ஜெயபாலன் த

ஜெயபாலன் த

கிழக்கு லண்டன் பகுதியில் இரு தமிழ் குழந்தைகள் பலி!!!

தனது இரு குழந்தைகளை படுகொலை செய்து தன்னையும் படுகொலை செய்ய முற்பட்ட நீதி குமார் (40) அருகில் உள்ள தமிழ் கடையில் பணியாற்றி வந்துள்ளார். நீதி அன்பான தந்தை என அவரை அறிந்த அவர் பணியாற்றிய கடையின் முதலாளி தெரிவித்து இருந்தார்.கணவரின் செயலைக் கண்டு தெருவுக்கு வந்து கதறி அழுதுள்ளார் மனைவி நீஸா. என்ன காரணத்தால் இக்கொடூரம் நிகழ்ந்தது என்பது இதுவரை தெரியவரவில்லை.

கிழக்கு லண்டன் பகுதியில் தமிழ் குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு குழந்தைகள் மாலை 5:40 மணியளவில் படுகொலை செய்யப்பட்டு உள்ளனர். ஒரு வயதுடைய பெண் குழந்தையும் மூன்று வயதுடைய ஆண்குழந்தையும் படுகொலை செய்யப்பட்டு உள்ளதாக அப்பகுதி பொலிஸார் தெரிவித்து உள்ளனர். காயமடைந்த நிலையில் 40 வயதான ஆண் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். பெண் குழந்தை ஸ்தலத்திலேயே கொல்லப்பட்டதாகவும் ஆண் குழந்தை வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்ட நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் இறந்துள்ளது.

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவரின் பிள்ளைகளே படுகொலை செய்யப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது. பொலிஸார் இப்படுகொலை தொடர்பாக வேறுயாரையும் தேடவில்லை என அறிவித்துள்ளனர். இதன்படி குடும்பத்தகராறு காரணமாவே இப்படுகொலைகள் இடம்பெற்றதாக அஞ்சப்படுகிறது. இக்குடும்பத்தினர் இல்போர்ட் அலட்ப்றோ றோட் நோத்தில் உள்ள விநாயகன் ஸ்ரோரிற்கு மேல் வசித்து வந்துள்ளனர்.

இது தொடர்பாக இக்குடும்பத்தினரை அறிந்த ஒருவர் தேசம் நெற் க்கு தெரிவிக்கையில் கணவன் மனைவிக்கு இடையே இடம்பெற்ற தகராற்றில் தந்தை பிள்ளைகளைக் கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்வதற்கு தன்னைத்தானே குத்தியதாகத் தெரிவித்தார்.

கொரோனா லொக்டவுன் இக்கு பின்பாக குடும்ப வன்முறைகள் வீடுகளில் அதிகரித்து வருவதை புள்ளிவிபரங்கள் வெளிப்படுத்தி வருகின்றமை தெரிந்ததே.

“எங்கட சனத்துக்கு நீங்கள் என்ன செய்தீர்கள்?”

இப்படிக் கேட்டது வேற யாருமல்ல என்னுடைய நண்பர் அதிதரனும் அவருடைய நண்பர் தர்சனும். இருவருமே மட்டக்களப்பைச் சேர்ந்தவர்கள். அதிதரன் தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளி. கருணாவின் பிளவுக்கு முன்னதாகவே இயக்கத்தை விட்டு வெளியேறியவர். அவர்களுடைய கேள்வி யாழ்ப்பாணத்தார் எல்லாம் வெளிநாட்டுக்கு வர உயிரைக் கொடுத்து போராடியது நாங்கள். ஆனால் எங்களுக்கு நீங்கள் தந்த பட்டம் காட்டிக் கொடுத்தவங்கள் என்று. நாங்கள் பிரிந்த பிறகு உங்களால் ஒரு யுத்தத்தை தன்னும் வெல்ல முடிந்ததா? நீங்கள் வெளிநாடுகளுக்கு வந்து உங்கட உங்கட ஊர்களுக்கு செய்கிறியள் “எங்கட சனத்துக்கு நீங்கள் என்ன செய்தீர்கள்?” என்று என்னைக் கேட்டனர். உண்மையிலேயே என்னிடம் பதில் இல்லை.

கடந்த பத்து வருடங்களாக லிற்றில் எய்ட் கணணிக் கல்வி நிலையம் கிளிநொச்சியில் இயங்குகிறது. கிழக்கில் நாங்கள் குறிப்பாக எதுவும் செய்யவில்லை. மேற்கு நாடுகளுக்கு புலம்பெயர்ந்தவர்களில் மிகப் பெரும்பாலானவர்கள் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்களே. மிகச் சிறிய வீதத்தினரே ஏனைய மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள். அவர்கள் யாழ்ப்பாணத்துக்கு வெளியே செய்வது மிகக் குறைவு. அப்படிச் செய்தாலும் வடக்கைத் தாண்டுவது இன்னும் குறைவு. வடக்கு கிழக்கு இணைய வேண்டும் என்று கூப்பாடு போடும் யாரும் செயலளவில் கிழக்கை புறக்கணித்தே வருகின்றனர்.

பாதிக்கப்பட்டவர்களின் வலி மிகக் கொடியது. மௌனம் மட’டுமே பதிலாகிறது.

பொறிஸ்க்கும் முதலாளித்துவத்திற்கும் பாடம் கற்பிக்கும் கொரோனா!

முதலாளித்துவ சிந்தனையின் அடிநாதமாகச் செயற்பட்ட மார்க்கிரட் தட்சர் ‘சமூகம் என்ற ஒன்றில்லை என்றும் ஆண்களும் பெண்களும் அவர்களுடைய குடும்பங்களுமே இருப்பதாகத் தெரிவித்தார். மக்களே தங்களை தாங்கள் முதலில் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார். மூன்று தசாப்தங்களுக்குப் பின் அதே கொன்சவேடிவ் கட்சியில் இருந்து பிரதமரான பொறிஸ் ஜோன்சன், மார்கிரட் தட்சரினதும் கொன்சவேடிவ் கட்சியினதும் ஒட்டுமொத்த முதலாளித்துவத்தினதும் கொள்கைக்கு மாற்றாக “சமூகம் என்ற ஒன்று இருக்கின்றது” எனத் தெரிவித்து இருந்தார். கொரோனா வைரஸ் தாக்கிய நிலையில் சுகாதார சேவையாளர்கள் அடிமட்ட தொழிலாளர்கள் கொரோனாவுக்கு எதிராக தங்கள் உயிரைப் பணயம் வைத்துப் போராடிக்கொண்டிருக்கையிலேயே பொறிஸ்க்கு இந்த ஞானோதயம் ஏற்பட்டது.

“They are casting their problems at society. And, you know, there’s no such thing as society. There are individual men and women and there are families.” – Margret Thatcher, 1987

“There really is such a thing as society”. – Boris Johnson, 2020

நாட்டு மக்களுடைய நலனை முன்நிறுத்தியே லொக்டவுன் தளர்வு! பொருளாதாரத்தை வைத்தல்ல!

காச்சலும் கொரோனாவும் அவனவனுக்கு வந்தால் தான் தெரியும் அதன் வலி. இது இப்போது பிரித்தானிய பிரதமர் பொறிஸ் ஜோன்சனுக்கு நல்லாகவே உறைத்திருக்கிறது. காலம் கடந்த ஞானம் என்றாலும் இப்பவாவது ஞானம் பிறந்தது நல்லதே. நாட்டு மக்களுடைய நலனை முன்நிறுத்தியே ‘லொக்டவுன்’யைத் தளர்த்துவது பற்றிய முடிவுகள் எடுக்கப்பட்டும் என்றும் பொருளாதாரத்தையும் மக்கள் நலனையும் ஒப்பிட்டு முடிவு எடுக்கப்பது தவறானது என்றும் தற்போது கருத்து தெரிவித்து உள்ளார். இதனை முன்னரே உணர்ந்து இருந்தால் எத்தினையாயிரம் உயிர்களைக் காப்பாற்றி இருக்கலாம்

நாட்டின் அரசியலில் எவ்வித அக்கறையும் இல்லாமல் இராமன் ஆண்டால் என்ன இராவணன் ஆண்டாலென்ன எதுவும் மாறாது என்று பீற்றிக்கொண்டிருக்கும் ஜென்மங்களுக்கு இப்போதாவது ஏதாவது உறைத்திருக்குமா?

யாழ்ப்பாணிய கல்விமுறைக்கு ஒப்பானதாக மாறும் பிரித்தானிய கல்வி

இங்கிலாந்தினுடை முன்னால் கல்விச் செயலாளராக இருந்த மைக்கல் கோவ் யாழ்ப்பாணிய கல்விச் சிந்தனைக்கு ஒப்பான சிந்தனையையே கொண்டிருந்தார். பரீட்சைகளே அறிவைத் தீர்மானிக்கும் என்ற நிலைப்பாட்டில் ஓலெவல் ஏலெவல் பரீட்சைகளைக் கடினமாக்கி பெறுபேற்றுக்கான வெட்டுப்புள்ளிகளையும் கடுமையாக்கினார். அதன் படியே 1 முதல் 9 வரையான புள்ளிகள் ஓலெவலுக்கும் ஏலெவலுக்கு வழமை போல் ஏ,பி, சி, …. என்ற முறையும் உள்ளது. இதனையும் 1 முதல் 9 ற்கு மாற்றும் எண்ணம் உள்ளது. இதன்படி மிகச் சிறுபான்மையினரான வசதி படைத்த மாணவர்கள் பாடசாலையைவிட தனிப்பட்ட வகுப்புகளை எடுக்கும் வசதி உள்ளவர்கள் மட்டுமே பலனடையும் வகையில் இப்புதிய கல்விக்கொள்கை அமைந்துள்ளது. பரீட்சைக்கு மாணவர்களைத் தயார் செய்வதும் அவர்கள் பரீட்சையில் சித்தியடைவதுமே நோக்கமாக உள்ளது. இது முற்றிலும் அறிவுபூர்வமான விடயம் அல்ல.

குறிப்பாக யாழ்ப்பாணிய கல்விமுறை அவ்வாறே இருந்தது. அதனால் பாடசாலைகளில் நூல் நிலையங்கள் இல்லை. யாழ்ப்பாணத்தில் புத்தகக் கடைகளும் இல்லை. வினாவிடை புத்தகங்களும் துரித மீட்டல்களும் தான் புத்தகக் கடைகளில் விற்கப்படுகிறது. அவ்வாறே பிரித்தானிய கல்விமுறையும் மாற்றப்பட்டு வருகின்றது. இங்கிலாந்தின் அரச பாடசாலைகளில் பெரும்பாலும் நூலகங்கள் கைவிடப்படுகின்றன. உள்ளுராட்சி நூலகங்களையும் தற்போதைய கொன்சவேடிவ் கட்சி மூடிவருகின்றது. மாணவர்கள் அறிவை வளர்ப்பதற்குப் பதிலாக பரீட்சைக்கு தயார் செய்யப்படும் பரிசோதணைக்கூட விலங்குகள் ஆக்கப்படுகின்றனர். அறிவு பரீட்சைப் பெறுபேறுகளுக்குள் குறுக்கப்பட்டுவிட்டது. பின்தங்கிய பிரிவினரான மாணவர்கள் அரசின் கல்விக் கொள்கைகளால் கைவிடப்படுகின்றனர். இவர்களில் 80 வீதமானவர்கள் பிரித்தானிய சிறைக் கூடங்களை நிரப்புகின்றனர்.

‘வழித்தேங்காயை எடுத்து தெருப் பிள்ளையாருக்கு உடைத்து’ மாதிரி கொரோனா நிவாரணமும் விளம்பரம் தேடும் அரசியல் பிரமுகர்களும்

கொரோணாவுக்கு நிவாரணம் வழங்கி வோட்டு வாங்கும் வேட்டையில் அரசியல் பிரமுகர்கள் பலர் குதித்துள்ளனர். பாராளுமன்ற அரசியலுக்குச் சென்று மக்களது பல்வேறு குறைகளையும் தீர்ப்பதற்குப் பதிலாக ‘வழித்தேங்காயை எடுத்து தெருப் பிள்ளையாருக்கு உடைத்து’ தங்கள் வாக்கு வங்கியை நிரப்பலாம் என்ற கனவில் இவர்கள் திரிகின்றனர். இவர்கள் வழித் தேங்காயைக் கூட, அது தேவைப்படுபவர்களுக்கு வழங்குகிறார்கள் இல்லை. இந்த சாதிய பிரதேசமான்கள் தங்கள் வோட்டு வங்கியை நோக்கியே உதவி என்ற பெயரில் கிள்ளித் தெளிக்கின்றனர்.

இவர்கள் உதவி செய்யாவிட்டாலும் பரவாயில்லை கொரோணாவை பரப்பாமல் இருந்தால் போதும் என்றும் பலர் முணுமுணுக்கின்றனர். நிவாரணம் வழங்குகிறோம் என்ற பெயரில் பாஸ் எடுத்து வைத்துக்கொண்டு எல்லா இடங்களுக்கும் உலாவரும் இவர்கள் கொரோணாவைப் பரப்பிவிடும் அபாயம் உள்ளது.

இதுக்குள்ள தாங்கள் வாங்குபவர்களின் முகத்தை காட்டவில்லையாம் என்று அவர்களின் முகத்தில் இமோஜி போடுகிறார்கள். இதென்ன சன் பேப்பரில பேஜ் திரியில போடுற மாதிரி. ஒரு பாசல் குடுக்க போன நீங்கள் முதல்ல உங்கள முக்கையும் வாயையும் மைத்து எதையாவது கட்டுங்கோ. பார்சலோட கொரோனாவையும் குடுத்திடுவியல்.

முகக் கவசமும் பிரித்தானிய அரசியலும்!

பிரித்தானியாவில் முகக்கவசம் மற்றும் மருத்துவர்களுக்கான பாதுகாப்பு ஆடைகளுக்கான பற்றாக்குறை சுகாதார சேவையில் உள்ளவர்களின் உயிர்களை பறிப்பதுடன் வைரஸ் கிருமிகளைப் பரப்பவும் காரணமாகிறது. இந்நிலையில் பல நாடுகளும் மக்களைப் முகக்கவசங்களை அணிய அறிவுறுத்திய போதும் பிரித்தானியா இவ்விடயத்தில் விஞ்ஞான ரீதியாக அது பெரும் பலனளிக்காது என்று காரணம் சொல்கிறிது. அது எப்படி.

முகக்கவசம் பற்றி விஞ்ஞானம் அப்படி என்னதான் சொல்கிறது: 1. முகக் கவசத்தை நோய்த் தொற்றுள்ளவர்கள் கட்டாயமாக அணிவது அவசியம், ஏனெனில் அது கிருமி பரவுவதை தடுக்கும். ஆனால் 2. நோய்த் தொற்று இல்லாதவர்கள் அதை அணிவதால் பெரும் நன்மை இல்லை.

இதன் படி முதலாவது கூற்று முகக்கவசம் அணிவதை வரவேற்கின்றது. இரண்டாவது கூற்று குழப்பகரமானது அதனை வைத்துத்தான் அரசு அரசியல் செய்கின்றது. ஒரு வருக்கு நோய்த் தொற்று இருக்கா இல்லையா என்பது யாருக்கும் தெரியாது. அப்படியாயின் அனைவரும் முகக்கவசத்தை அணிவது பாதுகாப்பானதா? அல்லது யாரும் முகக் கவசத்தை அணியாமல் விடுவது பாதுகாப்பானதா? மேலும் ஏன் கைகளை கழுவச்சொல்கிறார்கள். நாங்கள் கிருமி தொற்றிய கைகளால் கண் மூக்கு ஆகியவற்றை தொட்டால் வைரஸ் பரவிவிடும் என்பதால். அதே போல் முகக்கவசம் அணிந்தால் அது வைரஸ் மூக்கினுள் நுழைவதை சிறிய அளவிலேனும் தடுக்ககாது.

அரசுக்கும் இதெல்லாம் தெரியும். ஆனால் முகக்கவசத்தை அணியும் படி சொன்னால் நாட்டில் சுகாதார சேவையாளர்களுக்கே அணிவதற்கு முகக்கவசங்கள் பற்றாக்குறையாக இருக்கும் போது பொது மக்களையும் அதனை அணியச் சொன்னால் அதனால் ஏற்படும் தட்டுப்பாட்டை கட்டுப்படுத்த முடியாது. அரசு ஏற்கனவே மெத்தனப் போக்கை கடைப்பிடித்தாலேயே இவ்வளவு இழப்புகள் ஏற்படுகின்றது. இது அரசுக்கு மேலும் நெருக்கடியை வழங்கும். தங்கள் பொறுப்பற்ற தன்மையை மறைக்க அரசு விஞ்ஞானத்தை புரட்டிப் போடுகின்றது. வீட்டில் உள்ள கைக் குட்டையை யாவது கட்டிக்கொண்டு வெளியே செல்வதும் தான் பாதுகாப்பானது. அதனை நாளாந்தம் சோப்போட்டு தோய்த்து அணியுங்கள்.

ஏப்ரல் 20இல் 10 டவுனிங் ஸ்ரிற்க்கு முன்னால் தனித்துப் போராடிய இளம் மருத்துவப் பெண் மீனாள் விஸ் பிரதமர் பொறிஸ் ஜோன்சனினதும் அரசினதும் பொறுப்பற்ற தன்மையை வன்மையாகக் கண்டித்ததுடன் பிரதமர் சுகாதார சேவையாளர்களிடமும் மரணிக்ககும் ஒவ்வொருவரிடமும் மன்னிப்புக் கோர வேண்டும் என்று கேட்டிருக்கிறார். சுகாதார சேவையாளர்களுக்கு கை தட்டுவது போன்ற கதைகளைச் சொல்லி உண்மையான பிரச்சினையை திசை திருப்ப வேண்டாம் என்றும் எச்சரித்தார். இவருடைய நேர்காணல் பிரித்தானிய சனல் 4 தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது.

யாழ் பெருங்குடி மக்கள் கொரோனாவை உள்ளுக்கு விட்டு அடிக்கத் தயார்?

யாழ்ப்பாணத்தில் நீண்ட ஊரடங்கு உத்தரவுக்குப் பின் இன்று மதுபானக் கடைகள் திறக்கப்பட்டது. மதுபானக் கடைகளில் நீண்ட வரிசையில் பெருங்குடி மக்கள் காத்துக் கிடந்தனர். சனிரைஸர் என்று சொல்லப்படும் கிருமிகொல்லி சோப்பில் 60 முதல் 70 வீதம் வரை அல்ககோல் உள்ளது. அதனால் வைரஸ் கிருமிகளை வெளியே இருந்து அழிப்பதிலும் பார்க்க போர்த் தந்திரமாக உள்ளுக்கு விட்டு அடிக்கலாம் என சில யாழ் பெரும்குடி மக்கள் நம்புகின்றனர் போல் தெரிகின்றது.

ரஸ்சியர்கள் சிலரும் இவ்வாறு தான் நம்பினர் என்பதையும் கவனிக்கவும். ஆனால் அமெரிக்கர்கள் பெரும் ஆயுதங்களை வாங்குவதற்காக துப்பாக்கி விற்கும் கடைகளில் பெரு வரிசையில் காத்து நின்றனர். வைரஸ்களை துப்பாக்கிச் சூட்டில் கொல்ல நினைக்கிறார்களோ என்னவோ.

ஒவ்வொரு மக்கள் குழுவும் வைரஸ்க்கு எதிராக பல முனைகளில் போராடுகின்றனர். இதனை குறைத்து மதிப்பிடக்கூடாது.???

இலங்கையில் மீண்டும் தன்னிறைவுப் பொருளாதாரம்?

கோவிட்-19 உலக அரசியல் பொருளாதாரத்தில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்த இருக்கின்றது. இலங்கைளில் மீண்டும் தன்னிறைவுப் பொருளாதாரத்தை நோக்கி நகர்வதற்கு இது வழிகோலி இருக்கிறது. வெளிநாடுகளில் இருந்து இறக்குமதியாகின்ற தானியங்கள் மரக்கறிகளை குறைப்பதற்கு அரசு முயற்சி எடுத்துள்ளது. இந்த வகையில் 17 தானியங்கள் மரக்கறிகளின் இறக்குமதிக்கு தடைவிதிக்கப்பட்டு இருக்கினற்து. மேலும் பரசிட்டமோல் மற்றும் தொற்று மற்றும் தொற்றா நோய்க்கான மருந்துகளின் உங்பத்தியையும் அதிகரிக்க அரசு நடவடிக்கை எடுக்கின்றது.

சுதந்திர இலங்கையில் தமிழ் மக்களின் பொற்காலமாக கருதப்பட்டது அரசில் ரீதியாக அல்ல பொருளாதார ரீதியில் 1970க்கள். இலங்கையின் தன்னிறைவுப் பொருளாதாரக் கொள்கைகளால் தமிழ் விவசாயிகள் பெருமளவில் நன்மை அடைந்தனர். அக்காலத்தில் உருவாக்கப்பட்ட விவசாய முயற்சிகளாலேயே வன்னியயை நோக்கி யாழிலிருந்து மக்கள் பெயர்ந்தனர். படித்த வாலிபர் திட்டத்தில் கல்லெறிந்து பிடித்த காணிகளையே கஜேந்திர குமார் பொன்னம்பலம் போன்ற நிலச்சுவந்தர்கள் இன்றும் கிறுக்குப் பிடியில் வைத்துள்ளனர். தமிழ் தேசியக் கூட்டமைப்பு காணிப்பதிவை கணணி மயப்படுத்துவதற்கு எதிர்ப்புத் தெரிவித்ததும் இதனால் தான். இன்றைன தமிழர் விடுதலைக் கூட்டணியின் சொத்தும் அது தான்.

முடிவெடுக்கத் தெரியாதவர்கள் கையில் அதிகாரம் ஆபத்தானது!

முடிவெடுத்தல் என்பது சொந்த வாழ்விலும் பொது வாழ்விலும் மிக முக்கியமான அம்சம். துரதிஸ்ட வசமாக சொந்த வாழ்விலும் சரி பொதுவாழ்விலும் சரி முடிவுகள் எடுப்பதில் கவனமும் நேரமும் செலுத்தப்படுவதில்லை. தவறான முடிவுகளுக்கு செலுத்தப்படுகின்ற விலை மிக அதிகமானது பெருமளவு சமயங்களில் ஈடுசெய்ய முடியாதது. முடிவெடுப்பதில் மிக முக்கியமான அம்சம் முடிவெடுக்கப்பட வேண்டிய அம்சம் தொடர்பான நேர்த்தியான தகவல்களைத் திரட்டுவது. இதில் விடப்படுகின்ற தவறுகள் தவறான முடிவுகளுக்கு இட்டுச் செல்லும் இழப்புகளை ஏற்படுத்தும்.

பிரித்தானியாவும் அமெரிக்காவும் சரியான தகவல்களை குறித்த காலகட்டத்தில் சேகரித்து சரியான முடிவுகளை எடுக்காததால் கொரோனாவில் இருந்து காப்பாற்றப்பட வேண்டிய மக்களை கொரோனாவுக்கு ஆயிரக்கணக்கில் பலி கொடுக்கின்றனர்.

இலங்கையில் 2019 ஈஸ்ரர் ஞாயிறு அன்று யார் குண்டு வைப்பதற்கு திட்டமிடப்பட்டு உள்ளது என்றும் அக்குண்டுகள் எங்கே வைக்கப்பட உள்ளன என்றும் அது யாரால் வைக்கப்பட உள்ளது என்றும் குறிப்பான தகவல்களை வழங்கியும் அப்போதைய மைத்திரி – ரணில் – தமிழ் தேசியக் கூட்டமைப்பு கூட்டாட்சி எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. மக்களைப் பயங்கரவாதிகளின் குண்டுக்குப் பலியாக்கினர்.

1988இல் இலங்கை இந்திய ஒப்பந்தம் வட கிழக்கு இணைந்த மாகாண சபையை வழங்கியது. புலிகளுடன் கூத்தடித்த கூட்டமைப்பும் அதனை நிராகரித்தது. 20 வருடங்களுக்குப் பின் எல்லாம் மண் கவ்விய பின் பிரிந்த வடக்கு கிழக்கில் மிச்சம் இருக்கிறதை பிடுங்கிறதுக்கு போட்டி. அதிலும் பத்து ஆண்டுகள் ஓடிவிட்டது. எத்தினை ஆயிரம் உயிர்கள் பலிகொள்ளப்பட்டு விட்டது.