இரா.சம்பந்தனை பொன்னாடை போர்த்தி சந்தித்த மகிந்த – பதவியில் இருந்த போது தீர்க்க முன்வராத இனப்பிரச்சினையை தீர்க்க ரணில் விக்கிரமசிங்கவிடம் பேசுவதாகவும் உறுதி !

இலங்கையில் பல தசாப்தங்களாக நீடிக்கும் தமிழர்களின் இனப் பிரச்சினைக்கான பேச்சுக்கள் பேசுபொருளாகியுள்ள நிலையில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுடன் இன்று இடம்பெற்ற சந்திப்பு முன்னேற்றகரமான ஒன்றாக அமைந்திருந்ததாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளமை அனைவரினது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தனின் இல்லத்திற்குச் சென்று நலம் விசாரித்ததுடன் தமிழ்த் தேசியப் பிரச்சினை குறித்தும் கலந்துரையாடினார்.

இதன்போது வடக்கு, கிழக்கில் தமிழர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் தமிழ்த் தேசியப் பிரச்சினை போன்றவற்றை முன்வைத்த சம்பந்தன், வடக்கு கிழக்குப் பிரச்சினைக்கு அரசாங்கம் விரைவில் தீர்வு காண வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

வடக்கு கிழக்கு பிரச்சினைகள் தொடர்பில் ஜனாதிபதி மற்றும்  அரசாங்கத்துடன் கலந்துரையாடி இணக்கமான தீர்வை எட்டுவதற்கு முயற்சிப்பதாக மஹிந்த ராஜபக்ச சம்பந்தனிடம் உறுதியளித்தார்.

இந்த நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும்,  ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் இடையில் நாளை வியாழக்கிழமை விசேட சந்திப்பொன்று நடைபெறவுள்ளது.

இதே நேரம் மஹிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக இருந்த காலகட்டங்களிலும் சரி – மஹிந்த ராஜபக்சவின் சகோதரர் கோட்டபாய ராஜபக்ச ஜனாதிபதியாக பணியாற்றிய காலகட்டங்களிலும் சரி இனப் பிரச்சனையை தீர்ப்பதற்கான சாத்திய கூறுகள் காணப்பட்ட போதும் கூட தமிழ் தேசிய அரசியல் கட்சிகளை சந்திப்பதற்கு கூட ராஜபக்ச தரப்பு பெரிதாக அக்கறை காட்டியிராத நிலையில் உள்ளூராட்சி தேர்தல்கள் நெருங்குகின்ற இந்த நேரத்தில் மஹிந்த ராஜபக்ஷ சம்பந்தனை சந்தித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *