புலம்பெயர் வாழ்வியல்

புலம்பெயர் வாழ்வியல்

தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழும் நாடுகளில் அவர்களுடைய வாழ்வியல், சமூக, அரசியல் தொடர்பான செய்திகள், கட்டுரைகள், ஆய்வுகள்.

லூட்டன் (பிரித்தானியா) பொதுப் பூங்காவில் தமிழ் கடைக்காரரின் உடல் மீட்பு! கொலையா? தற்கொலையா? என்பது உறுதிப்படுத்தப்படவில்லை!

யாழ் சாவகச்சேரி சரசாலையைச் சேர்ந்த கந்தசாமி பிரபாகரன் (39) என்ற கடைக்காரர் ஒருவரின் உடல் மார்ச் 17ம் திகதி லூட்டன் எல்யூ 1 (LU1) என்ற பகுதியில் உள்ள பொதுப் பூங்காவில் கண்டெடுக்கப்பட்டதாக தேசம்நெற்க்கு தெரிய வருகின்றது. தனது கடைக்கு பொருட்களை வாங்குவதற்கு மொத்தக் கொள்வனவாளர்களிடம் சென்றவர் மார்ச் 17ம் திகதி சடலமாக மீட்கப்பட்டதாக கொல்லப்பட்டவரின் சகோதரருக்கு நெருக்கமான நண்பர் தேசம்நெற்க்குத் தெரிவித்தார்.

இது பற்றி தேசம்நெற்குத் தெரியவருவதாவது பிரபாகரன் மார்ச் 17 காலம் தாழ்த்தி காலையுணவை முடித்துக்கொண்டு கடைக்கு பொருட்களைக் கொள்வனவு செய்ய, அங்குள்ள மொத்தக் கொள்வனவு நிலையத்துக்கு செல்வதாகக் கூறி வெளிக்கட்டுள்ளார். பிரபாகரன் நீண்ட நேரமாக வராததினாலும்; தொலைபேசிக்கு பதிலளிக்காததாலும்; மற்றையவர்களுக்கும் தொடர்புகொண்டு விசாரித்தும் பதிலில்லாத நிலையில், அவருடைய மனைவி பொலிஸாருக்கு அறிவித்துள்ளார். பொலிஸார் பின்னர் இவருடைய தொலைபேசியின் சிக்னலைக்கொண்டு அது இருக்கும் இடத்தை அடைந்துள்ளனர். அன்றைய தினம் இரவு பிரபாகரனின் உடல் தூகிடப்பட்டநிலையில் சடலமாகக் கண்டுபிடிக்கப்பட்டது என அந்நண்பர் தேசம்நெற்க்குத் தெரிவித்தார்.

பிரபாகரன் கந்தசாமி எட்டு ஆண்டுகளுக்கு முன்னர் பிரித்தானியாவுக்கு வந்தவர். யாழ் சாவகச்சேரியில் ஓரளவு வசதியான வர்த்தகக் குடும்பத்தில் இருந்து வந்தவர். அவருடைய சகோதர் அதற்கு முன்னரேயே லண்டன் வந்தவர். அவர் கடையை நடத்தி வந்தார். அதன் பின் பிரபாகரனும்; ஒரு கடையை ஆரம்பித்தார். பிரபாகரன் ஐந்து ஆண்டுகளுக்கு முன் திருமணமாகி அவருக்கு நான்கு வயதில் ஒரு குழந்தையும் ஒன்றரை வயதில் ஒரு கைக் குழந்தையும் உண்டு. குடும்பம் மிகவும் நெருக்கமாகவும் அன்பாகவும் இருந்ததாகவும் தற்கொலை செய்வதற்கான எந்தக் காரணமும் குடும்பத்தில் இருக்கவில்லை என்றும் அக்குடும்பத்திற்கு நெருக்கமான மற்றொருவர் தேசம்நெற்க்குத் தெரிவித்தார்.

பிரபாகரனின் உடல் கண்டெடுப்பதற்கு சிறிது காலம் முன்பாக அவர் கெபாப் (Kebab) உணவகமொன்றுக்கு சென்றிருந்ததாகவும் அங்குள்ளவர்களுடன் வாக்குவாதம் ஏற்பட்டு அது கைகலப்பில் முடிந்ததாகவும் பிரபாகரனின கடைக்கு அருகில் கடை நடாத்திவரும் இன்னுமொரு கடைக்காரர் தேசம்நெற்குக்குத் தெரிவித்தார். இச்சம்பவத்தில் தாக்குதலுக்கு உள்ளானவருக்கு குறிப்பிடத்தக்க அளவு காயங்கள் ஏற்பட்டதாகவும் பொலிஸார் விசாரணையில் ஈடுபட்டு இருந்ததாகவும் அக்கடைக்காரர் மேலும் குறிப்பிட்டார். இது தொடர்பாக தேசம்நெக்கு மேலும் ஒரு உறுதிப்படுத்தப்பட முடியாத தகவலும் கிடைத்தது. அதன்படி பிரபாகரன் தாக்குதலுக்கு உள்ளானவர்களைச் சந்தித்து வழக்கில் இருந்து வெளியேறுவதற்கு பேச்சுவாரத்தையில் ஈடுபட்டதாகவும் செல்லப்படுகிறது. இதனை உறுதிப்படுத்த முடியவில்லை.

இளம் குடும்பஸ்தரான உயிரிழந்த பிரபாகரன், சாவகச்சேரியில் பல உதவித்திட்டங்களை மேற்கொண்டுவந்ததாகவும் அவர் மிகுந்த சமூக அக்கறை கொண்டவர் என்றும் தெரியவருகின்றது.

சில ஊடகங்கள் இதனை ஒரு படுகொலை என்று தீர்க்கமானதாக செய்தி வெளியிட்டுள்ளதுடன் அப்படுகொலை ஹரோவில் வெறிச்சோடிய பகுதியில் நடைபெற்றதாகவும் ஹெரோ பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் அவருக்கு மூன்று குழந்தைகள் இருப்பதாகவும் முற்றிலும் தவறான செய்தியை வெளியிட்டுள்ளனர்.

பிரபாகரனின் மரணம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டு வரும் லூட்டன் பொலிஸார் எவ்வித தகவல்களையும் யாருடனும் பரிமாற வேண்டாம் என குடும்பத்தினருக்கு தெரிவித்துள்ளதாக தேசம்நெற்றுக்கு தெரியவருகின்றது. பிரேத பரிசோதணையின் பின்னரேயே இம்மரணம் தொடர்பில் வேறு யாரும் தொடர்புபட்டுள்ளனரா என்பதை பொலிஸாரல் உறுதிப்படுத்தக் கூடியதாக இருக்கும். இம்மரணம் தொடர்பில் லூட்டன் பொலிஸார் எவ்வித அறிக்கையும் வெளியிட்டதாகத் தெரியவில்லை.

பல்கலைக்கழக மாணவியை சிறுவயதில் பாலியல் துஸ்பிரயோகம் செய்த ஆனந்தம் கிரியேசன் ஆனந்தராஜவுக்கு 30 மாதங்கள் சிறை!!!

பெப்ரவரி 2இல் சிறுமியை பாலியல் துஸ்பிரயோகம் செய்த ஆசாமிக்கு 30 மாதங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அறியாப் பருவத்தில் பெண் பிள்ளையை தன் பாலியல் இச்சைக்கு உட்படுத்திய தமிழ் வர்த்தகப் பிரமுகரான பிரேமகுமார் ஆனந்தராஜாவுக்கே 30 மாதங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது. பிரேமகுமார் ஆனந்தராஜா ( Anandarajah Bremakumar ) வுக்கு எதிரான பாலியல் இம்சைக் குற்றச்சாட்டு டிசம்பர் முற்பகுதியில் நீதிமன்றில் நிரூபிக்கப்பட்டு இருந்தது முதற் தடவையாக தேசம்நெற்றில் வெளியாகி இருந்தது. வூட் கிரீன் கிரவுண் நீதிமன்றில் நடந்த பிரேமகுமார் ஆனந்தராஜாவின் வழக்கின் முடிவில் இன்று பெப்ரவரி 02இல் தீர்ப்பு வழங்கப்பட்டது. பிரேமகுமார் ஆனந்தராஜாவுக்கு 30 மாதங்கள் தண்டனை விதிக்கப்பட்டதுடன் அவருடைய பெயர் பாலியல் துஸ்பிரயோகம் செய்வோர் பட்டியலிலும் சேர்க்கப்படும் எனவும் அதனால் இவர் சிறுமிகள் சிறுவர்கள் உள்ள பொது இடங்களில் நடமாடவும் தடை செய்யப்படும் எனவும் தெரியவருகின்றது.

அறுபத்தியொரு வயதான பிரேமகுமார் ஆனந்தராஜா சம்பந்தப்பட்ட சிறுமியைவிடவும் ஏனைய சிலருடனும் தவறாக நடந்துகொண்டவர் என்றும் அனால் மற்றையவர்கள் நீதிமன்று வரை செல்லவில்லை எனவும் தெரியவருகின்றது. பிரேமகுமார் ஆனந்தராஜாவுக்கு டயபிற்ரீஸ் மற்றும் நோய்க் காரணங்களைச் சுட்டிக்காட்டி அவருக்கு வழங்கப்பட்ட தண்டணை மனிதாபிமான அடிப்படையில் 30 மாதங்களுக்குக் குறைக்கப்பட்டது. தண்டனை வழங்கும் போது தனது குற்றத்தை பிரேமகுமார் ஆனந்தராஜா ஒத்துக்கொண்டிருக்க வேண்டும் என நீதிபதி சுட்டிக்காட்டியமை குறிப்பிடத்தக்கது. மேலும் குற்றவாளியின் தரப்பில் பாதிக்கப்பட்ட பெண்ணுடைய தாயின் நன்நடத்தையை கேள்விக்குள்ளாக்கும் வகையில் நடந்துகொண்டதையும் நீதிபதி வன்மையாகக் கண்டித்திருந்தார்.

பிரேமகுமார் ஆனந்தராஜாவின் மனைவி, சகோதர சகோதரிகள் மற்றும் ஆச்சுவே ஆலயம் சார்ந்தவர்கள் அவருடைய மோசமான பாலியல் துஸ்பிரயோகத்தை அறிந்திருந்தும் அவருக்கு சாதகமாகச் செயற்பட்டனர். இவருடைய தங்கைகளில் ஒருத்தி அண்ணனுக்கு கொஞ்சக்காலம் தான் தண்டனை கொடுக்கப்பட்டு உள்ளது என்று அதற்குள் பெருமையடித்துள்ளார். பிரேமகுமார் ஆனந்தராஜா இவ்வாறான மோசமான பாலியல் துஸ்பிரயோகம் செய்த போதும்: அவருடைய பண வசதி, சமூகத்தில் ஆனந்தம் கிரியேசன் என்ற அமைப்பினூடாக பரதநாட்டியம், அரங்கேற்றம் போன்ற நிகழ்வுகளை நடாத்தி பெற்றுவந்த செல்வாக்கு, ஆலயங்களுக்கு மேளம் நாதஸ்வரம் போன்ற இசைக் கலைஞர்களை வரவழைத்துக் கொடுப்பது என்று பிரேமகுமார் ஆனந்தராஜா சமூக அந்தஸ்தைப் பெற்றிருந்தார். அதனைப் பயன்படுத்தியே இவர் இந்தப் பாலியல் துஸ்பிரயோகத்தில் ஈடுபட்டு இருந்தார்.

2022 டிசம்பர் முற்பகுதியில் இவ்வழக்கில் பிரேமகுமார் ஆனந்தராஜா குற்றவாளியாகக் காணப்பட்டு 2023 பெப்ரவரி 2இல் அவருக்கு தண்டணை வழங்க்பட்ட போதும் இவ்வழக்கின் வரலாறு 13 ஆண்டுகள் நீண்டது. 2010இல் அப்போது 13 வயதேயான குழந்தையான சிறுமிiயையே பிரேமகுமார் ஆனந்தராஜா அவளே அறியாத பருவத்தில் துஸ்பிரயோகம் செய்துள்ளார். பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயும் பிரேமகுமார் ஆனந்தராஜாவின் மனைவியும் மிக நெருங்கிய நண்பிகள். பாதிக்கப்பட்ட சிறுமியின் பூப்புனித நீராட்டுவிழாவில் கூட அக்குழந்தையின் தாய்மாமனாகவும் மாமியாகவும் ஆனந்தராஜா தம்பதிகளே அழைக்கப்பட்டுடிருந்தானர். அவ்வளவு நம்பிக்கையோடு பழகியவர்களின் வீட்டுச் சிறுமியையே பிரேமகுமார் ஆனந்தராஜா அனுபவிக்க முற்பட்டதாக பாதிக்கப்பட்ட குடும்பத்தாரின் சிநேகிதி தேசம்நெற்றுக்குத் தெரிவித்தார். 2010இல் சிறுமிக்கு 13 வயதாக இருக்கும் போதே இத்துஸ்பிரயோகங்கள் இடம்பெற்றது. ஆனாலும் அது வேறு யாருக்குமே தெரியாது.

சிறுமி தனது 21வது பிறந்த தினத்தன்று தாயாருக்கு தனக்கு ஏற்பட்ட அக்கொடிய அனுபவங்களை சொல்லியுள்ளார். அதனைக் கேட்டு கதிகலங்கிய தாயார் தன்னுடைய நெருக்கமான தோழியான ஆனந்தராஜாவின் மனைவிக்கு இதனைத் தெரிவித்து நியாயம் கோரியுள்ளார். அதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயிடம் கெஞ்சி மன்றாடிய ஆனந்தராஜாவின் மனைவி தன்னுடை பிள்ளைகளின் கல்வி பாதிக்கப்படும் என்பதால் அதற்கு அப்பால் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவிடாமல் தடுத்தார்.

அதன் பின் மருத்துவத்துறையில் பட்டப்படிப்பை மேற்கொண்டிருந்த பாதிக்கப்பட்ட பெண், ஒரு விரிவுரையின் போது பெண் பிள்ளைகள் துஸ்பிரயோகங்களுக்கு உள்ளாவதை எவ்வாறு அறிந்துகொள்வது என்பது பற்றிய விரிவுரை நடந்தது என்றும் அதன் போது சம்பந்தப்பட்ட பெண் அழ ஆரம்பிக்கவே பல்கலைக்கழகம் அப்பெண்ணின் நிலையை உடனேயே அறிந்து கொண்டனர். பொலிசாருக்கு அறிவிக்கப்பட்டது. அன்று சந்தேக நபரான பிரேமகுமார் ஆனந்தராஜாவை விசாரணைக்கு வருமாறு கோரியும் இருந்தனர். அப்போது மருத்துவத்துறையில் பயின்று கொண்டிருந்த அப்பெண் தன் கல்வி முன்னேற்த்தை எதுவும் தடைப்படுத்தக் கூடாது என்பதால் உடனடியாக நடவடிக்கையில் இறங்கவில்லை. தன்னுடைய இறுதித்தேர்வின் இறுதிப் பரிட்சையையும் முடித்துக்கொண்ட பின் நேரடியாக் பொலிஸாரிடம் சென்று பிரேமகுமார் ஆனந்தராஜா மீதான குற்றச்சாட்டை மீள்புதுப்பிக்கும்படி கோரி; பொலிஸாருக்கு முழமையான ஒத்துழைப்பை வழங்கினார்.

அதனைத் தொடர்தே பொலிஸார் தீவிர விசாரணையில் இறங்கி சந்தேக நபரைக் கைது செய்து அவர் குற்றவாளி என்பதையும் நிரூபித்தனர்.

பாதிக்கப்பட்ட பெண்ணோடு கூடப் படித்தவர் இது பற்றித் தெரிவிக்கையில் “அவர்கள் அனுபவித்த துயரை வார்த்தைகளில் வர்ணிக்க முடியாது” எனத் தெரிவித்தார். பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் பாதிப்பு வலியுடன் இருக்கின்ற போது பிரேமகுமார் ஆனந்தராஜாவை காப்பாற்றும் சில முயற்சிகளிலும் சில சமூகப்பெரும் புள்ளிகள் ஈடுபட்டுள்ளனர். அது பற்றி பாதிக்கப்பட்டவர் “இவங்களுக்குள்ளையா நாங்கள் வளர்ந்தனாங்கள்” என்று மனம் வெதும்பியதாக அப்பெண்ணின் சிநேகிதி தேசம்நெற்க்குத் தெரிவித்தார்.

இவ்வழக்கு தொடர்பான மேலதிக விபரங்கள் அடுத்த பதிவில்.

காண்டீபன் அமிர்தலிங்கம் – ஒரு அரசியல் ஆளுமையின் இழப்பு!

காண்டீபன் அமிர்தலிங்கம் இன்று காலமானார். தமிழீழ விடுதலைப் போராட்டங்களில் முன்னின்று செயற்பட்டது மட்டுமல்ல தமிழீழ இராணுவம் என்ற அமைப்பையும் இவர் கட்டமைத்து இருந்தமை குறிப்பிடத்தக்கது. இவர் கடந்த மூன்று தசாப்தங்களாக அரசியலில் இருந்து முற்றாக ஒதுங்கி இருந்தார். ஈரல் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த இவர் இன்று இயற்கை எய்தியதாக தமிழீழ விடுதலைக் கூட்டணி நண்பர்கள் தெரிவித்தனர். தமிழரசுக் கட்சி தமிழ் காங்கிரஸ்சோடு சேர்ந்த தமிழர் விடுதலைக் கூட்டணியை உருவாக்கி அதன் தலைவராகி எதிர்க்கட்சித் தலைவருமானவர் இவருடைய தந்தையார் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம். இலங்கைத் தமிழர்களிடையே அரசியல் குடும்பமாக மிகவும் அறியப்பட்டது அமிர்தலிங்கம் – மங்கையற்கரசி குடும்பத்தினர். இவர்களுடைய மூத்தமகனே காண்டீபன் அமிர்தலிங்கம். இவருடைய இளைய சகோதரர் பகீரதன் அமிர்தலிங்கம் மருத்துவர் லண்டனில் வாழ்கின்றார். இந்த அரசியல் குடும்பத்தில் இறுதியாக எம்மத்தியில் வாழ்பவர் இவர் மட்டுமே.

காண்டீபன் இலங்கைத் தமிழ் அரசியல் வேகமாக கொதிநிலையை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கையிலேயே பிறந்தார். இவர் குழந்தையாக இருக்கின்ற காலத்திலேயே தாயும் தந்தையும் அரசியல் போராட்டங்களில் மிகத்தீவிரமாக ஈடுபட்டு வந்தனர். இந்தப் பின்னணியில் வளர்ந்த காண்டீபன் தீவிர அரசியலில் விருப்பம் கொண்டதில் ஆச்சரியம் இல்லை. வே பிரபாகரன் யாழ்ப்பாண மேயர் துரையப்பாவை படுகொலை செய்யத் திட்டம் போட்ட காலங்களில் காண்டீபனும் அவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தார். வே பிரபாகரனும் காண்டீபனும் தமிழர் விடுதலைக் கூட்டணியின் இளைஞர் அமைப்பில் இருந்த தீவிர செயற்பாட்டாளர்கள். நெருங்கிய நண்பர்கள். அமிர்தலிங்கம் குடும்பத்தினருக்கு பிரபாகரன் மீது அபரிதமான நம்பிக்கையும் நெருக்கமும் இருந்தது. பிரபாகரன் அல்பேர்ட் துரையப்பாவை படுகொலை செய்ததும் இந்தக் குழு தலைமறைவானது. அவ்வாறு தலைமறைவானவர்களில் காண்டீபனும் ஒருவர்.

மேயர் துரையப்பாவின் கொலையை புதிய தமிழ் புலிகள் உரிமை கோரினர். அத்தோடு தமிழ் இளைஞர்களுக்கு இடையே தலைமைத்துவப் போட்டிகளும் தலை தூக்க ஆரம்பித்துவிட்டது. தமிழீழ விடுதலை இயக்கம், தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம், தமிழீழ விடுதலைப் புலிகள் என்பன ஓரளவு அமைப்பு வடிவம் பெற ஆரம்பித்துவிட்டது. இந்த இயக்கங்கள் தமிழர் விடுதலைக் கூட்டணியினரின் சொல்லுக்கு கட்டுப்பட்டு வந்த நிலைசற்றறு நெகிழ்ச்சி பெறத் தொடங்கிவிட்டது. தமிழர் விடுதலைக் கூட்டணியை இந்த அமைப்புகள் விமர்சிக்கவும் ஆரம்பித்து விட்டன. அச்சமயத்தில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் சொல்லுக்கு கட்டுப்பட்ட ஒரு இராணுவக் கட்டமைப்பு இருந்தால் நல்லது என்ற எண்ணம் தமிழர் விடுதலைக் கூட்டணியினர் மத்தியில் குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் இருந்ததாகவும் அவ்வாறான ஒரு அமைப்புக்கு தங்களோடு மிக நெருக்கமாக இருக்கும் இந்தியா பூரண ஆதரவு வழங்கும் என்று அவர்கள் நம்பியுள்ளனர். இந்தப் பின்னணியில் ‘தமிழீழ இராணுவம்’ என்ற அமைப்பை காண்டீபன் உருவாக்கினார்.

இந்த அமைப்பு அன்றைய எதிர்க்கட்சித் தலைவர் அ அமிர்தலிங்கத்தின் ஆதரவோடு உருவாக்கப்பட்டது என்ற பரவலான அபிப்பிராயம் இருந்த போதும் அமிர்தலிங்கம் அதனைக் கடுமையாக எதிர்த்ததாகவும் அவருடைய ஆதரவு இல்லாததால் அவ்வமைப்பு முளைவிட முன்னரே கிள்ளி எறியப்பட்டுவிட்டதாகவும் அன்றைய காலத்தில் காண்டீபனுடன் தொடர்பில் இருந்த தமிழர் விடுதலைக் கூட்டணி உறுப்பினர் ஒருவர் தேசம்நெற் க்குத் தெரிவித்தார்.

காண்டீபன் வன்முறை அரசியலில் நாட்டம் கொள்ள குடும்பத்தினர் இவரை வெளிநாட்டுக்கு அனுப்பி வைத்தனர். இருந்தாலும் இவருடைய அரசியல் நாட்டம் வெளிநாட்டிலும் தொடர்ந்தது. காண்டீபன் அரசியல் தஞ்சம்கோரி முதலில் ஐரோப்பாவுக்கு பிரான்ஸ்க்கு புலம்பெயர்ந்தார். பின்னர் லண்டனுக்கு வந்தார். பிரான்ஸ்ம் மனிதவுரிமைகள் சாசனத்திற்குக் கட்டுப்பட்ட, அரசியல் தஞ்சம் கோருக்கூடிய நாடு என்ற வகையில் பிரித்தானியா அவரை மீண்டும் பிரான்ஸ்க்கு நாடு கடத்தியது. அதன் பின் பிரபல சட்டத்தரணி ரொனி பற்றரசன் அவருடைய வழக்கை எடுத்து நடாத்தி காண்டீபனை லண்டனுக்கு எடுத்தார்.

லண்டன் வந்த காண்டீபன் மேயர் அல்பேர்ட் துரையப்பா கொலைசெய்யப்பட்டபின் தலைமறைவாகி இருந்தது பிரபாகரனின் மைத்துனியின் வீட்டில். அத்தலைமறைவின் போது மலர்ந்த காதல் பின் லண்டனில் திருமணத்தில் முடிந்து அவர்களுக்கு ஒரு பெண் பிள்ளையும் கிடைத்தது. காண்டீபன் லண்டன் தமிழர் விடுதலைக் கூட்டணியின் இணைப்பாளராகச் செயற்பட்டார். அப்போது தமிழர் விடுதலைக் கூட்டணியின் லண்டன் கிளையின் தலைவராக சிருனிவாசனும் செயலாளராக பொன் சிவசுப்பிரமணியமும் இருந்தனர்.

துரதிஷ்டவசமாக அடுத்தடுத்த தலைமுறையினரின் பொது வாழ்க்கை மட்டுமல்ல அதன் தாக்கத்தால் தனிப்பட்ட வாழ்;கையும் போராட்டமாகவே மாறியது. பலர் கல்வியைத் தொடர முடியவில்லை. அவ்வாறு காண்டீபன் பிறந்து வளர்ந்தது மட்டுமல்ல அவருடைய போராட்டம் இறுதிவரை தொடர்ந்தது.

இந்தப் பின்னணியில் 1989 யூன் 13 தமிழீழ விடுதலைப் புலிகளுடனான பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இது பற்றி திருமதி மங்கையற்கரசி ஒருதடவை குறிப்பிடுகையில் “பிரபாகரனிடம் துப்பாக்கியைக் கொடுத்து அவரைச் சுடு என்று சொன்னால், ஒரு போதும் பிரபாகரன் சுட்டிருக்கமாட்டார்” என்று கூறி இருந்தார். தமிழீழ விடுதலைப் புலிகள் மீது வைத்திருந்த அபார நம்பிக்கை காரணமாக அவர்கள் ஆயுதங்களுடனேயே உள்ளே அனுமதிக்கப்பட்டனர். அதன் விளைவு அன்று அமிர்தலிங்கம் மற்றும் யோகேஸ்வரன் ஆகியோர் படுகொலை செய்யப்பட்டனர். விடுதலைப் புலிகள் பேச்சுவார்த்தைக்கு அழைத்துவிட்டு படுகொலை செய்த சம்பவம் இதுமுதற் தடவையுமல்ல. இது முற்றுப்புள்ளியுமல்ல.
அமிர்தலிங்கம் குடும்பத்தினருக்கு அவர் கொல்லப்பட்டது என்பதற்கும் அப்பால் தமிழீழ விடுதலைப் புலிகள் அவரைப் படுகொலை செய்தமை மிகவும் தனிப்பட்டவகையில் அவர்களைத் தாக்கியது. ‘உண்ட வீட்டுக்கு இரண்டகம்’ செய்ததாகவே கருதுகின்றனர். விடுதலைப் புலிகளின் பயிற்சிகளில் நம்பவைத்து கழுத்தறுக்கும் இவ்வகையான மனிதநேயமற்ற செயற்பாடுகள் அவவமைப்பில் இருந்த சில உறுப்பினர்களால் இன்றும் கடைப்பிடிக்கப்படுவதைக் காணலாம்.

அமீரின் மறைவுக்குப் பின் சிவசிதம்பரம் அவர்களின் இறுதிக் கிரியைகளில் கலந்துகொள்ள மங்கையற்கரசி அமிர்தலிங்கம் இலங்கை சென்றிருந்தார். அப்போது தமிழ்ச்செல்வன் அவரின் பக்கத்தில் அமர்ந்துகொண்டார். “அவரை என்னத்துக்காக கொலை செய்தீர்கள்” என்று கேட்டபோது தமிழ்ச்செல்வன் பதிலளிக்கவில்லை என அவர் பொதுவெளியில் குறிப்பிட்டு இருந்தார். இதே கேள்வியை முதல் போராளி சிவகுமாரன் மற்றும் சிவசுப்பிரமணியத்தின் தாயார் தன்னுடைய மகனுக்காக பிரபாகரனிடம் கேட்டிருந்ததாகவும் அதற்கு பிரபாகரன், “அதுதன்னுடைய உத்தரவில்லை, அது மாத்தையாவின் செயல்” என்று குறிப்பிட்டதாகவும் பொன் சிவசுப்பிரமணியம் தன்னுடைய நேர்காணல் ஒன்றில் தேசம்நெற்க்கு தெரிவித்து இருந்தார்.

மேலும் பிரபாகரன் காண்டீபனின் நண்பனும். அப்படி இருக்கையில் தன் தந்தையை தன்னுடைய நண்பனே கொலை செய்யத் துணிந்தான் என்ற தாக்கமும் ஏற்பட்டது. இதன் தொடர்ச்சியாக காண்டிபனின் திருமணமும் முடிவுக்கு வர காண்டிபன் என்ற ஆளுமை தமிழ் அரசியலில் காணாமலேயே போய்விட்டார். வாழ்க்கை போராட்டமாக மது துணையானது.

ஆவரை நான் கடைசியாக அவருடைய தாயாரின் இறுதிக்கிரியைகளில் சந்தித்தேன். பெரிய நெருக்ம் இருக்கவில்லை. ஒரிரு தடவை கண்டிருப்பேன். அன்று அவர் அணைத்து தன் அன்பை வெளிப்படுத்தினார். இப்பதிவை விரும்பு வெறுப்பில்லாமல் எழுத வேண்டும் என்று தோண்றியது. காண்டீபன் ஒரு வரலாற்றின் சாட்சியம். ஒரு ஆளுமையை தமிழ் சமூகம் இழந்தது. இன்று அவர் பௌதீக உயிர் தன் சுவாசத்தை நிறுத்திக்கொண்டது.

அவருடைய குடும்பத்தினர், உறவினர்கள் நண்பர்கள் அனைவருடனும் என் துயரைப் பகிர்ந்துகொள்கின்றேன்.

புலம்பெயர்ந்தோரிடையே கலாநிதிகளும் கல்லாநிதிகளும்: என்.செல்வராஜா

._._._._._.

தமிழர்களின் டொக்டர் மாயையைத் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்ட சில கல்வித்துறை வியாபாரிகளும் காசுக்கு இரண்டு டொக்டர்ப் பட்டம் என்று விற்க ஆரம்பிக்க எம்மவர்களும் போட்டிபோட்டுக்கொண்டு அதை வாங்கித் தமது பெயருக்கு முன்னால் செருகிக்கொண்டு “நானும் ஒரு டொக்டர் அல்லது கலாநிதி பார்த்தியளே” என்று வரிந்துகட்டிக்கொண்டு கிளம்பிவிட்டார்கள்.
._._._._._.

காலம் காலமாகத் ஈழத்தின் தமிழர் சமூகம் கல்வியை முன்நிலைப்படுத்தி வாழும் ஒரு சமூகமாகத் தம்மை இனம்காட்டி வந்துள்ளது. பிரித்தானிய ஏகாதிபத்தியத்தின்கீழ் தொழில் வாய்ப்பைப்பெற்று அரச ஊழியனாகி “கோர்ணமெந்து” உத்தியோகத்தனாகிய தமிழன் சமூகத்தில் முன்நிலைப்படுத்தப்பட்ட ஒரு காலம் இருந்தது. சுதந்திரத்துக்குப் பின்னர் அரச ஊழியம் படிப்படியாக அடிபட்டுப் போய்விட்டாலும் தமது பிள்ளைகளை டொக்டர், இஞ்சினியர், லோயர், எக்கவுண்டன்ட் என்ற நான்கு கட்டமைப்புகளுக்குள் ஏதாவதொன்றினுள் புகுத்திவிட்டு தான் ஒரு படித்த குடும்பத்தைச் சேர்ந்தவன் என்ற பெருமையைப் பெற்றுவிடுவதில் தமிழன் உடல் பொருள் ஆவியையும் கொடுக்கத் தயாராகியிருந்தான். தப்பித்தவறி ஒரு குடும்பத்தில் இந்த நாலுக்குள் ஒன்று இல்லாது போனால் அவனால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. அதனால் முக்கித் தக்கி தனது குடும்பத்தில் ஏதாவதொரு தலைமுறையில் இருந்த ஒரு டொக்டரையோ இஞ்சினியரையோ தேடிப்பிடித்து தனது சமூக அந்தஸ்தை உயர்த்திக்கொண்டான்.

“அட காசுதான் இருக்கு- படிப்பில்லையே” என்ற கவலை கொண்ட இன்னொரு வகைக் காசுக்காரத் தமிழன், சீதனம் என்ற பெயரில் காசைக்கொட்டி இந்த நால்வகை மாப்பிள்ளைகளையும் தன் குடும்பத்துக்கள் விலைக்குவாங்கிச் சேர்த்துக்கொண்டு தன் சமூகத் தரத்தை உயர்த்திக்கொண்டான்.

இந்தக் கூத்துகள் தாயகத்தில் தான் நடந்து முடிந்ததென்றால் இப்போது புகலிடம் வரையும் தொடர்வது தான் வேதனையாக இருக்கின்றது. திறந்த கல்விவசதி, எவருக்கும் பல்கலைக்கழக வாய்ப்பு என்ற நிலை புலம்பெயர்ந்த தேசங்களில் உள்ளது. விதம்விதமான புதிய கல்வித்துறைகள் எம் இளஞ்சந்ததியினரின் முன்னே விரிகின்றன. இங்கும் இந்த நால்வகைத் துறைகளையும் மீறித் தன் பிள்ளைகளை சுயவிருப்பத்துடன் வேறு நல்ல துறைகளை நாடவிடாமல் சிறுபிராயம் முதலே மூளைச்சலவை செய்து விடுகிறார்கள் நம்மவர்கள். அதனால் பல்கலைக்கழகத்திற்குள் நுழைந்தாலும், மனமொத்துத் தன் கல்வியைத் தொடரமுடியாமல் பல தமிழ் மாணவர்கள் தம் கல்வியைத் துறப்பதும், தாமதமாகத் தமது துறைகளை மாற்றிக்கொள்வதும் நிகழ்கின்றன.

அடையாளச் சிக்கல்

கல்வியே எமது புலம்பெயர் சமூகத்தின் அடையாளச் சிக்கலாகிவிட்ட நிலை இன்ற காணப்படுகின்றது. அரச பாடசாலைகளிலிருந்து தனியார் கல்வியை நாடுவதும், டியுஷன் படிப்புக்கு பிள்ளைகளைத் தூண்டிவிடுவதும் இந்த நால்வகைத்துறைகளில் ஒன்றுக்குள் குறிப்பாக டொக்டர் இஞ்சினியர் படிப்புக்குத் தம் பிள்ளைகளைத் தயார்செய்வதற்காகத்தான் என்ற நிலை இன்று பரவலாகிவிட்டது.

டொக்டர் என்ற சொல் சமூக அந்தஸ்தில் மிக உயர் ஸ்தானத்தில் வைக்கப்பட்டிருப்பதான ஒரு மாயை காலம்காலமாகத் தோற்றுவிக்கப்பட்டுவிட்டது. அதை புலம்பெயர்ந்த வந்தவர்களும் தமது பொதிகளுடன் இங்க கொண்டுவந்து சேர்த்துவிட்டார்கள். மற்றவரைப் பெயர்சொல்லிக் கூப்பிடலாம் ஆனால் டொக்டரான ஒருவரைமட்டும் டொக்டர் இன்னார் என்று விழித்தால் தான் கூப்பிட்டவருக்கும் செமிக்கும் – கூப்பிடப்பட்டவருக்கும் செமிக்கும். புகலிடத்தில் டொக்டர்கள் படும் பாட்டை இவர்கள் அறியாதவர்களா என்ன?

இங்குதான் வேறு ஒரு சிக்கல் ஏற்படுகின்றது. டொக்டர் என்ற பதம் மருத்துவத்துறைக்கு மாத்திரமல்லாது அறிவியல்துறையில் முனைவர் பட்டத்தையும் குறிக்கப் பயன்படுவதால் இவர் எந்த டொக்டர் என்று தலையைப்போட்டு உடைத்துக்கொள்ளவேண்டிய சந்தர்ப்பங்களும் ஏற்பட்டுவிடுகின்றன.

தமிழர்களின் டொக்டர் மாயையைத் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்ட சில கல்வித்துறை வியாபாரிகளும் காசுக்கு இரண்டு டொக்டர்ப் பட்டம் என்று விற்க ஆரம்பிக்க எம்மவர்களும் போட்டிபோட்டுக்கொண்டு அதை வாங்கித் தமது பெயருக்கு முன்னால் செருகிக்கொண்டு “நானும் ஒரு டொக்டர் அல்லது கலாநிதி பார்த்தியளே” என்று வரிந்துகட்டிக்கொண்டு கிளம்பிவிட்டார்கள்.

கவிஞர்கள், ஓவியக்காரர்கள், நடன ஆசிரியர்கள், பத்திரிகையாளர்கள் என்று வந்த பிறகு ஐயர்மாருக்கும் கலாநிதிப் பட்டத்தில் ஆசை வந்தவிட்டது. ஐக்கிய அமெரிக்காவின் பாலைவன மாநிலமான அரிசோனாவில் பென்சன் மானிலத்தில் உலகப் பல்கலைக்கழகம் என்று ஒரு பல்கலைக்கழகம் இயங்குகின்றது. Dr. Howard John Zitko வினால் 1946இல் ஏதோ ஒரு புனிதமான நோக்கத்துக்காக தாபிக்கப்பட்டது. இன்று பிள்ளையார் பிடிக்கப்போய் குரங்காகிவிட்ட நிலை அதற்கு. இந்தியாவில் வாரனாசியிலும், மும்பாயிலும், நைஜீரியாவில் எனுகுவிலும் அதன் கிளைகள் இருப்பதாக அதன் இணையத்தளத்தில் காண முடிகின்றது.

காலக்கிரமத்தில் எம்மவர்களில் சிலர் மோப்பம் பிடித்து அந்தப் பல்கலைக்கழகத்தை அணுகி அவர்கள் வழங்கும் Cultural Doctorate பட்டத்தைப் பெற, இன்று சிவனே என்று இருந்தவரெல்லாம் திடீரென்று கலாநிதிப் பட்டத்தைச்சுமக்க ஆரம்பித்து விட்டார்கள். பின்புலம் எதுவுமில்லாமல், திடீரென்று கலாநிதிப் பட்டத்தைத் தபாலில் வாங்கிச் செருகிக்கொண்டால் சமூக அந்தஸ்து கூடிவிடுமா என்ன? கலாநிதிப் பட்டம் என்றால் பொன்னாடையா என்ன?

முத்திரை பதிப்பித்தல்

இப்படித்தான் கனடாவின் தபால் திணைக்களம் கள்ளம் கபடமில்லாமல் ஒரு திட்டத்தைக் கொண்டுவந்தது. கனேடிய தபால் தலைகளில் உங்கள் புகைப்படத்தைப் பதிந்து நல்ல நாள் பெருநாள்களில் அதை நண்பர்கள் உறவினர்களுக்கு தபாலில் அனுப்பிக் கொஞ்சம் முஸ்பாத்தி பண்ணலாம் என்று ஒரு திட்டத்தைக் கொண்டு வந்தது. வீட்டில் புதிய குழந்தை பிறந்ததும், திருமணம் முடித்தால், பிறந்தநாள் கொண்டாடினால், என்று அந்தப் படத்தை கனேடிய உள்ளுர் முத்திரைகளில் பதித்து அதை உறவினர்களுக்கு அனுப்பும் தபால்களில் சட்டபூர்வமான தபால் தலைகளாகப் பயன்படுத்தக் கொஞ்சம் காசை வாங்கிக்கொண்டு அச்சடித்து வழங்கியது.

கொஞ்சக்காலம் எல்லாம் நன்றாக நடந்தது. எங்கள் தமிழரின் மூளை என்ன லேசுப்பட்டதா? அடித்தார்கள் முத்திரை குமார் பொன்னம்பலத்துக்கு. விழா நடத்தி அதை விற்று நிதியும் திரட்டிவிட்டார்கள். குமார் பொன்னம்பலத்துக்கு மட்டுமா முத்திரை அடித்தார்கள். பட்டியல் போடலாம் யார் யாருக்க அடித்தார்கள் என்று. கட்டுரை நீண்டுவிடும். இலங்கையில் வாழ்ந்து மறைந்த பலருக்கும் புகலிடத்தில் பிள்ளைகள் முத்திரை அடித்து இலங்கையில் கலாயோகி ஆனந்த குமாரசுவாமி, பண்டிதமணி கணபதிப்பிள்ளை ரேஞ்சுக்குத் தமது தந்தையரையும் கொண்டவர நினைத்தார்கள். நினைத்ததுடன் நிற்காமல் முத்திரையை இலங்கைக்கும் அனுப்பி அதை தமிழ் பேப்பரிலும் அல்லவா செய்தியாக்கி விட்டார்கள். எந்த மாதிரியாக விளம்பரம் இருக்கும் என்று சொல்லித்தான் தெரியவேண்டுமா? “ ஈழத்தமிழரான அமரர் இன்னாரின் சேவைநலம் பாராட்டி கனேடிய அரசாங்கம் முத்திரை வெளியிட்டு கௌரவித்தது என்றல்லவா போட்டுவிட்டார்கள். அதை இலங்கைப் பத்திரிகைகளும் சந்தோஷமாக ஏன் எப்படி என்று கேள்விகெட்காமல் மீள்பிரசுரம் செய்துவிட்டன.

இதைப்பார்த்துவிட்டு தேசியத் தலைவருக்கு முத்திரை அடிக்கப்போன ஒருவர் பேராசையில் எக்கச்சக்கமான பிரதிகள் கேட்கப் போய் கனடா தபால் திணைக்களம் விழித்துக்கொண்டுவிட்டது.

பிரிட்டனிலும் ரோயல் மெயில் Smilers என்ற புதிய திட்டத்தை அமுலாக்கினார்கள். கனடாக்காரர் பெற்ற அனுபவத்தின் வெளிப்பாடாக இங்கிலாந்தில் முன்எச்சரிக்கையாக நடந்துகொண்டார்கள். முத்திரையில் இடம்பெறுவதற்காக அனுப்பும் புகைப்படம் வேறாகவும், மகாராணியின் இலச்சினை பொறித்த ஒரிஜினல் முத்திரை வேறாகவும் தெளிவாகப் பிரிக்கப்பட்டு அச்சிட முடிவுசெய்தார்கள். யாரும் முத்திரை அடிக்கலாம். 20 தபால்தலைகளுக்குக் குறையாமல் அடிக்கவேண்டும். நல்லவேளை லண்டனில் பெரிதாக இதுவரை யாரும் அலட்டிக்கொள்ளவில்லை. குடும்பப் படங்கள் எடுத்துப் பதிந்து மகிழ்வதுடன் சரி.

இந்த விடயங்களை எவரும் இதுவரை சீரியசாக எடுத்ததாகத் தெரியவில்லை. இப்பொழுதும் கௌரவப் பட்டங்கள் வழங்கப்படவும், முத்திரையில் படம் பொறிக்கப்படவும் நடவடிக்கைகள் மும்முரமாக நடந்தபடிதான் உள்ளது. தமிழகத்துக்கு மேடையேறப் போகும் இலக்கியப் பிரமுகர்கள் பெரும்பாலும் ஏதோவொரு பட்டத்துடன் தான் திரும்பி வந்துசேர்கிறார்கள். இந்தக்கட்டுரை எழுதும் இந்த நிமிடத்தில்கூட ஐரோப்பிய நாடொன்றில் அரிசோனா பட்டம் பெற்ற ஒரு இலக்கியவாதிக்கு எழுத்தாளர் சங்கமொன்றினால் விழா எடுக்கப்படுகின்ற செய்தி கிடைக்கிறது. லண்டனில் சிலர் கிடைத்த பட்டத்தை எப்படிப் பேப்பரில் போட்டு சனத்துக்குத் தெரியப்படுத்துவது என்று தலையைச் சொறிந்துகொண்டிருக்கிறார்கள். இவையெல்லாம் விரைவில் அம்பலத்துக்கு வரத்தானே செய்யும்.

பட்டம் தான் ஒருவனை சமூகத்தில் உயர்ந்த மனிதனாக்குமா? பட்டம் பெற்றவர்கள் தான் சமூகத்தை நேர்வழிப்படுத்த அரகதையுள்ளவர்களா? பட்டம் பெறாதவர்கள் எல்லாம் என்ன செல்லாக்காசுகள் என்ற எண்ணமா? சுப்பிரமணிய பாரதியார் என்ன பட்டம் பெற்றுத்தான் பல்கலைக்கழகப் பாடப்பத்தகங்களில் இடம்பெற்றாரா? இன்றளவில் அமைதியாகச் சமூகப்பணிகளில் தம்மை ஈடுபடுத்திக்கொண்டு மக்கள் மனதில் நிலையான இடம்பெற்றிருப்பவர்களின் பட்டம் என்ன என்று பார்த்தா நாம் மதிக்கிறோம்.

அண்மையில் மலேசிய உள்ளுராட்சி அமைச்சு விடுத்த அறிவித்தல், பட்டங்களால் தடுமாறிநிற்கும் மலேசியர்களைச் சற்று சிந்திக்க வைத்துள்ளது. அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகமொன்றில் முறையாகச் சேர்ந்து முழுமையான அரச அங்கீகாரம் பெற்ற கலாநிதிப்பட்டத்தைத் தவிர்ந்த பிற கௌரவப் பட்டங்களை தமது பெயரின் முன்னாலோ பின்னாலோ பொது நிகழ்ச்சிகளிலோ, அரசாங்க செயற்பாடுகளிலோ பயன்படுத்தத் தடைவிதிக்கப்பட்டுள்ளது. மேடையில் மாலை, பொன்னாடைகள் போர்த்துவது கௌரவிப்பக்காக மட்டுமே. அமைப்புகளால் வழங்கப்படும் பட்டங்களும் அவ்வாறே. கூட்டம் முடிந்ததும் மாலையையும் பொன்னாடையையும் சுருட்டிப் பக்குவப்படுத்துவோமா அல்லது அதைப் போர்த்தபடியே ஜாம் ஜாமென்று ஊரெல்லாம் நடந்து திரிவோமா?

தயவுசெய்து காசுக்கு வாங்கும் பட்டங்களால் சமூகத்தில் மற்றொரு பிரிவினை உருவாக்காதீர்கள். நீங்கள் செய்யும் பணி மக்கள் மனதில் நீங்கள் இல்லாத போதும் உறைக்க வேண்டும். நீங்கள் விட்டுச்செல்லும் வெறுமை, மக்கள் மனதில் ஆழப்பதிய வேண்டும். அது தான் உண்மையான கௌரவம். அதைவிடுத்து போலித்தனமான கடின உழைப்போ, ஆய்வுத்திறனோ அற்றதும் பணத்தை அடிப்படையாகக் கொண்டதுமான இந்தப் பட்டம் பதவிகள் எல்லாம் சமூகத்தின் நோய்க்கிருமிகள். தயவுசெய்து கிட்ட நெருங்கவிடாதீர்கள்.

நன்றி:

நூல்தேட்டம் 7777
தேடலே வாழ்க்கையாய்: ஒரு ஈழத்து நூலகரின் மனப்பதிவுகள். என்.செல்வராஜா. டென்மார்க்: வி.ஜீவகுமாரன், விஸ்வசேது இலக்கியப் பாலம், Hojvangsparken 7, 4300 Holbaek, 1வது பதிப்பு, டிசம்பர் 2010. (சென்னை: அச்சக விபரம் தரப்படவில்லை).
88 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5×14 சமீ.

நூலகவியலாளர் என்.செல்வராஜா எழுதி அவ்வப்போது ஊடகங்களில் பிரசுரமான 17 கட்டுரைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. பேராசிரியர் நந்தி, கலாபூஷணம் பீ.எம்.புன்னியாமீன், எஸ்.எம்.கோபாலரத்தினம், கிருஷ்ணா வைகுந்தவாசன், கோபன் மகாதேவா, நயீமா சித்தீக், ச.வே.பஞ்சாட்சரம், அரங்க முருகையன், அமுதுப் புலவர், அகஸ்தியர் ஆகியோர் பற்றிய மனப்பதிவுகளும், காலைக்கலசத்தினூடாக ஒரு நூலியல் பயணம், புலத்திலும் புகலிடத்திலும் மலரும் வெளியீடுகளை சர்வதேச நூலகங்களில் பாதுகாத்தல், மலேசியத் தமிழர்களின் நீள்துயில் கலைகின்றதா, புலம்பெயர்ந்தோரிடையே கலாநிதிகளும் கல்லாநிதிகளும், தமிழ்மண்ணில் ஒரு சிரமதான அமைப்பு (சர்வோதயம்), நா.சுப்பிரமணியனின் ஈழத்துத் தமிழ் நாவல் இலக்கியம் ஒரு பார்வை, ஈழநாடு சிறுகதைகள்: ஒரு பிராந்திய இலக்கிய வரலாற்று மூலநூல் ஆகிய சமூக, இலக்கிய கட்டுரைகளும் இதில் அடங்குகின்றன.

இக்கட்டுரை தேசம் சஞ்சிகையில் ஏற்கனவே வெளிவந்திருந்தது. காலப்பொருத்தம் கருதி மீண்டும் பிரசுரிக்கின்றோம்.

மோசடிக் கலாநிதிப் பட்டங்கள் தொடர்பான முன்னைய பதிவுகள்:

பட்டங்கள் கட்டி கல்வியையும் கல்வித் தகமையையும் மலினப்படுத்தும் உலகத் தமிழர் பல்கலைக்கழகம் https://www.thesamnet.co.uk//?p=90646  
தேசத்தின் செய்தியை அடுத்து பட்டம் வழங்கும் நிகழ்வைப் பிற்போட்டது உலகத் தமிழ் பல்கலைக்கழகம் https://www.thesamnet.co.uk//?p=90733

பொருளாதார வங்குரோத்தை மறைக்க பிரித்தானிய அரசு அகதிகளுக்கு எதிராகத் திரும்புகிறது! முன்னணி சட்டத்தரணி கணநாதன், லண்டன் வட்டுக்கோட்டை ஒன்றிய ஒன்று கூடலில்

பிரித்தானிய அரசு, தாங்கள் எதிர்நோக்கும் பொருளாதார வங்குரோத்தை மறைக்க அகதி அந்தஸ்து கோரும் விளிம்புநிலை மக்களை பகடைக்காயாகப் பயன்படுத்துவதாக அருண் கணநாதன் தேசம்நெற்க்குத் தெரிவித்தார். பிரித்தானியாவில் உள்துறை அமைச்சுக்கு எதிராக பல தஞ்சக் கோரிக்கை வழக்குகளை முன்னெடுத்து அவற்றில் சிலதை முன்மாதிரியான வழக்குகளாக்கியவர் சட்டத்தரணி அருண் கணநாதன். அவருடைய 25 வருடகால சட்ட சேவையை கௌரவிக்கும் வகையில் அவருக்கு கௌரவிப்பும் நடந்தது. அவரோடு மருத்துவ கலாநிதி லோகேந்திரன் மற்றும் பத்மநாபஐயர் ஆகியோரும் கௌரவிக்கப்பட்டனர். இந்கிழ்விற்கு முன்னாள் யாழ் நீதிபதி விக்கினராஜா பிரதம விருந்தினராக அழைக்கப்பட்டு இருந்தார்.

அருண் கணநாதன் யாழ் வட்டுக்கோட்டை சித்தங்கேணியைச் சேர்ந்தவர், இவர் கௌரவிப்பை ஏற்று சில வார்த்தைகள் குறிப்பிட்ட போது தற்போது பிரித்தானியாவில் அரசியல் தஞ்சம்கோருவோருக்கு எதிராக அரசு கடுமையான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகவும் அவற்றுக்கு எதிராக போராட்டங்களை நடத்த வேண்டும் என்றும் அதற்கு மக்களின் ஆதரவையும் வலியுறுத்தி இருந்தார். இதனை மக்கள் போராட்டங்களில் ஈடுபட வேண்டும் என்றே சபையினர் அர்த்தப்படுத்தி இருந்தனர். இது தொடர்பாக தேசம்நெற் விளக்கம் கேட்ட போது, சட்டப் போராட்டங்களையே தான் குறிப்பிட்டதாகவும் அரசியல் தஞ்சம்கோருவோரும் அவரைச் சார்ந்தவர்களும் தங்களோடு முழுமையாக ஒத்துழைத்தாலேயே நீதியைப் பெற்றுக்கொள்ளலாம் எனத் தெரிவித்தார். ‘அரசியல் தஞ்சம் கோருவோருக்கு நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கை உங்களிடம் இருக்கின்றதா’ என தேசம்நெற் கேட்டபோது, “பிரித்தானிய நீதிமன்றங்களில் அரசின் கொள்கைகள் மீது விசனம் கொண்ட பல நீதிபதிகள் இன்னும் உள்ளனர். நாங்கள் தக்கமுறையில் சட்டப் போராட்டங்களை முன்னெடுத்தால், நீதி கிடைக்கும். அந்த நம்பிக்கை எனக்கு உண்டு” என்றார்.

தற்போதைய கொன்சவேடிவ் கட்சியின் போக்குகளை மிகக்; கடுமையாக விமர்சித்த சட்டத்தரணி அருண் கணநாதன் இக்கட்சியும் இவர்கள் சார்ந்த வலதுசாரி ஊடகங்களும் துவேசத்தைத் தூண்டி அகதி அந்தஸ்து கோரும் விளிம்புநிலை மக்களுக்கு எதிராக துவேசிகளை ஏவிவிடுவதாகக் குற்றம்சாட்டினார். சில நாட்களுக்கு முன் தீவிர வலதுசாரியான ஒருவர் இங்கிலாந்தின் கென்ற் என்ற பகுதியில் உள்ள தி வியடக்ட் அகதிகள் தடுப்பு மையத்தின் மீது தாக்குதலை நடத்தி விட்டு தானும் தற்கொலை செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது. அதிஸ்ரவசமாக இத்தாக்குதலில் இருவர் மட்டுமே சிறு காயங்களுக்கு உள்ளாகினர். இத்தாக்குதலையடுத்து இங்கு தடுத்து வைக்கப்பட்டிருந்த 700 அகதி அந்தஸ்து கோரியோர் கென்ற் பகுதியில் உள்ள மேஸ்ட்ரன் தடுப்பு மையத்திற்கு பாதுகாப்பு காரணங்களுக்காக இடமாற்றப்பட்டனர்.

ஏற்கனவே மேஸ்ட்ரன் தடுப்பு மையம் தஞ்சம் கோருவோரோல் நிரம்பி வழிக்ன்றது. 1500 பேர்களை மட்டுமே கொள்ளக் கூடிய முன்னாள் இராணுவத்தளத்தில் அரசு 4,000 பேரைத் தடுத்து வைத்திருப்பதாகவும் அங்கு பலரும் நிலத்தில் படுக்க வேண்டி இருப்பதாகவும் பத்திரிகைச் செய்திகள் தெரிவிக்கின்றன. இந்நிலை ஹமன்ஸ்வேர்த் தடுப்பு மையத்திலும் உள்ளதாக சட்டத்தரணி அருண் கணநாதன் தேசம்நெற்க்குத் தெரிவித்தார். இத்தடுப்பு மையங்களின் பாதுகாப்பு தனியார் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டு இருப்பதாகவும் இந்நிறுவனங்கள் தஞ்சம்கோருவோரை மிருகத்தனமாக நடத்துவதாகவும் அருண் கணநாதன் குற்றம்சாட்டினார். இதனை உறுதிப்படுத்தும் செய்திகள் அண்மையில் பத்திரிகைகளிலும் வெளிவந்துள்ளது. இன்று ஹெமன்ஸ்வேர்த் தடுப்பு மையத்தில் மூன்று மணிநேரங்களுக்கு மின் விநியோகம் துண்டிக்கப்பட்டு இருந்ததாகவும் கணநாதன் சுட்டிக்காட்டினார்.

சில வாரங்களுக்குள்ளேயே மூன்று பிரதமர்களைக் கண்ட பிரித்தானிய பாராளுமன்றத்தில் பிரதமரும் அவருடைய முக்கிய அமைச்சர்களும் சிறுபான்மைச் சமூகங்களாக இருந்தபோதும் அவர்களுடைய அரசியல் கொள்கைத் திட்டங்கள் மோசமான வலதுசாரித் தன்மையுடையதாகவும் சிறுபான்மையினருக்கும் விளிம்புநிலை மக்களுக்கும் எதிரானதாகவே உள்ளது. குறிப்பாக பொறிஸ் ஜோன்சன் பிரதமாராக இருந்த போது உள்துறை அமைச்சராக இருந்த முன்னாள் அமைச்சர் ப்ரித்தி பட்டேல் அவரைத் தொடர்ந்து 44 நாட்கள் பிரதமராக இருந்து நாட்டின் பொருளாதாரத்தை ஆதாள பாதாளத்துக்கு இட்டுச்சென்ற லிஸ் ரஸ் பிரதமராக இருந்த போது உள்துறை அமைச்சராக நியமிக்கப்பட்ட சுவலா ப்ரவர்மன், தனது சொந்த மின் அஞ்சலைப் பயன்படுத்தி பாதுகாப்பு விதிகளை மீறியமைக்காக லிஸ் ரஸ்ஸால் பதவியில் இருந்து தூக்கப்பட்டவர். ஆனால் தற்போதைய பிரதமர் ரிஷி சுனாக் பதவியேற்றதும் சுவலா ப்ரவர்மன் மீண்டும் உள்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார்.

இவர் இந்திய வம்சாவழியாக இருந்த போதும் பிரித்தானியாவுக்கு குடிபெயரும் அகதிகள் பற்றி மோசமான கருத்துக்களை வெளியிடுவதுடன் வலதுசாரிகளையும் துவேசிகளையும் தூண்டிவிடும் வகையிலேயே கருத்துக்களை வெளியிட்டு வருகிறார். முன்னாள் உள்துறை அமைச்சர் ப்ரிதி பட்டேல் தஞ்சம் கோரி பிரித்தானியா வருபவர்களை ருவாண்டாவுக்கு அனுப்பி வைக்க அந்நாட்டு அரசோடு ஒரு உடன்படிக்கையைச் செய்துகொண்டார். அவருடைய காலப்பகுதியில் தஞ்சம் கோரியவர்களை ருவாண்டாவுக்கு அனுப்ப எடுத்த முயற்சி முற்றிலும் தோல்வி கண்டது. பிரித்தானியாவினதும் ஐரோப்பாவினதும் நீதிமன்றங்கள் பிரித்தானியாவின் உள்துறை அமைச்சின் ருவாண்டா திட்டத்துக்கு எதிராக தீர்ப்பு வழங்கின.

நிலைமை அப்படியிருக்கையில் சுவாலா ப்ரவர்மன் “பிரித்தானியாவுக்கு தஞ்சம் கோரிவருபவர்கனை ருவாண்டாவுக்கு அனுப்புவது தனது கனவு என்று குறிப்பிட்டிருந்தார். தற்போது இன்னுமொரு படி மேலே சென்று அகதிகள் படகுகளில் பிரித்தானியா மீது படையெடுப்பதாகத் தெரிவித்துள்ளார். வாழ்வதற்கு வழியற்று நிர்க்கதியாகி அகதிகளாக வருபவர்களை ‘படையெடுக்கிறார்கள்’ என்று சுவாலா ப்ரவர்மன் குறிப்பிட்டது, அகதி அந்தஸ்து கோருபவர்கள் தொடர்பான அவருடைய நிலைப்பாட்டை மிகத் தெளிவாக எடுத்துக்காட்டுகிறது.

பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகியது முதல் பிரான்ஸ் ஆங்கிலக் கால்வாய் ஊடாக படகு மூலம் பயணிப்பவர்கள் மீதான கண்காணிப்பை கைவிட்டது. பிரித்தானியாவின் எல்லையை பாதுகாப்பது தமது பொறுப்பல்ல என பிரான்ஸ் தீர்மானித்தது. இதனால் ஆங்கிலக் கால்வாய் ஊடாக பிரித்தானியாவுக்கு வருபவர்களின் எண்ணிக்கை ஆயிரம் ஆயிரமாக அதிகரித்து வருகின்றது. இது பிரித்தானியாவின் முன்யோசணையற்ற பிரிக்ஸிற் கோரிக்கையின் பலாபலன்.

ரிஷி சுனாக் அரசு என்ன தான் தீவிர வலதுசாரித்துவத்தின் பக்கம் சாய்ந்தாலும் 2024 இல் நடைபெறும் தேர்தலில் ரிஷி சுனாக் வேறும் காரணங்களோடு அவருடைய நிறத்திற்காகவும் பிரதமராக ஏற்றுக்கொள்ளப்படமாட்டார். ஆனாலும் இவர்கள் தங்களை தீவிர வலதுசாரி துவேசிகளுடன் இணைத்துக்கொள்வார்கள்.

300 பேர்வரை கலந்துகொண்ட இந்நிகழ்வை தேவசேனா மற்றும் சந்துரு ஆகியோர் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர். இந்நிகழ்வில் பல்வேறு கலை நிகழ்வுகளும் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. வட்டுக்கோட்டையின் விருந்தோம்பல் வெளிப்பாடாக உணவை விரயம் செய்யாமல் நிகழ்வில் கலந்துகொண்டவர்கள் வீட்டுக்கும் உணவை எடுத்துச் செல்லும் வகையில் ஒழுங்குகள் செய்யப்பட்டு இருந்தது. இந்நிகழ்வு மூலம் திரட்டப்படும் நிதி வட்டுக்கோட்டை தொகுதியில் உள்ள பின்தங்கிய பகுதிகளில் உள்ள முன்பள்ளிகளின் வளர்ச்சிக்கு வழங்கப்படும் என தேவசேனா தெரிவித்தார். குறிப்பாக காட்டுப்புலம் மற்றும் மூளாய் போன்ற பகுதிகளில் உள்ள முன் பள்ளிகளின் வளர்ச்சிக்கு இந்நிதி வழங்கப்படும் என அவர் குறிப்பிட்டு இருந்தார்.

இலங்கையின் வடக்கில் உள்ள சனத்தொகை அடர்த்தி கூடிய தொகுதி வட்டுக்கோட்டை என்பது குறிப்பிடத்தக்கது. இலங்கையில் கொழும்பிற்கு அடுத்ததாக புதிய ஸ்ரைல் வருவது வட்டுக்கோட்டையிலும் மானிப்பாயிலும். காரணம் இப்பகுதிகளில் கிறிஸ்தவர்களின் தாக்கம் கணிசமான அளவில் காணப்பட்டமை. துரதிஸ்ட் வசமாக சாதிய முரண்பாடு அன்று மட்டுமல்ல இன்றும் கூர்மையாக உள்ள பிரதேசங்களில் வட்டுக்கோட்டையும் ஒன்று. இவை எல்லாவற்றுக்கும் மேலாக இன்றைய அரசியலைத் தீர்மானிக்கும் ‘தமிழீழ பிரகடனம்’ செய்யப்பட்டது வட்டுக்கோட்டையில் உள்ள பன்னாகம் என்ற இடத்திலேயே. இலங்கைத் தமிழர்களின் வரலாற்றை வட்டுக்கோட்டையைத் தவிர்த்து எழுத முடியாது. சோமசுந்தரப் புலவர், எதிர்க்கட்சித் தலைவர் அமிர்தலிங்கம், அல்பிரட் துரையப்பா, ரெலி ஜெகன் என்று முக்கிய புள்ளிகளும் இம்மண்ணில் வாழ்ந்துள்ளனர்.

ஆமை புகுந்த வீடும் ராகவன், நிர்மலா, ஷோபாசக்தி புகுந்த இலக்கியச் சந்திப்பும்! : பாகம் 34

களுதாவளையிலிருந்து பாரிஸ் வரை
ஒர் அரசியல் போராளியின் வாழ்வின் பயணம்!

அசோக் யோகன் கண்ணமுத்துவுடன் ஒர் உரையாடல்! : தோழர் அசோக் யோகன் கண்ணமுத்துவின் சாட்சியம் பகுதி 34 (ஒலிப் பதிவு செய்யப்பட்ட திகதி 13.08.2021). இந்த உரையாடல் அசோக் யோகன் கணணமுத்துவின் பேச்சுமொழியில் எந்த மாற்றமும் இன்றி பிரசுரமாகின்றது.

தேசம்: நாங்கள் பரிசில் நடந்த கலை இலக்கிய முரண்பாடுகள் பற்றி கதைத்துக் கொண்டிருக்கிறோம். அதுல நீங்கள் சொல்லி இருந்தீர்கள் எக்ஸில் முரண்பாடு. அன்றைக்கு முக்கியமாக ஷோபாசக்தி அந்த முரண்பாட்டை தூண்டியதாக குற்றம்சாட்டி இருந்தீர்கள். அது என்ன மாதிரி நடந்தது? எக்ஸில் அது என்ன பிரச்சனை?

அசோக்: எக்சில் சஞ்சிகையில் ஏற்பட்ட முரண்பாடுகள் கோட்பாடு சார்ந்த பிரச்சனை இல்லைத்தானே கோட்பாடுகளில் சினேக முரண்கள்தோன்றினால் விவாதங்கள், உரையாடல்கள், கற்றல்கள் முலம் தீர்த்துக் கொள்ளலாம். கோட்பாடு ரீதியான பெரிய முரண்பாடுகள் வந்தா ஒன்று சேருவதற்கான சந்தர்ப்பங்கள் இல்லாமல் போகும். இது தனிப்பட்ட முரண்பாட்டில் இருந்து தான் தோற்றம் பெறுது. இங்க கோட்பாடும் இல்லை. சித்தாந்த பிரச்சனையும் இல்லை. முழுக்க முழுக்க தனிநபர் முரண்பாடுகள்தான். இங்க ஈகோ பிரச்சனைதான். இதை இலகுவாக தீர்த்திருக்க முடியும். திட்டமிட்டு சாதிய முரண்பாடாக்கி ஊதிப் பெருக்கடி வைத்த புண்ணியம் நம்ம சோபாசத்தியைத்தான் சாரும். இந்த காலகட்டத்திலதான் தமிழ்நாட்டில் தலித்திய இலக்கிய அரசியல் ஏழுச்சி கொள்ளுது. அப்ப இந்த தனிப்பட்டமுரண்பாடுகளை சாதிய பிரச்சனை சார்ந்த முரண்பாடாக கட்டமைத்தால் இவர்களுக்கு சாதகம் என சோபாசக்தியின் சாணக்கிய மூளை கணக்குப்போட்டு இருக்கும்.

தேசம்: இதுக்குள்ள சாதிய முரண்பாடு என்று சொல்லுற அளவுக்கு இல்லை. பெரும்பாலும் இதுக்குள்ள அரசியல்ரீதியாக இருந்தவர்கள் எல்லாருமே ஏதோ ஒரு வகையில் சாதிய எதிர்ப்பை கொண்டவங்கதானே.

அசோக்: தனி நபர் முரண்பாட்டை கூர்மையாக்க மற்றவர்களின் ஆதரவை பெற கலைச்செல்வன், லக்சுமி ஆட்கள் மீது இவ்வாறன குற்றச்சாட்டை வைக்க வேண்டிய தேவை அவங்களுக்கு வருகிறது. இந்த முரண்பாட்டிக்கு நீங்கள் நியாயம் கற்பிப்பதற்கான தேவை ஒன்று ஏற்படும் தானே. ஒவ்வொரு சாதியிலும் பிறப்பது தற்செயல் நிகழ்வு. ஆதிக்க சாதியான வேளாளர்கள் என்று சொல்லப்படுகின்ற சமூகத்தில் பிறக்கிற ஆட்களை வந்து முழுக்க முழுக்க எங்கள் மீதான ஒடுக்குமுறையாளர்கள் என்று கருத இயலாது. ஏனென்றால் அதிலும் நல்ல சக்திகள் உண்டு. ஒடுக்குமுறைக்கு எதிராக செயற்படுகின்ற இடதுசாரி கருத்தியல் கொண்ட ஆட்கள் இருப்பார்கள். இலங்கையில் நடந்த சாதிய எதிர்ப்புப் போராட்டங்களை கவனித்தம் என்றால் அந்த போராட்டங்களில் தீவிரமாக முண்ணனி வகித்தவங்க வேளாள சமூகத்தை சேர்ந்த தங்களை சாதிய தற்கொலை செய்து கொண்ட இடதுசாரிய கருத்தியல் கொண்ட தோழர்களாக இருப்பாங்க.

எங்களை ஒடுக்கிற ஆதிக்கம் செலுத்துகிற தங்களின் சுய சாதியிலிருந்து விடுபட்டு தோழமையோடு எம்மை நோக்கி வருகின்ற சக்திகளை நாம் சாதியின் பெயரால் புறம் தள்ளக் கூடாதுதானே. இவங்களிட்ட சாதியம் தொடர்பான எந்த புரிதல்களும் இருக்கல்ல. கோட்பாட்டு அரசியலும் இருக்கல்ல. தங்களை முதன்மைப்படுத்துற அடையாள சிக்கல்தான் இவங்களிட்ட இருந்தது. இது கலைச்செல்வன், லக்சுமி பக்கத்திலிருந்து பறிக்கப்படுவதாக இவங்க நினைக்கும் போது இந்த முரண்பாடுகள் வருகிறது. இவங்களால சொல்லப்பட்ட குற்றச்சாட்டுகள் இருக்குதானே அந்தக் காரணங்கள் எல்லாம் வந்து சோடிக்கப்பட்ட கட்டுக்கதைகள் ஆகத்தான் இருந்தது. அதற்கான உருவாக்கத்திற்கான பின்புலமாக சோபாசக்தி தான் இருந்தவர். சோபாசக்தி நினைத்திருந்தால் அந்த பிரச்சனையை தீர்த்து இருக்கலாம்.

நான் எப்பவுமே புலிகள் மீதான விமர்சனத்தை வைப்பதற்கான காரணம் என்னவென்றால் புலிகள் எப்பவுமே ஒரு ஜனநாயக அமைப்புகளை ஜனநாயக சக்திகள் ஒன்று கூடுவதை எப்பவுமே விரும்புவது இல்லை. எங்க போராட்ட வரலாற்றை எடுத்து பார்த்தீர்களென்றால் ஈழத்தில் தமிழ்ப் பிரதேசங்களில், புகலிட நாடுகளில் சகல ஜனநாயக அமைப்புகளை உடைத்தது எல்லாம் புலிகள்தான். அதுக்குள்ள ஊடுருவுவார்கள் அல்லது அப்படியே உள்வாங்குவார்கள். அல்லது அதிகாரத்தை பயன்படுத்தி அப்படியே இல்லாமல் ஆக்குவார்கள். இதில் அபத்தம் என்னவென்றால் கலைச்செல்வன், லக்சுமி ஆளுமைக்குள் உட்பட்டிருந்த இவங்கள், சுயநலப்போக்கும், மோசமான அரசியலும் கொண்ட பிழையான சத்தியான சோபாசக்தியின் வலையில் சிக்கிக் கொண்டதுதான்.

தேசம்: புலிகள் எதையுமே உருவாக்கினது கிடையாது…

அசோக்: ஷோபாசக்தி புலிகளில் இருந்து வந்தபடியால் அவரிடமும் அந்த இயல்பு இருக்கும்.

நான் முதலே சொல்லிஇருக்கிறன் புலிகளிடமிருந்து வந்த யாரையும் நம்புவதும் இல்லை, நான் ஏற்றுக்கொள்வதும் இல்லை. போராளிகள் பற்றியதல்ல இந்த அபிப்பிராயம். புலிகளில் குறிப்பிட்ட மட்டங்களில் கருத்தியல் சார்ந்து இயங்கிய எல்லாரிடமும் தங்களைத் தவிர ஏனைய அமைப்புகள் உருவாகுவதையோ ஏனைய சக்திகள் உருவாகுவதையோ அவங்கள் விரும்புவது இல்லை. ஒரு இலக்கிய சஞ்சிகையோ, இலக்கிய சந்திப்போ சாதாரண அமைப்புகள் கூட தங்களை வரக்கூடாது என்றுதான் விரும்புவார்கள்.

தேசம்: தங்கட கட்டுப்பாட்டுக்குள் இருக்க வேண்டும் என்று நினைக்கினம்…

அசோக்: அப்படி தங்கட கட்டுப்பாட்டுக்குள் இல்லையென்றால் உடைப்பார்கள் அல்லது அவர்கள் மீது ஏதும் அதிகாரத்தை பிரயோகிப்பார்கள். இலக்கிய சந்திப்புக்கும் அதுதான் நடந்தது. எக்ஸிலுக்கும் அதுதான் நடந்தது.

தேசம்: நீங்கள் இதே குற்றச்சாட்டை தான் ராகவன் நிர்மலா நித்தி மீதும் வைத்தீர்களா?

அசோக்: என்னைப் பொருத்தவரை இவர்கள் புலிகளை எதிர்க்கின்ற இன்னொரு புலிகள்தான். அதுல நீங்கள் ராகவன் ஆக இருந்தால் என்ன, நித்தியானந்தனாக இருந்தா என்ன நிர்மலாவாக இருந்தால் என்ன, முழு பேரும் அந்த மனோநிலையோடு, அந்த அந்த ஆதிக்க உளவியல் கட்டமைப்போடுதான் சிந்திப்பாங்க செயற்படுவாங்க. இவர்களை எல்லாம் ஒரு ஜனநாயக சக்தியாக நான் ஒருபோதும் பார்க்கவில்லை. ஏனென்றால் இருக்கிற முரண்பாடுகளை தீர்க்கின்ற நபர்களாக அவர்கள் எப்பொழுதும் இருந்ததில்லை. முரண்பாடுகளை கூர்மையாக்கி, குழுவாதத்தை உருவாக்கி தாங்க நினைப்பதை சாதிப்பாங்க. அதற்கு நாங்களும் துணை போவம். நீங்க பார்த்தீங்க என்றால் இவங்களுக்கு பின்னால் நாங்கதான் போனோமே தவிர எங்களுக்கு பின்னால் அவங்க வரவில்லை. தங்களின் அதிகாரத்தில் மேலாதிக்கத்தில் அவங்க கவனமாக இருந்தாங்க.

எல்லாத்தின் உடைவுகளுக்கும் மூல காரணங்களை தேடி போனீர்கள் என்றால் புலிகளில் இருந்த பழைய உறுப்பினர்களாக தான் இருப்பார்கள். ஒன்று சோபாசக்தி ஆக இருக்கும் ஒன்று ராகவன் ஆக இருக்கும், ஒன்று நிர்மலாவாக இருக்கும், இவர்கள்தான் பின்புலமாக இருந்திருப்பார்கள். இலக்கியச் சந்திப்புகளின் உடைவுகளை தேடி போனீர்கள் என்றால் முடிவு அங்க தான் இருக்கும். ஆனா என்னதான் உடைவு இருந்தாலும் சோபாசக்தி, ராகவன், நிர்மலா எனைய முன்னாள் புலிகள் இவங்களுக்குள்ள ஒற்றுமை இருக்கும். ஒரே அணியில இருப்பாங்க. யோசித்துப்பாருங்க. புலிகளின் வன்முறைகளுக்கும் கொலைக் கலாச்சாரத்திற்கும் எதிராக புகலிடத்தில் செயற்பட்ட TBC ரேடியோவுக்கு என்ன செய்தார்கள்? உங்க தேசம் இணையத்தளத்தை முடக்க தங்களின்ற குழுவாத கும்பல்களோடு சேர்ந்து கையெழுத்து வேட்டை நடத்தினாங்களே. இதையெல்லாம் எந்த நோக்கத்தில் செய்தாங்க.

தேசம்: புலிகள் என்பதும் எங்களுடைய சமூகத்தின் ஒரு உற்பத்தி தானே. நீங்க சொல்லுற இந்த குணாம்சம் இந்தப் பிரிவிடம் மிகக் கூடுதலாக இருக்கு என்று சொல்லவாறீர்களா?

அசோக்: எனக்கு ஆச்சரியம் என்னவென்றால் இந்தக் குணாம்சம் கொண்டவர்கள்தான் புலிகளிடம் போகிறார்களா அல்லது புலிகளுக்கு ஒரு சிந்தனை முறை இருக்குதானே புலிகளுடைய பயிற்றுவிப்பு கல்வியூட்டல்கள் சிந்தனை முறை இருக்குதானே அது இப்படித்தான் இவர்களை உருவாக்கிறது. தங்களை மீறி யாரும் வரக்கூடாது என்று. ஜனநாயக சக்திகளோ, தங்களை கேள்வி கேட்கின்றவர்களோ தங்கட இருப்புக்கு அது தடையாக இருக்கிறது என்று நினைப்பார்கள். தங்கட இருப்புக்கு ஒரு அமைப்பு சாதகமாக இருக்கும் பட்சத்தில் அதைப் பயன்படுத்திக் கொள்ள நினைப்பார்கள். இல்லாதபட்சத்தில் அதை அழிப்பார்கள். இல்லாட்டி இவ்வளவு ஆரோக்கியமான இலக்கியச் சந்திப்புக்கு கடைசியில் என்ன நடந்தது?

இன்னொன்றையும் நீங்க அவதானிக்கலாம். புலிகள் பலரிடம் இந்த திறமை இருக்கு. எங்கட பலவீனங்களை கண்டு பிடித்து அதற்கு தீனி போடுவாங்க. பலரும் இவங்க பின்னால் அலைவதற்கு இதுவும் ஒருகாரணம். முற்போக்காளர்கள் என்று சொல்லிக் கொள்கிற நாங்க தனிப்பட்ட வாழ்வில் மிகமிக பலவீனமானவங்க. அத அவங்க தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்கிறாங்க. எவ்வளவுதிறமை சாலி அவங்க பாருங்க.

தேசம்: இலக்கிய சந்திப்பு எப்படி இப்படி உடைந்தது ?

அசோக்: இலக்கியச் சந்திப்பின் உருவாக்கம் சிறு சஞ்சிகைகளினுடைய ஆசிரியர்களின் வாசகர்களின் இணைவாக இருந்து ஒரு காலகட்டத்தில் அராஜகங்களுக்கு எதிரான ஒரு வடிவமாக வருது ஜனநாயகத்தையும், அதிகார எதிர்ப்பையும் முன்னிலைப்படுத்திய புகலிட இலக்கியச்சந்திப்பை சார்ந்தவர்கள், விடுதலைப் புலிகளால் புகலிடத்திலும், இலங்கையிலும் இருந்த அச்சுறுத்தலால், விடுதலைப் புலிகளின் எதிர்ப்பாளர்களாக இருந்தது இயல்பாக இருந்தது. அனைத்து அடக்குமுறைகளுக்கும் எதிரான ஒரு இயல்பான அரசியல் அதுக்குள்ள மேலோங்கியிருக்கிறது.

நான் முதலாவது இலக்கிய சந்திப்பில் தொண்ணூற்றி மூன்றாம் ஆண்டு கலந்து கொள்கிறேன். அதுக்குப் பிறகு இரண்டு இலக்கிய சந்திப்பு பாரிசில் நடந்தது. அதை நாங்கள் லக்ஷ்மி, கலைச்செல்வன், புஸ்பராஜா, அசோக் பிரகாஸ், கிருபன், மோகன், உதயன், யோகராஜா நடத்தினோம். நாங்க எல்லா இலக்கிய சந்திப்புக்கும் போவோம். ஜெர்மனியில்தான் அதிகம்தான் நடந்தது. 2009 மே முள்ளிவாய்க்கால் படுகொலைகளின் பின்பு நிலைமை நிலமை மாறிப் போய்விட்டது. முள்ளிவாய்க்கால் பிரச்சனைக்குப் பிற்பாடு இலக்கிய சந்திப்பு ஒரு டேர்ன் எடுக்குது. முழுக்க முழுக்க புலிகள் அழிக்கப்பட்டதன் பிற்பாடு பாரிசில் நடந்த இலக்கிய சந்திப்பில் இலங்கை அரசு சார்பான ஒரு போக்கை அவர்கள் எடுக்கிறார்கள். அந்த எடுவைக்கு காரணம் அதுக்குள்ள இருந்த ஒரு சக்திதான். அதுல தலித் முன்னணி முக்கியமான ஆட்கள். அதுல ஷோபா சக்தியும் இருந்தவர். அடுத்தது ராகவன் ஆட்களும் அதுக்குள்ள இருந்தார்கள்.

புலிகள் மீது கடும் விமர்சனம் இருக்கு. முள்ளிவாய்க்கால் தொடர்பாக. பொதுமக்கள் அழிக்கப்பட்டதற்கான அடிப்படைக் காரணம் புலிகளுடைய நடவடிக்கையும் ஒன்று. அது விமர்சிக்கப்பட வேண்டியது. புலிகள் மீது கடும் குற்றச்சாட்டுகள் வைக்கப்பட வேண்டியது. அதற்காக நீங்கள் பேரினவாத அரசின் ஆதரவு சக்தியாக மாற முடியாது. நான் முள்ளிவாய்க்கால் படுகொலையை ஒரு இனப்படுகொலை என்றுதான் பார்க்கிறேன். அது தொடர்பாகக் கருத்து முரண்பாடு இருக்கலாம். மிக மோசமாக கொத்துக் கொத்தாக மக்கள் படுகொலை செய்யப்பட்டதை மறந்து இலங்கையில் ஜனநாயக சூழல் உருவாகிவிட்டது, ஜனநாயக இடைவெளி ஏற்பட்டுவிட்டது என்று சொல்லி இலங்கைப் பேரினவாத அரசு ஆதரவு நிலை கொண்டு நடத்தும் போது எப்படி எங்களால் ஏற்றுக் கொள்ளமுடியும். எப்படி நாங்கள் கலந்து கொள்ள முடியும்? அப்போ நான் அதில் இருந்து ஒதுங்கிக் கொண்டேன். இலக்கிய சந்திப்பின் பிரதான நோக்கத்தையே குழிதோண்டி புதைத்து விட்டார்கள்.

அதற்கு பிற்பாடு லண்டனில் நடந்த இலக்கிய சந்திப்பில் முரண்பாடு வருகிறது. இலக்கிய சந்திப்பை இலங்கைக்கு கொண்டு செல்வதற்கான முயற்சி நடக்குது. இந்த இலக்கிய சந்திப்பு புகலிடத்திற்காக, அதன் அரசியல் இலக்கிய சமூக வெளிக்காக உருவாக்கப்பட்டது. எனவே, இலங்கைக்கு கொண்டு போக முடியாதென்று என்று பலரும் இதை எதிர்க்கிறாங்க. புகலிட இலக்கியச் சந்திப்பை இலங்கைக்கு கொண்டு போவதற்கான அவசியம், காரணம் என்ன என்ற முக்கியமான கேள்வி எங்களுக்கு எழுகிறது

தேசம்: புகலிடத்திற்காக உருவாக்கப்பட்ட இலக்கிய சந்திப்பை ஏன் இவர்கள் இலங்கைக்கு கொண்டு போக விரும்புகின்றார்கள்?

அசோக்: நல்ல கேள்வி. இவங்க முழுப்பேர்களுமே குறிப்பாக தலித் முண்ணனி, பிள்ளையான் அணி, ராகவனும் அவருடன் சேர்ந்த ஆட்களைப் பார்த்தீர்கள் என்றால், வெறும் இலங்கை அரசு ஆதரவாளர்களாக இருந்தார்களே தவிர தனித்துவ அடையாளங்கள் அற்றவங்க இவங்க. ஆழமான அரசியல் புரிதல்களோ, இலக்கிய ஆற்றலோ அற்றவங்க. இவங்க இலங்கைக்கு, வெறும் இலங்கை அரச விசுவாசத்தோடு தமிழ்ப் பிரதேசங்களுக்கு செல்லமுடியாது. அங்க யாரும் இவர்களை கவனிக்க மாட்டார்கள். அப்ப இவங்களுக்கு அடையாளம், ஒரு அமைப்பு தேவைப்படுகிறது. இலக்கிய சந்திப்புக்கு ஒரு வரலாற்று தடம் பங்களிப்பு இருக்கிறது. இலக்கிய சந்திப்பு பற்றி இலங்கையில் பெரிய எதிர்பார்ப்பு உண்டு. அப்ப இந்த இலக்கிய சத்திப்பினுடாக, அங்கு தங்கட அடையாளத்தை, இருத்தலை நிறுவ முயலுறாங்க இதுதான் நடந்தது.

தேசம்: இதை உங்களைப் போன்றவர்கள் எதிர்க்க வில்லையா?

அசோக்: இவர்கள் இலங்கை அரசு ஆதரவு நிலைப்பாடு எடுத்ததன் பின் இந்த இலக்கிய சந்திப்பில் கலந்து கொள்வதை நான் விட்டுட்டன். ஆனா இவர்களின் இந்த செயற்பாட்டிக்கு எதிராக கடும் கண்டனங்களை எதிர்ப்பை பதிவு செய்திருக்கிறன். நான் சிறிரங்கன், நாவலன் பலர் இதுபற்றி எழுதியுள்ளோம்.

இலங்கைக்கு கொண்டு போவதற்கு இவங்க முடிவு செய்த லண்டன் இலக்கிய சந்திப்பில் பலர் இதனை எதிர்த்திருக்காங்க. கிருஸ்ணராஜா, லட்சுமி, சுசிந்திரன், றஞ்சி, சிவலிங்கம் தோழர் போன்றவங்க. புலம்பெயர் இலக்கியச் சந்திப்பு இது. நீங்கள் நாட்டுக்கு கொண்டு போக இயலாது என்று. அதை மீறித்தான் அவங்க அங்கு கொண்டு போகிறார்கள். அப்போ இந்த ஜனநாயகப் பண்பை எப்பவும் ஏற்கவில்லை தானே இவர்கள். நாங்கள் எதற்காக ஒரு அமைப்பை உருவாக்கினோம், எதனை நோக்கி உருவாக்கினோம் என்ற அடிப்படை அம்சங்கள் எல்லாவற்றையும் இல்லாமலாக்கிப்போட்டு, நீங்கள் உங்களுடைய சுயநலத்துக்காக, உங்களுடைய அரசியலுக்காக கொண்டு போகின்ற போக்கு இருக்குதானே அது எனக்கு பெரிய அதிருப்தியாக இருந்தது.

இந்த ஜனநாயகத் தன்மை கொண்ட இலக்கிய சந்திப்பை தங்களின்ற அதிகார மேலாண்மை இருத்தலுக்காக பயகன்படுத்திக் கொண்ட இந்த நபர்களை பார்த்தால், இவங்களின்ற இந்த இலக்கிய சந்திப்பு தொடர்பு இடைக்காலத்தில்தான் ஏற்பட்டது. ஆனால் இந்த குறுகிய காலத்தில் தங்களுக்கேற்ற குழுவாதத்தை முரண்பாட்டை உருவாக்கி இலக்கிய சந்திப்பை தங்கள் உடமையாக்கிக் கொண்டாங்க. இதனைத்தான் நான் புலிக்குணம் என்றது. இதுதான் எனக்கு இருந்த விமர்சனமே தவிர தனிப்பட்ட ரீதியில் இவங்களோட எந்த முரண்பாடுகளும் எனக்கில்லை. சந்திக்கும்போது கதைப்பதுண்டு. அதேநேரம் கருத்துக்களும் விமர்சனங்களும் எனக்கு இருக்கும். இங்க ஒன்றை பதிவு செய்யணும். இவங்கட முரண்பாட்டிக்கு பிறகு இவங்க வெளியிட்ட எக்சில் சஞ்சிகையின் அட்டையில் லக்சுமியைபற்றி மிக மோசமாக தாக்கி எழுதி இருந்தாங்க. ஒரு இலக்கிய சஞ்சிகையின் அட்டையில் ஒருவரை தாக்கி மோசமாக எழுதி வெளியிட்ட பெருமை இவங்களைத்தான் சாரும்.

 

இங்கிலாந்தில் மோசடிகள் அதிகரிக்கின்றது! தமிழர்கள் தமிழர்களையே மோசடி செய்கின்றனர்!!!

இங்கிலாந்தில் பல்வேறு விதமான மோசடிகள் தொடர்ந்து வருவதும் இந்த மோசடிகளினால் அப்பாவிகள் பலர் பாரிய இழப்புகளுக்கும் உள்ளாகி வருவதும் தொடர்கதையாகி வருகின்றது. வியாபாரம், இலாப மீட்டுவது என்ற பெயரில் ஊரையடித்து உலையில் போடும் வேலைகளில் பலர் ஈடுபட்டு வருகின்றனர். லண்டன் தமிழர்கள் சிலரும் தங்களை சமூகத் தலைவர்களாகக் காட்டிக்கொள்பவர்களும் கூட இவ்வாறான இழிசெயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். பணத்தை எப்படியாவது ஈட்டலாம் அதுவே தங்களது திறமை எனக்கருதும் இந்த உதவாக்கரைகள் தனிப்பட்ட பலரின் வாழ்க்கையை நாசமாக்குவதற்கு துணை போகின்றனர்.

இந்த மோசடிகளில் பெரும் இழப்பை ஏற்படுத்துவது வீட்டை வைத்து மேலதிக கடன்பெற்று முதலீடு செய்வது தொடர்பான மோசடிகள். ஹரோவில் இளம் தம்பதியினர் இவ்வாறான மோசடிகளில் ஈடுபட்டதாக பாதிக்கப்பட்ட சிலர் ஆதாரங்களை வழங்கி உள்ளனர். அவர்களுக்கு எதிராக தற்போது சட்ட நடவடிக்கைகளும் தயாராகி வருகின்றது. ஒரு வயதான தம்பதிகள் இவ்வாறான ஒரு முதலீட்டு திட்டத்தில் 200,000 பவுண்களை வழங்கி கடந்த சில மாதங்களாக எவ்வித வருமானத்தையும் பெறாமல் அவர்கள் இருக்கின்ற வீடே தற்போது வங்கியினால் விற்கப்படும் அபாய நிலைக்கு வந்துள்ளது. இவ்வாறு பலர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

மேலும் வீடுகளை வாங்குவதற்கு சட்டத்தரணிகளுக்கு செலுத்தப்படுகின்ற பணத்தை ஒரு சில சட்டத்தரணிகள் கையாடல் செய்துவிட்டு தலைமறைவாகி உள்ளனர். இவ்வாறு வீட்டை வாங்கவதற்கு வாங்குபவர்களிடம் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக 100,000 பவுண் வரை செலுத்திய தம்பதியினர் வீடும் வாங்காமல் அவ்வளவு பணத்தையும் இழந்து தொடர்ந்தும் வாடகை வீட்டில் வாழ நிர்ப்பந்திக்கப்பட்டு உள்ளனர்.

பப் அல்லது பார் – தவறணை நடத்துகிறோம் என்ற பெயரில் அரை நிர்வாண நடனங்களை ஏற்பாடு செய்து அவ்வாறான இடங்களில் போதைப்பொருட்களையும் கண்டும் காணாமல் அனுமதித்து இளம் சமூதாயத்தை அழிக்கும் தொழிலிலும் ஒரு சில தமிழ் தவறணை உரிமையாளர்கள் ஈடுபட்டு உள்ளனர்.

அதீதமாக ஆசைப்பட்டு இல்லாதவர்களை ஆவணங்களில் உருவாக்கி தனிப்பட்ட மோசடிகளில் ஈடுபட்டு இருந்ததையும் இழந்துகொண்டிருக்கின்றனர். இவர்கள் வீட்டையும் வைத்துக் கொண்டு அரச உதவிகளையும் எடுக்கும் பேராசையில் வீட்டை அவணங்களில் ஒருவரை உருவாக்குவது அல்லது இன்னொருவரின் பெயரில் வீட்டை மாற்றுவது போன்ற மோசடிகளும் தொடர்ந்து இடம்பெறுகின்றது. பெரும்பாலும் ஐரோப்பிய நாடுகளில் இருந்து வருவபவர்கள் இங்குள்ளவர்களின் பெயர்களில் வீட்டை வாங்கி அந்த வீட்டில் இருந்துகொண்டே அரச உதவியை எடுப்பது போன்ற பல்வேறு மொள்ளமாரித்தனங்களிலும் ஈடுபடுகின்றனர்.

கிறடிட்காட் மோசடி மிகச் சாதாரணமான மோசடியாக இன்னமும் காணப்படுகின்றது. அண்மையில் கிங்ஸ்ரன் மருத்துவமனையில் மரணமானவரின் கிறடிட் காட்களை காணவில்லை என அவருடைய குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர். சில சந்தர்ப்பங்களில் கிறடிட் காட் தொலைத்துவிட்டதாக தாங்களே முறைப்பாடு செய்துவிட்டு அதனை பயன்படுத்திய சம்பவங்களும் சாதாரணமாக நடைபெற்று வருகின்றது. இவ்வாறானவர்கள் சிலர் மாட்டுப்பட்ட சம்பவங்களும் நடைபெற்றுள்ளது.

பிரித்தானிய பிரதமரே தன்னுடை இல்லத்தைத் திருத்துவதற்கான செலவை மூடி மறைத்த மோசடி தேசிய ஊடகங்களில் இன்னமும் ஓய்ந்தபாடில்லை. இந்த நேர்மையின்மை சமூகத்தின் பல்வேறு மட்டங்களிலும் வெளிப்பட்டு வருகின்றது. முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் ரம் 13 தடவைகள் பாங்கிரப்சி செய்து ஜனாதிபதியானார். இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மதப் படுகொலைகளுடன் சம்பந்தப்பட்டவர் என்ற குற்றச்சாட்டு இன்னமும் பலமாக உள்ளது. மோசடிகளைச் சகித்துக்கொள்கின்ற சமூகம் ஒன்று உருவாகிக்கொண்டு இருக்கின்றது.

குட்டியின் கடைசி நிமிடங்கள் – நட்பு என்பது எதுவரை…

என்னுடைய அண்ணன் 1989 இல் தமிழீழ விடுதலைப் போராட்டம் என்ற பெயரில் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்திற்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையே நடந்த மோதலில் கொல்லப்பட்ட போது அவனுக்கு வயது வெறும் 23. மரணத்தின் வலியை உணத்திய மரணம். அவனது உடல் கூடக் கிடைக்கவில்லை. போராடப் போனவர்கள் முட்டாள்களா? போராட்டத்தை முன்னெடுத்தவர்கள் முட்டாள்களா? அல்லது எமது போராட்டமே முட்டாள்தனமானதா? இதற்கு விடை கிடைக்கவில்லையா அல்லது விடையை அறியத் தயாரில்லையா தெரியவில்லை. ஆயிரக்கணக்கான உயிர்களைப் பலிகொடுத்துவிட்டும், அதிமுட்டாள்தனமான அரசியலை இன்றும் முன்னெடுக்கின்றோம்.

2003இல் என் தந்தையார் தனது அறுபதுக்களில் மாரடைப்பால் மரணித்த போது, நான் லண்டனில். மரணச் செய்தி எனக்கு கிடைத்த போது தகனக் கிரியைகள் கூட முடிந்துவிட்டது. என்னிரு உறவுகளினதும் மரணத்திற்கு அருகில் நான் நிற்கவில்லை. பார்க்கவில்லை.

2001 செப்ரம்பரில் இரட்டைக் கோபுரங்களில் இருந்து மனிதர்கள் இறந்து கொண்டிருந்ததை நேரடியாக லைப்பாக பார்த்துக்கொண்டிருந்தேன். உலகமே பார்த்துக்கொண்டிருந்தது. உயிரைக் காக்க மாடிகளில் இருந்து குதித்து மரணத்தை தழுவிக்கொண்டிருந்தனர். விமானம் மோதி அதன் எரிபொருள் எரிந்து மக்கள் கருகிச் செத்துக்கொண்டிருந்ததை பாரத்தோம். அவர்களுக்கும் எனக்கும் இடையே மனிதம் என்பதைத் தவிர எந்த உறவும் இருக்கவில்லை. இந்த மரணங்களுக்கும் எனக்கும் பல்லாயிரம் மைல் இடைவெளி.

இப்போது கடந்த 12 மாத காலத்திற்குள் என்னோடு எவ்வித இரத்த சம்பந்தமுமற்ற நெருக்கமான இரு நட்புகளை முற்றிலும் மாறுபட்ட சூழலில் இழந்துள்ளேன். இந்த இரு நட்புகளோடும் இரு தசாப்தங்களுக்கு மேலான ஒரு உறவு இருந்தது. வண்ணத்துப் பூச்சிவிளைவு – butterfly effect என்பார்கள் அது போல் தான் இதுவும். உலகின் ஒரு மூலையில் வண்ணத்துப் பூச்சி பறக்க அந்த வண்ணத்துப் பூச்சியின் அசைவு மலரை அசைக்க மலரின் அசைவு கிளையை அசைக்க கிளையின் அசைவால் … என்று போய் உலகின் இன்னொரு மூலையில் புவிநடுக்கம் ஏற்பட்டது போல்தான்.

1954 நவம்பர் 26இல் வண்ணத்துப்பூச்சி ஏதும் செய்திருந்தால் 1987இல் இந்திய அமைதிப்படை இலங்கை வந்திருக்காது. நான் யாழ் வட்டு இந்துக் கல்லூரியிலேயே படித்துக் கொண்டிருந்திருப்பேன். சிவஜோதியையோ மற்றும் யாழ் விக்ரோரியாக் கல்லூரி நண்பர்களையோ சந்தித்திருக்க வாய்ப்பில்லை. அவன் எனக்கு ஒரு முகவரியற்ற மனிதனாக இருந்திருப்பான். ஆனால் எங்கோ பறந்த வண்ணத்துப் பூச்சியின் விளைவால் நண்பர்களானோம். மரணப் படுக்கையில் இருந்தபடியும் லிற்றில் எய்டைப் பற்றி பேசினான். இன்று அவன் துணைவிக்கு நான் உடன் பிறவா சகோதரன். லிற்றில் எய்ட் னை அவன் விட்டுச் சென்ற இடத்தில் இருந்து சுமக்கின்றார்.

அதேபோல் 1991இல் ஸ்பெயினில் நாங்கள் தரையிறக்கப்படாவிட்டால் சுவிஸ்லாந்தில் அகதி அந்தஸ்து கோரியிருப்பேன். சஞ்சீவ்ராஜ் என்ற குட்டியை சந்தித்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் எங்கோ பறந்த வண்ணத்துப் பூச்சியின் விளைவால் ஸ்பெயினில் நாங்கள் மாட்டினோம். திருப்பி அனுப்பப்படும் போது லண்டனில் தரையிறங்கினோம். தமிழீழ மக்கள் கட்சியில் வேலை செய்ய ஆரம்பித்தேன். குட்டியைச் சந்தித்தேன். சமூகம், அரசியல் என்று ஓடித் திரிந்த குட்டியுடன் நட்பாகியது. ஏற்ற இறக்கங்கள் எல்லாம் உண்டு. இருந்தாலும் தேசம் சஞ்சிகை, லண்டன் குரல், தேசம்நெற் ஆகியவற்றின் உத்தியோகப்பற்றற்ற செய்தி சேகரிப்பாளன். இறுதியில் அவன் வாழ்க்கையே எங்களுக்கு ஒரு செய்தியாகிவிட்டது.

கடந்த டிசம்பர் 27இல் வீட்டில் தனியாக இருந்தவனோடு நானும் வந்து சேர்ந்தேன். ஊர்த்துலாவரம் எல்லாம் பேசுவோம். கடைசியில் சண்டையும் வரும். ‘உனக்கே வாழத் தெரியவில்லை. உனக்கு என்ன அரசியல் வேண்டிக் கிடக்கு’ என்று சத்தம் போட்டு முடிப்பேன். கொலைவெறியோடு முறைச்சுக்கொண்டு போவான். மறுநாள் பிள்ளைகளுக்கு இறைச்சிக் கறி வைத்து கவனமாக பாத்திரங்களில் போட்டுத் தருவான். எனக்கும் குறைந்தது இரு மரக்கறி வைத்திருப்பான். அவன் ஊரில் சமைப்பதைப் பற்றியெல்லாம் கதையளக்கின்ற போது அந்தச் சுற்றாடலை அப்படியே கண் முன் கொண்டுவந்து நிறுத்துவான். இரு கைகளால் வடைதட்டுவதும் எடுப்பதும் அவன் சொல்கின்ற அழகே தனி. பயிற்றங்காய் பிரட்டல் கறி வைப்தை சொல்லிக்கொண்டு வந்தால் பயிற்றங்காய் பிரட்டல் கறி சாப்பிட்ட திருப்தி வரும். அவ்வளவு சாப்பாட்டில் நுணக்கம். அவனுடைய மஞ்சவனப்பதி முருகன் கோயில் கதைகளும் அரசியல் கதைகளும் என்றால் எவ்வளவு நேரமும் கதைத்துக்கொண்டிருப்பான். சிலவேளை அறுவையாகவும் இருக்கும்.

அவனுடைய வீட்டுக்கு வந்த போது சிவஜோதி எதிர்ப்புசக்தியை தாக்குப்பிடிக்கவல்ல பக்ரீரியா தாக்கத்தினால் யாழ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு டிசம்பர் 30இல் எம்மைவிட்டுப் பிரிந்தான். அவனுடைய மரணம் முற்றிலும் எதிர்பாராதது. அவனொரு பன்முக ஆளுமை. மதுவின் வாசத்தையே அறியாதவன். தனது வாழ்வு முழவதும் மதுவை விலத்தி வைத்தவன். குட்டிக்கு சிவஜோதியை யாரென்றே தெரியாது. நான் சொல்லிக் கேள்விப்பட்டதும், நான் சிவஜோதியுடைய மனைவி ஹம்சகௌரியோடு உரையாடுவதை கேட்டு அறிந்ததும் தான். ஆனால் சிவஜோதியுடைய நினைவு நிகழ்வு கிளிநொச்சியில் நடைபெற்ற போது அதற்கு வருபவர்கள் ஒவ்வொருவருக்கும் சிவஜோதியுடைய நினைவாக தென்னங்கன்றுகள் வழங்குவோம் என்று சொல்லி அதற்கான செலவையும் தானே தந்தான்.

எனது ‘வட்டுக்கோட்டையில் இருந்து முள்ளிவாய்க்கால்வரை’ நூல் வெளியீட்டு விழா பற்றி 2016இல் அவனோடு பேசினேன். ‘டேய் வித்தியாசமா செய்வோம். எங்களுடைய பிள்ளைகளையும் பேச வைப்போம். இரண்டாம் தலைமுறையையும் இறக்குவோம்’ என்றான். அவனொரு ஐடியா திலகம். ஆளைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்து வேலையைச் செய்ய வேண்டும். எனக்கு அந்த எண்ணம் வரவில்லை. அவன் சொன்னதும் நல்லதாகப்பட்டது. அவனுடைய மூத்தவளை வரவேற்புரைக்கும் என்னுடைய மூத்தவனை நூல் அறிமுகத்திற்கும் போட்டு புத்தகவெளியீடு இனிதே முடிந்தது.

2019இல் அவன் மாடியில் இருந்து வீழ்ந்து உயிருக்காக போராடிக்கொண்டிருந்த போது நானும் தோழர் சிவலிங்கமும் அவனைப் பார்க்கச் சென்றிருந்தோம். அவன் நினைவுகளில் குழப்பம் இருந்தது. அவனுக்கு கொழுவப்பட்டிருந்த ரியூப்கள் எல்லாவற்றையும் பார்த்து நான் மருத்துவமனையில் மயக்கமடைந்து விட்டேன். அதற்குப் பிறகு நானும் நண்பர் ஹரியும் சென்று பார்த்து வந்தோம். அப்படி இருந்தவனுக்கு அவள் மறுஜென்மம் கொடுத்து பார்த்தாள்.

கடைசிக் காலங்களில் பலரைப் பற்றியும் ஆராய்வோம். தோழர் சிவலிங்கம் பற்றி எப்போதும் உயர்வான மதிப்பீட்டோடு பேசுவான். தோழர் ரகுமான் ஜானின் நூல்வெளியீட்டை முன்நின்று நடத்தினான். பின் பாரிஸ் நூல்வெளியீட்டுக்கு நான், குட்டி ரகுமான் ஜான் மூவரும் சென்று சில தினங்கள் தங்கி வந்தோம். அந்தப் பயணத்தின் போது நான் மிகுந்த மனக்கஸ்டத்தில் இருந்தேன். அவர்களோடு பல விடயங்களையும் பகிர்ந்துகொண்டிருந்தேன். எந்தச் சந்தர்ப்பத்திலும் அவன் மற்றையவர்களின் பலவீனத்தை பயன்படுத்தியது கிடையாது. வீட்டுக்கு வெளியே என் போன்ற நண்பர்களுக்கு அவன் உன்னதமான நண்பன்.

ஆனால் அவனுடைய வாழ்க்கையை சின்னா பின்னமாக்கிக் கொண்டிருந்த அந்த கெட்ட பழக்கத்தில் இருந்து அவனால் மீள முடியவில்லை. அவனை மீட்கலாம் என்று எனக்கு இருந்த நம்பிக்கை நாளாக நாளாகத் தேய்ந்து கொண்டே வந்தது. அவனுடைய கடைசி 12 மாதங்களில் அவனுக்கு நெருக்கமான ஒரே உறவு நான்தான். அவன் கொக்குவில் கிராமத்திலும் நான் அனுராதபுரத்திலும் பிறந்து எங்கெங்கோ வளர்ந்து இறுதியில் லண்டன் நியூமோல்டனில் அவனுக்கு நான் என்றாகியது.

தூரத்தே இருந்தாலும் கட்டியவள் பாசத்தோடு சாப்பாடு எடுத்து வருவாள். நண்பர்கள் ரமேஸ் உம் பிரபாவும் ஞாயிற்றுக் கிழமைகளில் வந்து எங்களையும் நடக்க அழைத்துச் செல்வார்கள். ரமேஸின் குழு குழவென்ற வெண்நிறப் பஞ்சு போலானா அந்நாய் எங்களிலும் பார்க்க கம்பீரமாகவே நடக்கும். அதன் வழி நாங்கள் நடப்போம். சிவமோகன் அடிக்கடி நிலைமையை மதிப்பீடு செய்து கவனமெடுப்பார். ‘உன் நண்பர்களைப் பற்றிச் சொல். உன்னைப் பற்றிச் சொல்கிறேன்’ என்ற வாசகத்தை குட்டி முற்றிலும் பொய்யாக்கிக் கொண்டான். வண்ணத்துப் பூச்சி விளைவு விளையாட்டாக ஆரம்பித்த பழக்கம் வினையில் வந்து முடிந்தது. சில வேளை முதல் முதல் அருந்தும் போது இன்னுமொரு வண்ணாத்திப் பூச்சியால் க்கிளாஸ் தட்டி ஊத்தி தடங்கல் வந்திருந்தால் அவன் குடிக்காமலேயே இருந்திருக்கலாம். அல்லது அவனுக்கு குறிப்பு வேறு யாருடனாவது பொருந்தியிருந்தால் வந்தவள் பென்ட் எடுத்திருப்பாளோ என்னவோ… இந்த வண்ணத்துப்பூச்சி விளைவு எங்கெங்கெல்லாமோ முடிச்சவிக்கின்றது. முடிச்சுப் போடுகின்றது.

ஒக்ரோபர் ஒன்பது அவனுக்கு இயலாமலாகி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டான். ஒரிரு நாளிலேயே வந்துவிட்டான். அப்போது தான் ஓரளவு எனக்கும் அவனுக்கும் கூட இனி நிறையக்காலம் இல்லை என்பதை உணர முடிந்தது. எமது உடலுறுப்புக்களில் முக்கிய உறுப்பான ஈரல் செயலிழப்பதாக மருத்துவர்கள் சொல்லி உள்ளனர். அவனுடைய நிலையில் அதற்கான சிகிச்சை அளிப்பதிலும் பலனில்லை என்ற முடிவுக்கு மருத்துவர்கள் வந்திருக்க வேண்டும். அடுத்த ஒரு மாதத்தில் நவம்பர் 12இல் மீண்டும் மருத்துவமனைக்கு. அதுவே அவனது கடைசிப் பயணம் என்பதை என்னால் உணரமுடிந்தது. அதுவே அவனுக்கு இந்த வலி, வேதனையில் இருந்து விடுதலையைக் கொடுக்கும் என்று எண்ணினேன்.

அவனிருந்த வார்டில் சிகிச்சை பெற்றவர்கள் எல்லோருமே எண்பது வயதைத் தாண்டியவர்கள். இவன் மட்டுமே ஐம்பதுக்களில். அவன் வாழ்வதற்கு இன்னும் 30 ஆண்டுகள் இருந்தது. ஆனால் அவனது தவறான முடிவுகள், அவனது முடிவை முன்பதிவு செய்ய காரணமானது. மருத்துவமனையில் இருந்து, கட்டியவளுக்கு தொலைபேசி அழைப்பு இரவு பதினொருமணியளவில். அவளுக்கு எதுவும் புரியவில்லை.

மொழிபெயர்ப்பாளர் தேவை என்றாள். நான் அவளுக்கு நிலைமையை விளக்கினேன். அந்த இடியான செய்தியைச் சொல்லப் போகின்றனர். அவனுடைய கடைசிநாள் இது. அவனது உடல்வலிக்கு இது விடுதலை கொடுக்கும் என்று சமாதானம் சொல்லி தேற்றினேன். உடனடியாக மருத்துவமனைக்கு வருமாறு அழைப்பு வந்தது. அவளையும் குழந்தைகளையும் கூட்டிக்கொண்டு மருத்துவமனைக்கு ஓடினோம்.

தமிழகத்தைச் சேர்ந்த மருத்துவர் நிதானமாக விளங்கப்படுத்தினார். “இனிமேல் நாங்கள் செய்வதற்கு எதுவுமில்லை. அவரை நிம்மதியாக கஸ்டமில்லாமல் வழியனுப்பி வைப்பதே ஒரேவழி” என்றார். அவருடைய மருத்துவவியல் மொழியில் நாங்கள் வழியனுப்பி வைப்பதற்காக உயிரைப் பிடித்து வைத்துள்ளனர் என்பது தான் சாரம்சம். ஓரளவு எதிர்பார்த்தது தான். நீங்கள் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் அவரோடு இருக்கலாம் என்றவர் மெதுவாக திடீரென் எப்பவும் எதுவும் நடக்கலாம், அதனால் தமதிக்காமல் உள்ளே செல்வோம் என தீவிர சத்திரசிகிச்சைப் பிரிவுக்கு அழைத்துச் சென்றனர்.

அங்கே வார்ட் எட்டில் எவ்வித சலனமும் இல்லாமல் ரியூப்கள் பொருத்தப்பட்ட நிலையில் அவன். கட்டியவள் அவன் முகத்தை வருடி இதயத்தை வருடி கண்ணீர் விட்டிருக்க பிள்ளைகள் அவன் கையைப் பிடித்துக்கொண்டிருந்தனர். அவர்களோடு நானும் அவன் கையைப் பற்றிக்கொண்டேன். பத்து நிமிடங்களிருக்கும் மருத்துவர் என்னை சைகையால் வரச்சொன்னார். இனி தாமதிக்க முடியாது. சிலவேளை பிள்ளைகளுக்கு முன் ஏதும் ஆகிவிடலாம். ஆதனால் அடுத்த 5 நிமிடங்களுக்குள் அவர்களை கூட்டிச்சென்றுவிடலாம்” என்றார். அவ்வாறே பிள்ளைகள் கண்ணீரோடு அப்பாவை வழியனுப்பி வைத்தனர். அவர்களை இன்னுமொரு மருத்துவ தாதி வேறொரு அறைக்கு அழைத்துச் சென்றார்.
இப்போது அவனைக் கட்டியவளும் நானும்.

“அவரது இதயத்தை இயக்க வழங்கப்படும் மருந்தை நிறுத்துவோம். இதயத்துடிப்பு படிப்படியாகக் குறையும். அதேநேரம் சுவாசத்தையும் நிறுத்துவோம். அவர் எவ்வித வலியும் இன்றி ஆழ்ந்த உறக்கத்திற்குச் செல்வார்” என்று மிவும் இதமாக முடிந்தவரை உணர்வுபூர்வமாகச் சொன்னார். அவள் அவனது இதயத்தையும் முகத்தையும் வருடியவாறு நிற்க அவளது கண்ணீர்த்துளிகள் அவன் மீது வீழ்ந்தது. நான் அவன் கைகளைப் பற்றிக்கொண்டேன். இதயத்துக்கு வழங்கப்பட்ட மருந்து நிறுத்தப்பட்டது. இதயத்துடிப்பு வீழ்ச்சியடையத் தொடங்கியது. உயிரை போகவிடாமல் இழுத்து வைத்திருந்த அந்த மெசின் சிவப்பு விளக்குகளை மின்னி மின்னி அலறியது. அந்தத்தாதி எதையெல்லாமோ அழுத்தி அந்த அலறலை மௌனமாக்கினால். இப்போது சிவப்பு விளக்கு மட்டும் மின்னி மின்னிக் கொண்டிருந்தது. சுவாசத்தை சரி செய்து அவனை அமைதியாக சுவாசிக்கச் செய்தனர். பின் சுவாசத்திலும் வீழ்ச்சி. இறுதியில் அவனது இதயம் கடைசியாக ஒரு தடவை துடித்தது. அவன் மார்பில் கை வைத்திருந்தவள் அதை உணர்ந்தாள். அவன் உயிர் பிரிந்தது. அந்த மெசினும் நிறுத்தப்பட்டது.

“என்ரை பிள்ளைகளை உன்ரை பிள்ளைகளைப் போல் பார்க்க மாட்டியா?” என்று கேட்டது மட்டும் என் காதில் எதிரொலித்துக்கொண்டது.

அவன் மரணத்தை நோக்கிச் செல்கின்றான் என்பது மிக உறுதியாகத் தெரிந்தும் யாராலும் எதுவும் செய்ய முடியவில்லை. இன்னுமொரு உயிர் இவ்வாறு இழக்கப்படக் கூடாது என்று எண்ணினேன். சஞ்சீவ்ராஜ் என்ற இந்தக் குட்டியின் முடிவை ஒரு வாழ்க்கை அனுபவபாடமாக மாற்ற வேண்டும் என்ற எண்ணம் அவனின் கடைசிக் காலங்களில் எனக்கு ஏற்பட்டது. அவனுக்கும் அதனைத் தெரியப்படுத்தி இருந்தேன். அவன் மறுத்தானா சம்மதித்தானா என்பதை என்னால் உணரமுடியவில்லை. அதனாலேயே இப்பதிவுகள். சேற்றில் கால் வைக்காமல் விதைக்க முடியுமா? ஆகவே குட்டியின் மரணம் யாராவது ஒருவருக்காயினும் படிப்பினையானால் அதுவே அவனது ஆத்மாவை சாந்தியடையச் செய்யும். அவ்வாறானவர்களின் வாழ்கையினூடாக அவன் நிம்மதியாக உறங்குவான்.

ஆகவே எங்கள் நண்பர்கள் நினைவாக அவர்களுடைய ஆத்மாசாந்தியடைய இந்த ஆண்டு முதல் நாங்கள் மதுவை எம் வாழ்விலிருந்து ஒதுக்கி வைப்பதற்கு கற்றுக்கொள்வோம். வரும் புத்தாண்டுச் சபதம் எடுப்பவர்கள் ஜனவரி மாதத்தை மதுவற்ற மாதமாக ஆக்கிக் கொள்ளுங்கள்.

இந்த வாழ்க்கை என்பது ஒரு தடவை மட்டுமே. அது வாழ்வதற்கே. மரணம் என்றோ ஒரு நாள் எம்மை அனைத்துக்கொள்ளும். அது தவிர்க்க முடியாதது. ஆனால் அந்த மரணத்தைத் தேடி நாம் ஏன் செல்ல வேண்டும்? அதற்காக எம் வாழ்வில் மதுவிலக்குச் செய்வோம்.

மதுவைத் தவிர்த்தால் நோய் நொடியிலிருந்து தப்பலாம்!
மதுவைத் தவிர்த்தால் குடும்பத்தில் சண்டை சச்சரவுகளை தவிர்க்கலாம்!
மதுவைத் தவிர்த்தால் உறவுகள் நட்புகள் சேரும் நேசிக்கும்!
மதுவைத் தவிர்த்தால் பொருளாதாரம் சிறக்கும்
மதுவை தவிர்த்தால் வாழ்க்கை மணம் கமழும்!

மதுவைத் தவிர்ப்போம் மாண்புள்ள மனிதர்களாக வாழ்வோம்!

அவனது இறுதிக் கிரியைகள்:
தம்பித்துரை சஞ்சீவ்ராஜ் இன் இறுதிக் கிரியைகள் பற்றிய விபரம்:

நிகழ்வுகள்:
 
பார்வைக்கு
Sunday, 05 Dec 2021 2:00 PM – 5:00 PM
Richard Challoner School Xavier centre School House Richard Challoner, Manor Dr N, New Malden KT3 5PE, United Kingdom
 
கிரியை
Wednesday, 08 Dec 2021 9:00 AM – 12:00 PM
Manor Park Hall 316 b Malden Rd, New Malden KT3 6AU, United Kingdom
 
தகனம்
Wednesday, 08 Dec 2021 12:40 PM
North East Surrey Crematorium Cemetery Lodge, Lower Morden Ln, Morden SM4 4NU, United Kingdom

தை – ஜனவரி தமிழ் பாரம்பரிய மாதம் – லண்டன் அசம்பிளியில் ஏகமனதாகத் தீர்மானம்!

டீசம்பர் 02இல் லண்டன் அசம்பிளியில் நிக்களஸ் ரோஜர் என்ற அசம்பிளி உறுப்பினர் கொண்டுவந்த ‘ஜனவரி தமிழ் பாரம்பரிய மாதம்’ என்ற தீர்மானத்தை அனைத்துக் கட்சி லண்டன் அசம்பிளி உறுப்பினர்களும் ஏகமனதாக ஏற்றுக்கொண்டுள்ளனர். இத்தீர்மானம் லண்டனில் வாழும் தமிழர்களின் வாழ்வியலில் பெரும் மாற்றத்தையோ தாக்கத்தையோ ஏற்படுத்தாத போதும், கடந்த நான்கு தசாப்தங்களாக தமிழர்கள் லண்டனின் வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும் வழங்குகின்ற பங்களிப்பை அங்கீகரிக்கின்ற, அதனை கௌரவிக்கின்ற ஒரு தீர்மானமாக இதனைக் கொள்ளலாம்.

லண்டன் ஒரு பல்லினச் சமூகம் வாழுகின்ற, பலவர்ணம் கொண்ட, ஒருபோதும் உறங்காத ஒரு நகர். உதாரணத்திற்கு லண்டனில் உள்ள ஒரு பாடசாலையில் மட்டும் 56 மொழி பேசுகின்ற மாணவர்கள் கல்வி கற்கின்றனர் என்றால் இந்த நகரின் பன்மைத்துவத்தை கற்பனை செய்து பாருங்கள்.

பிரித்தானியாவில் குறிப்பாக லண்டனில் வாழும் தமிழர்களின் எண்ணிக்கை ஏனைய சமூகங்களோடு (இந்தியர்கள்: குஜராத்திகள், சீக்கியர்கள், பாகிஸ்தானியர்கள், பங்களாதேசிகள், சீனர்கள்) ஒப்பிடுகையில மிக மிகக் குறைவு. லண்டனின் மொத்த சனத்தொகை அண்ணளவாக 9 மில்லியன், கிட்டத்தட்ட இலங்கையின் மொத்த சனத்தொகையின் 50 வீதத்திற்கு சற்றுக் குறைவு. இதில் மொத்த தமிழர்களின் எண்ணிக்கை அண்ணளவாக இருநூறாயிரம் மட்டுமே. ஆகக்கூடியது 2% வீதமானவர்கள் மட்டுமே. இந்த இரண்டு வீதத்திற்குள் இலங்கை, இந்தியா, மலேசியா, சிங்கப்பூர், மொரீசியஸ், ரீயூனியன் ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த தமிழர்கள் வாழ்கின்றனர். இவர்களில் இலங்கைத் தமிழர்களே லண்டனின் அரசியல், பொருளாதார விடயங்களோடு தங்களை கணிசமான அளவில் இணைத்துக்கொண்டு லண்டனை தங்கள் நகராக்கிக்கொண்டுள்ளனர். அதற்கு அவர்களுக்கு ஒரு தாயகப் பிரதேசம் இல்லாதது அடிப்படைக் காரணமாக உள்ளது. இந்திய, மலேசியத் தமிழர்களைப் பொறுத்தவரை அவர்கள் லண்டனை ஒரு இடைத்தங்கள் நிலையமாக காண்கின்றனர்.

லண்டன் ஈஸ்ற்ஹாம் என்பது ஒரு குட்டி யாழ்ப்பாணம் என்றால் அதில் மிகையல்ல. அங்கு கவுன்சிலராக பல ஆண்டுகள் வெற்றிபெற்று தைப் பொங்கலை ஈஸ்ற்ஹாம் வீதியில் கடந்த 20 ஆண்டுகளாகக் கோலாகலமாகக் கொண்டாடி வருபவர் முன்னாள் கவுன்சிலர் போல் சத்தியநேசன். தமிழ் சமூகம் பல்வேறு கூறுகளாக முரண்பட்டு இருந்தாலும் அவர்களை இணைத்து தமிழர்களுக்கு என்று ஒரு வரலாற்றை லண்டனில் உருவாக்க வேண்டும் என்பதற்கு வித்திட்டவர்களில் போல் சத்தியநேசன் குறிப்பிடத்தக்கவர். அவருக்கும் பல நெருக்கடிகள் வந்த போதிலும் அவற்றைக் கடந்து சில பல விடயங்களை அவர் சாதித்தும் உள்ளார். லண்டன் அசம்பிளியில் டிசம்பர் 2இல் கொண்டுவரப்பட்ட ‘ஜனவரி தமிழர் பாரம்பரிய மாதம்’ என்ற தீர்மானத்திற்கு இரு தசாப்தங்களுக்கு முன்னரேயே அவர் வித்திட்டு இருந்தார்.

தமிழர்களின் எண்ணிக்கை மிகக் குறைவாக இருந்தாலும் தாயகத்தில் இருந்து புலம்பெயர்ந்த தமிழர்களின் கல்வி, பொருளாதார தேடல் காரணமாக அவர்கள் லண்டனின் கல்வி, மற்றும் பொருளாதாரச் செயற்பாடுகளில் கணிசமான தாக்கத்தைச் செலுத்தி உள்ளனர். கல்வியைப் பொறுத்தவரை தமிழர்களுடைய சனத்தொகை விகிதாசாரத்துக்கு அதிகமாகவே தமிழ் மாணவர்கள் பல்கலைக்கழகம் செல்கின்றனர். பெரும்பாலும் இங்கிலாந்தில் உள்ள முன்னணிப் பல்கலைக்கழகங்களில் தமிழ் சொசைற்றி ஒன்றை வைத்திருப்பார்கள். கல்வி மீதான பாரம்பரிய நம்பிக்கை இன்னமும் கணிசமான அளவில் காணப்படுகின்றது. இது ஆசியர்களுடைய குணாம்சங்களில் ஒன்றாகவும் உள்ளது.

லண்டனில் மட்டும் 40 வரையான தமிழ் கோயில்கள் உள்ளன. லண்டனில் தமிழர்கள் கணிசமாக வாழும் ஒவ்வொரு உள்ளுராட்சிப் பிரிவிலும் விரல்விட்டு எண்ணக்கூடிய தமிழ் பள்ளிகள், மற்றும் தமிழ் அமைப்புகள் உள்ளன.

லண்டனில் மட்டுமல்ல இந்கிலாந்தில் ரிரெயில் செக்ரரில் தமிழர்களின் சிறு வியாபார நிறுவனங்கள் இல்லாத இடமே இல்லையென்று சொல்லலாம். இங்கிலாந்தில் உள்ள பெரும்பாலான பெற்றோல் ஸ்ரேசன்கள் தமிழர்களாலேயே நிர்வகிக்கப்படுகின்றது. தமிழர் பாரம்பரிய உணவு வகைகளையும் பல்வேறு சமூகத்தினரும் கொள்வனவு செய்கின்றனர். சட்டத்துறையிலும் தமிழர்களுக்கு குறைவில்லை. பிரித்தானியாவின் சுகாதார சேவைகளில் குறிப்பாக மருத்துவர்களில் கணிசமான பங்கினர் தமிழர்களாக உள்ளனர். தமிழ் மருத்துவர் இல்லாத ஒரு மருத்துவமனை இங்கிலாந்தில் இருக்குமா என்பது தெரியவில்லை. வங்கிகள், ஆசிரியத்துறை, ஊடகத்துறை என தமிழர்கள் பல்வேறு முனைகளிலும் தங்கள் சேவையை வழங்கி வருகின்றனர். தமிழர்களுடைய சனத்தொகைக்கு இத்துறைகளில் கணிசமான பங்கினர் ஈடுபட்டுள்ளனர். அதனால் தமிழர்கள் எண்ணிக்கையில் மிகச் சிறுபிரிவினராக இருந்தாலும் அவர்கள் ஏற்படுத்துகின்ற தாக்கம் கனதியானதாக உள்ளது. அதனால் அவர்கள் தவிர்க்கப்பட முடியாத ஒரு சிறுபான்மையாக உள்ளனர்.

இதுபோன்ற காரணங்களால் தமிழ் சமூகம் சிறுபான்மையாக இருந்தாலும் லண்டனில் ஒரு பார்வைக்குத் தெரியக் கூடிய ஒரு சமூகமாக எப்போதும் இருந்து வருகின்றது. அதனால் லண்டன் அரசியல் தளத்திலும் தமிழ் சமூகம் எப்போதும் ஒரு அதிர்வை ஏற்படுத்திக் கொண்டேயிருக்கும். இந்தப் பின்னணியிலேயே ‘ஜனவரி – தமிழர் பாரம்பரிய மாதம்’ என்ற தீர்மானத்தை லண்டன் அசம்பிளி எடுத்திருந்தது.

டிசம்பர் 02இல் கொன்சவேடிவ் கட்சியின் உறுப்பினர் நிக்களஸ் ரொஜர் இத்தீர்மானத்தைக் கொண்டுவந்திருந்தார். அவர் லண்டனின் உருவாக்கத்தில் தமிழர்களின் பங்கை மொசாக் படத்தின் ஒரு கூறாக ஒப்பிட்டுக் குறிப்பிட்டார். சில சமயங்களில் அந்த ஒவ்வொரு கூறையும் ஆழந்து கவனிக்க வேண்டும் என்றும் அந்த வகையில் லண்டன் தமிழ் சமூகத்தின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது என்றும் குறிப்பிட்டார். இந்தப் பங்களிப்பு இலங்கையில் அவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு தப்பித்து வந்த பின்னரளித்த பங்களிப்பு என்றும் குறிப்பிட்டார். அந்த வகையில் ‘தமிழ் மொழியையும் அதன் வளம்மிக்க கலாச்சாரத்தையும் இந்த மாதத்தில் பதிவு செய்வது பொருத்தமானது. ஜனவரி தமிழர்களுடைய பாரம்பரிய மாதம். அறுவடை நாளான ஜனவரி 14கை நாங்கள் கருத்தில் எடுக்க வேண்டும். இதனை 2016இல் கனடிய அரசு அங்கிகரித்து இருந்தது. அதே போல் லண்டன் மேயரும் லண்டன் உள்ளுராட்சி மன்றங்களும் ஜனவரியை தமிழருடைய பாரம்பரிய மாதமாக அங்கீகரித்து அதனை அரத்தமுள்ளதாக்கி கொண்டாட வேண்டும்’ என்று நிக்களஸ் ரொஜர் விவாதத்தை தொடக்கி வைத்தார்.

கொன்சவேடிவ் கட்சியின் மற்றுமொரு உறுப்பினரும் கறுப்பினத்தவரான சோன் பெய்லி தமிழர்களுடைய பங்களிப்பை விதந்துரைத்ததுடன் (ஒக்ரோபர் மாதம்) கறுப்பின வரலாற்று மாதம் எவ்வாறு கறுப்பின மக்களுக்கு பயனைக் கொடுத்ததோ அதுபோல் தமிழர்களுடைய பாரம்பரியம் ஜனவரியில் மேற்கொள்ளப்படுவது அவர்களுக்கு பயனுள்ளதாக அமையும் என்றார். கறுப்பின வரலாற்று மாதம் பாடசாலைகளிலும் ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகின்றது. அடிமைத் தனத்தில் இருந்து கறுப்பின மக்கள் போராடி விடுதலை பெற்று பல்வேறு சாதனைகளைப் படைத்ததை நினைவு கூருவதனூடாக கறுப்பின இளம் தலைமுறையினருக்கும் ஏனைய சமூகத்தினருக்கும் கறுப்பின மக்களின் பங்களிப்புப் பற்றி இம்மாதத்தில் பேசப்படும்.

லண்டன் அசம்பிளியின் துணைத் தலைவரான கெய்த் பிரின்ஸ் கொன்சவேடிவ் கட்சியைச் சேர்ந்தவர் குறிப்பிடுகையில் ஜனவரி மாதம் அறுவடை நாள், தமிழர்களுடைய தைப்பொங்கல் தினம் என்றும் அவர்களுடைய பங்களிப்பை இம்மாதத்தில் கௌரவிப்பது பொருத்தமானது என்றும் தெரிவித்தார்.

தொழிற்கட்சியின் அசம்பிளி உறுப்பினர் குருபேஸ் ஹிரானி, தமிழர்களுடைய பங்களிப்பை விதந்துரைத்து தீர்மானத்தை வரவேற்பதில் தான் பெருமைப்படுவதாகக் குறிப்பிட்டார்.

தொழிற்கட்சியின் மற்றுமொரு உறுப்பினரான ஒன்ஹார் ஸோஹோற்றா பேசுகையில் தமிழர்கள் பல்வேறு முனைகளிலும் தங்கள் பங்களிப்பை வழங்கி உள்ளனர் எனக்குறிப்பிட்டு தமிழர்கள் முன்ணுதாரணமாகத் திகழ்ந்துள்ளனர் என்றார். அவர் மேலும் குறிப்பிடுகையில் ஜனவரி 14 தைப்பொங்கலை தாங்கள் ஆவலுடன் எதிர்பார்த்து இருப்பதாகவும் குறிப்பிட்டார். தொழிற் கட்சியின் மற்றுமொரு உறுப்பினராக உன்மேஸ் தேசாய் குறிப்பிடுகையில் 1984 இல் முதல் தொகுதி தமிழர்கள் குண்டுவெடிப்புகளில் இருந்து தப்பி குறிப்பாக யாழ்ப்பாண நகரில் இருந்து வந்ததாகக் குறிப்பிட்ட அவர் அவர்கள் தன்னுடைய பகுதியான ஈஸ்ற்ஹாமிலேயே குடியேறியதாகவும்; ஈஸ்ற்ஹாம் ரெட்பிரிஜ் பகுதிகளில் உள்ள ஒவ்வொரு தமிழ் வீடுகளிலும் உள்ளவர்களின் அவர்களின் ஊரில் உள்ள வீடுகளில் ஒருவரையாவது இந்த மோசமான யுத்தத்தில் இழந்துள்ளனர். உடல் ஊனமுற்றுள்ளனர் என்றார். தமிழர்கள் இல்லாமல் ஈஸ்ற்ஹாம் ஹைஸரீற் இல்லையென்றும் யுத்த வடுக்களோடு வந்து லண்டன் நகரோடு இரண்டறக் கலப்பதற்கு தமிழர்கள் ஒரு முன்ணுதாரணம் என்றும் கூறி தீர்மானத்தை வரவேற்றார்.

‘வணக்கம்’ என்று சொல்லி தான் பேச்சை ஆரம்பிக்க விரும்புவதாகக் கூறி ஆரம்பித்த லிபிரல் டெமொகிரட் கட்சியைச் சேர்ந்த ஹினா புஹாரி மற்றையவர்களைப் போல் தாங்களும் இத்தீர்மானத்தை மிகவும் வரவேற்பதாகவும் தமிழர்களுடன் தங்கள் கட்சி நெருக்கமாகச் செயற்படுவதைச் சுட்டிக்காட்டியதுடன் தமிழ் சமூகத்திற்கு ‘நன்றி’ என்று சொல்லி தன் பேச்சை முடித்தார்.

கொன்சவேடிவ் கட்சியின் மற்றுமொரு உறுப்பினரான ரொனி டெவினிஸ் சுருக்கமாக குறிப்பிடுகையில் நிக்களஸ் ரொஜர் சொன்ன ஒவ்வொரு வார்த்தையையும் தான் ஏற்றுக்கொள்வதாகக் குறிப்பிட்டார். கிரீன் பார்ட்டியைச் சேர்ந்த ஸாக் பொலாஸ்கி தமிழர்களுடைய பங்களிப்பையும் தீர்மானத்தையும் வரவேற்றுக் குறிப்பிட்டார்.

இறுதியாக நிக்களஸ் ரொஜர், தீர்மானத்துக்கு ஆதரவளித்த அனைவருக்கும் தனது நன்றியைத் தெரிவித்துக்கொள்ள தீர்மானம் வாக்கெடுப்பிற்கு விடப்பட்டு ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

லண்டனில் தமிழர்களுடைய அரசியல் தாக்கம் குறிப்பிடத்தக்கதாக இருந்தாலும் அது அதன் முழவீச்சில் இன்னும் இல்லை. இதுவரை தமிழர் யாரும் பாராளுமன்ற உறுப்பினராக வரவில்லை. அதற்கான வாய்ப்புகளும் அண்மைய எதிர்காலத்தில் இருப்பதாகத் தெரியவில்லை. மேலும் தமிழர்களுடைய சனத்தொகை கணிப்பின்படி ஒவ்வொரு தொகுதி தமிழர்களும் ஒரே மாதிரி வாக்களித்ததால் 50 உள்ளுராட்சி கவுன்சிலர்கள் வரக்கூடிய வாய்ப்பு இருந்தது. ஆனால் உள்ளுராட்சி உறுப்பினர்கள் பத்து முதல் பதினைந்து பேர் வரையே உள்ளனர். தமிழர்களுடைய அரசியல் செல்வாக்கு என்பது இன்னமும் தமிழ் தேசிய அரசியலை ஒட்டியதாகவே இன்னமும் உள்ளது. இங்குள்ள அரசியல் வாதிகளை வைத்து இலங்கை அரசுக்கு எதிராக எதையாவது சாதித்திட வேண்டும் என்ற முனையிலேயே லண்டன் தமிழ் அரசியல் இன்னமும் உள்ளது.

இவ்வாறு எல்லாவற்றையும் முன்ணுதாரணமாகக் காட்டுவதால் லண்டன் தமிழ் சமூகத்திற்குள் பிரச்சினையே இல்லையென்ற தவறான முடிவுக்கு யாரும் வந்துவிடக் கூடாது. இளைஞர் குழக்களின் வன்முறை தேசிய அளவில் பேசப்படும் அளவுக்கு பெரும் பிரச்சினையாக இருந்தது. கடந்த இரு தசாப்தங்களில் லண்டனை உலுக்கிய சில கொலைகள் உட்பட 30 வரையான தமிழ் படுகொலைகள் தமிழர்களால் நடந்துள்ளன. ரெயிலில் குதித்து தற்கொலை செய்ததாக செய்தி வந்தால் அது தமிழராக இருப்பதற்கான வாய்ப்பு அதிகமாக இருக்கும். கடந்த பத்து ஆண்டுகளில் ஐந்து தாய்மார் பிள்ளைகளைக் கொலை செய்து தற்கொலைக்கு முயற்சித்தனர். அவ்வளவுக்கு தமிழ் சமூகத்தில் மனநிலை பாதிப்புகள் கண்டுகொள்ளப்படாமல் உள்ளது. குடும்ப வன்முறைகள் அதனால் பிள்ளைகள் அரச சமூகப் பிரிவின் கட்டுப்பாட்டில் பராமரிக்கப்படும் நிலைகளும் இங்குள்ளது.

ஆகவே ஒவ்வொரு சமூகத்திற்குள்ளும் உள்ள சிக்கல்களும் கஸ்டங்களும் தமிழ் சமூகத்திற்குள்ளும் உள்ளது. அவற்றை ஆராய்ந்து பிரச்சினைகளை ஏற்றுக் கொண்டு அடுத்த கட்டம் நோக்கி தமிழர்கள் நகரவேண்டும். யாழ்ப்பாணத்தில் மழை பெய்தால் ஈஸ்ற்ஹாமிலும் ஹரோவிலும் குடை பிடிக்கும் அரசியல் இன்னும் எத்தினை நாளைக்கு. லண்டனில் பலநூற்றுக்கணக்கான தமிழ் குடும்பங்களில் குடும்பவன்முறை பெரும் பிரச்சினையாக உள்ளது. அதற்கு அதீத மதப்பழக்கம் முக்கிய காரணமாக உள்ளது. மனவழுத்தம் பற்றிய விழிப்புணர்வு இன்னமும் சரியான வகையில் கையாளப்படவில்லை. இவை ஒரளவு வெளித்தளத்தில் தெரிகின்ற பிரச்சினைகள் இதைவிடவும் தீர்வு காணப்பட வேண்டிய பிரச்சினைகள் பலவும் உள்ளது. இங்குள்ள தமிழர்களை மேம்படுத்துவதற்கான முயற்சிகளும் அவசியமாகின்றது. லண்டன் அசம்பிளி ‘ஜனவரி தமிழர் பாரம்பரிய மாதம்’ என்று அறிவித்தது போல் லண்டன் தமிழர்கள் ஜனவரியை மது விலக்கு மாதமாக அறிவிக்க வேண்டும். கடைப்பிடிக்க வேண்டும். திருமணம் மற்றும் விழாக்களில் மதுவை முற்றாகத் தடை செய்ய வேண்டும். பொது நிகழ்வுகளிலும் சமூக வலைத்தளங்களிலும் மதுப் பாவனையையும் அதன் படங்களைப் போட்டு கொண்டாடுவதையும் முற்றாக நிறுத்த வேண்டும்.

சஞ்சீவ்ராஜ்: மதுவும் மரணமும் – மரணத்தை வெல்ல மது நீக்கம் வேண்டும்!!!

லண்டனில் அரசியல், சமூக, கலை, இலக்கிய, நாடகச் செயற்பாடுகளில் நன்கு அறியப்பட்ட குட்டி என்று எல்லோராலும் வாஞ்சையுடன் அறியப்பட்ட தம்பித்துரை சஞ்சீவ்ராஜ் இன் இதயத்துடிப்பை, மருத்துவக்குழவினர் இன்று (நவம்பர் 23, 2021) அதிகாலை இரண்டுமணியளவில், அவருக்கு வழங்கப்பட்ட செயற்கை உயிராதரவுக் கருவியை நிறுத்தி, முடிவுக்கு கொண்டு வந்தனர். அவருடைய 52 வயது வாழ்க்கையின் அத்தியாயம் முடிவுக்கு வந்தபோது அவருடைய மனைவியும் குழந்தைகளும் நீண்ட நாள் நண்பனாகிய நானும் உடனிருந்தோம்.

சஞ்சீவ்ராஜ் உடைய வாழ்கையின் ஒரு பக்கத்தை பெரும்பாலும் அனைவரும் அறிவோம். அரசியலில் அதீத ஆர்வமும் ஈடுபாடும் உடையவர். தீப்பொறி குழவினருடன் மூன்று தசாப்தங்களாக புலம்பெயர் மண்ணில் மிக நெருங்கிப் பணியாற்றியவர். தீப்பொறியின் வெளியீடுகளாக வெளிவந்த உயிர்ப்பு, வியூகம் சஞ்சிகைகளின் வெளியீட்டில் முன்நின்று செயற்பட்டவர். தோழர் ரகுமான் ஜானுடைய நூல் வெளியீடுகளிலும் முன்நின்று செயற்பட்டவர்.

லண்டனில் வெளிவந்த ஈழபூமி பத்திரிகையில் இயக்குநர் புதியவன் ராசையா ஆகியோருடன் இணைந்து பணியாற்றியவர். அத்தோடு பிற்காலத்தில் வெளியான வெளி பத்திரிகையை வெளியிடுவதில் புதிய திசைகள் அமைப்போடு நெருக்கமாகச் செயற்பட்டவர்.

லண்டனில் தற்போது தனக்கெனத் தடம்பதித் தமிழர் தகவல் என்ற தகவல் தொகுப்புக்கான எண்ணத்தை தமிழில் முதலில் உருவாக்கிய செயற்பாட்டாளர்களில் இவரும் ஒருவர். அன்றைய தமிழர் தகவல் மிக வெற்றிகரமாக இயங்கியது.

லண்டனின் தென் கிழக்கில் இசைக்குழவை உருவாக்கி இசை நிகழ்ச்சிகள் மூலம் வருமானத்தைப் பெற்று பொதுச்சேவைகள் பலவற்றைச் செய்த முன்னோடிகளில் இவரும் ஒருவர்.

நாடக இயக்குநர் க பாலேந்திராவின் தமிழவைக்காற்றுக் கழக நாடகக் குழவுடன் சில தசாப்தங்களாகவே இவர் இணைந்து பணியாற்றி வந்திருக்கின்றார். அத்தோடு கலை, இலக்கிய செயற்பாட்டாளர்களுடனும் தன்னை இணைத்துக்கொள்வார். ஆரம்ப காலங்களில் புலம்பெயர் தேசங்களில் நிகழ்ந்த இலக்கியச் சந்திப்புக்கள், பெண்கள் சந்திப்புக்கள், அரசியல் நிகழ்வுகளில் இவர் தன்னையும் இணைத்துக்கொண்டவர். இவை எல்லாவற்றுக்கும் மேலாக விளையாட்டுக்களிலும் தீவிர ஈடுபாடு கொண்டவர்.

யாழ் கொக்குவிலைச் சேர்ந்த இவர் ஆரம்பக் கல்வியை அப்பகுதியிலும் அதன் பின் இடைநிலைக் கல்வியை யாழ் இந்துக்கல்லூரியிலும் பயின்று இந்துவின் மைந்தனானவர். யாழ் இந்துக்கல்லூரி பழைய மாணவர் சங்கத்தில் சஞ்சீவ்ராஜ் தன்னை எப்போதும் ஒரு மையப் புள்ளியாக தக்க வைத்துக்கொண்டவர்.

இவருடைய நெருங்கிய வட்டத்தில் இல்லாவிட்டாலும் அரசியல், சமூக, கலை, இலக்கிய, நாடகச் செயற்பாட்டாளர்கள் மத்தியில் இவர் நன்மதிப்பொன்றைத் தக்க வைத்தவர். பொதுவாக வீட்டுக்கு வெளியே நல்ல நண்பர். சமூக அக்கறையாளன். தீவிர செயற்பாட்டாளன். ஒரு முற்போக்காளன். ஆனால் இவற்றையெல்லாம் உளப்பூர்வமாக இவர் நம்பினாரா என்பது பற்றி வெவ்வேறு தரப்பினருக்கு வெவ்வேறு அபிப்பிராயங்கள் உள்ளது.

தம்பித்துரை சஞ்சீவ்ராஜ் எவ்வாறு சமூகத்தின் முன் தன்னை முன்நிறுத்த முயன்றாரோ அதனை அவரால் சாதித்துக்கொள்ள முடியவில்லை. அவருடைய இறுதிக்காலங்கள் மிகவும் வேதனையானவை. ஆனால் அவரோடு சேர்ந்து பயணித்தவர்கள், அவருடைய இந்துவின் மைந்தர்கள் மற்றும் கல்லூரிகளின் நண்பர்கள், சமூக, கலை, இலக்கியச் செயற்பாட்டாளர்கள், விளையாட்டு ஆர்வலர்கள்: சஞ்சீவ்ராஜ் எவ்வாறு சமூகத்தின் முன்தன்னைக் காட்ட முயன்றாரோ அதனை அவருடைய வாழ்வுக்குப் பின் செய்துகாட்ட முன்வருவதே நாங்கள் சஞ்சீவ்ராஜ்க்கு செய்யக்கூடிய அஞ்சலியாக இருக்கும்.

அந்த வகையில் அவருடைய நினைவாக ஏதும் செய்ய விரும்பினால் பணத்தையும் பொருளையும் வீண்விரயம் செய்யாமல், சஞ்சீவ்ராஜ் தனது வாழ்க்கையை எதனால் இழந்தாரோ அந்த மது அடிமைத்தனத்திற்கு எதிராக புலம்பெயர் தேசத்திலும் தாயகத்திலும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் செயற்பாடுகளைச் செய்ய வேண்டும். விழிப்புணர்வுப் பிரசுரங்கள், நூல்கள், தமிழ் சமூகத்தில் மது ஏற்படுத்தும் தாக்கம் பற்றிய ஆய்வுகள், மதுவுக்கு அடிமையானவர்களை மீட்பதற்கான செயற்திட்டங்கள் ஆகியவற்றிலேயே கூடிய கவனத்தைச் செலுத்த வேண்டும்.

சஞ்சீவ்ராஜ் உடைய வாழ்வின் பெரும்பங்கை மதுஉட்கொண்டுவிட்டதால் அவரது மனைவி பிள்ளைகள் மதுபோதைக்கு எதிரான விழ்ப்புணர்வு நடவடிக்கைகளில் ஈடுபட்டு சஞ்சீவ்ராஜ் இன் ஆத்மசாந்தியடையச் செய்ய வேண்டும் என்று எண்ணுகின்றனர்.

ஆகையால் அவருக்கு அஞ்சலி கையேடுகளைத் தயாரிப்பதற்குப் பதிலாக மதுபோதைக்கு எதிரான விழிப்புணர்வுப் பிரசுரங்கள், கையேடுகள், படைப்புகளைக் கொண்டுவந்து இன்னுமொருவர் இன்னுமொரு குடும்பம் இவ்வாறு பாதிப்படையாமல் காப்பாற்றப்பட வேண்டும்.