லிற்றில் எய்ட்

லிற்றில் எய்ட்

மூன்றாம்நிலைக் கல்வி தொழிற்கல்வி ஆணைக்குழு ஆணைக்குழு அங்கிகாரம் அளித்துள்ளது! மூன்றாம் நிலைக்கல்வி தொழிற்கல்வியை வழங்கும் மையமாக லிற்றில் எய்ட் தரம் உயர்ந்துள்ளது!!!

அரச அங்கீகாரம் பெற்ற சான்றிதழ்களை வழங்கக்கூடிய மூன்றாம் நிலைக்கல்வி தொழிற்கல்வியை வழங்கும் மையமாக லிற்றில் எய்ட் அங்கீகரிக்கப்பட்டு உள்ளது என லிற்றில் எய்ட் திறன்விருத்தி மையத்தின் இயக்குநர் ஹம்சகௌரி சிவஜோதி தெரிவிக்கின்றார். கிளிநொச்சி திருநகரில் பதின்னான்கு ஆண்டுகள் தொடர்ச்சியாக இயங்கி வருகின்ற லிற்றில் எய்ட் யுத்தம் முடிவுக்கு வந்த மே 18, 2009இல் லண்டனிலும் பின்னர் இலங்கையிலும் பொது அமைப்புகள் ஆணைக்குழுவின் கீழ் பதிவு செய்யப்பட்டது. இது வரை ஆயிரத்து ஐந்நூறுக்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி கற்று வெளியேறிய நீண்ட வரலாற்றைக் கொண்ட லிற்றில் எய்ட் நீண்டகால முயற்சியைத் தொடர்ந்து, அங்கீகாரம் பெற்ற தொழிற்கல்வி நிறுவனமாக மாறியுள்ளது. இந்நிலையை எட்டுவதற்கு தனக்கு ஊக்கத்தை அளித்த லண்டன் லிற்றில் எய்ட் நிறுவனத்தினருக்கும் இம்முயற்சிக்கும் தனக்கு முழு ஒத்துழைப்பையும் தந்து உதவிய சக ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் ஹம்சகௌரி சிவஜோதி தன்னுடைய நன்றிகளைத் தெரிவித்தார்.

லிற்றில் எய்ட் அமைப்பானது மாணவர்களுக்கு தொழிற்கல்வியை வழங்கி அவர்களை பொருளாதார செயற்பாடுகளுக்கு தயார்படுத்துவதுடன் மட்டும் நின்றுவிடாமல் அவர்களுடைய தலைமைத்துவப் பண்புகளை வளர்த்துவிடுவதன் மூலமும் அவர்களுடைய ஆளுமைகளை விருத்திசெய்வதன் மூலமும் அடுத்த தலைமுறையை செப்பனிடுவதிலும் கண்ணும் கருத்துமாகச் செயற்படுவதாக லிற்றில் எய்ட் ஸ்தாபகர் த ஜெயபாலன் தெரிவிக்கின்றார். அதனையொட்டிய சமூக விழிப்புணர்வு நடவடிக்கைகளையும் லிற்றில் மேற்கொள்வதாக மையத்தின் துணை இயக்குநர் பா கஜீபன் தெரிவிக்கின்றார். அவர் மேலும் குறிப்பிடுகையில் நாளை டிசம்பர் 17 அன்று “நான் போதைப்பொருள் பாவனைக்கு எதிரானவள் / எதிரானவன்” என்ற தொனிப்பொருளில் லிற்றில் எய்ட் மாணவர்கள் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றை கிளிநொச்சியின் மையப்பகுதியில் மேற்கொள்ள உள்ளதாகத் தெரிவித்தார். இக்கவனயீர்ப்புப் போராட்டத்தில் தற்போது லிற்றில் எய்ட் இல் கல்விகற்கின்ற மாணவர்களும் லிற்றில் எய்ட் இன் பழைய மாணவர்களும் கூட்டாக ஈடுபடவுள்ளனர். கவனயீர்ப்புப் போராட்டத்தின் முடிவில் லிற்றில் எய்ட் பழைய மாணவர்களின் ஒன்று கூடல் திருநகர் லிற்றில் எய்ட் மையத்தில் நடைபெறவுள்ளது.

மாணவர்களுடைய வளர்ச்சியுடன் மட்டும் நின்றுவிடாமல் தமது ஆசிரியர்களையும் மேலதிக பயிற்சிகள் கற்கை நெறிகளுக்கு அனுப்பி அவர்களது திறனையும் ஆற்றலையும் வளர்ப்பதிலும் லிற்றில் எய்ட் கவனம் செலுத்தி வருகின்றது. ஒவ்வொரு மாணவ மாணவியரது வெற்றிக்குப் பின்னும் ஆசிரியர்களது உழைப்பு உன்னதாமானது. அந்த வகையில் லிற்றில் எய்ட் தனது ஆசிரியர்களது முன்னேற்றத்திலும் அவர்களது பொருளாதார எதிர்கால முன்னேற்றத்திலும் கவனம்கொண்டு அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளையும் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

மூன்றாம் நிலைக்கல்வி தொழிற்கல்வி மையமாக லிற்றில் எய்ட் க்கு அங்கிகாரம் கிடைக்கப்பெற்றதற்கு லிற்றில் எய்ட் ஆசிரியர்களது அயராத உழைப்பைப் பாராட்டிய லிற்றில் எய்ட் தலைவர் க நத்தகுமார் (சிவன்) லிற்றில் எய்ட் தனது இலக்கில் தொடர்ந்து பயணிப்பதற்கான தொடர்ச்சியான பொருளாதார பலத்தை உருவாக்க வேண்டும் எனத் தெரிவித்தார். கடந்த சில ஆண்டுகளில் க நந்தகுமார் தலைமையில் லிற்றில் எய்ட் கணிசமான வளர்ச்சியை எட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்த வளர்ச்சிக்கு பலவகையிலும் ஒத்துழைத்தவர்கள் தங்களை வெளிப்படுத்தாமல் இன்னமும் அந்த ஆதரவை வழங்கி வருகின்றமைக்கு தனது நன்றிகளையும் அவர் பகிர்ந்து கொண்டார்.

லிற்றில் எய்ட் செயலாளர் ஆர் சுகேந்திரன், டொக்டர் பொன் சிவகுமார் மற்றும் லிற்றில் எய்ட் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் தமது தொழிற்கல்வி மையம் அடுத்த நிலைக்கு நகர முன்றாம்நிலை தொழிற்கல்வி ஆணைக்குழு அங்கிகாரம் வழங்கியுள்ளதையிட்டு மகிழ்ச்சியைத் தெரிவித்துள்ளனர். தற்போது கிளிநொச்சியில் முதன்மைத் தொழிற்கல்வி நிலையமாக வளங்களைக் கொண்ட நிலையமாக ஜேர்மன் ரெக் இருந்தபோதும் அங்கு கிளிநொச்சி மாணவர்கள் பெருமளவில் இல்லை. அந்த வகையில் இன்றைய நிலையில் கிளிநொச்சியில் கிளி மாணவர்களுக்கு இலவசமாக அங்கிகாரம் பெற்ற முன்றாம் நிலைக் கல்வி தொழிற்கல்வியை வழங்கும் முதன்மை நிறுவனமாக லிற்றில் எய்ட் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

கிளிநொச்சி மாவட்டத்தின் கல்வி வளர்ச்சியில் தன்னை முக்கியதொரு அங்கமாக இணைத்துள்ள லிற்றில் எய்ட் திறன்விருத்தி மையம்இ கிளிநொச்சி கல்வி வலயத்தின் வேண்டுகோளின் அடிப்படையில் முன்பள்ளி ஆசிரியர்களுக்கான ஆங்கிலக் கல்விப் பயிற்சி நெறியையும் அண்மையில் ஆரம்பித்துள்ளது. 40 முன்பள்ளிகளின் ஆசிரியர்கள் லிற்றில் எய்ட் இல் ஆசிரியர்களுக்கான ஆங்கிலக் கல்விப் பயிற்சியைப் பெற்றுவருகின்றனர். இவர்களுக்கான ஆங்கில வகுப்புகளை கனடாவில் மொழிபெயர்ப்பியலில் செயற்பட்ட தற்போது யாழ் பல்களைக்கழகத்தின் வருகைதரு விரிவுரையாளராக உள்ள மணி வேலுப்பிள்ளை வழங்கி வருகின்றார். இவர்களுக்கு ஆரம்ப கணணிப் பயிற்சியையும் அளிப்பதற்கு தற்போது ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாட்டை லண்டனில் உள்ள தொழிலதபர் ஒருவர் மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. இவர் லிற்றில் எய்ட் இல் விடியோ எடிட்டிங் கற்கை நெறிக்காண கணணிகளையும் அன்பளிப்புச் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

லிற்றில் எய்ட் அதன் பெயருக்கமைவாக சிறிய நிறுவனமாக இருந்த போதும் அதன் செயற்பாடுகள் மிகவும் பரந்தும் ஆழமான தாக்கத்தை கிளிநொச்சி மண்ணில் ஏற்படுத்தி வருகின்றது. சுயதொழில் வாய்ப்பு பயிற்சி நெறிகள், உள்ளுர் உற்பத்திகளை ஊக்குவித்தல், ஆளுமை தலைமைத்துவப் பயிற்சிகள், இளவயதுத் திருமணங்கள் – வீதி விபத்துக்கள் – போதைப்பொருள் பாவன தொடர்பான கவனயீர்ப்புப் போராட்டங்கள் என லிற்றில் எய்ட் ஒரு சமூக இயக்கமாக செயற்ப்ட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. கிளிநொச்சி ஆளுமைகளை ஆவணப்படுத்துவது, சமூக செயற்பாட்டாளர்களை அடையாளம் கண்டு கௌரவிப்பது என லிற்றில் எய்ட் இன் செயற்பாடுகள் பரந்து விரிந்து செல்வது குறிப்பிடத்தக்கது. இவற்றோடு லிற்றில் எய்ட் ஈலிங் கனகதுர்க்கை அம்மன் ஆலயத்தின் அனுசரணையோடு முப்பது வரையான யுத்தத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் சிறார்களுக்கு கல்வி உதவி அளித்து வருகின்றது. அவ்வாறு உதவி பெற்ற மாணவர்கள் அண்மைய கபொத சாதாரண தரப் பரீட்சையில் சாதனை நிகழ்த்தி உள்ளனர். த புகழரசன் 9A, த கலைக்குமரன் 8A 1B, அ தர்சிகா 7A 2B, மா தேனன் 2A 5B 1C, சி நிரேகா 3A 3B 1C 1S எடுத்துள்ளனர். த புகழரசனின் பாடசாலை வரலாற்றில் இவ்வாறான பெறுமேறுபெற்றது இதுவே முதற்தடவை.இவர்களது அடுத்த கட்ட கல்விச் செயற்பாடுகளுக்கும் லிற்றில் எய்ட் தன்னாலான உதவிகளை வழங்கி வருகின்றது.

லிற்றில் எய்ட் க்கு வழங்கப்படுகின்ற ஒவ்வொரு சிறு உதவியும் சிந்தாமல் சிதறாமல் வினைத்திறனுடன் பயன்படுத்தப்படுவதானாலேயே தான் தொடர்ந்தும் அவர்களுக்கு நிபந்தனையில்லாமல் முடிந்த உதவியை வழங்கி வருவதாக நீண்ட காலமாக நிதிப்பங்களிப்பைச் செய்துவருகின்ற பெயர்குறிப்பிட விரும்பாத லிற்றில் எய்ட் குடும்ப உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார். தற்போது லிற்றில் எய்ட் குடும்பத்துடன் ஜேர்மனியில் உள்ள நண்பர்களும் இணைந்து மாதாந்தம் ஒரு லட்சம் ரூபாய் லிற்றில் எய்ட் செயற்பாடுகளுக்கு வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. தற்போது லிற்றில் எய்ட் மாதாந்த செலவீனம் 6 லட்சத்தை எட்டியுள்ளது. இதனை லிற்றில் எய்ட் இலும் அதன் இலக்கிலும் நம்பிக்கை கொண்டபலர் செலுத்தி வருகின்றனர்.

“அவள் தேசத்தின் பெருமை ” – லிட்டில் எய்ட் திறன் விருத்தி மையத்தின் ஏற்பாட்டில் மகளிர் தின நிகழ்வுகள் !

லிட்டில் எய்ட் திறன் விருத்தி மையத்தின் ஏற்பாட்டில் அவள் தேசத்தின் பெருமை என்ற தொனிப்பொருளிலான மகளிர் தின நிகழ்வுகள் நேற்றைய தினம் 26.03.2023 கிளிநொச்சி திருநகரில் அமைந்துள்ள லிட்டில் எய்ட் திறன் விருத்தி மையத்தின் பிரதான மண்டபத்தில் இடம்பெற்றன.

லிட்டில் எய்ட் திறன் விருத்தி மையத்தின் மாணவர்களின் கலை நிகழ்வுகளும் – பெண் விடுதலை பற்றிய கருத்துக்களும் அதிகமாக வலியுறுத்தப்பட்டிருந்த இந்த நிகழ்விற்கு மகாசக்தி மகளிர் சம்மேளன தலைவி திருமதி சத்தியமூர்த்தி லலிதகுமாரி தலைமை ஏற்று நடத்தி இருந்தார்.
தலைமை உரையில் கருத்து தெரிவித்திருந்த லலிதகுமாரி அவர்கள் ” வழமையாக அரசு நிறுவனங்களோ – அல்லது அதன் துணை நிறுவனங்களோ மட்டுமே இந்த மகளிர் தின நிகழ்வுகளை ஏற்பாடு செய்து நடத்துகின்றனர். இப்படியான ஒரு நிகழ்வு பல மாணவிகள் கல்வி கற்கக்கூடிய ஒரு திறன் விருத்தி மையத்தில் நடைபெறுவதையிட்டு நான் பெருமகிழ்வடைகிறேன். பெண்கள் சார்ந்த மாற்றம் என்பது பெரிய அளவிலான இடங்களில் இருந்து இடம்பெறுவதை காட்டிலும் வீட்டில் இருந்தே ஆரம்பிக்க வேண்டும். இங்கு இருக்கக்கூடிய ஆண்பிள்ளைகள் ஆக குறைந்தது வீட்டில் உங்களுடைய வேலைகளை அம்மாவுக்கு பொறுப்பு கொடுக்காது நீங்களே செய்வது மாற்றத்திற்கான முதலாவது அடியாகும். கடந்த காலங்களைப் போல் அல்லாது இன்றைய நாட்களில் பெண்கள் முன்னோக்கி நகர ஆரம்பித்துள்ளனர். சில சமூக தடைகள் அவர்களுக்கு இருந்தாலும் கூட அதனையும் தாண்டி கிளிநொச்சி மாவட்டத்து பெண்கள் சாதித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த நிலை இன்னும் கிராமங்கள் முழுவதும் சென்றடைய வேண்டும்.” என அவர் குறிப்பிட்டிருந்தார்.
மேலும் சர்வதேச அரங்கில் பல விருதுகளைப் பெற்று வன்னி மண்ணின் பெருமையை தேசிய அளவில் பிரதிநிதித்துவப்படுத்திய திருமதி அகிலத்திரு நாயகி ஸ்ரீசெயானந்தபவன் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
தொடர்ந்து பல கலை நிகழ்வுகளும் இடம்பெற்றது. இதன் போது லிட்டில் எய்ட் திறன் விருத்தி மையத்தின் மாணவர்களின் தயார்படுத்தலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சமூகமும் – கலாச்சாரமும் பெண்களை பாதுகாக்கின்றதா ..? அல்லது அடிமைப்படுத்துகின்றதா என்ற தலைப்பிலான பட்டிமன்றம் பலருடைய வரவேற்பையும் பெற்றிருந்தது.
நிகழ்வுகளின் இறுதியில் தேசிய அரங்கிலும் – சர்வதேச அரங்கிலும் கிளிநொச்சி மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தி பல விருதுகளை பெற்று கிளிநொச்சி மண்ணுக்கு பெருமை சேர்த்த கிளிநொச்சி மாவட்ட உருள்பந்து வீராங்கனைகள் கௌரவிக்கப்பட்டனர். இந்த கௌரவிப்புக்கான நிதி அன்பளிப்பை ஹட்டன் நேசனல் வங்கி வழங்கியிருந்ததமையும் குறிப்பிடத்தக்கது.
இதன் போது கருத்து தெரிவித்திருந்த கிளிநொச்சி மாவட்ட உருள்பந்து மகளிர் அணியின் தலைவி நடராசா வினுசா பேசிய போது ” கிளிநொச்சி மாவட்ட மகளிர் இன்று பல்வேறு பட்ட துறைகளிலும் மிளிர ஆரம்பித்துள்ளனர். இருந்த போதும் பெண்கள் என்பதாலோ என்னமோ அவர்கள் எவ்வளவு பெரிய சாதனை படைத்தாலும் அதனை நமது சமூகத்தினர் கண்டு கொள்வது மிகக் குறைவாகவே உள்ளது. கிளிநொச்சி மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் RollBall அதாவது உருள்பந்து விளையாட்டு வீராங்கனைகளாகிய நாம் தேசிய மட்டத்தில் பல வெற்றிகளை பதிவு செய்துள்ளதுடன் – நமது அணியைச் சேர்ந்த பல வீராங்கனைகள் இலங்கை அணியை பிரதிநிதித்துவப்படுத்தி சர்வதேச அரங்கிலும் கால் பதித்துள்ளனர். ஆனால் இந்த விளையாட்டு பற்றி கூட எம்மில் பலருக்கு இன்னும் தெரியாது உள்ளது. நாம் விளையாடுவதற்கு ஒரு விளையாட்டு மைதானம் கூட இல்லாது சிரமப்பட்டு கொண்டிருக்கின்றோம். விளையாட வருகின்ற அனைத்து வீராங்கனைகளுமே கஷ்டப்பட்ட குடும்ப பின்னணி உடையவர்களே. மற்றைய பகுதிகளில் விளையாட்டு வீராங்கனைகள் ஏதோ ஒரு வகையில் அடையாளம் காணப்பட்ட அவர்களுக்கான உதவிகள் செய்யப்படுகின்ற போதிலும் கூட எமக்கு கிடைக்கக்கூடிய சமூக மட்டத்திலான ஆதரவு என்பது மிகக் குறைவான அளவிலேயே உள்ளது. பயிற்றுவிப்பாளரும் – சில அதிகாரிகளும் மட்டுமே எங்கள் தொடர்பில் அதீத கவனம் செலுத்துகிறார்கள். எங்களுடைய பல வீராங்கனைகளுக்கு விளையாடுவதற்கான சப்பாத்து கூட இல்லாத ஒரு துர்பாக்கிய சூழலே நிலவுகின்றது. விளையாடுவதற்கான ஒரு விளையாட்டு தளம் கிடையாது. விளையாடுவதற்கான பயிற்சிகளை கூட நாம் பாடசாலையின் பிரதான மண்டபத்திலேயே மேற்கொள்ள வேண்டிய சூழலே காணப்படுகின்றது. எனவே இந்த இடத்தில் லிட்டில் எய்ட் திறன் விருத்தி மையம் போல எங்களை ஆதரிக்க கூடிய பலரை நாம் எதிர்பார்த்து நிற்கின்றோம். உங்களுடைய ஆதரவு எங்களுக்கு கிடைக்குமா இன்னும் பல மாணவிகளை சர்வதேச அரங்குக்கு எங்களால் கொண்டு செல்ல முடியும்.” என அவர்  குறிப்பிட்டிருந்தார்.

உறுதி கொண்ட நெஞ்சினாள் நூல் வெளியீடு – காணொளி இணைப்பு !

உறுதிகொண்ட நெஞ்சினாள் நூல் வெளியீடும் ஞாபகார்த்த விருது வழங்கலும் !

உறுதிகொண்ட நெஞ்சினாள் நூல் வெளியீடும் ஞாபகார்த்த விருது வழங்கலும் !

ஊடகவியலாளரும் சமூக சேவையாளருமான சிவஜோதியின் 51ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு திருமதி ஹம்சகௌரி சிவஜோதியின் உறுதிகொண்ட நெஞ்சினாள் நூல் வெளியீடும் சிவஜோதி ஞாபகார்த்த விருது வழங்கும் நிகழ்வும், நாளை 20ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 10 மணிக்கு, கிளிநொச்சி திருநகரிலுள்ள லிற்றில் எய்ட் அரங்கில் இரு அமர்வுகளாக இடம்பெறவுள்ளது.

முதலாவது அமர்வில் கிளிநொச்சி, ஜெயந்திநகர், மீனாட்சி அம்மன் ஆலயப் பிரதமகுரு சிவஸ்ரீ கேஷ்வரநாத சர்மா மற்றும் கருணா நிலையத்தின் தலைமைக்குரு டானியல் ஆகியோர் ஆசியுரை வழங்கவிருப்பதுடன், தலைமையுரையை கிழக்கு மாகாணத்தின் சிரேஷ்ட கலை கலாசார அலுவலர் குணபாலன் நிகழ்த்துவார்.

இளையோரை விருத்தி செய்தல் எனும் தலைப்பில் சிறப்புரையை எழுத்தாளர் கருணாகரனும், சிவஜோதியின் நினைவுப் பகிர்வை சமத்துவக் கட்சியின் பொதுச் செயலாளர் முருகேசு சந்திரகுமாரும் வழங்கவுள்ளனர்.

இரண்டாவது அமர்வில் தலைமையுரையை செல்வி யாழ்.பல்கலைக்கழக கலைப்பீட முதலாம் வருட மாணவி வர்ஷனா வரதராசாவும், உறுதிகொண்ட நெஞ்சினாள் நூல் வெளியீட்டுரையை யாழ்.பல்கலைக்கழக மெய்யியல் துறை மாணவி இறுதி வருட மாணவி செல்வி விராஜினி காயாத்திரி இராஜேந்திரனும் ஆற்றவுள்ள நிலையில் நூலின் முதற் பிரதியை செல்வி அபிலாஷா தேவராஜாவும் பெற்றுக் கொள்ளவுள்ளார்.

இதேவேளை உறுதி கொண்ட நெஞ்சினாள் பிரதிபலிக்கும் பெண்ணியம் எனும் தலைப்பில், யாழ்.பல்கலைக்கழக முகாமத்துவ பீட முதலாம் வருட மாணவி செல்வி ஹார்த்தியாயினி இராஜேஸ்கண்ணாவும், உறுதிகொண்ட நெஞ்சினாள் பேசும் பெண் கல்வியும் அதன் இன்றைய நிலையும் எனும் தலைப்பில் யாழ்.பல்கலைக்கழக விஞ்ஞான பீட மூன்றாம் வருட மாணவி செல்வி மயூரகா ஸ்ரீஸ்கந்தராசாவும் உறுதிகொண்ட நெஞ்சினாள்களின் பெண்கள் தொடர்பான சமூகப் பார்வை எனும் தலைப்பில் ஆய்வாளரும் எழுத்தாளரும் மனிதம் அமைப்பின் உருவாக்குநர் சபை உறுப்பினருமான நிவேதா சிவராஜாவும் உரையாற்றவுள்ளனர். நிகழ்வின் இறுதியில், சிவஜோதியின் ஞாபகார்த்த நினைவு விருது வழங்கப்படவுள்ளது.

கலை இலக்கியச் செயற்பாட்டாளரும் ஊடகவியலாளருமான வைத்தீஸ்வரன் சிவஜோதி 2020ஆம் ஆண்டு 12ஆம் மாதம் 30ஆம் திகதி காலமானார். தேசிய கலை இலக்கியப் பேரவை, கொழும்புத் தமிழ்ச்சங்கம், கிளிநொச்சி கலை இலக்கிய நண்பர் வட்டம், மக்கள் சிந்தனைக்களம் – கிளிநொச்சி, நூலகம், இலக்கியச் சந்திப்புகள் ஆகியவற்றோடு இணைந்து பங்காற்றிய சிவஜோதி, நல்லதொரு நாடகக் கலைஞர். யாழ்ப்பாணம், கொழும்பு ஆகிய இடங்களில் பல நாடகங்களில் நடித்தவர். தினகரன் பத்திரிகையின் ஆசிரிய பீடத்தில் பணியாற்றியவர். இறுதியாக கிளிநொச்சியில் உள்ள Little Aid அமைப்பின் நிர்வாக இயக்குநராகச் செயற்பட்டு அந்த மக்களுக்கும், மாணவர்களுக்கும் பல்வேறு சமூகப் பணிகளை ஆற்றியவர்.

வைத்தீஸ்வரன் சிவஜோதியின் மறைவைத் தொடர்ந்து அவரது பிறந்ததினத்தன்று சிவஜோதி ஞாபகார்த்த விருதும் 1லட்சம் ரூபா பணப் பரிசும் நாடகத்துறை சார்ந்து வழங்கப்படுகின்றது. அந்த வகையில் இந்த ஆண்டும் இரண்டாவது முறையாக இந்த விருது வழங்கப்படவுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

மூட்டை சுமப்பவளுக்கு கூள் காறிக்கு எப்படி திருமணம் ஆகும் என்றெல்லாம் பேசப்பட்ட கிளி ‘அக்காச்சி’ பிராண்டின் தற்போதைய மதிப்பு ஒரு கோடியை ரூபாயை எட்டும்!

ஓகஸ்ட் 29 மற்றும் 20ம் திகதிகளில் கிளிநொச்சியில் இடம்பெற்ற உள்ளுர் உற்பத்திப் பொருட்களின் கண்காட்சியிலும் விற்பனையிலும் கலந்துகொண்ட ‘அக்காச்சி’ பிராண்டின் உரிமையாளர் அனுஜா ராஜ்மோகன், லிற்றில் எய்ட் இல் இடம்பெற்ற கலந்துரையாடலில் “சின்னச் சின்ன தொழில்களை உருவாக்கும் சக்தியைப் பெறுங்கள், உங்களுக்கும் அயலவர்களுக்கும் தேவையான பொருட்களை செய்கின்ற சிறு உற்பத்தியார்களாக மாறுங்கள்” எனத் தெரிவித்தார். “நான் பட்ட வலிகளை வார்த்தைகளில் சொல்லிவிட முடியாது” எனத் தெரிவித்த அவர் “பதின்மப் பருவத்தில் பத்தாம் வகுப்போடு கல்வியை நிறுத்திவிட்டு மூட்டைகளை சுமந்ததையும் கூழ் விற்றதையும் கிண்டல் பண்ணி எனக்கு திருமணமாகாது குடும்ப வாழ்வு அமையாது என்றெல்லாம் உறவுகள் ஒதுக்கி வைத்தனர்” என்றும் தன்னுடைய வலி மிகுந்த அனுபவங்களை அங்கு வந்திருந்த தொழில்முனைவோரோடு பகிர்ந்து கொண்டார். “அன்று அவர்களின் நையாண்டிகளைச் செவிமடுத்து இருந்திருந்தால் இன்று இந்த ‘அக்காச்சி’ என்ற பிராண்ட் உருவாகியிராது. நான் இந்த மேடையிலும் ஏறியிருக்க முடியாது. ஒரு மூலையில் ஒதுக்கப்பட்டு இருப்பேன்” என்றும் அனுஜா ராஜ்மோகன் தன்னுடைய இன்றைய நிலையை இட்டு பெருமைப்பட்டுக் கொண்டார். அனைவரது பாராட்டுக்களையும் சபையில் இருந்து பெற்றார்.
ஓகஸ்ட் 29 அன்று கிளிநொச்சி மாவட்ட செயலக சிறுகைத் தொழில் அபிவிருத்தி பிரிவு கச்சேரி மற்றும் மனிதவலு அபிவிருத்தி பிரிவு, கிரிசலிஸ் (Chrysalis) ஆகியன உள்ளுர் உற்பத்திப் பொருட்களுக்கான கண்காட்சசியும் விற்பனையும் மேற்கொண்டது.இக்கண்காட்சியில் லிற்றில் எய்ட் நிறுவனம் தனது மணவர்களால் உருவாக்கப்பட்ட ஆடைகள் மற்றும் கைவினைப் பொருட்களை விற்பனை செய்து 15,000 ரூபாய் வரை லாபமீட்டியது. ஓகஸ்ட் 20 அன்று லிற்றில் எய்ட் நிறுவனத்திலும் உள்ளுர் உற்பத்திப் பொருட்களுக்கான கண்காட்சியும் விற்பனையும் அத்துடன் கலந்துரையாடலும் இடம்பெற்றது.
இவ்விற்பனையின் மூலம் லிற்றில் எய்ட் 40,000 ரூபாவரை லாபமீட்டியதுடன் பல்வேறு தொழில்முனைவோருக்கும் தங்கள் பொருட்களை சந்தைப்படுத்தவும் விற்பனை செய்வதற்குமான வாய்ப்பு வழங்கப்பட்டு இருந்தது. இவ்விரு கண்காட்சியிலும் விற்பனையிலும் பல்வகைப்பட்ட உணவுப் பொருட்கள், தைத்த ஆடைகள், தையல் அலங்காரங்கள், ஆபரணங்கள் மற்றும் கைவினைப் பொருட்கள் என்பன காட்சிப்படுத்தப்பட்டு விற்பனையும் மேற்கொள்ளப்பட்டது. ஒவ்வொரு தொழில் முனைவோருக்கும் பயனுள்ள வகையில் எதிர்காலத்தில் தங்கள் சந்தை வாய்ப்புகளைத் தூண்டும் நோக்கோடு இக்கண்காட்சியும் விற்பனை நிகழ்வும் மேற்கொள்ளப்பட்டது. பல தொழில்முனைவோர் இந்நிகழ்வுகளின் மூலம் பொருட்களுக்கான கட்டளைகளை (ஓடர்) பெற்றதாக தெரிவித்தனர்.
ஓகஸ்ட் 20இல் லிற்றில் எய்ட் இல் இடம்பெற்ற தொழில்முனைவோருக்கான கண்காட்சி கலந்துரையாடலை கிளிநொச்சியில் மிகுந்த நன்மதிப்பைப் பெற்ற விவேகானந்தா கல்லூரியின் அதிபர் ஜெயா மாணிக்கவாசகர் திறந்து வைத்தார். லிற்றில் எய்ட் இன் செயற்பாடுகள் அடுத்த கட்டத்திற்குச் சென்றுவிட்டதை இந்த தொழில்முனைவோருக்கான கண்காட்சி எடுத்துக்காட்டுவதாகக் குறிப்பிட்ட அவர் நாங்கள் கற்பித்து அனுப்புகின்ற மாணவர்களை லிற்றில் எய்ட் இப்பிரதேசத்தின் தொழில்முனைவோரோக்கி அவர்களாலும் முடியும் என்று காட்டியுள்ளது எனத் தெரிவித்தார். லிற்றில் எய்ட் இல் கல்வி பயிலும் மாணவர்கள் கிளிநொச்சி நகரத்தில் உள்ள பாடசாலைகளில் இருந்து வருபவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
தொழில்முனைவோருக்கு உதவும் அலுவலராகவும் அதேசமயம் லிற்றில் எய்ட் நம்பக்கை சபை உறுப்பினராகவும் செயற்படும் எஸ் தேவதாஸ் அவர்கள் ‘தொழில்முனைவோருக்கான களம் கிளிநொச்சி’ என்ற தொனிப் பொருளில் உரையாற்றினார். “மூலப்பொருட்கள் மூலப்பொருட்களாகவே விற்பனை செய்யப்படுகின்றது” என்பதை அவர் சுட்டிக்காட்டினார். மூலப்பொருட்களை முடிவுப்பொருட்களாக்கி அவற்றுக்கு வெவ்வேறு வழிகளில் பெறுமதியைச் சேர்க்க வேண்டியதன் அவசியத்தை அவர் அங்கு அழுத்தமாகத் தெரிவித்தார். கிளிநொச்சி உணவு உற்பத்தியில் தன்னிறைவு அடைவதோடு ஏனைய பிரதேசங்களுக்கும் குறிப்பாக தமிழர்கள் பரந்து வாழுகின்ற மேற்கு நாடுகளுக்கும் பொருட்களை ஏற்றுமதி செய்பவர்களாக ஆகமுடியும் என்பதை அவர் வலியுறுத்தினார். உள்ளுரில் கிடைக்கின்ற சத்தான உணவுகள் பற்றி நாங்கள் கண்டுகொள்ளாமல் இருப்பதையும் அவர் அங்கு சுட்டிக்காட்டினார்.
கிளிநொச்சி மாவட்டத்தின் பிரதித் திட்டமிடல் பணிப்பாளர் கேதீஸ்வரன் உரையாற்றுகையில் தொழில் முனைவோருக்கு உள்ள பல்வேறு உதவித் திட்டங்களைப் பற்றியும் சுட்டிக்காட்டி தொழில்முனைவோர் ஆர்வத்தோடும் நிதானத்தோடும் தங்கள் தொழில்முயற்சிகளை வளர்த்தெடுக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.
லிற்றில் எய்ட் மாணவியாக இருந்து அதன் உதவித் தையலாசிரியராக தையல் வீட்டுத் தோட்டம் என்று தொழில்முயற்சிகளிலும் ஈடுபட்டுவரும் தமிழினி லிற்றில் எய்ட் இன் ஒரு முன்மாதிரியான தொழில்முனைவோர். தான் யாரிலும் எதற்காகவும் தங்கி இருப்பதில்லை என்று குறிப்பிடும் மூன்று குழந்தைகளின் தாயான இவர் வீட்டில் இருந்தவாறே தன்னால் தனது தேவைக்கதிகமாக பணத்தை ஈட்ட முடிகிறது என்றும் இதனை ஒவ்வொருவராலும் செய்ய இயலும் என்றும் தெரிவித்தார். தமிழினி வீட்டுத் தோட்டத்து ‘வோட்டர் மெலன்’ மிக அருமையான சுவையோடு இருந்ததாகக் குறிப்பிட்ட லிற்றில் எய்ட் இயக்குநர் ஹம்சகௌரி சிவஜோதி தமிழினி ‘சென்றவாரம் வோட்டர் மெலன்களை விற்று 30,000 சம்பாதித்து இருந்ததாகக் குறிப்பிட்டார். அவர் வீட்டிலேயே தையல் சேவையை வழங்குகிறார். கை வினைப் பொருட்களைத் தயாரிக்கின்றார். கம்பளி ஆடைகளை நெய்கின்றார். அவர் மிகவும் விவேகமான சுறுசுறுப்பான தொழில்முனைவர் என்பதில் தான் பெருமைப்படுவதாகக் குறிப்பிட்டார்.
இக்கண்காட்சியும் கலந்துரையாடலும் லிற்றில் எய்ட் ஆசிரியர்கள் மாணவர்கள் திறம்பட ஒழுங்கமைத்திருந்தனர்.
“வெளிநாடுகளில் குறிப்பிடத்தக்க வழங்கள் எதுவும் இல்லாமல் அந்நாடுகள் செல்வந்த நாடுகளாக உள்ளன. ஆனால் இந்நாட்டில் அளவுக்கு மிஞ்சிய வளங்கள் இருந்தும் கவனிப்பார் இல்லாமலே பூத்துக் காய்த்து கனி தரும் மரங்கள் இருந்தும் நாங்கள் வறிய நாடுகளாக இருப்பது வேதனையளிக்கின்றது” என லிற்றில் எய்ட் ஸ்தாபகர் த ஜெயபாலன் குறிப்பிட்டார். ‘தொழில்முனைவோர் ஒரு பார்வை’ என்ற தலைப்பில் அவர் உரை நிகழ்த்தினார். “பிரித்தானியாவில் ‘அப்பிள்’ உள்ளங்கையளவு பழம். அதிலிருந்து முடிவுப்பொருட்களாக குளிர் பானங்கள், ஏராளமான உணவு வகைகள் (அப்பிள் பை, அப்பிள் ரேன்ஓவர், அப்பிள் சோர்ஸ், அப்பிள் கேக், அப்பிள் ஸ்ரப்பிங்,..) குடிபானங்கள் உருவாக்கப்பட்டு ஆண்டு முழுவதும் பயன்படுத்தப்படுகின்றது. ஆனால் எம் நாட்டில் கனியும் அந்தப் பெரிய பிலாப்பழத்தில் நாங்கள் முடிவுப் பொருளாக குறிப்பிடப்படும் படியாக எதையும் செய்வதில்லை. இந்நிலை மாற்றப்பட்ட வேண்டும்” என த ஜெயபாலன் தன்னுரையில் குறிப்பிட்டார்.
“தொழில்முனைவோர் ஒரு நாட்டின் ஒரு பிரதேசத்தின் முதகெலும்பானவர்கள். அவர்களே அங்கு எழுகின்ற பிரச்சினைகளுக்கு தீர்வு காணக்கூடியவர்கள். இன்று இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி மிகவும் வரவேற்கப்படக் கூடியது. ஏனெனில் இலங்கை மக்கள் மாற்று வழியில் சிந்திக்க வேண்டும். தொழில்முனைவோர் இப்போதுள்ள நெருக்கடியை தீர்க்கும் வகையில் புதிய பொருட்களை உற்பத்தி செய்ய வேண்டும். இப்போதுள்ள உற்பத்தி முறைகளில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். நாடு சுயஉற்பத்தியில் ஈடுபட்டு இறக்குமதியைக் குறைத்து இந்த பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள வேண்டும். அதற்கு தொழில்முனைவோருக்கு ஊக்கமும் ஆக்கமும் அளிக்கப்பட வேண்டும் என்றும் கூறி த ஜெயபாலன் தனனுரையை நிறைவு செய்தார்.
லிற்றில் எய்ட் இனால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வில் சில நூறுபேர் கலந்து சிறப்பித்தனர். தொழில்முனைவோரும் தங்கள் பொருட்களை அறிமுகப்படுத்தியதோடு விற்பனையிலும் ஈடுபட்டு இருந்தனர்.

பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு: தன்னிறைவுப் பொருளாதாரமா? திறந்த பொருளாதாரக் கொள்கையா?: மாணவர் பட்டி மன்றம்

இலங்கை தற்போதைய பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு தன்னிறைவுப் பொருளாதாரத்திற்கு மாற வேண்டுமா? இல்லையேல் திறந்த பொருளாதாரக் கொள்கையையே கடைப்பிடிக்க வேண்டுமா என்ற தலைப்பில் லிற்றில் எய்ட் மாணவர்கள் பட்டிமன்றம் ஒன்றை ஏற்பாடு செய்துள்ளனர். மே 25 பிற்பகல் 2:30 மணிக்கு கிளிநnhச்சி திருநகர் கனகராசா வீதியில் உள்ள லிற்றில் எய்ட் மண்டபத்தில் இப்பட்டி மன்றத்தோடு கலைநிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. அண்மையில் வெளியிடப்பட்ட லிற்றில் எய்ட் சஞ்சிகை பற்றிய விமர்சனமும் நடனம், குழுப்பாடல், தனிப்பாடல் என்பனவும் இந்நிகழ்வில் இடம்பெறவுள்ளது.

அரசியல்வாதிகளும், பல்கலைக்கழகங்களும் கூட நாட்டின் இன்றைய பொருளாதார நெருக்கடிக்கான தீர்வு பற்றி சிந்திக்காத சூழலில் உயர்தரம் கற்கின்ற மாணவர்களின் இந்தக் கன்னி முயற்சி நிச்சயம் மற்றையவர்களையும் இவ்வாறான கருத்துப் பரிமாற்றங்களை மேற்கொள்ளவும் சிந்திக்கவும் தூண்டும் என லிற்றில் எய்ட் அமைப்பின் ஸ்தாபகர் த ஜெயபாலன் தெரிவிக்கின்றார்.

சமூக விழிப்புணர்வு விடயங்களில் ஆர்வம்காட்டி வரும் லிற்றில் எய்ட் மாணவர்கள் கற்றலுடன் நின்றுவிடாமல் தமிழ் பிரதேசங்களில் தலைதூக்கிவரும் சமூகப் பிரச்சினைகளிலும் தங்கள் கவனத்தை செலுத்தி வருகின்றனர். இதனை வெளிப்படுத்தும் வகையில் இளவயது திருமணங்கள் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் நாடகம் ஒன்றும் மேடையேறவுள்ளது. வீதிகளில் வேகத்தை கடைப் பிடிக்கக் கோரும் விழிப்புணர்வுப் நடவடிக்கைகளிலும் லிற்றில் எய்ட் மாணவர்கள் அண்மையில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வுக்கு கணணி தொழில்நுட்பவினைஞரான செல்வி தி குகாயினி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்கின்றார். பெண்கள் தொழில்நுட்பத்துறையில் கால்பதிப்பது அரிதானதொரு சூழலில் இவர் அத்துறையில் ஊன்றிப் பயணித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

எதிர்வரும் காலங்களில் மாணவர்கள் கல்விக்கு அப்பால் பல்திறமைகைளயும் வளர்த்துக்கொண்டு தங்கள் ஆளுமைகளை விருத்தி செய்வதனூடாக மட்டுமே தங்கள் வாழ்க்கையில் வெற்றி பெறமுடியும் எனத் தெரிவிக்கும் லிற்றில் எய்ட் இயக்குநர் ஹம்சகௌரி சிவஜோதி, லிற்றில் எய்ட மாணவர்கள் தாங்கள் வாழும் சமூகத்தின் மீது அக்கறையோடு செயற்படுவது தனக்கும் லிற்றில் எய்ட்க்கும் பெருமை சேர்ப்பதாக தேசம்நெற்க்குத் தெரிவித்தார்.

லிற்றில் எய்ட் நிர்வாகமும் மாணவர்களும் என்ன செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கின்றோமோ அதனை அவர்கள் திறம்படச் செய்வது தங்களுக்கு மகிழ்ச்சியைத் தருவதாக லிற்றில் எய்ட் அமைப்பின் தலைவர் கதிர் நந்தகுமரன் தெரிவிக்கின்றார். அவர் தேசம்நெற்க்கு மேலும் தெரிவிக்கையில் சமூகம் சார்ந்த செயற்பாடுகள் அருகி வருகின்ற சூழலில் இவ்வாறான விவாதங்கள், சமூக விழ்ப்புணர்வு நாடகங்கள், மாணவர்களின் திறமைகளை வெளிப்படுத்தும் ஆடல், பாடல்கள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட வேண்டும். இவை பரவலாக பலரையும் இவ்வாறு செய்யத் தூண்ட வேண்டும் என்றும் தெரிவித்தார்.

அண்மையில் லிற்றில் எய்ட் நிறுவனத்தைச் சுற்றியுள்ள கிராமத்தவர்கள் பயன்பெறும் வகையில் லிற்றில் நூலகம் அமரர் இராசமணி பாக்கியநாதனின் ஞாபகார்த்தமாக அவருடைய மகன் சிறிகுமார் பாக்கியநாதன் திறந்து வைத்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வுகளில் கலந்து சிறப்பித்து வளரும் தலைமுறையினருக்கான ஊக்கத்தை வழங்குமாறு லிற்றில் எய்ட் மாணவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

பொருளாதார நெருக்கடி புதிய சிந்தனைக்கு அவசியம்!லிற்றில் எய்ட் சான்றிதழ் வழங்கும் நிகழ்வில் த ஜெயபாலன் !

நாட்டில் இன்று ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி புதிய சிந்தனைக்கு அவசியமானது. தவிர்க்க முடியாதது என லிற்றில் எய்ட் ஸ்தாபகர் த ஜெயபாலன் கிளிநொச்சியில் லிற்றில் எய்ட் மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வுக்கு தலைமை தாங்கி உரையாற்றுகையில் தெரிவித்தார்.

 

கடந்த பல பத்து ஆண்டுகளாக தேவையற்ற ஆடம்பர பொருட்களை இறக்குமதி செய்து நூகர்வுக் கலாச்சாரம் ஒன்றை உருவாக்கியதன் விளைவே இந்தப் பொருளாதார நெருக்கடி எனத் தெரிவித்த த ஜெயபாலன் மாட்டுப் பாலை குடிக்காமல் அந்தப்பாலை குறைந்தவிலையில் நியூசிலாந்தில் உள்ள நெஸ்டல் கொம்பனிக்கு விற்று கூடிய விலைக்கு அங்கர் பால்பவுடரை வாங்கிக் குடிக்க ஆரம்பித்ததன் முடிவும் தான் இந்நிலைக்குக் காரணம் எனச் சுட்டிக்காட்டினார். இந்நிகழ்வு லிற்றில் எய்ட் ஸ்தாபகர் த ஜெயபாலன் தலைமையில் நடைபெற்றது.

 

அவர் தனதுரையில் இச்சான்றிதழ்கள் கற்கையின் முற்றுப்புள்ளி அல்ல என்றும் சேர் ஐசாக் நீயூட்டன் குறிப்பிட்டது போல் நாம் கற்ற ஒரு துளிக்கல்விக்கான அத்தாட்சி மட்டுமே என்றும் கல்லாதது சமுத்திரத்தின் அளவானது என்பதைச் சுட்டிக்காட்டினார். பெறுபேறுகள், சான்றிதழ்கள், பட்டங்கள் அல்ல கல்வி எனக் குறிப்பிட்ட அவர், கல்வி என்பது அவற்றையும் கடந்தது எனத் தெரிவித்தார். கடந்த 12 ஆண்டுகளாக கிளிநொச்சியில் இயங்கி வரும் லிற்றில் எய்ட் அமைப்பின் 2022ம் ஆண்டின் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு கிளிநொச்சி திருநகரில் உள்ள லிற்றில் எய்ட் மண்டபத்தில் ஏப்ரல் 10இல் மிகச் சிறப்பாக இடம்பெற்றது. 200 பேர் மட்டுமே கொள்ளக் கூடிய மண்டபத்தில் 350 பேர்வரை கலந்து கொண்டு நிகழ்வைச் சிறப்பித்தனர். 250 மாணவர்கள் கணணி வன்பொருள் கற்கை, கணணி மென்பொருள் கற்கை, வடிவமைப்பு, தையல் மற்றும் வடிவமைப்பு ஆகிய துறைகளில் டிப்ளோமா கற்கைகளைப் பூர்த்தி செய்து அதற்கான சான்றிதழ்களைப் பெற்றுக் கொண்டனர்.

அடுத்த பத்து ஆண்டுகளுக்கு அரச வேலை வாய்ப்புகள் வீழ்ச்சியடையும்!! 16 லட்சம் அரச ஊழியர்கள் தேவைக்கு அதிகமாக உள்ளனர்!!! – லிற்றில் எய்ட் சான்றிதழ் வழங்கும் நிகழ்வில் முன்னாள் பா உ மு சந்திரகுமார்

அடுத்த பத்து ஆண்டுகளில் அரச வேலை வாய்ப்புகள் கடுமையாக மட்டுப்படுத்தப்படும் என லிற்றில் எய்ட் சான்றிதழ் வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மு சந்திரகுமார் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில் இன்று நாடுள்ள நெருக்கடி நிலையில் அரச ஊழியர்களுக்கான கொடுப்பனவைச் செலுத்துவதிலேயே கடுமையான நிதிப் பற்றாக்குறையை எதிர்கொள்கிறது என்றும் இந்நிலையில் புதிய தொழில் வாய்ப்புகளை வழங்குவது என்பது அடுத்த பத்து ஆண்டுகளுக்கு சாத்தியம் இல்லை என்றும் தெரிவித்தார்.

கடந்த 12 ஆண்டுகளாக கிளிநொச்சியில் இயங்கி வரும் லிற்றில் எய்ட் அமைப்பின் 2022ம் ஆண்டின் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு கிளிநொச்சி திருநகரில் உள்ள லிற்றில் எய்ட் மண்டபத்தில் 10 April மிகச் சிறப்பாக இடம்பெற்றது. 200 பேர் மட்டுமே கொள்ளக் கூடிய மண்டபத்தில் 350 பேர்வரை கலந்து கொண்டு நிகழ்வைச் சிறப்பித்தனர். 250 மாணவர்கள் கணணி வன்பொருள் கற்கை, கணணி மென்பொருள் கற்கை, வடிவமைப்பு, தையல் மற்றும் வடிவமைப்பு ஆகிய துறைகளில் டிப்ளோமா கற்கைகளைப் பூர்த்தி செய்து அதற்கான சான்றிதழ்களைப் பெற்றுக் கொண்டனர்.

இந்நிகழ்வுக்கு ஆசியுரை வழங்கிய ஜெயந்திநகர் மீனாட்சி அம்மன் கோயில் பிரதம குரு முத்துகமார குருக்கள் சிவஸ்ரீ மகேஷ்வரநாத சர்மா, அதிகாரத்தில் உள்ளவர்கள் மக்களை அடக்கி ஒடுக்குவதாகவும் ஆனால் லிற்றில் எய்ட் போன்ற அமைப்பு கீழேயுள்ள மக்களை கல்வியறிவூட்டி வளர்த்துவிடுவதாகவும் தெரிவித்தார்.

கருணா நிலைய குரு எஸ் கே டானியல் தனது ஆசியுரையில் லிற்றில் எய்ட் இவ்வளவு தொகையான மாணவர்களது வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தி இருக்கின்றது என்றும் இவ்வளவு தொகையான மாணவர்களுக்கு கல்வியும் சமூகப் பண்புமூட்டி அவர்களை நல்வழியில் பயணிக்கச் செய்திருப்பதாகவும் தெரிவித்தார். மாற்றங்களை யாரும் இலகுவில் ஏற்றுக்கொள்வதில்லை ஆனால் லிற்றில் எய்ட் தங்களிடம் வரும் மாணவர்களில் மாற்றத்தை ஏற்படுத்தி அவர்களை ஆளுமைகளாக விருத்தி செய்து அனுப்புவதாகத் தெரிவித்தார்.

இந்நிகழ்வு லிற்றில் எய்ட் ஸ்தாபகர் த ஜெயபாலன் தலைமையில் நடைபெற்றது. அவர் தனதுரையில் இச்சான்றிதழ்கள் கற்கையின் முற்றுப்புள்ளி அல்ல என்றும் சேர் ஐசாக் நீயூட்டன் குறிப்பிட்டது போல் நாம் கற்ற ஒரு துளிக்கல்விக்கான அத்தாட்சி மட்டுமே என்றும் கல்லாதது சமுத்திரத்தின் அளவானது என்பதைச் சுட்டிக்காட்டினார். பெறுபேறுகள், சான்றிதழ்கள், பட்டங்கள் அல்ல கல்வி எனக் குறிப்பிட்ட அவர், கல்வி என்பது அவற்றையும் கடந்தது எனத் தெரிவித்தார்.

வன்னி மண் இன்றைய பொருளாதார நெருக்கடிகளுக்கு அப்பால் பல்வேறு சமூகச் சிக்கல்களை எதிர்கொள்கின்றது என்பதைச் கூட்டிக்காட்டிய த ஜெயபாலன் இளைஞர் வன்முறை, போதைவஸ்து பழக்கம், இளவயதுத் திருமணங்கள், வீதி விபத்துக்கள் மற்றும் இவற்றின் ஒட்டுமொத்த தாக்கமாக கல்வி வீழ்சி என்பன வன்னி மண் எதிர்கொள்ளும் பாரிய பிரச்சினை என்றும் இவற்றுக்கு மற்றவர்கள் மீது பழிபோடுவதைத் தவிர்த்து இதற்கான தீர்வைப் பற்றி தமிழர்கள் நாம் சிந்திக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.

இந்நிகழ்வுக்கு இலங்கை ஜேர்மன் பயிற்சி நிறுவனத்தின் பணிப்பாளர் ஜி தர்மநாதன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். மாணவர்கள் தொழில்நுட்ப அறிவை வளர்த்துக்கொள்வதன் அவசியத்தை வலியுறுத்திப் பேசிய அவர் தொழில்நுட்ப அறிவு இல்லாமால் எதிர்காலத்தில் வேலை வாய்ப்புகளைப் பெற்றுக் கொள்வது கடினமாக இருக்கும் எனத் தெரிவித்தார். மாணவர்கள் நேரான (பொசிடிவ்) எண்ணங்களை வளர்த்துக்கொண்டு தங்கள் ஆளுமைகளை வெளிப்படுத்த வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். எமது பாரம்பரியமான ஆமையும் முயலும் கதை போல் அல்லாமல் ஆமையும் முயலும்; இணைந்து கூட்டாக தரையிலும் திண்ணீரிலும் செயற்படுவதன் மூலம் கூட்டு உழைப்பின் முக்கியத்துவதை;தை விளக்கினார் தர்மநாதன் விளக்கினார்.

லிற்றில் எய்ட் ஸ்தாபகர் த ஜெயபாலன் தொடர்ந்தும் உரையாற்றுகையில் இன்றைய பொருளாதார நெருக்கடிகள் பற்றியும் குறிப்பிட்டார். இன்றைய நெருக்கடியான சூழலைக் கண்டு நாங்கள் அஞ்ச வேண்டியதில்லை என்றும் நெருக்கடியான காலகட்டங்களிலேயே மனித குலம் புதிய திருப்பு முனைகளை கண்டுகொண்டது வரலாறு என்றும். ஐரோப்பாவில் பல்வேறு புதிய கண்டுபிடிப்புகள் உருவாகக் காரணம் அம்மக்கள் எதிர்கொண்ட அசாதாரண காலநிலை. அதுபோல் எமது நாட்டில் நிலவும் தற்போதைய நெருக்கடி எமது கல்வியலாளர்களையும், மாணவர்களையும், வர்த்தகர்களையும், அரசியல்வாதிகளையும் புதிய கோணத்தில் சிந்திக்கத் தூண்டும் எனத் தெரிவித்தார். மாணவர்களாகிய நீங்கள் இன்று கற்பது நாளை உருவாகப் போகின்ற பிரச்சினைக்கான தீர்வுகளைக் காண்பதற்காகவே அல்லாமல் வெறும் பெறுபேறுகளுக்காக, சான்றிதழ்களுக்காக, பட்டங்களுக்காக என்று குறுக்கிவிடாதீர்கள் எனத் தெரிவித்தார்.

லிற்றில் எய்ட் இன் செயற்பாடுகளைப் பற்றி விதந்துரைத்த முனானாள் பாராளுமன்ற உறுப்பினர் மு சந்திரகுமார் லிற்றில் எய்ட் எவ்வளவு சிரமங்களின் மத்தியில் இம்மண்ணில் செயற்பட்டு தனக்கென ஓரிடத்தை தக்க வைத்துக்கொண்டுள்ளது. அதற்கு காலம்சென்ற வி சிவஜோதியின் அர்ப்பணிப்பு மகத்தானது எனத் தெரிவித்தார். மு சந்திரகுமார் மேலும் குறிப்பிடுகையில் த ஜெயபாலன் கல்வியைக் கற்பதற்கு வயதெல்லை இல்லை என்பதை தனது சொந்த அனுபவத்தினூடாக மாணவர்களுக்குக் காட்டியவர் என்றும் எதிர்காலத்தில் அரச வேலைகளுக்காகக் காத்திராமல் தனியார் துறைகளிலும் சொந்த தொழில் முயற்சிகளை உருவாக்குவதிலும் மாணவர்கள் ஈடுபட வேண்டும் எனத் தெரிவித்தார். சந்திரகுமார் மேலும் குறிப்பிடுகையில் அரசதுறையில் 16 லட்சம் பேர் தேவைக்கதிகமாக வேலைக்கமர்த்தப்பட்டு உள்ளதாகவும் கடந்த கால அரசுகளின் திட்டமிடப்படாத பொருளாதார நடவடிக்கைகளே நாட்டினை இந்நிலைக்கு இட்டுச் சென்றுள்ளதாகத் தெரிவித்தார்.

நாங்கள் விழுமியங்களை இழந்துவருகின்றோம் எனச் சுட்டிக்காட்டிய கிளி சாந்தபுரம் கலைமகள் வித்தியாலய அதிபர் பெருமாள் கணேசன்; இலங்கையில் தமிழர்கள் மத்தியில் விழுமியங்களை முன்னெடுக்க எவரும் முன்வரவில்லை எனத் தெரிவித்தார். தெற்கில் அனாகரிக தர்மபால சிங்கள மக்களின் விழுமியங்களை முன்வைத்து அவற்றை முன்னிலைப்படுத்தினார். ஆனால் தமிழ் தரப்பில் ஆறுமுகநாவலர் அதனைச் செய்யத்தவறியதை பெருமாள் கணேசன் அங்கு சுட்டிக்காட்டினார்.

கிளிநொச்சி மண்ணில் இவ்வளவு திரளான இளம் தலைமுறையினரை காண்பதும் அவர்களைக் கொண்டு லிற்றில் பேர்ட்ஸ் என்ற இந்த சஞ்சிகையை வெளியிட்டு இருப்பதும் ஒரு போற்றுதற்குரிய விடயம் எனவும் பெருமாள்கணேசன்; தனது நயவுரையில் குறிப்பிட்டார். லண்டன் மெயிலாக, த ஜெயபாலன் லிற்றில் மாமா என்ற என்ற பெயரில், “தமிழ் சமூகத்தில் கல்வியும் அறிவும் வெறுமனே பாடப் புத்தகங்களுக்குள்ளும் சான்றிதழ்களுக்குள்ளும் முடக்கப்பட்டு, உண்மையான கல்வி, அறிவு என்பன தொலைக்கப்பட்டு விட்டது” என்ற குறிப்பைச் சுட்டிக்காட்டிய அவர் எழுதவும் வாசிக்கவும் லிற்றில் எய்ட் மேற்கொள்ளும் நடவடிக்கைகளை வரவேற்றோர். சஞ்சிகையில் வெளியான ஒவ்வொரு ஆக்கத்தையும் தனது ஆய்வுக்கு உட்படுத்திய பெருமாள்கணேசன் தனது மதிப்பீட்டை மிகக் காத்திரமாக முன்வைத்தார். கிளிநொச்சியின் ஆளுமைகளை இனம்கண்டு அவர்களது நேர்காணலை பதிவு செய்ததை விதந்துரைத்த அவர் சிறுவர் சஞ்சிகையில் சித்திரக் கதைகள், நாடகக் கதைகள், சித்திரங்கள் என்பனவும் எதிர்கால இதழ்களில் சேர்க்கப்பட வேண்டும் எனத் தெரிவித்தார்.

யாழ் பல்கலைக்கழக மாணவன் சனோசன் பத்மசேனன தன்னுரையில் தன் அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டு எண்ணம் போல் வாழ்வதன் அவசியத்தையும் சிறந்த எண்ணங்களை உருவாக்க்க வேண்டியதன் அவசியத்தையும் சுட்டிக்காட்டினார்.

இதுவொரு சம்பிரதாயபூர்வமான நன்றியுரையல்ல எனக்குறிப்பிட்ட லிற்றில் எய்ட் ஆசிரியை பவதாரணி அனைவரதும் ஒத்துழைப்பும் இன்றி இந்த சான்றிதழ் வழங்கும் இந்நிகழவை இவ்வளவு சிறப்பாகச் செய்திருக்க முடியாது எனத் தெரிவித்தார். நன்றியுரைக்குப் பின் மாணவர்கள் தங்களுக்குள் பாடல்களைப் பாடியும் ஆடியும் தங்கள் தகமையடைவைக் கொண்டாடினர்.

உரைகளின் நடவே மாணவர்களுக்கான சான்றிதழ்கள் பரிசுகள், ஆசிரியர்களுக்கான கௌரவிப்புகள் எனபன இடம்பெற்றன. கல்வியியலாளர்கள் நைற்றா பரீட்சைப் பரிசோதகர் – அபிமன், ஐசிரி கற்கைகளுக்கான சோனல் டிரெக்டர் சந்திரமோகன், அதிபர் வட்டக்கட்சி ஆரம்பப் பாடசாலை பங்கயற்செல்வன், அதிபர் சாந்தபுரம் கலைமகள் வித்தியாலயம் பெருமாள்கணேசன், அதிபர் கிளிநொச்சி விவேகானந்த கல்லூரி திருமதி ஜெயா மாணிக்கவாசகர், முன்னாள் தையல் ஆசிரியர் ஹேமமாலினி உதயகுமார் ஆகியோர் மாணவர்களுக்கான சான்ஙிதழ்களை வழங்கினர். மாணவர்களும் மாணவிகளும் ஆரவாரத்துடன் தொழில்சார் ஆடைகளை அணிந்து வந்து தங்கள் சான்றிதழ்களைப் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

நிகழ்வின் முடிவில் தையல் மற்றும் வடிவமைப்பு கலைகளில் பயிற்சி பெற்ற மாணவர்கள் உருவாக்கிய அழகியல் பொருட்கள் ஆடைகள் என்பன காட்சிப்படுத்தப்படட்டு விற்பனையும் இடம்பெற்றது. இப்பொருட்களை எதிர்காலத்தில் ஒன்லைனில் விற்பனை செய்வதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என ஆசிரியை அனுஷியா ஜெயநேசன் தெரிவித்தார்.

நிகழ்ச்சிகள் முடிவடைந்த பின் சான்றிதழ்களைப் பெற்றுக்கொண்ட மாணவர்கள் இரு மணிநேரம் ஆடிப் பாடி தங்கள் மகிழ்ச்சியைக் கொண்டாடினர்.

 

லிற்றில் எய்ட் அமைப்பின் முதலீட்டு ஒத்துழைப்போடு யாழ்.பல்கலைகழக பட்டதாரி கலைநீதனின் லிட்டில் சை கிட் வெளியீடு !

லிற்றில் எய்ட் அமைப்பின் முதலீட்டு ஒத்துழைப்போடு விஞ்ஞான மற்றும் கணிதத் துறையில் மாணவர்களை ஊக்குவிக்கும் நோக்கில் லிட்டில் சை கிட் (little sci kit) வெளியிடப்பட்டது. சை போர்ட் அக்கடமியின் தயாரிப்பான இவ்விளையாட்டுடனான கல்வி உரகரணம் வணிக நோக்கத்தைக் கொண்ட தொழில் முயற்சியாக இருந்தாலும் கூட இதன் இலக்கு எமது சமூகத்தில் மாணவர்களை கணித, விஞ்ஞானத்துறையில் ஊக்குவிப்பது ஆகும்.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பீட பட்டதாரியும், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களால் நடத்தப்படும் மனிதம் அமைப்பின் உருவாக்குனர்களில் ஒருவருமான கலைநீதன் என்பவரால் சை போர்ட் அக்கடமி (scibot academy) உருவாக்கப்பட்டுள்ளது.
No description available.
எங்களுடைய சமூகத்தில் கற்றல் கற்பித்தல் செயற்பாட்டில் இருக்கக் கூடிய மிகப் பெரிய பலவீனம் அனுபவ ரீதியான கற்றலின் போதாமை ஆகும். குறிப்பாக விஞ்ஞான பாடத்தில் மாணவர்கள் போதிய ஈடுபாடு காட்டமைக்கு இது முக்கியமான காரணமாக அமைகின்றது. மனிதம் அமைப்பினர் பாடசாலை மாணவர்களுடன் மேற்கொண்ட உரையாடலில் இந்த விடயத்தை தெட்டத் தெளிவாக உணர முடிந்தது. குறித்த மாணவர்கள் அனுபவ ரீதியாக விஞ்ஞான பாடத்தைக் கற்பதில் காட்டிய ஆர்வமும், சர்வதேச ரீதியில் விஞ்ஞான பாடம் எவ்வாறு மாணவர்களுக்கு ஆர்வத்தைத் தூண்டும் வகையில் கற்பிக்கப்படுகின்றது என்பது தொடர்பான அவதானிப்பும் இந்தக் கிட்ஸை உருவாக்குவதற்குத் தூண்டுதலாக அமைந்தது.
லிட்டில் சை கிட்டின் முதலாவது வெளியீடாக வீட்டில் பயன்படுத்தக்கூடிய இலத்திரனியல் உபகரணங்களுக்குப் பின்னால் இருக்கக்கூடிய அறிவியலை விளங்கிக்கொள்ளக்கூடிய வகையில் Diy home automation kit எனப்படும் கிட்ஸ் வெளிவந்துள்ளது. இதன் மூலம் 5 இலத்திரனியல் உபகரணங்களின் செயற்பாடுகளை மாணவர்கள் புரிந்துகொள்ள முடியும். இரவில் தானியங்கியாக ஒளிரும் மின்விளக்கு எவ்வாறு இயங்குகிறது, சலவை இயந்திரம், நுண்ணலை அடுப்பு போன்றவற்றில் டைமர்கள் எவ்வாறு வேலை செய்கின்றன, வீட்டில் பொருத்தப்பட்டுள்ள அழைப்பு மணி எவ்வாறு இலகுவாக செய்யலாம், ஆள் நடமாட்டத்தின் போது தானாக ஒளிரும் மின்விளக்குகள், எச்சரிக்கை ஒலி எழுப்புதல் என்பவற்றை எவ்வாறு செய்யலாம், வீட்டினுள் வளர்க்கப்படும் செடிகளில் ஈரத்தன்மை குறையும் போது நீர் பாய்ச்சக் கூடிய கருவிகளின் செயற்பாடுகள் என்பவற்றை விளங்கிக்கொள்ளக் கூடிய வகையில் இந்தக் கிட் அமைக்கப்பட்டுள்ளது. அதனுடன் இணைக்கப்பட்டுள்ள வழிகாட்டி நூலில் இது தொடர்பான விளக்கம் வழங்கப்பட்டுள்ளது.
No description available.
இந்தக் கிட்ஸ் மாணவர்களுக்கான இலத்திரனியல் சார்ந்த அடிப்படை அறிவை வழங்கும். எடுத்துக்காட்டாக, பாடத்திட்டத்தில் இலத்திரனியல் கொள்ளளவிகள், ஒளியியல் தடையி, இலத்திரனியல் கூறுகள் போன்றவை பற்றி கற்கிறோம். அவற்றை எங்கு எப்படிப் பயன்படுத்துவது என்பதை இந்தக் கிட்ஸ் மூலம் அறிந்து கொள்ள முடியும். மேலும் இலத்திரனியல் கூறுகளை மாணவர்கள் தொட்டுணர்ந்து அவற்றின் வடிவம், செயற்பாடு, அவற்றை எப்படி இன்னொன்றுடன் இணைப்பது போன்றன தொடர்பிலும் கற்கக் கூடிய வாய்ப்பை இந்தக் கிட்ஸ் வழங்குகின்றது.
லிட்டில் சை கிட் தொடர்ந்தும் மாணவர்களுடைய பாடத்திட்டத்தை அடிப்படையாகக் கொண்டு இவ்வாறான பிரயோக ரீதியான கிட்ஸ்களை உருவாக்கவுள்ளது. அதன்படி, அடுத்து மின்காந்தப் புலத்தை அடிப்படையாகக் கொண்ட கிட்ஸ் தயாராகி வருகின்றது.
இந்த கிட்ஸ் மாணவர்களுக்காக உருவாக்கப்பட்டாலும் இவற்றை விலை கொடுத்து வாங்கக் கூடிய இயலுமையில் பெற்றோர்கள் இருப்பார்களா என்பது கேள்விக்குரிய விடயம். இதற்குத் தீர்வாக பாடசாலைகளின் பழைய மாணவர்கள் மற்றும் நலன்விரும்பிகள் கிட்ஸ்களை வாங்கிப் பாடசாலைகளுக்கு அன்பளிப்பு செய்வதனூடாக அனைத்து மாணவர்களும் இதன் பயனைப் பெற முடியும்.
சை போர்ட் அக்கடமியின் மற்றொரு அங்கமாக விஞ்ஞான அறிவியல் சார்ந்த விடயங்களை உள்ளடக்கி விஞ்ஞானத் தகவல்களை உடனுக்குடன் அறிந்துகொள்ளும் வகைளில் சை போட் அக்கடமி எனும் செயலி ஒன்றும் உருவாக்கப்பட்டுள்ளது. அதில் விஞ்ஞான விளக்கங்கள், புதிய விஞ்ஞானக் கண்டுபிடிப்புகள், விண்வெளி விஞ்ஞானத் தகவல்கள் எனப் பலவற்றையும் அறிந்துகொள்ள முடியும். விஞ்ஞானத் துறைசார் போட்டிகளும் இந்த செயலி ஊடாக உடனுக்குடன் இற்றைப்படுத்தப்படும். இதுவும் பாடசாலை மாணவர்கள் தொடக்கம் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பயனுடையதாக அமையும்.

லிற்றில் நூலகம் திறந்துவைக்கப்பட்டதன் காணொலி

லிற்றில் நூலகத்தை அமரர் இராசமணி பாக்கியநாதனின் முத்த புதல்வர் ஸ்ரீகுமார் பாக்கியநாதன் இன்று திறந்து வைத்தார். தற்போது மலேசியாவில் வாழ்கின்ற தொழிலதிபரான இவரோடு, இவரது சகோதர சகோதரிகளும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர். லண்டனில் இருந்து லிற்றில் எய்ட் இன் தலைவர் கதிரமலை நந்தகுமார் இந்நிகழ்வில் சிறப்பு விருந்தனராகக் கலந்துகொண்டார். லிற்றில் எய்ட் தலைவர் க நந்தகுமார் லிற்றில் எய்ட் இன் செயற்திட்டங்களை பார்வையிடுவதுடன் லிற்றில் எய்ட்இன் மேற்பார்வையில் இயங்கும் முல்லைத்தீவில் உள்ள கற்சிலைமடுவின் குழந்தைகள் அமைப்பின் செயற்திட்டங்களையும் பார்வையிடுவார்.