செய்திகள்

செய்திகள்

செய்திகள்

எட்டாவது கிராமிய மின்விநியோகத் திட்டம்!

எட்டாவது கிராமிய மின்விநியோகத் திட்டத்தை ஆரம்பிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இதற்கான அமைச்சரவைப் பத்திரத்தை சமர்ப்பித்திருந்தார்.
57 மில்லியன் யூரோவை ஈரான் அரசாங்கம் இத்திட்டத்திற்கு கடனுதவியாக வழங்குகின்றது. இத்திட்டத்தினூடாக 1000 கிராமங்களைச் சேர்ந்த 1 இலட்சத்து 80 ஆயிரம் பாவனையாளர்கள் நன்மையடைவர் என எதிர்பார்க்கப்படுகின்றது.

தேர்தலை சிறந்த முறையில் நடத்த அரசு ஒத்துழைப்பு வழங்கும்

vote.jpgநீதியானதும், நியாயமானதுமான தேர்தலை நடத்தி முடிப்பதற்கு தேவையான சகல நடவடிக்கைகளையும் அரசாங்கம் மேற்கொண்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளரும், தகவல், ஊடகத்துறை அமைச்சருமான அனுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்தார்.

ஜனாதிபதி தேர்தலை சிறந்த முறையில் நடத்துவதற்கு தேவையான ஒத்துழைப்புக்களை தேர்தல் ஆணையாளருக்கு வழங்க தயாராகவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். அமைச்சரவை தீர்மானங்களை ஊடகங்களுக்கு அறிவிக்கும் வாராந்த செய்தியாளர் மாநாடு நேற்று பிற்பகல் அரசாங்க தகவல் திணைக்கள கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. அமைச்சர் இங்கு மேலும் உரையாற்றுகையில் :- கடந்த காலங்களிலும் சிறந்த தேர்தல்களை நடத்துவதற்கான ஒத்துழைப்புக்களை அரசாங்கம் எல்லா சந்தர்ப்பங்களிலும் வழங்கியுள்ளது.

புனித முஹர்ரம் மாத ஆரம்பம்

வியாழன் மாலை மஃரிப் தொழுகையை தொடர்ந்து கொழும்பு பெரிய பள்ளி வாசலில் நடைபெற்ற பிறைக்குழு மாநாட்டில் புனித முஹர்ரம் மாதத்தின் தலைப்பிறை வியாழன் மாலை தென்பட்டதற்கான தகவல்கள் கிடைக்கப்பெறாமையினால் துல்ஹிஜ்ஜஹ் மாதத்தை முப்பதாக பூர்த்தி செய்து வெள்ளி மாலை சனி இரவு புனித முஹர்ரம் மாதத்தை ஆரம்பிப்பதென தீர்மானிக்கப்பட்டது.

இம் மாநாட்டில் கலந்துகொண்ட உலமாக்கள், கதீப்மார்கள், அகில இலங்கை ஜம்இயதுல் உலமா, ஷரீஆ கவுன்சில், அன்ஜுமன் பாயிஸ் இ. ரஸா (மேமன் சங்கம்) முஸ்லிம் சமய கலாசார அலுவல்கள் திணைக்களம் ஆகியவற்றின் பிரதிநிதிகள் ஜும்ஆ பள்ளி வாசல்கள், ஸாவியா, தக்கியா நிருவாகிகள் ஆகியோரால் ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டது. இதன் பிரகாரம் ‘புனித ஸபர்’ மாதத்தின் தலைப்பிறை பார்க்க வேண்டிய நாள் (புனித முஹர்ரம் 29) 16.01.2010 சனி பின்னேரம் ஞாயிறு இரவு எனவும் முடிவு செய்யப்பட்டது.

அமைச்சர்களின் எண்ணிக்கையை குறைப்பது நடைமுறைச் சாத்தியமற்றது -அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா

anura-priya.jpgபாராளு மன்றத்தில் அரசாங்கத்துக்கு பெரும்பான்மைப் பலம் இல்லாத நிலையில் அமைச்சர்களின் எண்ணிக்கையை குறைப்பது நடைமுறைச்சாத்தியமற்றது என அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான அநுர பிரியதர்ஷன யாப்பா கூறினார் .

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு இன்று காலை அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்றபோது ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்வியொன்றுக்கு பதிலளிக்கும்போதே அவர் இவ்வாறு கூறினார். இங்கு அமைச்சர் மேலும் கூறியதாவது,

நாட்டைக் கட்டியெழுப்பும் நோக்கில் அரசாங்கத்துக்கு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஆதரவு வழங்க முன்வரும்போது அவர்களுக்கு அமைச்சுப் பொறுப்புகள் வழங்குவது சரியானதே. இதற்காக அரசாங்கம் புதிய அமைச்சுக்களை உருவாக்கவில்லை. ஏற்கனவே இருந்த அமைச்சுக்களுக்கே அமைச்சர்களாக புதியவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

முன்னாள் ஜனாதி ஜே.ஆர். ஜெயவர்தனாவின் ஆட்சிக் காலத்தில் 1978 ஆம் ஆண்டு அரசியலமைப்பின்படி நூற்றுக்கும் அதிகமான அமைச்சர்கள் நியமிக்கபட்டனர் என்பது அனைவரும் அறிந்ததே.

பொது மக்களிடமிருந்து அறவிடப்படும் வரிகள் அமைச்சர்களுக்கு மட்டும் செலவிடப்படுவதில்லை. அவற்றில் பெருந்தொகைப் பணம் நாட்டின் இலவசக் கல்வி மற்றும் சுகாதார சேவை என்பனபோன்றவற்றுக்குச் செலவிடப்படுகின்றன. உலகில் இலவசக் கல்வியும் மருத்துவ வசதிகளும் வழங்கப்படும் ஒரே நாடு எமது இலங்கையே என்றும் அமைச்சர் கூறினார்.

புதிய நியமனங்கள் இடமாற்றங்கள் பதவி உயர்வுகள் இடை நிறுத்தம்;!

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு தேர்தல் ஆணையாளரின் உத்தரவுக்கு மதிப்பளிக்கும் வகையில் புதிய நியமனங்கள் இடமாற்றங்கள் பதவி உயர்வுகள் என்பவற்றை இடைநறுத்த உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. எனினும் சுகாதார சேவை போன்ற அத்தியவசிய சேவைகளில் இதற்கு விதிவிலக்களிக்கப்பட வேண்டும் என அமைச்சரவையால் முடிவு செய்யப்பட்டுள்ளது.

முதல் வெற்றியைப் போன்று இரண்டாவதையும் வெற்றிகொள்வேன் – ஜனாதிபதி

presi_election.jpgமுதல் வெற்றியைப் போன்று இரண்டாவது வெற்றியையும் நிச்சயம்  பெறுவதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனுவை தேர்தல் ஆணையாளர் நாயகம் செயலகத்தில் தாக்கல் செய்துவிட்டு ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில் ஜனாதிபதி இவ்வாறு கூறினார்.

முதல் வெற்றியாக யுத்தத்தை வெற்றிகொண்டென். அதேபோன்று இரண்டாவது வெற்றியாக பொருளாதார வெற்றியையும் நிச்சயமாகப் பெறுவேன். நாட்டின் முன்னேற்றத்தக்காவே பாடுபடுவதாகவும் ஜனாதிபதி மெலும் தெரிவித்தார்.

அர்ஜூனா ரணதுங்க ஜெனரல் பொன்சேகாவிற்கு ஆதரவு.

arjuna-ranatunga.jpgசிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் அர்ஜூனா ரணதுங்க எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலின் பொதுவேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகவிற்கு ஆதரவு வழங்க தீர்மானித்துள்ளதாக இன்று அறிவித்துள்ளார்.

‘டெலோ’விலிருந்து சிவாஜி, ஸ்ரீகாந்தா விலகல்

sivajilingam.jpgநாடா ளுமன்ற உறுப்பினர்களான எம்.கே.சிவாஜிலிங்கம் மற்றும் என்.ஸ்ரீகாந்தா ஆகியோர் தாங்கள் அங்கம் வகிக்கும் தமிழீழ விடுதலை இயக்கத்தி(டெலோ) லிருந்து விலகிக் கொள்வதாக கட்சித் தலைமைப் பீடத்திற்கு அறிவித்துள்ளனர். ஜனாதிபதித் தேர்தலில் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் சுயேட்சையாகப் போட்டியிடுவது குறித்து அக்கட்சிக்குள் எழுந்துள்ள முரண்பாடுகள் காரணமாகவே இவர்கள் இருவரும் இந்த முடிவை எடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போட்டியிடுவதில்லை என ஏகமனதாக முடிவெடுத்திருந்த போதிலும் தமது கட்சியைச் சேர்ந்த குறிப்பிட்ட இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களும் அதற்கு மாறாகச் செயல்படுவதாக டெலோ கூறுகின்றது.

நேற்றிரவு டெலோ முக்கியஸ்தர்கள் கொழும்பில் கூடி, தற்போது எழுந்துள்ள நெருக்கடி நிலை குறித்து ஆராய்ந்து ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது என்ற முடிவை வாபஸ் பெறுமாறு சிவாஜிலிங்கத்திடம் வலியுறுத்திக் கேட்ட போதிலும் அவர் அதனை நிராகரித்து விட்டதாகக் கூறப்படுகின்றது.

நேற்றைய கூட்டத்தில் ஆராயப்பட்ட விடயங்கள் குறித்தும், எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்தும் டெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதன் இன்று அறிக்கையொன்றை வெளியிடுவார் என அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையில் தற்போது வெளிநாடு ஒன்றில் தங்கியிருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தலைவர் இரா.சம்பந்தன் நாளை நாடு திரும்புகின்றார்.

நாளை மறுதினம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்றக் குழு கூடி, தமது கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சி ஒன்றின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது குறித்து எழுந்துள்ள நெருக்கடி நிலை குறித்தும் மற்றும் ஜனாதிபதித் தேர்தல் குறித்தும் விரிவாக ஆராயவிருப்பதாக கூட்டமைப்பு உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.
 
வீரகேசரி இணையம் 12/17/2009

குழப்பம் நிகழும் வாக்களிப்பு நிலையங்களின் வாக்குகள் இரத்து – தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் எச்சரிக்கை

dayananda_disanayake.jpgநடைபெற வுள்ள ஜனாதிபதித் தேர்தலின் போது குழப்பம் நிகழும் வாக்களிப்பு நிலையங்களின் வாக்குகளை இரத்து செய்வதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் தயானந்த திஸாநாயக்க எச்சரிக்கை விடுத்தார். ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் செய்யும் நிகழ்வு இன்று கலை ராஜகிரியவில் உள்ள தேர்தல்கள் ஆணையாளர் நாயகத்தின் செயலகத்தில் இடம்பெற்றது. இதில் உரை நிகழ்த்தும் போதே அவர் இவந்தத் தகவலை வெளியிட்டார்.

இரத்து செய்ய நேரிட்டால் மீண்டும் தேர்தல் நடத்த நேரிடும் என்றும் அவ்வாறு தேர்தல் நடத்தப்படுமாயின் பெறுபேறுகள் தாமதமடையலாம் என்றும் அவர் குறிப்பிட்டார். இதேவேளை இம்முறை விருப்பு வாக்குகளைத் தெரிவிப்பதற்காக புள்ளடி இடுவதற்குப் பதிலாக 1,2, 3 என இலக்கங்களைக் குறிப்பிட வேண்டும் என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் வாக்காளர்களைக் கேட்டுக்கொண்டுள்ளார்.

எனினும் புள்ளடியிட்டு ஒருவருக்கான விருப்பத்தை தெரிவித்திருந்தால் அதனையும் ஏற்றுக்கொள்வதாக அவர் மேலும் தெரிவித்தார்.

ஜனாதிபதித் தேர்தல் வரலாற்றில் இம்முறையே கூடுதலான வேட்பாளர்கள்

sri_election.jpgஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று காலை 9.00 மணி முதல் 11.00 மணி வரை தேர்தல் செயலகத்தில் இடம்பெற உள்ளது. எதிர்வரும் ஜனவரி 26ம் திகதி நடைபெறவுள்ள தேர்தலுக்காகக் கட்டுப்பணம் செலுத்த வழங்கப்பட்டிருந்த காலக்கெடு நேற்று நண்பகல் 12.00 மணியுடன் நிறைவடைந்தது.  ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கு 23 வேட்பாளர்கள் கட்டுப் பணம் செலுத்தியுள்ளனர். இதில் 18 அரசியல் கட்சிகளின் வேட்பாளர்களும் 5 சுயேச்சை வேட்பாளர்களும் இருப்பதாக தேர்தல் திணைக்களம் தெரிவித்தது.

ஜனாதிபதித் தேர்தல் வரலாற்றில் இம்முறையே கூடுதலான வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிட கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர். 2005 தேர்தலில் 13 வேட்பாளர்கள் போட்டியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. வேட்புமனுத் தாக்கலை முன்னிட்டு ராஜகிரிய தேர்தல் செயலக பிரதேசத்தில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகளும் போக்குவரத்து ஒழுங்குகளும் செய்யப்பட்டுள்ளன.

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் இன்று வேட்பு மனுத்தாக்கல் செய்யவுள்ளதால் பொரளையில் இருந்து வெலிக்கடை பொலிஸ் நிலையம் வரையிலான வீதி மற்றும் டி. எஸ். சேனாநாயக்க சந்தி முதல் பாராளுமன்ற பாதையினூடாக வெலிக்கடை பொலிஸ் வரையிலான வீதி ஆகியவற்றில் இன்று காலை 9.00 மணி முதல் போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டிருக்கும். இதேவேளை தேர்தல் செயலக பகுதியில் மேலதிக பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் பாதுகாப்புக் கடமையில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

வேட்புமனுத் தாக்கலுக்கு முன்னதாக வேட்பாளர்கள் தமது பதாகைகள், சுவரொட்டிகள் என்பவற்றை அகற்றுமாறு கோரப்பட்டுள்ளது. வேட்பு மனுத் தாக்கலின் பின்னர் சகல சுவரொட்டிகள் பதாகைகள் என்பன அகற்றப்பட உள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.

இதேவேளை எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தபால் மூலம் வாக்களிக்க விண்ணப்பிப்பதற்காக வழங்கப்பட்டிருந்த காலக்கெடு இன்றுடன் நிறைவடைவதாக தேர்தல் செயலகம் கூறியது. புனர்வாழ்வு பெற்றுவரும் முன்னாள் புலி உறுப்பினர்களுக்கும் தபால் மூலம் வாக்களிக்க சந்தர்ப்பம் வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்படுகிறது. வேட்புமனுக்கள் தாக்கல் செய்வதற்காக குறித்த வேட்பாளருடன் மேலும் இருவருக்கு தேர்தல் செயலகத்துக்கு வர அனுமதி வழங்கப்பட்டுள்ளதுடன் வேட்பாளருடன் மேலும் 10 விருந்தினர்களுக்கும் அங்கு வர அனுமதி கிடைக்கும்.

வேட்பு மனுக்கள் தொடர்பில் ஆட்சேபங்களை முன்வைக்க இன்று காலை 9.00 மணி முதல் 11.30 வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. ஆட்சேபங்களின் பின்னர் தேர்தலில் போட்டியிடத் தகுதியான வேட்பாளர்களின் விபரங்களை தேர்தல் ஆணையாளர் அறிவிப்பார்.

இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ போட்டியிடுகிறார். ஐ. தே. க.வும், ஜே. வி. பியும் இம்முறை தேர்தலில் போட்டியிடவில்லை. புதிய ஜனநாயக முன்னணி சார்பாக சரத் பொன்சேகா போட்டியிடுகிறார்.

இது தவிர இடதுசாரி முன்னணி சார்பாக விக்ரமபாகு கருணாரத்ன, ஐ. தே. க மாற்று முன்னணி வேட்பாளராக சரத் கோங்கஹகே, ஐக்கிய சோசலிசக் கட்சி வேட்பாளராக சிறிதுங்க ஜயசூரிய, சோசலிச சமத்துவக் கட்சி சார்பாக விஜே டயஸ் அனைவரும் பிரஜைகள் அனைவரும் மன்னர்கள் கட்சி வேட்பாளராக எம். பி. தெமினி முல்ல, இலங்கை முற்போக்கு முன்னணி வேட்பாளராக ஜே. ஏ. பி. பீடர் நெல்சன் பெரேரா, புதிய சிஹல உருமய வேட்பாளராக சரத் மனமேந்திர, தேசிய அபிவிருத்தி முன்னணி வேட்பாளராக அசல அசோக சுரவீர, இலங்கை தொழிலாளர் கட்சி வேட்பாளராக ஜி. டி. பி. எஸ். ஏ. லியனகே, எமது தேசிய முன்னணி வேட்பாளராக கே. பி. ஆர். எல். பெரேரா, ஜனநாயக ஐக்கிய தேசிய முன்னணி சார்பாக எம். சீ. எம். இஸ்மாயில், ருகுணு மக்கள் கட்சி சார்பாக அருண த சொய்சா, தேசிய முன்னணி சார்பாக சனத் பின்னதுவ, தேசப்பற்றுள்ள தேசிய முன்னணி வேட்பாளராக சேனரத்ன சில்வா, ஜனசெத முன்னணி சார்பாக பத்தரமுள்ள சீலரத்ன தேரர், ஐக்கிய ஜனநாயக முன்னணி சார்பாக சன்ன ஜானக கமகேயும் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர்.

சுயேச்சையாக போட்டியிட 5 பேர் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர்.

யாழ். மாவட்ட முன்னாள் எம்.பி., ஐ. எம். இலியாஸ், முன்னாள் பிரதி அமைச்சர் மயோன் முஸ்தபா, முன்னாள் ஐ. தே. க. எம்.பி, யு. பி. விஜேகோன், தமிழ் தேசிய கூட்டமைப்பு எம்.பி, கே. சிவாஜிலிங்கம், டபிள்யு. வி. மஹிமன் ரஞ்சித் ஆகியோரே இவ்வாறு சுயேச்சையாக போட்டியிட கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர்.