புலம்பெயர் வாழ்வியல்

புலம்பெயர் வாழ்வியல்

தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழும் நாடுகளில் அவர்களுடைய வாழ்வியல், சமூக, அரசியல் தொடர்பான செய்திகள், கட்டுரைகள், ஆய்வுகள்.

9 பால்குடம் அறிமுகப்படுத்தினால் 10வது பால்குடம் இலவசம் ! தாயக மக்களின் பெயரில் வசூல் !! எட்மன்டன் நாகபூசணி அம்பாளுக்கே அனைத்தும் வெளிச்சம் !!! : த ஜெயபாலன்

Chief Priest Kamalanatha Kurukkalதாயக மக்களின் பெயரில் அரசியலும் வியாபாரமும் புலம்பெயர்ந்த நாடுகளில் வெகு அமோகமாக நடைபெறுகின்றது. குறிப்பாக தாயக மக்களுக்கு உதவுகின்றோம் என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்ட ஆலயங்களும் பொது ஸ்தாபனங்களும் தங்கள் கணக்கியல் கோவைகளில் வெளிப்படைத் தன்மையைக் கடைப்பிடிப்பதில்லை.

என்பீலட் நாகபூசணி அம்மன் ஆலயம் தமிழீழ விடுதலைக்கு ஆதரவாக ஆரம்பிக்கப்படுகின்றது என்ற பெயரிலேயே ஒன்பது பேர் இணைந்து இந்த ஆலயத்தை உருவாக்கினர். வெம்பிளி ஈழபதீஸ்வரர் ஆலயமும் அதே நோக்கத்திலேயே ஆரம்பிக்கப்பட்ட போதும் அது தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் ஆர் ஜெயதேவனுக்கும் இடையே ஏற்பட்ட முரண்பாட்டில் தமிழீழ விடுதலைப் புலிகளின் கை நழுவிச் சென்றது.

என்பீல்ட் நாகபூசணி அம்மன் ஆலயம் 2002 யூலையில் ஆரம்பிக்கப்பட்டு அதற்கான தற்போது ஆலயம் அமைந்தள்ள கட்டிடம் 2003ல் 370 000 பவுண்களுக்கு வாங்கப்பட்டது. நவரட்ணம் சண்முகநாதன், அந்தோணிப்பிள்ளை காந்தரூபன், கதிரவேற்பிள்ளை சிவசின்மியநாதன், பொன்னையா கைலாயபதிவாகன் ஆகியவர்களின் பெயரில் தற்போதைய ஆலயக் கட்டிடம் அமைந்துள்ளது.

Nagapoosani Amman Trustee Vahanவடக்கு கிழக்கு இலங்கையில் உள்ள தமிழ் மக்களுக்கு உதவுவதை தங்கள் நீண்டகாலத் திட்டமாக அறிவித்து இருந்த ஆலய நிர்வாகம் இந்த ஆலயத்தை பிரித்தானிய பொது அமைப்புகளின் ஆணைக்குழுவின் Charity Commission கீழ் பதிவு செய்யவில்லை. இவ்வாறு பதிவு செய்வதன் மூலம் கட்டிடங்கள் வாங்கும் போது நன்கொடைகள் பெறப்படும் போதும் வரி விலக்குச் சலுகைகள் இருந்தும் இவர்கள் தங்களைப் பதிவு செய்வதைத் தவிர்த்துள்ளனர். பொது அமைப்புகளின் ஆணைக்குழுவின் கீழ் பதிவு செய்வது என்பது ஒரு பொது அமைப்பினது நல்லநடைமுறை. கணக்கு விபரங்கள் பொதுநல அமைப்புகளின் ஆணைக்குழுவால் கண்காணிக்கப்படும். ஆனால் என்பீல்ட் நாகபூசனி அம்மன் ஆலயம் அதனை பல ஆண்டுகளாகச் செய்யவில்லை.

Nagapoosani Amman Kodi Archchanaiஆயினும் தாயக மக்களுக்கு உதவுவது என்ற பெயரில் பல்வேறு ஆலயப் பூஜை முறைகளை அறிமுகப்படுத்தி நிதி வசூலில் தீவிர ஆர்வம் காட்டி வந்தது. வன்னி யுத்தம் மிகத் தீவிரமாக நடைபெற்றுக்கொண்டிருந்த காலத்தில் 2009 ஜனவரி முதல் மார்ச் வரை தாயக மக்களுக்கு உதவுவது என்ற பெயரில் கோடி அர்ச்சனை என்ற பூஜையை அறிமுகப்படுத்தி ஒரு நாளுக்கு ஆயிரம் பவுண்கள் என்ற அடிப்படையில் 100 நாட்களுக்கு 100,000 பவுண்கள் திரட்டி இருந்தனர்.

தற்போது மாசி மகத்தை முன்னிட்டு 1008 குடம்பால் அபிசேகம் மேற்கொள்ள உள்ளதாகவும் அந்த நிதி தாயகத்தில் முதியோர் இல்லம் அமைக்க வழங்க உள்ளதாகவும் தெரிவிக்கின்றனர். ஒரு பால் குடம் 10 பவுண்கள் என்ற அடிப்படையில் ஒவ்வொருவரும் ஒன்பது பேர்ரை அழைத்துவந்து பால்குடம் எடுத்தால் 10வது குடம் இலவசமாக வழங்கப்படுவதாக அவ்வாலயத்திற்குச் சென்றுவரும் பக்தர் ஒருவர் லண்டன் குரலுக்குத் தெரிவித்தார்.

என்பீல்ட் நாகபூசணி அம்மன் ஆலயத்திற்கு ஒரு இணையத்தளம் இருந்த போதும் அவ்விணையத் தளத்தில் ஆலய நிர்வாகம் பற்றியோ அல்லது ஆலயம் மேற்கொள்ளும் உதவித்திட்டங்கள் பற்றியோ எவ்வித தகவலும் அதில் காணப்படவில்லை.

Nagapoosani Amman Trustee Rubarah with LTTE Leader Thamilchelvanலண்டனில் உள்ள ஆலயங்களில் பொருளாதாரரீதியாகக் கூடுதல் லாபமீட்டும் வகையில் கட்டமைக்கப்பட்டுள்ள என்பீல்ட் நாகபூசணி அம்மன் ஆலயம் அதன் கணக்கு விபரங்களையோ அதன் உதவி நடவடிக்கைகளையோ இணையத்தில் வெளியிடத் தயக்கம் காட்டி வருகின்றது.

இது பற்றி ஆலயத்தின் தனாதிகாரி பசுபதி அவர்களிடம் கேட்டபோது ஆலயத்திற்கு நேரில் வந்து அவற்றைப் பார்வையிட முடியும் என்றும் தொலைபேசியில் அவற்றை தெரிவிப்;பது சிரமம் என்றும் தெரிவித்தார். ஆலயத்திற்கு வரும் அனைத்து வருமானங்களிலும் செலவு போக மிகுதியை தாயகத்திற்கு அனுப்பி வருவதாகவும் அவர் லண்டன் குரலுக்குத் தெரிவித்தார். எதற்காக இதுவரை பொதுநல அமைப்புகளின் ஆணைக்குழுவின் கீழ் பதிவு செய்யவில்லை எனக் கேட்டதற்கு சரியான பதில் கிடைக்கவில்லை. இலங்கையில் பதிவு செய்யப்பட்ட அமைப்புகளுக்கே தாங்கள் உதவிகளை வழங்கி வருவதாகத் தெரிவித்தார்.

Nagapoosani Amman Trustee Rubarajமுதியோர் இல்லங்கள், சிறுவர் இல்லங்கள் எனஉதவி கேட்பவர்களுக்கு உதவி வருவதாகத் தெரிவித்த அவர் நேரில் வரும்பட்சத்தில் அவற்றைப் பார்வையிடலாம் எனவும் தெரிவித்தார். பல்கலைக் கழகங்களில் கற்கும் 15 வன்னி மாணவர்களுக்கு மாதாந்தம் 5000 ரூபாய்களை வழங்கி வருவதாகவும் சென் ஜோன்ஸ் கல்லூரியில் தங்க வைக்கப்பட்டுள்ள வன்னி மாணவர்களுக்கு உதவி வருவதாகவும் அவர் தெரிவித்துக் கொண்டார்.

லண்டன் குரலின் அடுத்த இதழில் என்பீல்ட் நாகபூசணி அம்மன் ஆலய நிர்வாகத்துடனான சந்திப்பின் விபரங்களை வெளியிடுவோம்.

என்பீலட் நாகபூசணி அம்மன் ஆலயத்தின் பூஜைமுறைக்கு ஒத்த பூஜைமுறைகள் கனடாவில் அமைந்துள்ள ஸ்ரீ கனகதுர்க்கை அம்மன் ஆலயத்திலேயே இடம்பெற்றது. இவ்வாலயம் ஸ்பாபறோவில் விக்ரொரியா பார்க் லோறன்ஸ் சந்திப்பில் அமைந்தள்ளது. இங்கு லட்ச தீப அர்ச்சனை என்ற முறையை அறிமுகப்படுத்திய குருக்கள் ஒரு சுட்டி தீபத்தை 2 கனடிய டொலருக்கு விற்பனை செய்தார். ஒருவர் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட எத்தினை தீபச்சுட்டிகளையும் வாங்கி ஏற்றலாம். ஆனால் லட்ச தீபங்கள் குறிப்பிட்ட காலத்திற்குள் ஏற்றப்பட வேண்டும். இது வெற்றியளிக்கவே குருக்கள் கோடி தீப அர்ச்சனையை அறிமுகப்படுத்தினார். இவற்றின் தொடர்ச்சியே என்பீல்ட் கோடி அர்ச்சனையும் பால்குடமும்.

தாயகத்திற்கு என்ற பெயரில் பெரும் எடுப்புகளில் நிதி வசூலிப்புகள் நடைபெறுகின்றது. ஆனால் இவ்வாறு பெரும் எடுப்புகளில் சேகரிக்கப்படும் நிதிக்கு என்ன நடந்தது என்பதனை நிதி சேகரிப்பில் முன்னிள்றவர்கள் வெளியிடுவதில்லை. இதற்கு சிறந்த எடுத்துக் காட்டு வணங்கா மண். பலநூறாயிரம் செலவில் அனுப்பப்பட்ட பொருட்கள் பெரும்பாலும் பாவணைக்கு உதவாதி நிலையை அடைந்தன. சுண்டக்காய் கால்ப் பணம் சுமைகூலி முக்கால் பணம் என்றளவில் புலம்பெயர்ந்த மக்கள் வழங்கிய நிதி விரயமானது.

Nagapoosani Amman Trustee Vahan with LTTE Leader Thamilchelvanதற்போது நிதி சேகரிப்பில் ஈடுபடும் ஒரு சில அமைப்புகள் மட்டுமே தமது கணக்குக் கோர்வைகளில் வெளிப்படைத் தன்மையைப் பேணுகின்றன. குறிப்பாக புலம்பெயர்ந்த நாடுகளில் லண்டன் ஈலிங் கனகதுர்க்கை அம்மன் ஆலயம் நீண்டகாலமாகவே பெருமளவு உதவித் திட்டங்களை முன்னெடுத்துவருகின்றது. அத்துடன் அதன் கணக்கு விபரங்களையும் இணையத்தில் வெளிப்படையாகவே வெளியிட்டும் வருகின்றது. அதனால் அடியார்களது நன்மதிப்பையும் பெற்றுள்ளது.

புலம்பெயந்த நாடுகளில் உள்ள ஒவ்வொரு ஆலயமும் முடிந்தவரை தாயக மக்களுக்கு உதவமுன்வர வேண்டும் அதே சம்யம் தங்கள் கணக்குக் கோவைகளை வெளிப்படையாகப் பேணவும் முன்வர வேண்டும். அது மட்டுமே அவர்களுடைய நம்பகத் தன்மையை உறுதிப்படுத்துவதற்கு உள்ள ஒரே வழி.

”புலிகளின் தமிழீழக் கொள்கையில் இருந்து தங்களை விடுவிக்கும் வரை புலம்பெயர்ந்த தமிழர்களால் இலங்கையில் சமாதானம் ஏற்படுவதற்கு உதவ முடியாது!” : INTERNATIONAL CRISIS GROUP – ICG

international_crisis_group‘தமிழீழ விடுதலைப் புலிகளின் தமிழீழக் கொள்கையில் இருந்து தங்களை விடுவிக்கும் வரை புலம்பெயர்ந்த தமிழர்களால் இலங்கையில் சமாதானம் ஏற்படுவதற்கு உதவ முடியாது’ என இன்ரநசனல் கிறைசிஸ் குறூப் பெப்ரவரி 23ல் வெளியிட்டு உள்ள அறிக்கையில் தெரிவித்து உள்ளது. ‘THE SRI LANKAN TAMIL DIASPORA AFTER THE LTTE’ என்ற தலைப்பில் வெளியாகி உள்ள 25 பக்க அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டு உள்ளது. THE SRI LANKAN TAMIL DIASPORA AFTER THE LTTE – EXECUTIVE SUMMARY : INTERNATIONAL CRISIS GROUPஇன்ரநசனல் கிறைசிஸ் குறூப் முரண்பாடுகளைத் தடுப்பதற்கும் தீர்ப்பதற்குமான ஒரு சுயாதீன அமைப்பு. ஐந்து கண்டங்களிலும் நேரடியாக களநிலைமைகளை ஆராய்ந்து அறிக்கைகளை வெளியிட்டு ஆலோசனைகளையும் இவ்வமைப்பு வழங்கி வருகின்றது.

இலங்கையில் இருந்து புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்கள் பெரும்பாலும் பிரிவினையை விரும்புவதாகவும் இதுவே அவர்களுக்கும் இலங்கையில் வாழும் தமிழ் மக்களுக்கும் இடையே பெரிய இடைவெளியை ஏற்படுத்தி உள்ளதாகவும் அவ்வறிக்கை சுட்டிக்காட்டி உள்ளது. இலங்கையில் வாழும் தமிழர்கள் தனியாகப் பிரிந்து செல்வதற்கான போராட்டத்தில் ஆர்வம்கட்டுவதிலும் பார்க்க தங்கள் வாழ்வை மீளக்கட்டமைப்பதிலேயே கூடுதலாகக் கவனம் செலுத்துவதாகவும் அவ்வறிக்கை தெரிவிக்கின்றது.

வெளிநாடுகளில் வாழ்கின்ற ஒரு மில்லியன் வரையான தமிழர்களால் தாங்கள் தனித்து ஒரு ஆயுதப் போராட்டத்தை முன்னெடுக்க முடியாது என்பதைச் சுட்டிக்காட்டியுள்ள அறிக்கை  புலம்பெயர்ந்த தமிழர்களிடம் உள்ள நிதியும் அமைப்புகளும் இலங்கையில் மீள் எழக்கூடிய வன்முறையின் அளவினை அதிகரிக்கச் செய்யும் என எச்சரித்து உள்ளது.

உள்நாட்டிலும் சரி வெளிநாடுகளிலும் சரி தமிழ் ஈழத்திற்கான ஆதரவு இல்லையென்பதைச் சுட்டிக்காட்டியுள்ள இவ்வறிக்கை புலம்பெயர்ந்த தமிழர்களின் தமிழீழ பிரிவினைக் கோரிக்கை மகிந்த ராஜபக்ச அரசினை அச்சமடையச் செய்வதன் மூலம் அரசு கடுமையான பயங்கரவாதத் தடுப்பு விதிமுறைகளை தொடர்ந்தும் பயன்படுத்துவதற்கு உதவுவதாக தெரிவித்து உள்ளது.

இலங்கைக்கு வெளியே உள்ள தமிழர்களின் நிதி இலங்கையின் எதிர்காலத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் எனத் தெரிவித்துள்ள இவ்வறிக்கை இத்தாக்கம் எவ்வாறானததாக அமையும் என்பது வரும் மாதங்களில் தமிழ் மக்களை கொழும்பு அரசு எவ்வாறு அணுகப் போகின்றது என்பதிலேயே தங்கி உள்ளதாகத் தெரிவித்து உள்ளது. மேலும் சர்வதேச சமூகம் இலங்கை அரசுக்கு அழுத்தங்களைக் கொடுத்து அரசியல் அமைப்பை மாற்றியமைப்பதன் மூலம் தமிழர்களுடையதும் ஏனைய சிறுபான்மைச் சமூகங்களுடையதும் உரிமைகளைப் பாதுகாக்கும் வகையில் அதிகாரப் பகிர்வை மேற்கொள்ள வைப்பதிலும் தங்கி உள்ளது என அறிக்கை சுட்டிக்காட்டி உள்ளது.

இலங்கையில் நிரந்தரமான சமாதானம் ஏற்படுத்தப்பட வேண்டுமானால் இலங்கை அரசு முரண்பாட்டின் காரணத்தை இனம்கண்டு நியாயமான குற்றச்சாட்டுகளுக்கு தீர்வு காண வேண்டும் என்பதை இன்ரநசனல் கிறைசிஸ் குறூப் வலியுறுத்தி உள்ளது. தமிழர்கள் அரசியல் ரீதியாக ஓரம்கட்டப்படுவதையும் அவர்கள் பாதுகாப்பின்மையாக உணர்வதும் தடுக்கப்பட வேண்டும் என்பதையும் அவ்வறிக்கை வலியுறுத்தி உள்ளது.

இதற்கு இந்தியா, ஜப்பான், மேற்கு நாடுகள் மற்றும் பல்கலாச்சார அமைப்புகள் தமிழ் மக்களைப் பலப்படுத்த வேண்டும் எனவும் நிரந்தர சமாதானத்தை ஏற்படுத்த அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்பதையும் அவ்வறிக்கை சுட்டிக்காட்டி உள்ளது. இறுதி யுத்தத்தில் இடம்பெற்ற மனித உரிமைமீறல்கள் தொடர்பில் ஐநா விசாரணைகளை மேற்கொள்ளக் கோர வேண்டும் என்றும் அவ்வறிக்கை ஆலோசனை வழங்கியுள்ளது. மேலும் வழங்கப்படும் உதவிகள் உரிமை மீறல்களுடன் பிணைக்கப்பட வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளது.

கனடா உதயன் பத்திரிகை தாக்கப்பட்டது! முன்பு வட்டுக்கோட்டைத் தீர்மானக் குழு பத்திரிகையை அகற்றி இருந்தது! : த ஜெயபாலன்

Uthayan_Canada15 வருடங்களாக கனடாவில் வெளிவருகின்ற கனடிய உதயன் பத்திரிகை பெப்ரவரி 20 இரவு தாக்கப்பட்டு உள்ளது. 10,000 பிரதிகள் வெளியாகின்ற வாரப்பத்திரிகை கனடாவில் இடம்பெறுகின்ற அரசியல் கயிறு இழுப்பில் சிக்குண்டு தாக்குதலுக்கு உள்ளானதாகத் தெரியவருகின்றது. கனடிய உதயன் பத்திரிகையின் ஆசிரியர் லோகன் லோகேந்திரலிங்கம் இது பற்றி தேசம்நெற்க்கு தெரிவிக்கையில் ‘உன்னுடைய நண்பர்கள் இலங்கை சென்று மகிந்தவைச் சந்தித்துவிட்டு வந்திருக்கிறார்கள். நீ உன்னுடைய ஒபிஸ்க்கு போய்ப் பார். உனக்கு ஒரு செய்தி கிடைக்கும்.’ என்று தொலைபேசியில் தெரிவித்ததாகக் கூறினார். மேற்படி தாக்குதலால் 12000 டொலர்கள் நட்டம் ஏற்பட்டு உள்ளதாகவும் இது தொடர்பான விசாரணைகளை ரொறன்ரோ பொலிஸார் மேற்கொண்டு உள்ளதாகவும் உதயன் ஆசிரியர் தெரிவித்தார்.

கனடிய உதயன் பத்திரிகை தாக்கப்பட்டதற்கு தேசம்நெற் தனது வன்மையான கண்டனத்தைத் தெரிவித்து உள்ளது. ஊடகங்களின் சுயாதீனமான செயற்பாடுகளைத் தடுக்கின்ற இவ்வன்முறைச் சம்பவங்கள் மிக மோசமானவை என்றும் இவற்றுக்கு எதிராக அனைத்து உரிமை அமைப்புகளும் குரல் கொடுக்க வேண்டும் என்றும் தேசம்நெற் கேட்டுக்கொண்டுள்ளது. மக்களுக்கு தகவல் அறியும் சுதந்திரத்தை தடுக்க முனைகின்ற இவ்வாறான நடவடிக்கைகள் ஆரோக்கியமானதல்ல எனவும் தேசம்நெற் குறிப்பிட்டு உள்ளது.

வாராவாரம் வெள்ளிக்கிழமைகளில் வெளிவருகின்ற உதயன் பத்திரிகை வழமை போன்று பெப்ரவரி 19 வெள்ளிக்கிழமை வெளியானது. அதன் பிரதிகள் வர்த்தக ஸ்தாபனங்களுக்கும் பொது இடங்களுக்கும் விநியோகிக்கப்பட்டு இருபத்திநான்கு மணிநேரத்தில் இத்தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இத்தாக்குதலை யார் நடத்தினார்கள் என்பது தெரியவில்லை என்று தெரிவித்த உதயன் ஆசிரியர் இச்சம்பவத்திற்கு முன்னர் தனக்கு சில தொலைபேசி மிரட்டல்கள் விடப்பட்டதாகவும் அந்தப் பின்னணியிலேயே இத்தாக்குதல் நடத்தப்பட்டு இருக்கலாம் எனத் தான் நம்புவதாகவும் தெரிவித்தார்.

Logendralingam_Lமே 2009 வரை கனடாவில் இடம்பெற்ற போராட்டங்களுக்கு தான் மிகுந்த ஒத்துழைப்பு வழங்கி வந்ததாக தேசம்நெற்க்குத் தெரிவித்த உதயன் ஆசிரியர் லோகன் லோகேந்திரலிங்கம் மே 2009க்குப் பின் அன்று போராடியவர்களிடையே ஏற்பட்ட பிளவும் இதற்கு ஒரு காரணம் எனத் தெரிவித்தார். அண்மையில் கனடாவில் இடம்பெற்ற வட்டுக்கோட்டைத் தீர்மான வாக்கெடுப்பை முன்னெடுத்த குழுவினர் ஏற்கனவே தங்களது பத்திரிகையை வியாபார நிறுவனங்களில் இருந்தும் பொது இடங்களில் இருந்தும் அகற்றியதை அவர் சுட்டிக்காட்டினார். வட்டுக் கோட்டைத் தீர்மானத்திற்கு சார்பான ஆக்கங்களை வெளியிட்ட போதும் அதற்கு முக்கியத்துவம் அளிக்கவில்லை என்று காரணம் கூறியே கனடிய உதயன் பத்திரிகையை அவர்கள் அகற்றியதாகத் தெரிவித்தார் லோகேந்திரலிங்கம்.

கனடா உதயன் பத்திரிகை தாக்கப்பட்டதை கனடா தமிழீழச் சங்கத்தின் பிரதிநிதி துரைராஜாவும் கண்டித்திருந்தார். இது தொடர்பாக தேசம்நெற்க்கு கருத்துத் தெரிவித்த துரைராஜா ‘உதயன் பத்திரிகை செய்திப் பத்திரிகை என்ற வகையில் கனடாவில் நடைபெறுகின்ற பல்வேறு நிகழ்வுகளிலும் கலந்தகொண்டு நடுநிலைமையாகச் செய்திகளை விடுகின்ற பத்திரிகை’ என்றும் ‘அதனைத் தாக்கியது மிகவும் கண்டிக்கத்தக்கது’ என்றும் தெரிவித்தார்.

அண்மையில் கனடிய வர்த்தகக் குழுவொன்று இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவைச் சந்தித்து அனாதைச் சிறார்களுக்குச் சேகரித்த 20 000 கனடிய டொலர்களை ஜனாதிபதியிடம் கையளித்து இருந்தது. இச்சந்திப்பில் கனடிய தமிழர் ஐக்கிய சபை, கனடிய – ஸ்ரீலங்கா வர்த்தக சம்மேளனம் ஆகிய அமைப்புகளில் அங்கம் வகிக்கும் வர்த்தக பிரபலங்கள் குலா செல்லத்துரை, கணேசன் சுகுமார், இருதய மருத்துவ நிபுணர் பொன் சிவாஜி ஆகியோர் கலந்துகொண்டு மகிந்த ராஜபக்சவைச் சந்தித்தனர். இவர்கள் கனடிய உதயன் பத்திரிகை ஆசிரியர் லோகன் லோகேந்திரலிங்கத்தின் நண்பர்கள்.

‘ஜனாதிபதியைச் சந்தித்தவர்கள் எனக்கு மட்டுமல்ல கனடாவில் உள்ள பலருக்கும் நண்பர்கள்’ என்று தெரிவித்த உதயன் பத்திரிகை ஆசிரியர் அவர்கள் ஜனாதிபதியைச் சந்தித்ததிலோ அல்லது ஜனாதிபதியிடம் நிதியைக் கையளித்ததிலோ தனக்கு எவ்வித உடன்பாடும் இல்லையெனத் தெரிவித்தார். மேலும் இச்சந்திப்புப் பற்றிய எவ்வித செய்தியும் உதயன் பத்திரிகையில் வெளிவரவில்லை எனவும் அவர் தெரிவி;த்தார். அச்செய்தியை வெளியிட்டால் தன் மீதும் தனது அலுவலகம் மீதும் தாக்குதல் நடத்தப்படலாம் என்ற அச்சம் தனக்கு இருந்ததாகவும் அவர் தேசம்நெற்க்குத் தெரிவித்தார். அவ்வாறான செய்தி எதுவுமே பிரசுரிக்கப்படாத நிலையில் சில ஊடகங்கள் அவ்வாறான செய்தி வெளியாகியதாலேயே தனது அலுவலகம் தாக்கப்பட்டதாக செய்தி வெளியிட்டுள்ளதாகவும் உதயன் ஆசிரியர் குற்றம்சாட்டினார்.

சுதந்திரமாக ஊடகங்களை நடாத்த முடியாத அளவுக்கு சுயதணிக்கை செய்து செய்திகளை வெளியிட வேண்டிய நிலை இன்னமும் கனடாவில் உள்ளதாக தனது மனவருத்தத்தை வெளியிட்ட லோகன் லோகேந்திரலிங்கம் உதயன் பத்திரிகை தாக்கப்பட்டதற்கு எதிராக 300 000 மக்கள் வாழும் கனடாவில் எவ்வித எதிர்ப்பு நடவடிக்கையும் இடம்பெறாதது மனவருத்தத்தை ஏற்படுத்துவதாகம் தனது வேதனையை வெளிப்படுத்தினார்.

யதார்த்தத்திலிருந்து சுத்துமாத்துவரை! : த பாண்டியன்

Jaffna_Roadபுலம்பெயர்ந்த தமிழர்கள் என்று குறிப்பிட்ட நபர்கள் கொண்ட குழு இலங்கை சென்று தமது அரசியல் பொருளாதார முன்னேற்றத்திற்கு வழி சமைக்கின்றனர். யார் இவர்கள்? கலாநிதி நொயல் நடேசன், கலாநிதி நரேந்திரன் , திரு. கொன்ஸ்ரன்ரைன், திருமதி. ராஜேஸ்பாலா (இவரை அண்மையில் கழற்றி விட்டு விட்டதாக கேள்விப்படுகின்றேன்) ……… போன்றோர். முதலில் இவர்கள் எவ்வாறு அழைக்கப்பட்டனர் என்பதை கருத்திற் கொள்ளாமல் தவிர்க்க முடியவில்லை. இங்கு ஏராளமான நல்ல உள்ளங் கொண்ட நபர்கள், தமது உறவினரின் நலன்களில் மிக அதிக அக்கறை கொண்டவர்கள்   இலங்கை அரசுடன் இணக்கப்பாடாக வேலை செய்வதற்கு தயாராக உள்ளனர். ஆனால் ஏதோ மேற்குறிப்பிட்ட நபர்கள் தங்களுக்குத்தான் யதார்த்தம் புரிவதாகவும் மற்றையவர்கள் ஏதோ கேணையர்கள் எனவும் சொல்லிகாட்ட முனைகின்றனர்.

முன்பு தேசம்நெற்றில் எனது நண்பர் வடக்கான் ஆதாம் மேற்குறிப்பிட்ட நபர்களை நீங்கள் யார்? (போர் முடிந்த பின் இலங்கை சென்ற 24 பேர்) என்ன அடிப்படையில் நீங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு இலங்கை சென்றீர்கள் என்பது உட்பட பல கேள்விகளை எழுப்பியிருந்தார். ஆனால் அவற்;றிற்கு மதிப்பிற்குரிய திருவாளர் கொன்ஸ்ரன்ரைன் பதிலளித்தாரில்லை. ஏதாவது சந்தேகம் எழுப்பினால் புலிகளின் பாணியில் ‘எங்கள் மேல் விமர்சனம் வைக்க இவர்கள் யார்” என திட்டி பின்னூட்டம் விடுகின்றார்கள்.

Jaffna_Univercity_Templeமுதலாவதாக யாழ் பல்கலைக்கழகத்திலிருந்து தொடங்குவோம். இலங்கையின் மற்றைய பல்கலைக்கழகங்களில் எத்தனை வாகனங்கள் உண்டு என முதலில் அறிய வேண்டும். அங்கும் அதே நிலைதான் எனில் எல்லா பல்கலைக்கழகங்களிற்கும் உதவ முன்வர வேண்டுமேயன்றி யாழ் பல்கலைக்கழகத்திற்கு உதவுவது சரியானதாக எனக்குபடவில்லை. ஏனெனில் யாழ்மாவட்டத்தில் வசதிகள் அதிகம் என அங்கு படித்து விட்டு இங்கு புலி எதிர்ப்பு வாதம் பேசும் நபர்கள் தரப்படுத்தலுக்கு ஆதரவாக பேசிவருவதை நாம் அறிவோம். இது என்னைப் போன்ற பல்கலை அனுமதி கிடைக்கப் பெறாத ஏராளமான வறியவர்களின் பிள்ளைகளின் வாழ்வில் மண்ணை அள்ளிப் போட்டு விடும்.

இதற்கிடையில் திரு கொனஸ்ரன்ரைனுக்கு எதிராக எழுதுவதாக நினைத்து கொண்டு சிலர் பின்னூட்டங்களில் மதங்களுக்கிடையில் பிளவை உண்டுபண்ணும் விதமாக கருத்தெழுதுகின்றனர். இது மிகவும் கண்டிக்கத்தக்கது. கிறிஸ்தவ மிசனரியின் பாடசாலைகளில் படிக்கலாம். நல்ல எதிர்காலத்தை அமைத்துக் கொள்ளலாம். ஆனால் மிசனறிகளை பிடிக்காது என்பவர்களை என்ன சொல்வது? (எனக்கும் எல்லா மதங்களின் மேலும் மிசனறிகள் உட்பட விமர்சனங்கள் உண்டு). மேலும் இணையத்தளங்களிலும் புலிக்கு எதிராக எழுதுகிறோம் என நினைத்து மதரீதியான பிளவுகளை உருவாக்க சிலர் முயற்சிக்கின்றனர். மறந்து விடாதீர்கள். புpரபாகரன் ஒரு இந்து மதவாதி. மதமாற்றத்திற்கு உறுதுணையாய் இருந்திருப்பார் என எண்ண சாத்தியமில்லை.

வடக்கு கிழக்கு மக்களுக்கு எவ்வாறு உதவுவது என்ற பொருளில் தொடங்கிவிட்டு பாரம்பரிய பிரதேசம் சம்மந்தமாக அரசியல் பேசுவது நல்லதல்ல. அதை அங்கு இருக்கும் மக்களின் பிரதிநிதிகள் தங்களுக்குள் பேசி ஒரு முடிவிற்கு வரட்டும். இதை மீண்டும் வலியுறுத்தி கூறுகின்றேன். மேலும் இந்த விடயம் எனக்கு உங்கள் எண்ண ஓட்டத்தின் மேல் ஒரு சந்தேகத்தை ஏற்படுத்துகின்றது. இலங்கையின் பரப்பளவில் (65610கி.மீ) வடக்கு (8884 கி.மீ) கிழக்கு (99996 கி.மீ) மாகாணங்கள் 28 வீதமானவை. 2001 ல் மக்கள் கணக்கெடுப்பின்படி தமிழ் முஸ்லிம் மக்களின் தொகை 20 வீதம். போரினால் ஏற்படுத்தப்பட்ட இடப்பெயர்வுகளை கணக்கில் எடுக்க அதிகம் என்பதே உண்மையான விடயம். ஏனெனில் இன்றைய சூழலில் வன்னியின் மக்கள் தொகை என்ன? எனவே சிங்கள குடியேற்றத்திற்கான வேலை தொடங்கி விடுவதா? தயவு செய்து நான் சிங்கள மக்களுக்கு எதிரானவன் என பின்னூட்டம் விட தொடங்க வேண்டாம். பாவம் அவர்கள். அரசு அவர்களை தனது அரசியலுக்கு பாவித்து கொள்ளுகின்றது. இக் குடியேற்றவாதிகள் மேல் புலிகள் செய்த கொடூரங்கள் கண்டிக்கப்பட வேண்டியவை. முக்கியமாக சிறுபான்மை இனங்களின் இருப்புக்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதே எனது கருத்தாகும். பெரும்பான்மை மக்கள் இதை பெருந்தன்மையுடன் ஏற்றுக் கொள்ள வேண்டும். மேலும் ஆஸ்ரேலியாவில் அங்குள்ள பழங்குடியினருக்கு சில குறிப்பிட்ட இடங்கள் ஒதுக்கப்பட்டது போல் சிறுபான்மையினருக்கு இவ்விடங்கள் ஒதுக்கப்பட வேண்டும்.

Tilko_Hotelஇனி முக்கியமான விடயத்திற்கு வருவோம். முதலீடடிற்கும் மேற் குறிப்பிட்ட உதவிகளுக்கும் உள்ள வேறுபாடுகள். லாபம் கருதிய நோக்கில் செய்யப்படும் முதலீடுகளை ஏதோ ‘மக்கள் சேவை” என்ற மட்டத்தில் கொண்டு செல்வது நல்லதல்ல. ரில்கோ, ரைம்ஸ் ரவல் போன்ற புலிவாதிகள் அடிப்படையில் வியாபாரிகள். இந்த வியாபாரிகளுக்கு வரிச்சலுகை, குறைந்த விலையில் இட ஒதுக்கீடு அல்லது இலவச நில ஒதுக்கீடு இத்தியாதி……….! இலங்கை என்ற நாட்டின் மேல் மிகுந்த அக்கறை கொண்டவர்கள் என்ற முறையில் எங்களால் இதை ஏற்க முடியாது.  இங்கு சுப்பர்மாக்கெற்றிலும், பேக்கரிகளிலும் ,ஓட்டல்களிலும், பெற்;றோல் நிலையங்களிலும் வேலை செய்யும் சாமானிய தமிழர்கள் அவர்கள் புலி ஆதரவாளர்களாயினும் புலி எதிர்ப்பாளராயினும் தமது குடும்பங்களுக்கும், சொந்தங்களுக்கும் பணத்தை அனுப்பிக் கொண்டு தான் உள்ளனர். ஆனால் உங்களைப் போன்று கணக்கு வழக்கில்லாமல் பணத்தை சேர்த்த நபர்கள் யதார்த்தம் என்ற பெயரில் அரசிற்கு மாத்திரம் வாக்கு போடுங்கள் இல்லை என்றால் அரசு கோபம் கொண்டு விடும் என கூறுவது …..! இது போன்ற ஜனநாயக மறுப்பை மக்கள் மேலும் மேலும் தாங்க மாட்டார்கள்.

மக்களுக்கு சேவை செய்ய அரசுடன் இணைந்து வேலை செய்வதை ஒருவரும் குறை கூறவில்லை. மறுதலையாக பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் மந்திரி பதவிகளுக்காக சிக்கலான பிரச்சனைகளில் தான்தோன்றி தனமாக பேசுவது, எழுதுவது தான் பிழையானது. பொன்சேகாவை ஆதரிப்பது என்பது கூட ஐக்கிய இலங்கைக்குள் தமிழ் மக்கள் வாழ விரும்புகிறார்கள் என்பதேயாகும். அதை விடுத்து அவருக்கு வாக்களித்தது சிங்கள பெரும்பான்மை இனத்தை மேலும் கோபத்திற்கு உள்ளாக்குவதாக கூறுவதெல்லாம்………

 இங்கு கொன்ஸ்ரன்ரைன் இடது சாரிகளை போகின்ற போக்கில் திட்டி விட்டு செல்லுகின்றார். தேசம் ஆசிரியர் குழுவும் ஏதோ ஒரு திட்ட அடிப்படையிலேயே செய்திகளை வெளியிடுவதாக நினைக்கின்றேன். ஏனெனில் முக்கியம் வாய்ந்த பல செய்திகளை வேண்டுமென்றே இவர்கள் தவிர்த்து விட்டனர். இதுபற்றி சோதியுடன் பேசினேன். அவர் இலங்கையில் இருந்துதான் பல விடயங்கள் போடுகின்றார்கள் என ஏதோ கூறினார். இவர்கள் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். கி போர்ட் மாக்ஸிஸ்டுக்களில் அநேகமானோர் மக்களை விற்பதில்லை. அவர்களின் தந்திரோபாய முறையில் பிழைகள் இருக்கலாம். ஆனால் அபிவிருத்தி என்று பேசி சுரண்ட நினைப்பவர்களை விட நல்ல உள்ளம் கொண்டவர்கள். இவர்கள் கூறும் பாடசாலை பிரச்சனையில் இருந்து கோவில் பிரச்சனை வரை போர் நடைபெற்ற நாளில் இருந்து ஏன் அதற்கு முன்பிருந்து இருக்கிறது. இப்போது நீங்கள் பேசுபவை எழுதுபவை என்பவற்றைக் கொண்டு பார்த்தால்; உங்களுக்கும் அங்குள்ள மக்களுக்குமான தொடர்பு கடந்த காலங்களில் இல்லை எனபதும்; நீங்களும் உங்கள் குடும்பத்தினரும் இங்கு மிக வசதியாக நிலைத்து விட்டீர்கள் என்பதும் புரியக் கூடியதாக உள்ளது. இந்த கஸ்ரங்களுக்கான உதவிகளை நீங்கள் அப்போதே செய்திருக்க முடியும். ஏனெனில் 95 லிருந்து யாழ்ப்பாணம் இலங்கை அரசின் கட்டுப்பாட்டிலேயே இருக்கிறது. அப்போதும் மக்கள் இதே கஸ்டங்களுடன்தான் இருந்தார்கள்.

நாடு நிலையான சமாதானத்தை எட்டி சுமுகமாக இயங்கும் போதே இப்பிரச்சனைகள் களைந்து எறியப்படும். ஆனால் இங்கு இருக்கும் பழைய மாணவர் சங்கங்கள், தனிப்பட்டவர்கள் உதவுகின்றார்கள். உதவ வேண்டும். ஆனால் இந்த சங்கங்களை முன்பு கேலி செய்த நீங்கள் இப்போது உதவி செய்யச் சொல்வதை என்னவென்று சொல்வது?

மொத்தத்தில் தரப்படுத்தலுக்கு காரரணமாக இந்த மேட்டுக்குடிகளும், ஸ்ரேசன் மாஸ்டர், போஸ்ற்மாஸ்ரர் போன்றோரின் குடிகளும் வெளிநாடுகளில் புலியை ஆதரித்து விட்டு அல்லது எதிர்த்து விட்டு இப்போது ஒன்றாக இலங்கை போய் அபிவிருத்தி, யதார்த்தம் என்ற பெயரில் மீண்டும் அவ் ஏழை எளிய மக்களின் தலையில் மிளகாய் அரைக்க தொடங்குகிறார்கள். நண்பர்களே! இவர்களை நன்கு புரிந்து கொள்ளுங்கள். அதே வேளையில் உங்கள் உறவுகளுக்கு தொடர்ந்து உதவுங்கள். உதவிக் கொண்டே இருங்கள். எமது இந்த வாழ்க்கை ஒரு லட்சம் பிணங்களின் மேல் கட்டப்பட்டது என்பதை மறந்து விடாதீர்கள். உங்கள் பிள்ளைகள் தரப்படுத்தல் இல்லாமல் பல்கலைக்கழகம் செல்கிறார்கள் என்பதை மறந்து விடாதீர்கள்.

வாழ்வின் கொடுமையும்! கனவுகளின் வறுமையும்!! – சிறுவர் இல்லங்களில் சில மணிநேரங்கள் : த ஜெயபாலன்

மட்டக்களப்பில் அகிலன் இல்லத் திறப்பு விழா.இலங்கையின் 30 ஆண்டு கால உள்நாட்டு யுத்தமும் அது மிகக் கோரமாக முடிவடைந்ததும் வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் வாழ்நிலையை மிகமோசமான பின்னடைவுக்குத் தள்ளியுள்ளது. இந்த யுத்தத்தால் தங்கள் உழைப்பையும் சேமிப்புக்களையும் இழந்து பல்லாயிரம் பேர் நிர்க்கதியாகி உள்ளனர். பல்லாயிரக் கணக்கானோரின் வாழ்வை இந்த யுத்தம் சின்னா பின்னப்படுத்தியும் இன்னும் ஆயிரக்கணக்கானவர்களின் வாழ்நிலையை அழித்தும் உள்ளது. இந்த அழிவுகளை மிகக் கணிசமான அளவுக்கு குறைத்து மக்களின் இழப்பைத் தடுத்திருக்க முடியும். ஆனால் அதனை யுத்தத்தில் இருந்த இரு தரப்புகளுமே செய்யவில்லை. அதனால் யுத்தம் ஏற்படுத்திய சுமைகளை மக்களே சுமக்க நிர்ப்பந்திக்கப்பட்டு உள்ளனர்.

அகிலன் இல்லத் திறப்புவிழா நிகழ்வு.தமிழீழ விடுதலைப் புலிகளால் பராமரிக்கப்பட்ட காந்தரூபன் அறிவுச்சோலை, செஞ்சோலை சிறார்கள் நடந்து முடிந்த யுத்தத்தின் போது இலங்கை இராணுவத்தால் மீட்கப்பட்டனர். படையணிகளில் ஈடுபடுத்தப்பட்ட சிறார்கள் இலங்கை இராணுவத்திடம் சரணடைந்தனர். தற்போது சரணடைந்து எட்டு மாதங்கள் வரை ஆகின்றது. ஜனாதிபதித் தேர்தலில் இவர்களது விடுதலையும் விவாதப் பொருளாகி சில நூறு போராளிகள் விடுவிக்கப்பட்டு உள்ளனர். ஆனால் பல்லாயிரக்கணக்கானவர்களது எதிர்காலம் இன்னமும் கேள்விக்குறியாகவே உள்ளது. இப்போராளிகள் வன்முறைக்குப் பழக்கப்பட்டவர்கள். இவர்களுக்கு புனர்வாழ்வு அளிக்கப்படுவது அவசியமானது. ஆனால் அரசு அதனை எவ்வாறு கையாள்கின்றது என்பது தொடர்ந்தும் சர்ச்சைக்குரியதாகவே இருந்து வருகின்றது. அரசு இதுவரை யார் யாரை இவ்வாறு தடுத்து வைத்திருக்கின்றோம் என்ற பெயர் விபரத்தைக் கூட வெளியிடவில்லை. சரணடைந்த அல்லது யுத்தத்தின் போது பிடிக்கப்பட்ட இவர்கள் அதற்கான சர்வதேச விதிகளின் கீழ்நடத்தப்பட வேண்டும் போன்ற அடிப்படை அம்சங்களைக் கூட அரசு திருப்திப்படுத்தவில்லை.

டி லா சாலே பிரதேர்ஸின் நிர்வாகத்தில் உள்ள சென் சேவியர் பாடசாலை.இந்நிலையில் சில நூறு சரணடைந்த குழந்தைப் போராளிகள் செஞ்சோலை மற்றும் காந்த ரூபன் அறிவுச்சோலை சிறார்கள் கொழும்பு பம்பலப்பிட்டி இந்துக்கல்லூரில், மன்னார் சென் சேவியர் பாடசாலையில் வைத்துப் பராமரிக்கப்படுகின்றனர். இவர்களில் மன்னார் டி லா சலே பிரதேர்ஸ் இனால் சென் சேவியர் பாடசாலையில் 50 மாணவர்கள் பராமரிக்கப்படுகின்றனர். சிறுவயதிலேயே படையணிகளில் சேர்க்கப்பட்ட இம்மாணவர்கள் பெரும்பாலும் தங்கள் பெற்றோரை இழந்தவர்கள். உறவுகளை இழந்தவர்கள். தமிழீழ விடுதலைப் புலிகளால் வளர்க்கப்பட்டு இருந்த இச்சிறார்கள் தங்களையொத்த சக குழந்தைகளில் இருந்து மிகவும் மாறுபட்ட இயல்புகளைக் கொண்டிருந்ததாக இவர்களைப் பொறுப்பேற்றுப் பராமரிக்கின்ற டி லா சலே பிரதேர்ஸ் தெரிவிக்கின்றனர். இச்சிறார்கள் தொடர்ச்சியாக விசேட உளவியல் சிகிச்சைகளையும் பெற்று தற்போது இயல்பு மாணவர் வாழ்க்கைக்குத் திரும்பிக் கொண்டுள்ளனர்.

அகிலன் இல்லம் பொறுப்பெற்ற குழந்தைப் போராளிகளில் ஒரு பகுதியினர்.டி லா சலே பிரதேர்ஸ் இச்சிறார்களைத் தவிரவும் மேலும் நூறு வரையான சிறார்களைப் பராமரிக்கின்றனர். ஆனால் இந்த இரு தொகுதி சிறார்களையும் இணைத்துப் பராமரிப்பதில் அவர்கள் சில நடைமுறைச் சிக்கல்களை எதிர்கொள்கின்றனர். அதனால் இவ்விரு தொகுதி சிறார்களையும் தனித்தனியாக பராமரிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழீழ விடுதலைப் புலிகளால் வளர்க்கப்பட்ட படையணிகளில் பயிற்றப்பட்ட இச்சிறார்கள் ஏனைய சிறார்களைக் காட்டிலும் விசேட தேவைகளைக் கொண்டிருப்பதும் புரிந்து கொள்ளத்தக்கதே.

இதே நிலையே பம்பலப்பிட்டி இந்துக்கல்லூரியில் உள்ள சிறார்கள் மத்தியிலும் காணப்பட்டது. இச்சிறார்களைப் பொறுப்பெடுப்பதில் புலம்பெயர்ந்த அமைப்புகள் பல பின்னடித்திருந்தன. இச்சிறார்களால் பின்னாட்களில் சிக்கல்கள் எழலாம் என்ற அச்சம் பொறுப்பெடுக்க முன்வருபவர்கள் மத்தியில் காணப்பட்டது. வவுனியா அகிலாண்டேஸ்வரி இல்லத்திடம் செஞ்சோலைச் சிறார்கள் மற்றும் குழந்தைப் போராளிப் பெண்கள் உட்பட 160 பேர் வரை ஒப்படைக்க அரசு முன் வந்தது. ஆனால் 10 வயதுக்கு மேற்பட்ட சிறுமிகளைப் பொறுப்பேற்க அவ்வில்லத்தினர் மறுத்துவிட்டதாக அறியவருகின்றது. இச்சிறுமிகளை கட்டுப்படுத்துவது பராமரிப்பது போன்ற விடயங்களில் தங்களுக்கு சிக்கல்கள் ஏற்படலாம் என அவ்வில்லத்தினர் அச்சம் தெரிவிக்கின்றனர். அதனால் தமிழீழ விடுதலைப் புலிகளால் வளர்க்கப்பட்ட முன்னால் போராளிகளான இச்சிறார்கள் பெரும்பாலும் கைவிடப்பட்ட மறக்கப்பட்ட நிலையே காணப்பட்டது.

டி லா சாலே பிரதேர்ஸின் பொறுப்பில் இருந்த சிறுவர்களை லண்டன் அகிலன் பவுண்டேசன் பொறுப்பேற்றது.இச்சுழலிலேயே லிற்றில் எய்ட் அம்பேபுச பின்னர் அங்கிருந்து பம்பலப்பிட்டிக்கு அனுப்பப்பட்ட சிறார்கள் தொடர்பில் முன்னின்று சில உதவித் திட்டங்களை மேற்கொண்டது. அதன் தொடர்ச்சியாக மன்னார் டி லா பிரதேர்ஸின் பராமரிப்பில் உள்ள சிறார்களைப் பொறுப்பெற்கும்படியான வேண்டுகோள் லிற்றில் எய்ட்க்கு விடுக்கப்பட்டது. ஆனால் லிற்றில் எய்ட் அவர்களைப் பொறுப்பெற்று பராமரிக்கும் நிதி நிலையைக் கொண்டிருக்காத நிலையில் அச்சிறார்களைப் பராமரிப்பதற்கான நிதிப் பொறுப்பினை லண்டன் அகிலன் பவுண்டெசன் பொறுப்பேற்கவும் முன்வந்து.

மன்னாரில் சிறுவர் இல்லம் அமைப்பதற்கான இடம்பார்க்கப்படுகின்றது.ஜனவரி 21 அன்று சென் சேவியர் கல்லூரியில் உத்தியோகபூர்வமாக அச்சிறார்களை பொறுப்பேற்கும் நிகழ்வு இடம்பெற்றது. இந்நிகழ்வில் லண்டன் அகிலன் பவுண்டேசன் நிறுவனர் எம் கோபாலகிருஸ்ணன், லிற்றில் எய்ட் தலைவர் ரி கொன்ஸ்ரன்ரைன், இவ்விரு அமைப்புகளின் சார்பிலும் த ஜெயபாலன், டி லா சாலே பிரதேர்ஸ் இன்னும் சிலரும் கலந்து கொண்டனர். இச்சிறு நிகழ்வின் பின்னர் சென் சேவியர் கல்லூரியிலும் அதற்கு அருகாமையிலும் தங்க வைக்கப்ட்டுள்ள இச்சிறார்களை தங்க வைப்பதற்கான புதிய கட்டிடம் ஒன்றின் அவசியம் பற்றிப் பேசப்பட்டது. லண்டன் திரும்பிய பின்னர் டி லா சாலே பிரதேர்ஸ் க்குச் சொந்தமான நிலத்தில் இச்சிறார்களைத் தங்க வைப்பதற்கான கட்டிடம் ஒன்றைக் கட்டிக் கொடுப்பதற்கும் லண்டன் அகிலன் பவுண்டேசன் முன்வந்துள்ளது.

குழந்தைப் போராளிகளுடன் எம் கோபாலகிருஸ்ணன்.மன்னார் சென் சேவியர் கல்லூரியில் தங்க வைக்கப்பட்ட இச்சிறார்களுடன் ஒரு குறுகிய உரையாடலை நடத்த முடிந்தது. நாம் சந்தித்த சிறார்கள் பெரும்பாலும் பெற்றோரை தம் குழந்தைப் பருவத்திலேயே இழந்தவர்கள். தமிழ் மக்களின் விடுதலைக்காக ஆயுதங்கள் திணிக்கப்பட்டவர்கள். இவர்களது உடல்கள் யுத்தத்தினால் பல் வகைப்பட்ட காயங்களுக்கும் உள்ளாகி இருந்தது. கடந்த காலத்தில் இருந்து மீள முடியாமல் எதிர்காலத்தை எதிர்கொள்கின்ற இவர்கள் பயணிக்க வேண்டிய பாதை மிகக் கரடுமுரடானதாக உள்ளது. தற்போது இவர்கள் சென் சேவியர் பாடசாலையில் காபொத உயர்தர வகுப்பில் படிக்கின்றனர். இன்னும் சிலர் 5ம் 6ம் வகுப்புகளில் படிக்கின்றனர். இவர்களிடையே படிக்க வேண்டிய ஆர்வத்தில் எவ்வித குறையும் இல்லை. ஆனால் அதற்கான வாய்ப்பும் சுழலும் தான் அவர்கள் எதிர்கொள்கின்ற பிரச்சினையாக உள்ளது.

சென் சேவியர் இல்லத்தில் சிறார்கள் தங்கவைக்கப்பட்டுள்ள அறை.மாணவப் பருவம் என்பது வாழ்வில் மிக இனிமையான பருவம். சுமைகளற்று கவலைகளற்று சுகமான சுமைகளைத் தாங்கிக் கனவுகாண்கின்ற பருவம். ஆனால் இந்த மாணவர்களுக்கு அது அவ்வாறில்லை. ஒரு அறையிலேயே 20 பேர்வரை படுத்து உறங்குவதற்கு மட்டும் உள்ள இடைவெளியில் அவர்களால் என்ன செய்துகொள்ள முடியும். அவர்கள் தினம் தினம் பொழுதைக் கழிப்பதற்கே பெரும் அவஸ்த்தைப்படுவதை பார்க்கக் கூடியதாக இருந்தது.  அவர்கள் கடந்து வந்த பாதை மிகக் கடுமையானதும் கொடுமையானதும். ஆனால் அவர்களது இன்றைய வாழ்வும் கனமானதாகவே உள்ளது. அவர்களுக்கு எதிர்காலக் கனவுகளும் நம்பிக்கையும் வழங்கப்படுவதற்கு வழிவகைகள் செய்யப்பட வேண்டும்.

London_Sivan_Kovil_illam_Toilet_Not_in_useஉணவு உடை உறைவிடம் கல்வி என்ற அடிப்படைத் தேவைகள் மட்டும் ஒரு மாணவனுக்கு போதுமானதாக அமையாது. அவர்களது பொழுது போக்கிற்கும் சிந்தனையை விருத்தி செய்வதற்குமான சுழல் அமைய வேண்டும்.

இந்தச் சுழல் மன்னாரில் மட்டும் அல்ல நான் சென்று பார்த்த ஏனைய இல்லங்களிலும் காணப்படவில்லை அடிப்படைத் தேவைகளை வழங்கப்படுகின்றது என்ற விடயத்தில் ஆறுதல் அடையக் கூடியதாக இருந்தது. மாணவர்களும் அதற்கு தங்கள் நன்றியைத் தெரிவிக்கத் தவறவில்லை. அவர்கள் மேலதிகமாக எதையும் எதிர்பார்க்கவும் இல்லை. ஏனெனில் அவர்கள் தங்கள் நிலையை உணர்ந்து தங்கள் எதிர்பார்ப்புகளுக்கு கட்டுப்பாடுகளை விதித்து உள்ளதை என்னால் உணர முடிந்தது. அவர்களது தேவைகளை உணரந்து அவர்களது எதிர்கால விருத்திக்குத் தேவையான உதவிகளை வழங்குவது புலம்பெயர்ந்து வாழ்கின்ற எமது கடமையாகும்.

அகிலன் இல்லத் திறப்புவிழா நிகழ்வு.மட்டக்களப்பில் லண்டன் அகிலன் பவுண்டேசன் உறவுகளை இழந்த உறவுகளால் பராமரிக்க முடியாத நிலையில் ஒப்படைக்கப்பட்ட சிறுவர்களுக்கான இல்லம் ஒன்றை ஜனவரி 23ல் திறந்து வைத்தது. இந்நிகழ்வில் லண்டனில் இருந்து சென்றவர்களும் சமூக அந்தஸ்துடையவர்களும் விளக்கேற்றியது முக்கியமல்ல. அங்கு தங்கி வாழப் போகின்ற சிறுமி ஒருத்தியும் விளக்கேற்றி நிகழ்வைச் சிறப்பித்தார். இவ்வாறான நிகழ்வுகளில் அச்சிறுவர்கள் கெளரவிக்கப்படுவது மிக அவசியம்.

எம் கோபாலகிருஸ்ணன் தனது மகனின் நினைவாக மேற்கொள்ளும் பல்வேறு சமூகப்பணிகளில் இச்சிறார்களைப் பராமரிப்பதும் ஒன்று. மன்னாரில் டி லா சாலே பிரதேர்ஸின் பொறுப்பில் உள்ள 50 சிறார்கள், மட்டக்களப்பில் திறக்கப்பட்ட அகிலன் இல்லத்தில் 40 சிறார்கள் இவர்களைவிடவும் ஏனைய சிறுவர் இல்லங்களுக்கு பகுதியாக 35 சிறார்களுக்குமான நிதிப் பொறுப்பினை லண்டன் அகிலன் இல்லம் பொறுப்பேற்று நடாத்துகின்றது. இவற்றைவிட 15 முதியோர்களையும் லண்டன் அகிலன் இல்லம் பராமரிக்கின்றது.

திலகவதியார் இல்லச் சிறுமிகளுடன் த ஜெளபாலன்.மட்டக்களப்பில் திறந்து வைக்கப்பட்ட அகிலன் இல்லம் அங்கு லண்டன் ஸ்ரீ கனகதுர்க்கை அம்மன் ஆலயத்தால் பராமரிக்கப்படுகின்ற திலகவதியார் சிறுமிகள் இல்லத்திற்கு அருகில் உள்ளது. இவர்களுக்கும் கல்வி உட்பட அடிப்படைத் தேவைகள் நிறைவு செய்யப்பட்டு இருந்தது. அச்சிறுமிகளுடன் உரையாடியதில் அவர்கள் தங்கள் நிறைவை வெளிப்படுத்திக் கொண்டனர். ஆனால் அவர்களும் தங்கள் எதிர்பார்ப்புகளை மட்டுப்படுத்தியே வைத்திருந்தனர். அச்சிறுமிகள் உட்பட இவ்வாறான சிறுவர்களது கனவுகள் பரந்து விரிந்ததாக இருக்கவில்லை. படித்து கிளாக் ஆசிரியை ஆக வரவேண்டும் என்றளவில் தான் அவர்கள் தங்கள் கல்விக் கனவை மட்டுப்படுத்தி இருந்தனர்.

அகிலன் இல்லத் திறப்புவிழா நிகழ்வு.இராணுவக் கெடுபிடிகளோ மற்றும் தொல்லைகளோ தங்களுக்கு இதுவரை இருக்கவில்லை என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர். இதே கருத்தை அங்குள்ள ஏனைய இல்லங்களும் தெரிவித்தன. இராணுவத்தினரிடம் இல்லங்கள் பற்றிய விபரங்கள் உண்டு. அவர்களுடன் இல்ல நிர்வாகம் நல்லிணக்கமான உறவைப் பேணி வருகின்றது.

மட்டக்களப்பில் அகிலன் இல்லத்தின் திறப்பு விழாவிற்கு அப்பகுதி இராணுவப் பொறுப்பதிகாரியும் அழைக்கப்பட்டு இருந்தார். அது சற்று சங்கடத்தையும் ஏற்படுத்தியது. ஏற்பாட்டாளர்களிடம் அது பற்றி விசாரித்த போது ஒரு இராணுவ அதிகாரியை அழைப்பதால் தங்களுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை என்றும் நாளை ஒரு பிரச்சினை என்று வந்தால் தேவையற்ற கெடுபிடிகளைத் தவிர்க்கலாம் என்றும் தெரிவித்தனர். மேலும் இந்த இல்லங்கள் தொடர்பான நடவடிக்கைகள் எதற்கும் இடைஞ்சல்கள் ஏற்படுவதும் தவிர்க்கப்படும் எனத் தெரிவித்தனர். அங்கு மக்கள் தங்கள் நாளாந்த வாழ்வை நகர்த்த சமயோசிதமாக நடந்து கொண்டு முரண்பாடுகளைத் தவிர்த்து தங்கள் வாழ்வை நகர்த்துகின்றனர்.

லண்டண் கனகதுர்க்கை அம்மன் ஆலய ரஸ்டி தேவசகாயமும் அவருடைய துணைவியாரும்.மேலும் லண்டன் ஸ்ரீ கனகதுர்க்கை அம்மன் ஆலயமும் பெருமளவிலான பணிகளை மேற்கொண்டு வருகின்றது. ஒரு குறுகிய காலம் ஆலயத்தில் ஏற்பட்ட நிர்வாக மாற்றத்தால் இப்பணிகளில் தடையேற்பட்டு இலங்கைக்கு உதவி வழங்குவதற்கு எதிராக சில ஆலய ரஸ்டிகள் செயற்பட்டனர். இது பற்றிய விரிவான கட்டுரைகள் செய்திகள் லண்டன் குரலில் வெளிவந்திருந்தது. ஆனால் மீண்டும் நிர்வாகத் தலைவராகத் தெரிவு செய்யப்பட்ட எஸ் கருணைலிங்கம் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உதவிகளை மீள ஆரம்பித்து வைத்ததை ஸ்ரீ கனகதுர்க்கை அம்மன் ஆலய ரஸ்டிகளில் ஒருவரான தேவசகாயம் கிழக்கு இலங்கைப் பல்கலைக் கழகத்தில் நடந்த வைபவம் ஒன்றில் சுட்டிக்காட்டினார்.

வன்னி யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு எம் கோபாலகிருஸ்ணன் உதவித்தொகை வழங்குகின்றார்.ஜனவரி 23ல் வன்னி யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட 25 மாணவர்களுக்கு தலா 25000 ரூபாய் படி உதவித் தொகை வழங்குகின்ற திட்டத்தை லண்டன் அகிலன் பவுண்டேசன் மேற்கொண்டது. அன்றைய நிகழ்வில் முதற்கட்டமாக பாதிக்கப்பட்ட ஒவ்வொரு மாணவருக்கும் 5000 ரூபாய் வழங்கப்பட்டது. கிழக்கு லண்டன் பல்கலைக் கழகத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பல்கலைக் கழகத்தின் மாணவர் தலைவர்கள் மற்றும் விரிவுரையாளர்கள் சிலரும் கலந்துகொண்டனர்.

செட்டிபாளையம் விபுலானந்தர் இல்லத்தில் மாணவர்கள் உணவு உண்பதற்கும் கல்வி கற்பதற்குமான மண்டபம் ஒன்று – அகிலன் மணிமண்டபம் – கட்டப்பட்டு இந்த விஜயத்தின் போது திறந்து வைக்கப்பட்டது.

லண்டன் சிவன் கோவில் இல்லச் சிறுமிகளுடன்.மட்டக்களப்பில் லண்டன் சிவன் கோவில் இல்லம் ஒன்றும் உள்ளது. இந்த இல்லத்தில் 20 சிறுமிகள் வரையுள்ளனர். இவர்களது உணர்வுகளும் தேவைகளும் மற்றைய இல்லங்களில் உள்ளவர்களில் இருந்து வேறுபட்டதல்ல. இவர்களது கனவுகளும் கூட ஆசிரியைகளாக வர விரும்புவதாகவே இருந்தது. இந்தச் சிறார்கள் யாரும் எதிலும் குறைகூற விரும்பவில்லை. தங்களுக்கு கிடைத்ததை எண்ணி திருப்தியடைந்துள்ளனர். ஆனால் அவர்களை இந்நிலைக்கு அப்பால் எடுத்துச் சென்று அவர்களை தங்கள் சொந்தக் காலில் நிலைக்கச் செய்கின்ற பொறுப்பு புலம்பெயர்ந்த தமிழ் சமூகத்திற்கு உண்டு.

மட்டக்களப்பில் உள்ள லண்டன் சிவன் கோவில் இல்லம் - படுக்கை மண்டபம்.தற்போது லண்டனில் இருந்து அகிலன் பவுண்டேஸன் ஸ்ரீ கனகதுர்க்கை அம்மன் ஆலயம் என்பனவே பெரிய அளவிலான உதவிப் பணிகளை முன்னெடுக்கின்றன. ஏனைய நாடுகளில் இருந்தும் சில சில உதவிப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றது. புலம்பெயர்ந்துள்ள நாடுகளில் உள்ள ஒவ்வொரு ஆலயமும் தமது வருமானத்திற்கு ஏற்ப பாதிக்கப்பட்ட மக்களுக்கு உறவுகளை இழந்த குழந்தைகளுக்கு தனிப் பெற்றோருக்கு (தாயை அல்லது தந்தையை இழந்தவர்களுக்கு) உதவ முன்வந்தால் வடக்கு கிழக்கில் உள்ள மக்களின் எதிர்கால வாழ்வில் நம்பிக்கையை ஏற்படுத்த முடியும்.

மன்னாரில் புதிய தங்;குமிடத்திற்குக் கட்டப்பட்டுக் கொண்டுள்ள குளியல்பகுதி.தமிழ் மக்களை இன்றைய நிலையிலிருந்து மீட்பது அரசின் கடமையென்றும் அவ்வாறு அப்பொறுப்புக்களை ஏற்பது இனவாத அரசின் இனவாத நடவடிக்கைகளுக்கு உதவும் என்றும் கூறி இப்பொறுப்புக்களை தட்டிக்கழிக்கும் தத்துவ அரசியல் மட்டும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எவ்வித பயனையும் ஏற்படுத்தப் போவதில்லை. பாதிக்கப்பட்ட மக்களை நெருங்காமல் பல்லாயிரம் மைல்களுக்கு அப்பால் இருந்து டயரெக் டெபிற்றில் நடாத்திய அரசியலற்ற வன்முறையின் விளைவுகள் தாம் இன்று அந்த மக்கள் அனுபவிக்கும் இந்த துயரங்களுக்கு அடிப்படை. அதே போல் ஆனால் டயரெக்டெபிற்றும் செலுத்தாமல் வெறும் வாய்ச்சொல் புரட்சியாளர்களை நம்பும் நிலையில் இலங்கைத் தமிழ் சமூகம் இன்றில்லை. அவரவர் தங்கள் அரசியல் அடையாளங்களை பில்ட் அப் செய்ய வாய்ச்சொல் புரட்சிகளும் தத்துவங்களும் உதவுமேயன்றி தங்களை அர்ப்பணிக்கத் தயாரற்ற இந்த வாய்ச்சொல் வீரர்கள் கூவித்தான் பொழுது விடிய வேண்டும் என்ற அவசியம் அங்கில்லை.

யுத்தம் ஏற்படுத்திய இந்தச் சுமைகளை சுமப்பது ஒன்றும் இலகுவானதல்ல. அதிலும் யுத்தத்தில் தங்கள் தாய் தந்தையரையும் உறவுகளையும் இழந்த சிறார்களின் மீது இச்சுமைகளை சுமத்திவிட முடியாது. இந்தச் சிறார்கள் விடயத்திலும் பாதிக்கப்பட்ட மக்கள் விடயத்திலும் தமிழ் சமூகத்திற்கு மிகப்பெரும் பொறுப்பு உண்டு. ஆனால் இலங்கையில் உள்ள தமிழ் சமூகத்தினால் இந்தப் பொறுப்புக்களை தாங்கும் வலுவில்லை. அப்பொறுப்புக்களை ஏற்கின்ற கடமைப்பாடு மேற்கு நாடுகளில் புலம்பெயர்ந்து வாழ்கின்ற பொங்கு தமிழ் கொண்டாடிய மற்றும் கொண்டாடாத தமிழ் மக்களுக்கு உண்டு.

Refugees face 150th day at sea – Grant asylum now! : Tamil Solidarity

Boat Refugees254 Sri Lankan Tamil-speaking refugees have been trapped on a tiny boat in the port of Merak in Indonesia. It will be 150 days on march 10th. We cannot let their suffering go on for longer.

Come to the protest on 10th of march -Time: 4pm-6pm
Place: The Australian High Commission, Strand, London WC2B 4LA
(corner of the Aldwych and the Strand. Nearest Tube station: Temple) (If you are working on this day, please come after work -protest will go on for long time)

Call 07908050217 if you need more informationor mail us on info@tamilsolidarity.org

They have been detained as a direct result of a request by the Australian prime minister Kevin Rudd to the Indonesian president Susilo Bambang Yudhoyono.

The refugees are threatened with being incarcerated in a horrific detention centre or sent back to Sri Lanka to face torture and death.

These refugees are demanding respect for their right to have a decent life, freedom of movement and education for their kids – very basic rights that everyone on the planet deserves.

Crammed into the boat, in the rain, they fear storms and other disasters and are under constant threat of the Indonesian navy.

Crammed into the boat, in the rain, they fear storms and other disasters and are under constant threat of the Indonesian navy.

Activists who travelled to Merak to help the refugees have been deported. Journalists and humanitarian activists have been denied access.

Currently:
No humanitarian agencies apart from the International Organisation for Migration (IOM) are allowed to visit the boat.
The IOM, which gets $12 million a year from the Australian government (as part of Australia’s ‘Indonesian Solution’) to provide humanitarian assistance to asylum seekers warehoused in Indonesia, is refusing to visit this boat.
No independent monitors, including the Indonesian Human Rights Commissioner himself, have been given access to the boat. (He visited the boat twice, in October and November 2009, and has applied for access to the boat again, but has still not received authorisation from the Indonesian Department of Foreign Affairs.)
The media is not allowed access.

People on the boat:
There are 35 children on the boat including a baby, born in the conflict area during the last stages of war in Sri Lanka, who just had its first birthday on the boat. Children cannot get sleep as they suffer from an extremely irritable rash and other skin conditions.

There are 27 women on the boat including one woman who is eight months pregnant.

Over 100 people on the boat already have UNHCR cards issued in Malaysia. Regardless the Australian and Indonesian governments refuse to accept them as refugees.

Conditions on the boat:
The boat is designed to hold 40 people and there is only one toilet.
The food supplied is unhygienic and lacks nutritional value.
Fuel for the boat is not supplied. The refugees buy a little fuel from the locals. Each person can only have a shower every two days, since the water has to be pumped onto the boat by motor.

The lack of medical facility has already resulted in one death.

Many are suffering from illness on this boat. Already 29 year-old George Jacob Samuel Christin died due to severe food poisoning and lack of proper medical facility. The authorities constantly refuse to take suffering patients to the hospital.

Those who volunteered to get off the boat:
They are like the canary in the mine. Here is what happened to them:

One man was returned to Sri Lanka with assistance from the IOM. As soon as he landed in Sri Lanka he disappeared and was found in a detention camp in Boosa Galle. Australian Refugee rights activists visiting Indonesia in December 2009 brought this to the attention of the Indonesian Foreign Ministry and the Indonesian Human Rights commission. The latest they heard from his family is that he has finally been released but the family is afraid to reveal details of this.
The others have been held inside a detention cell in Jakarta for more than two months (24 hours, seven days a week). The cell holds 12 men and is about 15 meter square. People are allowed to smoke in the cell. The food that is provided is not varied according to the health needs of the detainees.

Captain Kapil and two other Sri Lankan navy officials from the Sri Lankan Embassy in Jakarta visited this cell and interrogated these men.

Primary concerns and fears of those on the boat:
They are fearful if that if they disembark they will be placed in detention and also be interrogated by Sri Lankan government officials. Indonesian officials have threatened to forcibly remove them from the boat and deport them back to Sri Lanka. There is no protection from harassment from local police and immigration officials. There have been a number of assaults on asylum seekers by the police. Immigration officials have confiscated badly needed medicines, food supplements for the pregnant woman and other supplies provided by humanitarian workers.

கனடாவில் பொதுக் கல்விச்சபை உறுப்பினர் தெரிவு. களத்தில் வனிதா நாதன்

Vanitha_Nathanவனிதா நாதன், நீண்டகால மார்க்கம் நகரவாசியான இவர் ‘மாணவரை முதன்மைப் படுத்துவோம்” எனக்கூறி தனது தேர்தல் பரப்புரைக்காக பெற்றோரையும் மாணவரையும் நேரிற் சந்திக்கப் புறப்படுகிறார். சமூக சேவைப் பணியாளர், போதைப் பொருட்களுக்கு அடிமையான இளையோர் ஆலோசகர், பெற்றோருக்கான பயிற்றுனர், குடும்ப வன்முறைத் தீர்வு ஆலோசகர், பாதிக்கப்பட்ட பெண்களுக்கான ஆலோசகர் மற்றும் முதியோர் குழு ஒழுங்கமைப்பாளர் எனப் பல முகங்களைக் கொண்ட இவர் புறொக் பல்கலைக்கழக உளவியல் இளமானிப் பட்டதாரியாவார். வனிதா நாதன் தற்போது ‘யுத் லிங்க்” அமைப்பில் யோரக் பிரதேச சமூக சேவைகள் பிரிவிலும் யோர்க் பிரதேச குடும்ப சேவைகள் பிரிவிலும் பணியாற்றி வருகிறார். பெற்றோர், மாணவர் ஈடுபாட்டையும் புரிந்துணர்வையும் மேம்படுத்துவதன் மூலம் யோர்க் கல்விச் சபையின் 7 மற்றும் 8ஆம் பிரிவுப் பொதுக் கல்விச் சபையின் உறுப்பினரால் இப்பிரதேச மாணவரை பெரும் சாதனைகள் செய்யத் தூண்ட முடியும் என்பது இவரது அசைக்க முடியாத நம்பிக்கையாகும்.

மார்க்கம் பொதுக்கல்விச் சபை 7, 8ஆம் தொகுதி உறுப்பினர் பதவிக்குப் போட்டியிட
வேட்பாளர் பதிவை முதலாவது நாளியே மேற்கொண்ட வனிதா ‘இந்த தேர்தல் வெற்றியானது ஒவ்வொரு வீட்டிலும் தனிப்பட்ட முறையிலேயே அடையப்பட வேண்டும்” என்று தெரிவித்தார். ‘வீட்டுக்கு வீடு சென்று கல்விச் சேவைகள் தொடர்பாக பேசுவது என்பது கல்விச் சபை உறுப்பினராகத் தேர்தெடுக்கப்பட்ட பின்னர் என் ஈடுபாட்டையும் கடின உழைப்பையும் எடுத்துக் காட்டுவதாக அமையும்” என்று அவர் மேலும் தெரிவித்தார்.

கல்விச் சபையின் கூட்டங்களில் கலந்து கொள்வது மட்டுமே ஒரு கல்விச் சபை உறுப்பினரின் கடமையாக அமைந்துவிட முடியாது என்பதை உறுதிப்படுத்தவும் பெற்றோரினதும் மாணவரதும் குரலாய் ஒலித்திடவுமே நான் இப் பதவிக்குப் போட்டியிடுகிறேன். இப்பதவி சமூகத்திற்கு எத்தனை முக்கியமானது என்பதை உணர்ந்து அர்பணிப்போடு செயற்படுவேன்.

வனிதாவின் தேர்தற் பரப்புரையானது குடும்பங்களோடு கல்விச் சபைகளின் தொடர்பாடல் மிகவும் சிறப்பானதாகவும் ஆக்கபூர்வமானதாகவும் இருக்க வேண்டும் என்பதில் முக்கிய கவனம் செலுத்தி வருகிறது. அத்தோடு சமூகத்தின் தேவைகளையும் கருத்துக்களையும் சரியான முறையிற் பிரதிபலிப்பது கல்விச் சபை உறுப்பினரின் முக்கிய கடமையாகும் என்பது இவரின் உறுதியான எண்ணம்.

பெற்றோர் மாணவருடனான தொடர்ச்சியான தொடர்பாடல்கள் மூலம் பொதுக் கல்வியை நாம் பலமாக்குவதுடன் அதைச் சிறப்பாகச் செயற்படவும் செய்யமுடியும். ஆனால் இந்நிலையை உருவாக்க நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்.

கனடியத் தமிழ் காங்கிரஸை ஆட்டுவிக்கும் யாழ் மையவாதம் : தமிழ் காங்கிரஸ் அங்கத்தவர்

David_Poopalapillaiகனடியத் தமிழர்கள் மத்தியில் அறியப்பட்ட டேவிட் பூபாளபிள்ளையை கனடியத் தமிழ்க் காங்கிரஸில் இருந்து நிறுத்த இப்போது ஒரு பிரிவு முயல்வாதாகவும் அதற்கான இறுதிக்கட்டப் பேச்சுக்களில் கனடியத் தமிழ்க் காங்கிரஸ் இயக்குனர் சபையுடன் மேற்படி பிரிவு ஈடுபட்டு ள்ளதாகவும் தெரியவருகின்றது. இதற்கான காரணம் யாதெனில் டேவிட் பூபாளபிள்ளையே வட்டுக்கோட்டைத் தீர்மானத்திற்கு ஆதரவளிக்காமல் கனடியத் தமிழ்க் காங்கிரஸைத் தடுத்தார் என்ற குற்றச்சாட்டாகும். இந்தக் குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே நேரு குணரத்தினத்தின் துணைவரான சேந்தன் நடராஜாவும் இன்னும் சில அவர்களது சகாக்களும் டேவிட் பூபாளபிள்ளையை வெளியேற்றும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளதாக தெரியவருகின்றது.

இது பற்றித் அறியவருவதாவது வட்டுக்கோட்டை வாக்கெடுப்பிற்கு ஆதரவு தெரிவித்துக் கடிதம் தருமாறு நேரு குணரத்தினம் கனடியத் தமிழ்க் காங்கிரஸின் தலைவரான டாக்டர் சிறீரஞ்சனை வற்புறுத்தியுள்ளார். ஆனால் டாக்டர் சிறீரஞ்சன் இயக்குனர் சபையுடன் கதைத்துவிட்டு இதற்கு தாங்கள் உடன்பட முடியாது என்று தெரிவித்தார். மேற்படி முடிவானது டேவிட் பூபாளப்பிள்ளையினது முடிவ மட்டுமல்ல. அது காங்கிரஸின் இயக்குனர் சபையால் எடுக்கப்பட்ட முடிவு. அந்த இயக்குநர் சபையில் டேவிட் பூபாளபிள்ளை ஒரு அங்கத்துவர் இல்லை.

கனடியத் தமிழ் காங்கிரஸை பின்னின்று இயக்கும் நேரு குணரத்தினத்தின் இந்த முடிவுக்குக் காரணம் மட்டக்களப்பைச் சேர்ந்த டேவிட் பூபாளபிள்ளை வட்டுக்கோட்டைத் தீர்மானத்திற்கு எதிரானவர் என்பதல்ல. இது ஒரு பிரதேச வாதமே தவிர வேறொன்றுமில்லை. டேவிட் பூபாளப்பிள்ளை தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் ஆரம்பகாலங்களில் இலங்கை இராணுவத்தால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டவர். அவருடன் சிறையில் இருந்த பலரும் இன்று மேற்கு நாடுகளில் அரசியல் தஞ்சம் பெற்று வாழ்கின்றனர். அவர்கள் டேவிட் பூபாளப்பிள்ளையை அறிந்து வைத்துள்ளனர். ஆனால் அவரை நிறுத்தினால் மட்டுமே தமிழ் காங்கிரஸை இயக்க முடியும் என நேரு குணரத்தினம் அழுத்தம் கொடுப்பதாக கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

டேவிட் பூபாளப்பிள்ளை தமிழீழ விடுதலைப் புலிகளின் தீவிர ஆதரவாளராக இருந்தவர். அதற்கும் மேலாக தமிழ் மக்களின் உரிமைகளுக்காகவும் குரல்கொடுத்து வந்தவர். 2003 மார்ச்சில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்குள் ஏற்பட்ட பிளவின்போது தமிழீழ விடுதலைப் புலிகளின் மீது தனக்கிருந்த விமர்சனங்களை வெளிப்படுத்தியும் இருந்தார். இவ்வாண்டு நடுப்பகுதிவரை இடம்பெற்ற யுத்தத்திலும் விடுதலைப் புலிகள் மேற்கொண்ட நடவடிக்கைகள் தொடர்பாகவும் தனது விமர்சனத்தை வெளிப்படுத்தி இருந்தார் டேவிட் பூபாளப்பிள்ளை.

ஏற்கனவே மேலோங்கி இருந்த யாழ் மையவாதம் கருணாவின் பிளவிற்குப்பின் பிரதேசவாதத்தைக் கக்கியது ஒன்றும் ஆச்சரியப்படுவதற்கில்லை. மட்டக்களப்பு மக்களையும் போராளிகளையும் சந்தேகக் கண்ணுடன் பார்த்த யாழ் மையவாதம் அவர்கள் தங்கள் கருத்துடன் முரண்பட்டால் அல்லது விமர்சனங்களை முன்வைத்தால் உடனடியாக அவர்களுக்கு துரோகிப்பட்டம் சூட்டத் தயங்குவதில்லை. இது டேவிட் பூபாளப்பிள்ளைக்கு மட்டும் ஏற்பட்ட அனுபவமும் அல்ல.
 
நேரு குணரத்தினம் புலம்பெயர்ந்த யாழ் மையவாதத்தின் ஒரு எச்சம். உலகத் தமிழர் இயக்கம் தடை செய்யப்பட்ட போது நேரு குணரத்தினத்தை காண முடியவில்லை. நேரு குணரத்தினத்திற்கு உள்ள ஒரே தகுதி வீரகத்தி மணிவண்ணன் எனப்படும் புலிகளின் வெளிநாட்டுப்பிரிவு கஸ்ரோவுடன் ஒன்பதாம் வகுப்புவரை ஒன்றாகப் படித்தவர் என்பது மட்டுமே. 1981ம் ஆண்டு தென்னாபிரிக்காவிற்கு தனது தந்தையுடன் சென்ற நேரு குணரத்தினம் 1983ல் சென்னை லயோலாக் கல்லூரியில் 2 வருடங்கள் படித்தார். 1986ல் கனடாவிற்குப் புலம்பெயர்ந்தவர்.

எனக்கு திரு. நக்கீரன் தங்கவேலு தனிப்பட்ட ரீதியில் எழுதிய கடிதத்தில் தாங்கள் வைத்திருந்த கனடியத் தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பே 1998ல் அரசியல் காரணங்களிற்காக தமிழ்க் காங்கிரஸ் என்று பெயர் மாற்றம் செய்யப்பபட்டதாக எனக்குத் தெரிவித்திருந்தார்.

ஆனால் நான் இதனைத் தீர விசாரித்ததில் மேற்படி கனடியத் தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பில் தர்மலிங்கம் மாஸ்ரர், தங்கவேலு ஐயா போன்றோர் பொறுப்பாக இருந்த காலத்தில் அதன் நிகழ்ச்சிகளிற்காக நேருவிடம் கொடுக்கப்பட்ட நிதிக்கான கணக்கு வழக்கு கொடுக்கப்படாததே அதை நிறுத்தியதற்குக் காரணம் என்பதை சம்பந்தப்பட்டவர்களே தெரிவித்தார்கள்.

மேற்படி அமைப்பினhல் பெரியளவில் நடத்தப்பட்ட 1998 இராப்போசன விருந்து நடத்துவதற்காக 50,000 முற்பணமாக நேருவால் பெறப்பட்டதாகவும், அந்த விருந்திற்கு 65 டொலர்கள் பிரகாரம் 700 மேற்பட்ட டிக்கட் விற்கப்பட்டு மண்டபம் நிறைந்த விருந்தாக இது நடந்ததாகவும் அத்தோடு விளம்பரத்தாரர்களிடம் இருந்து பணம் பெற்றப்பட்டதாகவும் ஆனால் முற்பணமாக வேண்டப்பட்ட பணமோ அல்லது அந்த விருந்திற்காக செய்யப்பட்ட கணக்கு வழக்கோ 2003ம் ஆண்டு வரை நேரு தரவில்லையென்று அப்போதைய நிதிப்பொறுப்பாளர் தெரிவித்தார்.

அதேபோல இனப்பிரச்சினைத் தீர்வு சம்பந்தமான சர்வதேச மாநாட்டை நடத்துவதற்கென 36,000 டொலர்கள் பெறப்பட்டதாகவும் இந்த மாநாட்டிற்கென பெறப்பட்ட நிதிக் கணக்குகளையோ அல்லது விளம்பர அனுசரணைகளையோ 2003ம் ஆண்டு வரை சமர்ப்பிக்கவில்லையென்றும், வொண்டர் லாண்டில் இடம்பெற்ற தமிழர் நாள் நிகழ்வுகளிற்கு வாங்கப்பட்ட முற்பணம் ஏதும் திருப்பித் தரப்படவில்லையென்றும் இதுவே அந்த கனடியத் தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பைக் கலைத்து கனடியத் தமிழ்க் காங்கிரஸை உருவாக்க உண்மையான காரணம் என்றும் சம்பந்தப்பட்டவர்கள் தெரிவித்தார்கள்.

கணக்குக் கேட்டு நெருக்கடி கொடுத்த கணக்காளரும் நிதிப்பொறுப்பாளரும் கஸ்ரோவால் அவரது வெளிநாட்டுப் பொறுப்பாளர்களாலும் நிறுத்தப்பட நேரு தனது வேலையைத் தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறார் என்றே அவர்கள் கூறினார்கள். இதனை நிரூபிப்பதற்கு நிதிப்பொறுப்பாளர்களாக இருந்தவர்கள் தங்காள் தயாரென்கிறார்கள். இல்லையென்பதற்கு நக்கீரன் ஐயா போன்றோர் தயாரா?

நேரு குணரத்தினம் போன்றவர்களிள் புற அழுத்தங்களுக்கு கனடியத் தமிழ் காங்கிரஸ் பணிந்து டேவிட் பூபாளப்பிள்ளையை வெளியேற்றினால் கனடியத் தமிழ்க் காங்கிரஸ் பிரதேசவாதத்தை ஆதரிக்கும் வடக்கு கிழக்குத் தமிழர்களைப் பிரித்தாழ முயற்சிக்கும் ஒரு அமைப்பாகவே கருதப்பட்டு எம் போன்றவர்களின் உறுப்புரிமையை இழக்கும்.

தமிழர்கள் சமாதானத்தைப் பெற மேயர் ரொபின் வேல்ஸ் பொங்கல் வாழ்த்து!!!

Mayor_and_Cllr_Pongal_14Jan10”இலங்கைத் தமிழர்களுக்கு கடந்த ஆண்டு மிகுந்த நெருக்கடியான ஆண்டு. எதிர்வரும் ஆண்டுகளில் அவர்கள் சமாதானத்தைப் பெறவேண்டும்” என நியூஹாம் மேயர் ரொபின் வேல்ஸ் இன்று தெரிவித்தார். லண்டனில் மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஒரே மேயரான ரொபின் வேல்ஸ் இன்று (டிசம்பர் 14) நியூஹாமில் இடம்பெற்ற பொங்கல் நிகழ்வில் கலந்து கொண்டு இதனைத் தெரிவித்தார். இன்றைய நிகழ்வில் நியூஹாம் பிரதான வீதியான ஹைஸ்ரீற் நோத்தில் உள்ள அலங்கார விளக்குகளை ஏற்றி வைத்து உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

உலகிலேயே அதிகமாக பல்வேறு இனத்தவர்கள் இணைந்து வாழ்கின்ற  நகரமாக நியூஹாம் உள்ளது எனக் குறிப்பிட்ட மேயர் இங்குள்ள 86 வீதமான மக்கள் மகிழ்ச்சியுடன் வாழ்வதாகக் குறிப்பிட்டார். தமிழ் மக்கள் நியூஹாமிற்கு வழங்கியுள்ள பங்களிப்பையிட்டு தான் மகிழ்ச்சி அடைவதாகத் தெரிவித்த மேயர் இன்றைய பொங்கல் நிகழ்வில் கலந்துகொள்வதையிட்டு பெருமைப்படுவதாகவும் தெரிவித்தார்.

இந்நிகழ்வின் ஏற்பாட்டாளரான கவுன்சிலர் போல் சத்தியநேசன் உரையாற்றுகையில் தமிழ் மக்கள் பிரித்தானியாவுக்கு கணிசமான அளவில் வர ஆரம்பித்து 25 ஆண்டுகள் ஆகின்றது என்றும் நியூஹாம் தமிழ் மக்களுக்கு இருப்பிடம் வழங்கவில்லை அவர்களுக்கு உன்னதமான வீடாகி உள்ளது என்று தெரிவித்தார். தமிழ் மக்கள் இதுவரை அனுபவித்த துயரங்கள் நீங்கி எதிர்காலத்தில் அவர்கள் சமாதானத்துடன் வாழ்வதற்கு வழியேற்படும் என அவர் தெரிவித்தார்.

Mayor_Pongal_14Jan1075 பேர்வரை கலந்துகொண்ட இந்நிகழ்வின் இறுதியில் பொங்கல் சிற்றுண்டிகள் பரிமாறப்பட்டது. ஐரோப்பாவிலேயே பல்லினங்கள் நெருக்கமாகவும் பெரும்பான்மையாகவும் வாழும் நகரமாக நியூஹாம் அமைந்துள்ளது. வீதியால் பயணித்தவர்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டு பொங்கல் சிற்றுண்டிகளைச் சுவைத்து மகிழ்ந்தனர்.

கடந்த 10 ஆண்டுகளாக இந்நிகழ்வு தொடர்ச்சியாக இடம்பெற்ற போதும் தனிப்பட்ட கோபதாபங்களுடன் சில விசமத்தனமான பிரச்சாரங்களும் இடம்பெற்றுவருவது குறிப்பிடத்தக்கது. இவற்றையெல்லாம் மீறியும் இந்நிகழ்வு இடம்பெற்று வருவது இதன் சிறப்பம்சம். இந்நிகழ்வில் கலந்துகொள்ள வேண்டாம் என்று கேட்டு தனக்கு 5 தொலைபேசி அழைப்புகளிற்கு மேல்வந்ததாக கலந்துகொண்ட ஒரு வர்த்தகர் தேசம்நெற் க்குத் தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில்  ”நாங்கள் எல்லாவற்றிற்கும் எதிராகவே செயற்பட்டு பழகிவிட்டோம். இப்போது பொங்கலுக்கும் எதிராக நோட்டிஸ் விடுகிற அளவுக்கு வந்துவிட்டோம்” எனச் சலிப்புடன் தெரிவித்தார்.

இந்நிகழ்வுக்கு எதிராக விடப்பட்ட துண்டுப் பிரசுரம்:

நியூஹாம் வாழ் தமிழ் உறவுகளே!
உங்களுக்குத் தெரிந்தவை தான்
முள்ளிவாய்க்காலில் நடந்தேறிய
மரண ஓலங்கள்
உயிர்ப்பலிகள்
கற்பழிப்புகள்
பொருளாதாரத் தகர்ப்புகள்
இன்றும் முட்கம்பித் தடுப்பு முகாமில்
ஏதும் இன்றி நிற்கதியாகத்
தவிக்கும் தமிழ் உறவுகள்…..

தொப்புள் கொடி உறவுகளே!
இவைகளை நாம் எளிதில் மறந்துவிட முடியுமா?
இன்றைய காலகட்டத்தில் இனம்சார்ந்த குதூகல வைபவங்கள் எங்களுக்கு வெறுப்பெற்றவில்லையா?

இந்த நிலையில் தமிழ் தேசியத்திற்கு தொடர்ச்சியாகத் துரோகம் இழைப்பவர்களால் 14.01.2010 இல் பொங்கல் விழா என்ற பெயரால்  நடைபெறவுள்ள கொண்டாட்டம்  எங்களுக்கு அவசியம் தானா?

இனமான உணர்வுடன்  நிதானமாகச் சிந்திக்கும் ஒவ்வொரு தமிழரும் இந்தக் கொண்டாட்டத்தை பகிஸ்கரிப்பார்கள் என்பது நிச்சயம்.

சிந்தியுங்கள் அன்பான
நியூஹாம் தமிழ் உறவுகளே!

இதற்குப் பின்னாலுள்ள நபர்கள் தங்கள் சுய விளம்பரத்திற்காக தமிழ் மக்களின் அவலங்களைப் பயன்படுத்திக் கொள்வதாகக் குற்றம்சாட்டிய கவுன்சிலர் போல் சத்தியநேசன் இவ்வாறான சமூகப் பீடைகள் தவிர்க்க முடியாமல் ஒவ்வொரு சமூகத்திலும் காணப்படுவதாகவும் இவர்களை உதறிக்கொண்டு சமூகம் தன் பயணத்தைத் தொடரும் என்றும் தேசம்நெற்க்குத் தெரிவித்தார்.

இன்றைய பொங்கல் நிகழ்வில் நியூஹாம் வர்த்தகர்கள் பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் சமய ஸ்தாபனங்கின் பிரதிநிதிகள் எனப் பல்வேறு தரப்பினரும் கலந்துகொண்டனர்.

._._._._._.

ஈஸ்ற்ஹாமில் 10வது ஆண்டாக பொங்கல் விளக்குகள் ஏற்றப்பட உள்ளன

Paul_Sathyanesan_Cllrதமிழ் மக்கள் செறிந்து வாழுகின்ற நகரமான ஈஸ்ற்ஹாமில் 10வது ஆண்டாக பொங்கல் விளக்குகள், வியாழக்கிழமை 14ம் திகதி மாலை 4 மணிக்கு ஏற்றப்பட உள்ளன. மத வேறுபாடுகளுக்கு அப்பால் உலகத் தமிழ் மக்கள் ஒன்றாகக் கொண்டாடும் விழாவாக தமிழர் விழாவாக தைப்பொங்கல் அமைந்துள்ளது. ஈஸ்றஹாம் பொங்கல் விழாவின் போது ஈஸ்ற்ஹாம் நகரபிதா தெருவிளக்குகளை ஏற்றி வைப்பார்.

கடந்த 10 ஆண்டுகளாக ஈஸ்ற்ஹாம் நகரசபையின் அணுசரனையுடன் கவுன்சிலர் போல் சத்தியநேசன் இந்நிகழ்வை ஏற்பாடு செய்து நடாத்தி வருகின்றார். வழமை போல் இம்முறையும் இந்து கிறிஸ்தவ இஸ்லாம் மதப் பிரதிநிதிகளும் இந்நிகழ்வில கலந்து சிறப்பிப்பார்கள் என கவுன்சிலர் சத்தியநேசன் தெரிவித்தார்.

ஈஸ்ற்ஹாம் மகாலட்சுமி ஆலயம் முன்பாக உள்ள தெரு வெளியில் மக்கள் ஒன்றாகக் கூடி மேளவாத்தியத்துடன் நகரபிதாவால் தெருவிளக்குகள் ஏற்றி வைக்கப்படும். அனைத் தொடர்ந்து நகரபிதாவினதும் மற்றும் சிலரினதும் சிற்றுரைகளும் இடம்பெற்று பொங்கல் சிற்றுண்டிகள் பரிமாறப்படும்.

இவ்வாண்டும் வழமைபோன்று இலங்கையிலும் உலகிலும் சமாதானத்தை வேண்டி இப்பொங்கல் விளக்குகளை ஏற்றி வைப்போம் என ஏற்பாட்டாளர் கவுன்சிலர் போல் சத்தியநேசன் தெரிவித்தார்.

சென்ற ஆண்டில் நாட்டில் நிலவிய யுத்தநிலையைக் காரணம் காட்டிச் சிலர் இந்நிகழ்வை இடைநிறுத்த முற்பட்ட போதும் சமாதானத்துக்காக நடாத்தப்படும் இந்நிகழ்வை கவுன்சிலர் சத்தியநேசன் தொடர்ந்தும் நடாத்தி வருகின்றார்.

இந்நிகழ்வு சிறிய அளவில் இடம்பெற்றாலும் உலகத் தமிழர்களின் உழைக்கு மக்களின் இந்நிகழ்வை ஐரோப்பிய நாடோன்றில் தொடர்ச்சியாக நடாத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

பொங்கல் தொடர்பாக கவுன்சிலர் சத்தியநேசன் வெளியிட்ட பொங்கல் செய்தியில் ”உலகத் தமிழர்களின் தினமான பொங்கல் நாளில் சமாதானமும் அமைதியும் மலர்ந்து அனைவரும் இன்புற்றிருக்க அனைவருக்கும் எனது தைப்பொங்கல் வாழ்த்துக்கள்!!!”  எனத் தெரிவித்துள்ளார்.

நீதன் சண் ஸ்காபரோ நகரசபை உறுப்பினருக்கான வேட்பாளராக அறிவிக்கின்றார்

Neethan_Shanஸ்காபரோ ஒன்ஸ நீண்டகால  சமூகச் செயற்பாட்டாளரும் பொதுப்பாடசாலை அறங்காவலருமான நீதன் சண், இன்று தொகுதி 42இன் நகரசபை உறுப்பினருக்கான வேட்புமனுவை நகர மண்டபத்தில் தாக்கல் செய்தார்.

ரொறன்ரோ மாநகரில் நன்கு அறிமுகமான சமூகத் தலைவரான நீதன் சண் ஸ்காபரோ ரூச் றிவர் வதிவாளர்களை தான் நகரசபையில் திறம்பட பிரதிநிதித்துவப் படுத்துவேன் என நம்புகின்றார். வேட்பாளராக அறிவித்த, நீதன் சண்இ “42ஆம் தொகுதிக்கு தேவையான அங்கிகாரத்தையும், வளங்களை கொண்டு சேர்ப்பதற்காகவும், வதிவோரிடையேயும், நகரசபையிடையேயும் உரிய தொடர்பாடலை ஏற்படுத்தவுமே, நான் இத்தொகுதியில் போட்டியிடுகின்றேன்” எனச் சுறுசுறுப்புடன் குறிப்பிட்டார்.

நீதன் சண் ஸ்காபரோவில் கடந்த பத்தாண்டுகளாக கல்வி, குழந்தைகள், இளையோர் வேலை, வேலை வாய்ப்பு, குடிவரவு, வறுமைக் குறைப்பு உள்ளடங்கிய பல துறைகளிற் பணியாற்றியுள்ளார்.  இருபதுக்கும் கூடிய பாடசாலைகளில் மாலை நேர நிகழ்ச்சித்திட்டத்தை உருவாக்குவதில் முக்கிய பங்காற்றியுள்ளார். அவரது குமுகத்தில் அவர் ஆற்றிய சேவை பல திட்டங்களும் அமைப்புக்களும் தொடக்கப்படுவதற்கும், வலுப்பெறுவதற்கும் வழியமைத்தது.

அவர் தேர்வாகியதும், நகரசபை அரசை இன்னமும் அணுகவும், விளங்கவும், நம்பவும், அனைவரும் அணுகவும் கூடியதாக அமைப்பார். நீதன் தனது பத்தாண்டுக்கு மேலான சமூக மேம்பட்டுப் பட்டறிவைக் கொண்டு நகரசபை, தொகுதி 42இன் ஒவ்வொரு வதிவாளருக்குமாக உழைப்பதை செய்வதை ஆவன செய்வார். நீதன் 21ஆம் நூற்றாண்டில் எமது தலைமைத்துவத்துக்குத் தேவையான சமநிலையைக் வழங்குபவர். அவர் நான்கு ஆண்டுகள் தேர்ந்தெடுக்கப்பட்ட அலுவலராக அரசியற் பட்டறிவையும், அத்தோடு புதிய தலைமுறைக்கு உரித்தான புதுமை, ஆக்கம், மற்றும் உற்சாகத்தையும் கொண்டுள்ளார்.

நீதன் சண்ணுக்கு ஆதரவு வழங்கி வந்த நீண்டகால மல்வேர்ன் வதிவாளரான திரு. நடா விஜயபாலன் குறிப்பிடுகையில், “இச்சுற்றாடலுக்குத் தலைமை மாற்றம் தேவையானது, தொகுதி 42இன் வதிவாளர்கள், நகரம் எவ்வாறு செயற்படுகின்றது என்பதில் ஈடுபாடு காட்ட உரிய வாய்ப்புக் கிடைப்பதற்கு இப்பொதாவது காலம் கனியவேண்டும்.” எனத் தெரிவித்தார்.

தெற்காசிய சமுகங்கள் நீதன் சண், ஒக்டோபர் 25, 2010இல், ரொறன்ரோ மாநகரில், இளைய தெற்காசிய நகரசபை உறுப்பினராகி ஒரு வரலாறு படைப்பார் என்று எதிர்பார்க்கின்றார்கள். தற்போதைய நகரசபையில் உள்ள 44 உறுப்பினர்களில் ஒருவர் கூட தெற்காசியர் இல்லை. நீதன் தேர்வாகிய பின், ரொறன்ரோ நகரசபைக்குத் தேர்வாகும் முதற் தமிழரும் ஆவார்.

நீதன் சண் ரொறன்ரோப் பல்கலைக்கழகத்தில்  அறிவியல் (science) மற்றும் கல்வியில் (education) என இரண்டு இளங்கலைப் பட்டங்களைப் பெற்றுள்ளார். தற்போது அவர் சமூககவியலில் (sociology) மற்றும் ஒப்புரவில் (equity) கலை முதுகலைப் பட்டத்தை நிறைவுசெய்கின்றார். தெற்காசிய சமூகங்களுக்குச் சேவையாற்றும் CASSA  எனும் அமைப்பில் நிறைவேற்று இயக்குநராகப் பணியாற்றுகின்றார். நீதன் சண் ஆசிரியர், குமுக சேவை அமைப்பின் நிறைவேற்று இயக்குநர்இ வானொலி, தொலைக்காட்சி ஒலிபரப்பாளர் மற்றும் சமூகத் தேவை மற்றும் பாதிப்புப் பற்றிய ஓரு நிகழ்ச்சித் தொகுப்பாளர் என்று பல சவாலான பாத்திரங்கள் ஏற்றுள்ளார். அவர் பல ரொறன்ரோ சமூக அமைப்பின் முக்கிய நபர் விருது, நகரகக் கூட்டமைபின் இனத் தொடர்பாடல் விருது முதலான விருதுகளால் சிறப்பிக்கபட்டுள்ளார். மேய்றீ நிறுவனமும் மற்றத்துக்கான தலைவர்கள் நிகழ்ச்சித்திட்டத்தை நிறைவு செய்ததற்காக சிறிப்பித்தது.

நீதன் சண்ணும் அவரது ஆதரவாளரும் பிறின்சஸ் பாங்குவற் மண்டபத்தில் தங்களது ஒன்றுகூடலை ஞாயிற்றுக்கிழமை, சனவரி 10, 2010 ஒழுங்கு செய்துள்ளார்கள். கூடுதல் விவரங்களுக்கோ, நீதனுடனான ஊடக நேர்காணலுக்கோ, ஊடக ஒருங்கிணைப்பாளர் பிரகால் திருவைத் 416-727-3034 என்ற எண்ணூடாகவோ நீதன் சண்ணை 416-824-3399 என்ற எண்ணூடாகவோ அல்லது info@neethanshan.ca என்ற மின்னஞ்சலூடாகவோ தொடர்புகொள்ளலாம்.