மத்திய மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் ஒருவரான தலதா மாளிகையின் முன்னாள் தியவதன நிலமே நிரஞ்சன் விஜயரட்ன (ஐ. தே. க.) அவரது புகைப்படத்துடன் கண்டி ஸ்ரீ தலதா மாளிகையின் படத்தையும் புனித தந்தசின்னப் பேழையையும் இணைத்து சுவரொட்டிகள் தயாரிக்கப்பட்டிருப்பதை மல்வத்தை பீடாதிபதி திப்பட்டுவாவே ஸ்ரீ சுமங்கல தேரர் கண்டித்தார்.
முன்னாள் பிரதி பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் அனுருத்த ரத்வத்தை அவரது புதல்வரும் மத்திய மாகாண சபைத் தேர்தலில் ஐ. ம. சு. கூட்டமைப்பு சார்பில் போட்டியிடும் லொகான் ரத்வத்தை ஆகிய இருவரும் (முதலாம் திகதி) மல்வத்தை பீடாதிபதியை அவரது வாசஸ்தலத்திற்குச் சென்று ஆசீர்வாதம் பெறச் சென்ற வேளையிலேயே மகாநாயக்கர் மேற்கண்டவாறு அதிருப்தி தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது :- தலதா மாளிகையையும் புனித தந்த சின்னப் பேழையையும் தமது அரசியல் நடவடிக்கைகளுக்காக தலதா மாளிகையின் நிலமேயாக இருந்தமைக்காக அவற்றைப் பிரயோகிக்க இயலாது. இந்தச் சுவரொட்டிகள் மலசல கூடங்கள் உட்பட பல இடங்களில் ஒட்டப்படுகின்றன. இந்தச் செயலானது பெளத்த சமயத்திற்கு அபகீர்த்தியை ஏற்படுத்துவதாகவே அமையும் எனக் கருதலாம்.
எனவே இந்த நடவடிக்கை உடனடியாக நிறுத்தப்பட வேண்டுமென அவர் அவ்விருவரிடமும் எடுத்துக்காட்டினார். இதேபோன்று அஸ்கிரிய பீடாதிபதி உடுகம ஸ்ரீ புத்தரக்கித்த தேரரும் ஐ. தே. கட்சி மாகாண சபை வேட்பாளரைக் குறைகூறியிருக்கிறார்.