியாக இருந்தும் தன்னுடைய தனிப்பட்ட முயற்சியில் ஆய்வுகளையும் தேடலையும் செய்து இந்நூலைக் கொண்டுவந்திருப்பதை பாராட்டிய பௌசர், பல்கலைக்கழகங்களின் பேராசிரியர்கள் லட்சக்கணக்கில் சம்பளத்தைப் பெற்ற போதும் தங்கள் கடமைகளைச் செய்யாதிருப்பதையே பௌசர் அவ்விடத்தில் சுட்டிக்காட்டி இருந்தார்.

ஓக்ரோபர் 30 காலை 11:00 மணிக்கு ஆரம்பமான நூல் வெளியீட்டில் உலகின் பல்வேறு பாகங்களில் இருந்தும் வெளிவரும் ஆயிரக்கணக்காண நூல்கள் காட்சிப்படுத்தப்பட்டன. இந்நிகழ்வில் இந்தியாவில் இருந்து வந்திருந்த அ முத்துகிருஷ்ணனும் கலந்துகொள்டிருந்தார். அவருடைய மதுரை மண்ணின் வரலாற்றை ஆவணப்படுத்திய, “தூங்காநகர் நினைழவுகள் – மதுரையின் ழுழமையான வரலாறு” என்ற நூலும் இன்றையதினம் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்நூல் தொடர்பான கனதியானதொரு அறிமுகத்தை ஆய்வாளர் மு நித்தியானந்தன் பதிவு செய்திருந்தார்.

‘கிழக்கு மண்’ நூல் வெளியீட்டு மறுநிர்மாணம் குழுவினரால் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இந்நிகழ்வுக்கு மாதவி சிவலீலன் தலைமை தாங்கினார். ஆனால் இந்நூல் ஆய்வை மேற்கொள்ளச் சம்மதித்திருந்த மயூரன் அம்பலவாணர், கௌரி பரா, பால சுகுமார் ஆகிய மூவரும் நிகழ்ச்சியின் போது சமூகமளித்திருக்கவில்லை. இவர்கள் நிகழ்ச்சியைப் புறக்கணித்ததற்கு குறும் அரசியல் காரணிகள் காரணமாக இருந்ததா என்று மறுநிர்மாணம் குழுவிடம் கேட்ட போது அது தங்களுக்கு தெரியாது என அவர்கள் பதிலளித்தன். புலம்பெயர் தமிழ் அரசியல் சூழல் என்பது மிகச் சிறிய வட்டமாக இருந்தாலும் அதற்குள்ளும் பல்வேறு நுண் அரசியல் சதுரங்கங்களுக்கு குறைவிருப்பதில்லை.

வழமையாக தமிழ் புத்தக வெளியீடுகள் நிகழ்வுகள் மிகத் தாமதமாகவே நடைபெறுவது வழமை. ஆனால் மறுநிர்மாணம் குழுவினர் குறித்த நேரத்துக்கு நிகழ்வை ஆரம்பிப்பது வழக்கம். ஆனால் ‘கிழக்கு மண்’ நூல்வெளியீட்டு நிகழ்வு வழமைக்கு மாறாக இருபது நிமிடங்கள் முன்கூட்டியே ஆரம்பமாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது. ஆய்வாளர்கள் வராத குறையை தலைமை தாங்கிய மாதவி சிவலீலன் மிகச் சிறப்புற நூலின் ஒவ்வொரு அம்சத்தையும் தொட்டுச்சென்று தலைமையுரையை ஒரு ஆய்வுரையாகவே மேற்கொண்டார். அவர் நூலை ஆழமாகவும் கவனமாகவும் வாசித்திருந்ததை அவரது தலைமையுரை ஆய்வுரை வெளிப்படுத்தியது. மட்டக்களப்பில் இருந்த கண்ணகி வழிபாடு பற்றி நூல் சொல்கின்ற விடயாத்தைக் குறிப்பிட்ட அவர் யாழ்ப்பாணத்தில் எவ்வாறு கண்ணகி வழிபாடு இல்லாமல் போனது என்பதனையும் சுட்டிக்காட்டினார். கண்ணகி வழிபாடு தமிழ் நாட்டில் இருந்து யாழ்ப்பாணம் வந்து அங்கிருந்து வன்னியூடாக மட்டக்களப்பிற்குச் சென்றதெனக் குறிப்பிட்ட அவர், ஆறுமுகநாவலர் ‘விதவைக்கு எதற்குக் கோயில்’, ‘வாணிபம் செய்தவளுக்கு என்ன கோயில்’ என்று சொல்லி கண்ணகி கோயில்களை மனோன்மனி அம்மன் என்றெல்லாம் அம்மண் கோயில்களாக்கினார் எனச் சுட்டிக்காட்னார்.

கோயில் திருவிழாவில் மேளக்கச்சேரிக்கு ஏற்பாடு செய்தவர்கள் வரவில்லை என்றால் நித்திய மேளம் அடிப்பவரை வைத்துத்தான் விழாவைச் சமாளிக்க வேண்டும், நான் தான் இன்றைக்கு நித்திய மேளம் என்று பௌசர் நகைச்சுiவாயாக நிகழ்ச்சியை ஆரம்பித்து நூல்பற்றிய விபரங்களுக்குள் சென்று வந்தார். ‘கிழக்கு மண்’ மட்டக்களப்பின் வரலாற்றைச் சுரக்கமாகச் சொல்வதோடு மட்டக்களப்பு பற்றிய அறிமுகத்தை வாசகர்களுக்கு ஏற்படுத்தும் என நூலாசிரியர் சி சிவச்சந்திரன் தெரிவித்தார். மட்டக்களப்பின் ஊர்ப்பெயர்களும் அதற்கான காரணங்களும், அங்குள்ள பேச்சுத் தமிழ், சமூக சாதிய அமைப்புகள், சடங்குகள், கலைவடிவங்கள், விளையாட்டுக்கள், சமய வழிபாட்டு முறைகள் எனப் பல்வேறு அம்சங்களையும் இந்நூல் தொட்டுச் சென்றுள்ளது.

மயூரன் அம்பலவாணர் அம்பலமாகினார்!

என்னதான் கூட்டம் நடைபெற்றாலும் கூட்டத்திற்கு பின்னால் உள்ள அரசியல் தான் மிகுந்த சுவாரசியமானதக இருக்கும். அந்த வகையில் இந்தக் கூட்டத்தில் மயூரன் அம்பலவாணர் கூட்டத்தின் முன்னும் பின்னுமான பேசுபொருளாகி இருந்தார். மயூரன் அம்பலவாணர் தலைமைச் செயலகத்தின் செயற்பாட்டாளராக முன்னர் அறியப்பட்டவர். தற்போது இந்தியாவுடன் பிஜேபியுடன் அவர்களின் தீவிர வலதுசாரிப் பிரிவான சிவசேனாவுடன் இவர்சார்ந்த குழுவினர் நெருக்கமாகிவிட்டனர். இதனால் இவரைச் சர்ச்சைக்குள்ளாக்க நாடுகடந்த அரசினரும் ரிசிசி என்கின்ற தமிழ் சமூக மையமும் திட்டமிட்டு இருந்தது. இருப்பினும் புத்தக வெளியீட்டுச் சூழல் அவர்களுக்கு சாதகமில்லாததால் அவர்கள் கலந்துகொள்ளவில்லை. அதே சமயம் மயூரன் அம்பலவாணரும் நிகழ்ச்சிகள் முடிந்த பின்னரேயே அங்கு வந்திருந்தார்.

மயூரன் அம்பலவாணர் வந்ததும் அவரும் அவருடைய நண்பரும் அனாமதேயமாக ஜேவிபி நியூசில் பதிவேற்றிய செய்திகள் தொடர்பாக மாதவி சிவலீலன் தம்பதிகள் கேள்வி எழுப்பினர். மயூரன் அம்பலவாணரிடம் அவர்களுடைய கேள்விகளுக்குப் பதில் இல்லை. பதினைந்து நிமிடங்களுக்கு மேலாக மாதவி சிவலீலன் தம்பதிகள் சரமாரியாக ஒவ்வொரு விடயத்தையும் மிகுந்த ஆக்கிரோசத்துடன் கேட்டனர். மயூரன் அம்பலவாணர் மௌனமாகவே நின்றிருந்தார். நான்கு அல்லது ஐந்து ஆண்டுகளுக்கு முன் ‘பிரபா’ என்ற நபருக்கு எதிராக முகவலைத் தளத்தில் நிறைய குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டு இருந்தது. முன்னாள் விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்த அந்நபர் விடுதலைப் புலிகளைக் காட்டிக்கொடுத்தே அவர் வெளியே வந்ததாகவும், வெளியே வந்தும் பெண் போராளிகளைக் காட்டிக்கொடுப்பேன் என மிரட்டி அவர்களை பாலியல் ரீதியில் சுரண்ட முற்பட்டதாகவும் குற்றச்சாட்டுகள் அனாமதேயமாக ஜேவிபி நியூசில் பதிவு செய்யப்பட்டிருந்தது.

அப்பதிவுகளில் ஒன்றில் மாதவி சிவலீலனுடன் அவர் வீட்டில் வைத்து மயூரனுடனும் அவருடைய நண்பர் ஒருவருடனும் உரையாடிய விடயமும் அச்சொட்டாக எழுதப்பட்டிருந்தது. அதை வைத்தே அப்பதிவை மயூரன் அம்பலவாணரே மேற்கொண்டார் என்று தற்போது உறுதிப்படுத்தப்பட்டது. மாதவி சிவலீலன் தம்பதியருக்கு பிரபா என்ற தூரத்து உறவுள்ள ஒருவர் இருந்தார். ஆனால் மயூரன் அம்பலவாணர் குறிப்பிட்ட பிரபாவும் மாதவி சிவலீலன் தம்பதியினரின் உறவுக்காரப் பிரபாவும் ஒருவர் அல்ல. அது முற்றிலும் இரு வேறு நபர்கள். ஆனால் மயூரனும் அவருடைய நண்பரும் மாதவி சிவலீலன் தம்பதியினரின் உறவுக்கார பிரபாவே தாங்கள் குற்றம்சாட்டும் நபர் என்று சொல்லி மாதவி சிவலீலனின் குடும்பத்தாரையும் அவர்களின் உறவான பிரபாவையும் அவருடைய தாயாரையும் பற்றி கீழ்த்தரமான பதிவுகளை ஜேவிபி நியூசில் வெளியிட்டனர். தன்னுடைய வீட்டில் வைத்து தான் நம்பிக்கையோடு தேநீர் உணவு பரிமாறிய பின் தங்களுக்கு தெரியாமலே தங்கள் உரையாடலை ஒலிப்பதிவு செய்தது நம்பிக்கைத் துரோகம் என மாதவி சிவலீலன் தம்பதியினர் மயூரன் அம்பலவாணரைச் சாடடினர்.

ஜேவிபி நியூஸ் இணையத்தளம் அன்றைய காலகட்டத்தில் இலங்கைப் பாராளுமன்ற உறுப்பினர் எஸ் சிறீதரனுக்கு ஆதரவாகச் செயற்பட்டதுடன் பா உ சிறிதரனுக்கு எதிரானவர்கள் அவ்விணையத்தளத்தில் பழிவாங்கப்பட்டனர். அன்றைய காலகட்டத்தில் மயூரன் அம்பலவாணர் மற்றும் அவர் சார்ந்தவர்கள் பா உ சிறிதரனுடன் தேன்நிலவு கொண்டாடிய காலம். இலங்கை அரசியல் யாப்பு தொடர்பான தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் ஆலோசகர் மு திருநாவுக்கரசுவினால் எழுதப்பட்ட நூலை வெளியிட்ட நிகழ்வுகளும் அக்காலகட்டத்தில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது. அந்நூலுக்கான அனுசரணையை மயூரன் அம்பலவாணரும் அவருடைய நண்பர்களும் வழங்கி இருந்தனர். நூல் வெளியீட்டு நிகழ்வை இவர்களுக்காக பா உ எஸ் சிறிதரன் மற்றும் முன்னாள் பா உ, மா உ பிரேமச்சந்திரனும் மேற்கொண்டிருந்தனர். இவ்வாறான பெரிய அரசியலும் சில்லறைத் தனங்களும் தமிழ் அரசியலுக்குள் கொட்டிக்கிடக்கின்றது.

 

அமரதாஸின் ஒளி ஓவிய நூல்: சொன்ன சேதியும், சொல்லாத சேதியும் விசிலடிச்சான் குஞ்சுகளின் எதிர்ப்பும்


நூல் வெளியீடு – சொன்ன சேதி:
கோவிட் பெரும் தொற்று பற்றிய பயம் விட்டுப்போக லண்டன் தமிழ் அரசியல் அரங்கும் விறுவிறுப்படைய ஆரம்பித்து இருக்கின்றது. பிரித்தானிய அரசியல் அளவுக்கு தமிழ் அரசியல் சூடாகாவிட்டாலும் அது தன்னுடைய அளவில் சலசலப்பை ஏற்படுத்தத் தவறவில்லை. நீண்டதொரு இடைவெளிக்குப் பின் திரள் கலை, இலக்கிய குழுமம் நடத்திய “Through the Fire Zones: Photographs of Amarathas in Sri Lanka’s War Zones” என்ற அமரதாஸின் இலங்கை யுத்தம் தொடர்பான புகைப்பட நூலின் வெளியீட்டு விழா நடைபெற்றது. ஒக்ரோபர் 22இல் ஹரோ பப்ரிஸ்ற் சேர்ச்சில் மாலை ஐந்துமணிக்கு மேலாக நிகழ்வு ஆரம்பித்தது. பா நடேசன் நிகழ்ச்சியைச் தொகுத்து வழங்கினார். இந்நிகழ்வில் பிபிசி ஊடகவியலாளர் பிரான்ஸிஸ் ஹரிசன் கலந்துகொண்டிருந்தார். அவருக்கு நூலின் முதற்பிரதி அவருக்கே வழங்கப்பட்டது. விடுதலைப் புலிகளின் இரண்டாம் கட்டத் தளபதிகளுடன் மிக நெருக்கமாக இருந்தவர் பிரான்ஸிஸ் ஹரிசன். இவர் “Still Counting the Dead: Survivors of Sri Lanka’s Hidden War” என்ற நூலை வெளியிட்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது. இந்நூலில் பதிவு செய்யப்பட்ட ‘போர் வலயங்கள்’ பற்றிய படத்தை தந்தமைக்காக பிராஸிஸ் ஹரிசனுக்கு நூலில் நன்றி தெரிவிக்கப்பட்டு இருந்தது. லண்டன் புகைப்படப் படக் கலைஞரும் அரசியல் சமூக ஆர்வலருமான சுகுன சபேசன் தமிழில் இருந்த புகைப்படக் குறிப்புகளை ஆங்கிலத்திற்கு மொழிபெயர்த்தமைக்காக அவருக்கும் அந்நூலில் நன்றி தெரிவிக்கப்பட்டு இருந்தது.

தமிழ் முறைப்படி கூட்டம் தாமதமாக ஆரம்பித்தாலும் பேச்சாளர்கள் நெருக்கமான நேரத்தை கவனத்தில் எடுத்து தங்கள் கருத்துக்களை சுருக்கமாக முன்வைத்தனர். பிரான்ஸிஸ் ஹரிசன் இந்த யுத்தத்தில் இருந்து தப்பி வந்த அமரதாஸ் போன்றவர்கள் தங்கள் கதைகளைச் சொல்ல முன்வந்ததை பாராட்டியதோடு, இவ்வாறு தப்பித்து வந்தவர்களின் ஆக்கங்கள் பல வெளிவர வேண்டும் அவை பல தரப்பினரிடமும் கொண்டு சேர்க்கப்பட வேண்டும் என்று தெரிவித்தார்.

நூலகவியலாளர் என் செல்வராஜா, புகைப்படக் கலைஞர் கெவின் காட்டரின் சூடானின் வறுமையை வெளிப்படுத்திய ஒரு ‘பெண் குழந்தையின் மரணத்திற்காகக் காத்திருந்த கழுகு’ புகைப்படம் பற்றிச் சுட்டிக்காட்டி அப்புகைப்படக் கலைஞர் அது ஏற்படுத்திய மன உளைச்சலில் தற்கொலை செய்து கொண்டமையைச் சுட்டிக்காட்டினார். ஒளி ஓவியங்கள் பற்றிய பதிவுகளைச் சுட்டிக்காட்டியதுடன் அவற்றின் அவசியத்தையும் வலியுறுத்தினார்.

அதே போல் வியட்நாம் யுத்தத்தில் அமெரிக்க நேபாம் குண்டினால் நிர்வாணமாக ஓடிய சிறுமியின் புகைப்படம் அமெரிக்காவினதும் உலகினதும் கண்களைத் திறக்க வைத்தது பற்றி அரசியல் கலை இலக்கிய விமர்சகர் யமுனா ராஜேந்திரன் சுட்டிக்காட்டினார். அவர் தனதுரையில் புகைப்படக் கலைஞரின் அறம் பற்றி பேசியதுடன் அமரதாஸ் அதனை கவனமாகக் கையாண்டிருப்பதாயும் குறிப்பிட்டார். புகைப்படம் என்பது ஒரு வரலாறல்ல என்று குறிப்பிட்ட யமுனா ராஜேந்திரன் அது ஒரு வரலாற்றின் சாட்சியம் என்று குறிப்பிட்டார். ஒரு படம் ஒரு சம்பவத்தை, ஒரு காலத்தை சொல்லக்கூடியது என்பதைச் சுட்டிக்காட்டிய யமுனா ராஜேந்திரன் அமரதாஸ் அந்த மக்களோடு வாழ்ந்து உருவாக்கிய இப்படங்கள் அந்த யுத்த காலத்தின் சாட்சியங்கள் என்றும் அதனை அமரதாஸ் திறம்பட பதிவு செய்திருப்பதாகவும் தெரிவித்தார்.

அமரதாஸின் ஒளி ஓவியங்கள் ஓடும் படத்தின் தன்மையைக் காட்டுவதாக சுகுன சபேசன் தெரிவித்தார். இப்படங்கள் கோர்வைப்படுத்தப்பட்டிருக்க வேண்டும் எனவும் சுகுன சபேசன் தெரிவித்தார்.

இந்நூல் விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டது என்று தமிழ் சொலிடாரிட்டி அமைப்பின் முக்கியஸ்தரும் சமூக, கலை இலக்கியச் செயற்பாட்டாளருமான சேனன் குறிப்பிட்டார். அமரதாஸ் ஏனைய சர்வதேச புகைப்படக் கலைஞர்கள் போலல்லாது அந்த மக்களோடு மக்களாக வாழ்ந்து அந்த மக்களின் வாழ்வை தன் புகைப்படங்களினூடாகப் பதிவு செய்துள்ளார். என்ன தான் ஜனநாயம் கருத்துச் சுதந்திரம் என்று சொன்னாலும் உண்மையில் அவற்றுக்கு மதிப்பளிக்கப்படுவதில்லை. பிபிசி போன்ற ஊடகங்கள் ஓடுக்கப்பட்டவர்கள் பக்கம் நிற்பதில்லை. இந்தப் படங்கள் எமக்கு அவசியமான ஆவணங்கள். எம்முடைய பொக்கிஸங்கள் என்றும் அதனால் இந்நூல் விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டது என்றும் சேனன் அந்நிகழ்வில் குறிப்பிட்டார்.

நூலகவியலாளர் என் செல்வராஜா ஒரு ஆவணக்காப்பாளர் என்ற ரீதியில் நீண்ட கால நோக்கில் நூலை விமர்சனப் பார்வையில் அணுகி இருந்தார். நூலிற்கு ஆங்கிலத்தோடு சேர்த்து தமிழ் தலைப்பையும் வழங்கத் தவறியது பிற்காலத்தில் தமிழ் நூல் சேகரிப்பில் இந்நூல் தவறவிடப்பட்டுவிடும் அபாயத்தைச் சுட்டிக்காட்டினார். அமரதாஸ் ஒரு கவிஞராக இருந்தும் புகைப்படங்களுக்கான குறிப்புகளை வழங்கத் தவறியிருப்பதையும் அவர் அங்கு சுட்டிக்காட்டினார்.

பேச்சாளர்களின் உரைகளின் முடிவில் கலந்துரையாடல் இடம்பெற்றது. இக்கலந்துரையாடலுக்கு முன்னதாகவே நிகழ்ச்சித் தொகுப்பாளர் பா நடேசன், நூலகவியலாளர் என் செல்வராஜா ஆகியோருக்கு இந்நூல் தொடர்பாக தொலைபேசியில் பல அதிருப்திகள், நெருக்கடிகள் வழங்கப்பட்டிருந்தது. அதனை நிகழ்வின் கலந்துரையாடலின் போது காணக்கூடியதாக இருந்தது. நூலில் தொகுக்கப்பட்ட படங்கள அமரதாஸ்க்கு மட்டும் சொந்தமானவை அல்ல, தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான கருத்துக்கள் உள்ளது, எனப் பலவாறான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. இப்படங்களை கருப்பு வெள்ளையாக வெளியிட்டதன் மூலம் அப்படங்கள் ஏற்படுத்திய தாக்கத்தை அமரதாஸ் மழுங்கடித்துவிட்டார் என்ற குற்றச்சாட்டுக்களும் முன்வைக்கப்பட்டது.

இவை பற்றி அமரதாஸ் குறிப்பிடுகின்ற போது 2019இல் வரவிருந்த இந்நூல் சில காரணங்களால் அப்போது வெளியிடப்படவில்லை என்றும் மேம்படுத்தப்பட்ட பதிப்பாக தற்போது வெளிவந்திருப்பதாகவும் குறிப்பிடுகின்றார். ‘கூட்டுக்களவாணிகள்’ சிலர் மோசமான உள்நோக்கத்துடன் சர்ச்சைகளை கிளப்பி வருவதாகவும் குற்றம்சாட்டியிருந்தார். நியாயம் பேச வேண்டிய சிலர் மௌனம் காத்ததாகவும் சிலர் மட்டும் தனக்கு தகுந்த நேரத்தில் ஆதரவளிப்பதாகவும் தெரிவித்து இருக்கின்றார். ஆனால் விசமிகளுடைய சதிகளுக்கு தான் பணியப் போவதில்லை என்றும் அமரதாஸ் தெரிவிக்கின்றார். தான் பாதுகாத்து வைத்திருக்கும்படி வழங்கிய படங்கள் கைமாறி, திருடப்பட்டு சில நபர்களால் அநாமதேயமாக வெளியிடப்பட்டதாகவும் அப்படங்களை வேறவரது படங்கள் போலக் காண்பிக்க முற்படுவதாகவும் அமரதாஸ் குற்றம்சாட்டுகின்றார்.

விசிலடிச்சான் குஞ்சுகளின் எதிர்ப்பு:
அமரதாஸ் தன்னுடைய அல்லது தன்னிடமிருந்த புகைப்படங்களின் உரிமையை பொதுமைப்படுத்த முன்வராததால் புலம்பெயர் புலிகளின் வெவ்வேறு பிரிவினருக்கும் அமரதாஸ்க்கும் இடையே கடுமையான முரண்பாடுகள் எழுந்தது. ஒளிப்படங்களின் உரிமைசார்ந்த பிரச்சினைகளுக்கு அப்பாலும் அமரதாஸ் மீது பல குற்றச்சாட்டுகளை புலம்பெயர் புலி விசிலடிச்சான் குஞ்சுகள் வைக்கின்றன. ஒளிப்படங்களை இரத்தமும் சதையுமாக வெளியிட்டு இருந்தால் உணர்ச்சியைத் தூண்டிவிட்டு தங்கள் அரசியலுக்கு அதனைப் பயன்படுத்தலாம் என்பது அவர்களுடைய விருப்பம்.

மேலும் அமரதாஸ் இறுதி யுத்தத்தை ஒரு இனஒழிப்பு யுத்தமாக சொல்லவில்லை என்ற குற்றச்சாட்டும் உள்ளது. அதற்கு அமரதாஸ் முன்வைக்கின்ற விளகம் புரிந்துகொள்ளக் கூடியதே. நானும் இலங்கை அரசாங்கம் தமிழினவொழிப்புச் செய்ததாக நிரூபிக்க வேண்டும் என்று தான் விரும்புகிறேன். ஆனால் சர்வதேச அமைப்புகள் இன்னமும் அதனை ஏற்றுக் கொள்ளாததால் நான் அதனை இனவொழிப்பு யுத்தமாக குறிப்பிடவில்லை என்று குறிப்பிட்டார்.

அமரதாஸ் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரானவர் அல்ல. அவருடைய செயற்பாடுகள், எழுத்துக்கள் அவரை ஒரு தேசியவாதியாகவே உருவகப்படுத்துகின்றது. ஆனால் அமரதாஸ் விசிலட்டிச்சான் குஞ்சுகள் போன்று புலிகளுடைய அனைத்து நடவடிக்கைகளையும் கொண்டாடவில்லை. அமரதாஸ் அறிமுகவுரையில் “ஒரு போராட்டத்திலே போருக்குரிய நாசகாரப் பண்புகள் தலையெடுக்கக் கூடும். ஆகவே போராட்டத்திலும் போர்சார்ந்த குற்றங்கள் நிகழ வாய்ப்பிருக்கிறது. போரை ஒருவர் எதிர்ப்பது போராட்டத்தை எதிர்ப்பதாகாது. ஒரு போராட்டத்திலே தலையெடுக்கக்கூடிய நாசகாரப் பண்புகளை எதிர்ப்பதும் போராட்டத்தை எதிர்ப்பதாகாது. போரும் போராட்டமும் எப்படி உருவாக்கப்படுகின்றன எப்படி முன்னெடுக்கப்படுகின்றன என்று ஆராய்ந்து பார்க்க வேண்டியது அவசியம்” எனக் குறிப்பிடுகின்றார். தமிழீழ விடுதலைப் புலிகளையும் அவர்களது போராட்டத்தையும் கேள்விக்கு இடமில்லாமல் ஏற்றுக்கொள்ளாத அமரதாஸின் குறிப்புகள் விசிலடிச்சான் குஞ்சுகளை உசுப்பிவிட்டதில் எவ்வித ஆச்சரியமும் இல்லை.

தமிழீழ விடுதலைப் புலிகளின் பலாத்கார ஆட்சேர்ப்பு, மக்கள் தஞ்சமடையும் இடங்களில் இருந்து தாக்குதலை நடத்துவது, கூடுதலான அழிவை ஏற்படுத்தும் வகையிலான மூன்றாம்தர யுத்த தந்திரங்கள், மக்களை தங்கள் காவலரன்களாக பயன்படுத்தியமை போன்ற பல விடயங்களை இந்த ஒளி ஓவியங்கள் வெளிப்படுத்தவில்லை. இந்நூலில் அமரதாஸ் இறுதி யுத்தத்தில் ஒரு இலட்சத்திற்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டதாக குறிப்பிடுகின்றார். ஒருவரின் இறப்பே மிகக் கூடுதலானது. ஒரு லட்சம் பேர் இறந்திருக்க வேண்டும் அதற்கு ஆயிரம் ஆயிரம் படங்களின் சாட்சியம் தேவை என்று எண்ணத் தேவையில்லை. ஆதாரமற்ற கதையாடல்கள் இருக்கின்ற உண்மையையும் மழுங்கடிக்கச் செய்துவிடும். உண்மையை ஆதாரங்களோடு வெளிக்கொணர்வதே எமது நியாயங்களை முன்வைப்பதற்கான வழி. மிகைப்படுத்தல்கள் அவசியமற்றது.

சொல்லாத சேதி:
அமரதாஸ் சொல்லத் தவறிய விடயங்களே அவர் தொடர்பான பெரும் சர்ச்சையை ஏற்படுத்தக் காரணம். அமரதாஸினுடைய முழுப்பெயர் அல்லது குடும்பப் பெயரின் முதல் எழுத்துக் கூட அவருடைய நூலில் பதிவு செய்யப்படவில்லை. அவருடைய வைட்விஸன் – wide vision இணையத்தில் அவரைப் பற்றிய பக்கத்தில் கூட அமரதாஸ் தன்னை அறிமுகம் செய்யத் தவறி இருக்கின்றார். அல்லது அறிமுகப்படுத்த விரும்பவில்லை. இப்புகைப்பட நூலை பிரான்ஸிஸ் ஹரிசன் முதல் எல்லோருமே மிக முக்கியமான ஆவணமாகவே கருதுகின்றனர். சேனன் ஒரு படி மேலே சென்று அதனை தமிழர்களின் பொக்கிசம் என்று சுட்டிக்காட்டி இருக்கின்றார். ஆனால் இந்த ஒளி ஒவியங்களைத் தாங்கிய இந்நூல் அது ஆவணமாவதற்கு வேண்டிய முக்கிய அம்சங்களைத் தவறவிட்டு இருக்கின்றது. அமரதாஸ் தன்னிடம் இன்னும் சில ஆயிரம் படங்கள் இருப்பதாகக் கூறுகின்றார் அவற்றை மேலும் ஓரிரு நூல்களாக வெளியிடத் திட்டமிட்டு இருப்பதாகவும் குறிப்பட்டுள்ளார். அதனால் இதே போல் எதிர்காலத்தில் அந்நூல்களை வெளியிடாமல் இருக்க இதனைப் பதிவு செய்கின்றேன்.

அமரதாஸின் புகைப்பட நூல் ஒரு ஆவணமாக கருதப்பட வேண்டுமானால் அதற்கான அந்த அறத்தை அந்நூல் கொண்டிருக்க வேண்டும். அமரதாஸ் தான் யார் என்பதை வெவ்வேறு காரணங்களுக்காக வெளிப்படுத்துவதைத் தவிர்த்து இருக்கின்றார். இதன் மூலம் அவர் படைப்பின் நம்பகத் தன்மையையும் நேர்மைத் தன்மையையும் கேள்விக்கு உள்ளாக்கி உள்ளார். இதன் மூலம் அமரதாஸ் மிகத் துரதிஸ்டமான நிலையை தனக்கு ஏற்படுத்தி உள்ளார்.

அமரதாஸ் தமிழீழ விடுதலைப் புலிகளில் போராளியாக இணைந்து போராடியவர் என்றும் இலங்கை – இந்திய ஒப்பந்த காலத்தில் புலிகளால் மரண தண்டனைக்கு உட்படுத்தப்பட்ட மாத்தையா மற்றும் பதவி பறிக்கப்பட்ட யோகி தரப்பினருடன், யோகிக்கு நெருக்கமாக இருந்ததாகவும், அப்போது அமரதாஸின் இயக்கப்பெயர் இளம்திரையன் என்றும், லண்டனில் தலைமைச் செயலகம் என்று இயங்கும் அமைப்பின் முக்கியஸ்தர் ஒருவர் தெரிவிக்கின்றனர். இவர் யோகியின் மெய்ப் பாதுகாப்பாளராக இருந்ததாகவும் அவர் கூறுகின்றனர். ஆனால் சுயாதீனமாக அதனை உறுதிப்படுத்த முடியவில்லை.

மாத்தையா இந்திய அமைதிப் படையுடனான யுத்தத்தை விரும்பி இருக்கவில்லை என்றும் இந்திய உளவுத்துறையோடு தொடர்பில் இருந்ததாகவும் அவர் மீது குற்றம்சாட்டப்பட்டு இருந்தது. இத்தகவலை யோகி அறிந்திருந்தும் இயக்கத்துக்கு தெரிவிக்கவில்லை என்பதால் அவர் பதவியிறக்கப்பட்டார். இக்களையெடுப்பில் இவர்களுக்கு நெருக்கமானவர்கள் அல்லது விசுவாசமானவர்கள் என்று கருதப்பட்ட சிலர் மரண தண்டனைக்கு உட்படுத்தப்பட்டு இருந்தனர். அன்றைய காலகட்டத்தில் மாத்தையா மிகப்பெரும் படையணியை வைத்திருந்தமையும் அவர்களே தாக்குதல்களை முன்னின்று நடத்தியமையும் குறிப்பிடத்தக்கது.

அதன் பின்னும் தமிழீழ விடுதலைப் புலிகளோடு இணைந்திருந்த அமரதாஸ் யுத்தகளத்தில் (ஜெயசுக்குரு) தாக்குதலில் காலில் காயம்பட்டு இயக்கத்தின் இராணுவ நடவடிக்கைகயில் இருந்து விடுவிக்கப்பட்டதாக கிளிநொச்சியில் இவரோடு கூட இருந்த நண்பர் தேசம்நெற்க்குத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில் விடுதலைப் புலிகளில் காயம்பட்டவர்களுக்கு வழங்கப்படும் மறுவாழ்வு நடவடிக்கைகளில் புகைப்படக் கலைஞர்களை உருவாக்குவதும் ஒன்று என்றும் அவ்வாறான பல புகைப்படக் கலைஞர்கள் வன்னியில் உருவாக்கப்பட்டதாகவும் அந்நண்பர் தேசம்நெற்க்குத் தெரிவித்தார். தன்னுடைய நூலில் கிளிநொச்சியில் இயங்கிய ஊடக அறிவியற் கல்லூரியில் புகைப்பட ஊடகத்துறையை கற்பித்ததாக அமரதாஸ் குறிப்பிட்டுள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகளைத் தவிர வேறு யாரும் அங்கு அதனைச் செய்திருக்க வாய்ப்பில்லை.

மேலும் தன்னுடைய நூலில் “சர்வதேச பொது நிறுவனங்கள் வெளியேற்றப்பட்டிருந்த நிலையில், எந்த ஊடகங்களும் வெளியில் இருந்து போர் வலயங்களுக்குள் அனுமதிக்கப்பட்டிருக்கவில்லை. அப்போது விடுதலைப் புலிகள் இயக்கம் சார்ந்த சில ஊடகங்கள் மட்டுமே இறுதிப் போர் நடைபெற்ற வன்னிப் பகுதிக்குள் இயங்கிக் கொண்டிருந்தன” என்று குறிப்பிடும் அமரதாஸ் அடுத்த வரியில் இவ்வாறு குறிப்பிடுகின்றார் “நெருக்கடிகள் பலவும் நிறைந்திருந்த இறுதிப் போர்க்களத்தில், எனது ஊடகவியல்சார் நடவடிக்கைகள் அனைத்துமே சுயாதீனமானவையாக இருந்தன”. அமரதாஸின் இப்பதிவு அவர் தன்னை வலிந்து ஒரு சுயாதீனமான ஊடகவியலாளராகக் காட்ட முயல்கின்றார் என்பதனையே வெளிப்படுத்துகின்றது. விடுதலைப் புலிகளின் ஆட்சிக்காலத்தில் அவர்களுடைய கட்டுப்பாட்டுப் பகுதிகளில் சுயாதீனம் என்ற பேச்சுக்கே இடமில்லை. அமரதாஸ் விடுதலைப் புலிகளின் உறுப்பினராக இல்லாமல் புகைப்படப் பிடிப்பாளராகச் செயற்பட்டிருக்க வாய்ப்பேயில்லை.

அமரதாஸ் தமிழீழ விடுதலைப் புலிகாளல் பயிற்றுவிக்கப்பட்டு புலிகளுடைய நிதர்சனம் தொலைக்காட்சின் புகைப்படக் கலைஞராக செயற்பட்டதாக அக்காலத்தில் அமரதாஸ் உடன் நட்பாக இருந்த போராளிகள் தெரிவிக்கின்றனர். அமரதாஸினுடைய புகைப்படக் கருவியும் இயக்கத்தினாலேயே அவருக்கு வழங்கப்பட்டதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர். ஒரு தொழிலாளி ஒரு நிறுவனத்திற்காக பணியாற்றுகின்ற போது அவனது படைப்புகள் அவர்களுடைய ஒப்பந்தத்திற்கமைய அவை அந்நிறுவனத்திற்கே சொந்தமாகின்றது. இது அறிவுசார் சொத்துரிமைச் சட்டம் சார்ந்தது. ஆனால் அதனை உரிமை கோருவதற்கு தமிழீழ விடுதலைப் புலிகளோ, நிதர்சனம் தொலைக்காட்சியோ இன்றில்லை. அவ்வமைப்பில் இருந்தவர்களுக்கோ அதில் பணியாற்றியவர்களுக்கோ அதனை உரிமை கோருவதற்கான எந்தச் சட்ட உரிமையும் கிடையாது. ஆனால் அமரதாஸ் உணர்வு ரீதியாக அதனை பொறுப்புணர்வுடன் கையாண்டு இருந்திருக்க வேண்டும். அப்படிச் செய்திருந்தால் அவருக்கு இன்று ஏற்பட்டுள்ள இந்நிலையைத் தவிர்த்து இருக்கலாம்.

2019 இல் நோர்வே தமிழ் சங்கம் இந்நூலை வெளியிடுவதற்கு உடன்பட்டு நூலையும் பதிப்பித்து இருந்தது. ஆனால் அப்பதிப்பில் புகைப்படத்திற்கான உரிமையை அமரதாஸிற்கு அல்லாமல் போராளிகளின் வெளியீடாக நோர்வே தமிழ் சங்கம் குறிப்பிட்டு இருந்தது. இதற்குப் பின்னணியில் தமிழ் சமூகம் மையம் TCC – Tamil Community Centre இருந்ததாகக் கருதப்பட்டது. ஒளிப்படங்களுக்கான தன்னுடைய உரிமையை நோர்வே தமிழ் சங்கம் நூலின் பதிப்பில் நீக்கியதற்கு எதிராக அமரதாஸ்; நோர்வே தமிழ் சங்கத்தை நீதிமன்றத்துக்கு கொண்டு சென்று அதில் வெற்றியும் பெற்றார். நீதிமன்றத்தில் வென்ற அமரதாஸினால் மக்கள் மன்றத்தை வெற்றிகொள்ள முடியுமா?

புலம்பெயர் தேசம் தன்னுடைய முதலாளித்துவ நோக்கில் தனிமனிதனின் நலன்களை முன்நிறுத்துகின்ற சட்டங்களையே கொண்டுள்ளது. உணர்வு ரீதியான, அறிவியல் ஒழுக்கம் சார்ந்த பண்புகள் பலவீனமான தேசத்தில் அனைத்து விடயங்களுமே சட்ட ரீதியாக அணுகப்பட வேண்டியதாகவே உள்ளது. அந்த வகையில் அமரதாஸின் ஒளிப்படங்கள் சட்டரீதியாக அவருடையதாகவே இருக்கலாம். ஆனால் அது மட்டும் போதுமானதா? என்றால் என்னைப் பொறுத்தவரை இல்லையென்றே சொல்வேன். உணர்வு ரீதியாகவும் அறிவியல் ஒழுக்கம், சார்ந்து தார்மீகக் பண்புகள் – அறம் கடைப்பிடிக்கப்பட்டிருக்க வேண்டும். அமரதாஸ் தான் யாரென்ற உண்மையை வெளிப்படுத்தி இருந்தால் அவருடைய இந்நூலுக்கு அது இன்னமும் வலுச்சேர்த்து இருக்கும் என்றே நம்புகின்றேன். தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமைகள் பல்வேறு தவறுகளை விட்டிருந்தபோதும் அதிலிருந்த போராளிகளின் அர்ப்பணிப்பை மறுக்கவோ நிராகரிக்கவோ முடியாது. தமிழீழ விடுதலை புலிகளில் உறுப்பினராக இருப்பதோ, தமிழீழ விடுதலைப் புலிகளிடம் புகைப்படப் பயிற்சி பெற்றதோ, நிதர்சனம் தொலைக்காட்சியில் பணியாற்றியதோ தவறோ குற்றமோ அல்ல. ஆனால் அவற்றை இருட்டடிப்புச் செய்வது அவணப் பதிவின் நம்பகத் தன்மையைக் கேள்விக்கு உள்ளாக்க வழி செய்துள்ளது.

இச்சட்டம் சார்ந்த விவாதங்களுக்கு அப்பால் ஒரு ஆவண ஒளிப்படத் தொகுப்பு எப்படி வெளியடப்படக்கூடாது என்பதற்கு அமரதாஸின் இந்நூலும் ஒரு உதாரணமாக இருக்கும். அதற்காக இந்நூலின் ஒளிப்படச் சாட்சியங்களை நான் நிராகரிப்பதாகவோ அல்லது அமரதாஸின் அர்ப்பணிப்பை நிராகரிப்பதாகவோ அர்த்தமில்லை. ஒரு படம் ஆயிரம் வாரத்தைகளுக்குச் சமமானது என்று சொல்கின்ற போது அமரதாஸ் 450 படங்களைக் கொண்ட ஒரு ஆவணத்தை எவ்வித ஒழுங்கமைப்பும் குறிப்பும் இன்றி ‘கும்பையாகக் கொட்டியுள்ளார்’ என்றே எண்ணத் தோண்றுகின்றது. இது அவர் தெரியாமல் விட்ட தவறு அல்ல. தெரிந்துகொண்டே செய்த தவறு அல்லது சோம்பேறித்தனம். “அனைத்து ஒளிப்படங்களுக்குமான விரிவான குறிப்புகள் அல்லது தலைப்புகள் அவசியமில்லை எனக் கருதுகிறேன்” என்று தன்னுடைய நூலில் அமரதாஸ் குறிப்பிட்டுள்ளார்.

வன்னியில் நடைபெற்ற இறுதி யுத்தம் 2006இல் மாவிலாறு அணை மூடியதில் இருந்து 2009 மே 19 பிரபாகரனின் உடல் கண்டெடுக்கப்பட்டவரை நீண்டது. அக்காலத்தில் மக்கள் அணியணியாக இடம்பெயர்ந்த வண்ணமே இருந்தனர். ஒரு ஒளிப்படத்திற்கு அதன் அடிக்குறிப்பு மிக மிக அவசியமானது. ஒவ்வொரு ஒளிப்படமும் பலநூறு சிந்தனைகளை தூண்டக் கூடியவை. அடிக்குறிப்புகள் தான் அவ்வொளிப்படத்தை அந்தக் காலத்தோடும் அந்தச் சூழலோடும் அப்பதிவை பிணைத்துக் கொள்ளும் .

நூற்பது ஆண்டுகளுக்கு முன் எரிக்கப்பட்ட யாழ்ப்பாண நூலகம் எந்த நாளில் எரிக்கப்பட்டது என்ற சர்ச்சை நூலகவியலாளர் என் செல்வராஜா மே 31 1981 இரவு என்று உறுதிப்படுத்தும் வரை சர்ச்சையாகவே இருந்தது. அதனை மறுப்பவர்களும் இல்லாமல் இல்லை. இந்நிலையில் படம் பற்றிய அடிக்குறிப்புகள், படம் எடுக்கப்பட்ட திகதி, படம் எடுக்கப்பட்ட இடம் என்பவற்றைக் குறிப்பிடாமல் எவ்வித ஒழுங்கமைப்பும் இன்றி இவ்வொளிப்படங்களை வெளியிட்டிருப்பதன் மூலம் அமரதாஸே தனது நூலுக்கான மதிப்பை குறைமதிப்பீடு செய்துள்ளார்.

இந்நூலில் அமரதாஸ் தோண்றுகின்ற பத்துக்கும் மேற்பட்ட படங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளது. அப்படங்கள் அமரதாஸ் எடுத்த படங்களுக்கு நிகராக கனதியானதாகவும் உள்ளது. அப்படங்களை நிச்சயமாக அமரதாஸ் எடுக்கவில்லை. அப்படங்களை அமரதாஸ் போன்ற ஒரு புகைப்படக் கலைஞரே எடுத்திருக்க வேண்டும். போர் வலயங்கள் கொண்ட ஒரு சாதாரண இலங்கையின் வடக்குப் பகுதியின் படத்தை (இதனை கூகிள் சேர்ச்சில் தேடியே எடுத்திருக்க முடியும். எங்கிருந்து எடுக்கப்பட்டது என்பதை நூலில் பதிவு செய்திருக்கலாம்.) தந்ததாக பிரான்ஸிஸ் ஹரிசனுக்கு நன்றி தெரிவித்து இருக்கிறார் அமரதாஸ். ஆனால் இப்படம் பிரான்ஸிஸ் ஹரிசனுக்கு உரிமையானதும் அல்ல. அப்படியிருந்தும் இந்நூலில் அவருக்கு நன்றி சொல்லப்பட்டுள்ளது. ஆனால் யுத்த பிரதேசத்திற்குள் தன்னுடைய படத்தை எடுத்தவருக்கு அல்லது எடுத்தவர்களுக்கு அமரதாஸ் நன்றி தெரிவிக்கவிலை. அவர்களைப் பற்றிய எந்தக் குறிப்பும் இல்லை.

உண்மைகள் சில சமயங்களில் கசக்கும். ஆனால் அவை அடுத்த படிகளுக்கு எம்மை இட்டுச் செல்லும். அடுத்த ஒளி ஓவிய நூல்களை வெளியிடுவதற்கு முன் அமரதாஸ் புகைப்படக் கலை பற்றிய தனது புரிதலையும் ஆழத்தையும் வளர்த்துக்கொள்வது மிக அவசியம். புகைப்படக் கலையின் நுட்பங்களைத் தெரிந்திராத எனக்கு இந்த ஒளி ஓவியங்களின் மதிப்பை அல்லது அதன் ஆழத்தை அமரதாஸ் உணரத்தவறிவிட்டாரோ என எண்ணத் தோண்றுகிறது. அமரதாஸினுடைய உழைப்பும் ஓவியங்களும் விலைமதிப்பிட முடியாதவை. அந்தக் காலத்தின் சாட்சியங்கள் அவற்றை அதன் பெறுமதி குன்றாது வெளிக்கொணர்வது மிக முக்கியமானது. அப்படங்களை மீண்டும் மீண்டும் பார்க்கின்ற போது ஒவ்வொரு தடவையும் அவை வேறொரு கதையைச் சொல்வது போல் தோண்றுகின்றது. எந்த விடயமாக இருந்தாலும் தொடர்ச்சியான முன்னேற்றம் அவசியம். அமரதாஸின் அடுத்த நூல்கள் தற்போது விடப்பட்ட தவறுகளைக் களைந்து நேர்த்தியுடன் வரவேண்டும் என்று எதிர்பார்க்கின்றேன்.

 

தோற்றுப் போனவர்களின் கதைகள்: ‘தோற்றுத்தான் போவோமா…’ தொகுப்பு மலர் மீதான ஒரு பார்வை – வாகீசன்

‘தோற்றுத்தான் போவோமா….’ புகலிட தொகுப்பு மலரினை மீண்டுமொருமுறை மீள் வாசிப்புக்குட்படுத்தினேன். இது பிரான்சின் தலைநகர் பாரிசில் 1995 ம் ஆண்டு ஒரு மேதினத்திலன்று விடுதலைப் புலிகளினால் படுகொலை செய்யப்பட்ட தோழர் சபாலிங்கம் நினைவாக, சுமார் 5 வருடங்கள் கழித்து 1999 ம் ஆண்டு பிரான்சில் இருந்து சபாலிங்கம் நண்பர்கள் வட்டத்தினால் வெளியிடப்பட்டிருந்தது. புலிகளின் வரலாற்றில் ஒரு கறை படிந்த அத்தியாயமாக ஒரு கறுப்புப் பக்கமாக இன்றும் விளங்குகின்ற தோழர் சபாலிங்கத்தின் படுகொலை ஆனது அன்று புகலிட சமூகத்தில் பெரும் அதிர்ச்சியினையும் திகைப்பினையும் ஏற்படுத்தியிருந்த விடயம் நாம் அறிந்ததே. இந்த படுகொலையினால் அன்று இங்கு புகலிடத்தில் மனித உரிமைகளை முன்னிறுத்தி தீவிரமாக செயற்பட்டு வந்த புலி எதிப்பாளர்களின் செயற்பாடுகளில் ஒரு தடுமாற்றமும் பயப்பிராந்தியும் ஏற்பட்டிருந்தது. ஆயினும் சுமார் 5 வருடங்கள் கழித்து தற்கொலைக்கு ஒப்பான ஒரு செயலாக இம்மலர் வெளியீட்டினை நிகழ்த்திய ‘சபாலிங்கம் நண்பர்கள் வட்டம்’ அமைப்பினரின் இப்பணியினையும் இதன் பின் உள்ள அர்ப்பணிப்பையும் துணிச்சலினையும் நாம் மறுக்கமுடியாது.

அனைத்து அராஜகங்களுக்கும் வன்முறைகளுக்கும் எதிராகவும் மனித உரிமைகளுக்கு ஆதரவாகவும் வெளியிடப்பட்ட இத்தொகுப்பு மலரில் ஈழம், புகலிடம், தமிழகம் என்ற பரப்பில் இருந்த பல்வேறு விதமான படைப்பாளிகளினதும் சமூக செயற்பாட்டாளர்களினதும் படைப்புக்கள் வெளியாகியிருந்தன. இந்நூலின் முன்னுரையில் வெளியீட்டாளர்கள் ‘இது வெறும் புலிகளுக்கு எதிரான குரல் அல்ல. பல்வேறு விதமான அரச அடக்குமுறைகள், பெண்களின் மீதான வன்முறை, குழந்தைகளின் மீதான அடக்குமுறை, என அனைத்து மனித நேயமற்ற செயல்களுக்கு எதிராகவும் எமது குரல் ஒலிக்கின்றது’ என்று அழுத்தம் திருத்தமாக கூறுகின்றனர்.

‘காலம் தாழ்த்திய ஒரு அஞ்சலி’ என்று இதன் ஆரம்பப் பக்கங்களிலேயே சமுத்திரன் ஒரு பதிவினை எழுதுகிறார். உண்மைதான். இது ஒரு காலந்தாழ்த்திய அஞ்சலிதான். நாம் ஏற்கனவே மேலே கூறியபடி இம்மலரானது சபாலிங்கம் படுகொலை செய்யப்பட்டு 5 வருடங்கள் கழித்து மிகவும் தாமதமாகவே வெளியிடப்பட்டிருகின்றது. ஆயினும் மிகவும் காத்திரமாகவும் சிறப்பாகவும் செம்மையாகவும் வெளிவந்திருக்கின்றது.

அழகலிங்கம் எழுதிய ‘அராயகமும் மார்க்சியமும்’ தி. உமாகாந்தனின் ‘சரியும் சர்வாதிகார சாம்ராஜ்ஜியங்கள்’ போன்ற காத்திரமான கட்டுரைகள் இம்மலரை சிறப்பிக்கின்றன. ‘சிந்தனை: அக்கினிக்குஞ்சு’ என்ற தலைப்பில் பேராசிரியர் மு.நித்தியானந்தன் சிந்தனைக்கு அஞ்சும் மனிதர்கள் குறித்தும் அச்சமும் பீதியும் கொண்டு மாற்றுக் கருத்துக்களை கண்காணிக்கும் மனிதர்கள் குறித்தும் எழுதி ராஜினி திரணகமவின் படுகொலையுடன் தொடர்பு படுத்தி ஒரு சிறப்பான கட்டுரையினை எழுதுகிறார். ‘புலம் பெயர்ந்தது தமிழர்கள் மட்டுமல்ல, வன்முறைகளும்தான்…’ என்ற கட்டுரையில் அழகு குணசீலன் இதுவரை காலமும் புலம்பெயர் தேசங்களில் இடம்பெற்ற அராஜகங்கள், வன்முறைகள், படுகொலைகள், மாற்றுச் சஞ்சிகைகள், பத்திரிகைகள், மீதான தடைகள் பற்றியும் தேடகம் எரிப்பும் குறித்தும் ஒரு அட்டவணையுடன் கூடிய விரிவான கட்டுரை ஒன்றினை எழுதுகிறார். அசோக் யோகன் கண்னமுத்து ‘துடைப்பானின் குறிப்புக்கள்’ என்ற தனது பதிவில் தேசியவாத உணர்வுகள் எப்படி தேசியவெறியாக உருமாறி, அது எவ்வகையில் மற்றவர்களின் மீது மேலாண்மை செலுத்துகின்றது என்பதினை விளக்கி, எமது தேசிய இனப்பிரச்சினைகளின் தீர்வாக மார்க்சிய வழிப்பட்ட அணுகுமுறையினை ஆராய்கின்றார். ‘காலுடைந்த சிவில் சமூகமும் தமிழ் புத்திஜீவிகளும்’ என்ற கட்டுரையில் இன்றய தமிழ் சமூகத்தில் உள்ள புத்திஜீவிகளின் போலித்தனங்கள் குறித்து ஸ்பார்ட்டகஸ்தாசன் விரிவான கட்டுரை ஒன்றினை சேரன், சி.புஷ்பராஜா, சமுத்திரன், தமிழரசன், செ.கணேசலிங்கன், சுவிஸ் ரஞ்சி, ப.வி.சிறிரங்கன், ஜோர்ஜ் குருசேவ், முதலானோரின் அரசியல் கட்டுரைகளுடன் அருந்ததி, சேரன், இளைய அப்துல்லாஹ், நா.விச்வநாதன், தமயந்தி திருமாவளவன், சி.சிவசேகரம், சோலைக்கிளி, உமா, இளைய அப்துல்லாஹ், றஞ்சனி, அ.ஜ.கான், முத்துலிங்கம், செல்வம் அருளாந்தம், இந்திரன் போன்றவர்களது கவிதைகளும் தமயந்தி, உமா, தயாநிதி, ரவீந்திரன், நிருபா, சந்துஷ், நா.கண்ணன் ஆகியோர்களின் சிறுகதைகளும் இம்மலரில் இடம் பிடித்துள்ளன.

இன்று தீவிரமான புலி எதிர்ப்பாளர்களாக இருந்து புலிகளிற்கு எதிராக தமது உரத்த குரல்களை படைப்புக்களாக பதிவு செய்து வருகின்ற பலரது படைப்புக்கள் எதுவும் இதில் இடம் பெறாதது, இவர்கள் புலிகளின் முள்ளிவாய்க்கால் இறுதி யுத்த அழிவிற்கு பின்பாகவே தீவிரமான புலி எதிப்பாளர்களாக மாறி புலிகளிற்கு எதிராக கம்பு சுத்தப் பழகி இருக்கின்றார்கள் என்ற உண்மையினையும் எமக்கு எடுத்துச் சொல்கின்றது. முக்கியமாக இன்று சிங்கள இனவாத அரசின் ஒத்தோடியாக மாறி, இலங்கை அரசின் அனைத்து அராஜகங்களுக்கும் செயல்களுக்கும் ஒத்து ஊதுகின்ற பாண்டி பஜார் போராளி அன்று சபாலிங்கம் இலண்டன் வந்து அவரைச் சந்திக்க விரும்பியபோது அவரைச் சந்திக்க மறுத்ததும் இதனை சபாலிங்கம் பாரிசில் தனது தோழர்களிடம் வேதனையுடன் பகிர்ந்து கொண்டதும் எமது புகலிட வரலாற்றில் நாம் மறைக்க முடியாத உண்மைகள்.

இம்மலரானது உண்மையில் ஒரு இரண்டு தசாப்தகால ஈழ-புகலிட சமூக, பண்பாட்டு அரசியல் களங்களின் குறுக்கு வெட்டுத் தோற்றத்தினை வெளிப்படையாகப் பேசி நிற்கின்றது என்றே நாம் கருதுகின்றோம். சேரன் ‘காற்றை எதிர்த்து ஒரு காலடி’ என்ற ஒரு விரிவான கட்டுரையினை எழுதியிருக்கின்றார். அதில் அவர் இங்கு புகலிடத்தில் வெளியாகி இருந்த சிறுசஞ்சிகைகள் தவிர்ந்த அன்றைய அனைத்துப் பத்திரிகைகளும் புலிகளின் எதேச்சதிகாரங்கள், அராஜகங்கள் போன்றவற்றை எப்படி ஆதரித்து நின்றன என்பதினை தெளிவாக விளக்குகிறார்.

இதே வேளை இங்கு வெளியாகியிருந்த பெரும்பாலான சஞ்சிகைகள் அனைத்துமே புலி எதிர்ப்பாளர்களினாலேயே வெளி வந்திருந்தன என்பதுவும் நாம் மறுக்க முடியாத உண்மை. புலிகள் தமது இராணுவ வெற்றிகள் மூலமும் அர்ப்பணிப்புக்கள் தியாகங்கள் மூலமும் கட்டிக் காத்து வந்த பிம்பங்களை கட்டவிழ்ப்பதில் இவர்கள் மிக வெற்றிகரமாகச் செயற்பட்டார்கள் என்பதும் அதனை இவர்கள் இறுதிவரை சாதித்துக் காட்டினார்கள் என்பதும் மறுக்க முடியாத உண்மை. அத்துடன் புலிகளின் ஜனநாயக விரோத செயற்பாடுகளிற்கு எதிராக குரல் கொடுத்த இவர்களது பல்வகை அமைப்புக்களிலும் கூட ஜனநாயக விரோதப் பண்புகளே கோலோச்சி இருந்தது என்பதுவும் வரலாறு இன்று எமக்குக் காட்டி நிற்கும் உண்மைகள். இவர்கள் புலிகளின் பிம்பங்களை சிதைப்பதற்காக அவர்களிக்கு எதிராக பல்வேறு பிம்பங்களை சிருஷ்டித்தார்கள். ஆனால் அந்த பிம்பங்களின் பின்னால் உள்ள அதிர்ச்சிகரமான முகத்திலறையும் உண்மைகள் இப்போது ஒவ்வொன்றாக வெளி வந்து இன்று அந்த பிம்பங்களும் ஒவ்வொன்றாகச் சிதைவடையும் போது எமது அறிவு ஜீவிகளின் ஒரு 3௦ வருட கால ஏமாற்று வேலைகளும் பித்தலாட்டங்களும் எம்மை அதிர்ச்சியடைய வைக்கின்றன.

தோழர் சபாலிங்கத்திற்கு அர்ப்பணம் செய்யப்படுள்ள இந்த அஞ்சலி மலரில் சபாலிங்கம் குறித்ததான எந்த விபரங்களோ அல்லது அவரது வாழ்க்கை வரலாறுகளோ இதில் இணைக்கப்படாதது கொஞ்சம் ஏமாற்றத்தினை அளிப்பதினை இங்கு அவசியம் குறிப்பிட்டேயாக வேண்டும்.

இம்மலர் வெளிவந்து இன்று 20 வருடங்களாகின்றன. வரலாற்றைத் திரும்பிப் பார்க்கும்போது ஏமாற்றமும் சோகமும்தான் எஞ்சுகின்றது. இந்த தொகுப்பில் தமது படைப்புகளை வெளிக்கொணர்ந்த தி.உமா காந்தன், திருமாவளவன், சி.புஷ்பராஜா, செ.கணேசலிங்கன் போன்றோர் இன்று உயிருடன் இல்லை. தோழர் அ.ஜ.கான் மிக அண்மையில்தான் தமிழகத்தில் கோவிட் 19 தொற்றுக்குள்ளாகி மரணமடைந்து, எம்மையெல்லாம் துயரத்தில் ஆழ்த்தி இருந்தார். இதில் எம்மை அதிக துயரத்திலும் வேதனையிலும் ஆழ்ந்தும் விடயம், அன்று இந்த இதழில் தமது படைப்புக்கள் மூலம் அதிகாரத்திற்கு எதிராகவும், படுகொலைகள், வன்முறைகள் என்பவற்றிட்கெதிராகவும் தமது உரத்த குரல்களை பதிவு செய்த பலரும், இன்று இலங்கை பேரினவாத சிங்கள அரசின் ஆதரவாளர்களாக மாறி இலங்கை அரசின் அராஜகங்களையும் படுகொலைகளை நியாயப்படுத்தும் மனிதர்களாக மாறியுள்ளமைதான். இவர்கள் இன்றும் சிங்கள பேரினவாத அரசு ஈழப்போரின் இறுதியில் நிகழ்த்திய இனப்படுகொலையை அது இனப்படுகொலை இல்லை என்று மறுதலிப்பவர்களாகவும், அந்த அரசின் அனைத்து வகை செயற்பாடுகளிற்கும் ஆதரவளிப்பவர்களாகவும் மாறியுள்ளமை உண்மையில் எம்மை திகைப்பில் ஆழ்த்தும் விடயங்களாகும்.

இதற்குமப்பால் இவர்களில் பெரும்பாலோர் மற்றவர்களின் மாற்றுக் கருத்துக்களுக்கு சிறிதேனும் மதிப்பளிக்காதவர்களாக, ஜனநாயகம், பேச்சு சுதந்திரம் குறித்து எந்தவித அக்கறையுமற்றவர்களாக, தம் மீதான சிறு அளவு விமர்சனங்களை கூட ஏற்றுக் கொள்ளாதவர்களாக, மற்றவர்களின் மீது வசை பாடுபவர்களாக, அந்த வசைகளை பாடுவதற்காக எந்த எல்லைகளையும் மீறுபவர்களாக தொடர்ந்தும் இருந்து வருவது எமக்கு தொடர்ந்தும் வேதனையளிக்கும் விடயங்களாகும். இவர்களது இன்றைய இத்தகைய செயல்கள் இவர்களது அன்றைய செயற்பாடுகளை சந்தேகக் கண் கொண்டு பார்க்க வைக்கின்றது. இவையாவும் இன்று எம்மை இவர்களது அன்றைய எழுத்தக்களை மீண்டும் ஒரு மறுவாசிப்பிற்கு உட்படுத்தப் பட வேண்டிய அவசியத்தினை எம்மிடம் வலியுறுதி நிற்கின்றது. இதற்குமப்பால் இவர்களில் சிலர் இன்று புலி ஆதரவாளர்களாக, அனுதாபிகளாக மாறியிருப்பதுவும் கூட வரலாற்றின் ஒரு முரண்நகையே.

முடிவாக, ‘தோற்றுத்தான் போவோமா…’ என்று அறைகூவல் இட்டு பல தசாப்த காலங்களாக அராஜகங்களுக்கும் வன்முறைகளுக்கும் எதிராகவும் மனித உரிமைகளிற்கு ஆதரவாகவும் குரல் கொடுத்து வந்த இவர்கள், இறுதி யுத்தத்தில் புலிகள் தோற்கடிக்கப்படுவதற்கு முன்பாகவே தம்மளவில் தாமே தோற்றுப் போயிருந்தது எமது வரலாற்றின் ஒரு துயர சம்பவமே.

தோல்விகளின் வரலாறுகளையே தொடர்ந்தும் எழுதுவதுதான் எமது தலையெழுத்தா என்ன ???

லிற்றில் நூலகத் திறப்பும் நூலகர்களுக்கான பாராட்டும்!!!

யாழ் பொதுசனநூலகத்தின் ஓய்வு பெற்ற பிரதம நூலகர் ச தனபாலசிங்கம் அவர்களினதும் சுன்னாகம் பொதுநூலகப் பிரதம நூலகர் ஜெயலட்சுமி சுதர்சன் அவர்களினதும் நூலக சேவையை கௌரவிக்கும் நிகழ்வு லிற்றில் நூலகத் திறப்பு நிகழ்வு இற்று சிறப்பாக இடம்பெற்றது. இன்று மார்ச் 13ம் திகதி கிளிநொச்சி திருநகரில் உள்ள லிற்றில் எய்ட் மண்டபத்தில் இந்நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வில் மாணவர்கள், ஆசிரியர்கள், சிந்தனையாளர்கள் என 200 வரையானவர்கள் கலந்துகொண்டனர்.

லிற்றில் நூலகம் திருநகரைச் சுற்றியுள்ள பத்துவரையான கிராம மக்களிடம் வாசிப்பு பழக்கத்தை தூண்டும் நோக்கோடு ஆரம்பிக்கப்படுவதாக லிற்றில் எய்ட் நிறுவனத்தின் ஸ்தாபகர் த ஜெயபாலன் தெரிவிக்கின்றார். ஆயிரத்துக்கும் மேற்பட்ட நூல்களோடு பொதுநூலகமாக ஆரம்பிக்கப்படுகின்ற இந்நூலகம் காலக் கிராமத்தில் வர்த்தகம், கணணி மற்றும் தையல் கலைக்கான நூலகமாக வளர்த்தெடுக்கப்பட வேண்டும் என்பதே எமது நீண்டகாலத் திட்டம் எனவும் த ஜெயபாலன் தெரிவித்தார்.

தமிழ் பிரதேசங்களின் கல்வி வீழ்ச்சிக்கு பிரதான காரணங்களில் ஒன்றாக இருப்பது வாசிப்பை எம்மவர்கள் கைவிட்டது எனத் தெரிவித்த லிற்றில் எய்ட் இன் இயக்குநர் – இணைப்பாளர் ஹம்சகௌரி சிவஜோதி வாசிப்பு பழக்கத்தை தூண்டுவதன் மூலம் மாணவர்களின் சிந்திக்கும் ஆற்றலைத் தூண்ட முடியும் என்றும் அதனால் சிறார்களின் வாசிப்புப் பழக்கத்தில் தாங்கள் கூடுதல் கவனம் எடுக்க உள்ளதாகவும் அதற்காகா மாதாந்த வாசிப்பு வட்டம் ஒன்றை உருவாக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்தார். லிற்றில் நூலகத்திற்கான பயிற்சி நூலகராக கே இவாஞ்சலி பொறுப்பேற்றுள்ளார்.

லிற்றில் நூலகத்திற்கான திட்டம் நீண்டகாலமாக இருந்த போதும் அதற்கு செயல்வடிவம் கொடுத்தது அமரர் இராசமணி பாக்கியநாதனின் பிள்ளைகளே. உலகின் வெவ்வேறு பாகங்களில் அவர்கள் வாழ்ந்த போதும் தாயக மக்களின் எதிர்கால வாழ்வில் அக்கறைகொண்டு இந்நூலகத் திட்டத்திற்காக எட்டு இலட்சம் ரூபாய்கள் வரை வழங்கி உள்ளனர். நூலக அறையை வடிவமைப்பதுஇ அதற்கான தளபாடங்களை பெற்றுக்கொள்வதுஇ நூல்களைப் பெற்றுக்கொள்வது என்பனவற்றோடு பத்திரிகை வாசிப்புக்கான குடில் ஒன்றும் உருவாக்கப்பட்டு உள்ளது. பத்திரிகை வாசிக்க வருபவர்கள் நூலகத்திச் செயற்பாடுகளை பாதிக்காமல் இருப்பதற்காகவும் இடவசதிக்காகவும் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

லிற்றில் நூலகத்தை அமரர் இராசமணி பாக்கியநாதனின் முத்த புதல்வர் ஸ்ரீகுமார் பாக்கியநாதன் திறந்து வைத்தார். தற்போது மலேசியாவில் வாழ்கின்ற தொழிலதிபரான இவரோடு இவரது சகோதர சகோதரிகளும் இந்நிகழ்வில் கலந்துகொள்கின்றனர். லண்டனில் இருந்து லிற்றில் எய்ட் இன் தலைவர் கதிரமலை நந்தகுமார் இந்நிகழ்வில் சிறப்பு விருந்தனராகக் கலந்துகொண்டார். லிற்றில் எய்ட் தலைவர் க நந்தகுமார் லிற்றில் எய்ட் இன் செயற்திட்டங்களை பார்வையிடுவதுடன் லிற்றில் எய்ட்இன் மேற்பார்வையில் இயங்கும் முல்லைத்தீவில் உள்ள கற்சிலைமடுவின் குழந்தைகள் அமைப்பின் செயற்திட்டங்களையும் பார்வையிடுவார்.

இந்நூலகத் திறப்பு விழா நிகழ்வு ஓய்வுபெற்ற கல்விப் பணிப்பாளர் சி இதயராசா தலைமையில் நடைபெற்றது. பிரதம விருந்தினராக பிரதித் திட்டமிடல் பணிப்பாளர் அ கேதீஸ்வரன் கலந்துகொண்டார். எழுத்தாளர் கருணாகரன் “ஏன் புத்தகங்கள்? எதற்காக வாசிப்பு?” என்ற தலைப்பில் சிறப்புரை வழங்கினார். இந்நிகழ்வில் லிற்றில் எய்ட் மாணவர்களின் தயாரிப்பில் ஒரு குறும் நாடகமும் அரங்கேற்றப்பட்டது.
2009 மார்ச் 19இல் லண்டனில் உத்தியோகபூர்வமாக பதிவு செய்யப்பட்ட லிற்றில் எய்ட் அமைப்பு அதற்கு முன்பிருந்தே தனது உதவிப் பணிகளை கடந்த 13 ஆண்டுகளுக்கு மோலாக மேற்கொண்டு வருகின்றது.

லிற்றில் எய்ட் இன் இந்த லிற்றில் நூலகத் திட்டத்தை மிகவும் வரவேற்ற நூலகவியலாளர் என் செல்வராஜா இந்நூலகம் கிளிநொச்சி – வன்னி மண்ணின் ஒரு சிறப்பு நூலகமாக வளரவேண்டும் என்று வாழ்த்தினார். அவர் வாழ்த்தியதோடு மட்டுமல்லாமல் நூலகப் பயிற்சிகளையும் ஆலோசணைகளையும் தொடர்ச்சியாக வழங்கிவருவதோடு நூல்களைப் பெற்றுக்கொள்வதற்கான முயற்சிகளுக்கும் உதவி வருகின்றார்.

ஸ்கொட்லாதில் உள்ள ‘புக் அப்ரோட்’ அமைப்போடு இணைந்து பல லட்ச்சக்கணக்கான குறிப்பாக சிறார்களுக்கான ஆங்கில நூல்களை குறிப்பாக தமிழ் பிரதேசங்களுக்கு கொண்டுவர முயற்சி எடுத்தவர் நூலகவியலாளர் என் செல்வராஜா. அப்பணியில் அவரோடு லிற்றில் எய்ட் இணைந்து பயணித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. தற்போது சுகவீனமாக உள்ள அவர் பூரண சுகமடைந்து தனது நூலக சேவையைத் தொடர இயற்கை அன்னையை வேண்டுகின்றோம் என லிற்றில் எய்ட் சார்பில் அதன் இணைப்பாளர் ஹம்சகௌரி சிவஜோதி தெரிவித்தார்.

“அற்ப அறிவுடையவர்களிடம் ஆயதங்களை ஒப்படைக்கக் கூடாது” கழுதை சுமந்த கவிதை நூல் வெளியீட்டு நிகழ்வில் ராஜா நித்தியானந்தன்

“அற்ப அறிவுடையவர்களிடம் ஆயதங்களை ஒப்படைக்கக் கூடாது” என கழுதை சுமந்த கவிதை நூல் வெளியீட்டு நிகழ்வில் நிகழ்விற்குத் தலைமை தாங்கிய ராஜா நித்தியானந்தன் தமிழீழ விடுதலைப் போராட்டம் பற்றிய தனது கருத்தை வெளிப்படுத்தி இருந்தார். நூலாசிரியர் க பிரேம்சங்கர் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் போராளி. யாழ் இந்துக்கல்லூரியின் பழைய மாணவன். தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தைவிட்டு வெளியேறிய போதும் அவர் கழக விசுவாசத்தை விட்டுக்கொடுக்காதவர். அந்த வகையில் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் சமூக விஞ்ஞானக் கல்லூரியை T3S (Tamileelam School of Social Science) ஆரம்பித்த ராஜ நித்தியானந்தன் தலைமையில் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இந்நிகழ்வில் இக்கல்லூரியில் கற்ற நூலாசிரியர் க பிரேம்சங்கர் முன்னணியில் திகழ்ந்ததையும் அவரை ஏனைய மாணவர்களுக்கு விளக்கும் ரியுரராக நியமித்ததையும் ராஜ நித்தியானந்தன் நினைவு கூர்ந்தார்.

உலகின் முன்னணி பொருளியல் கற்கைக்கான பல்கலைக்கழகமான லண்டன் ஸ்கூல் ஓப் எக்கொனொமிக்ஸ் பல்கலைக்கழகத்தின் கோடைவிடுமுறைப் பாடத்திட்டத்தை அடிப்படையாகக் கொண்டு சென்னையில் உருவாக்கப்பட்ட தமிழீழ சமூக விஞ்ஞானக் கல்லூரி – T3S உருவாக்கப்பட்டதாக ராஜ நித்தியானந்தன் அதன் வரலாற்றை சுருக்கமாகக் குறிப்பிட்டார். இக்கல்லூரியில் முதலாளித்துவக் கொள்கையின் தத்துவாசிரியரான அடம் சிமித், கொம்யுனிசக் கொள்கையின் தத்துவாசிரியரான கார்ள் மார்க்ஸ் ஆகியோர்களின் தத்துவார்த்த கோட்பாடுகள் பற்றிய அரசியல் பொருளாதாரம் மாணவர்களுக்கு புகட்டப்பட்டதாகத் தெரிவித்தார். கலை இலக்கியங்களைக் கொண்ட மேற்கட்டுமானம், பொருளாதார உற்பத்தி முறை பற்றிய கீழ்கட்டுமானம் என்று ஆழமான புரிதலை ஏற்படுத்தும் பாடத்திட்டங்கள் அங்கு கற்பிக்கப்பட்டதை அவர் சுட்டிக்காட்டியிருந்தார். இவற்றைக் கற்பிப்பதற்கு தமிழக பல்கலைக்கழகங்களில் இருந்து இந்த கம்யுனிஸ்ட் கட்சியில் இருந்து விரிவுரையாளர்கள் நியமிக்கப்பட்டு இருந்தனர்.

இதன் தொடர்ச்சியாகவே “அற்ப அறிவுடையவர்களிடம் ஆயதங்களை ஒப்படைக்கக் கூடாது” என்பதைக் குறிப்பிட்டு தமிழீழ விடுதலைப் போராட்டம் பற்றிய தனது கருத்தை முன்வைத்தார். தமிழீழ விடுதலைப் போராட்டத்தை நடத்திய அமைப்புகளிடையே அரசியல் அறிவின்மையையும் அவ்வாறானவர்களிடம் ஆயதங்கள் ஒப்படைக்கப்பட்டதன் இன்றைய நிலையையும் அவர் நாசுக்காகச் சுட்டிக்காட்டினார். தனது குறுகிய நேர உரையில் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் தலைவர் உமா மகேஸ்வரனை குறைந்தது மூன்று தடவைகளாவது விதந்துரைத்திருந்தார். ஆனால் சமூக விஞ்ஞானக் கல்லூரியை உருவாக்கிய உமா மகேஸ்வரனும் கூட அற்ப அறிவுடையவர்களிடமே ஆயதங்களை ஒப்படைத்திருந்ததும் அவர்கள் படுகொலையாளர்களாக மாறியதும் வரலாறு.

மேலும் தமிழீழ சமூக விஞ்ஞானக் கல்லூரி கடவுள் கொள்கையை மறுத்திருந்தபோதும் அதனை உருவாக்கிய ராஜா நித்தியானந்தன் அங்கு கற்ற மாணவர்கள் சிலரும் இன்று ஆன்மீகத்தில் தடம் பதித்திருப்பது இன்னுமொரு முரண்நகை. ஐயப்பன் ஆலயத்தின் குரசாமி கிரிசாமியின் ஆசிஉரையுடள் நூல்வெயீட்டு நிகழ்வு ஆரம்பமானது.

இந்தக் கழுதை சுமந்த கவிதை அம்புலிமாமா கதைப்புத்தகம் போன்று அழகாக வடிவமைக்ப்பட்டு இருந்ததை மெச்சினார் வெளியீட்டுரையை வழங்கிய மாதவி சிவலீலன். காதலில் திளைத்தும் விடுதலைப் போராட்டம் என்று சென்று வந்து மார்க்ஸிஸக் கருத்துக்களை உதிர்த்தும் கவிதைகளை பல்வேறு தளங்களில் வடித்திருப்பதாக குறிப்பிட்ட மாதவி சிவலீலன், இக்கவிதைத் தொகுப்பு நவீன ஜனரஞ்சக இலக்கிய தேவையை பூர்த்தி செய்யும் வகையில் அமைந்திருந்ததாகத் தெரிவித்தார். யதாரத்தவாதி வெகுஜன விரோதியாகி விடுவது போல் சில கவிதைகள் அவருக்கு விரோதத்தை சம்பாதிக்கலாம் என்பதையும் மாதவி சிவலீலன் சுட்டிக்காட்டிச் சென்றார்.

நூலின் தலைப்பையும் அதில் சொல்லப்படும் பிராணியையும் வரலாற்று ரீதியாக ஆய்வுக்கு உட்படுத்தி ஆய்வாளர் மு நித்தியானந்தன் சகல சமூகங்களிலுமே கழுதை ஒரு கேவலமான பிராணியாகவே கடந்த 2000 ஆண்டுகளாக அதே கழுதை என்ற பெயருடன் சித்தரிக்கப்பட்டு வருவதாகக் கூறி தமிழில் கழுதையை இழிவுபடுத்தும் வகையில் அமைந்த பழமொழிகள் பலவற்றைச் சுட்டிக்காட்டினார். கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசணை. கழுதை கட்டெறும்பானது, … என பல உதாரணங்களைச் சுட்டிக்காட்டினார். கழுதை அவ்வளவு கேவலமான பிராணி அல்ல என்று குறிப்பிட்ட மு நித்தியானந்தன் கழுதை சுமந்த கவிதையின் அர்த்தத்தை வினவினார்? கழுதையை நூலாசிரியர் கேவலமாகக் கருதுகிறாhரா என்ற கேள்வி மு நித்தியானந்தனின் ஆய்வில் தொக்கி நின்றது. மன்னாரில் கழுதைக் காப்பகம் அமைக்கப்படுவதையும் அண்மையில் இந்தியாவில் காணாமல் போன கழுதைகளைத் தேடும் சர்ச்சையையும் சுட்டிக்காட்டி அந்தக் கழுதைகள் போல் நாங்கள் எல்லோரும் எதையோ சுமக்கின்றோம் என்பதைச் சுட்டிக்காட்டினார். இந்த சுமைகளை அறிவுகளை இல்லாமல் வாழ்க்கையை நாளாந்தம் சுதந்திரமாக அனுபவிக்க வேண்டும் எனக் குறிப்பிட்டார். நாங்கள் வெற்றுப் பாத்திரத்தில் எதையும் ஊற்றிக் குடிக்க வேண்டுமே ஒழிய ஏற்கனவே அதற்குள் உள்ள ஏதோ ஒன்றுக்குள் ஊற்றி அருந்துவது போல் வாழ்க்கை அமையக் கூடாது எனத் தெரிவித்தார்.

க பிரேம்சங்கரின் கவிதைத் தொகுப்பில் 25 வீதமான கவிதைகள் காதலைச் சொல்வதைச் சுட்டிக்காட்டிய ஆய்வாளர் மு நித்தியானந்தன் தனக்கு அவருடைய சங்ககாலக் காதலில் உடன்பாடில்லை என்றார். புலியை வேட்டையாடி அதன் பல்லைக் கொண்டுவந்து காதலிக்கு அணிவித்து தான் காதலை வெளிப்படுத்த வேண்டுமானால் நாங்கள் யாருமே காதலிக்க முடியாது என நகைச்சுவையாகத் தெரிவித்தார். இக்கவிதைத் தொகுப்பில் மாட்டுப் பொங்கலுக்கூடாக மிருகவதை பற்றி படைப்பாளியின் சிந்தனையைச் சுட்டிக்காட்டிய மு நித்தியானந்தன் மலையக மக்கள் பற்றிய கவிதையையும் விதந்துரைத்தார்.

போராடுவதற்காக தம்மை அர்ப்பணித்த அப்போராட்டம் சறுக்கிய போது வெளிநாட்டுக்கு வந்து வீழ்ந்த இந்தப் படைப்பாளியைப் போன்றவர்களால் இந்த மண்ணில் ஒட்ட முடியவில்லை. வேற்றுலக மனிதர்களாகவே வாழ்கின்றனர். சகோதரப்படுகொலைகளைக் கடந்து வந்த இவர்களின் காலத்திலேயே போடுதல், போட்டுத் தள்ளுதல், தகடு வைத்தல் போன்ற சொற்பதங்கள் எமது சமூகத்தில் உருவாகிறது. தந்தையொருவர் தனது மகனைத் தேடிச்சென்று முகாமில் விசாரிக்கின்ற போது, அவரைத் போட்டுட்டாங்கள் என்று சொல்லப்பட்ட போது அந்த தந்தைக்கு அது விளங்கவேயில்லை என்பதை மு நித்தியானந்தன் அங்கு சுட்டிக்காட்டினார்.

இத்தொகுப்பில் கவிதைகள் ஒழுங்குமறையில் தொகுக்கப்படவில்லை என்பதைச் சுட்டிக்காட்டிய நித்தியானந்தன் நூல் பற்றிய விபரங்கள் ஆங்கிலத்தில் வருவதன் அவசியத்தையும் விளக்கினார். அவ்வாறு நூல்விபரம் ஆங்கிலத்திலும் இருந்தாலேயே இலங்கையிலோ இலங்கைக்கு வெளியிலோ நூலகங்களில் இந்நூல் பதிவுக்கு உட்படுத்தப்படக் கூடியதாக இருக்கும் என்றார். மேலும் நூலில் ஓவியங்கள் காத்திரமானவையாக உள்ளதைச் சுட்டிக்காட்டிய அவர் அவ்வோவியங்களை வரைந்தவர்களின் பெயர்கள் குறிப்பிடப்படுவதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்.

மேற்கு லண்டன் தமிழ் பள்ளியின் அதிபர் செல்வராஜா உரையாற்றுகையில் மனிதவதை பற்றி மிக இறுக்கமாகக் குறிப்பிடும் படைப்பாளர் திபாவளியைக் கொண்டாடுங்கள் ஆனால் கொன்று கொண்டாடாதீர்கள் என்று வேண்டிக்கொள்வதைச் சுட்டிக்காட்டினார். இலக்கியச்சுவை காதல்சுவை காமச்சுவை நகைச்சுவை நிறையவே இருக்கின்றது ஆனால் ஆங்கிலப் பதங்களை சொற்பிழைகளைத் தவிர்த்திருக்கலாம் எனத் தெரிவித்தார்.

நாடகக் கலைஞர் சரத் சந்திரன் கவிநயத்தோடு பேசுகையில் வாசித்து வாசித்து கவிதை கொண்டு தன் தேடலுக்கு அணை கட்டியதாகத் தெரிவித்தார். வாழ்வின் பல பக்கங்களையும் படைப்பாளர் தட்டியதைச் சுட்டிக்காட்டிய சரத் சந்திரன் வடிவமைப்பின் கவர்ச்சியும் அதற்கான ஓவியங்களும் சொற்களின் வீரியத்தைக் குறைத்து விடுமோ என்று எண்ணத் தோண்றியதாகக் குறிப்பிட்டார்.

கிங்ஸ்ரன் கொன்சவேடிவ் கட்சி கவுன்சிலர் நந்தா பரம் கவிதை; தொகுப்பு பேசுகின்ற அரசியலுக்குள் சற்று ஆழமாகவே ஊடுருவிச் சென்றார். கொன்சவேடிவ் கட்சியின் கவுன்சிலராக இருந்த போதும் அவருடைய அரசியல் பார்வை முற்றிலும் அதன் கருத்தியல் நிலைப்பாட்டுக்கு முரணாணதாக இருந்தது. “கருத்தை கருத்தால் எடுத்தியம்ப வேண்டும் கசையடியாலல்ல…” என்ற கவிதையை மேற்கோள் காட்டிய நந்தா பரம் பிரேம்சங்கர் ஏன் உண்மையை மறைக்கிறார். அங்கு கசையடியா நடந்தது. உண்மையில் என்ன நடந்தது. ஆனந்தராஜா, ராஜினி ஆகியோரை இழந்திருக்க தேவையில்லை என்றார். தமிழீழ விடுதலைப் புலிகளால் படுகொலை செய்யப்பட்ட கல்விமான்களான அதிபர் ஆனந்தராஜா, யாழ் பல்கலைக்கழக மருத்துவ உடற்கூற்றியல் சிரேஸ்ட்ட விரிவுரையாளர் ராஜினி திரணகம ஆகியோரையே கவுன்சிலர் நத்தா பரம் அவ்விடத்தில் சுட்டிக்காட்டி இருந்தார்.

படைப்பாளியின் மாட்டுப்பொங்கல் பற்றிய கவிதையை இன்றைய முதலாளித்துவ சமூகத்தோடு ஒப்பிட்டு நந்தா பரம் வழங்கிய மதிப்பீடு அசத்தலாக அமைந்தது. வருடம் முழுவதும் மாட்டை சுரண்டி உழைக்கும் மனிதன் மாடு கன்று ஈன்றபின்னும் கன்றை மாட்டுக்கருகில் கட்டி வைத்து பால்சுரக்க வைத்து அதனையும் கறந்துவிடுகின்றான். அதற்காக வருடத்தில் ஒருநாள் மாட்டுக்கு பொங்கல் வைத்து மாட்டையும் ஏமாற்றி விடுகின்றான். இதே போல் தான் முதலாளி வர்க்கமும் தொழிலாளியைச் சுரண்டி அவன் உழைப்பை கறந்துவிட்டு போனஸ் கொடுத்து ஏமாற்றி விடுகின்றான் என்று நந்தா பரம் சுட்டிக்காட்டி கவிதைத் தொகுப்பை விதந்துரைத்தார். படைப்பாளியின் ஜீவராசிகள் மீதான காருண்யத்தையும் கவுன்சிலர் நந்தா பரம் தன்னுரையில் கோடிட்டுக் காட்டினார்.

ஆழகானவை எல்லாம் மனதுக்கு பிடிப்பதில்லை ஆனால் மனதுக்கு பிடித்தமானவை எல்லாம் அழகாகத் தோன்றும் என கழுதை சுமந்த கவிதைத் தொகுப்புப் பற்றி குறிப்பிட்டவர், மாற்றுக் கருத்துக்கு மரணமோ தீர்வு! என்ற படைப்பாளியின் ஆதங்கத்தை பொறுப்புடன் குறிப்பிட்டார். இவ்வாறான போர்க்கால வீரியம் மிகு கவிதைகள் ஈழத்திலேயே சாத்தியம் எனவும் குறிப்பிட்டார்.

வாசிப்பவர்களை பழைய நினைவுகளுக்கே கொண்டு செல்லும் இக்கவிதைத் தொகுப்பில் உள்ள கவிதைகளுக்கு ஒரு உள்ளடக்கம் வைத்திருக்க வேண்டும் என்று சொல்லி தன்னுரையை நிறைவு செய்தார் நிவஜோதி யோகரட்ணம்.

“இந்தக் கழுதையை அது சுமந்த கவிதையை அதன் கனவுகளை எல்லாம் எனக்கு நன்கு தெரியும்” என்று கவிநயத்தோடு தன்னுரையை ஆரம்பித்தார் படைபாளனின் பள்ளித் தோழன் ஜெகத் லக்ஷன். 1979இல் யாழ் இந்துக் கல்லூரியில் உருவான நட்பு நாற்பது ஆண்டுகளக் கடந்தும் பயணிக்கின்ற கதையை “கழுதை சுமந்த கவிதை” விமர்சனத்தினூடாக இன்னொரு கழுதையாக பயணித்த கதையை லக்ஸ்மன் தன்னுரையினூடாகக் கொண்டு வந்தார். தம்பையா மாஸ்ரரின் பின் வரிசைப் பிரமுகர்களில் ஒருவரான இந்தப் படைப்பாளிக்கு கம்பராமாயணம் மிகத் தெளிவாகத் தெரிந்தாலும் ‘கொங்கை’ க்கு விளக்கம் தெரியாமல் தவித்து, பிறகு பார்த்தால் மட்ராஸில் சமூக விஞ்ஞான கல்வி படித்ததாகக் கேள்விப்பட்டேன் என அன்றைய வாழ்க்கை போராட்டமானதைச் சுட்டிக்காட்டினார். அங்கு போராட்ட இலங்கியங்கள் படித்து சிவப்புப் புத்தகங்கள் படித்தது தான் மிச்சம் கப்பல் கடைசிவரை வரவில்லை என்றவர் எந்தக் கப்பல் வரவில்லை என்று கடைசிவரை குறிப்பிடவில்லை.

மீண்டும் 1991 இல் லண்டனில் தன் நண்பரைச் சந்தித்ததை நினைவுகூர்ந்த லக்ஷன் 1995இல் கவிதைத்தொகுப்பை வெளியிட எடுத்த முயற்சி பலனளிக்கவில்லை. வாடகை வீடுகள் மாறியதில் கவிதைகளும் தொலைத்த சோகக் கதையைக் கூறினார். அதன் பின்னும் ஒரு கட்டுக்கவிதைகளோடு வந்து நின்றபோது வெளியிட தன்னால் முடியவில்லை என்பதைச் சுட்டிக்காட்டியவர் ஏன் என்பதை தொக்கில் விட்டுவிட்டார். தற்போது வெளிவந்துள்ள கவிதைத் தொகுப்பில் தன்னிடம் தந்த கவிதைக்கட்டில்லிருந்த ஒரேயொரு கவிதையே இதில் உள்ளது என்பதை அழுத்தம் திருத்தமாக லக்ஷன் குறிப்பிட்டார்.

பிக்பொஸ் பார்க்க நிறைய நேரம் செலவழிக்கும் நாம் பிக்பொஸ்ஸாக யோசிக்க மாட்டோம் என்கிறோம் என மனவருத்தப்பட்டுக்கொண்ட லக்ஷன், மேலும் மேலும் படைப்புகள் எம்மத்தியில் இருந்து வரவேண்டும் என்று கேட்டுக்கொண்டு தன்னுரையை நிறைவு செய்தார்.

பேனா நண்பராக ஏற்பட்ட நட்பு சமூக விஞ்ஞானக் கல்லூரியில் சந்தித்து லண்டனில் இன்று வரை தொடர்வதை தயாமயூரன் நினைவு கூர்ந்தார். சமகாலத்தில் விடுதலைக்காகப் புறப்பட்ட தாங்கள்; மனிதநேயம் உயிர் நேயம் கொண்டு துன்பங்கள் துயரங்கள் கடந்து பயணத்தைத் தொடர்வதை தயாமயூரன் நினைவுகூர்ந்தார். தயாமயூரனும் சிறந்த முறையில் கவிதை புனைபவர் என்று குறிப்பிட்ட ராஜா நித்தியானந்தன் அவரும் தனது கவிதை நூலைக் வெளியிட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இப்போது எம்மோடு இல்லாத எனது சகோதரன் வசந், பிரேம்சங்கர், தயாமயூரன் ஆகியோர் சமகாலத்தில் தமிழீழ சமூக விஞ்ஞானக் கல்லூரியில் பயின்றவர்கள். இந்த நூல் வெளியீட்டுக்கு என்னை அழைத்தபோதும் எனது சகோதரனின் சார்பாக என்னை வரும்படியே பிரேம்சங்கர் அழைத்து இருந்தார். நட்பு இரத்த உறவுகளுக்கும் மேலானதாக அமைந்துவிடுகின்றது. அதுவும் போராட்ட அமைப்புகளில் கருக்கொள்ளும் நட்புகள் இரத்தமும் சதையுமாகிவிடுகின்றது. இக்கவிதைத் தொகுப்பு நிகழ்விலும் அதனைக் காணமுடிந்தது.

இறுதியாக உரையாற்றிய வேணுகோபால் இந்நட்பை விதந்துரைத்திருந்தார். நல்ல நண்பர்கள் அமைவதன் அவசியத்தை வலியுறுத்தி இருந்தார். “கவிக்கூத்தன் பிரேம் ஒரு கம்பன் கவிதை எழுதுவதில் அவன் ஒரு வம்பன்” என்று குறிப்பிட்ட வேணுகோபால், “அடைந்தால் மகாதேவி இல்லாவிட்டால் மரணதேவி அல்ல அடுத்த தேவி” என்ற கவிதையைச் சுட்டிக்காட்டி கவிஞ்ஞனுக்கு பொய்யும் அழகு என்று குறிப்பிட்டு தன்னுரையை முடித்துகொண்டார்.

அதனைத் தொடர்ந்து ஜெஸ்ரீ என்பவர் “கழுதை சுமந்த கவிதை” க்கு ஒரு கவிதை தந்தார்.

இறுதியாக ஏற்புரை வழங்கிய கவிக்கூத்தன் பிரேம்சங்கர் இலங்கையின் இலக்கிய வரலாற்றில் இடம்பிடிக்க வேண்டும் என்ற ஆவால் இப்போது தனக்கு ஏற்பட்டு இருப்பதாகவும் இனிமேல் இன்னும் தரமாக கவிதைகளை தர வேண்டும் என்ற பொறுப்புணர்வு ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார். நாம் மட்டும் அல்ல எமது பிள்ளைகளையும் அவர்களுக்கு பரீட்சயமான மொழியிலேயே எழுதத் தூண்ட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டு நிகழ்வை நிறைவுக்கு கொண்டுவந்தார்.

150 பேருக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்ட மண்டபம் நிறைந்த கவிக்கூத்தன் க பிரேம்சங்கரின் கவிதைத் தொகுப்பு வெளியீட்டு நிகழ்வு ஹரோ ஐயப்பன் ஆலயத்தில் மிகச்சிறப்பாக நடைபெற்றது. கலை, இலக்கிய, அரசியல் ஆர்வலர்கள் பலரும் கலந்துகொண்ட நிகழ்வு கோவிட் கால முடக்கத்திற்குப் பின் இடம்பெற்ற மிகச்சிறப்பான கலை, இலக்கிய, அரசியல் நிகழ்வாக அமைந்தது. முரண்பட்ட கருத்துக்கள் கொண்ட பல்தரப்பினரும் கலந்து நிகழ்வைச் சிறப்பித்தனர். மேலும் புதிய பேச்சாளர்கள் பலரும் கலந்துகொண்டு கவிதைத்தொகுப்பு வெளியீட்டை கவித்துவத்தோடு நிகழ்த்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

சமூக விஞ்ஞானக் கல்லூரி (T3S) மாணவனும் முன்னாள் போராளியுமான க பிரேம்சங்கரின் ‘கழுதை சுமந்த கவிதை’ நூல் வெளியீடு

தனது பள்ளிப் பராயக் கனவை நனவாக்கும் வகையில் தனது வாழ்க்கை அனுபவங்களை சிறு கவிதைகளாக தொகுத்து ‘கழுதை சுமந்த கவிதை’ என்ற தலைப்பில் வெளியிடுகின்றார் கவிக்கூத்தன் க பிரேம்சங்கர். இளம் பிராயம் முதல் அவர் கிறுக்கிய கவிதைகளை அவர் தனது பதின்ம வயதிலேயே வெளியிட ஆசைப்பட்டாலும் இப்போது தான் அது சாத்தியமாகியுள்ளது. “தொலைக்கப்பட்ட எழுத்துக்களை தோண்டி எடுக்கிறேன் நெஞ்சு வலிகளோடு வருகின்றது…” என்று அவர் இந்நூல் பற்றிய குறிப்பில் பதிவு செய்கின்றார்.

நூல் வெளியீடு பற்றிய விபரம்:
காலம்: January 23, 2022
நேரம்: மாலை 4:00 மணி முதல் 7 மணி வரை
இடம்: London Ayyappan Temple Hall, 36 Masons Avenue, Harrow, HA3 5AR

யாழ் சுன்னாகம் நாகேஸ்வரி வித்தியாலயத்தில் ஆரம்பக் கல்வியும் பின் யாழ் இந்துக் கல்லூரியில் உயர்கல்வியும் கற்ற கவிக்கூத்தன் பிரேம்சங்கர் எண்பதுக்களில் எழுச்சி பெற்ற விடுதலையுணர்வால் உந்தப்பட்டு தமிழ் மக்களின் விடுதலைக்காக தங்களை அர்ப்பணிக்க முன் வந்த ஆயிரம் ஆயிரம் இளைஞர்களில் ஒருவர். தமிழ் மக்களுக்கு விடுதலை வேண்டி தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தில் இணைந்து கொண்ட க பிரேம்சங்கர், சென்னையில் உருவாக்கப்பட்ட சமூக விஞ்ஞான கல்லூரியில் சமூக அரசியல் பொருளாதாரம் கற்றவர்.

அனுவம் என்பதே அறிவு. அந்த வகையில் க பிரேம்சங்கரின் வாழ்க்கை அனுபவம் என்பதும் ஒரு அருமையான புத்தகமாக அமையும். அதனை சிறு கவிதைகளாக தொகுத்து இருப்பது அவருடைய வாழ்வின் பிரதிபலிப்பாக அமையும் என்பதில் ஐயம்மில்லை. “பல இளமைக்காலக் கவிதைகள் தொலைந்தாலும்… முதுமையில் மீண்டும் முத்துக்குளித்திருக்கிறேன்” என்று இந்நூல் உள்ளடக்கம் பற்றி குறிப்பிடுகின்றார். “கற்பனை, நிசம் அனுபவமாகின்றது! இங்கு வரிகளாகிறது” என்று குறிப்பிடும் அவர் “நரை விழுந்த காலம் என்றாலும் உரைக்கிறது எழுதுகோல்” என்று தான் இந்நூலை கொண்டுவந்ததன் பின்னணியைக் குறிப்பிடுகின்றார்.

கவிக்கூத்தன் க பிரேம்சஞ்கரும் எனது சகோதரனும் சமூக விஞ்ஞானக் கல்லூரியில் – Thamileelam Social Science School (T3S) ஒன்றாகக் கற்றவர்கள். உற்ற நண்பர்கள். அதனால் நான் லண்டன் வருவதற்கு முன்னரே குடும்ப நண்பரானவர். லண்டன் வந்தபின் அந்த சகோதரத்துவமும் நட்பும் இன்றும் நிலைக்கின்றது.

கவிக்கூத்தன் க பிரேம்சஞ்கரின் வாழ்க்கை அனுபவம் என்பது பன்முகப்பட்டது. படைப்புகள் ஆக்க இலக்கியங்கள் அக்காலத்தினை பிரதிபலிக்கக் கூடிய கண்ணாடிகள். அந்த வகையில் இந்தக் ‘கழுதை சுமந்த கவிதை’ நூல் எமது வரலாற்றின் ஒரு கூறைச் சுமந்து வரும் என்ற ஆவலோடு இந்நூல் வெளியீட்டில் கலந்துகொள்ள உள்ளேன். கவிக்கூத்தன் க பிரேசம்சங்கர் வெவ்வேறு படிநிலைகளில் தன் வாழ்வைக் கடந்து செல்கின்றார். ஒரு துடிப்புள்ள இளைஞனாக போராளியாக பிற்காலத்தில் ஆன்மீகத்தின் வழித்தடங்களில் என்று அவருடைய பயணம் தொடர்கின்றது. நிச்சயமாக ‘கழுதை சுமந்த கவிதை’ எம்மைச் சிந்திக்க வைக்கும்.

நூல் வெளியீடு பற்றிய விபரம்:
காலம்: January 23, 2022
நேரம்: மாலை 4:00 மணி முதல் 7 மணி வரை
இடம்: London Ayyappan Temple Hall, 36 Masons Avenue, Harrow, HA3 5AR

 

 

புத்தாக்க அரங்க இயக்கம் 2021 சிறந்த நாடக அமைப்பிற்கான விருதையும் ரூபாய் ஒரு லட்சம் பரிசையும் வென்றது!

சிறந்த தமிழ் நாடக அமைப்பிற்கான 2021 சிவஜோதி ஞாபகார்த்த விருதை புத்தாக்க அரங்க இயக்கம் வென்றெடுத்தது. இவ்விருதுடன் ரூபாய் ஒரு இலட்சம்நிதியும் அவ்வமைப்பின் ஸ்தாபகர்களான எஸ் ரி குமரன் எஸ் ரி அருள்குமரன் சகோதரர்களிடம் கையளிக்கப்பட்டது. இன்று நவம்பர் 18 வயித்தீஸ்வரன் சிவஜோதியின் 50வது பிறந்ததினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட சிவஜோதி ஞாபகார்த்த விருது வழங்கலும் அவருடைய ‘என் எண்ண ஓட்டத்தில் …’ என்ற நூல் வெளியீட்டு நிகழ்விலும் வைத்தே இவ்விருது அறிவிக்கப்பட்டது. இவ்விருது அறிவிப்பை எழுத்தாளர் கருணாகரன் அறிவிக்க நாடகக் கலைஞரும் அருட்தந்தையுமான சி யோசுவா விருதை வழங்கினார்.

ஒரு ஆளுமையை அவனது மறைவுக்குப் பின் நினைவு கூருவதும் அவனின் செயற்பாடுகளைக் கொண்டாடுவதும் தான் அவனுக்கு அளிக்கக்கூடிய உயர்ந்தபட்ச கௌரவம் என்று வ சிவஜோதியின்யின் பள்ளித் தோழனும் லிற்றில் எய்ட் அமைப்பின் ஸ்தாபகருமான த ஜெயபாலன் காணொளியூடாக நிகழ்வில் தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில் சிவஜோதி ஒரு பன்முக ஆளுமையாக இருந்தாலும் நாடகத்துறையில் அதீத நாட்டத்தைக் காட்டியமையினால் சிறந்த நாடக அமைப்பிற்கு அல்லது நாகக் கலைஞருக்கு ஆண்டுதோறும் விருது வழங்குவது என்ற தீர்மானத்தை எடுத்ததாகவும் அவர் குறிப்பிட்டார். ஒரு சைவப் பாரம்பரியத்தில் இருந்து வந்த வ சிவஜோதி சமூகத்தின் பிற்போக்குத்தனங்களுக்கு எதிராகவும் சமூக நீதிக்காகவும் குரல்கொடுத்து வந்தவன் என்றும் அதேயடிப்படையில் புத்தாக்க அரங்க இயக்கமும் மூடநம்பிக்கைகளுக்கு எதிராகவும் சமூக நீதிக்காகவும் தங்கள் படைப்புகளை உருவாக்கி வருவதால் அவர்களுக்கு இவ்விருதை வழங்குவதில் பெருமைப்படுவதாகக் குறிப்பிட்டார்.

இந்நிகழ்வில் சிவஜோதி எழுதிய கட்டுரைகளை அவருடைய துணைவி ஹம்சகௌரி சிவஜோதி தொகுத்திருந்த ‘என் எண்ண ஓட்டத்தில்…’ என்ற நூலும் வெளியிடப்பட்டது. நூலுக்கான வெளியீட்டுரையை சிவஜோதியின் நண்பனும் சிரேஸ்ட்ட கிழக்கு மாகாண கலை கலாச்சார ஆய்வாளர் குணபாலா வழங்கினார். சிவஜோதியின் தந்தை நூலைப் பெற்றுக்கொண்டார். மதிப்பீட்டுரையை ஆசிரியரும் மக்கள் சிந்தனைக் கழகத்தைச் சேர்ந்தவருமான க விஜயசேகரன் வழங்கினார்.

ஓய்வுபெற்ற கல்விப் பணிப்பாளர் சி இதயராசா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பதில் நீதிபதியும் தேசிய கலை இலக்கிய பேரவையின் முக்கியஸ்தருமான சோ தேவராஜா சிறப்புரை வழங்கினார். சிவஜோதி என்ற ஆளுமையின் உருவாக்கத்தில் சோ தேவராஜாவுடைய தாக்கம் குறிப்பிடத்தக்கது. சமத்துவக் கட்சியின் பொதுச் செயலாளர் மு சந்திரகுமார் சிவஜோதியின் நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார்.

லிற்றில் எய்ட் மாணவர்கள் 75 பேருக்கான பள்ளிச் சீருடைகளை சிவஜோதி கல்வி கற்ற விக்ரோரியாக் கல்லூரியின் பழைய மாணவர்கள் சார்பில் சி குணபாலா திருமதி சிவஜோதியிடம் கையளித்தார். கொழும்பு எம் எம் மனேஸ்மன்ற் சேர்விஸஸ் பிரைவேட் லிமிடட் லிற்றில் எய்ட் மாணவர்களுக்கு வேண்டிய அப்பியாசக் கொப்பிகளை வழங்கினர்.

லிற்றில் எய்ட் உடன் இணைந்து மக்கள் சிந்தனைக் கழகமும் ஏற்பாடு செய்திருந்த இந்நிகழ்வை ஆசிரியரும் மக்கள் சிந்தனைக் கழகத்தவருமான ப தயாளன் தொகுத்து வழங்கினார்.

கோவிட் நெருக்கடி காலநிலையிலும் சமூக இடைவெளியைப் பேணி 200 பேர்வைர இந்நிகழ்வில் கலந்துகொண்டு சிவஜோதியின் நினைவுகளை மீட்டனர்.

‘என் எண்ண ஓட்டத்தில்…’ நூல் வெளியீடும்! ‘சிவஜோதி நினைவுப் பரிசு’ (ஒரு லட்சம் ரூபாய்) – அறிவிப்பும்!

‘என் எண்ண ஓட்டத்தில்…’ என்ற தலைப்பில் அமரர் சிவஜோதி வயீத்தீஸ்வரனின் ஆக்கங்களின் தொகுப்பு வருகின்ற 18ம் திகதியன்று கிளிநொச்சி லிற்றில் எய்ட் மண்டபத்தில் நடைபெறவுள்ளது. லிற்றில் எய்ட் திறன் விருத்தி மையத்தின் இணைப்பாளராகப் பணியாற்றி குறுகிய காலத்தில் அம்மண்ணின் மைந்தனான சிவஜோதியின் 50வது பிறந்ததினத்தையொட்டி இந்நூல் வெளியீடு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. சிவஜோதியின் பிறந்த தினமான நவம்பர் 18 இலேயே இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சிவஜோதி எழுதிய கட்டுரைகள், மேற்கொண்ட நேர்காணல்கள், நூல் விமர்சனங்கள், ஆகியவற்றின் தொகுப்பாக இந்நூல் வெளியிடப்படுகின்றது. தேசம் வெளியீடாக வரும் இந்நூலை திருமதி ஹம்சகௌரி சிவஜோதி தொகுத்துள்ளார். நாடகக் கலை, நாடகக் கலைஞர்களுடனான நேர்காணல், பேராசிரியர் கா.சிவத்தம்பி மற்றும் பேராசிரியர் வசந்தி அரசரட்ணம் ஆகிய கல்வியியலாளர்களின் நேர்காணல்கள் என பல்வேறு வகையான ஆக்கங்களையும் தாங்கி இந்நூல் வெளிவருகின்றது.

சிவஜோதியை ஆண்டுதோறும் நினைவு கூருகின்ற வகையில் சிவஜோதி நினைவுப் பரிசு ஒன்றை வழங்கவும் சிவஜோதி நினைவுக்குழு தீர்மானித்துள்ளது. மேலும் சிவஜோதி ஒரு நாடகக் கலைஞர் என்பதாலும்; நாடகக் கலையில் தீவிர ஆர்வத்தைக் கொண்டிருந்ததாலும் நாடகக் கலைக்காக தங்களை அர்ப்பணித்த ஒரு கலைஞருக்கு அல்லது நாடகக் கலைக்கு சேவையாற்றுகின்ற அமைப்பு ஒன்றுக்கு ஒரு லட்சம் ரூபாய் சன்மானம் வழங்கவும் தீர்மானிக்கப்பட்டு உள்ளது. அதன்படி சன்மானத்தை பெறுகின்றவருக்கு அல்லது அமைப்புக்கு அந்நிகழ்வில் ஹம்சகௌரி சிவஜோதி ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்குவார்.

இந்நிகழ்வில் சிவஜோதி நினைவாக லிற்றில் எய்ட் இல் கற்கும் மாணவ மாணவியருக்கு யாழ் விக்ரோரியாக் கல்லூரி பழைய மாணவர்கள், அவர்களுக்கு வேண்டிய பாடசாலை சீருடைகளை வழங்க உள்ளனர். சிவஜோதி யாழ் சுழிபுரம் விக்ரோரியாக் கல்லூரியின் மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது.

சிவஜோதியின் நினைவு நிகழ்வுகளை ஆண்டுதோறும் மேற்கொள்ளவும், நாடகக் கலைக்கு உழைக்கின்றவர்களையும் அமைப்புகளையும் கௌரவிக்கும் வகையிலும் ஆண்டுதோறும் சிவஜோதி நினைவுப்பரிசை வழங்கவும் சிவஜோதி நினைவுக்குழு தீர்மானித்து உள்ளது. அதற்காக சிவஜோதி ஞாபகார்த்த நிதியம் ஒன்று லிற்றில் எய்ட் இல் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. சிவஜோதி நேசித்த நாடகக் கலைக்கு ஊக்கமும் ஆக்கமும் அளிக்க முன்வருபவர்கள் இந்நிதியத்திற்கு நிதி வழங்குவதன் மூலம் அதனைச் செய்ய முடியும்.

சிவஜோதி ஞர்பகார்த்த நிதியத்துக்கு நிதி வழங்க விரும்புபவர்கள் கீழுள்ள வங்கிக் கணக்கிற்கு தங்கள் நிதியை வழங்க முடியும்.
வங்கி: HNB
கணக்கின் பெயர்: Little Aid Skill Development Centre (Gurantee) Limited
வங்கிக் கணக்கு இலக்கம்: 146020176746

இவ்வாண்டுக்கான சிவஜோதி நினைவுப் பரிசைப் பெறும் நாடகக் கலைஞர் அல்லது நாடக்குழு நவம்பர் 18 அன்று அறிவிக்கப்படும்.

இந்நிகழ்வில் அனைவரையும் கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு சிவஜோதி ஞாபகார்த்த குழு அழைப்புவிடுத்துள்ளது. இந்நிகழ்வை சிவஜோதி முன்நிலை உறுப்பினராக இருந்து இயக்கிய மக்கள் சிந்தனைக் கழகம் மற்றும் லிற்றில் எய்ட் அமைப்பு என்பன இணைந்து ஏற்பாடு செய்துள்ளன.

– சிவஜோதி ஞாபகார்த்த குழு –