புலம்பெயர் வாழ்வியல்

புலம்பெயர் வாழ்வியல்

தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழும் நாடுகளில் அவர்களுடைய வாழ்வியல், சமூக, அரசியல் தொடர்பான செய்திகள், கட்டுரைகள், ஆய்வுகள்.

மே 6 உள்ளுராட்சி கவுன்சில்களுக்கான தேர்தலில் பல தமிழர்கள் களமிறங்கி உள்ளனர்! : த ஜெயபாலன்

Mayor_and_Cllr_Pongal_14Jan10மே 6 பிரித்தானிய பாராளுமன்றத்துக்கான தேர்தலுடன் லண்டனில் உள்ள உள்ளுராட்சிக் கவுன்சில்களுக்கான தேர்தல்களும் நடைபெறுகின்றது. லண்டன் மற்றும் புறநகர்ப் பகுதிகளில் தமிழ் வாக்காளர்களின் எண்ணிக்கை 100 000 வரை இருக்கும் என மதிப்பிடப்பட்ட போதும் விரல் விட்டு எண்ணக்கூடிய தமிழ் கவுன்சிலர்களே தெரிவு செய்யப்பட்டு உள்ளனர். லண்டன் மற்றும் புறநகர்ப் பகுதிகளில் தமிழ் மக்கள் சரியான தேர்தல் பிரிவுகளை இனம்கண்டு போட்டியிட்டு தமிழ் மக்களை தமக்க்கு முழுமையாக வாக்களிக்கச் செய்ய முடிந்தால் 60க்கும் மேற்பட்ட கவுன்சிலர்களை வெற்றி பெறச் செய்ய முடியும் என மதிப்பிடப்படுகின்றது. ஆனால் ஒரே தேர்தல் பிரிவில் ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் போட்டியிட்டு தமிழர்கள் தெரிவு செய்யப்படுவதை தடுக்கின்ற முயற்சிகளே தற்போது மேற்கொள்ளப்படுகின்றது. அதுவும் தமிழ் தேசியத்தின் பெயரால் மேற்கொள்ளப்படுகின்றது.

இம்முறை நியூஹாமில் உள்ள வோல் என்ட், ஈஸ்ற்ஹாம் நோத் ஆகிய இரு தேர்தல் பிரிவுகளில் 7 பேர் போட்டியிடுகின்றனர். நியூஹாம் பகுதியின் ஒரே தமிழ் கவுன்சிலர் போல் சத்தியநேசன் முதன் முதலில் வெற்றி பெற்ற வோல் என்ட் தேர்தல் பிரிவில் . வரதீஸ்வரன் கனகசுந்தரம் சுயேட்சையாகப் போட்டியிடுகின்றார். அவரை எதிர்த்து லிபிரல் டெமொகிரட் கட்சி சார்பில் பிரபாகரன் கொன்சவேடிவ் கட்சி சார்பில் ராஜ்குமார் ஆகிய இரு தமிழர்கள் போட்டியிடுகின்றனர்.

நியூஹாமின் மற்றுமொரு தேர்தல் பிரிவான ஈஸ்ஹாம் நோத்தில் மூன்று தடவைகள் கவுன்சிலராக தெரிவு செய்யப்பட்ட போல் சத்தியநேசன் தொழிற் கட்சியின் சார்பில் நான்காவது தடவையும் போட்டியிடுகின்றார். இவருக்குப் போட்டியாக வசந்தா மாதவன் துரைக் கண்ணன் ஆகிய இருவர் கொன்சவேடிவ் கட்சியின் சார்பில் போட்டியிடுகின்றனர். சக்திவேல் லிபிரல் டெமொகிரட் கட்சியின் சார்பில் போட்டியிடுகின்றார்.

60 கவுன்சிலர்களைக் கொண்ட நியூஹாம் கவுன்சிலில் 54 கவுன்சிலர்கள் தொழிற்கட்சியைச் சேர்ந்தவர்கள். இவர்களில் போல் சத்தியநேசன் ஒருவரே தமிழ் கவுன்சிலராக உள்ளார். லண்டனில் தமிழ் மக்கள் செறிந்து வாழ்கின்ற நியூஹாம் கவுன்சிலில் கணிசமான தமிழர்கள் வாழ்கின்றனர். இங்கு ஒன்றுக்கு மேற்பட்ட தமிழ் கவுன்சிலர்கள் வருவதற்கு வாய்ப்பு இருந்த போதும் ஒன்றுக்கு மேற்பட்ட தமிழர்கள் ஒரே தேர்தல் பிரிவில் நிற்பதால் தமிழ் வாக்குகள் இங்கும் பிளவடைவதற்கான வாய்ப்புகள் உள்ளது.

குறிப்பாக தமிழ் தேசியத்தின் பெயரில் அணிதிரண்ட ஒரு பிரிவினர் தற்போது ஈஸ்ற்ஹாமில் கொன்சவேடிவ் கட்சிக்கு அலுவலகம் ஒன்றைத் திறந்து ஈஸ்ற்ஹாமில் உள்ள ஒரே தமிழ் கவுன்சிலரான போல் சத்தியநேசனை தோற்கடிப்பதில் குறியாக உள்ளனர். இத்தமிழ் வேட்பாளர்களுக்கு இடையேயான போட்டி கட்சி கொள்கை அடிப்படையில் இல்லாமல் தனிப்பட்ட தாக்குதலாக நடாத்தப்படுகின்றது. ஏற்கனவே கவுன்சிலராக இருந்த போல் சத்தியநேசனுக்கு எதிராக கொலைப் பயமுறுத்தல் சம்பவம் ஒன்று இடம்பெற்றிருந்ததும் தெரிந்ததே.

தேர்தலில் வென்றாலும் தோற்றாலும் மக்களுக்கான தனது சேவை என்றும் போல் தொடரும் எனத் தெரிவித்தார் போல் சத்தியநேசன். உள்ளாட்சித் தேர்தலிலும் நாடு தழுவிய ரீதியிலும் தொழிற்கட்சியின் நீண்ட கால ஆட்சி மீது மக்களுக்கு இயல்பான சலிப்பு ஏற்பட்டுள்ள நிலையிலும் தமது பகுதியில் தனது வாக்கு வங்கி பலமாகவே இருப்பதாகவும் அவர் தேசம்நெற்க்கு நம்பிக்கையுடன் தெரிவித்தார்.

கிழக்கு லண்டனைச் சேர்ந்த நியூஹாம் கவுன்சிலின் அயல் கவுன்சில்களான வோல்தம்ஸ்ரோ கவுன்சிலிலும் ரெட்பிரிஜ் கவுன்சிலிலும் தமிழ் வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இப்பகுதிகளில் தமிழ் வேட்பாளர்கள் ஒரே தேர்தல் பிரிவில் போட்டியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. வோல்தம்ஸ்ரோவில் தொழிற்சங்கமும் சோசலிஸ் பார்ட்டியும் இணைந்து போட்டியிடுகின்றனர். தனபாலசிங்கம் உதயசேனன் வோல்தம்ஸ்ரோ ஹயம்ஹில் தேர்தல் பிரிவில் போட்டியிடுகின்றார். உள்ளுராட்சித் தேர்தலில் போட்டியிடுகின்றவர்களில் உதயசேனனே இளையவர் என்பது குறிப்பிடத்தக்கது. இடதுசாரிக் கருத்துக்களில் நின்று தொடர்ச்சியான உள்ளுர்ப் போராட்டங்களில் இவர் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

ரேட்பிரிஜ் கவுன்சிலில் தொழிற்கட்சி சார்பில் தவத்துரை ஜெயரஞ்சன் நியூபரி தேர்தல் பிரிவிலும் கௌரி என்பவர் கிலேஹோல் தேர்தல் பிரிவிலும் போட்டியிடுகின்றனர்.

மேலும் போல் சத்தியநேசனைத் தவிரவும் கடந்த ஆட்சிக் காலத்தில் கவுன்சிலாகத் தெரிவு செய்யப்பட்ட எலிசா மஅன் (லிப் டெம்) – சதேக் கவுன்சில், யோகநாதன் மற்றும் அவரது மகன் (லிப் டெம்) – கிங்ஸ்ரன் கவுன்சில், சசிகலா (லேபர்) தயாஇடைக்காடர் (லேபர்), மனோ தர்மராஜா (லேபர்) ஆகிய மூவரும் ஹரோ கவுன்சில் – இவர்களும் இந்த உள்ளுராட்சித் தேர்தலில் போட்டியிடுகின்றனர். கடந்த ஆண்டு தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெறாத பலரும் இத்தடைவ மீண்டும் களமிறங்கி உள்ளனர். இவர்களுடன் உதயசேனன் போன்ற புதுமுகங்களும் இத்தேர்தலில் களமிறங்கி உள்ளனர்.

மே 2ல் இடம்பெற்ற நாடுகடந்த தமிழீழப் பாராளுமன்றத் தேர்தலில் வாக்குக் கேட்டு வீடுகளைத் தட்டியவர்களை சிலர் அவர்கள் பிரித்தானிய பாராளுமன்றத்துக்கான தேர்தலில் போட்டியிடுவதாக அல்லது உள்ளுராட்சித் தேர்தலில் போட்டியிடுவதாகக் குழம்பிய சில சம்பவங்களும் நடந்துள்ளது. இலங்கைத் தேர்தல் போன்று பிரித்தானியாவில் நடைபெற்ற நாடு கடந்த தமிழீழப் பாராளுமன்றத் தேர்தலிலும் மோசடிகள் இடம்பெற்றதாக குற்றச்சாட்டுகள் வெளிவந்து சில பகுதிகளில் மீளவும் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. சில ஆயிரம் வாக்காளர்கள் ஏகபோக பிரதிநிதித்துவக் கொள்ளை அடிப்படையில் விளையாட்டாக நடத்திய தேர்தலிலேயே மோசடி செய்து வெல்வதற்கு சிலர் முயற்சித்துள்ளனர் என்பது வேடிக்கையானதாக அமைந்துள்ளது. பிரித்தானியாவில் நடைபெறவுள்ள தேர்தல்கள் முன்பு குறிப்பிட்டுள்ள தேர்தல்களிலும் பார்க்க நியாயமான முறையில் நடத்தப்படும் என்பதில் ஐயம்கொள்ள வேண்டியதில்லை.

நெதர்லாந்தில் விடுதலைப் புலிகளுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தில் ஏழு பேர் கைது!

dutch_policeஏப்ரல் 26ல் விடுதலைப் புலிகளுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தில் ஏழு பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இவர்கள் பயங்கரவாத அமைப்பாக தடை செய்யப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு நிதி சேகரித்ததாக நெதர்லாந்து பொலிசாரினால் கைது செய்யப்பட்டு உள்ளனர். 16 வீடுகள் மற்றும் வர்த்தக நிறுவனங்களைச் சோதணையிட்ட பொலிசார் 40 000 ஈரோ பணம் மற்றும் அவர்களால் பயன்படுத்தப்பட்டதாக நம்பப்படும் கணணிகள் தொலைபேசிகள் புகைப்படங்கள் டிவிடி க்கள் என்பனவற்றை கைப்பற்றி உள்ளனர்.

நெதர்லாந்தின் வெவ்வேறு நகரங்களில் உள்ள வீடுகளையும் கட்டிடங்களையும் பொலிசார் சோதணையிட்டு உள்ளனர்.

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு நிதி சேகரிக்கும் நடவடிக்கையில் இவர்கள் ஈடுபட்டதாக நெதர்லாந்தின் தேசிய பொலிஸ் பிரிவு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்புத் தெரிவிக்கின்றது. நிதி சேகரிப்பது நிதி சேகரிப்பு நிகழ்வுகளை நடாத்தி நிதி சேகரிப்பது கலண்டர் டிவிடி என்பனவற்றை விற்பனை செய்து நிதி சேகரிப்பது சட்ட விரோதமான வாக்களிப்பை நடாத்தி நிதி சேகரிப்பது போன்ற நடவடிக்கைகளுக்காக இவர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் தமிழ் அமைப்புகளின் தலைவர்கள் அடங்குவதாகவும் அவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச வலைப் பின்னலுடன் தொடர்புடையவர்கள் என்றும் பொலிஸ் அறிக்கை தெரிவிக்கின்றது.

கைது செய்யப்பட்டவர்கள் Tamil Coordinating Committee (TCC), the Tamil Rehabilitation Organisation (TRO), Tamil Youth Organisation (TYO), Tamil Women Organisation (TWO) and Tamil Arts and Cultural Organization Netherlands (TKCO), ஆகிய தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவு அமைப்புகளின் தலைவர்கள் எனத் தெரியவருகின்றது.

தமிழீழ விடுதலைப் புலிகள் 2006ல் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளால் பயங்கரவாத இயக்கமாகத் தடை செய்யப்பட்டனர். 2008ல் பிரான்ஸ் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கையை எடுத்து பலரைக் கைது செய்திருந்தது. அதன் பிற்பாடு இவ்வாண்டு ஜேர்மன் அரசு விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களுக்கு எதிரான கடுமையான நடவடிக்கையை மேற்கொண்டு சிலரைக் கைது செய்தும் இருந்தது.

நாடு கடந்த தமிழீழப் பாராளுமன்றத்துக்கான தேர்தல் – தாயக மக்களின் பெயரில் புலம்பெயர் அரசியல் சவாரி : த ஜெயபாலன்

tgte_2010_Electionமே 18க்குப் பின் தமிழ் மக்கள் மத்தியில் ஜனநாயகப் புயல் மையங்கொண்டது போன்று மாறி மாறித் தேர்தல்கள் வந்து போகின்றது. வட்டுக்கோட்டைத் தேர்தல், ஜனனி ஜனநாயகத்தின் ஐரோப்பிய பாராளுமன்றத் தேர்தல், நாடுகடந்த தமிழீழத்தின் நாட்டுக் குழுக்களுக்குத் தேர்தல், யாழ்ப்பாண மாநகரசபைக்கும், வவுனியா நகரசபைக்குமான தேர்தல், இலங்கை ஜனாதிபதித் தேர்தல், இலங்கைப் பாராளுமன்றத் தேர்தல், நாடு கடந்த தமிழீழப் பாராளுமன்றத்திற்கான தேர்தல், பிரித்தானியத் தமிழர்களுக்கு இவற்றுடன் பிரித்தானியப் பாராளுமன்றத்திற்கான தேர்தல், பிரித்தானிய உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தல் என்று கடந்த ஓராண்டுக்குள் தமிழ் மக்கள் மீதான ஜனநாயகச் சுமை பெரும் சுமையாகிவிட்டது. இதுவரை ஏக தலைவரும் அவரது இயக்கமும் மட்டும் உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் முடிவெடுத்த நிலைபோய் தற்போது தமிழ் மக்களை வாக்களித்து ஆணை வழங்கும்படி கேட்கின்ற நிலை உருவாக்கப்பட்டு உள்ளது. போகின்ற போக்கில் வட்டுக் கோட்டைக்கும் நாடு கடந்த தமிழீழத்திற்கும் மட்டுமல்ல ஏக தலைவர் இருக்கின்றாரா? இல்லையா? ஏக தலைவருக்கு அஞ்சலி செலுத்துவதா இல்லையா என்று தேர்தல் வைத்து முடிவெடுக்கப்பட்டாலும் ஆச்சரியம் இல்லை. தமிழ் மக்கள் மத்தியில் ஜனநாயகம் ஏதோ ஒரு வகையில் வீச்சுப் பெற்றுள்ளது.

மே 02, 2010ல் நாடு கடந்த தமிழ் பாராளுமன்றத்திற்கான தேர்தல் தமிழ் மக்கள் புலம்பெயர்ந்து செறிந்து வாழும் இடங்களில் நடைபெறவுள்ளது. 135 பேர் கொண்டு அமைக்கப்படவுள்ள நாடு கடந்த தமிழீழப் பாராளுமன்றத்தில் 115 பேர் புலம்பெயர்ந்து தமிழ் மக்கள் செறிவாக வாழுகின்ற நாடுகளில் இருந்து தேர்தல் மூலமாகத் தெரிவு செய்யப்படுவார்கள். ஏனைய 20 பேரும் தமிழ் மக்கள் செறிவு குறைந்த அல்லது தேர்தலை நடாத்துவதற்கு வாய்ப்புக் குறைந்த பகுதிகளைப் பிரதிநிதித்துவம் செய்வார்கள். இவர்கள் மக்களால் தெரிவு செய்யப்பட்ட 115 பேரால் தெரிவு செய்யப்படுவார்கள். 20 பேரில் ஈழத்தமிழ் மக்கள் வாழாத நாடுகளில் வாழும் தமிழ் மக்களும் பங்குபெற்ற வாய்ப்பு வழங்கப்பட்டு உள்ளது.

நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் பற்றி அதன் மதியுரைக் குழு அறிக்கை இவ்வாறு தெரிவிக்கின்றது: ”தமிழ் மக்களின் அரசியல் தன்னாட்சி உரிமையினை வென்றெடுப்பதற்கு வேண்டிய பணிகளினை பல்வேறுபட்ட அணுகுமுறைக்கூடாக முன்னெடுக்க வேண்டிய பாரிய கடமை இலங்கைத் தீவிலிருந்து வெளியேறி வாழுகின்ற புலம்பெயர் தமிழ் மக்களின் கைகளில் வீழ்ந்துள்ளது. அத்தோடு தமிழர்கள் தமது இறைமையை நிலை நிறுத்தும் போராட்டத்தினை முன்னெடுக்கும் பணியில் புலம்பெயர் தமிழ் சமூகத்தினரும் குறிப்பாக இரண்டாம் தலைமுறையினரும் பெரும் பங்கு வகிக்க வேண்டும் எனத் தமிழீழத் தேசியத் தலைவர் திரு வே பிரபாகரன் அவர்கள் 2008 ஆம் ஆண்டு மாவீரர் நாள் உரையில் குறிப்பிட்டிருக்கிறார். புலம்பெயர் தமிழர்கள் பெரும்பாலும் தாராளவாத மக்களாட்சியின் இடையே வாழ்கின்றனர். தாம் வாழும் நாடுகளின் விதிமுறைகளுக்கேற்ற வகையில் தமிழீழ இலட்சியத்தை ஜனநாயக அமைதி வழிகளால் முன்னெடுக்கலாம் என்பதில் பற்றுறுதி கொண்டிருக்கிறார்கள். அதனை முன்னெடுப்பதற்கான ஒருங்கிணைக்கப்பட்டதும் மக்களின் ஆணையினைப் பெற்றதுமான ஒரு கட்டமைப்பின் அவசியம் இன்று உணரப்பட்டுள்ளது. அதுவே நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் என தற்போது முன்மொழியப்பட்டுள்ளது.”

இதில் உள்ள ஆபத்தான அம்சம் இதுவரை சரிவர உணரப்படவில்லை. ஈழத் தமிழ் மக்களின் பெயரால் நடாத்தப்படுகின்ற இந்த நாடு கடந்த தமிழீழப் பாராளுமன்றத்தில் தமது தாயகத்தை விட்டகலாத தமிழ் மக்களின் பிரதிநிதித்துவம் எதுவும் இல்லை. இலங்கை அரசு அப்பிரதிநிதிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்கின்ற நியாயமான அச்சம் காரணமாக இருந்தாலும் தாயக மக்களின் பெயரில் நடாத்தப்படுகின்ற இந்தப் பாராளுமன்றத்தில் அம்மக்கள் எவ்விதத்திலும் சம்பந்தப்பட்டு இராதது இதன் மிகப்பெரும் பலவீனம்.

புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் தாயக மக்களின் அரசியல் அபிலாசைகளை எவ்விதத்திலும் பிரதிநித்துவப்படுத்தவில்லை என்பது கடந்த ஓராண்டு காலத்தில் மிகத் தெளிவாக வெளிப்படுத்தப்பட்டு உள்ளது. வன்னி யுத்தத்தில் இடம்பெற்ற மிகமோசமான அழிவுக்கு இலங்கை அரசு எவ்வளவு பொறுப்புடையதோ அதேயளவு பொறுப்பு இந்த நாடுகடந்த தமிழீழ அரசுக்குப் பின்னணியில் உள்ளவர்களுக்கும் உண்டு. இந்த நாடுகடந்த தமிழீழ அரசுக்கான தேர்தலில் போட்டியிடுபவர்கள் பெரும்பாலும் தங்களுடைய தகமையாக புலம்பெயர்ந்த நாடுகளில் இடம்பெற்ற போராட்டங்களில் பங்குபற்றியதை குறிப்பிட்டு உள்ளனர். ஆனால் இவர்களில் யாருமே அம்மக்கள் தமிழீழ விடுதலைப் புலிகளால் வன்னி மக்கள் யுத்தத்தில் இருந்து தப்ப முடியாது தடுத்து வைக்கப்பட்டதையோ, தமிழீழ விடுதலைப் புலிகளால் சிறார்கள் பலவந்தமாக இயக்கத்தில் சேர்க்கப்பட்டதையோ, யுத்த்தில் இருந்து தப்பிச் சென்றவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகளால் சுட்டுக் கொல்லப்பட்டதையோ சுட்டிக்காட்டவில்லை. பணயம் வைக்கப்பட்ட தமிழ் மக்களை விடுவிக்கும் படி விடுதலைப் புலிகளைக் கோரவில்லை. சர்வதேச சமூகம் அம்மக்களை விடுவிக்க எடுத்த முயற்சிக்கு எதிராகவும் இவர்கள் குரல் எழுப்பி இருந்தனர். இந்நடவடிக்கைகள் அனைத்தும் வன்னி மக்களின் நலன்களுக்கு எதிராகவே அமைந்திருந்தது. வன்னி மக்கள் மிகக் கடுமையான யுத்தத்தை எதிர் கொண்டு வரலாறு காணாத அழிவைச் சந்தித்த போதும் இன்று தேர்தலை நடாத்துகின்ற நாடு கடந்த தமிழீழத்திற்கான செயற்குழுவும் தேர்தலில் போட்டி போடுகின்ற வேட்பாளர்களும் பொறுப்பற்ற முறையிலேயே அன்று நடந்து கொண்டனர். இவர்கள் தாயக மக்களின் அரசியல் அபிலாசைகளைப் பிரதிநிதித்துவம் செய்ய எவ்வித தகுதியையும் கொண்டிருக்கவில்லை.

இவர்கள் தங்கள் அரசியல் அபிலாசைகளை எவ்விதத்திலும் வெளிப்படுத்தவில்லை என்பதனை இவர்களின் பிரதிநிதிகளை முற்றாக நிராகரித்ததன் மூலம் தாயக மக்கள் வெளிப்படுத்தி உள்ளனர். நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் இலட்சிய வாக்கியமான தாயகம் தேசியம் இறைமை இவற்றை முன்வைத்து தமிழ் தேசியத்திற்கான மக்கள் முன்னணி போட்டியிட்டது. இதற்கு புலம்பெயர்ந்த மண்ணில் உள்ள தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான ஊடகங்களும் பெரும்பாலும் ஆதரவு வழங்கி இருந்தன. புலம்பெயர்ந்த நாடுகளில் நடைபெற்ற தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக முன்னெடுக்கப்பட்ட போராட்டங்களில் முன்னணியில் நின்ற தமிழ் தேசியத்திற்கான மக்கள் முன்னணியைச் சேர்ந்த பத்மினி சிதம்பரநாதன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், கஜேந்திரன் ஆகியோர் தோற்கடிக்கப்பட்டனர். இப்போராட்டங்களில் முன்னின்ற மற்றுமொருவரான எம் கெ சிவாஜிலிங்கமும் தோற்கடிக்கப்பட்டார். இவை புலம்பெயர்ந்த அரசியல் தலைமைகள் தாயக மண்ணில் இருந்து எவ்வளவு தூரம் அந்நியப்பட்டு உள்ளன என்பதைப் புலப்படுத்துகின்றது. 

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் மதியுரைஞர் குழு நாடு கடந்த அரசு பற்றி இவ்வாறு வரைவிலக்கணப்படுத்துகிறது: ”ஈழத் தமிழரின் புலப்பெயர்வும் அவர்களுக்கு நாடு கடந்த வாழ்க்கையை உருவாக்கியிருக்கிறது. மரபார்ந்த நாடு-தேசியம் போன்ற எல்லைகளைக் கடந்து ‘நாடு கடந்த தேசியம்’ என்ற புதிய நிலையை அவர்கள் எட்டியுள்ளனர். நாடு கடந்த தேசியம் என்பது தமிழ் மக்களையும் அவர்களது பல்வேறு சமூக, பொருளியல், அரசியல் நிறுவனங்களையும் அவர்கள் வாழுகின்ற நாடுகளின் புவியியல் எல்லைகளைத் தாண்டி இணைக்கும் வழிமுறையாகும்.”

இப்பகுதியில் குறிப்பிடப்பட்டு இருப்பது போல புலம்பெயர்ந்து வாழ்கின்ற மக்களை அவர்களின் புவியியல் எல்லைகளைத் தாண்டி இணைப்பதற்கு இதுவும் ஒரு வழிமுறையாக அமையலாம். ஆனால் அதனைத் தாண்டி தாயகத்தில் வாழ்கின்ற மக்களின் அரசியல் பொருளாதார வாழ்நிலையில் இருந்து முற்றிலும் வேறுபட்ட சூழலுக்குள் வாழ்ந்து கொண்டு அம்மக்கள் தொடர்பான அரசியலை முன்னெடுப்பதாகக் கூறுவது ஏற்கனவே வன்னி மக்களை முள்ளிவாய்க்காலில் கொண்டுவந்து நிறுத்திய கைங்கரியத்தையே இவர்கள் மீளவும் செய்ய உள்ளனர் என்பதனைக் கட்டியம் கூறுகின்றது. ஒப்பீட்டளவில் ஜனநாயகப் பண்புள்ள மேற்குலகில் வாழ்ந்து கொண்டும் தங்கள் அரசியல் நடவடிக்கைகள் பற்றிய எவ்வித மீளாய்வும் இல்லாமல் தங்கள் பலம் பலவீனம் பற்றிய எவ்வித மதிப்பீடும் இல்லாமல் மீண்டும் தாயக மக்களுக்காக இவர்கள் சிந்திக்க முற்படுவது அம்மக்களுக்கு இவர்கள் பெரும் ஆபத்தை ஏற்படுத்தக் கூடியவர்கள் என்ற அச்சத்தையே தோற்றுவிக்கின்றது.

மேலும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தை அமைப்பதற்கான தேர்தலில் போட்டியிடுபவர்களில் முற்றாக அல்லது பெரும்பாலானவர்கள் அரசியல் அலையில் அடிபட்டுச் செல்பவர்களாகவே உள்ளனர். தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான போராட்டங்களில் தங்களையும் இணைத்துக் கொண்டு தங்களை முன்னிலைப்படுத்தியதற்கு அப்பால் இவர்களிடம் எவ்வித அரசியல் அனுபவமும் இருந்ததில்லை. இதனை அவர்கள் பற்றிய குறிப்புக்களே புலப்படுத்தி நிற்கின்றது. மேலும் இந்த நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பாராளுமன்றத்தில் போட்டியிடுபவர்கள் செயற்பாட்டாளர்களும் அல்ல. தமிழீழ விடுதலைப் புலிகள் தமிழ் தேசியக் கூட்டமைப்பை எவ்வாறு தங்கள் நோக்கங்களுக்காக பினாமிகளாகப் பயன்படுத்தினார்களோ இந்த நாடு கடந்த அரசாங்கத்திற்குப் பின்னால் உள்ளவர்களும் அதன் பாராளுமன்ற உறுப்பினர்களை தங்கள் அரசியல் நோக்கங்களுக்காகப் பயன்படுத்துவார்கள். இந்தத் தேர்தலின் மூலம் தெரிவு செய்யப்படும் நாடு கடந்த தமிழீழப் பாராளுமன்றத்திற்கு எவ்வித அரசியல் பொருளாதாரப் பலமும் கிடையாது. உண்மையான பொருளாதார பலம் இதன் பின்னணியில் உள்ளவர்களிடமே உள்ளது. அவர்களே இந்த நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தை இயக்கப் போகின்றார்கள். அவர்களே இத்தேர்தலில் வேட்பாளர்களை நிறுத்தி உள்ளனர். இதில் போட்டியிடுகின்ற வேட்பாளர்கள் பெரும்பாலும் அரசியல் முகவரியற்றவர்கள். அல்லது அரசியலில் பாலபாடத்தைத் தாண்டாதவர்கள்.

”நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் செயற்பாடுகள் எல்லாம் வன்முறை தவிர்ந்தவையாகவும் எந்த நாட்டு சட்டங்களையும் மீறாத வகையிலும் மேற்கொள்ளப்படும்.” என்று நாடு கடந்த அரசின் மதியுரைக் குழு தெரிவிக்கின்றது. இந்த நாடு கடந்த அரசாங்கத்தின் ஒவ்வொரு செயற்பாட்டிலும் தற்போது தொடர்புபட்டவர்கள் ஒவ்வொருவருமே மே 18 வரை தமிழீழ விடுதலைப் புலிகளையும் தமிழீழத்திற்கான அதன் நடவடிக்கைகளையும் முழுமையாக ஏற்றுக்கொண்டவர்கள். தற்போது அது பற்றிய எவ்வித மீள்பரிசீலனையும் அதனால் ஏற்பட்ட விளைவுகள் பற்றிய எவ்வித மதிப்பீடும் இன்றி வன்முறையைக் கைவிட்டுவிட்டதாக அறிவிக்கின்றனர். மே 18ல் இரவோடு இரவாக இவர்கள் பெற்ற ஞானம் மிக ஆபத்தான ஞானம். இன்னொரு மே 18ல் இரவோடு இரவாக ஆயுதப் போராட்டம் தான் ஒரே வழி என்று இவர்கள் சொன்னாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. ஏனென்றால் இவர்கள் வெறும் பினாமிகளே. இவர்களை இயக்குபவர்கள் தான் எப்போதும் முடிவுகளை எடுப்பார்கள்.

பிரித்தானியாவில் நாடு கடந்த தமிழீழ பாராளுமன்றத்திற்கு 20 பேரைத் தெரிவு செய்வதற்கு 38 பேர் வரை போட்டியிடுகின்றனர். இதில் தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் பொருளாதார பலத்தை தம் வசம் வைத்துள்ள ரூட் ரவி, தனம் மற்றும் முக்கிய புள்ளிகள் போட்டியிடவில்லை. இவர்களால் இயக்கப்படுகின்ற அடிப்பொடிகளே தேர்தலில் நிற்கின்றனர். இவர்களில் யார் வென்றாலும் முடிவுகள் எடுக்கப் போகின்றவர்கள் இவர்களை இயக்குகின்ற எஜமானர்களே. நாடு கடந்த தமிழீழப் பாராளுமன்றம் இன்னுமொரு பிரிஎப், ரிவைஓ போன்றே இயங்கும்.

தங்களுக்கு சமூக அந்தஸ்த்தை வேண்டுபவர்கள் போட்டியிட்டு தங்கள் இமேஜை கட்டமைப்பதற்கு அப்பால் தாயக மக்களுக்கு இவர்களால் ஏதுவும் சாதிக்க முடியும் என்பது சந்தேகமே. தமிழ் தேசியக் கூட்டமைப்பில் உள்ள சம்பந்தன், மாவை, சுரேஸ் கூட்டு குறைந்த பட்சம் மே 18ற்குப் பின்னாவது தங்கள் சொந்தக் கருத்தை வெளிப்படுத்தத் தலைப்பட்டுள்ளனர். ஆனால் நாடு கடந்த தமிழீழ பாராளுமன்றத் தேர்தலில் நிற்பவர்கள் பெரும்பாலானவர்களுக்கு சுயமான அரசியல் சிந்தனையே கிடையாது.

சுரேஸ் பிரேமச்சந்திரனுடைய சகோதரர் ஆறுமுகம் கந்தையா மனோகரன் யுகே யில் வட்டுக்கோட்டைக்கு வாக்கெடுப்பு நடத்தி இப்போது நாடுகடந்த தமிழீழம் அமைக்கவும் போட்டியிடுகின்றார். இவர் படித்துப் பெற்ற சமூக விஞ்ஞானம் – (அரசியல்) கலாநிதிப் பட்டமோ அல்லது ‘தூள்’ விநாயகர் என்று அறியப்பட்ட இல்போர்ட்டில் ‘செல்வ விநாயகர்’ என்ற ஆலயத்தை நிறுவிய செல்வராஜா செல்லத்துரை ஆன்மீகப் பலத்தோடு மேற்கொண்டுள்ள அறவழிப் பயணமோ தாயக மக்களுக்கு உதவியாக அமையாவிட்டாலும் உபத்திரவமாக அமையாது இருக்க முயற்சிக்க வேண்டும். இவர்கள் நாடு கடந்த தமிழீழம் எடுக்கிறார்களோ அல்லது தாங்கள் வாழும் நாடுகளில் தமிழீழம் எடுக்கிறார்களோ அவர்களது ஜனநாயக உரிமை. ஆனால் தங்கள் அபிலாசைகளுக்காகவும் பாராளுமன்ற உறுப்பினர் (நாடு கடந்த தமிழீழம்) பதவிகளுக்காகவும் தாயக மக்கள் மீது சவாரி செய்யாமல் இருக்க வேண்டும்.

குறிப்பாக பிரித்தானியாவைப் பொறுத்தவரை நாடு கடந்த தமிழீழ பாராளுமன்றத்திற்கான தேர்தலும் இத்தேர்தல் ஆணைக்குழுவும் சிறு பிள்ளைத் தனமானதாகவே உள்ளது. ஒவ்வொரு தேர்தல் வாக்காளர் அட்டையிலும் அடையாள அட்டை இலக்கத்தை பதிவு செய்து வாக்களிப்பு நடைபெறுகின்ற தேர்தல்களிலேயே முறைகேடுகள் பற்றிய செய்திகள் வருகின்றன. இங்கு வாக்காளர் அட்டை இல்லை. தன்னை உறுதிப்படுத்த முடியாத வாக்காளரும் வாக்களிக்க வழியுண்டு. சில மாதங்களுக்கு முன்னர் இரு நாள் இடம்பெற்ற வட்டுக்கோட்டைத் தீர்மானத்திற்கான தேர்தலில் ஈஸ்ற்ஹாம் பேர்ச்சஸ் வீதியில் உள்ள ஒருவர் ஒரே நாளில் தான் வெவ்வேறு வாக்களிப்பு நியைங்களில் 15 வாக்குகளை அளித்ததாகத் தெரிவித்தார். இதற்கு மேல் இத்தேர்தல் பற்றியோ அதனைக் கண்காணிக்கும் ஆணைக்குழு பற்றியோ குறிப்பிடுவதற்கு எதுவும் இல்லை. தேர்தல் ஆணைக் குழுத் தலைவர் நடராஜா விஜயசிங்கம் தமிழ் தொலைக்காட்சியில் அரசியல் விமர்சனம் என்ற போர்வையில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் அதன் தலைமைக்கும் துதிபாடி வன்னி மக்கள் முள்ளிவாய்க்காலில் பேரழிவுக்கு உள்ளாவதை வேடிக்கை பார்த்தவர். ஓய்வு பெற்றுள்ள இவருக்கு இதுதான் தற்போது பொழுது போக்கு.

பிரித்தானியாவில் நாடு கடந்த தமிழீழப் பாராளுமன்றத்திற்கான தேர்தலில் போட்டியிடுபவர்களின் முக்கிய தகுதி தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக நடாத்தப்பட்ட போராட்டங்களில் பங்கு பற்றியது, கோசம் எழுப்பியது, புலிக் கொடி பிடித்தது. இதற்கு அப்பால் இவர்கள் தங்கள் சமூகம் சார்ந்த நடவடிக்கையாக எதனையும் குறிப்பிடவில்லை. பலருக்கு அவ்வாறு குறிப்பிடுவதற்கு எதுவும் இல்லை என்பதும் உண்மை. போட்டியிடும் வேட்பாளர்கள் கல்வித் தகமை உடையவர்களாகவும் வியாபார உரிமையாளர்களாகவும் ஆலய உரிமையாளர்களாகவும் உள்ளனர். ஆனால் இவர்கள் இதுவரை தமிழ் சமூகத்திற்கும் தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்திற்கும் எவ்வாறான காத்திரமான பங்களிப்பைச் செய்துள்ளனர் எனக் குறிப்பிடவில்லை. ஆனால் ‘தூள் விநாயகர்’ உரிமையாளர் செல்வராஜா உட்பட சிலரது குறிப்புகளோ 1977 அல்லது அதற்கு முன்பிருந்தே தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்தில் ஆர்வத்துடன் ஈடுபடுவதாகக் குறிப்பிட்டு உள்ளனர். உண்மைகள் உறங்குவதில்லை என்பதில் நம்பிக்கை கொள்வோம். அவை நிச்சயம் வெளிச்சத்திற்கு வரும்.

இக்கட்டுரையை 18 ஆண்டுகளுக்கு முன் இடம்பெற்ற நினைவுக் குறிப்புடன் முடிக்கலாம் என நினைக்கிறேன். தற்போதைய ரிஆர்-ரெக் கல்வி நிலையம் தங்களது ஆறு மாத கணணிப் பயிற்சியில் டிப்ளோமா பெற்ற மாணவர்களுக்கு மிடில்செக்ஸ் பல்கலைக் களகத்தில் பட்டமளிப்புச் செய்யும் முறையை அப்போது அறிமுகப்படுத்தி இருந்தது. பட்டப் படிப்பை முடித்த மாணவர்கள் பட்டமளிப்பின் போது அணியும் அங்கிகளை அணிந்து புகைப்படங்களையும் எடுத்துக் கொண்டனர். இந்தப் புகைப்படங்கள் வீட்டில் பிறேம் போட்டு அலங்காரத்துக்கே வைக்க முடியும். இந்த நாடு கடந்த தமிழீழப் பாராளுமன்றமும் கிட்டத்தட்ட அது போன்ற ஒரு விடயமே.

1.54 மில்லியன் அமெரிக்க டொலர் மருந்துப் பொருட்கள் லிற்றில் எய்ட் மூலம் தமிழ் பகுதிகளுக்கு வழங்கப்பட்டது! : த ஜெயபாலன்

MWB_in_Vavuniya_Hospitalமே 18 2009ல் பிரித்தானியாவில் பொது அமைப்புகளின் ஆணைக்குழுவின் கீழ் பதிவு செய்யப்பட்ட லிற்றில் எய்ட் தனது முதலாவது ஆண்டைப் பூர்த்தி செய்யும் நிலையில் கடந்த நான்கு மாதங்களில் 1.54 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான மருந்துப் பொருட்களை வவுனியா, மன்னார், யாழ்ப்பாணம், நாவலப்பிட்டியா மாவட்டங்களில் உள்ள வைத்தியசாலைகளுக்கு விநியோகித்து உள்ளது. www.littleaid.org.uk இலங்கையில் இவ்வளவு தொகையான மருந்துப் பொருட்களைப் பொறுப்பேற்று முற்றிலும் இலவசமாக விநியோகித்துள்ள குறிப்பிடத்தக்க நடவடிக்கையாக இது அமைந்துள்ளது. டென்மார்க்கில் உள்ள மருத்துவ பொது அமைப்பான எல்லைகளற்ற மருத்துவர்கள் – Medicine Without Borders (Denmark) அமைப்பினரால் வழங்கப்பட்ட மருந்து வகைகளை இலங்கையில் பெறுப்பேற்று அதன் விநியோகத்தை லிற்றில் எய்ட் மேற்கொண்டிருந்தது.

1.54 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான மருந்துகளின் இறுதித் தொகுதி இவ்வாண்டு ஜனவரி முதல் நாள் முதல் லிற்றில் எய்ட் பொறுப்பேற்றுக் கொண்டது. கடந்த நான்கு மாதங்களாக மேற்குறிப்பிடப்பட்ட உள்ளுர் வைத்தியசாலைகளின் தேவையையொட்டி அவை அனுப்பி வைக்கப்பட்டு இருந்தது. இலங்கையில் இம்மருந்துப் பொருட்களின் சேமிப்பு மற்றும் விநியோகத்தைப் பார்வையிட டென்மார்க் எல்லைகளற்ற மருத்துவப் அமைப்பில் இருந்து இருவர் உட்பட நால்வர் இலங்கை வந்திருந்தனர். இவர்களில் இருவர் டென்மார்க் தேசிய நாளிதலான பொலிரிக்கன் பத்திரிகையில் இருந்து வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் டென்மார்க் குழுவிற்கு தலைமை தாங்கி வந்த Hans Frederik Dydensborg லிற்றில் எய்ட் இன் நடவடிக்கைகளை நேரில் பார்வையிட்டதில் தங்களுக்கு  எதிர்காலத்தில் லிற்றில் எய்ட் உடன் இணைந்து பணியாற்ற விருப்பம் தெரிவித்துள்ளனர்.

இவர்களின் ஆலோசனைக்கு அமைய நீர்கொழும்பில் குளிரூட்டப்பட்ட சேமிப்பு இடம் ஒன்னை லிற்றில் எய்ட் 10000 ரூபாய் மாத வாடகைக்குப் பெற்றுள்ளது. எதிர்காலத்தில் லிற்றில் எய்ட் மருந்து மற்றும் பொருட்களை தனியார் சேமிப்பு இடங்களில் வைக்காமல் தங்களது கட்டிடத்திலேயே விநியோகிக்கப்படும் வரை பாதுகாக்க முடியும். இலங்கைக்கு விஜயம் செய்த டென்மார்க் குழு வவுனியா அரசாங்க அதிபர் திருமதி சார்ள்சை சந்தித்து உரையாடி இருந்தனர். இக்குழு அருணாச்சலாம் இடப்பெயர்வு முகாமுக்குச் சென்றும் நிலைமைகளை நேரடியாகப் பார்வையிட்டு இருந்தனர்.

இம்மருத்துவ உதவிக்கு முன்னதாக 1140 கிகி (1.12 தொன்) எடையுள்ள மருந்தப் பொருட்கள் எல்லைகளற்ற மருத்துவர்கள்  – டென்மார்க் அமைப்பினரால் அன்பளிப்புச் செய்யப்பட்டு இருந்தது. இம்மருந்துகளின் காலாவதிக் காலம் யூலை 2011. வவுனியா மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள இம்மருந்துப் பொருட்கள் பரவலாக உள்ள நோய்களுக்கான 7 வகையான மருந்துகளை உள்ளடக்கி இருந்தது. வலி நிவாரணம், மன அழுத்தம் மன உளைச்சல், இதய எரிவு, வயிற்று அல்சர், உயர் கொலஸ்திரோல் ஆகியவற்றிற்கான மருந்துகள் இந்த மருந்துத்தொகுதியில் உள்ளடங்கி இருந்தது. இம்மருந்துப் பொருட்களின் மதிப்பீடு 16,000 பவுண்கள் (30 லட்சம் ரூபாய்.)

இந்த மருத்துவத் திட்டம் வெற்றிகரமாக முடிக்கப்பட்டதைத் தொடர்ந்தே 1.54 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான மருந்துகள் லிற்றில் எய்ட் இன் பொறுப்பில் கையளிக்கப்பட்டது.

இந்த ஓராண்டில் குறிப்பாக வன்னி முகாம்களுக்கு மக்கள் மிகுந்த நெருக்கடியை எதிர்நோக்கி இருந்த ஆரம்பக்கட்டத்தில் மரக்கறிகள், குழந்தைகளுக்கான பால்மா, துணிவகைகள் ஆகியவற்றை தம்புல்லவில் இருந்து செட்டிகுளம் முகாம்களுக்கு அனுப்பி வைத்தது. மேலும் அம்பேபுச முகாமில் உள்ள முன்னாள் போராளிகளின் புனர்வாழ்வில் அவர்களுக்கு இசைப் பயிற்சி வகுப்புகளை லிற்றில் எய்ட் மேற்கொண்டிருந்தது. இத்திட்டம் சட்ட மற்றும் மறுசீரமைப்பு அமைச்சின் ஒத்துழைப்புடன் லிற்றில் எய்ட் இனால் மட்டுமே மேற்கொள்ளப்படுகின்றது. 5ம் தர புலமைப் பரிசில் பரீட்சைக்க்கு தோற்றிய மாணவர்களுக்கு தேசம்நெற் மேற்கொண்ட நூவிநியோகத் திட்டத்திற்கும் லிற்றில் எய்ட் நிதிப் பங்களிப்புச் செய்திருந்தது. மேலும் மன்னாரில் டிலா பிரதர்ஸின் ஒத்துழைப்புடன் அகிலன் பவுண்டேசன் செஞ்சோலைச் சிறார்களை பராமரிப்பதற்கான ஏற்பாடுகளை லிற்றில் எய்ட் மேற்கொண்டிருந்தது.

லிற்றில் எய்ட் உதவி வழங்குவதை மட்டுமல்ல உதவி வழங்கும் நிறுவனங்களை தாயகத்தில் உதவி தேவைப்படும் மக்களுடன் தொடர்புபடுத்தி விடுவதிலும் கவனம் எடுத்து வருகின்றது. லிற்றில் எய்ட் நேரடியாக நிதி உதவிகளைப் பெற்று மேற்கொண்ட உதவிகள் 10 000 புவண்களுக்குள் அமைய, சர்வதேச மற்றும் அமைப்புகளுடன் தொடர்புகளை ஏற்படுத்தி பெற்றுக் கொடுத்து வரும் உதவிகள் சில மில்லியன் அமெரிக்க டொலர்களாக மதிப்பிடப்படுகின்றது.

லிற்றில் எய்ட் தங்கள் அனைத்து நடவடிக்கைகளையும் நிதிப் பரிமாற்றங்களையும் அனைவரும் பார்வையிடக் கூடிய வகையில் இணையத்தில் வெளியிட்டு வருகின்றது. தமிழ் பொது அமைப்புகள் மத்தியில் உள்ள பொறுப்பற்ற ஒளிவு மறைவான கணக்கியல் நடைமுறைக்கு மாறாக லிற்றில் எய்ட் திறந்த புத்தகமாக உள்ளமை அதன் நம்பகத்தன்மையின் வெளிப்பாடாக உள்ளது.

லிற்றில் எய்ட் பற்றிய மேலதிக விபரங்களுக்கு : www.littleaid.org.uk

‘அம்பாளின் 700 சுலோகங்களை பாராயணம் செய்தால் உயர் பதவிகள் கிட்டும், புத்திர சௌபாக்கியம் கிடைக்கும், பரீட்சையில் சித்தி கிட்டும், சீக்கிரம் விவாகம் நடந்தேறும்!!!’ என்பீல்ட் நாகபூசணி ஆலய நிர்வாகத்தின் ஜில்மால்

Kamalanatha_Kurukkalசில இந்து மத ஆலயங்கள் முற்றாக வருமானம் ஈட்டும் வியாபார நோக்கங்களுக்காகவே ஆரம்பிக்கப்பட்டன. அந்தவகையில் தனி நபர்களாலும் குழுக்களாலும் வியாபார நோக்கங்களுக்காக ஆலயங்கள் ஸ்தாபிக்கப்பட்டன. தனிநபர்களால் ஆரம்பிக்கப்பட்ட ஆலயங்கள் தனிநபர்களின் வர்த்தக நிறுவனங்கள் போன்றே செயற்படுகின்றன. அவற்றின் வருமானங்கள் தனிநபர்களையே சென்றடைகின்றது. ரூற்றிங் முத்துமாரி அம்மன் ஆலயம் வெம்பிளி ஈழபதீஸ்வரர் ஆலயம் என்பீல்ட் நாகபூசணி அம்மன் ஆலயம் என்பன அரசியல் நோக்கங்களுக்கு வருமானத்தைப் பெறும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்டு நடாத்தப்பட்டு வருகின்றது. இவற்றில் வெம்பிளி ஈழபதீஸ்வரர் ஆலயம் அரசியல் பிளவுக்குள் சென்ற போது அதனை ரூற்றிங் முத்துமாரி அம்மன் ஆலய நிர்வாகம் ந சீவரட்ணம் கைப்பற்றுவதற்கு எடுத்த முயற்சி பலனளிக்கவல்லை. இது நீதிமன்றம் வரை சென்று ரூற்றிங் முத்தமாரி அம்மன் ஆலயத்திற்கு பல்லாயிரம் பவுண்கள் நஸ்டம் ஏற்பட்டது.

ஆலயங்கள் ஆன்மீகத்தையும் மனஅமைதிக்கான சூழலை ஏற்படுத்துவதற்குப் பதிலாக பணத்தினைக் குறியாகக் கொண்டு செயற்படுகின்ற தன்மை பரவலாகக் குற்றம்சாட்டப்பட்டு வருகின்ற விடயம். பல்வேறு கஸ்டங்கள் மத்தியிலும் ஆலயம் செல்பவர்கள் இறைவனுடன் தங்கள் கஸ்டங்களைப் பகிர்ந்துகொண்டு மனநிறைவை வேண்டிச் செல்கின்றனர். ஆனால் ஆலயத்தில் உள்ள அர்ச்சகர்களும் நிர்வாகிகளும் மனுக் காட்டைக் கொடுத்து என்ன மீல் வேண்டும் என்பது போல அர்சனை விலைப் பட்டியலை வழங்கி செலவான அர்ச்சனைகளைச் செய்ய அடியார்களுக்கு அழுத்தம் கொடுக்கின்றனர்.

என்பீல்ட் நாகபூசணி அம்மன் ஆலயத்திற்கு தனது பிறந்ததினத்தன்று வழிபட்டுவிட்டு வரச் சென்ற பெண்ணுக்கு அர்ச்சகர் 30 பவுண்களுக்கு அர்ச்சனை செய்வதற்கு அழுத்தம் கொடுத்து மறுக்க முடியாமல் அப்பெண் 30 பவுண்களுக்கு அர்ச்சனை செய்துவிட்டு வந்துள்ளார். மிகுந்த கஸ்டத்தில் வாழ்கின்ற அப்பெண் அன்று ஆலயத்திற்குச் சென்றது அவருக்கு பெரும் பணச் செலவை ஏற்படுத்தி இருந்தது. அப்பெண் இதனை தனது நண்பிக்கு போன் எடுத்துக் குறைப்பட்டுள்ளார்.

அதே என்பீல்ட் நாகபூசணி அம்மன் ஆலயத்தின் அர்ச்சகர்கள் தங்கள் ஆலயத்திற்கு வந்த வழிபட்டால் பல்வேறு நோய்கள் நீங்கும், மகப்பேறு கிடைக்கும், பரீட்சையில் சித்தியடையலாம் என்பது போன்ற அறிவிப்புக்களையும் விளம்பரங்களையும் மேற்கொண்டு வந்துள்ளனர். கீழே பெப்ரவரி 28 மாசி மகத் திருவிழா தொடர்பாக என்பீல்ட் நாகபூசணி அம்மன் ஆலயம் வெளியிட்ட தூண்டுப் பிரசுரம் இவ்வாறு சொல்கின்றது:

Nagapoosani_Ad‘வட இலண்டன் என்பீல்ட் நாகபூசணி அம்பாள் திருவருள் துணைநிற்க மார்க்கண்டேய முனிவர்களால் அருளிச் செய்யப்பட்ட தேவி மகாத்மியம் என்னும் 700 சுலோகங்களை அம்பிகையின் திருவருள் வேண்டி யார் பாராயணம் செய்கிறார்களோ  அவர்களின் துன்பங்கள் நீங்கி, நோயற்ற வாழ்வும், ஐஸ்வரியமும், உயர் பதவிகளும் பெறவும், கிரக பீடைகள் நீங்கவும், புத்திர சௌபாக்கியமும், பரீட்சையில் சித்தி பெறவும், சீக்கிரம் விவாகம் நடந்தேறவும், கவலைகளும் கஸ்டங்களும் நீங்கி நல்வாழ்வு கிடைக்கும். எனவே அடியார்கள், என்பீல்ட் நாகபூசணி அம்பாள் திருவருள் வேண்டி வெள்ளி தோறும் ஆலயத்திற்கு வருகை தந்து கீழ்காணும் சுலோகங்களை 9 தடவைகள் பாராயணம் செய்து பாலாபிசேகம் செய்து அர்ச்சனை வழிபாடு ஆற்றி நல்வாழ்வு வாழப் பிரார்த்திக்கின்றோம்.’

என்பீல்ட் நாகபூசணி அம்மன் ஆலயத்தின் துண்டுப் பிரசுரம்

 இந்தப் பால் குடம் ஒன்றின் விலை 10 பவுண்கள். அர்ச்சனை வேறு விலைகளில் உள்ளது. பெரும்பாலும் ஆலயங்கள் எல்லாமே தாங்கள் ஊரில் உள்ளவர்களுக்கு உதவுகின்றோம் என்ற போர்வையிலேயே வழிபாடுகளை நடாத்துவதாகத் தெரிவிக்கின்றனர். ஆனால் இந்த வழிபாடுகளால் ஈட்டப்படும் வருமானம் ஊருக்கு செலவு செய்யப்படும் விபரங்கள் பற்றிய வெளிப்படையான கணக்கு விபரங்களை ஆலயங்கள் வெளியிடுவதில்லை. அதனால் அவ்வாலயங்கள் பற்றிய நம்பகத் தனமை ஒரு கேள்விக்குறியாகவே உள்ளது.

தவறான விளம்பரங்களைச் செய்து பலவீனமான நிலைப்பட்டவர்களிடம் பணம் பறிக்கின்ற விடயம் இந்துமதத்திற்கு மட்டுமான பிரச்சினையல்ல. வௌ;வேறு மதநிறுவனங்களும் இதனைச் செய்கின்றன. குறிப்பாக பிரித்தானியாவில் உள்ள சமூகப் பத்திரிகைகளில் இவற்றுக்கான விளம்பரங்களுக்கு குறையிருப்பது இல்லை. ஆனால் இவை பிரித்தானிய வர்த்தக மதிப்பீட்டு முகவரகத்தின் விதிமுறைகளுக்கு அமைவதில்லை. இதுதொடர்பாக வர்த்தக மதிப்பீட்டு முகவரகம் பிபிசி க்கு தெரிவிக்கையில் இப்பிரச்சினை பரவலாகக் காணப்படுவதாகவும் அதன் பாதிப்பின் ஆழம் அளவிடமுடியாததாக உள்ளது என்றும் தெரிவித்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்கள் தங்களுக்கு தீங்கு ஏற்படும் என்ற பயத்தினாலும் சிலர் வெட்கம் காரணமாகவும் முறையிடுவதில்லை என அவர்கள் தெரிவித்து இருந்தனர்.

பணம் 1200 பவுணைக் கேட்டு மிரட்டியவருக்குத் தண்டனை!

வெம்பிளியைச் சேர்ந்த ஜெகதீசன் குணராஜா (20) என்ற இளைஞர் கிங்ஸ்பறியைச் சேர்ந்த பிரேம் என அறியப்பட்ட பிரனானந் கணேஸ்நாதனை பயமுறுத்தி மிரட்டி பணம் பறிக்க முயன்றதற்காக குற்றவாளியாகக் காணப்பட்டு உள்ளார். நீதிபதி கிரகாம் அரன் தலைமையில் 12 ஜூரிகளுடன் வழக்கு நடைபெற்றது.

1200 பவுண்களை வழங்காமல் விட்டால் பிரேமின் வீட்டுக்கு பெற்றோல் குண்டு வீசப்போவதாக ஆறு பேரைக் கொண்ட குழு மிரட்டியாதாக பிரேம் குற்றம்சாட்டி இருந்தார். 2009 செப்ரம்பரில் நடந்த இச்சம்பவம் தொடர்பான வழக்கு ஹரோ கிறவுண் கோர்ட்டில் நடைபெற்று 2010 பெப்ரவரி 15ல் தீர்ப்பு வழங்கப்பட்டது.

திவீகன் குகநாதனுக்குச் சொந்தமான காரை பிரேம் காப்புறுதி இன்றி ஓட்டியதால் வாகனம் பொலிசாரினால் பறிமுதல் செய்யப்பட்டது. அதனால் ஏற்பட்ட நஸ்டத்திற்காக 1200 பவுண்களை தன்னிடம் கேட்டு மிரட்டியதாக நீதிமன்றத்தில் பிரேம் தெரிவித்து இருந்தார். தன்னை தனது விருப்பத்திற்கு மாறாக கிங்ஸ்பறியில் உள்ள தனது வீட்டுக்கு அருகாமையில் வைத்து பலவந்தமாக வானில் ஏற்றி வொன்ஸ்வேத் செயின்ஸ்பறி கார் பார்க்குக்கு கூட்டிச் சென்று தாக்கியதாக பிரேம் நீதிமன்றில் குற்றம்சாட்டி இருந்தார். இந்த கடத்தல் நாடகம் நான்கு மணிநேரம் நீடித்ததாகவும் பிரேம் தெரிவித்து இருந்தார்.

மருத்துவரினால் முகத்தில் உள்ள காயங்கள் உறுதிப்படுத்தப்பட்ட போதும் அவற்றுக்கு தாங்கள் காரணமல்ல என சந்தேகநபர்கள் வாதிட்டனர். மேலும் பணம் கேட்டதை ஒத்துக் கொண்டவர்கள் தாங்கள் கையால் தட்டியதாகத் தெரிவித்திருந்தனர். ஆனால் காயம் ஏற்படுத்தும் வகையில் தாக்கவில்லை என்றும் தெரிவித்தனர். பணத்திற்காகப் பயமுறுத்தவில்லை எனவும் தெரிவித்து இருந்தனர்.

ஜெகதீசன் குணராஜ் உடன் குற்றம்சாட்டப்பட்டு இருந்த பின்வருவோர் மீதான குற்றச்சாட்டுகள்  நிராகரிக்கப்பட்டது
சுதர்சன் சிறீதரன் (22) – மில்ரன் கீன்ஸ்
சுதாகரன் ராசலிங்கம் (21) – வெம்பிளி
வேணுசங்கர் லம்பொதரராஜா (20) – வெம்பிளி
சிவகுமார் தினேஸ்குமார் (19) – ஹரோ
தீவிகன் குகநாதன் (திவான்) – ஆகியோர் மீதான குற்றச்சாட்டுகளை நீதிமன்றம் நிராகரித்தது.

புலத்தில் வேகாத பருப்புகள் இலங்கைத் தேர்தல் களத்தில்

Seveal_K_JHC_in_Jaffnaயாழ் இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்கம் – யுகே யின் தலைவர் க செவ்வேள் யாழில் சுயேட்சைக் குழுவில் போட்டியிடுகின்றார். பெரும்பாலும் ஆளும்கட்சியின் பட்டியலில் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்ட க செவ்வெள் தற்போது சுயேட்சையாக களம் இறங்கி உள்ளார். அல்லது களம் இறக்கப்பட்டு உள்ளார்.

தன்னை லண்டனின் முன்னணி சட்டத்தரணி என விளம்பரப்படுத்தும் க செவ்வேள் லண்டனில் சட்டத்தரணி அல்ல என்றும் சட்ட உதவியாளராகவே பணியாற்றி வருகின்றார்.ஆனால் க செவ்வேளுக்காக யாழில் ஒட்டப்பட்ட பிரசுரங்கள் அவரை லண்டனின் முன்னணி சட்டத்தரணி என வர்ணித்து இருந்தது.

சில ஆண்டுகளுக்கு முன் சினிமாத்துறையிலும் ஈடுபட்ட க செவ்வேள் சில படங்களையும் தயாரித்து இருந்தார். இவர் படத் தயாரிப்பில் ஈடுபட்டு இருந்த வேளையில் இவரது பொறுப்பில் இருந்த அரசியல் தஞ்ச வழக்குகள் சில பாதிக்கப்பட்டு இருந்தது.

யாழ் இந்துக் கல்லூரியின் பழைய மானவரான இவர் பழைய மாணவர் சங்கத்தின் தலைவராக இருந்துகொண்டு தேர்தலில் போட்டியிடுவதற்கு விசனம் தெரிவித்து உள்ளனர். ஆனால் அது அவருடைய அரசியல் தெரிவு என்ற அடிப்படையிலும் பழைய மாணவர் சங்கத்தின் யாப்பு உறுப்பினர்கள் தமது அரசியல் செயற்பாடுகளை முன்னெடுப்பதில்லை என்ற கடப்பாட்டை கொண்டிராததால்  க செவ்வேளிற்கு எதிராக எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. யாழ் இந்துக் கல்லூரி பழைய மாணவர்கள் இன்னும் சிலரும் தேர்தலில் போட்டியிடுகின்றனர்.
க செவ்வேளை விடவும் முன்னாள் ஈரோஸ் உறுப்பினர் அருளர், முன்னால் தமிழ் சட்டத்தரணிகள் அமைப்பின் தலைவர் கிறிஸ் சரவணன் ஆகியோரும் லண்டனில் இருந்து சென்று தேர்தல் களத்தில் குதித்துள்ளார்.

வெம்பிளியில் இளைஞர்களின் குழு மோதல்!! ஐவருக்கு மார்ச் 24ல் தண்டனை!!!

Lancelot_Roadதமிழ் இளைஞர் குழுக்களிடையே வெம்பிளியில் இடம்பெற்ற மோதலில் சம்பந்தப்பட்ட ஐவர் குற்றவாளிகளாகக் காணப்பட்டு உள்ளனர். மார்ச் 1இல் ஓல்ட்பெயிலியில் இவர்கள் குற்றவாளிகளாக தீர்ப்பளிக்கப்பட்டனர். இவர்களுக்கான தண்டனை மார்ச் 24ல் வழங்கப்பட இருக்கின்றது.

2009 ஓகஸ்ட் 7ல் வெம்பிளியில் இடம்பெற்ற இளைஞர் குழுக்களிடையேயான மோதல் தொடர்பாகவே இவர்கள் குற்றவாளிகளாகக் காணப்பட்டனர். இச்சம்பவம் பற்றித் தெரியவருவதாவது, ஹரோ குழுவினர் சவுத் ஹரோ பார்க்கில் ஜக் டானியல் அருந்திக் கொண்டு இருந்துவிட்டு ஈலிங் றோட்டில் உள்ள பாம் பீச் ரெஸ்ரோரன்ருக்கு சென்றுள்ளனர்.

வழியில் லான்ஸ்லொட் வீதியில் இரு குழுக்களும் ஒருவரை ஒருவர் சந்திக்க முறுகல் உருவானது. ஹரோ குழுவினர் ஈலிங் றோட் டிஎம்எக்ஸ் குழுவினரை கொல்லப் போவதாகப் பயமுறுத்தினர். அருகில் இருந்த கார் தரிப்பு நிலையத்திலிருந்து டிஎம்எக்ஸ் குழுவினரது எண்ணிக்கை பெருத்தது. இது அருகில் உள்ள சிசிரிவியில் பதிவாகி உள்ளது. இது நீதிமன்றில் யூரிகளுக்கும் காண்பிக்கப்பட்டது.

இம்மோதலில் வாகீசன் பரமலிங்கத்தின் தாடை உடைக்கப்பட்டதுடன் முகத்திலும் காயங்கள் ஏற்படுத்தப்பட்டது. ஹரோ குழுவைச் சேர்ந்த அருள்முருகன் செபமாலை, வாகீசன் பரமலிங்கத்தை கிரிக்கட் பற்றினால் அவரது முகத்திலும் தலையிலும் பலமுறை தாக்கி உள்ளார். அதனால் வாகீசனின் முகத்திலும் தலையிலும் பலத்த காயங்களும் முகத்தில் எலும்பு முறிவுகளும் ஏற்பட்டது. அவரது தாடையையும் அருள்முருகன் செபமாலை உடைத்திருந்தார். 

அதற்கு முன்னர் வாகீசன் பரமலிங்கம், அருள்முருகன் செபமாலையை கொலை செய்யப் போவதாகக் கூறி அவரது முகத்தை பிக்காஸினால் தாக்கி இருந்தார்.

குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்டவர்கள்:

ஐங்கரன் தர்மலிங்கம் (24) டிஎம்எக்ஸ் குழு) – கிறீன்போர்ட் : ஐங்கரன் ஆயுதம் (இரும்புக் குற்றி) வைத்திருந்ததற்காகவும் வன்முறை நடவடிக்கையில் ஈடுபட்டதற்காகவும் குற்றவாளியாகக் காணப்பட்டார்.

அருள்முருகன் செபமாலை (22) (டிஎம்எக்ஸ் குழு) – கென்ரன் : அருள்முருகன் செபமாலை ஆயுதம் (கிரிக்கட்பற்) வைத்திருந்ததற்காகவும் வன்முறை நடவடிக்கையில் ஈடுபட்டதற்காகவும் திட்டமிட்ட நோக்குடன் உடற்காயத்தை ஏற்படுத்தியதற்காகவும் குற்றவாவாளியாகக் காணப்பட்டார். இவர் மீது சுமத்தப்பட்ட கொலை முயற்சிக் குற்றச்சாட்டில் இருந்து அருள்முருகன் தவிர்க்கப்பட்டார்.
 
பார்த்தீபன் பரமலிங்கம் (30) (ஹரோ குழு) – என்பீல்ட் : பார்தீபன் ஆயுதம் வைத்திருந்ததற்காகவும் (போத்தல்) வன்முறை நடவடிக்கையில் ஈடுபட்டதற்காகவும் குற்றவாளியாகக் காணப்பட்டார்.

வாகீசன் பரமலிங்கம் (27) (ஹரோ குழு) – சறே : வாகீசன் ஆயுதம் (பிக்காஸ்) வைத்திருந்ததற்காகவும் வன்முறை நடவடிக்கையில் ஈடுபட்டதற்காகவும் குற்றவாளியாகக் காணப்பட்டார்.

மதுசூதன் சச்சிதானந்தன் (28) (ஹரோ குழு) – ரெய்னர்ஸ் லேன் : ஆயுதம் (கூரிய ஆயுதம் கத்தி) வைத்திருந்ததற்காக குற்றவாளியாகக் காணப்பட்டார். மதுசூதன் வன்முறை நடவடிக்கையில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டு தள்ளுபடி செய்யப்பட்டது.

இவர்களுடன் கென்ரனைச் சேர்ந்த அஜித்குமார் தர்மராஜா (26) இவரின் தந்தை கந்தையா தர்மராஜா (48) இருவர் மீதும் வன்முறை நடவடிக்கையில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்டு இருந்தது. அஜித்குமார் ஆயுதத்தை வைத்திருந்ததாகவும் குற்றம்சாட்டப்பட்டு இருந்தார். சம்பவத்தின் போது அவ்விடத்தில் நின்ற அஜித்குமாரும் தந்தையும் அங்கு உருவான பதட்டத்தை தணிக்க முயன்றமை நீதிமன்றில் நிரூபிக்கப்பட்டு அவர்களுடைய குற்றச்சாட்டுகள் தள்ளுபடி செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டனர்.

காஸ்ச் பொயின்றில் பணம் எடுக்க முற்பட்டவரிடம் பணம் பறிமுதல்!

லண்டன் றெட் பிறிஜ் பிகைவ் லேனில் உள்ள பார்க்ளேய்ஸ் வங்கி காஸ்ச் பொயின்ரில் பணம் எடுக்க முற்பட்டவரின் பணத்தை இளைஞர் ஒருவர் பறித்துச் சென்றுள்ளார். மார்ச் 11 காலை பதினொரு மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. மேற்படி சம்பவம் வங்கியின் CCTVயில் தெளிவாகப் பதிவாகி இருந்ததுடன் அவ்வாதாரங்கள் பொலிஸாரிடமும் ஒப்படைக்கப்பட்டு உள்ளது.

தமிழர் விடுதலைக் கூட்டணியின் லண்டன் கிளைச் செயலாளர் பொன் சிவசுப்பிரமணியம் அவர்களே இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்டு உள்ளார். தனது வங்கிக் கணக்கில் இருந்து பணத்தை எடுக்க முற்பட்ட போது காஸ்ச் பொயின்ரில் இருந்து வந்த 300 பவுண்களையும் ஏற்கனவே அவர் வங்கியில் இருந்து எடுத்திருந்த 400 பவுண்களையும் அவரது வொல்லற்றையும் பறிகொடுத்துள்ளார் பொன் சிவசுப்பிரமணியம்.

தான் எதிர்பார்த்திராத வகையில் ஓரிரு நிமிடங்களுக்குள் நடந்த இந்தச் சம்பவத்தால் தனது வங்கிக் நடவடிக்கைகளை வங்கி உறைநிலையில் வைத்திருப்பதாகத் தெரிவித்தார் பொன் சிவசுப்பிரமணியம். CCTVயில் சம்பவம் பதிவாகி இருந்த போதும் சம்பந்தப்பட்டவரைக் கைது செய்து தனது பணத்தை மீளப்பெற முடியுமா? என்பது சந்தேகம் எனவும் அவர் தெரிவித்து இருந்தார்.

யதார்த்தமும் இயலாமையும் – கொன்ஸின் பதில் பின்னூட்டம் : ரி கொன்ஸ்டன்ரைன்

Toilet_Cleaning_Brushஅண்மையில் மதங்களைப் பற்றியும் நம்முடைய நீண்ட நாள் நண்பர்கள் மன்னிக்கவும் தோழர்களை ‘கீ போர்ட் மார்க்ஸிட்’ என வர்ணித்ததும் எழுத்துலகில் மாபெரும் புயலைக் கிழப்பிவிட்டதை நான் நன்குணர்ந்தேன். உண்மையில் இந்த ‘கீ போர்ட் மார்க்ஸிட்’ என்ற சொல்லை நான் உபயோகிக்கவில்லை. இது என் சக நண்பர்களின் திட்டமிட்ட சதி அல்லது அதற்கு பின்ணணியில் ரஷ்ய உளவுப்படை இருந்திருக்க வேண்டும். நான் உபயோகித்த சொல் ‘டொட் கொம் மார்க்சிஸ்டுக்கள்’. என்னுடைய இந்தக் கருத்து சில பிற்போக்கு திரிபுவாதிகளால் மாற்றப்பட்டு என் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அது நிற்க.

இந்த டொட் .com எனப்படுகின்ற பதம் எங்கிருந்து வந்தது? இது commercial என்பதன் சுருக்கம் தான் இந்த .com. இனியாவது எமது தோழர்கள் இந்த வரலாற்றுத் தவறை தொடர்ந்தும் இழைக்காமல் தமது web siteகளுக்கு டொட் .marx, டொட் .len, டொட் .sta, டொட் .mao என்று பெயரிடட்டும். யாருக்காவது என்னில் பேரன்பு இருந்தால் டொட் .cons என்று வைக்கலாம்.

இனி நம்முடைய தோழர் பாண்டியன் விடயத்திற்கு வருவோம். ஏதோ சிலர் (நான் உட்பட) பெரிய முதலாளி, நாட்டிலுள்ள ஏழை மக்களை சுரண்டப் புறப்பட்ட புறம்போக்குகள் என்று தொடங்கிவிட்டார். நாமும் தோழர் பாண்டியன் போல் வெறுங்கையுடன் இந்த நாட்டிற்கு வந்தவர்கள்தான். கக்கூஸ் கழுவுவது தொடக்கம், கோழி பொரிப்பது, பாண் சுடுவது வரை வேலை செய்தவர்கள் தான். ஒரு வித்தியாசம் சில வேளைகளில் இருக்கலாம். நாங்கள் என்ன வேலை செய்தாலும் எமக்கு வேலை கொடுப்பவனுக்கு சற்று நன்றியுள்ளவனாக இருந்து, நாம் ஏற்றுக் கொண்ட வேலையை முழுதார செய்வது முன்னேற்றத்திற்கு ஒரு காரணமாக இருக்கலாம். (நீங்கள் எனது நிலையை உயர்வாகக் கருதினால்) அல்லது இன்னொரு காரணம், உங்களது தாழ்வு மனப்பான்மையாகக்கூட இருக்கலாம்.

அல்லது நானும் இந்த நாசமாய்ப் போன முதலாளி எனக்கு இரண்டு பவுண்தானே சம்பளம் தாறான் என்று எனக்குள் எண்ணிக்கொண்டு, மொபைல் போனில் கார்ல் மார்க்ஸ் இறக்கும்போது யாரையாவது வைத்திருந்தாரா? வைத்திருந்தால் அதனை தனது மனைவிக்கு தெரிந்து வைத்திருந்தாரா? அல்லது தெரியாமல் வைத்திருந்தாரா? அவர்களுக்கு பிள்ளை இருக்கிறதா? என விவாதித்துக் கொண்டிருந்தால் கோழியும் கருகிப் போயிருக்கும், முதலாளி வேலையிலிருந்தும் கலைத்திருப்பான். ஏதோ காரணத்திற்காக நான் இந்த வேலையை ஏற்றுக் கொண்டேன். இதுதான் எனது சம்பளம் என்ற யதார்த்த உண்மையை மனதார ஏற்றுக் கொண்டு, ஒழுங்காகக் கக்கூஸ் கழுவியததால்தான் பின் அந்த நிலையத்திற்கு மனேஜராகி பின் அதற்கும் மேலாகப் போக வாய்ப்புக் கிடைத்தது. (சில படிப்பும் கொஞ்சம் உதவும்தான்).

அன்றைக்கு உந்த வேலையெல்லாம் செய்ய மாட்டேன் மார்க்ஸிய கொள்கைப்படி தான் வேலைசெய்வேன் என்று அடம்பிடித்து இருந்தால் நானும் என்னவோ ஆகியிருப்பேன். நைஜீரியாவில் எண்ணை எடுக்கின்ற கொம்பனிகள் எல்லாம் தொழிலாளரை வாட்டுகின்றது, அந்த ஊர் மக்களை வதைக்கின்றனர் என்பதே உண்மை. அதற்காக பிரித்தானியாவில் பெற்றோல் ஸ்ரேசனில் வேலை செய்யமாட்டேன் என்று அடம்பிடிக்க முடியுமா?

மேற்கு நாடுகள் அனைத்துமே முதலாளித்துவ சுரண்டலை மேற்கொள்கின்ற நாடுகளே. எனக்கு முதலாளியாக வேண்டும் என்று சின்னச் சின்ன ஆசைகள் இருந்தது, இங்கு வந்தேன். ஆனால் இலங்கையில் ஒடுக்குமுறைக்கு உள்ளான தமிழ் மக்கள் எதற்காக முதலாளித்துவ நாடுகளை நோக்கி படையெடுக்கின்றனர். மக்கள் சரி படையெடுக்கட்டும். நம்மடை கீபோர் மார்க்ஸிஸ்டுக்கள் மன்னிக்கவும் டொட் கொம் மார்க்ஸிஸ்ட்டுக்கள் ஏன் முதலாளித்துவ நாடுகளை நோக்கிப் படையெடுக்கின்றனர்.

நான் செய்யும் தொழில் hotel, உல்லாசப் பயணம் தொடர்பான தொழில். கடந்த 10 வருடங்களாக எனக்கு இந்தத் தொழில் மூலமாகத்தான் சில அமைச்சர்களின் நேரடித் தொடர்பு கிடைத்தது. சிறீலங்காவில் எனக்கு ஒரு சதம்கூட மூலதனமும் இல்லை, ஒரு சதம் நயமும் இல்லை. நான் எனது அரசியல் நம்பிக்கைகளையும், பொது வேலையையும், தொழிலையும் ஒன்றாகக் கலப்பதில்லை. நீங்கள் உங்களது அனுபவத்தையும் புத்தியையும் மட்டுமே அடிப்படையாக வைத்துக்கொண்டு சேறடிப்பது உங்களுடைய இயலாமையைத்தான் காட்டுகின்றது.

இந்த கம்மியூனிச பலஸ்தீன அடக்குமுறை கதையெல்லாம் அங்கு போய்ப் பார்த்தால் நீங்கள் பேசமாட்டீர்கள். அறியான்மையில் பெரிதுபடுத்திக் கதைப்பதில் பிரயோசனம் இல்லை. சீனாவின் கிராமப் புறங்கள் எல்லாம் சென்று வந்திருக்கிறேன். சீன கம்மியூனிசத்தைப் பற்றி நான் யாரிடமும் கதை கேட்க வேண்டிய அவசியமில்லை. அதேபோல் பாலஸ்தீன மக்களின் எதிரி இஸ்ரேலியர்கள் மட்டுமல்ல அல்ல, ஏனைய முஸ்லிம் அரபு நாடுகளும்தான்.

கூட்டிக் கழித்துப் பார்க்கும்போது சோசலித்திற்கும் முதலாளித்துவத்திற்கும் வின்சன்ட் சர்ச்சில் கூறிய கருத்து நூற்றுக்கு நூறு வீதம் சரி. ‘‘முதலாளித்துவத்தில் தீமை என்னவென்றால் செல்வங்களை சரியாக பங்கிட்டு கொள்ளாதது. சோசலிசத்தின் நன்மை என்னவென்றால் கஷ்ட துன்பங்களை சரியாக பங்கிடுவது.’’

எங்களுடைய மனத்திருப்திக்கு பிடித்தவற்றை, தத்துவங்களை வாரி வழங்கலாம். ஆனால் யதார்த்தம் என்று ஒன்றிருக்கின்றது. அதை புரியாத போதும், ஏற்றுக்கொள்ள முடியாதபோதும் தான் காழ்ப்புணர்வு மேலோங்குகிறது.

பின்னோட்டம் விட்ட பல பேரும் நண்பர் பாண்டியனும் நான் சிறீலங்காவில் கலந்துகொண்ட மகாநாடுகளைப் பற்றி பல கொன்ஸ்பிரசி தியரிகளை கூறுகிறார்கள். சென்ற வருடம் மார்ச் 9ல் நடந்த மகாநாட்டிற்கு திருமதி ராஜேஸ்பாலா லண்டனில் இருந்து ஆட்களை சேர்த்தார். அதன்படி என்னையும் வருமாறு கேட்டதால் இணைந்து கொண்டேன்.

இந்த வருடம் ஜனவரி மாதத்தில் இடம்பெற்ற மகாநாட்டிற்கு கலந்து கொள்ள விருப்பமானவர்கள் என்னை அல்லது டாக்டர் நடேசனை தொடர்புகொள்ளும்படி எமது முழு தொடர்பிலக்கங்களுடன் கட்டுரை வெளியிடப்பட்டது. இக்கட்டுரைகள் இன்றும் ‘தேனீ’, ‘Sri Lanka Guardian’, ‘Daily Mirror’ இணைய ஊடகங்களில் இருக்கின்றது. ஒருவர்கூட என்னை தொடர்பு கொள்ளவில்லை. அதுபற்றி விசாரிக்கக்கூட இல்லை. உண்மை நிலைமை இப்படி இருக்கும்போது ‘இவர்கள் யார்?’, ‘இவர்கள் எப்படித் தெரிவு செய்யப்படுகிறார்கள்?’, ‘இவர்கள் யாரைப் பிரதிநிதித்துவப் படுத்துகிறார்கள்?’, ‘இவர்கள் பணம் கொடுத்து முக்கியத்துவம் பெறுகிறார்கள்’ என்று கூறுவது உங்கள் அற்பத்தனத்தையும் இயலான்மையையும் கூட படம் இட்டுக் காட்டுகிறது. மீண்டும் அடித்துச் சொல்கிறேன் இங்கு சுத்துமாத்து ஒன்றும் இல்லை. உங்களுடைய இயலான்மையையும் சோம்பேறித் தனத்தையும் தவிர வேறென்ன.

Religious_Conflictஅடுத்து நான் இந்து மதத்தைப் பற்றி எழுதிய குறிப்பு பலரை ஆத்திரப்படுத்தி இருப்பதை நன்குணர்வேன். சில வேளைகளில் சில உண்மைகள் கசப்பாக இருந்தாலும் அதை சொல்லித்தான் ஆக வேண்டும். மதங்கள் அனைத்தும் மக்களின் மூட நம்பிக்கைகளையும், பயத்தையும், பலவீனங்களையும் மூலதனமாகக் கொண்டு கட்டப்பட்ட விடயம்தான். இதில் சந்தேகம் இல்லை. இந்து மதம் குறிப்பிட்ட பிரதேசத்தின் கலை, கலாச்சாரம், பழக்க வழக்கங்களை மெருகூட்டி வளர்த்தது எல்லாம் உண்மைதான். அதேநேரம் இந்து மதத்தில் புரையோடிக் கிடந்த பல விடயங்கள்தான் ஏனைய மதங்கள் வளர உரமிட்டன என்ற வாதத்தையும் மறுக்க முடியாது. நிர்வாகத்திலும் புதிய அம்சங்களை உள்வாங்குவதிலும் கிறிஸ்தவமதம் ஒருபடி முன்நிற்கின்றது என்பது மறுக்க முடியாத உண்மை.

கத்தோலிக்க மதமாக இருந்தால் என்ன அல்லது சக கிறிஸ்தவ அமைப்புக்களாக இருந்தால் என்ன (மெத்தடிஸ்ட், Church of England, Evangelical, Sevenday Appostits, Jevokah witness), அவ் அமைப்புக்களிடம் ஒரு பலமான கட்டுமானத் திட்டம் இருக்கின்றது. அடிப்படை வரையறைகள் இருக்கின்றன. யார் என்ன செய்யலாம் என்ற அடிப்படை உடன்பாடு இருக்கின்றது. அதுதான் இந்த மதங்களின் வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக அமைகின்றது.

சிக்காக்கோ தொடக்கம் சாவகச்சேரி வரை உள்ள கத்தோலிக்க ஆலயங்கள், பள்ளிக்கூடங்கள் பதியப்பட்டு அதில் எத்தனை பேர் படிக்கிறார்கள், எத்தனை பேர் பூஜைப்பலியில் பங்கு கொள்கிறார்கள் என பதியப்பட்டு கண்காணிக்கப்படுகிறது. அது மட்டுமல்லாமல் ஒரு தனிப்பட்டவர் எந்தவொரு கிறிஸ்தவ ஆலயத்தையும் தொடக்கவும் முடியாது. அவ்வாறு தொடர்ந்தால் அது நிலைக்கவும் முடியாது. அவ் அமைப்பின் கட்டுமானம் அப்படி. அது மட்டுமல்லாமல் ஆலயத்தின் பெயரால் சேர்க்கப்படுகின்ற பணம் முழுவதும் மீண்டும் அமைப்புக்குள் உள்வாங்கி பின்னர் அதன் பெரும்பகுதி சமூகத்திற்கு அல்லது குறிப்பிட்ட மதத்தைப் பரப்புவதற்கு உபயோகிக்கப்படுகிறது. இந்த விடயங்கள் உணரப்படாமல் அவன் கள்வன், இவன் கள்வன், போப் ஒரு நாஜி, வண பிதா ஜேம்ஸ் பக்திநாதர் ஒரு புலி என கதை அளப்பது இயலாமையின் வெளிப்பாடும், காழ்ப்புணர்ச்சியின் உச்சக் கட்டமும் தவிர வேறொன்றும் இல்லை.

சரி இப்படியெல்லாம் feel பண்ணுபவர்கள் இந்துமத வளர்ச்சிக்கு என்ன வேலையை ஆணித்தரமாக செய்துள்ளனர் அல்லது செய்து கொண்டிருக்கின்றனர்? ‘கல்தோன்றி மண்தோன்றாக் காலத்திற்கு முன் நாங்கள் எல்லோரும் பட்டம் விட்டோம்’ என்ற கதையெல்லாம் ‘ஆண்ட பரம்பரை மீண்டும் ஒருமுறை ஆள நினைப்பதில்…..’ என்ற கூட்டணி சென்ரிமென்டைவிட வேடிக்கையானது. குறைவான வாடகைக்கு பலகாலம் மூடிக்கிடந்த தவறனையை (Pub), பலசரக்குக் கடையை வாங்கி அதை ஏதோவொரு ஆலயம் என்று பெயரிட்டு வருடாவருடம் இந்தியாவிலிருந்து சுகிசிவத்தை வரவழைத்து அவருடைய அலம்பலை குந்தியிருந்து கேட்டுவிட்டுப் போவதால் மட்டும் மதம் வளர்ந்து விடாது.

கிறிஸ்தவம் உட்பட மதங்கள் அனைத்தும் ஒரு பேய்க்காட்டு மாய வித்தைதான். அது அழியவும் மாட்டாது. அழிக்கப்படவும் முடியாது. ஆனால் இந்த மத நிறுவனங்கள் எவ்வாறு சமூகத்திற்கு அதிக பலனைக் கொடுக்கும் என்பதிலேயே கவனம் செலுத்தப்படல் வேண்டுமே தவிர, வேறொன்றும் பயனைத் தராது.

சிலருக்கு தண்ணி அடிப்பதில் ஒரு சந்தோசம், ஒரு மனநிறைவு! சிலருக்கு மார்க்சிசம் கதைப்பதில் ஒரு மனமகிழ்ச்சி! இன்னும் சிலருக்கு தண்ணி அடித்து மார்க்சிசம் கதைப்பதில் பரமதிருப்தி! ஆனால் பலருக்கோ கோயில் சென்று தரிசிப்பதில் உள மகிழ்ச்சி, நிறைவு. இருந்துவிட்டு போகட்டும் பிரச்சினையில்லை. மனிதம் என்றாலே பலவீனம்தானே. இதில் நாம் மட்டும் விதிவிலக்கா என்ன?

300 வருடங்களுக்கு முன் பாதிரி வந்து எங்களை சுத்திப் போட்டார்கள் என்ற வாதத்தில் உண்மை இருக்கலாம். அதே கதையை இப்போதும் அளப்பது கிறிஸ்தவ மதங்களின் கெட்டித்தனத்தை காட்டுவதைவிட மற்றைய மதங்களின் பலவீனத்தைத்தான் காட்டுகிறது. இந்து மதத்தினர் எல்லாம் சரியான ‘இனசன்ட்’ என்று ஜோக் அடித்துவிட வேண்டாம்.

300 வருடத்திற்கு முன் போவானேன். இன்று லண்டனிலுள்ள இந்து ஆலயங்கள் என்ன செய்கின்றது. ‘உயர்வாசக் குன்று’ என்று அழகாக அழைக்கப்படும் ஆச்சுவே முருகன் ஆலயம் ஆலயத்திற்கு முன்னால் உள்ள கடைகளை வாங்கி வாடகைக்கு விட்டுள்ளது. நாகபூசனி அம்மன் ஆலயம் புலிகளின் வருமானத்திற்காகக் கட்டப்பட்டது. . ரூட்டிங் சீவரத்தினம் ஐயாவின் முத்துமாரி அம்மன் ஆலயம் புலிகளை வளர்ப்பதாக என்று கூறிக்கொண்டாலும் சீவரத்தினம் ஐயா தன்னையும் சேர்த்து வளர்த்துக் கொண்டார். இல்பேர்ட் தூள் விநாயகர் சொல்லவே வெண்டாம். இலண்டனில் உள்ள ஆலயங்களின் வருமானத்தில் ஈலிங் கனகதுர்க்கை அம்மன் ஆலயம் தாயக மக்களுக்காக பல்வேறு பணிகளை முன்னெடுக்கின்றது. ஏனையவை தங்கள் வருமானத்தில் எத்தனை சதவீத வீதத்தை திரும்பவும் அந்த மக்களின் நலனுக்காக செலவிடுகின்றன.

கிறீஸ்தவ மதம் ஒன்றும் புனிதமான மதம் கிடையாது. அவர்களும் ஆயுதக் கொம்பனிகளில் முதலீட்டை வைத்துள்ளனர். இங்கு நான் எந்த மதத்திற்கும் நற்சான்றிதழ் வழங்க கட்டுரை எழுதவில்லை. கிறிஸ்தவ மதம் கள்வர் காடையரின் மதம் என்பதுபோல் பின்னூட்டம் விட்ட நண்பர்களின் கருத்தை கவனத்தில் எடுத்தால் என் மனைவி பத்தினிதான் ஆனால் சூனியக்காரன்தான் வசியம் செய்துபோட்டான் என்ற மடமையான கருத்துக்கு ஒப்பானது. அதனையே இங்கு சுட்டிக்காட்டினேன்.