சஜீர் அகமட் பி

சஜீர் அகமட் பி

கிளிநொச்சி பெற்றோல் விளையும் பூமியல்ல…

anura-priyatharsana.jpgகிளிநொச்சி, முல்லைத்தீவு பிரதேசங்கள் பெற்றோல் விளையும் பூமியல்ல. அப்படி விளைந்தால், ஐக்கிய தேசிய கட்சி கூறுவதைப்போன்று பெற்றோல் விலையைக் குறைக்க முடியுமென்று ஊடகத்துறை அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.

கிளிநொச்சியை படையினர் கைப்பற்றிவிட்டதால், இனி பெற்றோல் விலையை அரசாங்கம் குறைக்க வேண்டுமென்று எதிர்க் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தாரென்றும் இது மிகவும் வேடிக்கையான ஒரு கூற்றாகுமென்றும் அமைச்சர் தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்றுக் காலை நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

இந்தச் செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் பந்துல குணவர்தனவும் கலந்துகொண்டார். “கிளிநொச்சியை நோக்கிய படை நடவடிக்கையை ஐக்கிய தேசிய கட்சியினர் ஏளனப்படுத்தினார்கள். கிளிநொச்சிக்குச் செல்வதாகக் கூறி, மதவாச்சிக்குச் செல்கிறார்கள் என்றும், அலிமங்கடவுக்குச் (ஆணையிறவு) செல்வதாகக் கூறி, பாமன்கடைக்குச் செல்கிறார்கள் என்றும் ஐ.தே.க வினர் கூறினார்கள். ஆனால், இந்த விமர்சனங்களுக்கு மத்தியிலும் படையினர் கிளிநொச்சியைக் கைப்பற்றினார்கள்” என்றும் அமைச்சர் தெரிவித்தார். விரைவில் முல்லைத்தீவும் கைப்பற்றப்படுமென்று அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
 
 

கண்டி சீத்தாதேவி மகளிர் கல்லூரி மாணவி மரணம்: இரண்டு கண்களும் தானமாக வழங்கப்பட்டது.

திடீரென மரணமடைந்த கண்டி சீத்தாதேவி மகளிர் கல்லூரி மாணவியின் இரண்டு கண்களும் இலங்கை கண்தானசபைக்கு தானம் வழங்கப்பட்டுள்ளன. அண்மையில் முடிவடைந்த க. பொ. த. (சா/த) பரீட்சைக்கு தோற்றிய கண்டி சீத்தாதேவி மகளிர் கல்லூரி மாணவியான பிரதீபிகா ரனசிங்க (17) என்ற மாணவி இரவு உணவு உண்டபோது அது தொண்டையில் சிக்குண்டு சுவாசப்பை வாயிலை அடைத்ததன் காரணமாக மரணமானார்.

இவரது மரண விசாரணையில் மெனிக்ஹின்ன வைத்தியசாலையில் சட்ட வைத்திய அதிகாரி பெரேரா பிரேத பரிசோதனை நடத்தி சாட்சியமளித்தார். ஹரிகடுவ திடீர் மரண விசாரணை அதிகாரி ஆர். டி. என். பண்டா சாட்சியங்களைப் பதிவு செய்தபின் உணவு சுவாசப் பையினுள் சிக்குண்டதால் ஏற்பட்ட மரணமெனத் தீர்ப்பளித்தார். அதனை அடுத்து திடீர் மரண விசாரணை அதிகாரி பெற்றோரின் விருப்பப்படி கண்தானம் செய்யப்பட்டதை பாராட்டினார். அடுத்த வாரம் நிட்டம்புவையைச் சேர்ந்த இருவருக்கு இக்கண்கள் வழங்கப்பட உள்ளதாகவும் கண்தான சங்கத் தலைவர் ஹட்சன் சமரசிங்கசிங்க தெரிவித்தார். பலகொல்ல பொலிஸார் சாட்சியங்களை நெறிப்படுத்தினர்.

உரிமைகளைப் பாதுகாக்க நாளை தலைநகரில் எதிரணி ஆர்ப்பாட்டம்

ranil-2912.jpgயுத்தத்தையும் இராணுவ வெற்றியையும் தனக்குச் சாதகமாக்கிக் கொண்டு அரசாங்கம் அரசியல் நாடகமாடி வருவதாகவும் நாட்டு மக்களைப் பாதுகாக்கத் தவறிவிட்டதாகவும் கடும் விசனத்தை வெளிப்படுத்தியிருக்கும் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, நாட்டின் இறைமை, ஜனநாயகம், மக்களின் உரிமைகள் போன்றவற்றை பாதுகாக்கும் பொருட்டு நாளை புதன்கிழமை தலைநகரில் பாரிய ஆர்ப்பாட்டப் பேரணியை நடத்தவிருப்பதாகவும் அறிவித்தார். “பொறுத்தது போதும்’ எனும் தொனிப்பொருளில் நாளைய தினம் ஹைட்பார்க் மைதானத்தில் நடைபெறவிருக்கும் இந்த ஆர்ப்பாட்டப் பேரணியில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொள்ளவிருப்பதாகவும் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மக்கள் பிரிவு, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஜனநாயக மக்கள் முன்னணி உட்பட பல்வேறு எதிரணிகள் ஒன்றிணைந்த கூட்டமைப்பின் விஷேட செய்தியாளர் மாநாடு நேற்று திங்கட்கிழமை எதிர்க்கட்சித் தலைவரின் கேம்பிரிட்ஜ் ரெரஸ் அலுவலகத்தில் நடைபெற்றபோதே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். ரணில் விக்கிரமசிங்க மேலும் விளக்கமளிக்கையில் கூறியதாவது;

நாட்டில் ஜனநாயகமும் இறைமையும் பாதுகாக்கப்படாமல் எவ்வளவு காலத்துக்கு யுத்தம் செய்தாலும் மக்களுக்கு நல்ல தீர்வெதுவும் கிட்டப் போவதில்லை. யுத்தத்தில் கிளிநொச்சி படையினர் வசம் வீழ்ந்தது உண்மைதான். படைவீரர்களின் அந்தத் திறமையை நாமும் சேர்ந்து பாராட்டுகின்றோம். கௌரவிக்கின்றோம். இந்த யுத்த வெற்றி இராணுவத்துக்கும் நாட்டு மக்களுக்குமே உரியதாகும். ஆனால், ராஜபக்ஷ அரசாங்கம் யுத்த வெற்றியை தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு அரசியல் நாடகமாடிக் கொண்டிருக்கின்றார். ஜனநாயகத்தைப் பாதுகாக்க வேண்டிய அதேசமயம் அரசியல் யாப்பையும் பாதுகாக்க வேண்டிய கடப்பாடு அரசுக்கு இருக்கின்றது. அரசு யாப்புக்கு முரணாகச் செயற்பட முடியாது. நினைத்தபடி யாப்பை மாற்றவும் முடியாது.

ஜனாதிபதியும் அவரது அரசும் அரசியல் யாப்பையும் சட்டத்தையும் மதித்துச் செயற்படத் தவறியுள்ளது. தன்னிச்சையான போக்கில் செயற்பட்டு வருகின்றது. நாட்டு மக்கள் பெரும் கஷ்டங்களை எதிர் கொண்டுள்ளனர். யுத்தத்தில் முனைப்புக்காட்டும் அரசு நாட்டு மக்களை பாதுகாக்கத் தவறிவிட்டது. ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சிக் காலத்தில் நாம் மேற்கொண்ட போர் நிறுத்த உடன் படிக்கைக்கு எவரும் தவறான அர்த்தம் கற்பிக்க முடியாது. அன்றைய போர் நிறுத்தத்தின் மூலம் பல்வேறு நன்மைகளை அடைய முடிந்தது. கிழக்கை மீட்டெடுக்க முடிந்தது. விடுதலைப் புலிகள் அக்கால கட்டத்தில் பலமடைந்ததாகக் கூறுவதும் தவறானதே. இக்கால கட்டத்தில் எந்தவொரு நாடும் புலிகளுக்கு ஆயுதம் வழங்கவில்லை. அதற்கு நாம் இடமளிக்கவுமில்லை. அன்று போர் நிறுத்த உடன்படிக்கையை ஆதரித்தவர்களில் இன்றைய இராணுவத்தளபதியும் ஒருவர் என்பதை பகிரங்கமாகத் தெரிவிக்கின்றேன்.

அன்று நான் மக்களிடம் போர் நிறுத்தம் செய்து சமாதான முயற்சிகளை முன்னெடுக்கவே மக்களிடம் ஆணைகேட்டேன். அதன் பிரகாரமே போர்நிறுத்தம் செய்து பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்தேன். இடைநடுவில் பாராளுமன்றம் கலைக்கப்பட்டு எமது முயற்சிகளுக்கு முட்டுக்கட்டை போடப்பட்டது. அதன் பின்னர் நடந்தவற்றுக்கு ஆட்சியிலிருக்கும் அரசுதான் பொறுப்புக்கூற வேண்டும். யுத்த முனையில் படைவீரர்களுக்கு பெரும் அநீதி இழைக்கப்படுவதாக தகவல்கள் கிட்டியுள்ளன. படைத்தரப்பிலிருந்து நிறையத் தகவல்களைத் திரட்டியுள்ளேன். காயமடையும் படைவீரர்களின் எண்ணிக்கை மிக அதிகமாகவே காணப்படுகின்றன. அவர்களை போர்களத்திலிருந்து கொண்டுவர ஒரு அம்புலன்ஸ் கூட வழங்கப்படவில்லை. பஸ்களிலும், டிராக்டர் வண்டிகளிலுமே கொண்டு வருவதாக தகவல் கிடைத்துள்ளன. அதற்குரிய ஆதாரம் கூட என்னிடம் இருக்கின்றது. (பஸ்ஸிலும் டிராக்டரிலும் காயமடைந்த படைவீரர்களை ஏற்றப்படும் படங்களை ரணில் ஊடகவியலாளர்களிடம் காண்பித்தார்) இவற்றைச் சுட்டிக்காட்டியதால்தான் இராணுவத்தளபதி ஆத்திரமடைந்துள்ளார்.

போர் மாயையில் மூழ்கி பொருளாதாரச் சீரழிவை மூடி மறைப்பதில் அரசு தொடர்ந்து தீவிரம் காட்டி வருகின்றது. இதற்கெதிராகவே நாளை புதன்கிழமை பாரிய ஆர்ப்பாட்டப் பேரணியை நடத்தத் திட்டமிட்டுள்ளோம். மக்களையும் மக்களின் உரிமைகளையும் பாதுகாப்பதே இந்த ஆர்ப்பாட்டப் பேரணியின் பிரதான நோக்கமாகும். தலைநகர் கொழும்பு மற்றும் மேல் மாகாணத்தைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் இன, மத, மொழி, கட்சி பேதங்களுக்கு அப்பால் ஒன்று கூடி ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்கவிருக்கின்றனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் அனைவரையும் இணைந்து அரசுக்கு அழுத்தத்தைப் பிரயோகிக்க முன்வருமாறு அழைப்பு விடுக்கின்றேன் என்று ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

பஸ் கட்டணங்கள் இன்று முதல் குறைப்பு

திட்ட மிட்டபடி சகல பஸ் கட்டணங்களும் இன்று முதல் (6) குறைக்கப்படுவதாக தேசிய போக்குவரத்து ஆணைக் குழு அறிவித்துள்ளது.  பஸ் கட்டண அதிகரிப்பை இடை நிறுத்துமாறு சில பஸ் உரிமையாளர் சங்கங்கள் கோரியுள்ள போதும் திட்டமிட்டபடி கட்டண குறைப்பு அமுல்படுத்தப்படும் என ஆணைக்குழுத் தலைவர் அமல் குமாரகே தெரிவித்தார்.

டீசல் விலை 10 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதன் பிரகாரம் 4.3 வீதத்தினால் பஸ் கட்டணங்கள் குறைக்கப்படுவதோடு இதனுடன் இணைந்ததாக மேல் மாகாணத்தில் உள்ள 780 மார்க்கங்களில் நிலவும் பஸ் கட்டண முரண்பாடும் சீர்செய்யப்படுவதாக ஆணைக்குழு கூறியது. இதன் பிரகாரம், 231 மார்க்கங்களில் பஸ் கட்டணம் ஒரு ரூபா, முதல் 22 ரூபா வரை குறைக்கப்பட உள்ளதோடு 237 மார்க்கங்களில் பஸ் கட்டணங்கள் அதிகரிக்கப்பட உள்ளன. பஸ் கட்டணங்கள் குறைக்காத பஸ்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கட்டணம் குறைக்காத பஸ்கள் தொடர்பாக முறையிடுமாறும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

புதிய கட்டணக் குறைப்பின்படி ஆரம்பக் கட்டணத்திலும் ஒன்பது ரூபா கட்டணத்திலும் மாற்றம் ஏற்படவில்லை. 12 ரூபா முதல் 33 ரூபா வரையான கட்டண தொகைகள் ஒரு ரூபாவினாலும் 35 ருபா முதல் 59 ரூபா வரையான கட்டணங்கள் 2 ரூபாவினாலும் 61 முதல் 96 ரூபாவரையான கட்டணங்கள் 3 ரூபாவினாலும் 98 ரூபா முதல் 118 ரூபா வரையான கட்டணங்கள் 4 ரூபாவினாலும் 120 ரூபா முதல் 142 ரூபா வரையான கட்டணங்கள் 5 ரூபாவினாலும் குறைக்கப்படுகின்றன. அரைச் சொகுசு, சொகுசு பஸ் கட்டணங்களும் இன்று முதல் குறைக்கப்படுகின்றன. பஸ் கட்டணங்கள் கடந்த டிசம்பர் மாதத்திலும் குறைக்கப்பட்டது தெரிந்ததே.

வன்னியில் விமானத் தாக்குதலை நிறுத்த உதவுமாறு ஐ.நா.செயலருக்கு அவசர கடிதம்

mi24-1912.jpgவன்னியில் நடத்தப்படும் மனிதாபிமானமற்ற கொடூர விமானத்தாக்குதலை நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி வன்னித் தமிழர் பேரவை ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலர் பான் கீ மூனுக்கு அவசரக் கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளது. அவருக்கு அனுப்பப்பட்டுள்ள அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;

காஸா மக்கள் மீது நடத்தப்பட்ட இஸ்ரேலிய விமானத் தாக்குதலுக்கு எதிராக நீங்கள் தீர்க்கமான நடவடிக்கை எடுத்திருக்கும் இவ்வேளையில் உங்கள் கவனத்தை வன்னியில் நடத்தப்படும் மனிதாபிமானமற்ற கொடூர வான் தாக்குதல் மீது கொண்டுவரவேண்டும். இரவு பகல் பாராது தினமும் பொதுமக்கள் இலக்குகள் மீது இலங்கை விமானப்படையின் குண்டுவீச்சு விமானங்கள் தாக்குதல் நடத்துகின்றன. விமானப்படையின் புள்ளி விபரப்படி 2007 ஆம் ஆண்டில் 900 தாக்குதல்களும்,2008 ஆம் ஆண்டில் இதேபோன்று 800 தாக்குதல்கள் வன்னி நிலப்பரப்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இத்தாக்குதல்கள் பெரும் உயிர் அழிவுகளை ஏற்படுத்தியுள்ளன. இத்தாக்குதல்களால் பொது மக்கள் பலமுறை இடம்பெயரும் நிர்ப்பந்தத்திற்கு உள்ளாகியுள்ளனர். தொடரும் மற்றும் ஒரே இலக்கிலான தாக்குதல் மூலம் வன்னி நிலப்பரப்பில் இருக்கும் மக்களை இலங்கை அரசாங்கம் தனது இராணுவ கட்டுப்பாட்டுப் பிரதேசத்திற்குள் வர நிர்ப்பந்திப்பதற்கான தாக்குதலாகவே செய்கின்றது. இந்த நிலையானது எந்தவிதமான மனிதாபிமான சட்டங்களுக்குள்ளும் யாப்புகளுக்குள்ளும் அடங்காததும் மக்களை அவர்களது வாழ்விடங்களிலும் இருந்து பலவந்தமாக வெளியேற நிர்ப்பந்திப்பது முழுமையாக மனித உரிமை சட்டங்களை மீறும் செயற்பாடாகின்றது.

அரசாங்கம் வன்னி மீது ரஷ்யத் தயாரிப்பான கொத்தணிக் குண்டுகளை வீசுவது இப்போது நிரூபிக்கப்பட்டுள்ளது. இதே இலங்கை அரசு கொத்தணிக்குண்டுகளைத் தடை செய்யும் ஒப்பந்தத்திலும் கைச்சாத்திட மறுத்துள்ளது. 20081231, 20090101,20090102 நாட்களில் இடம்பெற்ற இழப்புகளையும் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம். 31 ஆம் திகதி நாலு பொதுமக்கள் கொல்லப்பட்டு 19பேர் படுகாயமடைந்தனர். 1 ஆம் திகதி ஆறு பொதுமக்கள் கொல்லப்பட்டு 26 பேர் படுகாயமடைந்தனர். 2 ஆம் திகதி ஏழு பொதுமக்கள் கொல்லப்பட்டு 20 பேர் படுகாயமடைந்தனர். இத்தகைய மனிதப்படுகொலையைக் கண்டித்து ஆக்கபூர்வமான நடவடிக்கை தங்களால் எடுக்கப்படும் என்று நம்புவதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு நோக்கிய நகர்வில் 50,000 படையினர் ஈடுபடுவர்

kili-05.jpgமுல்லைத்தீவைக் கைப்பற்றுவதற்கான இறுதிப் போரில் ஐம்பதாயிரம் படையினர் ஈடுபடுத்தப்படவுள்ளதாக பாதுகாப்புத் தரப்பு தெரிவித்துள்ளது. கிளிநொச்சியைக் கைப்பற்றியுள்ள படையினர் தங்கள் முன் நகர்வு முயற்சியைத் தொடர்ந்தும் மேற்கொண்டு வருகின்றனர்.

இதேநேரம், எதிர்வரும் ஜூன் மாதத்திற்குள் விடுதலைப் புலிகளை முற்றாக அழித்து விடலாம் என இராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். படை நடவடிக்கைக்குரிய இறுதி போரியல் வியூகங்களைப் படைத்தரப்பு வகுத்துள்ளது. அதன் பிரகாரம் இறுதி நடவடிக்கைக்கு ஆறு டிவிசன்களைப் பயன்படுத்த படைத்தரப்பு தீர்மானித்துள்ளது.57 ஆவது, 59 ஆவது டிவிசன்கள் மற்றும் நடவடிக்கை படையணிகள் 1, 2, 3, 4 என்பவற்றைச் சேர்ந்த 100 பற்றாலியன்களைக் கொண்ட 50,000 படையினருடன் இறுதிக் கட்ட நடவடிக்கையை தீவிரப்படுத்த படைத்தரப்பு திட்டமிட்டுள்ளது.

இந்தப் படையணிகள் முல்லைத்தீவை நோக்கிய தாக்குதலை நடத்தத் திட்டமிட்டுள்ளன. அடர்ந்த காடுகளுக்குள் விஷேட படையணிகளைக் கொண்டும் தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன. விடுதலைப் புலிகளின் மரபு வழிப் போரிடும் ஆற்றலை படையினர் எதிர்வரும் ஜூன் மாதமளவில் முறியடித்து விடுவார்களெனவும் தெரிவிக்கப்படுகிறது.

அரபு நாடுகளில் 30,000 இலங்கையர் வேலைவாய்ப்பை இழக்கும் நிலை

kkhaliya.jpgஅரபு நாடுகளில் வேலை வாய்ப்புப் பெற்றுச் சென்றுள்ள சுமார் 30 ஆயிரம் இலங்கையர்கள் தமது வேலைவாய்ப்பை அந்நாடுகளில் இழக்க வேண்டிய அபாயம் ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் ஹெகலிய ரம்புக்வெல எச்சரித்துள்ளார். அரபு நாடுகளிலும் தென்கொரியாவிலும் கட்டிட நிர்மாணத்துறைகளில் தொழில்புரியும் வெளிநாட்டவர்களுக்கு இந்நிலை ஏற்பட்டுள்ளது. அண்மையில் சர்வதேச ரீதியாக ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடியே இதற்கு காரணமென தெரிவிக்கப்படுகிறது.

தென்கொரியாவில் வேலைவாய்ப்புப் பெற்ற 18 ஆயிரம் இலங்கையர்கள் அவர்களது தொழில் ஒப்பந்தங்களில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளனர். அல்லது நீக்கப்பட்டுள்ளனர். இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட 15 நாடுகளின் தொழிலாளர்களில் இலங்கையரும் அடங்குவர். தென்கொரியாவிலும் நிதி நிறுவனம் ஒன்று தனது பணியாளர்களில் சுமார் 4 ஆயிரம் பேரை அவர்களின் வேலையிலிருந்து நீக்கியுள்ளது. இவர்களில் சாதாரண தொழிலாளர்கள் மட்டுமன்றி உயர்பதவி வகிப்பவர்களும் உள்ளனர் எனவும் அமைச்சர் தெரிவித்தார். அரபு நாடுகளில் வேலைவாய்ப்புப் பெற்றிருக்கும் சுமார் 2 இலட்சத்து 38 ஆயிரம் இலங்கையர்களில் ஒரு இலட்சத்து 2 ஆயிரம் பேர் ஆண்களாவர். இவர்களில் அநேகமானவர்கள் கட்டிட நிர்மாணத் தொழிற்துறைகளிலேயே தொழில் புரிகின்றனர்.

அவர்களில் சாதாரண தொழிலாளர்கள் மாத்திரமன்றி நில அளவையாளர்கள் , படவரைஞர்கள் மற்றும் பொறியியலாளர்களும் அடங்குவர். பல கட்டிட நிர்மாணப்பணிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதால் இவர்கள் தமது தொழில்களை இழக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், எதிர்காலத்தில் இந்நாடுகளில் வேலைவாய்ப்பை பெறுவதென்பது சிரமமானது என்று வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் தலைவர் கிங்ஸ்லி ரணவக்க தெரிவித்தார். அரபு நாடுகள் வேலைவாய்ப்புகான விஸா வழங்குவதை இடைநிறுத்தியுள்ளதாக வேலைவாய்ப்பு முகவர் நிலையங்கள் தெரிவித்துள்ளன. அதேபோல கிழக்கு ஆசிய நாடுகள் குறிப்பாக கட்டார் போன்ற நாடுகளின் கட்டிட நிர்மாணப்பணிகளிலும் இத்தாக்கம் ஏற்பட்டுள்ளது.

மேல்மாகாணத்தில் சுமுகமான பொலிஸ் கணக்கெடுப்பு

colo-reg.jpgவடக்கு, கிழக்கு பகுதிகளிலிருந்து மேல் மாகாணத்தில் 2003ம் ஆண்டிற்கு பின்னர் தற்காலிகமாகவோ, நிரந்தரமாகவோ வதிபர்கள் தொடர்பான கணக்கெப்பு நேற்று இடம்பெற்றது.  மேல் மாகாணத்திற்கு உட்பட்ட சகல பொலிஸ் பிரிவுகளிலும் நேற்றுக் காலை 8.00 மணி தொடக்கம் மாலை 6.00 மணி வரை இடம்பெற்ற இந்த கணக் கெடுப்பில் பெருந்தொகையானோர் பங்குகொண்டதாக பொலிஸ் ஊடக பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரஞ்சித் குணசேகர தெரிவித்தார். கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்களில் வதிபவர்களே நேற்றைய கணக்கெடுப்புக்கு உட்படுத்தப்பட்டனர்.

அந்தந்த பிரதேசத்திலுள்ள பொலிஸ் நிலையங்களிலும் விசேடமாக ஏற்பாடு செய்யப்பட்ட நிலையங்களிலும் மக்கள் ஆர்வத்துடன் வந்து தமது தகவல்களை வழங்கிய துடன் குறித்த பிரதேசங்களின் பாதுகாப்பும் பலப்படுத் தப்பட்டிருந்தன. கணக்கெடுப்பில் கலந்து கொள்ள வந்த மக்கள் எவ்வித தங்கு தடைகளும், தாமதங்களுமின்றி பதிவு செய்ய சகல நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டிருந்ததாக பொலிஸ் ஊடக பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

பிரபாகரன் உயிருடன் பிடிக்கப்பட்டால் அவரை இந்தியாவிடம் இலங்கை ஒப்படைக்க வேண்டும் – காங்கிரஸ் கட்சி

congras.jpgவிடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் உயிருடன் பிடிக்கப்பட்டால் அவரை இந்தியாவிடம் இலங்கை ஒப்படைக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது.இதுகுறித்து காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் வீரப்ப மொய்லி டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசுகையில், காங்கிரஸ் கட்சி இலங்கை அரசுக்கு முழு ஆதரவு அளிக்கிறது. இந்திய அரசின் கருத்து விடுதலைப் புலிகள் ஒழிக்கப்பட வேண்டும் என்பதுதான்.

பிரபாகரனை இலங்கை ராணுவம் உயிருடன் பிடிக்க வேண்டும். அவரை ராஜீவ் காந்தி கொலை வழக்கு விசாரணைக்காக இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும். அப்போதுதான் நாங்கள் மகிழ்ச்சி அடைவோம். விடுதலைப் புலிகள் இயக்கம் பயங்கரவாத இயக்கமாகும். தடை செய்யப்பட்ட அமைப்பாகும். அதேசமயம், இலங்கையில் வாழும் தமிழ் மக்கள் பாரபட்சமாக நடத்தப்படக் கூடாது. தமிழர் பகுதிகளில் மனித உரிமை செயல்கள் நடைபெறாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். தீவிரவாதப் பிரச்சினை வேறு, மனிதாபிமானப் பிரச்சினை வேறு. இரண்டையும் ஒன்றாகப் பார்க்கக் கூடாது என்றார் அவர்.

புலிகளின் தலைவர் பிரபாகரன் ஆயுதங்களைக் களைந்து சரணடைய வேண்டும். -கருணா எம்.பி.

karuna.jpg
எஞ்சியுள்ள விடுதலைப் புலிகளின் உயிரையும் புலிகளின் தலைவர் பிரபாகரனின் உயிரையும் காப்பாற்றிக் கொள்வதற்கான இறுதிச் சந்தர்ப்பம் இதுவாகும். புலிகள் ஆயுதங்களைக் கீழே வைத்துவிட்டு படையினரிடம் சரணடைவதன் ஊடாக இவ்விறுதிச் சந்தர்ப்பத்தை பிரபாகரன் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். கிளிநொச்சி படையினரின் பூரண கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளமை தொடர்பாக ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையையடுத்து கருத்துத் தெரிவிக்கையிலேயே கருணா எம்.பி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

கடந்த காலங்களில் நடைபெற்ற மோதல்களில் அப்பாவி இளைஞர்கள், யுவதிகளின் உயிர்கள் பலியாகின. இன்னமும் பலியாகத் தேவையில்லை. ஆயுதங்களை கீழே வைத்து அரசியல் நீரோட்டத்துக்குள் வருவதன் ஊடாக சுபீட்சமான ஒரு எதிர்காலத்தை அடையலாம். அப்பாவி இளைஞர்களின், யுவதிகளின் உயிர்கள் பலியாவதை தடுக்கலாம். எனவே, புலிகளின் தலைவர் பிரபாகரன் ஆயுதங்களைக் களைந்து சரணடைய வேண்டும் என்றும் கருணா எம்.பி. கேட்டுக் கொண்டுள்ளார். அத்துடன் கிளிநொச்சியை கைப்பற்றிய படையினருக்கும் ஜனாதிபதிக்கும் முப்படைத் தளபதிகளுக்கும் பாதுகாப்பு செயலாளருக்கும் வாழ்த்துக்களையும் அவர் தெரிவித்துக் கொண்டார்.

வன்னி மண் முழுமையாக இன்னும் சில நாட்களில் படையினரால் மீட்கப்பட்டு அங்கு அகதிகளாக்கப்பட்டு அடக்கு முறைக்குள் அடங்கிக் கிடக்கும் எமது உறவுகள் பிரபா கும்பலின் பிடியிலிருந்து மீட்கப்படும் போதுதான் அனைத்துலக நாடுகளில் வாழும் உறவுகள் நிம்மதி அடைவார்கள் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. சிதைந்து கிடக்கும் எமது தமிழ்ப் பிரதேசங்களை மீளக் கட்டியெழுப்பி ஒளி பொருந்திய ஓர் அபிவிருத் திப் பாதையில் மக்களையும் தேசத்தையும் வழிப்படுத்தி எம்மக்கள் நிம்மதியான சுதந்திரக் காற்றைச் சுவாசிக்க ஜனநாயக வழியே ஒரே தீர்வு என்பதை பிரபாகரன் உணரும் காலம் வெகுதொலைவில் இல்லை.