நஜிமில்லாஹி

நஜிமில்லாஹி

கிழக்கு மாகாணத்தில் காணிப்பிரச்சினை தீராத தலைவலி – நஜிமிலாஹி

221009eastern-provincial.jpgகிழக்கு மாகாணத்தில் காணிப்பிரச்சினை முக்கியமான பிரச்சினையாகக் காணப்படுகின்றது. சுதந்திர இலங்கை துவக்கத்திலிருந்து கிழக்கு மாகாணத்தில் காணிப்பிரச்சினை முக்கியமான பிரச்சினையாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. இவ்வம்சம் உச்ச  நிலையை அடைந்துள்ளதாக தற்போதைய அரசியல் நிகழ்வுகள் கோடிட்டுக் காட்டுகின்றன. இதனால் கிழக்கு மாகாணக் காணிகள் சுவீகரிக்கப்படுவதாக மாகாணசபை கவலையும் ஐயமும் அடைந்துள்ளது.

ஏனெனில்,  கிழக்கு மாகாண சபை தேர்தல் நடைபெறுவதற்கு முன்னரே கிழக்கில் காணிப்பிரச்சினை சூடாக விவாதிக்கப்பட்டு வந்ததை நாம் அவதானிக்கக் கூடியதாக இருந்தது. அந்தவகையிலே இன்று வரையும் கிழக்கு மாகாண சபையில் நீட்சி கொண்டு செல்லும் பிரச்சினையாகவே காணிப்பிரச்சினை காணப்படுகின்றது.

13வது திருத்தச் சட்டத்தின் அடிப்படையில் குறிப்பிட்டு சொல்லக்கூடிய சில அதிகாரங்கள் மாகாண சபைகளுக்கு வழங்கப்பட்டிருக்கின்றது. அந்தவகையில் காணிப்பகிர்வும்  முக்கியமான அதிகாரப் பகிர்வாக காணப்படுகிறது. ஆனாலும் இந்த அதிகாரப் பகிர்வு நடைமுறைக்கு அல்லது செயற்பாட்டுக்கு வரவில்லை என்பதுதான் யதார்த்தம். ஏனெனில் மாகாண சபைகளின் உருவாக்கம் பரீட்சிக்கப்பட வேண்டிய இடங்களுக்கு கடந்த காலங்களில் இந்த மாகாண சபை செயற்படுத்தவில்லை.

கிழக்கு மாகாண சபை உருவாக்கத்தின் பிற்பாடுதான 13வது திருத்தச் சட்டத்தின் கேள்விகள் எழத் தொடங்கின. ஏனெனில் காயப்பட்ட இடத்துக்கு தற்போதுதான் மருந்துகொண்டு சேர்க்கப்பட்டுள்ளது. தற்போது கிழக்கு மாகாண சபை காயப்பட்டுள்ளது. அதற்கு மருந்து போடும் நடவடிக்கையில் அரசாங்கம் இறங்கியுள்ளது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் குழுவினரால் வடக்கு,  கிழக்கு மாகாண நோய்கள் தீர்க்கப்படும் என்ற நம்பிக்கை பலமாக தென்படுகிறது. ஏனெனில் 13வது திருத்தச் சட்டத்துக்கும் கூடுதலான,  மேலதிகமான அரசியல் தீர்வுகள் வழங்கப்படும் என ஜனாதிபதி திடமாக தெரிவித்துள்ளார். எனவேதான் வடக்கு,  கிழக்கு மாகாணங்களுக்கு நிரந்தரமான ஒரு தீர்வு கிட்டும் என்ற நம்பிக்கை மக்களிடம் காணப்படுகிறது.

ஆனால் தற்போதைய அரசியல் நகர்வுகளுக்கு இனவாத அரசியல்வாதிகள் தடைகளை ஏற்படுத்தக்கூடும் என்ற ஐயப்பாடுகளும் இல்லாமலில்லை. ஏனெனில் இனவாதக் கருத்துக்களை தாராளமாக வெளியிட்டு வருபவர்கள் அரசாங்கத்தின் முக்கிய புள்ளிகளாக இருக்கின்றார்கள். இருந்தாலும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின்அரசியல் நகர்வுகளின் மூலம் இவர்களின் செல்வாக்கு பலமானதாக இருக்கமுடியாது என்ற கருத்தையும் புறக்கணிக்க முடியாத நிலை காணப்படுகின்றது. கடந்த மூன்று தசாப்த காலமாக பலதுறைகளிலும் சிறந்து விளங்கிய LTTE இயக்கத்தினரின் இருப்பை இல்லாதொழித்தமையானது ஒரு சுலபமான காரியமாக பார்க்க முடியாது.

கிழக்கு மாகாணத்தில் காணிகள் தனியார் துறையினருக்கு விற்கப்படுவதாக கருத்துக்கள் எழுந்துள்ளன. இந்தப் பிரச்சினை தொடர்பாக கடந்த கிழக்கு மாகாண சபையில் சூடாக விவாதிக்கப்பட்டது. இந்தக் காணிப்பிரச்சினை தொடர்பாக தீர்க்கமான முடிவு எடுக்கப்பட வேண்டும் என பலரும் கருத்துக்கள் தெரிவித்திருந்தனர். கிழக்கு மாகாண சபைக்குட்பட்ட பகுதியில் மத்திய அரசாங்கம் கிழக்கு மாகாண சபையின் அனுமதியின்றி காணிகளை சுவீகரிப்பதாக கருத்துக்கள் பரிமாறப்பட்டன.

கிழக்கு மாகாண சபை எல்லைக்குட்பட்ட மத்திய அரசாங்கத்தின் காணியை மாகாண சபைக்குத் தெரியாமல் பெறமுடியாது என்ற தீர்மானத்தை மத்திய அரசுக்கு தெரியப்படுத்த வேண்டும் என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆர். துரைரட்ணசிங்கம் குறிப்பிட்டார். அதேபோன்று மத்திய அரசாங்கமானது மத்திய அரசாங்கத்துக்குரிய காணியை பெறுவதாயின் அது எந்த மாவட்டத்துக்கு உட்பட்டதாக இருந்தாலும் சரி இந்த மாகாண சபையுடன் பேசித்தான் அதில் ஒரு பொதுவான உடன்பாட்டுக்க வரவேண்டும். இதில் குறிப்பாக திருகோணமலையிலும்,  அம்பாறையிலும் மத்திய அரசாங்கம் என்ன செய்கிறது என்றால், மத்திய அரசாங்கத்துக்கு காணி தேவை எனும்போது DS. மூலமாகவோ,  GA மூலமாகவோ தங்களுடைய அதிகாரத்தைப் பாவித்து காணி சுவீகரிப்புத் துஷ்பிரயோகம் செய்யப்படுகின்ற ஒரு துர்ப்பாக்கிய நிலைமை கிழக்கு மாகாணத்துக்கு ஏற்பட்டிருக்கிறது. “தொழிலை ஊக்குவிப்பதற்காக மேற்கொள்ளப்படுகின்ற திட்டம்” என்ற தலையங்கங்களுடன் காணி சுவீகரிப்பு இடம்பெறுவதாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆர். துரைரட்ணசிங்கம் சுட்டிக் காட்டினார்.

அதேபோன்று கிழக்கு மாகாண சபையின் எதர்க்கட்சித் தலைவரான பஷீர் சேகுதாவூத் கிழக்கு மாகாணத்திலே இருக்கின்ற மொத்த தரிசு நிலங்கள் எத்தனை ஹெக்ரேயர் என்றும் அதில் இச்சபை உருவாக்கப்பட்டதன் பின்னர் தனியார் கம்பனிகளுக்கு காணிகள் வழங்கப்பட்டிருக்கிறதா? அவ்வாறு வழங்கப்பட்டிருந்தால் எந்தெந்த காணிகள் எந்தெந்த இடத்தில் எக்கம்பனிகளுக்கு வழங்கப்பட்டிருக்கின்றன என்ற விபரத்தை இந்த சபைக்கு சமர்ப்பிக்க வேண்டும். அடுத்ததாக,  அதே விடயத்திலே இந்த காணி வழங்குவதற்குரிய ஒரு ஆலோசனையாவது காணியை வழங்கியவர்கள் இச்சபையிடம் கேட்டார்களா? அந்த விடயம் கிழக்கு மாகாண சபைக்குத் தெரியுமா?  அல்லது கிழக்கு மாகாண காணியமைச்சுக்கு தெரியுமா? சட்டத்திலே மாகாண காணி சம்பந்தமான விடயங்களை மத்திய அரசும், மாகாண அரசும் கலந்தாலோசித்து  செய்ய வேண்டும் என இருக்கிறது.  ஆனால் அந்தக் காணிக்குரிய தேசிய ஆணைக்குழு ஒன்று நியமிக்கப்படவேண்டும் என்றிருந்தும்கூட கடந்த 21 ஆண்டுகளாக “தேசிய ஆணைக்குழு” ஒன்று நியமிக்கப்படவில்லை. இவ்வாறான ஒரு நிலையிலே எங்களுக்கு இருக்கின்ற பிரதானமான பிரச்சினை காணிப்பிரச்சினை என்ற அடிப்படையிலே பலவிதமான சந்தேகங்கள் எம்மத்தியில் நிலவுகிறது. இச்சூழ்நிலையிலே யாருக்கும் தெரியாமல் கிழக்கு
மாகாணத்திலே இருக்கின்ற காணிகள் களவாடப்பட்டு விடுமா? என்ற சந்தேகம் கிழக்கு மாகாண மககளுக்கு ஏற்பட்டிருக்கின்றது என குறிப்பிட்டார்.

எனவே,  கிழக்கு மாகாண காணிகள் தனியார் கம்பனிகளுக்கு விற்கப்பட்டுள்ளதா? அல்லது சுவீகரிக்கப்பட்டுள்ளதா? போன்ற ஐயபாடுகளுக்கு முதலமைச்சர் எஸ் சந்திரகாந்தன் பதிலளிக்கும்போது கிழக்கு மாகாணத்தில் இருந்த காணிகள் ஒரு தனிநபருக்கு அல்லது கூட்டுத்தாபனங்களுக்கு வழங்கப்படுகின்றபோது அது சம்பந்தமாக அதைப் பெற்றுக் கொள்ளக்கூடிய அங்கீகாரம் அமைச்சரவை மூலமாகத்தான் செய்யப்பட வேண்டும். அவ்வாறு செய்யப்பட்ட பின்னர்தான் அது அனுமதி அளிக்கப்படும். ஆனால் அந்த விடயங்கள் எங்களையும் தாண்டி நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது  என்பதை என்னால் அவதானிக்க முடிகிறது.

இதேபோன்று சுற்றுலாத்துறையினதும் பிரச்சினை வந்திருக்கிறது. உதாரணமாக பாசிக்குடாவில் இருக்கின்ற 280 ஏக்கர் காணியிலும் அதில் கார் பாக்கிங் தவிர ஏனைய காணிகள் அனைத்துமே தனியார் கம்பனிகளுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. இந்தப் பகுதியில் பிரதேச சபைக்கு சொந்தமாக இருந்த காணிகள் கூட அடையாளம் தெரியாமல் போயிருக்கிறது. இதை நாம் பாரதூரமான பிரச்சினையாகத்தான் பார்க்கிறோம். இதுதொடர்பாக முதலமைச்சர் என்ற வகையில் காணி சம்பந்தமான அமைச்சர்களுக்கும்,  அதிகாரிகளுக்கும் கடிதம் எழுதியுள்ளேன். பதில் வரும்போது  அந்தப் பதிலை வைத்துக் கொண்டு மேலதிக நடவடிக்கைகள் எடுக்கலாம் என்று நினைக்கிறேன்.

அதேபோன்று வெளிநாட்டு நிறுவனத்திற்கு 15 000 ஏக்கர் காணியை மாகாண சபைக்கு தெரியாமலே அங்கீகாரம் கொடுக்கின்றவர்கள். இன்று அகதிகளாக மட்டக்களப்பிலிருந்து திருகோணமலைக்குக் கொண்டுவந்து இறக்கப்பட்டவர்களுக்கு 20 பேர்ச் காணியைக் கொடுப்பதற்குக் கூட அதிகாரமளிப்பதற்கு மறுக்கின்றார்கள். காலங்காலமாக வாழ்ந்துவந்த மக்கள் அவர்களது இடங்கள் வேறு தேவைகளுக்காக எடுக்கப்பட்டிருந்தாலும் புதிய காணிகளை 20 பேர்ச்சுக்கு மேல் கொடுக்கக்கூடாது என்று வாதாடிக் கொண்டிருக்கிறார்கள். இதுதான் நிலைமை. கிழக்கு மாகாண சபை ஏன் உருவாக்கப்பட்டது? எந்த மக்களை திருப்திப்படுத்துவதற்கு உருவாக்கப்பட்டது என்று பார்க்கும்போது அதில் பிரச்சினை இருந்துகொண்டு தான் இருக்கிறது. அதேபோன்று ஏனைய மாகாண சபைகளில் இருக்கின்ற உரிமை கூட எங்கள் மாகாணத்தில் இல்லாதது மிகவும் வேதனையாகத்தான் நான் பார்க்கிறேன். ஒன்றரை வருடம் தாண்டியும் எங்களது அதிகாரப் பிரச்சினைகளில் விட்டுக் கொடுப்புக்களை செய்துகொண்டிருக்க முடியாது என்ற நிலைக்கு நாங்களும் தள்ளப்பட்டிருக்கிறோம்.

மேற்படி முதலமைச்சரின் கருத்துக்கள் கிழக்கு மாகாண சபைக்கு சுதந்திரமில்லை என்பதையே  காட்டுகிறது. எனவே தமது மாகாணத்திற்குரிய அதிகாரங்களைப் போராடிப் பெறவேண்டிய தேவை இன்று கிழக்கு மாகாண சபைக்கு ஏற்பட்டிருக்கின்றது. இந்தப் போராட்டத்தில் கிழக்கு மாகாண சபை வெற்றிபெறுமா என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டியுள்ளது.

கிழக்கு மாகாண ஆளுனருக்கும், ஆளும் தரப்புக்குமிடையிலான முறுகல் உச்சகட்டம் – நஜிமிலாஹி

ep-map.jpgஅதிகாரங்கள் மனிதனை முதன்மைப்படுத்துகிறது. அதிகாரமுள்ள மனிதன் முன் சகலதும் அடிமைதான் என்பதுதான் இன்றைய உலக அரசியலாக காணப்படுகிறது. இந்த அரசியல் எமது நாட்டுக்கும் புதுமையானதல்ல. அரசியல் என்ற சொல்லாடல் உச்சரிக்கப்படும் பொழுது அது அதிகாரத்தையும் உள்வாங்கிக் கொண்டு அதன் தன்மையைப் பிரதிபலிக்கும் முகமாகவே இருக்கிறது. இந்த அதிகாரங்கள் என்ற வார்த்தை தற்போது கிழக்கு மாகாண சபையில் சூடான ஒரு விவாதப் பொருளாக மாறியிருப்பவதை நாம் அவதானிக்கலாம்.

இலங்கை – இந்திய ஒப்பந்தத்தின்படி மாகாண சபைகள் உருவாக்கம் இலங்கை அரசியல் அமைப்பில் இடம்பெறுகிறது. இந்தியாவிலிருக்கும் மாநில அரசாங்க முறைக்கு ஒத்ததாக இலங்கையில் மாகாண சபைகள் கொண்டுவரப்பட்டன. இருந்தாலும் இந்திய மாநிலங்களுக்கும்,  இலங்கை மாகாணங்களுக்குமிடையில் அதிகாரங்களை ஒப்பிட்டு நோக்கும் பொழுது இந்திய மாநிலங்கள் பலமானதாக காணப்படுகிறது. இருந்தாலும் இலங்கைப் பிரச்சினையை தணிக்கும் முகமாகக் கொண்டுவரப்பட்ட படியால் இலங்கை மாகாண சபைகளுக்கு குறிப்பிட்டு சொல்லக்கூடிய அதிகாரங்கள் வழங்கப்பட்டிருக்கின்றன. இந்த மாகாண சபைகள் நடைமுறைப்படுத்தப்பட்டு சிறுபான்மை சமூகம் குறிப்பாக தமிழர்கள் தங்களது உரிமைகளை படிப்படியாக பெற்றுக்கொள்வதற்கான ஒரு ஏற்பாடாகத்தான் 13ம் அரசியல் சீர்திருத்தத்தின்படி மாகாண சபைகள் அரசாங்கமுறை புகுத்தப்பட்டதாக அரசியல் விமர்சகர்கள் கருதினார்கள்.

ஆனால் இந்த வழிமுறைக்கு உடன்பட மறுத்த தமிழீழ விடுதலைப் புலிகள் மாகாண அரசாங்க முறைக்கு தங்களது கடும் எதிர்ப்பை பிரயோகித்தார்கள். இந்த அரசாங்க முறையை இலங்கைக்குக் கொண்டுவந்த இந்தியப் பிரதமர் ராஜீவ்காந்தியை புலிகள் கொன்று சர்வதேச ரீதியாக மாகாண அரசாங்க முறையை தாங்கள் எதிர்பபதாக பிரபாகரன் தமது அரசியல் நகர்வை மேற்கொண்டார்.

கடைசியில் பிரபாகரனின் தோல்விக்கும் மாகாண அரசாங்க முறை முக்கிய புள்ளியாக அல்லது கருவாக இருந்தது என்பதை யாரும் மறுக்க முடியாது. இலங்கைக்கு மாகாண அரசாங்க முறையை கொண்டு வந்தவர் கொலை செய்யப்பட்டு இரு தசாப்தங்களின் பின்னர் மாகாண அரசாங்க முறையை எதிர்த்தவரும் கொலை செய்யப்பட்டுள்ளார். எனவே,  ஆரம்பம் தொடக்கம் இன்று வரையும் மாகாண அரசாங்க முறைமை இலங்கை அரசியலில் முக்கிய பங்காளியாக காணப்படுகிறது.

இந்த வகையில் 21 வருடங்களின் பின் ஏற்படுத்தப்பட்ட கிழக்கு மாகாண சபை தற்போது அதிகாரங்கள் தொடர்பில் மத்திய அரசாங்கத்துக்கும் மாநில அரசாங்கத்துக்கும் இடையில் கேள்விகள் எழத் தொடங்கியுள்ளதை நாம் அவதானிக்கலாம். கிழக்கு ஆளுனர் தமது அதிகாரத்தைப் பயன்படுத்துவதால் மாகாண சபையை சுயமாகக் கொண்டு நடாத்த முடியாத நிலை எழுந்துள்ளதாக குற்றம் சாட்டுகிறது.

221009eastern-provincial.jpgஆளுனர் முதலமைச்சர் உட்பட அமைச்சர்களுக்கு கூடுதலான அழுத்தங்களை பிரயோகிப்பதாகவும் இதனால் கிழக்கு மாகாண மக்களுக்கு மாகாண சபையால் எதுவிதப் பயனும் கிடைக்காமல் போகும் என்ற மனப்பதிவுடன் கிழக்கு மாகாண அமைச்சர்கள் சோர்ந்திருக்கின்றார்கள். கிழக்கு மாகாண ஆளுனர் மொஹான் விஜயவிக்கிரம கிழக்கு மாகாண சபையினை தீர்மானிக்கும் சக்தியாக தென்படுகிறார். இதனை அவரே வெளிப்படையாக சொல்லியிருக்கிறார். மாகாண சபையைக் கலைக்கும் அதிகாரம் ஆளனரின் அதிகாரங்களின் கோடிட்டுக் காட்ட வேண்டிய பந்தியாகும்.

முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்த் அவர்களின் செயலாளராக கடமையாற்றிய மாமங்கராஜா முதலமைச்சரின் செயலாளர் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். இவர் 60 வயதைக் கடந்ததால் நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஆனால் முதலமைச்சர் ஆளுனரிடம் மாமங்கராஜாவை இன்னும் 02 வருடங்களுக்கு பதவி நீடிப்பு செய்யுமாறு கேட்டு ஆளுனர் அதற்கான அனுமதியைக் கொடுக்க மறுத்துள்ளார். அதேபோன்று கிழக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளராகக் கடமையாற்றிய தயாபரன் என்பவரை ஆளுனர் இடைநிறுத்தம் செய்துள்ளார். இவ்வாறான சம்பவங்களால் முதலமைச்சருக்கும் ஆளுனருக்குமிடையிலான நிர்வாக முறுகல்கள் ஏற்பட்டுள்ளன.

221009hisbullah.jpgஅதேபோன்று கிழக்கு மாகாண சுகாதார அமைச்சரும் அமைச்சரவை பேச்சாளருமான எம். எல். ஏ. எம். ஹிஸ்புல்லாஹ் அதிகாரம் தொடர்பில் அடிக்கடி ஆளுனரிடம் முரண்பட்ட நிலையில் காணப்படுகிறார்.  ஒரு சாதாரண சுகாதார தொழிலாளியை நியமிக்கும் அதிகாரம் தனக்குதான் உண்டு என ஆளுனர் செயற்படுகிறார். இவ்வாறு அனைத்து துறைகளிலும் ஆளுனரின் தலையீடு இருப்பதாக அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் கருத்து தெரிவித்துள்ளார். ஆளுனரின் தலையீடு அமைவதால் ஏனைய மாகாண சபைகளுக்குள்ள அதிகாரம் கூட கிழக்கு மாகாண சபைக்கு இல்லை என்று அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் குறிப்பிட்டுள்ளார்.

கிழக்கு மாகாண சபை அதிகாரம் தொடர்பில் ஏற்பட்டுள்ள கருத்து முரண்பாடுகளால் கிழக்கு அபிவிருத்திகள் கூட பின்தள்ளப்படலாம் அல்லது காலம் நீடித்து செல்லலாம் என்ற கருத்தும் தற்போது காணப்படுகிறது. மக்கள் பிரதிநிதிகள் தமது சேவைகளை வழங்க முடியாத ஒரு நிலை எழுந்துள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகிறார்கள். மக்களால் தெரிவு செய்யப்பட்டவர்களை விட ஆளுனர் பலசாலியாக இருப்பது மாகாண சபை நிர்வாகத்தை கொண்டு நடத்துவதில் பல முட்டுக்கட்டைகள் ஏற்படும் என்ற கருத்தில் கிழக்கு மாகாண சபை ஆளுந்தரப்பு உள்ளது.

13ம் அரசியல் சிர்திருத்தத்தின்படி கொண்டுவரப்பட்ட மாகாண சபை அரசாங்க முறைமையின் மீது தொடுக்கப்பட்ட விமர்சனங்களில் முக்கியமானது ஆளுனர் தொடர்பானது ஏனெனில் மக்களின் விருப்புக்கு அப்பாற்பட்டவராக ஆளுனர் காணப்படுகிறார். மாகாண சபையின் எதிர்பார்ப்புக்கள் ஆளுனரின் மிதமிஞ்சிய அதிகாரத்தினால் இல்லாமல் போய்விடுகிறது. எனவே அதிகாரம் தொடர்பில் கிழக்கு மாகாண சபையில் சர்ச்சைகள் எழுந்தவாறு உள்ளன.

ஆளுனருக்கு எதிராக கிழக்கு மாகாண முதலமைச்சர் உட்பட அமைச்சர்கள் ஆளுனருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தைக் கொண்டுவருவதற்கு முயற்சிகள் செய்தபோதும் அதனை அறிந்த ஆளுனர் தனக்கு எதிராக மாகாண சபை செயற்பட முன்வந்தால் நான் 24 மணித்தியாலத்துக்குள் சபையைக் கலைத்து விடுவேன் என எச்சரித்துள்ளார். இதனால் கிழக்கு மாகாண சபை அமைச்சர்கள் ஆளனரின் எச்சரிக்கைக்குப் பயந்து தமது இருப்பை தக்கவைத்துக் கொண்டு காலத்தைக் கடத்தும் நிலையில் காணப்படுகிறார்கள். இவ்வாறு கிழக்கு மாகாண முதலமைச்சர் உட்பட அமைச்சர்கள் செல்லாக் காசாகவே இருக்கிறார்கள்.

மாகாண சபையைக் கலைத்தால் அடுத்த தேர்தலில் தமது நிலையை நினைத்துப் பயந்துபோய் காலத்தைக் கடத்துகிறார்கள் கிழக்கு மாகாண சபை அமைச்சர்கள் குழாம்.

ஊடகவியலாளர் எஸ்.எம். நஜீம் இராணுவத்தினரால் கைதுசெய்யப்பட்டார்

ஊடக அடையாள அட்டையை ஏற்றுக்கொள்ள முடியாது என தெரிவித்து இராணுவத்தினர் ஊடகவியலாளர் எஸ்.எம். நஜீம் அவர்களை நேற்று இரவு 8.30 மணியளவில் கைதுசெய்தனர். இவர் ‘மாற்றம்’ பத்திரிகையின் ஆசிரியர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கொழும்பு பொரலை கொட்டா வீதியில் வைத்து அவரை இராணுவத்தினர் கைதுசெய்தனர். அப்போது தன்னை உறுதிப்படுத்திக் கொள்வதற்கான ஆவணங்களை பாதுகாப்பு தரப்பிடம் சமர்ப்பித்தும் அவைகளை இராணுவத்தினர் ஏற்றுக் கொள்ளவில்லை. அதேபோன்று அரசாங்க தகவல் திணைக்களத்தினால் வழங்கப்பட்ட ஊடக அடையாள அட்டையைக் காட்டிய போதும் அதனை ஏற்றுக்கொள்ள முடியாது என தெரிவித்து இராணுவத்தினர் பொரளை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

பொரலை பொலிஸ் நிலையம் அவரை விசாரணைக்குட்படுத்தி சரிகண்ட போதும் குறிப்பிட்ட இராணுவ அதிகாரியின் கட்டாயத்தால் ஊடகவியாலாளர் எஸ்.எம். நஜீம் பொரலை பொலிஸாரால் தடுத்து வைக்கப்பட்டார்.

இதனையடுத்து ‘மாற்றம்’ பத்திரிகையின் உரிமையாளர்கள் பொலிஸ் நிலையம் வந்து நிபந்தனைகளின் அடிப்படையில் இரவு 10.30 மணியளவில் விடுவித்துள்ளனர்.

ஊடக அடையாள அட்டை பாதுகாப்புத்தரப்பிடம் காட்டிய போதும் பாதுகாப்புத்தரப்பினர் தகாத வார்த்தைப் பிரயோகங்களை உபயோகித்தாகவும் அதனை ஏற்றுக்கொள்ள முடியாது என குறிப்பிட்டதாக ஊடகவியலாளர் எஸ்.எம். நஜீம் தெரிவித்தார். 

பாதுகாக்கப்படுவதற்கான உரிமை எங்களுக்கும், பாதுகாப்பதற்கான பொறுப்பு மற்றவர்களுக்குமுண்டு : நஜிமிலாஹி

Sri lanka Mapமனித உரிமைகள் பற்றி அதிகம் பேசப்படும் காலகட்டம் இது. மனித உரிமைகள் பற்றிய சர்வதேச அவதானங்கள் அதிகரித்து வரும் இன்றைய நிலையில் இலங்கை மனித உரிமைகளை மீறும் விடயத்தில் உலகில் முன்னணி இடம் வகிக்கும் நாடுகள் வரிசையில் இடம்பிடித்துள்ளதை நாம் அறிவோம். இன்று மனித உரிமைகளைப் பாதுகாப்பதன் உச்சகட்டமாக ‘பாதுகாப்பதற்கான பொறுப்பு’ (Responsibility to protect-R2P)  என்றொரு கருத்தாக்கம் சர்வதேச அரசியல் அறிஞர்களால் முன் வைக்கப்பட்டுள்ளது.

சர்வதேச நெருக்கடிக் குழு ( International Crisis Group) என்ற அமைப்பின் தலைவர் கரீத் இவான்ஸ் கொழும்பில் நடந்த மாநாடொன்றில் இலங்கைக்கும் இவ்வெண்ணக்கருவின் பொருத்தப்பாடு பற்றி விளக்கினார். “ ஒரு நாட்டில் வாழும் மக்களைப் பாதுகாக்க வேண்டியது அந்த நாட்டு அரசாங்கத்தின் பிரதான பொறுப்பாகும். தனது இயலாமை காரணமாகவோ அன்றி வெறுப்பின் காரணமாகவோ அரசாங்கம் இந்தப் பொறுப்பை ஏற்க வேண்டியது பரந்த சர்வதேச சமூகத்தின் கடமையாகிறது. இதுவே சுருக்கமாக ‘பாதுகாப்பதற்கான பொறுப்பு’என்று சொல்லப்படுகிறது. இலங்கை இப்போது இந்த R2P நிலைமையிலேயே இருக்கிறது”. கரீத் இவான்ஸ் இங்கு மேலும் கூறுகையில் “கம்போடியா ருவாண்டா, ஸ்ரேபிரேனிகா மற்றும் கொசோவோ பாணியிலான பாரியளவிலான கொடூர நிலைமை இப்போது இங்கே காணப்படாமல் இருக்கலாம். அல்லது உடனடியாக அப்படியான ஒரு நிலமை தோன்றும் ஒரு சூழல் இப்போது இங்கு இல்லாமல் இருக்கலாம். ஆனால் அத்தகைய ஒரு மோசமான நிலைமை ஏற்படக்கூடிய ஒரு சூழ்நிலை இப்போது இங்கு இருக்கிறது. எனவே அது ஒரு R2P நிலைமைதான். சர்வதேச சமூகத்தின், இந்த நிலைமை இன்னும் மோசமடைந்து செல்வதைத் தடுப்பதற்கான நடவடிக்கையை இலங்கை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும் என்பதையே இது வேண்டி நிற்கிறது”.  கரீத் இவான்ஸின் இந்தக் கருத்து சில சிங்கள அறிவுஜீவிகளாலும் அரசியல் வாதிகளாலும் கடுமையாக விமர்சிக்கப்பட்டது.
 
எனினும் இலங்கையின் சமகால அரசியல் போக்குகளைப் பார்க்கும் போது எதிர்காலத்தில் இலங்கையை இத்தகையதொரு நிலைமைக்கு இட்டுச்செல்லும் வாய்ப்புகளே அதிகம் உள்ளன என சொல்லத் தோன்றுகிறது. உடல்சார் வன்முறைகள் இல்லாவிட்டாலும் கருத்தியல்சார்  வன்முறை ரீதியாக் சிறுபான்மையோருக்கு எதிராக சிங்களப் பேரினவாதம் செயற்படத் தொடங்கியுள்ளது. குறிப்பாக முஸ்லிம்களுக் கெதிராக இந்தக்கருத்தியல் வன்முறையை ஜாதிக ஹெல உறுமயசார்ந்த அரசியல் அணியினர் மேற்கொண்டு வருகின்றனர். முஸ்லிம்களை வரலாரற்றவர்கள் வந்தேறுகுடிகள் நாட்டுரிமம் அற்றவர்கள் போன்ற  மெகா கதையாடல்களை அவிழ்த்து விடுவதன் மூலம் ஹெல உறுமய இதனைச்சாதித்து வருகிறது. வெகுசன மக்கள் பரப்பில் இது எதிர்காலத்தில் மோசமான விளைவுகளைத் தோற்றுவிக்கலாம். மஹிந்த அரசாங்கம் இந்த இனவாத சக்திகளின் நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தவதாக இல்லை. இராணுவத்தளபதி கூட நாட்டுரிமம் தொடர்பில் அண்மையில் வெளியிட்டிருந்த கருத்தும் சிறுபான்மை நலனுக்கு எதிராகவே அமைந்திருந்தது.
 
இலங்கையின் சமகால அரசியல் முக்கிய அடையாளமாக இனவாதம் இருந்து வருவது ஒன்றும் நமக்குப்புதிதல்ல எனினும் சிறிது காலம் வெளிப்படையான இனவாதக் கருத்துக்கள் மற்றும் செயற்பாடுகள் இங்கு ஓரளவு தணிந்திருந்தன. கிழக்கு அரச கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டதன் பின்னரும் வடக்கில் இராணுவ வெற்றிகள் பலவற்றை அரசாங்கம் அடைந்து வருவதையடுத்தே தற்போது இந்த இனவாத அலை மேற்கிளம்பியுள்ளது. நன்கு திட்டமிடப்பட்ட வகையில் பௌத்த பேரினவாதக் கருத்துநிலை வெகுசனப்பரப்பில் ஊட்டிவளர்க்கப்படுகிறது.

எனவே சிறுபான்மை அரசியல்-சமய தளங்களில் ஒரு பெரும் மோதலை ஏற்படுத்துவதை நோக்கமாக கொண்டதே இச்செயற்பாடு என எண்ணத் தோன்றுகிறது. பௌத்த அடிப்படைவாதம் முஸ்லிம்களின் சமய மற்றும் வர்த்தக நடவடிக்கைகள் குறித்து குறுகிய மனப்பான்மையை கொண்டுள்ளன. தற்போது முஸ்லிம்களின் சில சமய நடவடிக்கைளில் தலையீடுகளைச் செய்து வருகின்றனர். முஸ்லிம்களின் பூர்வீகத்தை மறுக்கின்றனர் அவர்களின் பூர்வீகப் பிரதேசங்களை சிங்களமயப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர்.

இதுவெல்லாம் இப்போது செய்யப்படுவதன் நோக்கமென்ன? அரசாங்கம் இராணுவ வெற்றிகளை அடைந்து வரும் இந்நிலையிலேயே இது போன்ற கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன. வடக்கிலும் ஒரு பூரண வெற்றி கிடைத்த பின்னர் தமிழ் சிறுபான்மையினருக்கும் எதிரான நேரடி மோதல்களை பௌத்த அடிப்படைவாதிகள் மேற்கொள்ளக்கூடும்.
 
அப்படியானால் சிறுபான்மை சமூகங்கள் எதிர்கொள்ளப்போகும் சவால்கள் பயங்கரமானவை என்பதையே சமகால அரசியல் நடப்புகள் காட்டுகின்றன. ஏனவே R2P போன்ற கருத்தாக்கங்கள் இலங்கைக்கும் பொருந்தி வருகிறது. இக்கருத்தாக்கத்தை மக்கள் மயப்படுத்துவதும் இலங்கைக்க்ன அதன் பொருத்தப்பாட்டை சர்வதேச சமூகத்துக்கு எடுத்தக்காட்டுவதும் சமூக சக்திகளின் தலையாயப் பொறுப்பாகும்.
 
இப்போது கருத்தியல் வடிவில் முன்வைக்கப்படும் இந்த வன்முறைகள் பின்னர் மக்களை உணர்ச்சியூட்டி சமூக மோதல்களாக திட்டமிட்டு மாற்றப்படலாம். அதன் பின் ஏற்படப்போகும் அழிவுகள் மோசமானவை. எனவே இந்த விவகாரம் சிறுபான்மை சமூக சக்திகளாலும் பெரும்பான்மையின மாற்று அரசியல் செயற்பாட்டாளர்களாலும் சிறந்தமுறையில் அணுகப்பட்டு முடிவுகள் கண்டடையப்பட வேண்டும். எனவே சிறுபான்மை சமூகங்கள் தங்களது அரசியல் களத்தை வடிவமைக்க வேண்டிய ஒரு கட்டத்திற்கு வந்துள்ளனர். சிங்கள பௌத்த அடிப்படைவாதத்தை எதிர்கொள்ளத்தக்க வகையில் சிறுபான்மை அரசியல் களம் வடிவமைக்கப்பட வேண்டும். பௌத்த அடிப்படைவாதக்குழுவொன்று இப்போது பாரிய திட்டமொன்றுடன் இயங்கத் தொடங்கயுள்ளது.

நடைமுறையிலிருக்கம் இந்த அரசாங்கத்தின் துணையுடன் இலங்கையை பௌத்தமயப்படுத்தம் திட்டமொன்றை வகுத்தள்ளனர். இத்தகைய திட்டத்தை நடைமுறைப்படுத்தவதில் முதலில் முன்னுள்ள தடைகளை அடையாளங்கண்டு அவைகளை அழித்தாக வேண்டும். புலிகள் இதற்குப்பாரிய தடையாக இருந்தனர் இராணுவ ரீதியான வெற்றிகள் இத்தடையையும் விரைவில் முற்றாக நீக்கிவிடுவதற்கான நம்பிக்கையை அவர்களுக்குக் கொடுத்துள்ளது.
 
அரசியலன்றி சமயமே இந்த அரசியல் பௌத்தவாதிகளின் முக்கிய இயங்கு தளமாகும். இலங்கையைப் பொறுத்தவரை இந்துக்களும் பௌத்தர்களும் சமய ரீதியாக முரண்பட்டுக் கொள்ளவில்லை. இனம் சார்ந்த அரசியல் முரண்பாடுகளே இரு சமூகங்களுக்குமிடையில் நிகழ்ந்தது. சமய அடிப்படையில் இந்து சமயமும் பௌத்தமும் இந்தியாவில் தோற்றம் பெற்றன. இப்போதுள்ள நிலையில் இந்து சமயம் பௌத்தத்தை உள்வாங்கிக் கொண்டு விட்டது. இலங்கையிலும் இவ்விரு மதங்களும் தங்களுக்கிடையில் இடையூடாட்டத்தைக் கொண்டுள்ளன. பெரும்பாலான சந்தர்ப்பங்களில் இந்துக்களும் பௌத்தர்களும் ஒரே வணக்க ஸ்தலங்களில் வழிபடுமளவுக்கு சமய நெருக்கத்தினைக் கொண்டுள்ளனர்.

இந்நெருக்கம் அரசியல் தலையீடுகள் இல்லாவிட்டால் ஒரு ஆரோக்கியமான சமூக உறவை அவர்களுக்கிடையில் ஏற்படுத்தும். எனவே ஹெல உருமயவின் செயற்பாடுகள் தமிழ்த் தேசத்துடன் நேரடியான மோதுகை உறவை ஏற்படுத்தும் என எதிர்பார்க்க முடியாது. எனினும் அரசியல் தளங்களில் ஒட்டுமொத்தச் சிறுபான்மையினரும் புறக்கணிக்கப்படுவதற்கான சூழலையே தேசிய அரசியல் வெளிப்படுத்தி நிற்கிறது. எனவே சிங்கள தேசத்தின் அதிகார அரசியலுக்கு சவால் விடுக்கக் கூடிய சக்திகள் இல்லாத இலங்கையில் சிறுபான்மைக் காப்பீடென்பது இனி சர்வதேச சமூகத்தின் ஒத்துழைப்புடன்தான் சாத்தியமாகும். எனவே R2P போன்ற கருத்தாக்கங்களை உரையாடல் மயப்படுத்தி சிறுபான்மைச் சமூகங்களாகிய நமது பிரச்சினைகளை வெளிச்சத்துக்கு கொண்டுவர முயற்சிக்க வேண்டும். பாதுகாக்கப்படுவதற்கான உரிமை எங்களுக்கும் பாதுகாப்பதற்கான பொறுப்பு மற்றவர்களுக்குமுண்டு என்பதை உணர்ந்தாக வேண்டும்.