ஏகாந்தி

ஏகாந்தி

இனப்பிரச்சினைத் தீர்வுக்கான தீர்வுத்திட்டம் மக்கள் தீர்ப்புக்கு விடப்படுமா? – ஏகாந்தி

Wanni Child2009ஆம் ஆண்டு இலங்கையைப் பொறுத்தமட்டில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு ஆண்டாக காணப்படுமென அரசியல் அவதானிகள் கருத்துத் தெரிவித்து வருகின்றனர். தற்போதைய வடமாகாண யுத்தம் மனிதாபிமான நெருக்கடியை மிகப் பாரியளவு தோற்றுவித்துள்ள நிலையில் அரசியல் தீர்வுத்திட்டம் தொடர்பான கருத்துக்களும் சர்வதேச மட்டத்தில் நெருக்கடியைக் கொடுத்துவருவதை அவதானிக்கலாம்.

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஐ.நா.வின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் இலங்கை விவகாரத்தில் ஐக்கிய நாடுகள் சபையின் நிலைப்பாடானது, இந்தியாவின் நிலைப்பாட்டை ஒத்ததாகுமென்று தெரிவித்துள்ளார். இலங்கைப் பிரச்சினை குறித்து இந்திய வெளிவிவகார அமைச்சர் பிரணாப் முகர்ஜியுடன் விரிவாகக் கலந்துரையாடியதாகக் கூறியுள்ள ஐ. நா. செயலாளர் நாயகம், இலங்கையில் சிவிலியன்கள் பாதிக்கப்படுவதைத் தவிர்ப்பதற்காக ஐ. நா. வும் இந்தியாவும் கூட்டாக செயற்பட்டு வருவதாகவும் “ரைம்ஸ் ஒப் இந்தியா” பத்திரிகைக்கு வழங்கியுள்ள பேட்டியில் தெரிவித்திருந்தார்.

“பாரிய மனிதாபிமானப் பிரச்சினை எழுவதைத் தவிர்க்க வேண்டுமானால், உடனடியாக மோதல்கள் நிறுத்தப்பட வேண்டும். ஐ. நா. வும் ஏனைய அமைப்புகளும் இதனைத் தாமதமின்றி மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட தரப்பினரைக் கேட்டுக் கொள்கின்றன” என்று தெரிவித்த பான் கீ மூன், இறுதிக் கட்டமாக, அரசியல் தீர்வொன்று எட்டப்படுமென நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இந்தியாவுக்கு ஒரு நாள் விஜயமொன்றை மேற்கொண்ட ஐ. நா. செயலாளர் நாயகம், இலங்கை விடயம் குறித்து இந்திய வெளிவிவகார அமைச்சருடன் விரிவாகக் கலந்துரையாடியுள்ளார். எவ்வாறாயினும் அரசியல் தீர்வு என்ற விடயம் இலங்கை அரசுக்கு மிகவும் கட்டாயப்பாடான நிலையென்பதை மறுப்பதற்கில்லை. அதேநேரம், இதுகாலவரை இது விடயமாக காட்டிவந்த அசமந்தப் போக்கை இனியும் காட்ட முடியாது என்பதே இலங்கை அரசும் உணர்ந்திருப்பதை அரசு சார்பில் முன்வைக்கப்படக் கூடிய சில கருத்துக்களிலிருந்து அவதானிக்க முடிகின்றது. இந்நிலையில் –

இனப்பிரச்சினைக்கான தீர்வாக மாகாண சபை முறைமையை சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழு முன்வைக்க வில்லையென்றும், சகல தரப்பினரும் ஏற்றுக்கொள்ளக் கூடிய முழுமையான அதிகாரப் பகிர்வின் அடிப்படையிலான தீர்வு வரைவினையே தயாரித்து வருவதாகவும் குழுவின் தலைவர் அமைச்சர் பேராசிரியர் திஸ்ஸவிதாரண அண்மையில் தெரிவித்திருந்தார். இந்தத் தீர்வுத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு புதிய அரசியலமைப்பொன்றை உருவாக்க வேண்டுமென்றும் அமைச்சர் கருத்து வெளியிட்டிருந்தார்.

தீர்வு வரைவின் இறுதிப்பகுதி தொடர்பாக தற்போது கட்சிப் பிரதிநிதிகளுக்கிடையில் பொது இணக்கப்பாட்டை ஏற்படுத்துவதற்கான இறுதிக்கட்டப் பேச்சு வார்த்தைகள் நடைபெற்று வருவதாகவும் கூறிய அமைச்சர் திஸ்ஸவிதாரண “தீர்வுத் திட்டத்தைத் தயாரிப்பதற்கு முன்பு 13 வது திருத்தச் சட்டம் தொடர்பாகவும் கவனம் செலுத்தப்பட்டது. ஆனால் மாகாண சபை நிர்வாக முறைமையை நாம் முன்மொழியப் போவதில்லை. முற்றிலும் புதியதொரு அதிகாரப் பகிர்வினை அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய விதத்தில் தயாரித்து வருகிறோம்” என்றும் தெரிவித்திருந்தார்.

குழுவின் கூட்டங்களை நிறைவு செய்ததும் ஐக்கிய தேசியக் கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாகக் கூறிய அமைச்சர், அதன் பின்னர் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு உள்ளிட்ட அரசியல் கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கவுள்ளதாகக் கூறினார். இந்தக் கட்சிகளின் கருத்துகளையும் உள்ளடக்கி தீர்வு வரைவினை ஜனாதிபதியிடம் கையளிக்கவுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழு 100 இற்கும் மேற்பட்ட தடவை கூடி மாகாண சபை முறைமையை இனப்பிரச்சினைக்கான தீர்வாக முன்வைக்க உள்ளதாகவும் அதிகாரப் பகிர்வு எதுவும் கிடையாதென்றும் சில ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன. இவை முற்றிலும் உண்மைக்குப் புறம்பானவை என்று அமைச்சர் உறுதியாகத் தெரிவித்தார். இங்கு அமைச்சரின் கருத்துக்களைத் தொகுத்துப் பார்க்கும்போது, 13வது அரசியல் அமைப்புத் திருத்தம் பூரணமாக நடைமுறைப்படுத்துவதை அவர் ஏற்றுக் கொண்டுள்ள போதிலும்கூட,  எதிர்நோக்கப்படும் நெருக்கடிகள் காரணமாக இதுபோன்றதொரு கருத்தை முன்வைத்திருக்கலாம் எனவும் எண்ணத் தோன்றுகின்றது.

13வது அரசியல் அமைப்புத் திருத்தத்துக்கு மேலாக வேறொன்றை வழங்கக் கூடாதென்று சில அரசியல் கட்சிகள் நெருக்கடிகளைக் கொடுத்து வருகின்றன. மறுபுறமாக பொலிஸ் அதிகாரம், காணிப் பகிர்வு அதிகாரம் போன்வற்றை வழங்கப்போவதில்லை என அரசாங்கத் தரப்பில் சில பொறுப்பு வாய்ந்த அமைச்சர்கள் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் திஸ்ஸவிதாரண குழுவினரால் முன்வைக்கப்படவுள்ள இறுதித் தீர்வுத் திட்டம் எத்தகையதாக இருக்கும் என்ற வினா பொதுவாக எழுந்துள்ளது.

மறுபுறமாக தற்போதைய யுத்த வெற்றிகளின் பின்னணியில் பெரும்பாலும் ஏப்ரல் மாதத்தில் பாராளுமன்ற பொதுத் தேர்தல் நடைபெறக்கூடிய நிகழ்தகவு இருப்பதையும் காணமுடிகின்றது. இது தொடர்பாக ‘ராவய” பத்திரிகை எதிர்வுகூறுகையில் ஏப்ரல் மாதம் 20ஆம் திகதிக்கும் 30ஆம் திகதிக்குமிடையில் பாராளுமன்றம்  கலைக்கப்படலாமென கூறியுள்ளது. இன்னும் சில ஊடகங்களின் கருத்துப்படி பாராளுமன்ற பொதுத் தேர்தல் நடைபெறும்போது இலங்கையின் இனப்பிரச்சினைக்கான நிரந்தர தீர்வொன்றுக்காக வேண்டி மக்கள் தீர்ப்பும் பெறப்படுமென கூறப்படுகின்றது.

எவ்வாறாயினும்,  இந்த நிலையைப் பொறுத்தமட்டில் அரசியல் தீர்வுத் திட்டம் என்ன என்பது மக்கள் மத்தியிலுள்ள பொதுவான கேள்வியாகும். இந்த சூழ்நிலையைப் பொறுத்தமட்டில் இன்னும் இன்னும் காலத்தை வீணடிக்காமல் அரசியல் தீர்வுத் திட்டம் தொடர்பான தெளிவானதும்,  நிலையானதுமான கருத்தொன்றை முன்வைக்க வேண்டியது அரசாங்கத்தின் கடமையாகும்.

அரசாங்கத்தின் 48 மணிநேரக்காலக்கெடு முடிவடைந்துவிட்டது. ஆழ ஊடுருவும் படை ஊடுருவுமா? – ஏகாந்தி

sl_navy.jpgஇலங்கையில் அரசாங்கத்துக்கும் விடுதலைப் புலிகளுக்குமிடையில் நடைபெற்றுவரும் யுத்தத்தில் மனிதாபிமான நெருக்கடிமிக்க ஒரு கட்டத்தில் தற்போதைய யுத்த நிலை காணப்படுகின்றது. மஹிந்த ராஜபக்ஸ அரசாங்கம் மாவிலாறில் ஆரம்பித்த எதிர்நடவடிக்கை படிப்படியாக முன்னேற்றமடைந்து இன்று விடுதலைப்புலிகளின் பலத்தை சுமார் 35 சதுர கிலோமீற்றர் பரப்புக்குள் முடக்கியுள்ளது. விடுதலைப் புலிகளின் கேந்திர முக்கியத்துவமிக்க பல இடங்களை படையினர் கைப்பற்றியுள்ள நிலையில் தற்போது முல்லைத்தீவை கைப்பற்றுவதில் அரச படையினர் முழுமூச்சாக இருப்பதாக தெரிகின்றது.

இங்கு அவதானிக்கக்கூடிய முக்கிய விடயம் விடுதலைப் புலிதரப்பில் கட்டுப்பாட்டுப் பிரதேச எல்லை சுருங்கியுள்ளதால் இப்பிரதேசத்தினுள் சிக்கியுள்ள பொதுமக்களின் நிலை என்னவாகும் என்பதாகும்.

வன்னி நிலப்பரப்பில் அகப்பட்டிருக்கும் பொதுமக்களின் எண்ணிக்கைப் பற்றி இதுவரை உத்தியோகபூர்வமான கணிப்பீடு வெளியிடப்படவில்லை. பொதுவாக 2 இலட்சத்து 50 ஆயிரம் மக்கள் இப்பிரதேசத்தினுள் இருக்கலாம் என கூறப்படுகின்றது. நேற்றைய தினம் (31) அமைச்சர் மஹிந்த சமரசிங்க முல்லைத்தீவுப் பிரதேசத்தினுள் 1 இலட்சத்து 20ஆயிரம் மக்கள் இருப்பதாக கிடைக்கும் தகவல்களின் ஊடாக உறுதிப்படுத்த முடியுமென தெரிவித்தார்.

எவ்வாறாயினும் முல்லைத்தீவுப் பிரதேசத்துக்குள் பெருமளவு பொதுமக்கள் சிக்குண்டுள்ளார்கள் என்பதில் சந்தேகமில்லை. இந்நிலையில் வன்னி நிலப்பரப்பில் மோதல் நடைபெறும் பிரதேசங்களிலுள்ள பொதுமக்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு வருவதற்கு அரசாங்கம் வழங்கிய நாற்பத்தெட்டு மணித்தியால கால அவகாசம் நேற்று இரவுடன் முடிந்தது.

palitha_koahana.jpg48 மணி நேர கெடு முடிந்ததும், ராணுவம் தாக்குதலைத் தொடங்கி விடும் என இலங்கை வெளியுறவு செயலாளர் பலித கொஹனா எச்சரித்துள்ளார் என செய்திகள் வெளிவந்துள்ளன. ஆனால் இந்த கெடுவை ஏற்று அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் மிகவும் சொற்ப எண்ணிக்கையிலான தமிழர்களே இடம் பெயர்ந்துள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.

இது பற்றி இராணுவப் பேச்சாளர் உதயநாணயக்கார தகவல் தெரிவிக்கையில்  கடந்த 48 மணி நேரத்தில் புலிகளின் பிடியிலிருந்து தப்பி வந்த 171 சிவிலியன்கள் பாதுகாப்புப் படையினரிடம் தஞ்சமடைந்துள்ளதாக  தெரிவித்தார். அதேநேரம்,  பாதுகாப்புப் படையினரால் அறிவிக்கப்பட்டுள்ள பாதுகாப்பு வலயத்தை நோக்கி பொது மக்கள் வருகை தந்துள்ளனரா இல்லையா என்பது தொடர்பாக தகவல்கள் இதுவரை கிடைக்கப் பெறவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

விசுவமடு பிரதேசத்தை நோக்கி நேற்றுக் காலை 16 குடும்பங்களைச் சேர்ந்த 63 சிவிலியன்கள் இராணுவத்தினரிடம் தஞ்சமடைந்துள்ளனர். இவர்களில் 38 ஆண்களும், 25 பெண்களும் அடங்குவதாகவும் அவர் குறிப்பிட்டார். இதேவேளை, முல்லைத்தீவு வலைமடு பிரதேசத்திலிருந்து புல்மோட்டையை நோக்கி 43 சிவிலியன்கள் கடற்படையினரிடம் தஞ்சமடைந்துள்ளனர்.

43 சிவிலியன்களில் 16 சிறுவர்களும், 14 ஆண்களும், 13 பெண்களும் அடங்குவதாகவும் அவர் குறிப்பிட்டார். இரு சிறிய ரக படகுகள் மூலமே இவர்கள் வருகைத் தந்துள்ளதாகவும் பிரிகேடியர் சுட்டிக்காட்டினார். இதேவேளை, வவுனியா, ஓமந்தைச் சோதனைச் சாவடியை நோக்கி 35 குடும்பங்களைச் சேர்ந்த 65 சிவிலியன்கள் நேற்று முன்தினம் அதிகாலை 6 மணி முதல் மாலை 6 மணி வரையான நேரத்திற்குள் வருகை தந்துள்ளனர். இந்த 65 சிலியன்களில் 12 சிறுமிகள், 10 சிறுவர்கள், 34 பெண்கள் மற்றும் 9 ஆண்களும் அடங்குவதாகவும் இராணுவப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார். இந்த நிலையில், 48 மணி நேர கெடு முடிந்துள்ள நிலையில் இராணுவம் மீண்டும் தாக்குதலைத் தொடங்குமிடத்து பொதுமக்களின் பாதுகாப்பு பெரும் கேள்விக்குறியாகியாகிவிக் கூடிய நிலையுள்ளதுடன்,  ராணுவம் நடத்தப் போகும் கடும் தாக்குதலில் சிக்கி பெருமளவில் உயிரிப்புகள் ஏற்படும் அபாயமும் அதிகரித்துள்ளது.

முல்லைத்தீவில் புதுக்குடியிருப்பு, விஸ்வமடு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் யுத்தம் நடைபெறுகின்றது. பரந்தன் முல்லைத்தீவு வீதியில் A35 மையமாக வைத்தே நடைபெறும் இந்த யுத்தம் முடிவுக்கட்டத்தை நெருங்கிவிட்டதாக படைத் தரப்பு கூறுகின்றது. 15 கிலோமீற்றர் X 15 கிலோமீற்றர் பரப்பளவில் புலிகள் உள்ளதாகவும் கருத்துக்கள் தெரிவிக்கப்படும் அதேநேரத்தில் இப்பகுதியினுள்ளே பொதுமக்களை கேடயங்களாக புலிகள் பயன்படுத்தி வருவதாகவும் அரச தரப்பு அறிவிக்கின்றது.

தற்போது புலிகளின் வசம் எஞ்சியிருக்கும் முக்கிய நகரான புதுக்குடியிருப்பை பிடித்துவிடவே படையினர் முயல்கின்றனர். இந்த நகரையும் கைப்பற்றி விட்டால் A35 வீதியையும் கைப்பற்றி புலிகளுக்கான கடைசி விநியோகப் பாதையையும் மூடிவிட முடியும் என கருதுகின்றனர். அத்துடன்,  புலிகளின் பகுதியையும் மிகவும் குறுகளாக்கி A35 வீதிக்கு வடக்கே செவ்வகம் போன்றதொரு பகுதிக்குள் முடக்கிவிட வேண்டுமென கருதுவதால் எட்டுத் திக்கிலிருந்தும் தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளனர்.

அதேநேரம் விடுதலைப் புலிகள் கடல் மார்க்கமாக தப்பிச் செல்வதைத் தடுப்பதற்காகவும், முல்லைத்தீவு கடற்பரப்பில் தங்கள் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளனர். அதிவேக டோறா பீரங்கிப் படகுகள், தாக்குதல் படகுகள், விரைந்து தாக்குதலை நடத்தும் படகு அணிகள் என முல்லைத் தீவு முதல் வட மேற்கே சாலை வரையான கடற்பரப்பு பலத்த பாதுகாப்பு வலயமொன்றை அமைத்துள்ளனர். தரையில் தற்போது படையினர் புலிகளின் பகுதியை U வடிவில் சுற்றி வலைத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

Protest_UK_Jan31எனவே இலங்கையின் களநிலைகள் இவ்வாறிருக்க முன்னெப்போதுமில்லாத வகை சர்வதேச ரீதியில் தமிழ் மக்களின் உணர்வலைகள் ஒன்றிணைந்து வெளிப்படுவதையும் காணக்கூடியதாகவுள்ளது. ஆனாலும்,  இத்தகைய கவனயீர்ப்பு நடவடிக்கைகளினால் இலங்கை அரசாங்க நடவடிக்கைகளுக்கு பாரிய தாக்கங்கள் ஏற்படுவதை காணமுடியவில்லை.

banki-moon.jpgசிலதினங்களுக்கு முன்பே ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் பங்கிமூங் வெளியிட்டிருந்த கருத்துக்களைப் பார்க்கும்போது வன்னியில் சிவிலியன்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பாதுகாப்பு வலயமொன்றை அறிவித்தமையை பான் கீ மூன் வரவேற்றிருந்தார்.

மோதல் நடைபெறும் பகுதிக்குள் சிக்குண்டுள்ள மக்களின் நிலை குறித்த அச்சம் நாளுக்கு நாள் அதிகரித்துவரும் நிலையில் அங்குள்ள மக்கள் பாதுகாப்பாக வெளியேறுவதற்கான வழிகளை உறுதிப்படுத்துமாறு இலங்கை இராணுவத்தினருக்கும்,  விடுதலைப் புலிகளுக்கும் ஐ.நா.பொதுச் செயலாளர் பான்கீ மூன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

எனினும் போர்நிறுத்தத்திற்கான சர்வதேசத்தின் அழைப்புகளுக்கு மத்தியிலும் வெற்றியில் கவனத்தைக் குவித்து இலங்கை இராணுவம் தொடர்ச்சியாக நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.  இந்நிலையில், தங்களுக்கு பாதுகாப்பான இடம் எதுவென்று மக்கள் உணருகிறார்களோ அங்கு செல்வதற்கு மக்களை அனுமதிக்கவேண்டுமென விடுதலைப்புலிகளைக் கோரியுள்ள ஐ.நா.செயலர், மோதல் நடைபெறும் பகுதிகளிலிருந்து வெளியேறும் மக்கள் சர்வதேச நடைமுறைமைகளுக்கேற்ப நடத்தப்படுகிறார்கள் என்பதை இலங்கை அரசு உறுதிப்படுத்த வேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளார்.

அத்துடன் வன்னி மக்கள் பாதுகாப்பாக வெளியேறுவதற்கான வழிவகைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அறிவித்துள்ளபோதிலும் அங்குள்ள மக்களின் நிலை குறித்து தான் தொடர்ந்தும் கவலையடைவதாக பான் கீ மூன் தெரிவித்துள்ளார்.

மேலும், சர்வதேச மனிதாபிமான சட்டங்களின் பிரகாரம் மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் வெளியேறுவதற்கான பாதுகாப்பு வழிமுறைகளை உண்மைத் தன்மையுடன் ஏற்படுத்தவும் தம்மால் இயன்ற அனைத்தையும் விடுதலைப் புலிகளும் அரசாங்கமும் மேற்கொள்ளவேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளார்.

இதுதவிர, விரும்பிய இடங்களுக்கு மக்கள் செல்வதற்கான சுதந்திரத்தை உறுதிப்படுத்தும் அதேவேளை, மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றுவதற்கு மனிதாபிமான அமைப்புகள் முழு அளவில் செயற்படுவதற்கு அனுமதிக்கப்பட வேண்டுமெனவும் கேட்டுள்ளார்.

இதேவேளை, இலங்கையின் நிலைவரம் மிகவும் துக்ககரமாக இருப்பதாகத் தெரிவித்துள்ள அமெரிக்க அரச திணைக்களம், பாதிக்கப்பட்ட மக்களுக்கு தம்மால் இயன்ற உதவிகளை வழங்குவதற்கான முயற்சிகளை ஐ.நா.வின் உதவி அமைப்புகளுடன் இணைந்து அமெரிக்கா மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளது. அரச திணைக்களத்தில் செய்தியாளர்களுக்கு விளக்கமளிக்கும் நாளாந்த நிகழ்வின் போது எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே இதனைத் தெரிவித்த திணைக்களத்தின் பேச்சாளர்களில் ஒருவரான ரொபேர்ட் வூட், மோதல்கள் விரைவில் முடிவுக்கு வருமென அமெரிக்கா நம்புவதாகவும் தெரிவித்தார்.

unicef_2301.jpgஇந்நிலையில், மோதல் பகுதிக்குள் சிக்குண்டுள்ள சிறுவர்களின் நிலை மிகவும் மோசமடைந்திருப்பதாகத் தெரிவித்துள்ள ஐ.நா. சிறுவர் பாதுகாப்பு நிதியம் (யுனிசெப்), கொல்லப்படும் அல்லது காயமடையும் சிறுவர்களின் தொகை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகத் தெரிவித்துள்ளது.  மேலும் இங்கு நடைபெறும் மோதல்களால் சிறுவர்கள் கொல்லப்படுவது குறித்தும் காயமடைவது குறித்தும் தங்களிடம் தெளிவான ஆதாரங்கள் இருப்பதாக யுனிசெப்பின் தென்னாசியாவுக்கான பிராந்திய பணிப்பாளர் டானியல் ரூல் தெரிவித்துள்ளார்.

மேலும் எந்தவொரு சூழ்நிலையிலும் பாடசாலைகள் மற்றும் மருத்துவ நிலையங்கள் என்பன பாதுகாப்பு வலயங்களாக கருதப்படவேண்டுமெனத் தெரிவித்துள்ள அவர், மோதல் பகுதிக்குள் ஆயிரக்கணக்கான சிறுவர்கள் சிக்கியிருப்பது குறித்து தாம் மிகுந்த கவலையடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.  இப் பகுதிகளில் இருக்கும் சிறுவர்களின் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்கப்படவேண்டுமெனவும் யுனிசெப் அரசாங்கத்தையும் விடுதலைப் புலிகளையும் கேட்டுள்ளது.

redcrose2801.jpgமோதல்கள் காரணமாக காயமடைந்து வன்னிப் பிரதேசத்தின் மீட்கப்படாத பிரதேசங்களில் சிக்கியிருக்கும் பொது மக்களை அரச கட்டுப்பாட்டு பகுதிக்கு கொண்டு வருவது தொடர்பில் சர்வதேச செஞ்சிலுவை சங்க குழு (ஐ.சி.ஆர்.சி) அரசாங்கத்துடனும் விடுதலைப் புலிகளுடனும் தொடர்ந்தும் கலந்துரையாடி வருவதாக தெரிவிக்கின்றது.  அரச கட்டுப்பாடற்ற பகுதியில் மேலதிக வைத்திய உதவி தேவைப்படும் மக்கள் பெருமளவில் உள்ளனர். இந்நிலையில் அவசர சிகிச்சை தேவைப்படுகின்ற இவர்களுக்கு உதவுவது அவசியமானதென்று சர்வதேச செஞ்சிலுவை சங்கம் இரு தரப்பினரையும் வலியுறுத்தியுள்ளதாகவும் அச்சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் சரசி விஜயரட்ண தெரிவித்தார்.

குறிப்பாக மோதல்கள் நடைபெற்றுவரும் முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேசத்திலேயே பெருமளவு பொதுமக்கள் ஷெல் தாக்குதல்களால் படுகாயமடைந்து உரிய வைத்தியசாலை வசதிகளின்றி பெரும் அவல நிலையை எதிர்கொள்வதாகவும் அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் அரசாங்கத்தின் காலக்கெடு நேற்று நள்ளிரவுடன் முடிவுற்றது. இதைத் தொடர்ந்து வன்னி நிலைகள் குறித்த செய்திகளை இச்செய்தி எழுதப்படும்வரை தெரிந்துகொள்ள முடியவில்லை. படைத் தரப்பிலிருந்து கிடைக்கும் உத்தியோகப்பற்றற்ற தகவல்களின் அடிப்படையில் முல்லைத்தீவில் புலிகளைப் பிடிப்பதற்கு ஆழ ஊடுருவும் படையினர் ஈடுபடுத்தப்படவுள்ளனர் என தெரியவருகின்றது.

‘யுத்த நிறுத்தம் அல்ல’ மக்கள் பாதுகாப்பே – முகர்ஜி வருகையின் முக்கிய நோக்கம் – ஏகாந்தி

prathaf-mahi.jpgஇந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி நேற்றுமுன்தினம் (27) செவ்வாய்க்கிழமை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவைச் சந்தித்துப் பேசியவேளை வன்னியில் யுத்த நிறுத்தத்தை ஏற்படுத்துவது தொடர்பான பேச்சு எதனையுமே எடுக்கவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது. பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிசெய்வதற்கும் அவர்களுக்கு உதவுவதற்கும் அடிப்படை முயற்சிகள் மேற்கொள்ளப் படவேண்டும் என்று மட்டுமே மஹிந்தவிடம் கோரிக்கை விடுத்திருந்தார் என்று அறிவிக்கப்படுகிறது. அமைச்சர் பிரணாப் முகர்ஜி செவ்வாய்க்கிழமை மாலை கொழும்புக்கு திடீர் விஜயம் செய்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் பேசிவிட்டு புதன் அதிகாலை  அவசரமாகப் புதுடில்லி திரும்பியது தெரிந்ததே.

“பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் அவர்களுக்கு உதவுவதற்கும் அடிப்படை முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென நாங்கள் இலங்கை அரசைக் கோரியுள்ளோம்’ என்று இந்திய வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார். மோதல் நடைபெறும் பகுதிகளின் மனிதாபிமான நிலைவரம் குறித்து ஆராயப்பட்டது என்றும் அரசு பொதுமக்களின் உயிரிழப்புகளைக் குறைக்க நடவடிக்கை எடுக்கும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தமக்கு உறுதியளித்துள்ளார் என்றும் அவர் மேலும் தெரிவித்தார். இலங்கை அரசு பாதுகாப்பு வலயங்களை மதிக்கிறது எனவும்  ஜனாதிபதி கூறியுள்ளார் என்று முகர்ஜி சொன்னார்.

பொதுமக்களின் அவலங்களை நீக்கி அவர்களது பாதுகாப்பை உறுதிசெய்வதே தனது இந்த இலங்கை விஜயத்துக்கான அடிப்படைநோக்கம் என்றும் முகர்ஜி தெரிவித்திருக்கிறார்.அனைத்து இலங்கையர்களும்  குறிப்பாக மோதலின் பாதிப்பை  அனுபவித்துள்ள தமிழ் மக்கள்  கூடிய விரைவில் சுமூக வாழ்க்கையை அனுபவிப்பதை உறுதி செய்வதற்காக இலங்கை அரசுடன் இணைந்து செயற்படுவோம் என முகர்ஜி தெரிவித்துள்ளார்.
 
pranab.jpgமேலும் கருத்துத் தெரிவித்த பிரணாப் முகர்ஜி, இலங்கை – இந் திய ஒப்பந்தத்தின் கீழ் உருவாக்கப் பட்ட அரசியலமைப்புக்கான 13வது திருத்தத்தை மிக விரைவில் நடைமுறைப்படுத்தப் போவதாக ஜனாதிபதி மஹிந்த கூறினார். அதேநேரம், அதில் கூறப்பட்டு ள்ள அதிகாரப் பகிர்வு யோசனைகளை மேலும் விருத்தி செய்து அமுல் செய்வதற்கான வழிமுறைகளையும் ஜனாதிபதி ஆராய்ந்து வருவதாகவும் முகர்ஜி கூறினார்.

இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் நான் இலங்கை சம்பந்தமாக தெரி வித்துக்கொண்ட விடயங்க ளையிட்டு மகிழ்ச்சியடை கின்றேன். இலங்கையின் அண்மைக்கால அபிவிருத்தி கள் இரு நாடுகளுக்குமி டையிலான நட்புறவுகள், பரஸ்பர அக்கறையுள்ள பிரா ந்திய விடயங்கள் குறித்தும் நாம் பேச்சுவார்த்தை நடத்தி னோம். இலங்கை-இந்திய உறவுகள் மிக உறுதியாக வளர்ச்சி கண்டு வருகின்றன. எமது உறவுகளை மேலும் பலப்படுத்த வேண்டிய அவசியம் தொடர்ந்தும் உணரப்பட்டு வருகின்றது.

இலங்கையின் எதிர்கால அபிவிருத்தி குறித்து தான் கொண்டுள்ள நம்பிக்கை களை இலங்கை ஜனாதிபதி விளக்கினார். வடமாகாணம் உட்பட இலங்கை முழுவதும் இயல்பு நிலையைக் கட்டியெழுப்பத் தேவையான அரசியல் சந்தர்ப்பத்தை வழங்க இராணுவ வெற்றிகள் வழிவகுத்துள்ளன. 23 வருடகால மோதல்களின் பின் இந்த நிலை தோன்றியிருப்பதாக நான் தெளிவு படுத்தினேன். இலங்கை ஜனாதிபதியும் இதனை ஏற்றுக்கொண்டுள்ளதோடு தன் மனநிலையும் இதுவே என்று கூறினார். இலங்கை அரசாங்கத்தோடு சேர்ந்து சகல இலங்கையரும் குறிப்பாக மோதல்களால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் விரைவில் இயல்பு வாழ்க்கையை மேற்கொள்ள எம்மால் முடிந்த அனைத்து ஒத்துழைப்புக்களையும் வழங்குவோம்.

இந்த வகையில் இலங்கையின் வட பகுதியை மீளக்கட்டியெழுப்ப நாம் தயா ராக இருக்கின்றோம் என்பதையும் நான் இலங்கை ஜனாதிபதிக்குக் கூறினேன். இதன்மூலம் யுத்தத்தின் அழிவுகளிலிருந்து விடுபட்டு உறுதியான சமாதானத்துக்கான பொருளாதார மற் றும் அரசியல் அடித்தளங் களை இடுவதன் மூலம் சகல சமூகங்களும் நிம்மதியாக வாழும் சூழலை ஏற்படுத்த முடியுமென்பதே எமது நம்பிக்கையாகும். இதனடிப்படையில் உட்கட்டமைப்பு மற்றும் வசதிகள் தேவைப்படும் இடங்களில் புனரமைப்புப் பணிகளில் ஒருங்கிணைந்து செயற்படவுள்ளோம். இந்திய அனுசரணையுடன் 500 மெகா வோட் மின் உற்பத்தி திட் டம் திருகோணமலையில் ஆரம்பிக்கப்படவுள்ளதையிட்டு நான் மகிழ்க்சியடை கின்றேன்.

இலங்கை அரசியல் சாசன த்தின் 13வது திருத்தத்தை மிக விரைவில் அமுல் செய்யப் போவதாகவும் இல ங்கை ஜனாதிபதி கூறினார். இது 1987ம் ஆண்டு இல ங்கை-இந்திய ஒப்பந்தத் தின் கீழ் உருவாக்கப்பட் டது. இதில் கூறப்பட்டுள்ள அதிகாரப் பகிர்வு யோசனை களை மேலும் விருத்தி செய்து அமுல் செய்வதற் கான வழிமுறைகளையும் அவர் ஆராய்ந்து வருகின்றார். மோதல்கள் காரணமாக ஏற்பட்டுள்ள மனிதாபிமான நிலைமைகள் குறித்தும் நாம் கவனம் செலுத்தினோம். மோதல்களின்போது தமிழ் மக்கள் பாதிக்கப்படுவதைக் குறைக்கும் வகையில் ஏற் படுத்தப்பட்டுள்ள பாதுகா ப்பு வலயத்தை மதித்து நட க்கப் போவதாக இலங்கை அரசு உறுதியளித்துள்ளது. மோதல்களால் பாதிக்கப் படும் மக்களுக்கு இந்தியா தொடர்ந்தும் உதவிக்கரம் நீட்டும்.

எமது கலந்துரையாடலின் பின் தமிழ்நாடு முத லமைச்சர் திரு. மு. கருணாநிதி மற்றும் ஜெயலலிதா ஆகியோர் தலைமையில் சர்வகட்சி குழுவொன்று இலங்கைக்கு விஜயம் செய்து நிலைமைகளை நேரடியாகப் பார்வையிடுமாறும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனிப்பட்ட முறையில் அழைப்பு விடுத்துள்ளார். எல்.ரீ.ரீ.ஈ. இயக்கம் ஆயுதங்களைக் கைவிட்டு விட்டு ஜனநாயக நீரோட்டத்தில் இணைந்துகொள்ள வேண்டுமென இவர்கள் கோரிக்கை விடுக்க வேண்டுமெனவும் ஜனாதிபதி கேட்டுக்கொண்டார்.  பாதிக்கப்பட்ட பகுதிகளில் மிக விரைவில் இயல்பு நிலையையும், ஜனநாயகத்தையும் மீளக்கட்டியெழுப்ப வேண்டியது, சமாதானத்தையும் ஸ்திரப்பாட்டையும் நிலைநிறுத்துவதில் அவசரமாக மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகளாகும்.  இந்த இலக்கை அடைய இந்தியா சகலரோடும் இணைந்து சகல வழிகளிலும் தனது பூரண ஒத்துழைப்பை வழங்கும்.

முகர்ஜி வருகையின் முக்கிய நோக்கம் “யுத்த நிறுத்தம் அல்ல’ – கெஹலிய ரம்புக்வெல

இந்திய வெளிவிவகார அமைச்சர் பிரணாப் முகர்ஜியின் கொழும்பு விஜயம் யுத்தநிறுத்தம் குறித்து பேசுவதற்காக அல்லவென்றும் வடக்கை முழுமையாக மீட்டதும் அடுத்தகட்டமாக அங்கு மேற்கொள்ளப்படவுள்ள அபிவிருத்தி பணிகள் குறித்து ஆராய்வதே முகர்ஜி வருகையின் முக்கிய நோக்கம் என்றும் அமைச்சரும் பாதுகாப்பு விவகாரப் பேச்சாளருமான கெஹலிய ரம்புக்வெல நேற்று புதன்கிழமை தெரிவித்தார். ஜனாதிபதியின் அழைப்பின் பேரில் முகர்ஜியின் கொழும்பு பயணம் இடம்பெற்றதாகவும் கெஹலிய ரம்புக்வெல கூறினார். பாதுகாப்பு ஊடக மத்திய நிலையத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மகாநாட்டில் இதனை தெரிவித்த அமைச்சர் மேலும் கூறியதாவது;

இலங்கை நிலைவரம் குறித்து உண்மைத் தன்மையை அறிந்துகொள்ளுமாறு ஜனாதிபதி இந்திய வெளிவிவகார அமைச்சரான பிரணாப் முகர்ஜியை தொலைபேசியில் தொடர்புகொண்டு அழைத்தார். அவரை மட்டும் அழைக்கவில்லை. தமிழக முதலமைச்சர் கருணாநிதி மற்றும் எதிர்க்கட்சித் தலைவி ஜெயலலிதாவுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. எனினும், வெளிவிவகார அமைச்சர் பிரணாப் முகர்ஜியே வந்துள்ளார். கருணாநிதி சுகவீனம் காரணமாக வரவில்லை. அவசர அழைப்பு விடுக்கப்பட்டதால் வேறு வேலை காரணமாகவோ என்னவோ ஜெயலலிதா வரவில்லை.

பிரணாப் முகர்ஜி இங்கு வருவதற்கு முன் இந்தியாவில் வைத்து தமிழ் மக்கள் குறித்தே தாம் கரிசனை கொண்டுள்ளதாகவும் அதற்கான உதவிகளை நாம் வழங்குவதாகவும் எனினும், விடுதலைப்புலிகள் தொடர்பில் எதுவும் பேசப்போவதுமில்லையென தெரிவித்துள்ளார். இதிலிருந்து பயங்கரவாதம் அழிக்கப்பட வேண்டுமென்ற உறுதியான தீர்மானத்தில் இந்தியா இருப்பது தெரிகிறது. ஜனாதிபதியுடனான முகர்ஜியின் சந்திப்பின் போது யுத்தநிறுத்தம் குறித்தல்லாமல் வடக்கு முழுமையாக மீட்கப்பட்டதும் அங்குள்ள மக்களுக்கு தேவையான அபிவிருத்தி திட்டம் முதல் அனைத்து வேலைத்திட்டங்களையும் முன்னெடுப்பது குறித்தே பேசப்பட்டது. இதனை செய்வதற்கு இந்தியா அனைத்து உதவிகளையும் வழங்க தயாராகவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார் என்றார்.

விடுதலைப்புலிகளிடமிருந்து முழுமையாக வடபகுதியை மீட்டு நாடு ஒன்றிணைக்கப்படுவதை இலங்கை இரண்டாவது தடவையாக சுதந்திரம் பெறுவதாக உணர்கின்றேன். இதன்பின் நாட்டிலுள்ள சிங்கள, தமிழ், முஸ்லிம் மற்றும் பறங்கியர் உட்பட அனைத்து சமூகங்களையும் சேர்ந்தவர்கள் பயமின்றி சுதந்திரமாக வாழமுடியுமென ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில் அமைச்சர் தெரிவித்தார்.

இலங்கையின் வடபகுதியில் புனர் நிர்மாணப் பணிகளில் ஈடுபட இந்தியா தயார்

இரு நாடுகளுக்குமிடையிலான உறவுகள் வலுவாக அபிவிருத்தியடைந்து வருகின்றன என மேலும் தெரிவித்துள்ள முகர்ஜி, இலங்கையின் வடபகுதியில் புனர் நிர்மாணப் பணிகளில் ஈடுபட இந்தியா  தயார் என்பதனைக் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை தமிழ்நாடு முதலமைச்சர் கருணாநிதி தலைமையிலான அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டு இங்குள்ள நிலைமையை நேரில் பார்வையிட வேண்டும் எனவும், விடுதலைப் புலிகளைத் தேசிய நீரோட்டத்தில் இணையுமாறு அவர்கள் கேகாரிக்கை விடுக்கவேண்டும் எனவும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ  தனிப்பட்ட அழைப்பை விடுத்தார் என்றும் கூறியுள்ளார். “வன்னியில் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு வலயங்கள் மதிக்கப்படும் என்றும், பொதுமக்களின் உயிரிழப்புகளைக்  குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் இலங்கை அரசு  பிரணாப் முகர்ஜியிடம் உறுதியளித்தது.’  எனக் கொழும்பிலுள்ள இந்தியத் தூதரகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முகர்ஜியின் கொழும்பு பயணம் தமிழர்களுக்கு பெரும் ஏமாற்றம்

தமிழர்களை பொறுத்தவரை இந்திய வெளிவிவகார அமைச்சர் பிரணாப் முகர்ஜியின் கொழும்பு பயணம் ஏமாற்றமாக முடிந்துவிட்டதாக பாட்டாளி மக்கள் கட்சி நிறுவுனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்திருப்பதுடன் தமிழினத்துக்கு எதிரானவர்களை வெளிச்சம் போட்டுக் காட்ட வேண்டிய வேளை வந்துவிட்டதாக குறிப்பிட்டார். இது தொடர்பாக நேற்று அவர் வெளியிட்ட அறிக்கை வருமாறு;

தமிழர்களைப் பொறுத்தவரை பிரணாப்பின் கொழும்பு பயணம் ஏமாற்றமாகவே முடிந்துள்ளது. ஏனெனில், இலங்கையில் போரை நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழகத்தில் அரசியல் கட்சிகள் வலியுறுத்திக் கூறிவருவதற்கும் பிரணாப் முகர்ஜியின் கொழும்பு பயணத்திற்கும் எந்த சம்பந்தமும் கிடையாது என்றும் கொழும்பில் உள்ள இந்தியத் தூதரகம் தெளிவுபடுத்தியிருக்கிறது.

ஒட்டுமொத்தத் தமிழர்கள் எதிர்பார்த்துக் காத்து நிற்கின்ற தமிழகம் வலியுறுத்தி வருகிற போர் நிறுத்தம் பற்றி இலங்கை ஜனாபதியிடமும் அயலுறவுத்துறை அமைச்சர் பேசவே இல்லை என்பதை இந்தியத் தூதரகத்தின் அறிவிப்பு தெளிவுபடுத்தியிருக்கிறது. போரை நிறுத்த என்பதைக் கேட்டு வருவதற்காக இந்திய அயலுறவுத்துறை அமைச்சர் கொழும்புக்கு நேரில் சென்று வரத் தேவையில்லை.

இன்றே போர்நிறுத்தம். நாளை பேச்சுவார்த்தை. அடுத்து அமைதியான வாழ்வு. அதற்கு நடவடிக்கை எடுங்கள் என்று இறுதி வேண்டுகோள் விடுத்த தமிழக சட்டப்பேரவைக்கும் அதைத் தேர்ந்தெடுத்த தமிழர்களுக்கும் ஏற்படுத்தப்பட்டுள்ள மிகப்பெரிய அவமானம் இது.

தமிழினத்தை அழித்துவிட முயற்சிப்போருக்கு துணைபோய்க் கொண்டிருப்பவர்களையும் வெளிச்சம் போட்டுக்காட்ட வேண்டிய தருணம் வந்துவிட்டது. தன்மானம் உள்ள தமிழர்கள் அனைவரும் ஒன்று கூடுவோம். இன்றே முடுவெடுத்துச் செயல்படுவோம். தமிழினத்தைக் காப்போம் என்று ராமதாஸ் கூறியுள்ளார்.

உலகில் எங்குமில்லாத சர்வாதிகார ஆட்சி இலங்கையில் – பாராளுமன்றத்தில் என் ஸ்ரீகாந்தா

sl-parlimant.jpgஉலக நாடுகள் சிலவற்றில் இடம்பெற்ற சர்வாதிகார ஆட்சியை விடவும் பயங்கரமான கொடுங்கோல் ஆட்சி தற்போது இலங்கையில் நடைபெற்று வருவதாகத் தெரிவித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, இந்திய மத்திய அரசு இலங்கைத் தமிழர் பிரச்சினையில் இரட்டைவேடம் போடுவதாகவும் விசனம் தெரிவித்தது. பாராளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ரணவிரு சேவா அதிகாரசபை தொடர்பான திருத்தச்சட்டமூல விவாதத்தில் உரையாற்றுகையிலேயே  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் என் ஸ்ரீகாந்தா இவ்வாறு தெரிவித்தார். மேலும் கூறியதாவது;

வன்னியில் மிகப் பாரியளவில் இடம்பெற்று வரும் விமானக்குண்டுவீச்சு , ஷெல் தாக்குதல்கள் , பல்குழல் பீரங்கித் தாக்குதல்களினால் அப்பாவிப் பொதுமக்கள் தினமும் பெருமளவில் கொல்லப்பட்டு வருகின்றனர். பலர் படுகாயமடைகின்றனர். சொத்துகள் அழிக்கப்படுகின்றன. வன்னியில் பொதுமக்களுக்கு அரச படைகளால் ஏற்படுத்தப்படும் உயிரழிவுகள் தொடர்பில் எம்மிடம் தேவையான ஆதாரங்கள் உள்ளன. கடந்த 3 தினங்களில் மட்டும் வன்னியில் இடம்பெற்ற விமானக்குண்டுவீச்சு, ஷெல் தாக்குதல்கள் , பல்குழல் பீரங்கித் தாக்குதல்களினால் 55 அப்பாவிப் பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். 230 பேர் படுகாயமடைந்துள்ளனர். 3 மாதக் குழந்தையும் சிறுவர்களும் கூட இத்தாக்குதல்களில் கொல்லப்பட்டுள்ளனர். இதுவொரு பாரதூரமான மனிதாபிமானப் பிரச்சினை. போரில் சம்பந்தப்படாத பொதுமக்கள் கொல்லப்படுவது இலங்கை அரசைப் பொறுத்தவரை மிகவும் சாதாரணதொரு நிகழ்வாகவே பார்க்கப்படுகின்றது.

வன்னியில் இடம்பெற்றுவரும் மனிதப் படுகொலைகள், மக்களின் அவலங்கள் தமிழ் ஊடகங்களில் மட்டுமே வெளிக்கொண்டு வரப்படுகின்றன. ஊடக சுதந்திரம் பற்றிப் பெரிதாக பேசிக்கொள்ளும் ஆங்கில, சிங்கள ஊடகங்கள் வன்னி மக்களின் உயிரழிவுகளை, அவர்களின் அவலங்களைத் திட்டமிட்டு இருட்டடிப்பிச் செய்கின்றன. தம்மைப் பெரிய ஊடகவியலாளர்களாக காட்டிக்கொள்பவர்கள் கூட இந்த அப்பாவித் தமிழ் மக்களின் மனிதாபிமான அவலங்களை வெளிக்கொண்டுவர விருப்பமின்றியுள்ளனர். இதுதான் தென்னிலங்கை ஆங்கில,சிங்கள ஊடகங்களின் நிலை.

தமிழ் மக்கள் மீது இனப்படுகொலைத் தாக்குதல்களை இந்த அரசு கட்டவிழ்த்துவிட்டுள்ளது. வன்னியில் அரச படைகளால் அப்பாவித் தமிழ் மக்கள் வேட்டையாடப்பட்டு கொன்றொழிக்கப்படுகின்றனர். கடந்த டிசம்பர் மாதம் 17 ஆம் திகதியிலிருந்து இன்றுவரை 115 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். 410 பேர் படுகாயப்படுத்தப்பட்டுள்ளனர்.தமிழின அழிப்பை இந்த அரசு பகிரங்கமாகச் செய்து வருகின்றது.

இலங்கையில் இடம்பெறும் தமிழினப் படுகொலை தொடர்பாக தமிழகத்திலுள்ள 7 கோடித் தமிழ் மக்களும் கொந்தளித்துப் போயுள்ளனர். அங்கு இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாகவும் போருக்கு எதிராகவும் போராட்டங்கள் உத்வேகம் பெற்று வருகின்றன. வன்னியில் மக்கள் வேட்டையாடப்படுவதை இனியும் தமிழினம் சலித்துக் கொள்ளாது. இலங்கைத் தமிழர் தொடர்பாக தமிழகத்தில் கொந்தளிப்பான நிலை ஏற்பட்டுள்ள நிலையில், இந்திய மத்திய அரசு இரட்டைவேடம் போடுகிறது. இந்திய மத்திய அரசு நினைத்திருந்தால் இலங்கையில் போர்நிறுத்தத்தை கொண்டுவந்திருக்க முடியும். ஆனால், போர்நிறுத்தத்தைக் கொண்டுவர வேண்டுமென்பதில் அது ஆர்வம் காட்டவில்லை. தனது சொந்த நிகழ்ச்சி நிரலின் அடிப்படையிலேயே மத்திய அரசு செயற்பட்டு வருகின்றது.

இந்திய மத்திய அரசின் இந்த இரட்டைவேடப் போக்கை நாம் மிக வன்மையாகக் கண்டிக்கின்றோம். தமிழின விரோதப் போக்கு குறித்து விசனமடைகின்றோம். தமிழினப் படுகொலையை வேடிக்கை பார்க்கும் இந்திய மத்திய அரசின் நிலைப்பாடு தொடர்பில் தமிழ் மக்கள் விரக்தியும் விசனமும் அடைந்துள்ளனர். இப்போது கூட போர் நிறுத்தத்தை ஏற்படுத்தக் கூடிய சந்தர்ப்பம் இந்திய மத்திய அரசுக்கு உள்ளது.

சர்வதேச மனிதாபிமான சட்டங்களுக்கு முரணாகவும் ஜெனீவா உடன்படிக்கைக்கு விரோதமாகவும் தமிழ் மக்களின் உயிர்களுக்கு இலங்கை அரசு படைகள் வேட்டு வைப்பதை சர்வதேச நாடுகள் புரிந்து கொள்ள வேண்டும். இனியாவது சர்வதேச நாடுகள் தமது கண்களைத் திறந்து பார்த்து அழிவடைந்து கொண்டிருக்கும் தமிழினத்தைக் காப்பாற்ற வேண்டுமெனக் கோருகின்றோம். இலங்கை அரசிடமும் தமிழினப் படுகொலையை உடனடியாக நிறுத்துமாறு கேட்கின்றோம். போரில் சம்பந்தப்படாத அப்பாவி மக்கள் கொல்லப்படுவதை எவ்வகையிலும் நியாயப்படுத்த முடியாதென்பதையும் சுட்டிக்காட்டுகின்றோம்.

இலங்கையை தற்போது மனித உரிமைகள் தொடர்பாக கிஞ்சித்தும் கவலைப்படாத கொலை வெறிபிடித்த அரசாங்கமே ஆட்சிபுரிகின்றது. இதுவொரு கொலைகார அரசாங்கம். உலகில் நாம் எத்தனையோ சர்வாதிகாரிகளைப் பார்த்திருக்கின்றோம். ஹிட்லர், பொக்காசோ போன்ற சர்வாதிகாரிகளின் ஆட்சியை விடவும் மிகவும் மோசமான கொடுங்கோல் ஆட்சியே தற்போது இலங்கையில் நடைபெறுகிறது. இங்கு நடக்கும் அநியாயங்கள் , அட்டூழியங்கள் , இனப்படுகொலையைப் போல் நாம் எங்கும் பார்த்ததில்லை. தமிழ் மக்கள் இந்த அரசின் முகத்தில் எச்சில் உமிழ்கிறார்கள்.

அரசியல் தீர்வு என்ற விடயத்தில் விடுதலைப் புலிகளுடன் பேச்சு நடத்தினால் மட்டுமே அது சாத்தியம் என்பதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுதியாகவுள்ளது. பேச்சுக்குமுன் யுத்த நிறுத்தம் அவசியம். அதன் பின் நிபந்தனையற்ற பேச்சு என்பதிலும் நாங்கள் உறுதியான நிலையில் உள்ளோம். இதனை பல தடவைகள் அரசுக்கும் தெரியப்படுத்தியுள்ளோம். இலங்கைத் தமிழ் மக்கள் தொடர்பில் இந்தியாவுக்கு ஒரு நிகழ்ச்சி நிரல் உண்டு. இலங்கை அரசுக்கு ஒரு நிகழ்ச்சி நிரல் உண்டு. ஆனால், எமக்குள்ள ஒரே நிகழ்ச்சி நிரல் போர் நிறுத்தம் ஒன்று மட்டுமே.

விடுதலைப் புலிகளிடமிருந்து நிலப்பகுதிகளைக் கைப்பற்றியதன் மூலம் விடுதலைப் புலிகளை முற்றாக அழித்து விடுவோம் என்று அரசு கூறி வருகின்றது. இது வெறும் பகல் கனவு. கிழக்கை விடுதலைப் புலிகளிடமிருந்து முற்றாக விடுவித்து விட்டதாக கூறிய அரசுக்கு அங்கு என்ன நடக்கின்றது என்பது புரியும். கிளிநொச்சியை பிடித்து விட்டோம். புலிகளை காட்டுக்குள் விரட்டி விட்டோம். விரைவில் அவர்களை கடலுக்குள் தள்ளி விடுவோம் என அரசு கூறி வருகின்றது. இப்படிக் கூறுபவர்கள் அறிவிலிகளாகவே இருப்பார்கள். விடுதலைப் புலிகளை எந்த சக்தியாலும் தோற்கடித்து விட முடியாது. தமிழ் மக்களின் உரிமைக்காக 25 வருடங்களுக்கும் மேலாக போராடி வரும் அமைப்பொன்றை அவ்வளவு எளிதில் எவராலும் அழிக்கவோ வெற்றி பெறவோ முடியாது.

தமிழ் மக்களால் தெரிவு செய்யப்பட்ட தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற தமிழ் மக்களின் குரலாக ஒலிக்கின்ற அவர்களின் உணர்வுகளை வெளிப்படுத்துகின்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை இந்திய அரசால் ஏமாற்ற முடியாது. இவர்கள் மட்டுமென்ன வேறு எந்த அரசினால் கூட ஏமாற்ற முடியாது. இதனை இந்திய அரசு புரிந்து தெரிந்து கொள்ள வேண்டும். இந்தியாவில் 75 வீதமானோர் இந்துக்கள். நாம் மதத்தைப் பயன்படுத்தி இந்தியாவில் பிரசாரத்தில் இறங்கினோம் என்றால் அங்கு நிலைமை எவ்வாறு மாற்றமடையும் என்பதை இந்திய அரசு புரிந்து வைத்திருக்க வேண்டும்.

இந்த நாட்டில் தமிழினப் படுகொலை இடம்பெற்று வருகையில் வன்னியில் தினமும் மக்கள் செத்து மடிகையில் அதைப் பற்றி கொஞ்சம் கூட கவலைப்படாத அக்கறைப்படாத இடமாகக் காணப்படும் இந்த சபையில் தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்துபவர்கள் என்ற வகையில் நாம் தொடர்ந்தும் இருக்க வேண்டுமா?. நாம் இச் சபையில் தொடர்ந்தும் இருப்பது நியாயமாவென எம்மை எமது மனச்சாட்சி கேட்கத் தொடங்கி விட்டது. எனவே, நாம் மீண்டும் மீண்டும் இந்த அரசிடம் தமிழினப் படுகொலைகளை நிறுத்தி போர் நிறுத்தத்தை ஏற்படுத்தி பேச்சு மூலம் தீர்வு காண முன்வர வேண்டும் என கேட்கின்றோம்.

ரீ.எம்.வி.பி அரசியல் அமைப்பாக அதனை மாற்றிக் கொண்டுள்ளது – ஆயுதக் குழுவின் தேவை இல்லை என்கிறார் கருணா

karuna.jpgதமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பில் ஆயுதக் குழுவொன்றை வைத்திருக்க வேண்டிய தேவை தற்போது இல்லாமற் போயுள்ளதாக அதன் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான்) நேற்றுத் (23.01.2009) தெரிவித்தார்.

தமது கட்சியின் உறுப்பினர்கள் உள்ளூராட்சி மன்றங்களிலும், மாகாண சபையிலும் இணைந்து அரசியலில் ஈடுபட்டுள்ளதாலும், தாம் பாராளுமன்றத்தில் அங்கம் வகிப்பதாலும் அரசாங்கம் போதிய பாதுகாப்பை வழங்கியுள்ளதாகக் கூறிய அவர், தற்போது ஆயுதக் குழுவுக்கான அவசியம் இல்லையென்று தெரிவித்தார்.

பாராளுமன்றக் கட்டடத்தில் நேற்று (23) பிற்பகல் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு இதனைத் தெரிவித்த அவர், நீதியமைச்சின் செயலாளர் சுகந்த கம்லத் மற்றும் யுனிசெப் நிறுவனத்துடன் கடந்த டிசம்பர் மாதம் செய்து கொண்ட புரிந்துணர்வு உடன்படிக்கையின் பிரகாரம், தமது அமைப்பில் உள்ள சகல சிறுவர்களையும் மூன்று மாத காலத்திற்குள் முழுமையாக விடுவிக்க நடவடிக்கை எடுப்பதாகக் கூறினார்.

அதேநேரம், இன்னும் சில வாரங்களில் மேலும் 20 சிறுவர்களை விடுவிக்கவுள்ளதாகவும் முரளிதரன் எம். பி. கூறினார்.

சிறுவர்களை விடுவிக்கும் இந்த உடன்பாட்டின்படி நேற்று முன்தினம் 14 சிறுவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். சிறுவர்களின் விடுதலை தொடர்பான செயற்பாடுகளைக் கண்காணிக்கவென மட்டக்களப்பு அரசாங்க அதிபர் பணிமனையில் தனியான அலுவலகமொன்றும் திறக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பாராளுமன்றக் கட்டடத்தில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் நீதியமைச்சின் செயலாளர் கம்லத், யுனிசெப் நிறுவனத்தின் இலங்கைக்கான பிரதிநிதி பிலிப் டியுமலே ஆகியோரும் தகவல்களை வழங்கினர்.

இங்கு தொடர்ந்து தகவல் வழங்கிய முரளிதரன் எம். பி, எமது அமைப்பில் சிறுவர் போராளிகள் இல்லை. எனினும் பொதுவான விடயங்களைக் கவனிப்பதற்காக சிறுவர் பிரிவொன்றை நடத்தி வந்தோம். இப்போது அதற்கான தேவை இல்லை. சகலரையும் விடுதலை செய்து புனர்வாழ்வளிக்க நடவடிக்கை எடுத்திருக்கின்றோம். நான் புலிகள் இயக்கத்திலிருந்து பிரிந்து வந்த போது ஆறாயிரம் போராளிகளை வீடுகளுக்குத் திருப்பி அனுப்பினேன். இதில் 1600 பேர் சிறுவர்களாவர். எமது அமைப்பில் எஞ்சியுள்ள போராளிகளை அரச படைகளில் இணைந்து பணியாற்ற வழியேற்படுத்தியிருக்கிறோம். விரும்பியோர் வெளிநாடு செல்லலாம். அல்லது சமூகத்தில் இணைந்து கொள்ளலாம். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையின் கீழ் ஒரு புதிய மாற்றத்தைக்கான விரும்புகின்றோம் என்று தெரிவித்தார்.

இந்தச் செய்தியாளர் மாநாட்டில் கருத்துத் தெரிவித்த யுனிசெப் பிரதிநிதி பிலிப் டியுமலே, சிறுவர் போராளிகள் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கு அரசாங்கமும் ரீ. எம். வீ. பீ. யினரும் அர்ப்பணிப்புடன் செயலாற்றியமையைப் பாராட்டுவதாகக் கூறினார். மேலும் 53 சிறுவர்கள் விடுவிக்கப்படவுள்ளதாகக் கூறிய அவர், வடக்கில் 93 சிறுவர்கள் தொடர்பான தகவல் கிடைத்துள்ளதாகவும் தெரிவித்தார்.

இதேவேளை, வன்னியில் பொதுமக்களின் பாதுகாப்பு குறித்துக் கவலை கொள்வதாகக் கூறிய யுனிசெப் பிரதிநிதி, அவர்களை பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல அனுமதிக்குமாறு புலிகள் இயக்கத்திடம் வேண்டுகோள் விடுப்பதாகவும் கூறினார். சிவிலியன்களைப் பாதுகாக்க சகல நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட வேண்டுமென அவர் கேட்டுக்கொண்டார். 

ரி.எம்.வி.பி. சிறுவர் போராளிகள் 15பேர் ஐ.சி.ஆர்.சியிடம் ஒப்படைப்பு

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து சிறுவர் போராளிகளுள் ஒரு பகுதியினர்  (22.01.2009) ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியத்தின் (யுனிசெப்) பிரதி நிதிகளிடம் கையளிக்கப்பட்டனர்.

தமிழ் இயக்கங்களிலுள்ள சிறுவர் போராளிகளை அதிலிருந்து விடுபடச் செய்து அவர்களுக்கு புனர்வாழ்வளிப்பதற்காக ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியத்தின் அனுசரணையுடன் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் 22.01.2009 காலை சிறுவர் நலன்புரி நிலையமொன்று திறந்து வைக்கப்பட்டது. இச்சிறுவர் நலன்புரி நிலையத்தைத் திறந்து வைக்கும் வைபவத்திலேயே தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்த 15 சிறுவர்கள் ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியத்திடம் ஒப்படைக்கப்பட்டனர்.

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தலைமையில் நடைபெற்ற இவ்வைபவத்தில் ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியத்தின் இலங்கைக்கான பணிப்பாளர், பிலிப் பேண்டுமாறோ, ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியத்தின் சிறுவர் பாதுகாப்புப் பணிப்பாளர் அன்ரூரோக்கியா, மட்டக்களப்பு மாவட்ட பிரதி செளலிட்ரஸ், நீதியமைச்சின் செயலாளர், சுகத்கமன தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பின் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான பிரதீப் மாஸ்டர், ஜெயம் உட்பட தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பின் முக்கியஸ்தர்கள் பிரதேச செயலாளர்கள், சிறுவர் நன்னடத்தை திணைக்கள அதிகாரிகள் பலரும் இவ்வைபவத்தில் கலந்துகொண்டனர்.

சிறுவர் நலன்புரி நிலையம் திறக்கப்பட்டதையடுத்து தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்த 15 சிறுவர் போராளிகளை அவ்வமைப்பின் மாகாண சபை உறுப்பினர் பிரதீப் மாஸ்டர் ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியத்தின் பிரதிநிதி பிரதீப் மாஸ்டர் செய்தியாளர்கள் முன்னிலையில் கருத்துத் தெரிவிக்கையில், சுனாமியாலும் யுத்தத்தாலும் பாதிக்கப்பட்ட சிறுவர்கள் எமது இயக்கத்தில் இணைந்து கொண்டனர்.

அரசாங்கத்துடன் எமது கட்சித் தலைவர்கள் செய்து கொண்ட ஒப்பந்தத்துக்கு அமைய இவர்களை விடுதலை செய்துள்ளோம். இன்னும் 25 சிறுவர்கள் விடுதலை செய்யப்படவுள்ளனர் என்று குறிப்பிட்டார். மட்டக்களப்பு கச்சேரியில் நேற்றுக்காலை புதிதாக ஆரம்பிக்கப்பட்ட சிறுவர் நலன்புரி பிரிவில் தேசிய சிறுவர் பராமரிப்பு அதிகார சபையின் மாவட்ட இணைப்பாளராக அ. கோடீஸ்வரன் பொறுப்புக்களை ஏற்றுள்ளார்

நாளையே தமிழ் ஈழம் மலருமானால் ஆட்சியை துறக்கத் தயார் – கருணாநிதி

karunanithi.jpgஇந்த ஆட்சி விலகினால், நாளையே தமிழ் ஈழம் மலரும் என்ற நிலை இருந்தால், இந்த ஆட்சியைத் துறக்கவும் நாங்கள் தயாராக இருக்கிறோம் என்று முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார். இலங்கையில் அந்நாட்டுப் படையினரின் தாக்குதல் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. பிரபாகரன் தப்பி விட்டதாக தகவல்கள் வெளியாகின. முல்லைத்தீவை விரைவில் ராணுவம் பிடித்து விடும் என அந்நாட்டு அரசு கூறி வருகிறது.

ஆனால் இந்த சண்டையில் 4 லட்சம் அப்பாவித் தமிழர்கள் சிக்கி சிதறுண்டு வருவதை அனைவருமே கவனிக்கத் தவறி வருகின்றனர் அல்லது மறந்து விட்டனர். வன்னிப் பகுதியில் அப்பாவித் தமிழர்கள் படும் சிரமங்களுக்கு உள்ளாகியுள்ளனர். சாப்பாடு, மருந்து, உடை என எந்த அடிப்படை வசதியும் இல்லாமல் விலங்குகளை விட மோசமான நிலையில் உயிரைக் கையில் பிடித்து வாழ்ந்து வருகின்றனர்.

நூற்றுக்கணக்கான தமிழர்கள் இதுவரை இலங்கைப் படையினரின் கண்மூடித்தனமான தாக்குதலில் உயிரிழந்துள்ளனர். இலங்கை அரசு உடனடியாக போரை நிறுத்த வேண்டும். இலங்கை அரசின் திட்டமிட்ட இனப்படுகொலையை மத்திய அரசு தலையிட்டு தடுத்து நிறுத்த வேண்டும் என தமிழக தலைவர்கள் தொடர்ந்து கோரி வருகின்றனர். ஆனால் மத்திய அரசு இதுவரை போரை நிறுத்துமாறோ அல்லது இனப்படுகொலையை நிறுத்துமாறோ இலங்கையிடம் கண்டிப்பான வார்த்தைகளில் கேட்டுக் கொள்ளவில்லை.

பிரணாப் முகர்ஜியை அனுப்புங்கள் என்றால் மேனனை அனுப்பினார்கள். அவரோ, ராஜபக்சேவிடம் பேச்சுவார்த்தை நடத்தி விட்டு, இந்திய, இலங்கை உறவு நன்றாக உள்ளது என்று பேட்டி அளித்தார். போரை நிறுத்துமாறு கோரி அவர் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. தமிழர்கள் பலியாவது குறித்தும் அவர் ஒரு வார்த்தையும் பேசவில்லை. இந்த நிலையில் இலங்கைப் பிரச்சினையில் தமிழக தலைவர்கள் மீண்டும் போர்க்கோலம் பூண்டுள்ளனர்.

சட்டசபையில் இன்று மீண்டும் தீர்மானம்

இந்தப் பின்னணியில், தற்போது நடைபெற்று வரும் தமிழக சட்டசபை கூட்டத்திலும் இலங்கை தமிழர்கள் விவகாரம் பெரிதாக உருவெடுக்க உள்ளது. அனைத்து கட்சி உறுப்பினர்களும் இந்த விவகாரத்தில் தங்கள் கருத்துகளை பதிவு செய்ய முன்வந்துள்ளனர். இலங்கை பிரச்சினையில் மத்திய அரசுக்கு இறுதி வேண்டுகோள் விடுத்து தமிழக சட்டசபையில் இன்று தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டது.

முன்னதாக சபை கூடியதும் கேள்வி நேரம் ஒத்திவைக்கப்பட்டு இந்த முக்கிய கவன ஈர்ப்பு தீர்மானம் எடுத்துக் கொள்ளப்படுவதாக சபாநாயகர் ஆவுடையப்பன் அறிவித்தார்.

இதையடுத்து தீர்மானத்தை முதல்வர் கருணாநிதி முன்மொழிந்தார். பின்னர் விவாதத்தை அவர் தொடங்கி வைத்தார். பின்னர் அதிமுக, மதிமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்ளிட்ட கட்சிகளின் உறுப்பினர்கள் பேசினர். பின்னர் முதல்வர் கருணாநிதி பதிலளித்துப் பேசியதாவது…

இலங்கையில் நடை பெறுகின்ற இன வெறிப்போராட்டம் நிறுத்தப்பட வேண்டும் என்பது குறித்து இந்த அவையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் நண்பர் ரவிக்குமார், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நண்பர் சிவபுண்ணியம், மார்க்சிஸ்ட் கம்ïனிஸ்ட் கட்சியின் சார்பில் நண்பர் கோவிந்தசாமி, ம.தி.மு.க. சார்பில் நண்பர் ராமகிருஷ்ணன், பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் நண்பர் ஜி.கே. மணி, இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் சார்பில் நண்பர் பீட்டர் அல்போன்ஸ், அ.இ.அ.தி.மு.க. பிரதான எதிர்க்கட்சியின் சார்பில் நண்பர் செங்கோட்டையன் ஆகியோர் தங்களுடைய கருத்துக்களை எடுத்துக் கூறியிருக்கிறார்கள்.

கடைசியாக ஒருமுறை …

இந்தத் தீர்மானம் அவசர அவசியமாக இன்றைக்கு இந்த மாமன்றத்திலே விவாதிக்கப்பட்டு, நிறை வேற்றப்பட வேண்டும் என்று நான் விரும்பியதற்குக் காரணமே – கடந்த காலத்தில் பல முறை சட்டப் பேரவை யிலும், அனைத்துக் கட்சித்தலைவர்களின் கூட்டத்திலும் ஒவ்வொரு கட்சி யினுடைய பொதுக் கூட்டங்களிலும், நிர்வாகக் குழு கூட்டங்களிலும் – எடுத்துரைத்த மிக முக்கியமான தீர்மானமாக இலங்கையில் தமிழ் இனத்தை அழிக்கின்ற போர் நிறுத்தப்பட வேண்டும் என்பதை கடைசியாக ஒரு முறை இன்றைக்கு மத்திய அரசுக்கு வலியுறுத்திச் சொல்லவேண்டும் என் பதற்காகத்தான்.

இதை ஏன் கடைசியாக ஒரு முறை என்று நான் குறிப்பிட்டேன் என்றால் – பல முறை இந்த அவையில் இது போன்ற தீர்மானங்கள் கட்சி மாச்சரியங்களுக்கு இடம் இல்லாமல் இந்தத் தீர்மானத்தைச் சாக்காக வைத்துக் கொண்டு இது தான் நேரம் என்று ஒருவரையொருவர் மறை முகமாகவோ, ஜாடையாகவோ, நேரடியாகவோ தாக்குவதற்கான வாய்ப்பு இருந்தாலும் அதைப்பயன்படுத்திக் கொள்ளாமல், வாய்மையோடு வாதத்திலே ஈடுபட்டு, நம்முடைய கோரிக்கையை மத்திய அரசுக்கு எடுத்து வைத்திருக்கிறோம்.

போர் நிறுத்தப்பட வேண்டும் …

இலங்கையில் நடைபெறுகின்ற போர் நிறுத்தப்பட வேண்டும் என்பது தான் நம்முடைய கோரிக்கையினுடைய முக்கியமான குறிக்கோள். அதை விட்டு எள் முனை அளவும் பிறழாமல், பேச வேண்டுமென்று நான் காலையிலே நம்முடைய நண்பர்களையெல்லாம் கூட வேண்டிக் கொண்டேன்.

சற்று அங்கு இங்கு அந்தத் தடம் மாறினாலுங்கூட – தமிழ்ப் பண்பாட்டைக் காப்பாற்ற வேண்டும், தமிழர்களை இலங்கைத் தீவிலே பாதுகாக்க வேண்டும், அவர்களைக் காத்திட வேண்டும் என்ற அந்த உணர்வு ஒரு மைய இழையாக ஓடிக் கொண்டிருந்த காரணத்தால் – நான் எதிர்பார்த்தவாறு அல்லது வேறு சிலர் எதிர் பார்த்தவாறு எந்த விதமான சங்கடங்களும் இல்லாமல் நாம் நம்முடைய கருத்தை இந்தத் தீர்மானத்தின் மூலமாக வலியுறுத்துகின்ற கட்டத்திற்கு வந்திருக்கிறோம்.

ஒன்றை நினைவுபடுத்த விரும்புகிறேன். 1939ஆம் ஆண்டு – ஆசியாவின் ஜோதி பண்டித ஜவகர்லால் நேரு அவர்கள் ஒரு செய்தியை வெளியிட்டிருக்கிறார். “இண்டியன் இன் சவுத் ஏசியா” என்ற நூலில் – அந்தச் செய்தி வெளியிடப்பட்டிருக்கிறது. அதிலே இந்தியாவுக்கு வெளியே வாழுகின்ற இந்தியர்களைப் பற்றி – அப்போது நடைபெற்ற இந்திய தேசிய காங்கிரஸ் கூட்டத்திற்கு நேரு அனுப்பிய செய்தி அது.

நேரு கூறியபடி ..

“இந்தியா இன்று பலவீனமாக உள்ளது. அது வெளிநாட்டில் வாழும் தனது மக்களுக்கு பெரிதாக எதுவும் செய்ய முடியாத நிலையில் உள்ளது. ஆனால் இந்தியா அவர்களையும் அவர்களுக்கு ஏற்படும் துயரத்தையும் இழிவையும் மறப்பதில்லை. ஒரு நாள் வரும் – அன்றைக்கு இந்தியாவின் பாதுகாப்பு கரம் நீளும் – அதன் வலிமையினால் அவர்களுக்கு நீதி கிடைக்கும்” என்று நேரு அவர்கள் 1939ஆம் ஆண்டு சொன்னதைத் தான் இப்போது நான் வலியுறுத்துகிறேன்.

நீதி கிடைப்பதற்கு ஜவகர்லால் நேரு அவர்கள் எந்த இந்தியாவிலே முதல் பிரதமராக பொறுப்பேற்றாரோ – அந்த இந்தியத் திருநாடு இப்போது முன்வர வேண்டுமென்று கேட்டுக் கொள்வதற்காகத் தான் நேருவின் அந்த வாசகத்தை நினைவுபடுத்தி – நான் என்னுடைய தீர்மானத்தை முன்மொழிய விரும்புகிறேன்.

“இலங்கையில் தமிழ் இனமே அழிந்து கொண்டி ருக்கிறது. ஐ.நா. மன்றம் கண்டனம் தெரி விக்கிற அளவுக்கு; அந்த நாடு அப்பாவித் தமிழ் மக்களின் இடுகாடாக – சுடுகாடாக – ஆகிக் கொண்டிருக்கிறது.

குழந்தை குட்டிகளோடு, குடும்பம் குடும்பமாக குய்யோ முறையோ என்ற கூச்சலும் – ஒப்பாரியும் புலம்பலும் – பின்னணி யாக, பிணங்கள் குவிக்கப் படுகின்றன. அத்தனையும் தமிழ் மக்களின் பிணங்கள்.

தமிழ் இனத்தை எப்படி மீட்கப் போகிறோம்…?

அய்யோ! அந்தச் சிங்கள இராணுவ குண்டு வீச்சுக்கிடையே – சிதறியோடும் – சிறுவர் சிறுமியர் – சிலராவது செத்துப் பிழைத்தார்கள் என்ற செய்தியும் கூட அறவே அற்றுப் போய் – இன்று கூண்டோடு சாகின்றனரே – பூண்டோடு அழிகின்றனரே – மனித நேயமற்ற மாபாவிகளின் சேட்டையால்; இத்தனை ஆண்டுகள்; இழித்தும் – பழித்தும் – இறுதியாக அழித்தும் ஒழிக்கப்படுகிறதே உலகை ஆண்ட ஓர் இனம் – அந்த இனத்தை இறுதியாக இலங்கையில் விடப்பட்டுள்ள இந்த அறை கூவலில் இருந்து எப்படி மீட்கப் போகிறோம்?

இந்தியாவில் உள்ள தமிழ் நாடு என்ற மாநிலத்தில் நாம் வாழுகிறோம் என்பதால் நம்மை அரவணைத்துக் காத்திடும் பொறுப்பை இந்தியப் பேரரசு பார்த்துக் கொள்ளும் – ஆம், பார்த்துக் கொள்ள வேண்டும் என்ற உரிமையோடு எதிர்பார்க்கிறோம்.

நமக்கு பாதுகாப்பு தருவதாயினும் – பாதிப்பைக் களைவதாயினும் இரண்டையும் சீர்தூக்கி செயல்படுத்தி, இந்த மாநில மக்களுக்கும் – இந்த மாநில மக்களாம் தமிழ்க்குடி மக்களின் நலத்திற்கும் நமது தொப்புள் கொடி உறவு கொண்ட இலங்கைத் தமிழ் மக்களின் நலத்திற்கும் உத்திரவாதமளிக்கக் கூடிய பொறுப்பு; – உலகில் எங்கு இனப்படுகொலை நடந்தாலும் தட்டிக் கேட்கும் உணர்வும் உரிமையும் கொண்ட இந்தப் பெரிய ஜனநாயக நாடாம் இந்தியத் திருநாட்டில் மக்களாட்சியை நடத்துகிற மத்திய ஆட்சியின் கரங்களில் இருக்கும்போது; நாம் அந்தக் கரங்களைப் பிடித்துக் கொண்டு தானே; இலங்கையில் சீரழியும் – செத்து மடியும் எங்கள் தமிழ்ச் சாதியைக் காப்பாற்றுக என்று கண்ணீர் மல்கக் கேட்கிறோம்.

புத்தர் பூமியில் அமைதிப் பூ மலர்ந்திட …

கேட்டுக் கேட்டுப் பயன் விளையாமற் போனதால் – இறுதி வேண்டுகோளாக முறையிடுகிறோம்; உடனடியாக இலங்கையில் போர் நிறுத்தம் செய்து; அந்தப் புத்தர் உலவிய பூமியில் அமைதிப் பூ மலர்ந்திட – ஆவன செய்திடுக என்று!

இந்த இறுதி வேண்டுகோள் புறக்கணிக் கப்படாமல் – இன்றே போர் நிறுத்தம் இலங்கையில் – அடுத்து அரசியல் தீர்வு – தொடர்ந்து அமைதி. எனவே அந்த நல்ல விளைவை எதிர்பார்த்து; இந்த மாமன்றத்தில் இலங்கைத் தமிழர் பிரச்சினை குறித்த இறுதித் தீர்மானமாக இதனை நான் முன்மொழிகிறேன்.

திமுக முக்கிய முடிவை எடுக்க நேரிடும் …

இந்தத் தீர்மானத்திற்கும் பயன் ஏதும் ஏற்படா விட்டால் ஆளுங்கட்சியான திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுக்குழு அல்லது செயற்குழு கூட் டத்திலே விவாதித்து அடுத்து என்ன என்று முடிவு எடுக்கப்படும் என்பதை இந்த மன்றத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.

இங்கே பேசிய நண்பர்கள் சில பேர் ஆட்சி எதற்காக என்றார்கள். ஆட்சி என்று ஒன்று இருக்கின்ற காரணத்தால் தான் நாம் இந்த அளவிற்காவது கேட்க முடிகிறது – இங்கே ஒரு தீர்மானத்தையாவது போட முடிகிறது என்பதையும் சில பேர் நமக்குச் சொல்கின்ற காரணத்தால் – அதையும் நாம் யோசித்துக் கொண்டிருக்கிறோம்.

தேவையில்லை, நாளைக்கே ஆட்சியை இழந்து விட்டால், இலங்கையிலே தமிழ் ஈழம் மலரும் என்ற உறுதி கிடைக்குமேயானால், அதற்கும் நாம் தயாராக இருப்போம் என்பதையும் எடுத்துக் கூறி – மீண்டும் ஒரு முறை சொல்கிறேன் – “அய்யகோ, இலங்கையில் தமிழ் இனமே அழிகிறது – இந்தியப் பேரரசுக்கு இறுதி வேண்டுகோள்” என்பதை டெல்லியிலே உள்ளவர்களுடைய செவிகளிலே விழ ஓங்கி ஒலித்து இந்த தீர்மானத்தை இந்த மாபெரும் அவையிலே முன்மொழிந்து இந்த அளவில் நன்றி கூறி விடை பெறுகிறேன் என்றார் கருணாநிதி.

இதையடுத்து தீர்மானம் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது.

அதிமுக – மதிமுக – சிபிஐ வெளிநடப்பு

முன்னதாக தீர்மானம் சரியாக இல்லை என்று கூறி அதிமுக, மதிமுக, சிபிஐ ஆகிய கட்சிகளின் உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். இந்த தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அ.தி.மு.க. துணை தலைவர் ஓ. பன்னீர்செல்வம் பேசிவிட்டு வெளி நடப்பு செய்தார். அவரை தொடர்ந்து அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களும் வெளியேறினார்கள்.

அப்போது முதல்வர் கருணாநிதி கூறுகையில், உணர்ச்சிமிக்க தமிழர்களுடைய உள்ளங்களை யெல்லாம் ஈர்த்துள்ள ஒன்று பட்ட ஒரு தீர்மானத்திற்கு எப்படியும் களங்கம் விளைவித்தே தீரவேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டு – அதிலே வெற்றி பெற்று வெளி நடப்பு செய்துள்ள அ.தி.மு.க. தோழர்களுடைய சாமர்த்தியத்தை பாராட்டத்தான் வேண்டும் என்றார்.

முன்னதாக தி.மு.க. தலைமைக்கழகம் நேற்று இரவு வெளியிட்ட செய்திக்குறிப்பில், அய்யகோ; இலங்கையில் தமிழ் இனம் அழிகிறது – இந்திய பேரரசுக்கு இறுதி வேண்டுகோள் என்ற தலைப்பிட்டு, சபாநாயகர் மற்றும் சட்டசபையின் ஒப்புதலை பெற்று, 23-ம் தேதி சட்டமன்றத்தில் முதல்-அமைச்சர் கருணாநிதி தீர்மானத்தை முன்மொழிகிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இறுதி எச்சரிக்கை?

இந்தத் தீர்மானத்தை மத்திய அரசுக்கு விடும் இறுதி எச்சரிக்கையாக அரசியல் வட்டாரத்தில் பார்க்கப்படுகிறது. இதற்கு மேலும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்காமல் இருந்தால் முதல்வர் கருணாநிதி தானே களத்தில் இறங்கி கடும் போராட்டங்களை அறிவிக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே அவர் சாகும் வரை உண்ணாவிரதம் இருக்க முன்வந்தார். நாங்கள் தடுத்து விட்டோம் என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக சட்டசபைக்கு இன்றும் பாமக எம்.எல்.ஏக்கள் கருப்புச் சட்டை அணிந்து வந்திருந்தனர்.

நன்றி: வன் இந்தியா

”இறுதிவரை போராடி மீண்டெழுவோம் என்ற நம்பிக்கை எமக்குண்டு.” : பா. நடேசன்

nadesan.jpgஈழத்தின் தற்போதைய கள நிலவரம் தான் என்ன? அதை அறிந்து கொள்ள சில தொடர்பாளர்களை நாம் அணுகினோம். “நிலைமை மோசமாகத்தான் இருக்கிறது. இராணுவக் குண்டுவீச்சு அப்பாவி பொதுமக்களைத்தான் அதிகம் காவு கொள்கிறது. புலிகள் தரப்பில் இன்னும் பெரிய யுத்தம் தொடங்கப்படவில்லை. தற்கொலைப்படையான கரும்புலிகள் இன்னும் களமிறங்கவே இல்லை.
புலிகளின் முன்னணி தளபதிகளும் இன்னும் களமாட வரவில்லை. புலிகளின் முழுவேகத் தாக்குதல் தொடங்கும்போதுதான் என்ன நடக்கும் என்பது தெரியும். அதை இப்போதே கணிப்பது கடினமானது. இந்தக் கவலை இராணுவத்திற்கும் இருக்கிறது” என்றனர் அவர்கள்.

முல்லைத்தீவு தற்போது ஐம்பத்து ஏழாயிரம் இராணுவ வீரர்களின் முழு முற்றுகையில் இருக்கிறது. புலிகள் இப்போது முப்பது சதுர கிலோமீட்டர் பரப்பளவுக்குள் முடக்கப்பட்டு விட்டனர். புலிகளின் கதை விரைவில் முடியப் போகிறது” என்று கொக்கரித்திருக்கிறார் இலங்கை இராணுவத் தளபதி சரத் பொன்சேகா.

நிலைமை இப்படியிருக்க `யானை குழியில் விழப்போனால் தவளை கூட உதை கொடுக்கும்’ என்ற பழமொழிக்கேற்ப, ஈழத்தில் ஒரு சிக்கலான போர்ச் சூழல் நிலவும் நிலையில், இங்கோ கருணாவை வைத்து நீண்ட பொய்ப்பிரசாரம் ஒன்றைக் கட்டவிழ்க்கும் முயற்சி நடக்கிறது” என்று குற்றம் சாட்டுகிறார்கள் தமிழின ஆர்வலர்கள்.

இந்தச் சூழ்நிலையில் தமிழீழ விடுதலைப்புலிகளின் அரசியல் பிரிவுத் தலைவரான பா.நடேசன் அவர்களை நாம் பேட்டி கண்டோம்.

இந்திய வெளியுறவுத்துறைச் செயலர் சிவசங்கர மேனன், இலங்கை அதிபர் ராஜபக்ஷ சந்திப்பால் போர் நிறுத்தம் ஏற்படும் என்று நினைக்கிறீர்களா? அல்லது என்ன வகையான மாற்றம் ஏற்படும் என்று கருதுகிறீர்கள்?

“கடந்த முப்பதாண்டு காலமாக எமது மக்களின் விடுதலைப் போராட்டத்தின்போது இந்திய இராஜதந்திரிகள் பலமுறை கொழும்புக்கு வந்து சென்றுள்ளனர். ஆனால் தமிழ் மக்களின் பிரச்னைகள், அவர்கள் எதிர்கொள்ளும் அழிவுகள் அதிகரித்துச் செல்கின்றனவேயொழிய குறைந்த பாடில்லை. இம்முறை சிவ்சங்கர் மேனன் வந்திருக்கும் இந்தக் காலகட்டத்தில் ஒருபோதும் இல்லாத அளவிற்கு எமது மக்கள் மீது கண்மூடித்தனமான விமானத் தாக்குதல்கள், ஷெல் தாக்குதல்கள் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளன. பலநூறு தமிழர்கள் காயமடைந்து வரும் நிலையில், இரண்டு இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் தங்கள் வசிப்பிடங்களை விட்டு அகதிகளாக காட்டிலும், மேட்டிலும் வாழ்ந்து வருகிறார்கள்.

இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய மனித அவலத்தின் சின்னமாக தமிழீழ தேசம் காட்சியளிக்கிறது. சிவசங்கர மேனனின் வருகையின் போதோ அல்லது பின்னரோ எந்த மாற்றமும் நிகழ்ந்ததாகத் தெரியவில்லை. இது எமக்கும் எம் மக்களுக்கும் மிகுந்த வேதனையளிக்கிறது.”

புலிகளின் உளவுப்பிரிவு தலைவரான பொட்டு அம்மான் இலங்கை இராணுவத்திடம் சரணடைந்ததாக ஒரு செய்தி பரவியதே. இது உண்மையா, வதந்தியா? புலிகள் மற்றும் உலகத் தமிழர்களின் மனதிடத்தைச் சீர்குலைக்க அப்படி ஒரு செய்தி பரப்பப்பட்டதா? அதன் பின்னணி என்ன?

“அது ஒரு பொய்யான வதந்திதான். எமது விடுதலைப் போராட்டத்திற்கு எதிரான சக்திகள் போராட்டத்தைக் களங்கப்படுத்தவும், கொச்சைப்படுத்தவும் இதுபோன்ற பரப்புரைகளை மேற்கொள்வது வழமை. எமது மக்களுக்கும் இது பழகிப்போன ஒன்று. இதனால் உலகத் தமிழினத்தின் மனதிடம் ஒருபோதும் குலையாது. மாறாக முழுத் தமிழினமும் எமக்காக ஒருமித்து ஓங்கிக் குரலெழுப்புகிறது”.

கருணா அவரது பேட்டியொன்றில், `இலங்கைத் தமிழர்களின் இந்த அழிவுக்குக் காரணமே பிரபாகரன்தான்’. நான் ஒருவன் மட்டும்தான் அவரிடம் பேச முடியும். தனிமனிதக் கொலைகளைத் தவிர்க்க வேண்டும் என்று நான் எவ்வளவோ கூறியும் பிரபாகரன் அதைக் கேட்காமல் சர்வாதிகாரியாக நடந்து கொண்டார்’ என்றெல்லாம் கூறியிருக்கிறாரே?

“கருணா சொல்வது அப்பட்டமான பொய். தலைவர் எம் எல்லோரையும் அடிக்கடி சந்தித்துக் கதைப்பவர். மற்றவர்களின் கருத்துகளுக்கு செவி மடுப்பவர். கருணா இயக்கத்தில் இருந்த காலகட்டத்தில் மட்டக்களப்பு பகுதியில் மக்கள்மீது வெறுக்கத்தக்க வன்முறை சார்ந்த செயல்களைச் செய்ததால் பலமுறை தலைவரால் கண்டிக்கப்பட்டவர் கருணா. அவரது கூற்று கேலிக்கிடமானது. தமிழ்மக்கள் ஒருபோதும் அதைப் பொருட்படுத்த மாட்டார்கள்”.

நான் எவ்வளவோ கூறியும் பிரபாகரன் கேட்காமல் யாழ்ப்பாண முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடத்தி, நூறுகோடி ரூபாய் மதிப்பிலான முஸ்லிம்களின் சொத்துக்களைச் சூறையாடினார். புலிகள் இயக்கத்தில் உள்ள தளபதி பானு அந்தத் தாக்குதலை நடத்தினார். அதுபோல இந்திய அமைதிப் படை வெளியேறிய பின் இங்கிருந்த டி.என்.ஏ. எனப்படும் தமிழ்தேசிய இராணுவத்தைச் சேர்ந்த 1200 தமிழ் இளைஞர்களை பிரபாகரனின் உத்தரவின்பேரில் பதினெட்டு நாளில் நாங்கள் கொன்றோம். பல தமிழ்த் தலைவர்களின் கொலைகளுக்கு முழுக்காரணமும் பிரபாகரன்தான்’ என்று கருணா கூறியிருக்கிறாரே?

“யாழ்ப்பாண முஸ்லிம்கள் எமது சகோதரர்கள். எம்முடன் இரத்தமும் சதையுமாக வாழ்பவர்கள். எமது விடுதலைப் போராட்டத்துக்குக் களங்கம் ஏற்படுத்த நினைத்த சில தீயசக்திகள்தான் எமது இயக்கத்தின் பெயரைப் பயன்படுத்தி அம்மக்களை வெளியேற்றினர். எங்கள் தலைவர் அப்போது பாதுகாப்பு காரணங்களுக்காக தூர இடமொன்றில் இருந்தார். இந்தச் சம்பவம் பற்றிக் கேள்விப்பட்டதும் இந்தக் குற்றத்தைப் புரிந்தவர்கள் மீது பாரிய நடவடிக்கை எடுக்கக் கட்டளையிட்டார். இன்றும் அந்த மக்களை மீளவும் அவர்களது வாழ்விடத்தில் குடியேறுமாறு நாம் கூறிவருகிறோம். ஆனால் யாழ்ப்பாணம் மீண்டும் எங்கள் கட்டுப்பாட்டில் வந்தபிறகே அவர்கள் அங்கு வந்து எம் அரவணைப்பில் வாழ விரும்புவதாகக் கூறுகிறார்கள்.

தமிழ் தேசிய இராணுவத்தில் இருந்த இளைஞர்களையும், கிழக்கு மாகாண முஸ்லிம்களுக்கு எதிராகவும் கருணா எடுத்த நடவடிக்கைகள் பற்றி அங்குள்ள மக்களிடம் கேட்டால் தெரியும். கருணா அரசியல் ஞானமற்ற, பழமைக் கருத்துக்களில் ஊறிய எதையும் இராணுவவாதக் கண்ணோட்டத்துடன் அணுகக் கூடிய நபர். தற்போது அவர் அரசபடைகளின் ஒட்டுக்குழுவாகச் செயல்படுவதையும் இங்கே சுட்டிக் காட்ட விரும்புகிறேன். அவரது சமூக விரோதச் செயல்களுக்காக எமது தலைமைப் பீடம் நடவடிக்கை எடுக்க முயன்றபோதுதான் அவர் தப்பியோடி அரசப்படைகளிடம் சரணடைந்தார். எந்தவித அரசியல் தெளிவோ, கொள்கைப் பற்றோ இல்லாத, தனது சுகபோகங்களுக்காக எதை வேண்டுமானாலும் செய்யும் ஒரு நபராகவே அவரை நாம் பார்க்கிறோம்.”

`பிரபாகரன் எந்தப் போர்க்களத்திற்கும் வந்ததே இல்லை. பிரபாகரன் ஒரு டம்மி ஆள் போலத்தான்’ என்கிறாரே கருணா? அப்படியா?

“இது அவரது கனவுலக கற்பனைவாத கட்டுக் கதையாகும். எமது தலைவரின் போர்த்திறமையை அரசப்படைகளிள் தளபதிகளே வாயாறப் புகழ்ந்திருக்கிறார்கள். இந்திய அமைதிப்படையின் தளபதிகளும் பாராட்டியிருக்கிறார்கள். கருணாவின் கூற்று சித்த சுவாதீனமற்றர்களின் பேச்சைப் போன்றதாகும்.”

`புலிகளின் ஆள்பலமே கிழக்குப் பகுதிதான். அதை நான் கலைத்து விட்டேன். நான் வெளியேறிய பிறகு புலிகளுக்கு எந்த வெற்றியும் கிடைக்கவில்லை’ என்று கருணா கூறியிருப்பது உண்மையா?

“தமிழ் மக்கள் முழுவதும் எம்முடன்தான் இருக்கிறார்கள். கருணா வெளியேறிய பிறகும் நாம் பல வெற்றிகளை அடைந்திருக்கிறோம். அவரது கூற்றைப் பெரிதுபடுத்த வேண்டாம்.”

`தமிழகத்தில் உள்ள தலைவர்கள் அனைவரும் புலிகளுக்காக ஆயுதம் கடத்தி பணம் பெறுபவர்கள்’ என்று கருணா கூறியிருப்பது பற்றி…..?

“ஏலவே நான் கூறியது போல கருணா அரசியல் விவேகமோ, ஞானமோ அற்றவர். எமது விடுதலைக்காக அன்று தொட்டு இன்றுவரை குரல் கொடுத்து வரும் எம் தொப்புள்கொடி உறவுகளான தமிழகத் தலைவர்கள் பற்றி இப்படிக் கருத்துக் கூறியிருப்பதில் இருந்தே கருணா எப்படிப்பட்டவர் என்பதைத் தமிழக மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.”

`இலங்கையில் தமிழ்ப் பொதுமக்களைக் காப்பாற்ற போர்நிறுத்தம் அவசியம். மக்கள் நலனை பிரபாகரன் கருத்தில் கொள்பவர் என்றால் அவர் சரணடைய வேண்டும்’ என்றும் கருணா கூறியிருக்கிறாரே?

“தமிழக மக்களைக் கொன்றழித்து வரும் இராணுவத்தின் கருத்தும், கருணாவின் கருத்தும் இந்த விஷயத்தில் ஒரேமாதிரியாக இருக்கிறது. எமது மக்களின் விடுதலைப் போராட்டத்திற்கு தலைமை தாங்கும் எம் தலைவரைச் சரணடையுமாறு கோருவது கனவில்கூட நடக்கப் போவதில்லை. அரசின் கைக்கூலியான கருணாவின் இந்தக் கூற்றுபற்றி நாம் பெரிதாக அலட்டிக் கொள்ள வேண்டியதில்லை.”

கருணாவிற்கு கிழக்கு இலங்கையில் ஆதரவு இருக்கிறதா? அங்குள்ள தமிழர்கள் அவரை வரவேற்கிறார்களா?

“மக்களால் முற்றுமுழுதாக வெறுத்து ஒதுக்கப்பட்டவர் கருணா. முன்பே நான் கூறியது போல மக்கள் விரோதச் செயல்களுக்காக எமது இயக்கம் கருணா மீது நடவடிக்கை எடுக்க முற்பட்ட போதுதான் அவர் தப்பியோடி அரசப்படைகளிடம் சரணடைந்துள்ளார்.”

முல்லைத்தீவில் நிலைமை இப்போது எப்படியிருக்கிறது? இராணுவ சுற்றிவளைப்புக்குள் புலிகள் சிக்கிவிட்டார்கள். போராளிகளின் சகாப்தம் முடிவுக்கு வந்துவிட்டது’ என்கிறதே இராணுவத் தரப்பு. இதிலிருந்து எப்படி மீண்டெழப் போகிறீர்கள்?

“நாம் எவ்வித முற்றுகைக்குள் இருந்தாலும் எமது மக்களின் சுதந்திரமான சுபிட்சமான வாழ்விற்காக உலகத் தமிழினத்தின் ஆதரவோடு இறுதிவரை போராடி மீண்டெழுவோம் என்ற நம்பிக்கை எமக்குண்டு.”

ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக தமிழகத்தில் திருமாவளவன் சாகும்வரை உண்ணாவிரதம் இருந்தார். ஒருசில கட்சிகளைத் தவிர மற்ற கட்சிகள், அமைப்புகள் அவருக்கு ஆதரவு தெரிவித்தன. தமிழக மக்களின் இந்த ஆதரவை அங்குள்ள தமிழர்கள் எப்படி எடுத்துக் கொள்கிறார்கள்?

“தமிழக மக்களை இங்குள்ள மக்கள் தமது உடன்பிறப்புகளாகவே, தொப்புள்கொடி உறவுகளாகவே பார்க்கிறார்கள். தாயகத் தமிழகத்தையும், தமிழீழத்தையும் ஒரு சிறிய கடல் நீரேரியே பிரித்து நிற்கிறது. இது வரலாற்று ரீதியாக யாராலும் மறுக்க முடியாத உண்மை.”

இந்தியாவில் மைய அரசியலில் பெரிய கட்சியாக இருக்கும் பாரதிய ஜனதா `புலிகள் மீதான தடையை நீக்க வேண்டும்’ என்றும் தமிழீழ மக்களுக்கு ஆதரவு என்றும் பேசி வருகிறதே? அதுபற்றி என்ன நினைக்கிறீர்கள்?

“எமது விடுதலைப் போராட்டம் நீதியானது, நியாயமானது, தர்மத்தின்பாற்பட்டது என்ற உண்மையை அவர்கள் புரிந்துள்ளார்கள் என்பதாகவே பார்க்கிறேன்”.

மீண்டும் முதல் கேள்விக்குத் தொடர்பான இன்னொரு கேள்விக்கு வருகிறேன். இந்தியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜியின் வருகை தவிர்க்கப்பட்டு அந்தத் துறையின் செயலாளர் இலங்கை வந்ததை ஏமாற்றமாக எடுத்துக் கொள்ளலாமா? அங்குள்ள தமிழர்கள் இதை எப்படிப் பார்க்கிறார்கள்?

“இங்குள்ள தமிழர்கள் இந்தியாவிலிருந்து கொழும்பிற்கு யார் வந்தாலும் ஒரே மாதிரியாகவே பார்க்கிறார்கள். இன்னும் விளக்கமாகச் சொல்வதானால் எவ்வளவு திறமை வாய்ந்த இராஜ தந்திரிகள் இங்கு வந்தாலும் அவர்களை சிங்கள இராஜ தந்திரிகள் ஏமாற்றி விடுவார்கள் என்ற கருத்துப்படவே பார்க்கிறார்கள்.”
 
நன்றி: குமுதம்

பொதுமக்களின் பாதுகாப்பு வலயமாக முல்லைத்தீவில் 35 ச.கி.மீ பிரதேசம் – துண்டுப் பிரசுரம் மூலம் மக்களுக்கு இராணுவம் அழைப்பு

safe-zone.jpgவிடுவிக்கப்படாத பிரதேசத்தில் தங்கியிருக்கும் பொதுமக்கள் பாதுகாப்பு பகுதிக்குள் வருவதற்கு ஏதுவாக முல்லைத்தீவு பகுதியில் சுமார் 35 சதுர கிலோமீற்றர் பகுதியை பாதுகாப்பு வலயமாக அரசு பிரகடனப்படுத்தியுள்ளது.

முல்லைத்தீவு தேவிபுரத்தை மையமாகக்கொண்டு ஏ 35 பாதையில் புதுக்குடியிருப்பு- பரந்தன் பாதையையும் உடையார்கட்டு சந்தி தொடக்கம் மஞ்சள் பாலம் வரையிலான பகுதியையும், இருட்டுமடு முதல் தேவிபுரம் வரையிலான பகுதியையும் உள்ளடக்கியதாக 35 சதுரகிலோமீற்றர் பகுதியை உடனடியாக அமுலுக்கு வரும் விதத்தில் அரசு பொதுமக்கள் தங்கும் பாதுகாப்பு வலயமாக பிரகடனப்படுத்தியுள்ளது.

விடுவிக்கப்படாத பிரதேசத்தில் இருக்கும் பொதுமக்களின் பாதுகாப்புக்கும் இராணுவத்தினரே பொறுப்புக்கூற வேண்டியவர்களாக இருப்பதால் பாதுகாப்பு வலயத்தினுள் வருமாறு பொதுமக்களிடம் இராணுவத்தினர் கேட்டுக் கொள்கின்றனர். விடுவிக்கப்படாத பகுதிகளிலுள்ள மக்கள் பாதுகாப்பு பிரதேசத்துக்குள் வருமாறு வலியுறுத்தும் துண்டுப்பிரசுரங்கள் விமானம் மூலம் விடுவிக்கப்படாத பகுதியிலுள்ள மக்களுக்கு போடப்பட்டுள்ளதாகவும் இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாயணக்கார தெரிவித்தார்.

இப் பாதுகாப்பு பிரதேசத்துக்குள் பிரவேசிப்பதற்குரிய பகுதிகளையும் இராணுவத்தின் துண்டுப்பிரசுரங்களில் சுட்டிக்காட்டியுள்ளனர்.

துண்டுப்பிரசுரங்களில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள உள்நுழையும் பகுதிகள் வருமாறு:- வன்னிப் பிரதேசம் ஏ-35 புதுக்குடியிருப்பு, பரந்தன் பாதையில் உடையார்கட்டு சந்தி மற்றும் மஞ்சள் பாலம் வரையில் 4 கி.மீ தூரத்தில் உள்ள இருட்டுமடு மற்றும் பிரதேசம் (09 23 17.20 வ மற்றும் 080 36 25.70 கி) இருட்டுமடு கிழக்கில் இருந்து தேவிபுரம் வரையில் (09 23 17.40 மற்றும் 080 40 53.60 கி) பிரதேசம் உடனடியாக நடைமுறைக்கு கொண்டுவரும் நிமித்தம் பாதுகாப்பு வலயமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மற்றும் மஞ்சள் பாலம் (09 20 21.80 வ மற்றும் 080 39 15.20 கி) பிரதேச ஏ-35 பிரதான பாதை எல்லையாகும்.

வவுனியாவில் நான்கு ஏக்கரில் 3 தற்காலிக பாடசாலைகள்
 
கிளிநொச்சி, முல்லைத்தீவு பகுதிகளிலிருந்து வவுனியா அரச கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்குள் வரும் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்கென சுமார் 4 ஏக்கர் நிலப் பரப்பில் மூன்று தற்காலிக பாடசாலைகள் கட்டப்படவுள்ளன. வவுனியா மெனிக் பாம் பகுதியில் தலா 150 ஏக்கர் நிலப்பரப்பில் மூன்று முகாம்கள் அமைக்கப்படவுள்ளன. இம்முகாமில் தங்கவைக்கப்படும் பொதுமக்களின் பிள்ளைகளின் கல்வி நடவடிக்கைக்காகவே மூன்று பாடசாலைகள் அமைக்கப்படுவதாக வவுனியா வலய கல்விப் பணிப்பாளர் திருமதி வீ. ஆர். ஏ. ஒஸ்வல்ட் தெரிவித்தார்.

அரச கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளவர்களுள் சுமார் 200 ஆசிரியர்களையும் மேற்படி பாடசாலைகளில் கற்பித்தல் நடவடிக்கைக்காக இணைத்துக் கொள்வதற்கான நியமனக்கடிதங்களும் கையளிக்கப்படவுள்ளன. வன்னியில் சுமார் 55,000 மாணவர்களும் 2500 ஆசிரிய ர்களும் உள்ளதாகவும் இவர்கள் அனைவரும் வவுனியா அரச கட்டுப்பாட்டுக்குள் வரும் பட்சத்தில் மேற்படி பாடசாலைகளிலேயே அனுமதிக்கப்படுவர் என்றும் அவர் தெரிவித்தார்.

மேற்படி மாணவர்களுக்குத் தேவையான பாடசாலை சீருடைகள் நேற்று அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் நிமல் பண்டார வவுனியா வலய கல்விப் பணிப்பாளரிடம் தெரிவித்துள்ளதுடன் தேவையான பாடநூல்கள் அப்பியாசப் புத்தகங்கள், பாடசாலை உபகரணங்கள் அனைத்துமே அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

மெனிக்பாம் பகுதியில் முல்லைத்தீவு, கிளிநொச்சி மக்களை தற்காலிகமாக குடியமர்த்தும் பகுதிகளிலேயே மேற்படி பாடசாலைகளும் அமைக்கப்படுகின்றன. கல்வி அமைச்சு இவர்களுக்கான சகல நிதி உதவிகளையும் வழங்கி வருவதாக அமைச்சின் செயலாளர் நிமல் பண்டார தெரிவித்தார்.

க.பொ.த (சா/த) பரீட்சை: வன்னி மாணவர்களுக்கென வவுனியாவில் பரீட்சை நிலையம்

க. பொ. த. சாதாரண தர புதிய பாடத் திட்டத்திற்கமைவான கணிதப் பாட இரண்டாம் பகுதி பரீட்சைக்குத் தோற்றும் வன்னியிலிருந்து இடம்பெயர்ந்துள்ள மாணவர்களுக்காக இரண்டு பரீட்சை நிலையங்கள் வவுனியாவில் அமைக்கப்பட்டுள்ளன.

வவுனியா செட்டிக்குளம் மற்றும் நெலுக்குளம் பகுதியில் இரண்டு பரீட்சை நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதுடன் சுமார் 1000 மாணவர்களுக்குரிய வினாத்தாள்கள், பரீட்சை அனுமதி அட்டைகளும் ஆயத்தநிலையில் வைக்கப்பட்டுள்ளதாக வவுனியா கல்வி வலய பணிப்பாளர் அலுவலகம் தெரிவித்தது.

வன்னியில் இப்பரீட்சை நடைபெறாது என்பதால் படையினரின் கட்டுப்பாட்டுக்குள் வரும் மாணவர்களுக்கு பரீட்சைகளை நடத்த கல்வி அமைச்சு பணிப்புரை வழங்கியுள்ளது. இதற்கமைய வலயப் பணிப்பாளர் திருமதி வீ. ஆர். ஏ. ஒஸ்வல்ட் ஏற்பாடுகளை செய்துள்ளார்.

வன்னியிலிருந்து வெளியேறியோருக்காக இராமநாதன், அருணாசலம், கதிர்காமர் பெயரில் குடியேற்றக் கிராமங்கள் – அரசாங்கம் அறிவிப்பு

வன்னியிலிருந்து வெளியேறி இராணுவ கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வந்துள்ள தமிழ் மக்களுக்காக மூன்று குடியேற்றக் கிராமங்களை உடனடியாக அமைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. மெனிக் பார்ம், மெனிக் பார்ம் 2, ஓமந்தை ஆகிய பகுதிகளில் இதற்காக 750 ஏக்கர் நிலப் பரப்பு கொண்ட காணி ஒதுக்கப்பட்டுள்ளது. இவ்வருட இறுதிக்குள் சகல வசதிகளையும் கொண்ட இந்த மூன்று இடங்களிலும் வீடமைப்புத் திட்டங்களை ஏற்படுத்தி அங்கு அகதி முகாம்களில் தங்கியிருக்கும் அனைவரையும் குடியமர்த்தத் திட்டமிட்டிருப்பதாக அரசு தெரிவித்துள்ளது.

எதிர்காலத்தில் இப்பகுதியில் அகதி முகாம்கள், இடைத்தங்கல் முகாம்கள் அனைத்தையும் மூடி விட அரசு தீர்மானித்துள்ளது. மெனிக்பார்மில் 150 ஏக்கரும் மெனிக் பார்ம் 2 இல் 450 ஏக்கரும் ஓமந்தையில் 150 ஏக்கரும் இதற்காக ஒதுக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி, முல்லைத்தீவு உட்பட முழு வன்னிப் பிரதேசமும் விடுதலைப்புலிகளிடமிருந்து மீட்கப்பட்ட போதிலும் அங்கு சொந்த இடங்களுக்கு தமிழ் மக்கள் திரும்பிச் செல்ல கணிசமான காலமெடுக்கும் என்பதால் குறிப்பிட்ட காலத்துக்கு அந்த மக்களை இந்த குடியேற்றக் கிராமங்களில் குடியமர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.

இக் குடியேற்றக் கிராமங்களுக்கு மறைந்த தமிழ்த் தலைவர்களின் பெயர்களே சூட்டப்படவிருக்கின்றன. பொன்.இராமநாதன் விடுதலைபுரம், பொன்.அருணாசலம் விடுதலைபுரம், கதிர்காமர் எழுச்சி நகர் எனப் பெயரிடப்பட்டுள்ளன. இங்கு குடியமர்த்தப்படுவோருக்கு சகல வசதிகளும் பெற்றுக் கொடுக்கப்படும். சமைத்த உணவு, உலர் உணவுகள், விளையாட்டு வசதி, தொலைபேசி வசதி, தொலைக்காட்சி, வானொலி என்பனவும் வழங்கப்படவுள்ளன. அத்துடன் அவர்களுக்கு தொழில் வாய்ப்புகள் உறுதி செய்யப்படும் வரை ஒவ்வொருவருக்கும் நாளாந்தம் நூறு ரூபா கைச்செலவுக்காக வழங்கவும் அரசு தீர்மானித்துள்ளது. சுமார் 30 ஆயிரம் பேருக்கு முதற் கட்டமாக இந்த வசதிகள் பெற்றுக் கொடுக்கப்படும். இம்மாத இறுதியில் இதன் ஆரம்பக் கட்டப் பணிகள் தொடக்கி வைக்கப்படும். இத்திட்டத்துக்கான சகல பொறுப்புகளும் ஜனாதிபதியின் ஆலோசகரும், பாராளுமன்ற உறுப்பினருமான பசில் ராஜபக்ஷவின் மேற்பார்வையில் இடம்பெறுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் 44வது அதிபராக பதவியேற்றார் பராக் ஒபாமா: நாடு முழுவதும் விழாக்கோலம் (படம் இணைப்பு) – ஏகாந்தி

obama.jpgவாஷிங்டன் நகரில் நடந்த கோலாகல விழாவில், அமெரிக்காவின் அதிபராக, பராக் ஒபாமா நேற்று (20.01.2009) பதவி ஏற்றார். கருப்பர் இனத்தைச் சேர்ந்தவர், அமெரிக்க அதிபராக பதவியேற்பது இதுவே முதல் முறை.

கடும் பொருளாதார நெருக்கடியையும், வேலை இழப்பையும் அமெரிக்கா சந்தித்துவரும் நிலையில், 44வது அதிபராக ஒபாமா பதவியேற்பது, அந்நாட்டு மக்கள் மத்தியில் பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

கென்ய நாட்டைச் சேர்ந்த கருப்பின தந்தைக்கும், அமெரிக்காவின் கென்சாசை சேர்ந்த வெள்ளையின தாய்க்கும் பிறந்தவர் ஒபாமா. தந்தை கருப்பர் இனத்தைச் சேர்ந்தவர் என்பதால், ஒபாமாவும் கருப்பர் இனத்தவராக கருதப்படுகிறார். அவர் ஹவாயிலும், இந்தோனேசியாவிலும் சில காலம் வளர்ந்தவர். சாதாரண பணியாளராக வாழ்க்கையை துவக்கி, அமெரிக்காவின் மிக உயரிய பதவியை அடைந்துள்ளார்.

ஹாவர்டு பல்கலைக் கழகத்தில் வக்கீலாக பட்டம் பெற்றவர். இதுவரை, இனப் பாகுபாடு காரணமாக அடிமைகளாகவும், அதைத் தொடர்ந்து இரண்டாம் தர குடிமக்களாகவும் தாங்கள் பாவிக்கப்படுவதாக கருதிவரும் ஆப்ரிக்க அமெரிக்கர்கள் மத்தியில், ஒபாமா அதிபராக பதவியேற்றது எதிர்பார்ப்பையும், மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் அதிபராக பொறுப்பேற்கும் முன் ஒபாமாவை, வெள்ளை மாளிகையின் வடக்கு போர்டிகோவில் வரவேற்றார், பதவி விலகிய அதிபர் புஷ். பின் அங்கிருந்து, பதவியேற்பு விழா நடக்கும் அரங்குக்கு இருவரும் சென்றனர். கடந்த 1861ம் ஆண்டு, அமெரிக்க அதிபராக ஆபிரகாம் லிங்கன் பதவியேற்ற போது, அவர் பயன்படுத்திய பைபிள் புத்தகத்தில் கைவைத்தபடியே, அதிபர் பதவியேற்பு உறுதிமொழியை எடுத்துக் கொண்டார் ஒபாமா. பதவியேற்பு விழாவை ஒட்டி, காபிடல் அரங்கம் பகுதி முழுவதும் வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. உளவுத்துறையை சேர்ந்தவர்கள், குறிபார்த்து சுடுவதில் பெரும் திறமை பெற்றவர்களும் ஆங்காங்கே நிறுத்தப்பட்டு இருந்தனர். எந்தவித அசம்பாவிதங்களும் நடக்காத வகையில், விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

அமெரிக்கா மட்டுமின்றி, வெளிநாட்டில் வசிக்கும் அமெரிக்கர்களும் லட்சக்கணக்கில், அங்கு குழுமியிருந்து, ஒபாமாவுக்கு வாழ்த்து கோஷங்கள் எழுப்பினர். வாஷிங்டன் நகரம் மட்டுமின்றி, அமெரிக்கா முழுவதும் விழாக்கோலம் பூண்டிருந்தது. இலங்கை நேரப்படி இரவு 10.00 மணிக்கு அமெரிக்க காபிடல் கட்டடத்தின் மேற்கு அரங்கில் இசை நிகழ்ச்சியுடன் விழா துவங்கியது. அமெரிக்க அரசின் கடற்படை பேண்டு குழுவினர், சான் பிரான்சிஸ்கோ , சான் பிரான்சிஸ்கோ கிரிஸ் இசைக்குழு அமைப்பினர் கலந்து கொண்டு இசை நிகழ்ச்சியை பிரமாதப்படுத்தினர்.

கலிபோர்னியாவை சேர்ந்த ஜனநாயகக் கட்சி செனட்டர் டயயானி பெயன்ஸ்டீன், கூட்டு பார்லிமென்ட் கமிட்டியின் தலைவர் என்ற வகையில் வரவேற்புரை ஆற்றி, விழாவை துவக்கி வைத்தார். துணை அதிபர் ஜோ பிடெனுக்கு சுப்ரீம் கோட் இணை நீதிபதி ஜான் பால் ஸ்டீவன்ஸ் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். பின், ஜான் வில்லியம்சின் இசை நிகழ்ச்சி நடந்தது.

நாட்டின் முதல் பெண்மணியாகும் மிச்சேல், ஆபிரகாம் லிங்கன் பயன்படுத்திய பைபிளை எடுத்து வந்து, கையில் பிடித்திருக்க, அதன் மீது கைவைத்தபடி பதவி பிரமாணம் எடுத்தார் புதிய அதிபர் ஒபாமா. சரியாக 10.38 மணிக்கு அவர் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டார். 10.45 மணிக்கு உரை நிகழ்த்தினார். பின்னர் வெள்ளை மாளிகைக்கு சென்றார். ஒபாமா பதவியேற்பு விழாவை ஒட்டி நகரின் மையப்பகுதிகளில் தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டு, வாகனப் போக்குவரத்து முழுமையாக நிறுத்தப்பட்டு இருந்தது. தற்போது, 47 வயதாகும் ஒபாமாவிடம் இருந்து, சிக்கலான நிலையை சந்தித்துவரும் அமெரிக்கர்கள் மத்தியில் பெரிதும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. எதிர்கட்சியினர், கடுமையான விஷயங்களில் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று ஏற்கனவே, ஒபாமா அழைப்பு விடுத்திருந்தார்.

ஒபாமாவின் பேச்சிலிருந்து …

நாம் அனைவரும் மிகப் பெரும் நெருக்கடிகளுக்கு மத்தியில் உள்ளோம். இதை அனைவரும் அறிவோம். அமெரிக்கா இத்துடன் முடியப் போகிறது, இதை தவிர்க்க முடியாது என்ற அச்சம் உள்ளது.

பொருளாதாரம் பலவீனமடைந்துள்ளது. கடந்த காலத்தில் பொறுப்பற்றதனமாகவும், வீம்பாகவும் நடந்து கொண்டதால் ஏற்பட்ட நிலை இது. அதேசமயம், அடுத்த தலைமுறைக்கு நமது நாட்டை கொண்டு செல்லத் தவறியதும், மாற்று வாய்ப்புகள் குறித்து யோசிக்காததுமே இந்த நிலைக்கு இன்னொரு முக்கிய காரணம்.

பொருளாதார நெருக்கடியால் பலர் வீடுகளை இழந்துள்ளனர். வேலைகள் போயுள்ளன. வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. நமது சுகாதார செலவுகள் அதிகரித்து விட்டன. பள்ளிகள் கூட சரிவர செயல்படாத அவல நிலை. எரிபொருள் நிலையும் கவலை அளிக்கிறது.

நமது நாடு போரில் ஈடுபட்டுள்ளது. வன்முறை, துவேஷம், தீவிரவாதத்திற்கு எதிராக போராடிக் கொண்டிருக்கிறோம். ஆனால் இப்போது நமக்கு என்ன தேவை என்றால், பொறுப்புணர்ச்சியுடன் கூடிய செயல்பாடுகள்தான். ஒவ்வொரு அமெரிக்கருக்கும் ஒரு அங்கீகாரம் தேவை. அவரவர் கடமையை சிறப்பாக செய்ய வேண்டும். நமது நாட்டுக்கு, நமது உலகுக்கு நாம் செய்ய வேண்டிய கடைமையை நாம் செய்வோம்.

பொருளாதாரத்தை சீரமைக்க வேண்டிய பொறுப்பு நாம் அனைவருக்கும் உண்டு. பொருளாதாரத்தை சரி செய்ய உறுதியான, விரைவான நடவடிக்கை தேவைப்படுகிறது.

புதிய வேலைகளை உருவாக்குவதோடு, புதிய வளர்ச்சிக்கான அடிக்கல்லையும் நாம் நாட்டியாக வேண்டும்.

நிறைய சாலைகளையும், பாலங்களையும், மின் கட்டமைப்புகளையும் நாம் கட்டுவோம். நமது வர்த்தகத்தை தூக்கி நிறுத்துவோம். அறிவியலை மதிப்புமிக்க இடத்திற்கு உயர்த்துவோம். தொழில்நுட்பத்தை சரியாக பயன்படுத்தி மருத்துவத்திற்கு ஆகும் செலவுகளைக் குறைப்போம்.

நமது வாகனங்களுக்கும், தொழிற்சாலைகளுக்கும் தேவையான எரிபொருளை சூரியன், காற்று, மண்ணிலிருந்து எடுப்போம்.

நமது பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்களை புதிய தலைமுறைக்கு ஏற்றபடி மாற்றுவோம். இவை அனைத்தையும் நம்மால் செய்ய முடியும். நாம் நிச்சயம் செய்வோம்.

கிறிஸ்தவர், முஸ்லிம்கள், யூதர்கள், இந்துக்கள் மற்றும் மத நம்பிக்கை இல்லாதவர்களை உள்ளடக்கிய நாடே அமெரிக்கா. இதில், எந்த மதமும் ஏற்றத்தாழ்வு உடையதல்ல.

நாம் பல்வேறு மொழி, கலாசாரத்தால் பிணைக்கப்பட்டிருக்கிறோம். நாம் மனிதநேயத்துடனும், அமைதியுடனும் நமது வெற்றிகளை படைப்போம்.

அமெரிக்கா அனைத்து நாடுகளுக்கும் நண்பன். அந்த வகையிலேயே நாம் நடந்து கொள்வோம்.

நாம் இன்று சந்தித்துக் கொண்டிருக்கும் சவால்கள் உண்மையானவை. மிகக் கடுமையானவை. பல சவால்கள் உள்ளன. ஆனால் அவற்றை எளிதில் சமாளிக்க முடியாது. குறுகிய காலத்தில் அவற்றை சமாளிப்பது இயலாத காரியம். ஆனால் அமெரிக்கா இவற்றை சந்திக்கும், சமாளிக்கும் என்றார் ஒபாமா.

பிபிசி உலக சேவையின் அனுசரணையில் நடத்தப்பட்ட புதிய கருத்துக்கணிப்பு ஒன்றில் கலந்துகொண்டவர்களில் 67 வீதமானவர்கள், பராக் ஒபாமா அவர்கள் அதிபராக தெரிவு செய்யப்பட்டமையால், அமெரிக்காவுக்கும், உலகின் ஏனைய நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் மேம்படும் என்று கூறியிருக்கிறார்ர்கள். கடந்த கோடைகாலத்தில் நடத்தப்பட்ட இதுபோன்ற முன்னைய கருத்துக்கணிப்பு ஒன்றில், இந்த விடயத்தில் எந்தவிதமான நம்பிக்கையும் காண்பிக்காத ரஷ்யா, துருக்கி, எகிப்து மற்றும் சீனா ஆகிய நாடுகளைச் சேர்ந்த பெருந்தொகையான மக்கள் கூட தற்போதைய கருத்துக்கணிப்பில் அதிபர் பராக் ஒபாமாவின் தெரிவின் காரணமாக மிகுந்த எதிர்பார்ப்பை வெளிப்படுத்தியுள்ளார்கள்.

அவர் தொடர்பில் அதீத நம்பிக்கையுடனான கருத்து வெளியிட்டவர்கள் ஐரோப்பியர்கள்தான். உதாரணமாக, ஜேர்மனி மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்களில் 80 வீதமானவர்கள் ஏனைய நாடுகளுடனான உறவுகள் மேம்படும் என்பதில் நம்பிக்கை கொண்டிருக்கிறார்கள்.

ஒபாமா போன்ற ஒரு அதிபர், உலக பொருளாதார நெருக்கடிக்கே தனது நிகழ்ச்சித்திட்டத்தில் முன்னுரிமை கொடுக்க வேண்டுமென்றே பெரும்பான்மையினர் விரும்புவதாகவும் இந்த கருத்துக்கணிப்பு தெளிவாகக் கூறுகிறது. ஆனால், அவர் எதிர்கொள்கின்ற சவால்களின் ஒரு சமிக்ஞையாக, உலகெங்கும் பெருந்தொகையானவர்கள், உலக காலநிலைமாற்றம், மத்திய கிழக்கு அமைதி மற்றும் இராக் விவகாரம் ஆகிய பிரச்சினைகளையும் அவர் முன்னுரிமை கொடுத்து தீர்த்து வைக்க வேண்டும் என்றும் எதிர்பார்க்கிறார்கள்.

இதில் வித்தியாசமான விசயம் என்னவென்றால், ஒபாமா எந்த விடயத்துக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்பதில், அமெரிக்க மக்களுக்கும், உலகின் ஏனைய நாடுகளின் மக்களுக்கும் இடையில் கருத்தில் வேறுபாடு இருக்கிறது.
உலக பொருளாதார நெருக்கடிக்கே ஒபாமா முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்று அமெரிக்க மக்களும் ஒப்புக்கொள்வதாக இந்தக் கருத்துக்கணிப்பு கூறுகின்ற போதிலும், உலகின் ஏனைய மக்களைப் போலல்லாது, அமெரிக்கர்கள் ஆப்கானிஸ்தான் பிரச்சினைக்கே அடுத்த இடத்தை தருகிறார்கள். வெறுக்கப்பட்ட கடந்த 8 வருட புஷ்ஷின் ஆட்சியின் மூலமான பலனை ஒபாமா பூரணமாக அடைந்திருக்கிறார் என்று இந்த கருத்துக்கணிப்பை ஏற்பாடு செய்தவர்கள் கூறுகிறார்கள். ஆனால், தற்போதுள்ள உற்சாகத்துடனான இந்த எதிர்ப்பார்ப்புக்களை அவர் தக்க வைத்துக்கொள்வது என்பது அவருக்கு பெரும் சவாலாகத்தான் இருக்கும்.

இதேநேரம், பராக் ஒபாமாவின் பதவியேற்பு நிகழ்வைக் காணவென அமெரிக்க நேரப்படி காலை 9 மணிக்கே 20 பாகையை விட சற்று அதிகம் என்ற குளிரான காலநிலையையும் பொருட்படுத்தாமல் பல்லாயிரக் கணக்கான மக்கள் வாஷிங்டனில் நஷனல்மால் வீதியில் கூடி விட்டனர். இங்கு கூடிய மக்கள் கூட்டமானது தசாப்தங்களிலேயே மிகப் பெரிய கூட்டமென்று சில சமயங்களில் இதுவே எப்போதுமே மிக பெரிய மக்கள் திரள்வாக இருக்கக் கூடுமென்றும் அமெரிக்க ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

ஒபாமா வாழ்க்கை குறிப்பு:

முழுப் பெயர் – பாரக் ஹுசேன் ஒபாமா.
வயது – 47
பிறந்த நாள் – 1961, ஆகஸ்ட், 4.
பிறந்த இடம் – ஹோனலுலு, ஹவாய்.
படிப்பு – கொலம்பியா பல்கலைக்கழகம், ஹார்வர்ட் சட்ட பள்ளி.
மனைவி – மிச்சல் ராபின்சன் ஒபாமா.
குழந்தைகள் – மலியா (10), சாஷா (7).
மதம் – ஐக்கிய கிறிஸ்தவ சர்ச்.
கட்சி – ஜனநாயகக் கட்சி.

குடும்பம் – கென்ய தந்தைக்கும், வெள்ளையர் இன அமெரிக்க தாய்க்கும் பிறந்தவர் ஒபாமா. தந்தை பாரக் ஒபாமா சீனியர், ஹவாய் பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டிருந்தபோது ஒபாமாவின் தாயான ஆன் துங்காமை மணந்தார்.

ஒபாமா பிறந்த 2 வருடத்திலேயே இருவரும் பிரிந்து விட்டனர். பின்னர் ஒபாமாவின் தந்தை கென்யாவுக்குத் திரும்பி விட்டார். அங்கு தலை சிறந்த பொருளாதார நிபுணராக அவர் விளங்கினார். 1982ம் ஆண்டு கார் விபத்தில் அவர் மரணமடைந்தார்.

ஒபாமாவின் தாயார் ஆன், இந்தோனேசியாவைச் சேர்ந்த லோலோ சொயட்டரோ என்பவரை 2வது திருமணம் செய்து கொண்டு இந்தோனேசியாவுக்கு இடம் பெயர்ந்தார். அங்குதான் ஒபாமா தனது 10 வயது வரை வாழ்ந்தார்.

பின்னர் ஹவாய் திரும்பிய அவர் தனது தாத்தா, பாட்டியுடன் வசித்தார்.

ஒபாமாவுக்கு அவரது தந்தையின் பிற திருமணங்கள் மூலம் 7 சகோதர, சகோதரிகள் கென்யாவில் உள்ளனர். அதேபோல அவரது தாயாரின் 2வது திருமணத்தின் மூலம், மாயா சொயோட்டரோ என்ற சகோதரி உள்ளார்.

us_obama.jpg

us_obama002-2001.jpg

obama-20-01.jpg

us_obama-003.jpg

us_obama-04.jpg

பாக்கிஸ்தானுக்கு இந்தியா கிரிக்கட் அணி செல்லவில்லை. ஆனால், இலங்கை அணி பாகிஸ்தானிலும், இந்தியா அணி இலங்கையிலும் விளையாடுகின்றன. – ஏகாந்தி

pakistan-c-teem.jpgசர்வதேச கிறிக்கட் கட்டுப்பாட்டுசபையின் (ICC) நேர அட்டவணைப்படி இந்தக்காலகட்டங்களில் இந்திய கிறிக்கட் அணியினர் பாக்கிஸ்தானுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ள வேண்டும். ஆனால், மும்பாய் தாக்குதலையடுத்து இச்சுற்றுப் பயணம் தடையானது.

இந்நிலையில் 3 ஒரு நாள் போட்டிகளிலும் 2 டெஸ்ட் போட்டிகளிலும் பாக்கிஸ்தானுடன் விளையாட இலங்கை அணி விருப்பம் தெரிவித்தது. அதேநேரம், இலங்கைக்கான 5 ஒரு நாள் போட்டிகளிலும் 20க்கு 20 போட்டியொன்றிலும் கலந்துகொள்ள இந்தியா அணி இம்மாத இறுதியில் இலங்கை வரவுள்ளது.

மஹெல ஜயவர்தன தலைமையிலான இலங்கை கிரிக்கெட் அணி 3 ஒரு நாள் போட்டியில் விளையாடுவதற்காக தற்போது பாகிஸ்தான் சென்றுள்ளது.

இலங்கை வீரர்களுக்கு வரலாறு காணாத வகையில் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. பாதுகாப்பு பிரச்சினை காரணமாகவே சமீபகாலமாக பாகிஸ்தானில் விளையாட எந்த அணியும் செல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்தாண்டில் பாக்கிஸ்தானில் பாதுகாப்பு நிலைமையைக் காரணம் காட்டி அவுஸ்திரேலியா அணி முதலில் பயணத்தை ரத்து செய்தது. அதன் பிறகு கடந்த செப்டம்பர் மாதம் பாக்கிஸ்தானில் நடைபெற இருந்த சம்பியன் கிண்ணப் போட்டி தள்ளி வைக்கப்பட்டது. 

பாக்கிஸ்தானுக்கு இந்தியா அணி செல்வதற்கான சகல ஏற்பாடுகளும் நடைபெற்றிருந்த நேரத்திலே மும்பாய் தாக்குதல் இடம்பெற்றது. மும்பாய் தாக்குதலையடுத்து இரு நாடுகளுக்குமிடையே ஏற்பட்ட முறுகல் நிலை காரணமாக இந்திய அணி பாகிஸ்தான் பயணத்தை ரத்து செய்தது.

இந்நிலையில் தற்போது இலங்கை அணி அங்கு சென்று உள்ளது.

பாகிஸ்தான் – இலங்கை அணிகள் மோதும் முதல் ஒரு நாள் போட்டி கராச்சியில் இன்று (20) செவ்வாய்க்கிழமை நடக்கிறது. 2 வது போட்டி நாளை (21) (புதன்கிழமை)யும் 3 வது மற்றும் கடைசி போட்டி 24 ஆம் திகதியும் (சனிக்கிழமை) நடைபெறவுள்ளது. இந்த 3 ஒரு நாள் போட்டிகளும் பகல் – இரவாக ஆட்டங்களாக நடைபெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

3 ஒரு நாள் போட்டிகளும் முடிவடைந்த பின்பு இலங்கை அணி தாயகம் திரும்பவுள்ளது.

இதைத் தொடர்ந்து இந்திய அணியுடன் இலங்கையில் 5 ஒரு நாள் போட்டிகளில் இலங்கை அணி ஆடவுள்ளது. அத்துடன்,  20க்கு 20 போட்டியொன்றும் இந்திய அணிக்கெதிராக நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இந்திய அணியுடனான போட்டிகள் இம்மாதம் 28ஆந் திகதி தொடக்கம் பெப்ரவரி மாதம் 10ஆந் திகதி வரை நடைபெறவுள்ளது.

இந்திய அணி இலங்கைக்கு விஜயம் செய்வது தொடர்பாக தமிழ் நாட்டில் பல்வேறு அரசியல் கட்சிகள் பலத்த எதிர்ப்பினைக் காட்டி வருகின்றது. இலங்கையில் நடைபெறும் யுத்த நிலைமை காரணமாக இந்திய அணி இலங்கைக்குச் செல்லக் கூடாது என ஆர்ப்பாட்டங்கள் நடைபெறுகின்றன.

இறுதியாக கடந்த 19ம் திகதி இலங்கைக்கு இந்திய கிரிக்கெட் அணியை அணியை அனுப்பக்கூடாது என்று பாமகவின் வழக்கறிஞர்கள் சமூக நீதி பேரவை சார்பில் சென்னையில் ஆர்ப்பாட்டமொன்றினை நடத்தினர். பா.ம.க.வின் அங்கமான வழக்கறிஞர்கள் சமூகநீதி பேரவை சார்பில் இந்த  ஆர்ப்பாட்டம் சென்னை ஐகோர்ட்டு முன்பு  நடத்தப்பட்டது. சமூகநீதி பேரவை தலைவர் கே.பாலு வக்கீல்கள் சங்க தலைவர் ஆர்.சி.பால்கனகராஜ் வக்கீல் எம்.பழனிமுத்து உள்பட நூற்றுக்கும் மேற்பட்ட வக்கீல்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் இலங்கைக்கு,  இந்திய கிரிக்கெட் அணியை அனுப்பக்கூடாது என்றும்,   இலங்கையில் நடைபெறும் போரை மத்திய அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என்றும்,  தமிழர்களை கொன்று குவிக்கும் இலங்கையில் கிரிக்கெட் விளையாட்டு ஒரு கேடா என்றும்,   இந்திய கிரிக்கெட் வாரியம் பணம் கொழிக்க தமிழன் செத்து மடியும் இலங்கைதான் கிடைத்ததா? என்றும்,  அப்பாவி தமிழன் செத்து மடிகிறான், அங்கே கிரிக்கெட் விளையாட்டு ஒரு கேடா’ என்றும் பல கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

ஆனால், இந்த ஆர்ப்பாட்டங்கள் எதையும் இந்திய கவனத்தில் எடுத்துக் கொள்ளவில்லை.  இந் நிலையில் இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள இந்தியக் கிரிக்கெட் அணியில் இடம்பெறும் வீரர்களின் பெயர் விபரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

முதல் ஒருநாள் போட்டி 28 ஆம் திகதி தம்புள்ளையில் நடக்கிறது. இதற்கான இந்திய அணித் தேர்வு ஞாயிற்றுக்கிழமை மும்பையில் நடந்தது. தேர்வுக்குழு தலைவர் ஸ்ரீகாந்த் தலைமையிலான குழுவினர் வீரர்களை தேர்வு செய்தனர். அணி விபரம் வருமாறு; வீரேந்திர ஷேவாக், கௌதம் கம்பீர், சச்சின் டெண்டுல்கர், தோனி (கப்டன்)இ யுவராஜ் சிங், ரோஹித் சர்மா, யூசப்பதான்,  சகீர்கான்,  இஷாந்த் சர்மா,  ஓஜா, முனாப் பட்டேல்,  இர்பான் பதான்,  சுரேஷ் ரெய்னா, ரவீந்திர ஜடேஜா,  பிரவீன் குமார். காயம் காரணமாக ஹர்பஜன் சிங் இடம்பெறவில்லை.

25 ஆம் திகதி இலங்கை வரவுள்ள இந்திய கிரிக்கெட் அணி இலங்கை அணியுடன் 5 ஒரு நாள் போட்டிகள்,  ஒரு 20 ஓவர் போட்டி என மொத்தம் 6 போட்டிகளில் விளையாடவுள்ளது.

இந்தியாவுடனான ஒரு நாள் தொடர் முடிந்த பிறகு இலங்கை அணி மீண்டும் பாகிஸ்தான் செல்லவுள்ளது. மீண்டும் பாக்கிஸ்தான் செல்லும் இலங்கை அணி பாக்கிஸ்தான் அணிக்கெதிராக  2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ளது.

இந்த கிரிக்கட் போட்டிகளில் இலங்கை பாக்கிஸ்தானில் சுற்றுலா மேற்கொள்வது குறித்து ஆரம்பத்தில் இந்திய தமிழ்நாட்டில் சில அரசியல் கட்சிகள் பலத்த கண்டனம் தெரிவித்தமை ஞாபகமிருக்கலாம்.

இலங்கையில் தமிழ் மக்களுக்கெதிராக யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நேரத்தில் இந்தியாவால் மறுக்கப்பட்ட ஒரு போட்டி தொடரில் இலங்கை அணி கலந்துகொள்வதினூடாக இலங்கை அரசாங்கத்துக்கும்,  பாக்கிஸ்தான் அரசாங்கத்துக்கும் இடையில் யுத்த உறவுகள் இருப்பதாக கூறியே இந்த கண்டனங்கள் ஆரம்பத்தில் முன்வைக்கப்பட்டன. இந்த கண்டனங்கள் எதையும் இந்தியாவின் மத்திய அரசோ,  இந்திய கிரிக்கட் வாரியமோ கண்டுகொள்ளவில்லை. இப்படிப்பட்ட நிலையில்தான் இந்திய கிரிக்கட் அணி இம்மாத இறுதியில் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளமை குறிப்பிடத்தக்கது.