Multiple Page/Post

புலிகளின் நான்காவது விமான ஓடுபாதையை இராணுத்தினர் கைப்பற்றினர் ! -இராணுவ பேச்சாளர்

_army.jpgமுல் லைத்தீவில் முள்ளியவளைக்கு வடமேற்கே சுமார் ஆறரை கிலோ மீட்டர் தொலைவில் விடுதலைப்புலிகளின் நான்காவது விமான ஓடுபாதையை இராணுத்தினர் கைப்பற்றியிருப்பதாக இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார். இரண்டரை கிலோ மீற்றர் நீளமும் நூறு மீற்றர் அகலமும் கொண்ட இப்பாதை இன்று சனிக்கிழமை காலை படையினரால் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.

பிரிகேடியர் உதய நாணயக்கார மேலும் தெரிவித்ததாவது:  இந்த ஓடு பாதையில் இரண்டு விமானங்கள் நிறுத்தி வைப்பதற்காகன ஷெட்டுகள் அமைக்கப்பட்டிருந்தன. அத்துடன் அங்கு அமைக்கப்பட்டிருந்த கட்டிடங்களில் ஒரு இடத்தில் விமானக் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டிருந்தது. அப்பகுதிகளில் பெருமளவிலான கண்ணிவெடிகள் புதைத்து வைக்கப்பட்டிருப்பதால் இராணுவத்தினர் மெதுவாக முன்னேறி வருகின்றனர் என்றார்.
 

வடக்கு ,கிழக்கு விடுதலைப் போராட்டம் மலையக மக்களின் விடிவுக்கு உறுதுணையாக அமையும் – கூட்டமைப்பு எம்.பி.ஸ்ரீகாந்தா

sl-parlimant.jpgஅர சாங்கத்தின் ஒட்டுண்ணிகளாக செயற்பட்டுக்கொண்டிருக்கும் மலையகக் கட்சிகளை மலையக மக்கள் தூக்கியெறியும் போது தான் அம்மக்களுக்கு விடிவு கிடைக்குமென்று தெரிவித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான என். ஸ்ரீகாந்தா, மலையக மக்களின் விடிவுக்கு வடக்கு, கிழக்கு விடுதலைப் போராட்டம் உறுதுணையாக இருக்குமென்றும் கூறினார். பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற நாடற்ற மக்களுக்கு பிரஜாவுரிமை வழங்கல் சிறப்பேற்பாடுகள் திருத்தச் சட்டமூலம் மீதான விவாதத்தில் பேசும் போதே ஸ்ரீகாந்தா இவ்வாறு கூறினார்.

அவர் இங்கு மேலும் பேசுகையில்; இந்த நாட்டில் மட்டுமல்லாது ஆசிய ரீதியிலும் உலகளாவிய ரீதியிலும் மிக மோசமாக வஞ்சிக்கப்பட்ட மக்கள் பிரிவு அல்லது சமூகமென ஒன்றை அடையாளம் காட்டுவதென்றால் அது மலையக தமிழ் தொழிலாள வர்க்கத்தினராகவே இருக்கும். அமெரிக்காவுக்கு கப்பல் மூலம் வரும் நெருக்குவாரங்களுக்கு மத்தியில் ஏற்றிச் செல்லப்பட்ட ஆபிரிக்க நீக்ரோகளை அடுத்ததாக எமது மலையக மக்களை குறிப்பிடலாம். மோசமாக வஞ்சிக்கப்பட்ட, ஏமாற்றப்பட்ட சமூகம் இது.

1948 ஆம் ஆண்டு மலையக மக்களின் பிரஜாவுரிமை பறிக்கப்பட்டது. அதன் பின்னர் மீண்டும் அம்மக்களுக்கு பிரஜாவுரிமை கிடைத்ததை அடுத்தே மலையக கட்சிகள் பாராளுமன்றத்துக்கு வந்தன. மலையக கட்சிகள் அரசாங்கத்தின் ஒட்டுண்ணிகளாக இருந்து கொண்டு மலையக மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கின்றனர். மலையக மக்கள் என்று இவ்வாறான கட்சிகளை தூக்கி எறிகின்றனரோ அன்று தான் அந்த மக்களுக்கு விடிவு கிடைக்கும்.  அத்துடன் வடக்கு, கிழக்கு விடுதலைப் போராட்டமானது மலையக மக்களின் விடிவுக்கு உறுதுணையாக இருக்கும் என்றார்.

எரிபொருள் நிலைய உரிமையாளர் சுட்டுக் கொலை

gun_.jpgகாத் தான்குடிப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாவற்குடாப் பகுதியிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலைய மொன்றின் உரிமையாளர் நேற்று அதிகாலை இனம் தெரியாத ஆயுததாரிகளினால் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார்.

தம்பிராசா ரவீந்திரன் (50) எனப்படுமிவர் எரிபொருள் நிரப்பும் நிலையத்திலிருந்தபோது மோட்டார் சைக்கிளில் சென்ற இனம் தெரியாத இருவர் இவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்துவிட்டுச் சென்றுள்ளனர். இவரது சடலம் தற்போது மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

15 இலங்கை மீனவர்கள் இந்திய காவல் படையினரால் கைது

handcuff.jpgஇந்திய கடல் எல்லையில் மீன் பிடித்த இலங்கை மீனவர்கள் 15 பேரை கடலோர காவல் படையினர் வியாழக்கிழமை கைது செய்தனர். அவர்கள் வந்த இரு படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டன. இலங்கை தலைமன்னார் பகுதியைச் சேர்ந்த 15 மீனவர்கள் இந்திய கடல் எல்லையில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது அந்த வழியாக இந்திய கடலோர காவல் படையினர் ஹோவர் கிராப்ட் கப்பலில் ரோந்து சென்ற போது அவர்களைக் கைது செய்து மண்டபம் கடலோர காவல்படை அலுவலகத்துக்கு கொண்டு வந்தனர். அவர்கள் வந்த இரு படகுகளையும் , அதில் இருந்த என்ஜின்களையும் பறிமுதல் செய்தனர். அங்கு கியூ பிரிவு பொலிஸாரும் இலங்கை மீனவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். கைது செய்யப்பட்ட 15 பேரும் மண்டபம் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டனர

பயண மார்க்கங்களை தடை செய்தமைக்கு எதிராக சட்ட நடவடிக்கைக்கு ஆலோசனை

leadimg.jpgசில பயண மார்க்கங்களுக்கான தனியார் பஸ் சேவையினை, தேசிய போக்குவரத்து ஆணைக்குழு இடைநிறுத்தியுள்ளமைக்கு எதிராக, சட்ட நடவடிக்கையில் ஈடுபடுவது குறித்துத் தாம் ஆலோசித்து வருவதாக தனியார் பஸ் கம்பனிகளின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. சுமார் 50 இற்கும் மேற்பட்ட பயணமார்க்கங்களின் தனியார் பஸ் சேவை இடைநிறுத்தப்பட்ட விவகாரத்தில் அரசாங்கம் தலையிடத் தவறும் பட்சத்தில், சட்ட நடவடிக்கையில் தாம் இறங்க நேரிடுமெனவும் பஸ் கம்பனிகளின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

எரிபொருள் விலை குறைப்பை அடுத்து போக்குவரத்து அமைச்சும் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவும் கூட்டாக அறிவித்திருந்த புதிய பஸ் கட்டண விபரங்களை அமுல்படுத்த சில தனியார் பஸ் ஊழியர் சங்கங்கள் தவறியதை அடுத்து, இவற்றின் பயண மார்க்கங்களில் பஸ் சேவையை நடத்துவதற்கு தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தடைவிதித்திருந்தது. இதேசமயம், பஸ் கட்டணங்களைக் குறைப்பது தொடர்பாக பஸ் நடத்துநர்களுடன் ஆராயப்படாமையால் இந்தப் பஸ் கட்டண குறைப்புக்கு பஸ் நடத்துநர்கள் சம்மதிக்கவில்லை என ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்து தெரிவித்த தனியார் பஸ் கம்பனிகள் கூட்டமைப்பின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். பஸ் வண்டிகளுக்கான ரயர், ரியூப் என்பவற்றின் விலைகள் அதிகரித்துள்ள நிலையில், அவற்றைக் குறைப்பது பற்றி பஸ் நடத்துநர்கள் தமது கவனத்துக்குக் கொண்டு வந்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

இது விடயமாக, அரசாங்கம் தம்முடன் கலந்தாலோசிக்குமாயின் பஸ் கட்டணங்களை 4.3 வீதத்தில் இருந்து 8 வீதம் வரை குறைக்க தாம் எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். இதேவேளை, கடந்த செவ்வாய்க்கிழமை முதல் அறிவிக்கப்பட்ட பஸ் கட்டண குறைப்பு அறிவிப்பை நடத்தத் தவறியதுடன், கூடுதல் கட்டணங்களைப் பயணிகளிடம் அறவிட்டதாக தெரிவித்து மேல் மாகாணத்தில் 67 தனியார் பஸ் பயண மார்க்கங்களின் சேவைகளை ஆணைக்குழு தடை செய்திருந்தது. இதனிடையே புதன்கிழமை தனியார் பஸ் கட்டணங்கள் குறைவடையுமென எதிர்பார்த்திருந்த நிலையில் அதற்கு முரணாக பஸ் கட்டணங்கள் கூடுதலாக அறவிடப்பட்டதாக சில தனியார் பஸ் பயணிகள் தெரிவித்தனர்.

நிலைமை இவ்வாறிருக்க புதன்கிழமை முதல் இந்த அறிவிப்பு அமுலுக்கு வருவது தொடர்பாக, பஸ் நடத்துநர்கள் மற்றும் பயணிகள் மத்தியில் குழப்பமான கருத்துகளும் எழுந்துள்ளன. பஸ் கட்டணங்களை குறைக்குமாறு கோரிய சமயம் பஸ் நடத்துநர்களால் தாக்குதல் அச்சுறுத்தலை தாம் எதிர்நோக்கியதாகவும் பஸ் பயணிகள் தெரிவித்தனர

கருணா எம்.பி. மீது முறைப்பாடுகள் செய்யப்பட்டால் விசாரணை நடக்கும் – அமைச்சர் கெஹலிய

rambukwella.jpgஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேசியப் பட்டியலில் பாராளுமன்ற உறுப்பினரான கருணா எனும் விநாயகமூர்த்தி முரளிதரன் தொடர்பான ஏதேனும் முறைப்பாடு செய்யப்பட்டால் அது குறித்து விசாரணை செய்யப்படும்மென அரசாங்கத்தின் பாதுகாப்பு விவகார பேச்சாளரான அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார்  ஆனையிறவு வெற்றியை அடுத்து ஜனாதிபதி செயலகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை அரசாங்க அமைச்சர்கள் நடத்திய விசேட ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அமைச்சர் ரம்புக்வெல இவ்வாறு கூறினார்

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை போல் அந்த இயக்கத்தில் இருந்த கருணா மீது குற்றச்சாட்டுகள் இருக்கும் நிலையில் இது குறித்து கருணாமீதும் நடவடிக்கை எடுக்கப்படுமாவென ஊடகவியலாளர் ஒருவர் இதன்போது கேள்வி எழுப்பவே, அப்படி எந்தக்குற்றச்சாட்டுகள் எதுவும் கிடையாதென முதலில் மறுத்துவிட்டனர். இதனையடுத்து சிறுவர்களைப் படைக்கு சேர்த்தது போன்ற குற்றச்சாட்டுகள் கருணா மீது இருப்பதாக கேள்வியெழுப்பிய ஊடகவியலாளர் சுட்டிக் காட்டிய போது பதிலளித்த அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, முறைப்பாடு செய்யப்பட்டால் அதுகுறித்து விசாரணை செய்யப்படும். ஆனால் அவ்வாறான முறைப்பாடுகள் எதுவும் இதுவரை செய்யப்படவில்லை. பிரபாகரனுக்கு எதிராக குற்றச்சாட்டுகளுடன் முறைப்பாடுகள் இருந்தமையினாலேயே அவருக்குத்தண்டணை வழங்கப்பட்டிருக்கிறது என்று கூறினார்.

லசந்த படுகொலை தொடர்பாக பி.பி.சி.யின் தமிழோசை, சந்தேசிய செய்திகளுக்கு தணிக்கை?

“சண்டே லீடர்’ பத்திரிகை ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக, இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் ஊடாக பி.பி.சி.தமிழோசை மற்றும் “சந்தேசிய’வில் ஒலிபரப்பான செய்திகள் முழுமையாகத் தணிக்கை செய்யப்பட்டது குறித்து கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன. இதன்போது, லசந்த விக்கிரமதுங்கவின் கொலையைக் கண்டித்து ஊடகத்துறை அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா விடுத்த அறிக்கையின் பெரும் பகுதியும் தணிக்கை செய்யப்பட்டது குறித்தும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பி.பி.சி.தமிழோசையும் சிங்கள சேவையான சந்தேசியவும் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் பண்பலை வரிசை மூலம் (எவ்.எம்.) ஒலிபரப்பப்பட்டு வருகின்றன. அண்மைக்காலமாக பி.பி.சி.யின் இவ்விரு ஒலிபரப்பிலும், இலங்கையின் யுத்தம் மற்றும் அரசியல் தொடர்பான செய்திகளில் பெரும்பாலானவை முழுமையாகத் தணிக்கை செய்யப்பட்டு வரும் நிலையில் வியாழக்கிழமை, கல்கிசை பகுதியில் சிரேஷ்ட பத்திரிகையாளர் லசந்த விக்கிரமதுங்க படுகொலை செய்யப்பட்டது தொடர்பான செய்தியும்  தணிக்கை செய்யப்பட்டது.

இவரது கொலையைக் கண்டித்து அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா வெளியிட்ட அறிக்கையின் பெரும் பகுதியும் தணிக்கை செய்யப்பட்டது. அதுபோல் லசந்தவின் பத்திரிகைத்துறை நண்பர்கள், ஆளும் தரப்பு, எதிர்த்தரப்பு அரசியல்வாதிகளின் கருத்துகளும் முற்றாகத் தணிக்கை செய்யப்பட்டன. இலங்கையில் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு ஊடகங்களுக்கு தணிக்கை எதுவும் அமுல்படுத்தப்படாத நிலையில் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் பி.பி.சி.ஒலிபரப்புக்கு தணிக்கையை மேற்கொள்வது குறித்தும் பல்வேறு தரப்புகளும் கேள்விகளை எழுப்பியுள்ளன. கடந்த செவ்வாய்க்கிழமை எம்.ரி.வி.நிறுவனம் மீதான தாக்குதல் தொடர்பாக தமிழோசை மற்றும் சந்தேசியவில் ஒலிபரப்பான செய்திகளும் தணிக்கை செய்யப்பட்டன.

ஊடக சுதந்திரம் -பகுதி 1 – சேனன்

writing.gifமுன்குறிப்பு
‘ஜனநாயகம்’ மற்றும் ‘ஊடக சுதந்திரம்’ என்ற பதங்கள் இன்று உலகெங்கும் அதிகாரம் சார்ந்த பொது அர்த்தத்திலேயே பேசப்பட்டு வருகிறது. ஜனநாயகம் சிறுபான்மை அதிகார கும்பலின் ஜனநாயகமாகவும,; சிறுபான்மை அதிகாரத்தின் பேச்சு சுதந்திரத்தை பிரச்சாரம் செய்வது ஊடக சுதந்திரமாகவும் அர்த்தப்பட்டு வருகிறது. இந்த அர்த்தப்படுத்தலில் பெரும்பான்மை மக்கள் புறக்கணிக்கப்பட்டு வருகின்றனர். உலகின் பெரும்பான்மை ஊடகங்கள் மிகச்சிறுபான்மை பணக்காரர்களின் கைகளில் முடக்கப்பட்டு வருவதால் அவை பெரும்பான்மையினர் நலன்களில் இருந்து விலத்துவது தவிர்க்க முடியாததாகிறது. ஊதிப்பெருத்த பெரும் ஊடகங்கள் சிறு சிறு ஊடகங்களை விழுங்கி மிகச்சிறுபான்மை நலனை பிரதிபலிக்கும் பிரமாண்டமான ஊடக நிறுவனங்களின் காலத்தில் நாம் வாழ்கிறோம். இந்த ‘பொது’ ஊடகங்களில் பெரும்பான்மை மக்களின் பங்களிப்பு மிக மிக குறைந்தளவிலேயே இருக்கிறது. விக்டோரியன் காலத்தின்பின் மிககூடிய அளவில் ஊடகங்கள் மக்களிள் இருந்து தனிமைப்பட்டு போயுள்ளன என்பது மிகையான கருத்தல்ல. இன்று ஊடகங்கள் மேல் விழுந்துள்ள பொருளாதார-அரசியல் ஆதிக்கத்துக்கு பலத்த எதிர்ப்பை ஏற்படுத்துவதன் மூலமே மக்கள் பங்களிப்பை – மக்களின் நலன் பிரதிபலிக்கும் பொது ஊடகத்தை உருவாக்க முடியும். இந்த சாத்தியத்தை இணைய ஊடகங்கள் ஏற்படுத்தி கொடுத்துள்ளன. ஜனநாயகத்தின் எல்லைகளை அகலப்படுத்துவதிலும் பெரும்பான்மை மக்களின் பங்களிப்பை ஊக்குவிப்பதிலும் அதிக பங்களிப்பை வழங்கி வருபவை இணைய ஊடகங்களே.

உலகளாவிய பாரிய நிறுவனங்கள் பல சரிந்து பெரும் பொருளாதார சிக்கலுக்குள்ளாகியுள்ள இத்தருணத்தில் அரசியலில் தமது பங்களிப்பின் அவசியத்தை பெரும்பான்மை மக்கள் உணரத்தொடங்கியுள்ளனர். தேர்தல்களிள் மக்களின் நலனை பிரதிபலிக்கும் சந்தர்ப்பம் பெரும்பான்மை மக்களுக்கு கிடைப்பதில்லை. போட்டியிடும் ‘பெரும்பான்மை’ கட்சிகள் யாவும் சிறுபான்மை அதிகார வர்க்கத்தினர் நலன்சார்ந்தே இயங்குவதால் மக்கள் நலன் ஜனநாயக தேர்வுக்கு வருவதே இல்லை. அதனால் பல்வேறு நவீன முறைகளிள் மக்கள் தங்கள் அரசியற் பங்களிப்புகளை செய்யும் புதிய காலத்தில் நாம் நுளைந்துள்ளோம். அதிகாரவர்கத்தின் தான் தோன்றி தனமான முடிவுகளை எதிர்க்க வேண்டிய தேவையும் அரசியல் முடிவுகளிள் மக்களின் பங்களிப்பு இருக்கவேண்டிய அவசியமும் இன்று உலகெங்கும் உணரப்பட்டு வருகிறது. இந்நிலையில் மக்கள் பங்களிப்பை உள்வாங்குவது மக்கள் சார்ந்து இயங்கும் எந்த ஊடகத்தினதும் பெரும் சவாலாக இருக்கிறது.

வரலாற்று பின்னனி
18ம் நூற்றான்டு காலகட்ட தொழிற்புரட்சி பல்வேறு சமூக பொருளாதார விஞ்ஞான மாற்றங்களை கொண்டு வந்தது. இக்காலகட்டத்தில் அச்சுத் துறையில் ஏற்பட்ட வேகமான மாற்றம் மிக முக்கியமானது. 19ம் நூற்றான்டின் மத்திய காலத்தில் பத்திரிகைகள் மில்லியன் கணக்கான பிரதிகளை அச்சிடும் அளவுக்கு அச்சுதுறை தொழில்நுட்பம் மிக வேகமான வளர்ச்சி கண்டது. பெரும்பான்மை மக்களை குறிவைத்து பத்திரிகைகள் அச்சிடப்பட்டாலும் அவை பெரும்பான்மையினரின் நலன்சார்ந்து இயங்கவில்லை. பத்திரிகை துறையை அதன் ஆரம்பகாலம் தொட்டு அதிகார வர்க்கம் தனது கட்டுபாட்டில் வைத்துக் கொள்வதில் கவனமாக இருந்து வந்துள்ளது. பொது அறிவில் செல்வாக்கு செலுத்தல் – தகவல்களை கட்டுப்படுத்தல் முதலானவையை அதிகாரம் தனது இருத்தலை உறுதிப்படுத்தும் இயல்பான நடவடிக்கையாக கொண்டிந்தமையால் இதற்கு சிறந்த வசதி ஏற்படுத்தி கொடுத்த அச்சுதுறையை அதிகாரம் உடனடியாக தமது கட்டுபாட்டில் கொண்டுவந்தது ஆச்சரியமானதல்ல. பெரும்பான்மையர் சுயமாக பணம்கொடுத்து வாங்கும் பத்திரிகை மிக சிறுபான்மை நலன்சார்ந்து அச்சிடப்பட்டது விரைவில் முரண்பாடுகளை தோற்றுவித்தது. இந்த முரண்பாடு தோற்றுவித்த அதிருப்தியை மக்கள் சார்ந்து சிந்தித்த ‘மொழி வல்லுமையாளர்’ பலர் தமது வெளிப்பாடுகளில் பிரதிபலித்து வந்துள்ளனர். பெரும்பான்மையரின் எதிர்ப்பு இவர்களுக்கூடாவகவே சிறிய அளவில் பதியப்பட்டது. இவர்கள் தமக்கு கிடைத்த சந்தர்ப்பத்தை பாவித்து ‘பேச்சு சதந்திரம்’ என்ற கருத்தை முன்தள்ளினர்.

பெரும்பான்மை மக்களின் பல்வேறுபட்ட குரலை உள்நுளைப்பதானால் முரணான பல கருத்துக்களை-ஏற்றுக்கொள்ள முடியாத கருத்துக்களை அனுமதித்தாக வேண்டும் என்ற அவசியத்தை ஏற்படுத்துவது தவிர்க்க முடியாததாகியது. பேச்சு சுதந்திரம் என்ற உரிமை ஒவ்வொருவரினதும் தனி உரிமை ஆக்கப்பட்டால் மக்களின் குரல் வெளிப்படுவதற்கான அதிகாரத்தின் தடை தளர்த்தப்படும் என்பது உணரப்பட்டது.

பேச்சுரிமை ஒவ்வொரு மனிதனிதும் அடிப்படை உரிமைகளில் ஒன்று என்பதை நிலைநாட்டுவது, மக்களின் பேச்சு பொதுவில் வளரவிட அதிகாரத்தை நிர்பந்திக்கும் உத்தியானது. அதிகாரம் சார்-எதிர் என்ற சார்நிலைகளுக்கும் அப்பால் ‘பேசும் உரிமை’ என்பதை மனித உரிமையாக பார்க்கும் போக்கு அதிகார வர்க்கத்துக்கு பெரும் சிக்கல்களை தோற்றுவித்தது. பேச்சு உரிமை அதிகாரத்துக்கு எதிரான நலன் கொண்டது என்பதை அதன் ஆரம்பகாலங்களிலேயே அதிகாரம் தெட்டத் தெளிவாக புரிந்து கொண்டது. தமக்கு எதிரான கருத்துக்களையும் ‘உரிமை’ அடிப்படையில் அதிகாரம் ஏற்றுகொள்ள வைப்பது என்பது மக்கள் சார்ந்து கருத்து வைத்த அன்றய புத்திஜீவிகளின் பெரிய சவாலானது. பிரெஞ்சு புத்திஜீவி வால்டேரின் புகழ்பெற்ற கூற்றை இந்த அடிப்படையிலேயே பார்க்கவேண்டும். ‘நீ சொல்வதில் எனக்கு உடன்பாடில்லை. ஆனால் அதை சொல்ல இருக்கும் உனது உரிமையை காக்க நான் எனது உயிரையும் கொடுப்பேன்.’ என்று வால்டேர் வலியுறுத்தியதன் அரசியற் பின்னணி இதுதான். ‘நீ சொல்வதில் எனக்கு உடன்பாடில்லை’ என்ற பகுதி அதிகாரத்தை நோக்கி பேசியதாகவும் அதிகாரம் உடன்படாத கருத்து வெளிப்பாட்டின் குறியீடாகவும் பார்க்கபட வேண்டும். ஆனால் அதிகாரம் ‘தத்துவ’ கோரிக்கைகளுக்கு மசியவில்லை. அதிகாரத்தை மசியவைக்க மக்கள் உரிமை போராட்டத்தை நடத்தவேண்டியிருந்தது.

1776ல் இருந்து 1800 வரையான காலப்பகுதியை ‘புரட்சிகளின் காலம்’ என்று பல வரலாற்றாசிரியர்கள் வர்னிப்பர். ஒடுக்கப்பட்டுகொண்டிருந்த பெரும்பான்மை மக்களின் உரிமைகளுக்கான கிளர்ச்சி பாரிய அளவில் வெடித்த காலப்பகுதியிது. ஆரம்பகால முதலாளித்துவத்தின் ‘கருத்துநிலையை’ தீர்மானித்த காலப்பகுதியிது. 1776 யூலை 4ல் அமெரிக்க சுதந்திர பிரகடனத்தில் ‘மனித உரிமைகளை’ தோமஸ் ஜெபர்சன் அறிமுகப்படுத்தியது மறுமலர்ச்சி காலகட்டத்தின் உச்சக்கட்ட நடவடிக்கை. இதன்பின் 1789 பிரெஞ்சு புரட்சியின்போது உருவான பல்வேறு கோசங்களில் ‘மனிதரின் உரிமைகள் பிரகடனம்’ முக்கிய செல்வாக்கு செலுத்தியது. தோமஸ் பெயினின் ‘மனிதரின் உரிமை’ புத்தகம் உரிமை கோரிக்கைகளின் சின்னமானது மட்டுமின்றி அக்கால புரட்சியாளர் பலருக்காக வாதாடவும் உதவியது. இக்கருத்துகள்மேல் அன்று அதிகாரத்துக்கு இருந்த அச்சத்தை குறைத்து மதிப்பிடக்கூடாது. தோமஸ் பெயினுக்கு இங்கிலாந்து ஆழும் வர்க்கம் மரண தண்டனை வளங்கியது ஆச்சரியமானதல்ல. அவர் பிரான்சுக்கு தப்பியோடித்தான் தூக்கில்; இருந்து தப்பினார்.

1791ல் அமெரிக்காவில் அமுலுக்கு வந்த உரிமை சட்டமும் அதில் முதலாவது சேர்ப்பாக (First Amendment to the Bill of rights) பேச்சு சுதந்திரமும் மனித குல வரலாற்றில் மிக முக்கியமான மைல்கற்கள். பேச்சுரிமையையோ அல்லது ஊடகத்தையோ பாதிக்கும் எந்த சட்டத்தையும் காங்கிரஸ் கொண்டுவரகூடாது என்று தடுத்தது இச்சட்டம்.

இருப்பினும் அதிகாரிகள் தொடர்ந்து மக்களின் உரிமைகளை சூறையாடிக் கொண்டுதான் இருந்தனர். வளங்களையும் ஊடகங்களையும் தொடர்ந்தும் அவர்கள் தமது கட்டுபாட்டிலேயே வைத்திருந்தனர். ஆனால் அதிகாரத்துக்கும் ஊடகத்துக்குமான உறவு பற்றி மக்கள் நன்றாகவே அறிந்திருந்தனர். யோன் ஸ்டுவர்ட் மில் தனது ‘ஊடக சுதந்திரமும் அவதூறு சட்டமும் ‘‘Law of Libel and Liberty of press’ (1825) என்ற கட்டுரையில் இதுபற்றிய முக்கியமான அவதானத்தை ஏற்படுத்துகிறார். அதிகாரம் எப்பொழுதும் பெரும்பான்மை ஒடுக்கப்படுபவர்களின் சுதந்திரத்தை நசுக்குவதாகவே இருக்கும் என்பதை மில் சுட்டிகாட்டுகிறார். பொது உரையாடல் மூலமாகவும், பிழை-கூடாது-தவிர்க்கப்படவேண்டியது என்று கருதப்படுகிற கருத்துக்களை அனுமதிப்பதன் மூலமாகவுமே சுதந்திரத்தை சாத்தியப்படுத்த முடியும் என்றார் அவர்.

‘எதிர்’ கருத்து எவ்வகைப்பட்டதாக இருப்பினும் அனுமதிக்கப்பட வேண்டும் என்ற வலியுறுத்தல் கருத்து சுதந்திரத்தை நிலைநாட்டுவதோடு தொடர்ந்தும் பின்னி பிணைந்திருப்பதை நாம் இங்கு அவதானிக்கவேண்டும்.

இதன்பிறகு முதலாளித்துவம் முதிர்ச்சியடைய தொடங்கிய கால கட்டத்தில் உருவான புது ஒடுக்குமுறைகள் புது ஒடுக்குதல்களை தோற்றுவித்தது. அதற்கெதிரான போராட்டமும் வலுப்பெற்றது. இரஸ்ய புரட்சி பேச்சு சுதந்திரத்தின் எல்லைகளை வரலாறுகாணாத வகையில் அகட்டியது. மார்க்சிய புரட்சியாளர் ஊடகத்துக்கும் அதிகாரத்துக்குமான உறவை முதல் முதலாக உடைத்தனர். தொழிலாளர்களுக்கும் வறிய மக்களுக்குமான ஊடகத்தை உருவாக்கும் முயற்சியில் முதன் முதலாக இறங்கினர் இரஸ்ய புரட்சியாளர்கள். அதிகாரத்தை தகர்த்து ஒடுக்கப்படும் மக்களுக்கான தொழிலாளர் ஜனநாயகத்தை உருவாக்கியதன் மூலம் புதிய அரசியல் -பொருளாதார உறவுமுறைகளுக்கு வழியேற்படுத்தினர். மனித குல வரலாற்றில் முதன் முறையாக ஒடுக்கப்படும் அனைத்து மக்கள் சார்பிலும் இயங்கும் பதிய சமுக ஒழுங்கு உருவாக்கப்பட்டது.

புரட்சி நடந்த ஒரு மாதத்திற்குள் நவம்பர் 1917ல் போல்சிவிக் கட்சி பத்திரிகை பிரவ்டா லெனினின் பின்வரும் கோரிக்கையை பிரசுரித்தது.

‘ தோழர்களே! தொழிலாளர்களே! இனி நீங்கள்தான் அரசின் தலைமைத்துவத்தில் இருக்கிறீர்கள் என்பதை நன்றாக ஞாபகத்தில் வைத்துகொள்ளுங்கள். நீங்களாக ஒன்றினைந்து உங்கள் அரச கருமங்களை உங்கள் கையில் நீங்கள் எடுப்பதற்கு வேறு யாரும் உதவப்போவதில்லை. உங்கள் வேலையில் இறங்குங்கள். அடிமட்டத்தில் இருந்து ஆரம்பியுங்கள். யாருக்காகவும் தாமதிக்காதீர்கள்.’

சர்வாதிகாரி என்று பூர்சுவாக்கள் புறங்கூறும் லெனினின் மக்கள் நோக்கிய கோரிக்கை இது. சோவியத் துரித கதியில் மாற்றத்துக்குள்ளானது. உலகெங்கும் உள்ள அதிகார வர்கத்துக்கு அதிர்வலைகளை சோவியத் மக்கள் அனுப்பினர். பல்வேறு நாடுகளில் உரிமைபோரில் மக்கள் இறங்க இது ஊக்கமளித்தது. இருப்பினும் புரட்சியின் வெற்றி தொடர்ந்து நீடிக்கவில்லை. சிறு அதிகார வர்க்கம் அரசை கைப்பற்றி தொழிலாளர் நலனை நசுக்க தொடங்கியது. ஸ்டாலினுடன் பிராவ்டாவின் இணை ஆசிரியர்களில் ஒருவரான காமினேவ் புரட்சிக்கு சில மாதங்களின் முன் லெனின் எழுதிய ஏப்பிரல் தீசிஸ்க்கு எதிராக ஆசிரியர் தலையங்கம் எழுதி விமர்சிக்ககூடிய ஒரு சூழல் இருந்தது. ஆனால் ஸ்டாலினிஸ்டுகள் அதிகாரத்தை கைப்பற்றியதுடன் நிலை தலைகீழாக மாறியது. பேச்சு சுதந்திரத்தை நசுக்குவது ஸ்டாலினிஸ்டுகளின் முக்கிய பணியானது. மக்கள் அபிப்பிராயத்தை காவல்காத்து வழிநடத்துவதல்ல ஒரு உண்மையான புரட்சிகர தொழிலாளர் அரசின் பணி. மாறாக முதலாளித்துவ கட்டுபாட்டில் இருந்து மக்கள் கருத்தை விடுவிப்பதே அவர்கள் பணியாக இருக்கவேண்டும் என்பதை ட்ரொட்ஸ்கி சுட்டி காட்டினார். தகவல் உற்பத்தியையும் மக்கள் மயப்படுத்துவதன் மூலம் மட்டுமே இதை சாதிக்கலாம் என்று ட்ரொட்ஸ்கி கூறியது மக்கள் நலனில் இயங்காத ஸ்டாலினிஸ்ட் அதிகாரத்துக்கு துரோகமாக பட்டதில் ஆச்சரியமில்லை.

இதை தொடர்ந்த பனி யுத்தத்தில் ‘தகவல் கட்டுப்பாடு’ மிக முக்கிய பங்குவகித்தது. தேசிய இறையான்மை – பாதுகாப்பு காரனங்கள் என்ற பம்மாத்துகள் காட்டி அதிகாரம் தகவல் சுதந்திரத்தையும் பேச்சு சுதந்திரத்தையும் தமது கைக்குள் இறுக்கி வைத்துக்கொண்டிருக்கின்றன. பனியுத்த காலத்திலும் அதற்கு பிறகும் ஊடக சுதந்திரத்துக்கான பல போராட்டங்களை நாம் பார்த்துவிட்டோம். அமெரிக்காவில் 60களில் சிவில் ரைட் இயக்கம் முன்தள்ளிய போராட்டம் இவற்றில் முக்கியமானது. அதன் தொடர்ச்சியாக எழுந்த பேச்சு சுதந்திர இயக்கம் உலகெங்கும் பலமான செல்வாக்கு செலுத்தியது நாமறிவோம்.

ஒரு ஏக்கர் கானிக்குள் அடைத்துவைக்கக்கூடிய தொகை பணக்காரர் பூமிப்பந்தின் மொத்த வளங்களையும் சொந்தம் கொண்டாடி மில்லியன் கணக்கான மக்கள் பட்டினியாலும் நோயாலும் தினமும் சாவதை பார்த்துகொண்டிருக்கும் மிகவும் சமமற்ற உலகில் இன்று நாம் வாழ்கிறோம். இந்நிலையில் மக்கள் குரலை வலுப்படுத்துவதும் அதற்கான முன்னெடுப்புகளை செய்வதும் மிக முக்கியமானது.

இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன் ஜோன் ஸ்டுவர்ட் மில் ஏற்படுத்தின தெளிவுகூட இன்று பலருக்கு இல்லை. சுதந்திர உரையாடலுக்கு எதிரான கருத்து எவ்வாறு உருவாகிறது என்பதை அவர் அன்றே சுட்டிகாட்டியிருந்தார். ‘ சரியான கருத்தை உருவாக்கி கொள்ள முடியாத படியால்தான் ஒரு தவறான கருத்து உருவாகிறது. சுதந்திர உரையாடலை தொடர்வதுதான இதை மாற்ற ஒரே வழி;. சுதந்திர உரையாடல் உருவாக்கும் தவறான கருத்துக்களை தவிர்க்க-மாற்ற சுதந்திர உரையாடலை தொடர்வதுதான் ஒரே வழி. சுதந்திர உரையாடலில் ஏற்படும் அறிதலே தவறான கருத்துகள் உருவாகும் அறிவின்மை சூழலை தவிர்க்க உதவும்’ என்று மில் கூறியது இன்றும் பலருக்கு புதினமாக படலாம். பேச்சு சதந்திரத்தை எதற்காகவும் விட்டு குடுக்க முடியாது என்று கடந்த இரு நூற்றாண்டுகளுக்கும் மேலாக போராடி வந்தாலும் இன்றும் அது அதிகாரத்தின் கட்டுப்பாட்டில் இருப்பதாலேயே இந்தநிலை.

இதை நிரந்தரமாக மாற்ற இன்றுள்ள இணைய சுதந்திரத்தை நாம் எமது போராட்டங்கள் மற்றும் பேச்சு சுதந்திரம் வலுப்பட பாவிக்கவேண்டும்.

இலங்கைத் தமிழர் பிரச்சினை குறித்து முக்கிய ஆலோசனை

ramsosss.jpgபாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவன், திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி ஆகியோர் சந்தித்து இலங்கைத் தமிழர் பிரச்சினை குறித்து முக்கிய ஆலோசனை நடத்தினர். இலங்கை அரசு போர் நிறுத்தத்தை அமல்படுத்த வேண்டும் என இந்த மூன்று தலைவர்களும் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதுகுறித்து டாக்டர் ராமதாஸ், பிரதமர் மன்மோகன் சிங், சோனியா காந்தி ஆகியோருக்கு கடிதங்களையும் அனுப்பியுள்ளார்.

இந்த நிலையில் இலங்கை விவகாரத்தில் ஒத்த கருத்துக்களைக் கொண்ட கட்சித் தலைவர்களை இணைக்கும் முயற்சியில், திருமாவளவன் இறங்கியுள்ளார். அதன் அடிப்படையில், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணியை பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், தொல்.திருமாவளவன் ஆகியோர் சந்தித்து பேசினார்கள்.வேப்பேரியில் உள்ள பெரியார் திடலில் இந்த சந்திப்பு நடைபெற்றது. இந்த சந்திப்பின்போது இலங்கைத் தமிழர் பிரச்சனையில் இனி எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் இப்பிரச்சனையில் மத்திய, மாநில அரசுகளை எவ்வாறு நடவடிக்கை எடுக்க வலியுறுத்துவது என்பது குறித்தும் முக்கிய ஆலோசனை நடைபெற்றதாக தெரிகிறது. அத்துடன் ஈழ ஆதரவு கட்சிகளின் அடுத்த கட்ட நடவடிக்கை, போராட்டம் குறித்தும் பேசப்பட்டதாக தெரிகிறது. இந்த சந்திப்பின்போது திமுக கூட்டணியில் பாமக நீடிக்க வேண்டும், விலகக் கூடாது என வீரமணி கேட்டுக் கொண்டாராம்.

இந்தியா, அமெரிக்கா கண்டனம்

lasantha-02.jpg“சண்டே லீடர்’ ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க படுகொலை மற்றும் மகாராஜா தொலைக்காட்சி நிறுவனம் மீதான தாக்குதல் சம்பவங்களை இந்தியாவும் அமெரிக்காவும் கடுமையாகக் கண்டித்துள்ளன. லீடர் குழும வெளியீடுகளின் ஆசிரியரின் மறைவையிட்டு கடும் அதிர்ச்சியும் ஆழ்ந்த கவலையும் அடைந்துள்ளதாக கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் நேற்று வெள்ளிக்கிழமை விடுத்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இலங்கையில் ஊடக அமைப்புகள், ஊடகத்துறை சார்ந்தோர் மீது தொடர்ச்சியாக அதிகரித்துவரும் தாக்குதல்களின் மத்தியில் துயரகரமான இச்சம்பவமும் இடம்பெற்றுள்ளது. அண்மையில் மகாராஜா தொலைக்காட்சி கலையகம் மீதான குண்டுத் தாக்குதல் சம்பவமும் இந்தத் தொடர்ச்சியான தாக்குதல்களில் ஒன்றாகும். எந்தவொரு ஜனநாயகத்துக்கும் ஊடக சுதந்திரம் அத்தியாவசியமான விடயமாகும். இந்த மாதிரியான தாக்குதல்கள் இலங்கையில் ஜனநாயக ரீதியான சுதந்திரத்தை பாதிப்புக்குள்ளாக்கும். இந்தத் தாக்குதல்கள் தொடர்பாக பூரணமான விசாரணைகளை மேற்கொண்டு குற்றவாளிகளை சட்டத்தின் முன்நிறுத்த வேண்டுமென இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்துகின்றோம் என்று இந்திய தூதரகம் விடுத்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, சண்டே லீடர் பத்திரிகை ஆசிரியர் படுகொலை, தொலைக்காட்சி நிலையம் மீதான தாக்குதல் என்பன கவலைக்குரிய நடவடிக்கைகள் என்றும் இலங்கையிலுள்ள சுயாதீனமான குரல்களை மௌனமாக்குவதை நோக்கமாகக் கொண்டவையெனவும் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களப் பேச்சாளர் ரொபேர்ட் வூட் தெரிவித்துள்ளார்.