::யுத்த நிலவரம்

::யுத்த நிலவரம்

இலங்கையில் நடைபெறும் யுத்தம் தொடர்பான செய்திகள், கட்டுரைகள், ஆய்வுகள்.

ஏ-35 பாதையை கைப்பற்றும் தாக்குதல் தொடர்கிறது

SL_Army_in_Killinochieதாக்குதல் படையணியான 58வது டிவிசன் படையினர் ஏ-35 (பரந்தன் -முல்லைத்தீவு) வழியே மேற்கிலிருந்து கிழக்கை நோக்கி நேற்று (ஜன:11) தாக்குதல் நடத்தி குறிப்பிடத் தக்க தூரத்தை முன்னேறியுள்ளனர் என பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

நேற்றுப் பகல் பொழுதில் முரசுமோட்டை மற்றும் வட்டக்கச்சி பகுதிகளுக்கு வடக்காக எஞ்சியிருக்கும் எல்ரிரிஈ மறைவிடங்களை தேடி அழிக்கும் பனியில் ஈடுபட்டு வந்தனர்.

முரசுமோட்டைப் பகுதியில் தாக்குதல் நடத்திய படையினர் 4 பயங்கரவாதிகளின் சடலங்களையும் இரு ரி-56 ரக துப்பாக்கியையும் வட்டக்கச்சிப் பகுதியில் தாக்குதல் நடத்திய படையினர் மூன்று பயங்கரவாதிகளின் சடலங்களையும் கைபற்றியுள்ளதாக களநிலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பளை, சோரன்பற்று பிரதேசங்களிலிருந்து 53 பேர் யாழ்ப்பாணத்திற்கு இடம்பெயர்வு

civillians_.jpgவன்னிப் பகுதியில் இடம்பெற்றுவரும் போர் நடவடிக்கை காரணமாக பளை, சோரன்பற்று மற்றும் வடமராட்சி கிழக்குப் பகுதியில் இருந்து 53 பேர் இடம்பெயர்ந்து நேற்று சனிக்கிழமை யாழ்ப்பாணத்துக்கு வந்துள்ளனர். யாழ்.வருகைதந்துள்ளவர்கள் அனைவரும் கோப்பாய் ஆசிரிய கலாசாலையில் அமைந்துள்ள புனர்வாழ்வு நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

பளை பகுதியில் இருந்து வந்தவர்கள் மிகவும் நோய்வாய்ப்பட்ட நிலையில் காணப்பட்டதால் அவர்களை மருத்துவ பரிசோதனைக்கு யாழ்.போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளதாக யாழ்.மாவட்ட அரச அதிபர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, வடமராட்சி கிழக்கு பகுதியிலிருந்து கடல் வழியாக வள்ளங்களில் வந்த 33 பேரை கடற்படையினர் கைதுசெய்து பருத்தித்துறைப் பொலிஸாரிடம் ஒப்படைத்தனர். பொலிஸார் பருத்தித்துறை மாவட்ட நீதிமன்றில் ஆஜர்படுத்தியிருந்தனர். இவர்களைத் தங்க வைப்பதற்குரிய நடவடிக்கையை மாவட்ட செயலகம் எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பளை மற்றும் வடமராட்சி கிழக்கு பகுதியில் இருந்து வந்தவர்களில் நான்கு கைக்குழந்தைகள் உள்ளடங்குவதாகவும் இதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்வர்கள் அடங்குவதாகவும் தெரியவருகின்றது.

பிரபாகரனை சிங்கள இராணுவத்தால் ஒருநாளும் பிடிக்க முடியாது: யாழ். எம்.பி் பத்மினி

patmini.jpgபறவைகள் சரணாலயம்’ என பொருள்தரும் கிளிநொச்சியை புலிகளிடம் இருந்து கைப்பற்றியபின் உற்சாகத்தின் உச்சியில் இருக்கிறது சிங்கள இராணுவம். `விரைவில் பிரபாகரனையும் பிடித்து விடுவோம்’ என்று கொக்கரித்துள்ளார், இலங்கை அதிபர் மகிந்தா ராஜபக்ஷ. ஆனால், “ஈழத்தமிழர்களின் தலைவராக இருக்கும் பிரபாகரனை சிங்கள இராணுவத்தால் ஒருநாளும் பிடிக்கமுடியாது” என்கிறார், யாழ்ப்பாணத் தமிழ் எம்.பி.யான பத்மினி சிதம்பரநாதன்.

சில நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக சென்னை வந்திருந்த அவர் நமக்களித்த பிரத்தியேக பேட்டி.

ஈழத்தில் தற்போதைய போர் நிலவரம் என்ன?

“இலங்கை நாடு சிங்களவர்களுக்கு மட்டும்தான் என்ற அடிப்படையில் ஓர் இனத்தையே (தமிழ் இனத்தையே) சிங்கள அரசு அழித்து வருகிறது. கிளிநொச்சி பகுதியிலுள்ள அனைத்து தமிழர்களையும் அது புலிகளாகவே பாவிக்கிறது. யாழ்ப்பாணத்தில் முழத்திற்கு முழம் சோதனைச் சாவடிகளை அமைத்து தமிழ் மக்களிடம் சோதனை நடத்தி வருகிறது. ஈழப்போரில் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு உதவ நினைக்கும் சமூக சேவகர்களை இலங்கை இராணுவம் கடத்துகிறது. ஈழத் தமிழர்கள் `செயலற்றவர்களாக’ இருக்க வேண்டும் என்பதே சிங்கள அரசின் ஆசை.

ஈழத்தின் வன்னிப் பகுதியில் அகதிகளாக இடம் பெயர்ந்த மக்கள் ஓலைக்கீற்றுகளால்தான் குடில் அமைத்துத் தங்க வேண்டும் என்று சிங்கள அரசு நிர்ப்பந்தப்படுத்துகிறது. மேற்கூரைக்கு பிளாஸ்டிக் அல்லது சிமெண்ட் ஷீட் பயன்படுத்த அவர்களுக்கு அனுமதியில்லை. தமிழ் அகதிகளுக்காக தமிழக அரசு உணவுப் பொருள்களைக் கொடுத்தனுப்பியதால், உலக உணவுத்திட்டம் (டபிள்யூ.எஃப்.பி) கொடுத்தனுப்பிய உணவுப் பொருள்களை இலங்கை அரசு திருப்பியனுப்பி, அதன் மூலம் அந்நியச் செலாவணியைச் சம்பாதித்துள்ளது.

தமிழர் வாழும் பகுதிகளில் தினமும் ஆயிரம் கிலோ எடை கொண்ட வெடிகுண்டுகளை சிங்கள இராணுவம் வீசுகிறது. அவை சில இடங்களில் முப்பதடி ஆழம் வரை பள்ளம் தோண்டி அதனால் நிலத்துக்கடியிலிருந்து தண்ணீர்கூட வந்து விடுகிறது. இதுபோக சர்வதேச அளவில் தடைசெய்யப்பட்ட கிளஸ்டர் (கொத்து) குண்டுகளையும் இலங்கைப்படை வீசுகிறது. இந்தக் குண்டுவீச்சுகளுக்குப் பயந்து தங்கள் சொந்த இடங்களை விட்டு வெளியேறிய தமிழர்கள் நான்கு இலட்சத்து அறுபதாயிரம் பேர் இன்று நான்கு ஊர்களில் மிகநெருக்கமாக வாழும் நிலை உள்ளது. இதுதான் இலங்கைப் போரின் இப்போதைய நிலை.”

கிளிநொச்சியை சிங்கள இராணுவம் கைப்பற்றியது புலிகளுக்குப் பின்னடைவுதானே?

“அப்படிச் சொல்ல முடியாது. தங்கள் தற்காப்புக்காக புலிகளும், மக்களும் கைவிட்டுச் சென்ற இடங்களைத்தான் சிங்கள இராணுவம் கைப்பற்றியுள்ளது. கிளிநொச்சியில் இருந்து புலிகள் பின்வாங்கிச் சென்றது, அவர்களின் போர்த்தந்திரமாக இருக்கலாம்.”

மக்களை கேடயமாகப் பயன்படுத்தத்தான் பிரபாகரன் அவர்களை முல்லைத்தீவுக்கு அழைத்துச் சென்றிருப்பதாக குற்றம் சாட்டுகிறார்களே?

“அப்படியெதுவும் இல்லை. கிளிநொச்சிப் பகுதி தமிழர்களின் அடையாள அட்டையை வைத்து, அவர்களை புலிகளாகவே சிங்கள இராணுவம் பார்க்கிறது. அத்தியாவசிய மருந்துகளை வாங்க அருகிலுள்ள பகுதிகளுக்குக் கூட மக்கள் நிம்மதியாகச் சென்று வர முடியாத நிலை உள்ளது.

மன்னார் பகுதியில், சிங்கள முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள தமிழர்களின் நிலை என்ன? அவர்கள் கிட்டத்தட்ட இராணுவக் கட்டுப்பாட்டில் சிறைக்கைதிகள் போலத்தான் உள்ளனர். முள்வேலிகளுக்கு நடுவில் அவர்கள் வைக்கப்பட்டுள்ளனர். ஈழத் தமிழர்களுக்கு சிங்கள இராணுவம் உரிய பாதுகாப்பு, சுதந்திரம் தந்தால் அவர்கள் ஏன் புலிகளுடன் செல்ல வேண்டும்?”

ஈழப்பிரச்னையில் இந்திய அரசு எந்த விதத்தில் உதவ வேண்டும் என எதிர்பார்க்கிறீர்கள்?

“இந்தியாவில் உள்ள தமிழர்களுக்கும், ஈழத் தமிழர்களுக்கும் தொப்புள்கொடி உறவு உள்ளது. இதனால்தான் அங்கே துப்பாக்கிச் சத்தம் கேட்டால், இங்குள்ள தமிழர்கள் துடிக்கிறார்கள். தமிழகத்தில் உள்ள தமிழர்கள், ஈழ மக்களுக்காக பல்வேறு போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகிறார்கள். அவர்கள் இந்திய அரசுக்கு மேலும் அழுத்தம் தந்து ஈழத் தமிழர்களின் சுய உரிமைகளையும், அவர்களுக்கான அங்கீகாரத்தையும் இந்திய அரசின் மூலம் பெற்றுத்தர வேண்டும். அவர்களால்தான் அது முடியும்.”

`பிரபாகரனைப் பிடித்து இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும்’ என காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் வீரப்ப மொய்லி கூறியிருக்கும் போது, இந்தியஅரசிடம் இருந்து ஆதரவு கிடைக்கும் என்று எப்படி எதிர்பார்க்கிறீர்கள்?

“ஈழத் தமிழர்களுக்குச் சுதந்திரம் கிடைத்தால்தான் அவர்களால் சுதந்திரமாக சுவாசிக்க, யோசிக்க, முடியும். உலக ரீதியாக சுதந்திரத்தை மதிப்பவர்கள் யாரும் ஈழ மக்களின் சுதந்திரத்தையும் மறுக்க முடியாது. அந்த அடிப்படையில் பார்த்தால், ஈழ மக்களுக்கு சுதந்திரம் பெற்றுத்தரும் வல்லமை உடைய அமைப்பு விடுதலைப்புலிகள் அமைப்புதான். எனவே ஈழத்து மக்களின் அபிலாஷையை நிறைவேற்ற இந்தியாதான் உதவி புரிய வேண்டும்.”

தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜியை இலங்கைக்கு அனுப்ப பிரதமர் ஒப்புக்கொண்டார். தற்போது பிரணாப் முகர்ஜி வருவதை இலங்கை விரும்பவில்லை. இந்தநிலையில் அழையா விருந்தாளியாக அவர் எப்படி இலங்கை செல்வது என மத்திய அரசு கூறியுள்ளதே?

“கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு எங்களது அழைப்பை ஏற்று பிரணாப் முகர்ஜி இலங்கை வர இருக்கிறார் என்று இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் ரோகித பொகொல்லகம அறிவித்திருந்தாரே!”

தமிழர் பகுதியில் சிங்கள இராணுவத்தின் முன்னேற்றத்துக்கு புலிகளிடம் இருந்து பிரிந்து சென்ற கருணா அமைத்துக் கொடுக்கும் வியூகமும் ஒரு காரணம் என்று நினைக்கிறீர்களா?

“அப்படி நினைக்கவில்லை. ஏழை நாடான இலங்கைக்கு சர்வதேச அளவில் பல நாடுகள் உதவி புரிகின்றன. இலங்கைக்கு பாகிஸ்தான் ஆயுத சப்ளை செய்கிறது. சிங்கள இராணுவத்திற்கு இந்திய அரசும் தொழில்நுட்ப உதவி புரிவதாகக் கூறப்படுகிறது.”

பிரபாகரனை எப்படியும் பிடித்துவிடுவோம் என்று சிங்கள ராணுவம் கூறிவருகிறதே?

“கடந்த முப்பது வருடங்களாக சுதந்திர தாகத்தோடு சிங்கள இராணுவத்தினரை எதிர்த்து புலிகள் போராடி வருகிறார்கள். மக்களும் அவர்களது அனுபவ தந்திரத்தால் சிங்கள இராணுவத்தின் குண்டுமழையில் இருந்து தப்பித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த குண்டுவீச்சு இலட்சக்கணக்கான தமிழர்களை இன்று ஒரே இடத்தில் குவித்துள்ளது. புலிகளின் தலைவராக உள்ள பிரபாகரனை ஒருநாளும் பிடிக்க முடியாது.”என்றார் பத்மினி சிதம்பரநாதன்.
 
நன்றி:குமுதம்

முல்லைதீவை கைப்பற்ற 50 ஆயிரம் துருப்புக்கள். புலிகளின் சகல விநியோகப் பாதைகளும் துண்டிப்பு; – இராணுவத் தளபதி

kili-05.jpgமுல் லைத்தீவை புலிகளிடமிருந்து முழுமையாக விடுவிக்கும்நோக்குடன் ஒன்பது படைபிரிவுகளைச் சேர்ந்த ஐம்பது ஆயிரம் இராணுவ வீரர்கள் முன்னேறி வருவதாக இராணுவத் தளபதி லெப்டினன்ற் ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்தார். புலிகளின் சகல விநியோக பாதைகளும்முழுமையாக துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தற்பொழுது அந்தப் பிரதேசத்தில் படை நடவடிக் கைகளை படையினர் முன்னெடுத்துள்ளதுடன் பாரிய தேடுதல் நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருவ தாகவும் குறிப்பிட்டார். அத்துடன், இராணுவத்தின் 53, 55, 57, 58, 59வது படைப் பிரிவுகளும் முதலாவது இரண்டாவது முன்றாவது மற்றும் நான்காவது செயலணியினருமே முல்லைத்தீவை நோக்கி தொடர்ந்தும் முன்னேறி வருவதாகவும் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை, முள்ளியவளைக்கு மேற்கு பகுதியை நோக்கி முன்னேறிய படையினர் சகல வசதிகளையும் கொண்ட புலிகளின் பாரிய பயிற்சி முகாம் ஒன்றையும் கோவில் காடு பகுதியிலுள்ள புலிகளின் முக்கிய கட்டளைத்தளம் ஒன்றையும் படையினர் முழுமையாக கைப்பற்றியுள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார குறிப்பிட்டார்.

இந்தப் பகுதியிலுள்ள புலிகளின் பாதுகாப்பு முன்னரங்கு நிலைகளை நோக்கி முன்னேறிய படையினர் அங்குள்ள பாரிய பயிற்சி முகாமைக்கைப்பற்றியுள்ளனர். 11 கொங்கிரீட் பதுங்கு குழிகளை கொண்ட இந்த பாரிய முகாமில் 75 அடி நீளமும் 50 அடி அகலமுமான பிரதான மண்டபம், 35 அடி நீலம் 20 அடி அகலமான பாரிய  கொங்கிரீட் பங்கர். 200 அடி நீளம் 100 அடி அகலமான சாப்பாட்டு அறை, 35 அடி நீளம் 25 அடி அகலமுமான சமையல் அறை மற்றும் 35 அடி நீளம் 30 அடி அகலமான காரியாலய கட்டிடம் ஒன்றும் அமையப் பெற்றுள்ளது.

மூன்று கொங்கிரீட் பங்கர்களுடனான கட்டளைத் தளம் ஒன்றையும் கோவில்காடு பகுதியில் கைப்பற்றி யுள்ளனர். இந்த முகாமின் உட்புறத்தில் பெருந்தொகை யான வாகனங்கள் நிறுத்த வசதியான தரிப்பிடம் என்றும் தொலைத்தொடர்பு பரிமாற்ற நிலையமொன் றும் அமையப்பெற்றுள்ளதாக பிரிகேடியர் குறிப்பிட்டார்.

நாகர்கோயிலும் படை வசமானது

SL_Army_in_Killinochieவட மராட்சி கிழக்கில் நாகர்கோயில் பகுதியையும் கிளிநொச்சியில் வட்டக்கச்சி கிழக்குப் பகுதியையும் படையினர் தம்வசம் கொண்டு வந்துள்ளனர் என்று படைத்தரப்பு நேற்றுத் தெரிவித்தது. வட்டக்கச்சி மற்றும் இரணைமடுப் பகுதிகளில் கடும் மோதல்கள்  இடம்பெற்று வருகின்றன என்று மேலும் தெரிவிக்கப்பட்டது.
 
 

இலங்கை அரசு இராணுவத் தீர்வை நோக்கிச் செல்கின்றது. நாங்கள் அரசியல் தீர்வினையே விரும்புகின்றோம். – பா. நடேசன்

nadesan.jpgஎமது மக்களின் அரசியல் விருப்பங்களை நிறைவு செய்யக்கூடிய அரசியல் தீர்வினையே நாங்கள் விரும்புகின்றோம் என விடுதலைப் புலிகள் அமைப்பின் அரசியல் பிரிவுத் தலைவர் பா. நடேசன் தெரிவித்துள்ளார்.  இது குறித்து இந்தியாவிலிருந்து வெளிவரும் பிரதான பத்திரிகைகளுள் ஒன்றான தினமணியின் கேள்விகளுக்கு நடேசன் அளித்துள்ள சிறப்பு பேட்டி விபரம் வருமாறு:

கேள்வி: மக்கள் யாரும் இல்லாத, வெறிச்சோடிக் கிடந்த கிளிநொச்சியைத்தான் இலங்கை இராணுவம் பிடித்துள்ளது என்கிறார்களே, ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்ட தமிழ் மக்களை கிளிநொச்சியிலிருந்து அழைத்துச் செல்லும் பணியை எவ்வளவு நாட்களாக செய்தீர்கள்?

பதில்: கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக இலங்கை இராணுவத்தின் ஆக்கிரமிப்புகளை தமிழ் மக்கள் சந்தித்து வருகிறார்கள். அதுபோன்ற நேரங்களிலும் உயிரைப் பாதுகாத்துக் கொள்வதற்காக உடுத்திய உடையோடு, எல்லா உடைமைகளையும் விட்டுவிட்டு, இடம்பெயர்ந்த வரலாறு பல உண்டு. வன்னி நிலப்பரப்பில் இராணுவ நடவடிக்கையை எங்கள் மக்கள் சந்திப்பதும் இது முதல் தடவையல்ல. இலங்கை இராணுவம் ஆக்கிரமித்த பகுதிகளில் சிங்களப் படையினர் எத்தகைய சித்திரவதைகள், படுகொலைகள், கற்பழிப்புகள் செய்வார்கள் என்பது தமிழ் மக்களுக்கு நன்றாகவே தெரியும். ஆகவே இராணுவம் எப்போது வரும்? எவ்வாறு வரும்? என்பதை எங்கள் மக்கள் நன்கு அறிவார்கள். அதற்கேற்ப இம்முறை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஓரிரு நாட்களுக்குள்ளேயே முழு உடைமைகளுடனும், மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர்ந்து சென்றுள்ளனர். அவர்கள் எதிர்பார்த்த சகல உதவிகளையும் நாங்கள் செய்து வருகிறோம்.

logo.gifகேள்வி: அவர்கள் காடுகளில் தங்கியுள்ளதாகவும், உடல் நிலை மோசமாகி தினமும் பலர் உயிரிழப்பதாகவும் கூறப்படுகிறதே, அது உண்மையா?

பதில்: இடம்பெயர்ந்த மக்களை பாதுகாப்பான இடங்களில் குடியமர்த்தியுள்ளோம். சிறு கிராமங்கள், காடுகள் என எல்லா இடங்களிலும் குடியேற்றியுள்ளோம். இலங்கை அரசின் பொருளாதாரத் தடை காரணமாக மருந்துப் பொருட்கள் கிடைக்கவில்லை. எனவே பாம்புக் கடிகள், தொற்றுநோய்கள் என எல்லா கொடுமைகளையும் எமது மக்கள் சந்தித்து வருகின்றனர். மிகவும் சிரமப்பட்டு அவர்களை பாதிப்பிலிருந்து காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறோம்.

கேள்வி: ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் குடில்களில் வசிக்கிறார்களா? வெட்ட வெளியில் உள்ளார்களா? அவர்களுக்கு உணவு, உடை, குடிநீர், மின்சாரம் போன்ற அடிப்படைத் தேவைகளை எவ்வாறு அளித்து வருகிறீர்கள்?

பதில்:  ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் தற்போது குடிசைகளிலும், தாற்காலிக கூடாரங்களிலும், மர நிழல்களிலும் வாழ்ந்து வருகின்றனர். இங்கு இடம்பெயர்ந்த மக்களுக்கு மின்சாரம் என்ற பேச்சுக்கே இடமில்லை. குப்பி விளக்குகளிலும், காட்டில் நெருப்புகளை மூட்டியும் மக்கள் தமக்கு வேண்டிய வெளிச்சத்தைப் பெறுகின்றனர். தற்காலிக கிணறுகள், குளங்களிலிருந்து எடுக்கப்படும் நீரை, எமது சுகாதாரப் பிரிவினரின் அறிவுறுத்தல்படி கொதிக்க வைத்து பருகி வருகின்றனர். உணவைப் பொறுத்தமட்டில், ஐ.நா. சபையின் உலக உணவுத் திட்டத்தால் வழங்கப்படும் உணவுகளையும், உள்ளூர் உற்பத்திகளில் சேகரித்து வைத்த உணவுகளையும் உண்டு வருகின்றனர். பெரிய சிரமங்களுக்கும், சவால்களுக்கும் மத்தியில் எங்கள் மக்கள் உணவு, உடை, குடிநீர் ஆகியவற்றைப் பெற்று வருகின்றனர்.

கேள்வி: கிளிநொச்சியில் தற்போது கட்டடங்கள் அனைத்தும் தரைமட்டமாகக் கிடக்கின்றன. மின்சாரம், குடிநீர் விநியோகம் எதுவும் இல்லை. கிளிநொச்சியை காலி செய்யும் முன் நீங்களே அழித்துவிட்டு சென்றதாகக் கூறப்படுகிறதே. இது உண்மையா?

பதில்:  இது முற்றிலும் பொய்யான பிரசாரமாகும். இலங்கை விமானப் படையின் குண்டு வீச்சுக்களாலும், ஷெல் (பீரங்கிக் குண்டு) வீச்சுக்களாலும் கட்டடங்கள் தரைமட்டமாகியுள்ளன. நேரில் சென்று பார்ப்பவர்களுக்கு இது நன்றாகப் புரியும்.

கேள்வி: தமிழ் மக்கள் கிளிநொச்சியை விட்டு முன்னரே வெளியேறி விட்டார்கள் என்றால், தமிழக அரசு அனுப்பிய நிவாரணப் பொருட்கள் யாருக்கு போய்ச் சேர்ந்தது?

பதில்:  முல்லைத்தீவு, மன்னார், கிளிநொச்சியை ஒட்டிய பிரதேசங்களில், மக்கள் இடம்பெயர்ந்து சென்று வாழ்கின்ற இடங்களில் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தினரால் நிவாரணப் பொருட்கள் விநியோகிக்கப்பட்டன. எமது பிரதேசத்தில் இயங்குகின்ற சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தினர் எங்களுடன் மிகவும் நெருக்கமாகவும், அந்நியோன்னியமாகவும் செயல்பட்டு வருகின்றனர். இதனால் மக்களுக்கு நிவாரணப் பொருட்களை எளிதாக விநியோகிக்க முடிகிறது.

கேள்வி: விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் உடல் நிலை மோசமாக உள்ளதாகவும், அவர் விரைவில் வெளிநாட்டுக்கு தப்பிச் செல்வார் என்றும் தொடர்ந்து செய்திகள் வருகின்றன. உண்மை நிலை என்ன?

பதில்:  அவர் மிகவும் தேக ஆரோக்கியத்துடன் இருந்து போராட்டத்தை வழிநடத்தி வருகிறார். இலங்கை அரசுக்கு ஆதரவான ஊடகங்களே இவ்வாறு பொய்யான பிரசாரத்தை மேற்கொண்டு வருகின்றன.

கேள்வி: இலங்கை இராணுவத்துக்கு இந்திய இராணுவம் உதவி வருவதாகக் கூறப்படுவது உண்மையா?

பதில்:  பல ஊடகங்கள், குறிப்பாக கொழும்பு ஊடகங்கள் இவ்வாறான செய்திகளை வெளியிட்டு வருகின்றன.

கேள்வி: கிளிநொச்சியை மீண்டும் மீட்போம் எனக் கூறுகிறீர்கள். கிளிநொச்சியிலிருந்து இலங்கை இராணுவத்தை விரட்டுவது அவ்வளவு எளிதானதா?

பதில்: இங்குள்ள தமிழ் மக்கள் அனைவரும் எங்களுடன் உள்ளனர். அது மட்டுமல்ல. ஒட்டுமொத்த உலகத் தமிழ் இனத்தின் தார்மிக ஆதரவும் எங்களுக்கு உள்ளது. இதுவே எங்கள் பலம். இந்த பலத்தின் மூலம் நாங்கள் இழந்த ஒவ்வொரு அங்குல நிலத்தையும் மீட்போம் என்ற நம்பிக்கை எங்களுக்கு உண்டு.

கேள்வி: இலங்கை இனப் பிரச்சினையில் தமிழக அரசியல் கட்சிகளின் அணுகுமுறை மற்றும் செயல்பாடு குறித்து தங்கள் கருத்து என்ன?

பதில்:  எங்கள் விடுதலைப் போராட்டத்திற்காக அரசியல் மாறுபாடுகளை மறந்து, குரல் கொடுப்பது எங்களுக்கு மட்டற்ற மகிழ்ச்சியையும், எழுச்சியையும் கொடுக்கின்றது.

கேள்வி: இந்திய அரசின் நிலைப்பாடு குறித்து தங்கள் கருத்தென்ன?

பதில்:  இந்திய அரசினுடைய, இந்திய மக்களுடைய வரலாற்று ரீதியான நண்பர் யார்? பகைவன் யார்? என்பதை இந்திய அரசு புரிந்து கொள்ள வேண்டும். நாங்கள்தான் இந்தியாவின் வரலாற்று ரீதியான நண்பன் என்பதனை கூறிக்கொள்ள விரும்புகிறேன். இந்தியாவுக்கு நம்பிக்கைக்குகந்த நண்பனாக இலங்கை அரசு என்றைக்குமே நடந்து கொள்ளவில்லை. இதற்குப் பல்வேறு ஆதாரங்களைக் கூறமுடியும்.

கேள்வி: போர் நிறுத்த உடன்படிக்கை முறிய விடுதலைப் புலிகளே காரணம் என இங்குள்ள காங்கிரஸ் கட்சியினர் கூறி வருவது உண்மையா?

பதில்:  போர் நிறுத்த உடன்படிக்கை முறிந்ததற்கு இலங்கை அரசே காரணம். போர் நிறுத்தத்திலிருந்து விலகுவதாக அவர்கள்தான் முதலில் அறிவித்தனர். நாங்கள் ஒருபோதும் அவ்வாறு செய்யவில்லை. இப்போதும் போர் நிறுத்த உடன்படிக்கை ஒன்று உருவானால் அதனை வரவேற்க நாங்கள் தயாராக உள்ளோம்.

கேள்வி: ஈழத் தமிழர் பிரச்னைக்கு எத்தகைய தீர்வை எட்ட முடியும் என நம்புகிறீர்கள்? அதற்குத் தங்களிடம் எத்தகைய திட்டம் உள்ளது?

பதில்:  எமது மக்களின் அரசியல் விருப்பங்களை நிறைவு செய்யக்கூடிய அரசியல் தீர்வினையே நாங்கள் விரும்புகின்றோம். இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், நோர்வே போன்ற நாடுகள் அரசியல் பேச்சுவார்த்தைகள் வழியாகவே இனப் பிரச்னைக்கான தீர்வை காண முடியும் என கூறி வரும் நேரத்தில், இலங்கை அரசு எங்கள் மீது தடை விதித்துள்ளது. இலங்கை அரசு இராணுவத் தீர்வை நோக்கிச் செல்கின்றது என்பதையே இது எடுத்துக்காட்டுகிறது. இது சிங்கள அரசின் அப்பட்டமான தமிழின விரோதப் போக்கிற்கு சிறந்த எடுத்துக்காட்டாகும்.என்றார் நடேசன்.

நன்றி: தினமணி

கிளேமோர் குண்டுத் தாக்குதல் 7 பேர் பலி

morawawa_.jpg
திருகோணமலை மாவட்டத்திலுள்ள மொரவேவா நெலுவ பிரதேசத்தில் கிளேமோர் குண்டுத் தாக்குதல் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாகத் இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார்.

இத்தாக்குதலில் மூன்று விமானப்படை அதிகாரிகளும் 4 பொதுமக்களும் பலியாகியுள்ளனர் எனவும் 6 பேர் காயமடைந்துள்ளதாகவும்  விமானப்படையின் டிரக் வண்டி ஒன்றை இலக்குவைத்தே இக்கிளேமோர் குண்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

பளை வீழ்ந்தது

_army.jpgபுலிகளின் மற்றுமொரு முக்கிய பிரதேசமான பளை பிரதேசத்தை பாதுகாப்பு படையினர் நேற்று கைப்பற்றியுள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார்.

முகமாலை மற்றும் கிளாலி பிரதேசங்களிலிருந்து முன்னேறி வந்த இராணுவத்தின் 53 வது மற்றும் 55 வது படைப்பிரிவினர் பளை பிரதேசத்தை தமது பூரண கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். இராணுவத்தின் 53 வது படைப்பிரிவின் கட்டளைத் தளபதி பிரிகேடியர் கமல் குணவர்தன தலைமையிலான படையினரும், 55 வது படைப்பிரிவின் கட்டளைத் தளபதி பிரிகேடியர் பிரசன்ன சில்வா தலைமையிலான படையினருமே பளை நகரையும் அதன் சுற்றுப்புறத்தையும் முழுமையாக கைப்பற்றியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

முகமாலைக்கும் ஆனையிறவுக்கும் மத்தியில் அமைந்துள்ள பளை பிரதேசம் ஒரு பாரிய நகரமாகும். முகமாலை மற்றும் கிளாலி பகுதிகளிலுள்ள புலிகளுக்கான பிரதான விநியோக பாதையாகவும், புலிகளின் ஆட்டிலறி தளமாகவும் பளை விளங்கியதாக தெரிவித்த பிரிகேடியர், தற்பொழுது அந்தப் பிரதேசம் கைப்பற்றப்பட்டுள்ளதன் மூலம் படையினருக்கு இருந்த அச்சுறுத்தல் நீங்கி உள்ளதாகவும் தெரிவித்தார்.

படையினரின் கடுமையான தாக்குதல்களை அடுத்து புலிகள் தொடர்ந்தும் பின்வாங்கி வருவதாக தெரிவித்த இராணுவப் பேச்சாளர் பளையிலிருந்து ஆனையிறவை நோக்கிய படை முன்னகர்வுக்கு 14 கிலோ மீற்றர் தூரமே எஞ்சியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

கொழும்பிலிருந்து 280 வது கிலோ மீற்றர் தொலைவில் அமைந்துள்ள பளை, முகமாலைக்கும், ஆனையிறவுக்கும் இடையில் அமைந்துள்ள ஒரு முக்கிய பிரதேசமாகும். தென்னை செய்கைக்கு பெயர்போன பிரதேசமாகவும் இது விளங்கியுள்ளது. ஏ-9 யாழ். – கண்டி பிரதான வீதிக்கு அண்மித்த பகுதியிலுள்ள பளை பிரதேசத்தில் ஆனையிறவுக்கும் கொடிகாமத்திற்கும் இடையிலான ரயில் நிலையம் ஏற்கனவே இருந்தது. பளை பிரதேசத்தில் தமது நிலைகளை பலப்படுத்தி வரும் பாதுகாப்பு படையினர் சோரண்பற்று பிரதேசத்தை நோக்கி முன்னேறி வருவதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவிக்கிறது.

இதேவேளை, யாழ். – கண்டி ஏ-9 பிரதான வீதி எந்தவேளையிலும் படையினரின் பூரண கட்டுப்பாட்டின் கீழ் வரும் நிலையில் உள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன்ற் ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். யாழ். – கண்டி ஏ-9 பிரதான வீதியின் ஒவ்வொரு பகுதிகள் மாத்திரம் இதுவரை காலமும் படையினரின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்து வந்தது. முழுமையான கட்டுப்பாட்டின் கீழ் வரவுள்ள முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும் என்றும் தெரிவித்துள்ளார்.
 
 

பளையை நோக்கி படையினர் தொடர்ந்தும் முன்னேற்றம் -தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையம்

army.jpgமுகமாலையில் புலிகளின் முன்னரங்கு பாதுகாப்பு நிலைகளைக் கைப்பற்றியுள்ள படையினர் தொடர்ந்தும் தெற்குநோக்கி கடும் தாக்குதல்களைத் தொடுத்தவாறு முன்னேறி வருவதாக தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையம் தெரிவித்தது. முகமாலையில் 600 மீற்றர் தூரத்தைக் கைப்பற்றிய படையினர் பளையை நோக்கி தொடர்ந்தும் முன்னேறி வருகின்றனர்.

யாழ் – கண்டி ஏ – 9 வீதியில் தெற்கு நோக்கி முன்னேறும் படையினர் இந்த வீதியை தமது முழுமையான கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருவதற்கு இன்னமும் 20 கிலோமீற்றர் தூர பிரதேசத்தைக் கைப்பற்ற வேண்டியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வவுனியா ஓமந்தையிலிருந்து கிளி நொச்சி ஆனையிறவு தெற்குப் பிரதேசம் வரை ஏ-9 வீதி படையினரின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது.

இந்நிலையில் வடமுனையிலிருந்து ஆனையிறவு நோக்கி இராணுவத்தின் 53 ஆம், 58ஆம் படைப்பிரிவினர் முன்னேறி வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் காலையும், மாலையும் இடம்பெற்ற மோதல்களில் புலிகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதுடன் அவர்களின் மூன்று சடலங்களையும் கைப்பற்றியதாக தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தின் பேச்சாளர் தெரிவித்தார். இதில் இராணுவத்திற்குச் சிறு சேதம் ஏற்பட்டதாகவும் அவர் கூறினார்.  

புலிகள் மீண்டும் எழுச்சி பெறுவதென்பது வெறும் பகல்கனவாகவே இருக்கும் – இராணுவத் தளபதி கூறுகிறார்

sarath-fonseka.jpg
பிரபாகரன் தலைமையிலான விடுதலைப் புலிகள் மீண்டும் எழுச்சி பெறுவார்கள் என்பது வெறும் பகல் கனவாகவே இருக்குமென இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். கிளிநொச்சி வெற்றி தொடர்பாக தொலைக்காட்சிகளுக்கு ஒரே நேரத்தில் செவ்வாய்க்கிழமை வழங்கிய விஷேட பேட்டியியொன்றிலேயே ஜெனரல் சரத் பொன்சேகா இவ்வாறு கூறியிருக்கிறார்.

அதில் அவர் மேலும் கூறுகையில்; “புலிகளிடமிருந்து கிழக்கு வீழ்ந்த போது தற்காலிக பின்னடைவு என்றார்கள். துணுக்காய், மல்லாவி படையினர் வசமானபோதும் தற்காலிக பின்னடைவு என்றனர். கிளிநொச்சியை படையினர் நெருங்கும் போது, அது “மரணத்தின் முத்தம்’ என வர்ணித்தார்கள். கிளிநொச்சியை பிடிப்பது என்பது ஜனாதிபதியன் பகல் கனவென புலிகள் கூறினர். எனினும், நாம் கிளிநொச்சியையும் பிடித்திருக்கிறோம். எனவே, இவை அனைத்தையும் தற்காலிக பின்னடைவு என்று கூற முடியாது. கட்டுப்பாட்டில் இருந்த நிலப் பிரதேசத்தில் 90 சதவீதமான பகுதிகள் இழக்கப்படுமானால் அதை தற்காலிக பின்னடைவென்றோ அல்லது தந்திரோபாய பின்வாங்கலென்றோ கூற முடியாது. இது 10 அல்லது 20 சதவீதமாக இருந்திருந்தால் தந்திரோபாய பின்வாங்லென கூற முடியும்.

பிரபாகரன் மீண்டும் எழுச்சி பெறுவாரென்பது சிலரது கனவாக இருக்கிறது. அது தான் பகல் கனவாக இருக்குமென நான் நம்புகிறேன். இதேநேரம், கடந்த இரண்டரை வருட கால யுத்தத்தில் 15 ஆயிரம் புலிகள் கொல்லப்பட்டுள்ளனர். இதில் கிழக்கில் 2 ஆயிரம் புலிகளும் யாழ்.குடாநாட்டில் யுத்தத்தில் 1,500 புலிகளும் வடக்கில் ஏனைய 11 ஆயிரத்து 500 புலிகளும் கொல்லப்பட்டுள்ளனர். இந்த காலப்பகுதியில் சுமார் 2 ஆயிரம் படையினர் உயிரிழந்திருக்கின்றனர். பெரியதொரு கெரிலா இயக்கத்துடன் யுத்தம் புரியும்போது உயிரிழப்புகளும் காயங்களும் இன்றி யுத்தம் செய்ய முடியாது. யுத்தத்தின்போது கெரில்லா ஒருவரைக் கொல்ல படையினரில் 10 பேர் உயிரிழக்க வேண்டி வரும் என்பதே உலகில் பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்டதொன்றாகும். எனினும், எமது நடவடிக்கைகளை பொறுத்தவரையில் 5 கெரில்லாக்கள் சாகும்போது படையில் ஒருவரே உயிரிழக்கிறார் என்பது எமக்கு வெற்றியாகும் என்று கூறினார்.