நாட்டின் பல பிரதேசங்களில் நேற்று முன்தினம் முதல் பரவலாகப் பெய்துவரும் மழை காரணமாக சுமார் நாலாயிரம் குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
இம்மழை காரணமாக இரத்தினபுரி, களுத்துறை, காலி, கேகாலை, கம்பஹா மாவட்டங்களின் வெவ்வேறு பிரதேசங்களில் தாழ்நிலங்கள் நீரில் மூழ்கி வெள்ள நிலைமையை ஏற்பட்டுள்ளன. சில பிரதேசங்களில் வீதிகள் வெள்ளத்தில் மூழ்கி இருப்பதால் பயணிகள் பஸ் போக்குவரத்து ஸ்தம்பிதமடைந்திருப்பதுடன் அவ்வப் பிரதேச மக்களின் இயல்பு வாழ்வும் பாதிக்கப்பட்டிருப்பதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் மாவட்ட இணைப்பாளர்கள் நேற்றுத் தெரிவித்தனர்.
இம்மழை காரணமாக ஏற்பட்டிருக்கும் வெள்ள நிலைமையால் பாதிக்கப்பட்டிருக்கும் மக்களுக்கு நிவாரணம் வழங்கவென உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்தார். இதேவேளை இம்மழை காரணமாக இரத்தினபுரி மாவட்டத்தின் பல பிரதேசங்களிலும் கேகாலை மாவட்டத்தின் ஓரிரு இடங்களிலும் மண்சரிவுகள் ஏற்பட்டுள்ளன.
இம்மண்சரிவுகள் காரணமாக உயிரிழப்புக்கள் ஏற்படவில்லை. என்றாலும் சில இடங்களில் வாகனப் போக்குவரத்து துண்டிக்கப்பட்டிருந்ததாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் இரத்தினபுரி மாவட்ட இணைப்பாளர் லெப்டினன்ட் கேர்ணல் எஸ். எம். பி. பி. அபேரட்ன குறிப்பிட்டார்.
வளிமண்டலத்தில் நேற்று முன்தினம் ஏற்பட்ட திடீர் மாற்றம் காரணமாகவே நாட்டின் பல பிரதேசங்களில் மழை பெய்து வருகின்றது. இது தென்மேல் பருவப் பெயர்ச்சி மழை வீழ்ச்சி அல்ல என்று வானிலை அவதான நிலைய வானிலையாளர் பி. டி. ஆனந்த பெரேரா கூறினார்.
நேற்றுக் காலை 8.30 மணியுடன் முடிவுற்ற 24 மணி நேர மழை வீழ்ச்சி பதிவுப்படி பொலட்டகமவிலேயே அதிக மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது என்றும் அவர் கூறினார். மழை வீழ்ச்சி தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், பொலட்டகம 200.5 மி.மீ, குக்குலேகங்கை 182 மி. மீ, கெனியன் 143 மி.மீ, கினிதும 101.5 மி.மீ, இரத்தினபுரி 127 மி.மீ, நேபொட 127 மி.மீ. நோட்டன் 90 மி.மீ, லக்ஷபான 84 மி.மீ என்றபடி மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது.
இதே காலநிலை அடுத்துவரும் ஓரிரு தினங்களுக்குத் தொடர முடியும். இம்மழைக் காலநிலை காரணமாக மேல், தென், தென்மேற்கு, தென் கிழக்கு, வடக்கு, கிழக்கு கடற்பரப்புக்களிலும் மழை பெய்ய முடியும். இச்சந்தர்ப்பங்களில் கடலில் கொந்தளிப்பு நிலை ஏற்படலாம். அதனால் வடபகுதி கடலில் இந்த நாட்களில் முன்னெச்சரிக்கையோடு மீன்பிடித்தலில் ஈடுபடுவது அவசியம் என்றார்.
இதேநேரம் இரத்தினபுரி மாவட்ட அனர்த்த முகாமைத்துவ இணைப்பாளர் மேலும் கூறுகையில், இரத்தினபுரி கலவான வீதியின் பல இடங்களில் மண்சரிவுகள் ஏற்பட்டன. இதனால் வாகனப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பெகோ இயந்திரங்களைக் கொண்டு வாகனப் போக்குவரத்துக்கென மண்மேடுகள் அப்புறப்படுத்தப்பட்டன. கலவான பொத்துபிட்டிய வீதியிலும் வடக்கு கினிமலே, கனேகல்லையிலும் மண்சரிவு ஏற்பட்டது.
குருவிட்ட பிரதேச செயலகப் பிரிவிலுள்ள கரங்கொட கிராம சேவகர் பிரிவில் கரங்கொட குடியேற்றத்தில் ஒரு கிலோ மீற்றர் தூரத்திற்கு மண்சரிவு ஏற்பட்டது. இம்மண் சரிவு 75 அடிகள் வரை கீழ் நோக்கி ஏற்பட்டிருக்கிறது. இம்மண்சரிவு காரணமாக உயிரிழப்புக்கள் ஏற்படவில்லை. ஆனால் வீடொன்று மூடுண்டுள்ளது. இப்பிரதேசத்தில் வசித்தவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர்.
இம்மழை காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ள நிலையால் கலவான பிரதேச செயலகப் பிரிவில் 259 குடும்பங்களும் அயகம பிரதேச செயலகப் பிரிவில் நூற்றுக்கு மேற்பட்ட குடும்பங்களும் குருவிட்ட பிரதேச செயலகப் பிரிவில் 1636 குடும்பங்களும் எலபாத்த பிரதேச செயலகப் பிரிவில் பத்துக்கும் மேற்பட்ட குடும்பங்களும் பாதிக்கப்பட்டுள்ளன.
இவ்வெள்ள நிலையினால் கலவான பிரதேச செயலகப் பிரிவில் சுமார் 30 வீடுகள் சிறுசேதங்களுக்கு உள்ளாகியுள்ளன என்றார். இதேவேளை அனர்த்த முகாமைத்துவ பிரதிப் பணிப்பாளர் கே. பி. ஏ. தர்மரட்ன குறிப்பிடுகையில், களுத்துறை மாவட்டத்தின் பாலிந்தநுவரப் பிரதேச செயலகப் பிரிவில் பல கிராமங்கள் நீரில் மூழ்கியுள்ளன. இதனால் இருநூறுக்கும் மேற்பட்ட வீடுகள் சிறு சேதங்களுக்கு உள்ளாகியுள்ளன. ஐநூறுக்கும் மேற்பட்ட குடும்பங்களின் இயல்பு வாழ்வு பாதிக்கப்பட்டுள்ளது.
களுத்துறை மாவட்டத்தின் பாலிந்தநுவர மற்றும் புளத்சிங்கள பிரதேச செயலகப் பிரிவுகளிலும், காலி மாவட்டத்தின் நெலுவ, தவளம எல்பிட்டிய, பத்தேகம பிரதேசங்களிலும் வீதிகள் நீரில் மூழ்கியுள்ளன. இதனால் பல பிரதேசங்களுக்கான வழமையான பயணிகள் வாகனப் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டுள்ளது. கம்பஹா மாவட்டத்திலும் அதிக மழை பெய்து வருவதால் களனி கங்கை பியகமவிலும் அத்தகலு ஓயா கம்பஹா பிரதேசத்திலும் பெருக்கக் கூடிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.