ஐ.பி.எல்., அணிகளுள் ஒன்றான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் தலைமைப் பொறுப்பிலிருந்து இந்தி யாவின் யுவராஜ் சிங் நீக்கப்பட்டார்.
புதிய தலைவராக இலங்கையின் சங்கக்கார தெரிவு செய்யப்பட்டுள்ளார். இந்தியன் பிரிமியர் லீக் சார்பில் (ஐ.பி.எல்.) 3 வது “டுவென்டி-20” கிரிக்கெட் தொடர் வரும் மார்ச் 12 முதல் ஏப். 25 ஆம் திகதி வரை இந்தியாவில் நடக்க உள்ளது. இத்தொடரில் பங்கேற்கும் 8 அணிகளுள் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் ஒன்று. கடந்த 2 தொடர்களில் இந்த அணியின் தலைவராக யுவராஜ் சிங் செயல்பட்டார்.
ஆனால் இந்த முறை தலைமைப் பொறுப்பிலிருந்து யுவராஜ் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். அணியின் புதிய தலைவராக இலங்கை அணி வீரர் சங்கக்கார தெரிவு செய்யப் பட்டுள்ளார். இது குறித்து அணியின் தலைமை நிர்வாக அதிகாரி அனில் ஸ்ரீவத்சவா கூறுகையில்,
“யுவராஜ் சிங்கிற்கு பதில் 3 வது ஐ.பி.எல். தொடரில் சங்கக்கார அணியை வழிநடத்துவார். இதன் மூலம் அணியின் பலம் அதிகரிக்கும் என நம்புகிறோம். கடந்த இரண்டு தொடர்களில் அணியின் தலைவராக யுவராஜ் சிங் சிறப்பாக செயல்பட்டார். அவரது தலைமையில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி முதலாவது முறை அரையிறுதி வரை முன்னேறி அசத்தியது.
அணியின் தலைமைப் பதவியிலிருந்து அவரை நீக்குவதால், அவர் மீது நம்பிக்கை இல்லை என்று அர்த்தம் இல்லை. அணியில் அவருக்கு என தனி இடம் உண்டு” என்றார். இது குறித்து சங்கக்கார கூறியதாவது, கடந்த இரண்டு தொடர்களில் யுவராஜ் சிங்கின் தலைமையில் விளையாடியது மகிழ்ச்சி அளித்தது.
அவர் மிகச் சிறந்த தலைவர் தவிர எனது நல்ல நண்பர். அணி நிர்வாகத்தின் புதிய முடிவு குறித்து அவரிடம் பேசினேன். அதற்குப் பின் தான் தலைமைப் பொறுப்பை ஏற்றுக் கொள்வதாக முடிவு செய்தேன்.
இதனால் எந்தப் பிரச்சினையும் ஏற்பட வாய்ப்பில்லை. கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் முக்கிய வீரர் யுவராஜ். ஆட்டத்தின் போக்கை அவரால் எந்த சமயத் திலும் மாற்ற முடியும் இவ்வாறு சங்கக்கார கூறினார்.
தலைமைப் பொறுப்பிலிருந்து யுவராஜ் நீக்கப்பட்டது குறித்து கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் பயிற்சியாளர் டாம் மூடி கூறுகையில்,
“யுவராஜ் துடுப்பாட்டத்தில் முழுக் கவனம் செலுத்த வேண்டும் என அணி நிர்வாகம் விரும்புகிறது. தலைமைப் பொறுப்பு அவரது செயல்பாடுகளுக்குப் பாதிப்பாக அமைந்துவிடக் கூடாது.
வீரர்களுக்கும் அணி நிர்வாகத்துக்கும் எந்தப் பிரச்சினையும் இல்லை. அனைவரும் இணைந்து சிறப்பாக தயாராகி வருகிறோம். அணி நிர்வாகத்தின் முடிவை விருப்பத்துடன் ஏற்றுக்கொண்டுள்ளார் யுவராஜ்” என்றார்.