செய்திகள்

செய்திகள்

செய்திகள்

வன்னியில் அத். உணவுப் பொருட்களுக்கு தட்டுப்பாடு கிடையாது: ஐ. நா. சபைக்கு உண்மை நிலையை தெளிவுபடுத்த இலங்கை அரசு முடிவு

mahinda-samarasinga.jpgவன்னியில் உணவு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களுக்கு எந்தவிதமான தட்டுப்பாடும் கிடையாதென்று மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்தார். கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களின் நிலைமையை விளக்கி ஐக்கிய நாடுகள் சபைக்கு உத்தியோகபூர்வ பதில் கடிதமொன்றை இன்னும் ஓரிரு நாளில் அரசாங்கம் அனுப்பவுள்ளதாகவும் அமைச்சர் சமரசிங்க, இடர் முகாமைத்துவ, மனித உரிமைகள் அமைச்சில் நேற்றுக் காலை நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் தெரிவித்தார்.

அரசாங்கம் மேற்கொள்ளும் எந்தவிதமான நடவடிக்கையும் புலிகளைப் பலப்படுத்துவதற்கோ, படையினரை பலவீனப்படுத்துவதற்கோ இடமளிக்கப்படமாட்டாது என்றும் அமைச்சர் தெரிவித்தார். ஐக்கிய நாடுகள் சபை செயலாளர் நாயகம் பான்கி மூனின், ஐ. நா. அகதிகள் விவகாரங்களுக்கான பிரதிநிதி வோல்ரர் கெலின் தெரிவித்துள்ளதைப் போன்று வன்னியில் எந்தவிதமான தட்டுப்பாடும் இல்லை. கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களுக்குத் தொடர்ச்சியாக உணவுப் பொருள்களை அனுப்ப அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. என்று தெரிவித்த அமைச்சர் சமரசிங்க, கடந்த ஜனவரி மாதத்திலிருந்து டிசம்பர் இறுதிவரை வன்னிக்கு அனுப்பப்பட்ட உணவுப் பொருள்களின் விபரங்களையும் வெளியிட்டார். ‘வன்னியில் உணவு, மருந்து உள்ளிட்ட பொருள்களுக்குத் தட்டுப்பாடு நிலவுவதாகவும், சர்வதேச பிரதிநிதிகள் வன்னிக்குச் சென்று நிலைமைகளை அவதானிப்பதற்கு இடமளிக்கப்படுவதில்லை என்று வோல்ரர் கெலின் கூறியிருக்கின்ற தகவல் முற்றிலும் உண்மைக்குப் புறம்பானதாகும்.

கடந்த 29ம் திகதி வன்னிக்குச் சென்ற உணவு லொறித் தொடரணியுடன் 10 சர்வதேச பிரதிநிதிகள் சென்றுவந்தனர். அங்கு மக்களை நேரில் சந்தித்தபோது, எந்தவிதமான தட்டுப்பாடும் இல்லையெனத் தெரிவித்துள்ளனர். உலக உணவுத் திட்டத்தின் இலங்கைக்கான பணிப்பாளரும் இதனை உறுதிப்படுத்தியிருக்கின்றார்.  என்று தெரிவித்த அமைச்சர் வோல்ரர் கெலின் வழமையை மீறி செயற்பட்டுள்ளாரென்றும், எவ்வாறெனினும் அவர் இரு வாரங்களுக்கு முன்பு பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவுக்கு எழுதிய கடிதத்திற்கு அரசாங்கத்தின் சார்பில் உத்தியோகபூர்வமாக பதில் அளிக்கப்படுமென்றும் தெரிவித்தார்.

‘ஐக்கிய நாடுகள் சபை இலங்கை அரசுடன் தொடர்புகொள்ள வேண்டுமானால், அங்குள்ள எமது தூதரகத்தின் வாயிலாகவே விடயங்கள் கையாளப்பட வேண்டும். என்றாலும், அகதிகளுக்கான பிரதிநிதி வோல்ரர் கெலின் நேரடியாக பாதுகாப்புச் செயலாளருக்குக் கடிதம் அனுப்பியுள்ளார். இது பிழையான அணுகுமுறையாகும். இதுகுறித்து நாம் கலந்துரையாடியிருக்கின்றோம். ஆயினும், அவரது கடிதத்திற்கு உரிய பதில் அனுப்பப்படும். இதற்கு பாதுகாப்புச் செயலாளர் பதில் அளிக்க வேண்டிய அவசியம் இல்லையெத் தீர்மானிக்கப்பட்டுள்ளது’ என்ற அமைச்சர்,

‘கிளிநொச்சி, முல்லைத்தீவு பகுதிகளில் இடம்பெயர்ந்தோர் தொடர்பாக அரசாங்க அதிபர்கள் சமர்ப்பிக்கும் விபரங்கள் பிழையானவையாக இருக்கின்றன. ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களின் பெயர்கள் வெவ்வேறு இடங்களிலும் பதிவாகியுள்ளன. எனவே, சரியான தகவல்களைத் திரட்டவுள்ளோம். தற்போதைக்கு கிளிநொச்சியில் 29,197 குடும்பங்களைச் சேர்ந்த 1,12,254 பேரும், முல்லைத்தீவு மாவட்டத்தில் 26,670 குடும்பங்களைச் சேர்ந்த 98,707 பேரும் மொத்தம் 2,10,000 பேருக்கு ஜனவரியிலிருந்து 9 வாகனத் தொடரணிகளில் உணவுப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

உலக உணவுத் திட்டத்திற்கு மேலதிகமாக முல்லைத்தீவுக்கு 24,769 மெட். தொன் உணவுப் பொருள்களும், கிளிநொச்சிக்கு 21,850 மெட். தொன் உணவுப் பொருள்களும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. தகரம் மற்றும் பிளாஸ்ரிக் பொருள்கள் தடைசெய்யப்பட்டுள்ளன. எந்த நடவடிக்கையையும் புலிகளைப் பலப்படுத்தும்படி மேற்கொள்ளப்பட மாட்டாது. டிசம்பரில் மாத்திரம் ஒரு இலட்சம் கிடுகுகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன என்றும் அமைச்சர் தெரிவித்தார். இதேநேரம் இந்தியாவிலிருந்து கிடைத்த உதவிப் பொருட்களும் விநியோகிக்கப்பட்டு வருகின்றன என்றும் அவர் கூறினார்.

உலகப்புகழை நோக்கி அதிர்ஸ்டம் வெல்லுங்கள்

abcd.jpgசீனாவில் பீஜிங் நகரில் உள்ள ஒரு காலணிக்கடையில் உயரத்தில் வைக்கப்பட்டுள்ள புஸ்ஸின் உருவப்படத்தின் மீது குறிவைத்துக் காலணியை வீசுபவருக்கு விஸேட தள்ளுபடி கிடைக்கின்றது.

உருவப்படத்தின் உயரத்தில் A யிலிருந்து D வரை குறிக்கப்பட்டிருக்கும் இடங்களின் மீது தூரத்திலிருந்து குறிபார்த்து வீசுபவருக்கு காலணி படுமிடத்தைப் பொறுத்து 20-50 வரையிலான தள்ளுபடியில் அக்காலணியைப் பெற்றுக் கொள்ளலாம்
.
ஈராக் பிரதமருடன் சேர்ந்து புஸ் பேட்டியளித்த போது ஊடகவியலாளர் ஒருவர் வீசிய காலணி வகைக்கே இந்தப் பெருமை கிடைத்துள்ளது. இது பற்றி கடை உரிமையாளர் கருத்துத் தெரிவிக்கும் போது ஈராக்கில் நடந்த காலணி எறியப்பட்ட சம்பவம் எங்களைக் கவர்ந்தது. வாடிக்கையாளரின் பொழுதுபோக்கிற்காக தள்ளுபடி அளிக்கின்றோம். அதற்கு உலகப்புகழை நோக்கி அதிர்ஸ்டம் வெல்லுங்கள் என்று தலைப்பு இட்டுள்ளோம் என்கிறார்.

ஜன. 5-ல் ஹசீனா பதவியேற்பு

haseena.jpg
பங்களாதேஷ் புதிய பிரதமராக இரண்டாவது முறையாக வரும் 5ம் தேதி அவாமி லீக் தலைவர் ஷேக் ஹசீனா பதவியேற்கிறார்.

அவர் பங்களாதேஷ் அதிபர் இயாஜுதின் அகமதுவை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார். ஹசீனா விரும்பும் நாளில் அவர் பிரதமராக பதவி ஏற்கலாம் என்று அதிபர் அகமது கூறியதாக அதிபர் மாளிகை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பங்களாதேஷில் கடந்த டிசம்பர் மாதம் 29ம் தேதி நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் மொத்தமுள்ள 300 தொகுதிகளில் ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் தலைமையிலான கூட்டணி 262 இடங்களைப் பெற்று அமோக வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

மற்றொரு முன்னாள் பிரதமர் கலிதா ஜியாவின் கட்சி 32 இடங்களை மட்டுமே பிடித்து படுதோல்வி அடைந்தது குறிப்பிடத்தக்கது.

மாலைதீவு ஜனாதிபதி நஸீத் இன்று இலங்கை வருகை

maldives_president.jpgமாலைதீவு புதிய ஜனாதிபதி மொஹமட் அன்னி நஸீத் இரண்டு நாள் உத்தியோக பூர்வ விஜயத்தை மேற்கொண்டு இன்று (2) இலங்கை வருகிறார்.

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை இன்று காலை 10.30 மணியளவில் வந்தடையும் மாலைதீவு ஜனாதிபதியை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வரவேற்கவுள்ளார். விமான நிலையத்தில் அவருக்கு பெரு வரவேற்பு வழங்கப்படவுள்ளது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ அழைப்பை ஏற்று இலங்கை வரும் மாலைதீவு ஜனாதிபதியுடன் அந்நாட்டு அமைச்சர்கள், உயர் அதிகாரி உள்ளிட்ட 25 பேர் கொண்ட தூதுக்குழுவினரும் வருகை தரவுள்ளனர்.

மொஹமட் அன்னி நஸீத் ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் இலங்கைக்கான முதலாவது விஜயம் இதுவாகும். எதிர்வரும் 4ம் திகதி வரை இலங்கையில் தங்கியிருக்கும் மாலைதீவு ஜனாதிபதி இன்று பிற்பகல் 3.45 மணியளவில் இலங்கை வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த பொகொல்லாகமவை சந்தித்த பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.

அதனைத் தொடர்ந்து இன்று மாலை 5.00 மணியளவில் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும், மாலைதீவு ஜனாதிபதி மொஹமட் அன்னி நஸீத்துக்கும் இடையிலான இரதரப்பு சந்திப்பு ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெறவுள்ளது. இரு நாட்டு உறவுகளை மேலும் மேம்படுத்துதல் தொடர்பாகவும் பல்வேறு முக்கிய விடயங்கள் தொடர்பாகவும் இந்த சந்திப்பின் போது வரிவாக ஆராயப்படவுள்ளது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று இரவு மாலைதீவு ஜனாதிபதிக்கு விஷேட இரவு விருந்துபசாரமொன்றையும் வழங்கவுள்ளார். இது ஜனாதிபதி மாளிகையில் இடம்பெறவுள்ளது. இதேவேளை, மாலைதீவு ஜனாதிபதிக்கும் பிரதமர் ரத்னசிறி விக்ரமநாயக்கவுக்கும் இடையிலான சந்திப்பு ஒன்று நாளை ஹில்டன் ஹோட்டலில் இடம்பெறவுள்ளது.

இலங்கையிலுள்ள சிறிய மற்றும் நடுத்தர வர்த்தகர்களை சந்திக்கும் மாலைதீவு ஜனாதிபதி இலங்கை வர்த்தக சம்மேளன பிரதிநிதிகளையும் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். மாலைதீவு ஜனாதிபதியுடன் அந்நாட்டின் வெளிவிவகார, கலாசார, நீதி மற்றும் பொருளாதாரத்துறை அமைச்சர்கள் உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் வருகை தரவுள்ளனர்.

நாளை மறுதினம் காலை (4) மாலைதீவு ஜனாதிபதி தனது இருநாள் உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்துக் கொண்டு நாடுதிரும்பவுள்ளார்.

இரவு விடுதி தீவிபத்தில் 60 பேர் உயிரிழப்பு.

bangkok-nightclub.jpgதாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் புத்தாண்டுக் கொண்டாட்டத்தின் போது இரவு விடுதியில் ஏற்பட்ட பெரும் தீவிபத்தில் 60 பேர் உயிரிழந்தனர். ( 31 ) இந்த விபரீதம் நடந்தது. 200க்கும் மேற்பட்டோர் இந்த பயங்கர தீவிபத்தில் படுகாயமடைந்தனர். பாங்காக்கின் எக்கமாய் மாவட்டத்தி்ல உள்ள சந்திகா கிளப்பி்ல் நேற்று இரவு புத்தாண்டை வரவேற்கும் வகையில் பல்வேறு கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அப்போது சிலர் பட்டாசுகளை வெடித்துள்ளனர். இதில் ஏற்பட்ட தீப்பொறி பற்றி தீப்பிடித்துக் கொண்டது. இதையடுத்து அந்த இரண்டு மாடிக் கட்டட கிளப்பும் தீயில் சிக்கி கருகியது. பாதிக் கட்டடம் இடிந்து விழுந்தது. இடிபாடுகளிலும், தீயிலும் சிக்கி 60 பேர் உயிரிழந்தனர். 212 பேர் படுகாயமடைந்தனர். 30 பேரின் உடல்கள் அடையாளம் முடியாத அளவுக்கு கருகிப் போய் விட்டது. பான்டு வாத்தியக் குழுவினர் பாடல்களைப் பாடிக் கொண்டிருந்த இடத்திற்கு அருகேதான் முதலில் தீப்பிடித்ததாக போலீஸ் அதிகாரி பிரவீத் கான்ட்வால் கூறியுள்ளார்.

தீவிபத்து நடந்த கிளப் அந்தப் பகுதியில் பிரபலமானது. உள்ளூர்க்காரர்கள் தவிர வெளிநாட்டினரும் பெருமளவில் அங்கு குழுமியிருந்தனர். இறந்தவர்களில் வெளிநாட்டினரும் இருக்கலாம் என அஞ்சப்படுகிறது. காயமடைந்தவர்கள் 14 மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணத்திற்கு ரயிலிலும் இ.போ.ச பஸ்ஸிலும் செல்லக்கூடிய நிலையை உருவாக்குவேன் – ஜனாதிபதி –

mahinda.jpg
யாழ்ப்பாணத்திற்கு ரயிலிலும் இ. போ. ச. பஸ்களிலும் பயணிக்கக் கூடிய நிலையை இவ்வருடத்தில் உருவாக்கவுள்ளதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

பொதுமக்கள் மட்டுமன்றி அமைச்சர்களும் அனைத்து அரசியல் தலைவர்களும் இவ்வாறு பயணிக்கக் கூடிய வகையில் பாதுகாப்பான சூழ்நிலையும் நிலவு மெனவும் ஜனாதிபதி தெரிவித்தார். கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற இ. போ. ச. வின் ஐம்பதாவது வருட நிறைவு நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார். அவர் தமதுரையில் மேலும் தெரிவித்ததாவது :-

ஒரு காலத்தில் வடக்கிலிருந்து தெற்கிற்கும் தெற்கிலிருந்து வடக்கிற்கும் நேரடி பஸ் சேவைகள் இருந்தன. இது வடக்கு – தெற்கு நட்புறவைப் பலப்படுத்தியிருந்தது. இந்நிலை இன்று மாறிவிட்டது. மீண்டும் அந்த நிலை உருவாக்கப்படும். அதற்கான நடவடிக்கைகளே மேற்கொள்ளப்படுகின்றன.

விடுதலைப் புலிகள் துரையப்பாவைக் கொலை செய்த மறுநாள் யாழ்ப்பாணத்திலிருந்து பயணிகள் போக்குவரத்தைக் குழப்பினர். அன்றுள்ள அரசாங்கமோ அதற்கு ஆதரவு வழங்கும் வகையில் தெற்கிலிருந்து வடக்கிற்கான பஸ் சேவையையும் யாழ். தேவி ரயில் சேவையையும் கூட நிறுத்தியது. இதுதான் அன்றைய நிலை. நான் பாடசாலைக்கு இ. போ. ச. பஸ்ஸில் பயணித்தவன். கடந்த காலங்களில் இரவில் தனியார் போக்குவரத்துக்கள் இருந்ததில்லை. இரவுப் பயணங்களை மக்கள் இ. போ. ச. பஸ்களிலேயே மேற்கொண்டனர். இதனை சீர்குலைக் கும் வகையில் இரவு 6 மணிக்கு மேல் பஸ் சேவையை நிறுத்திய காலமொன்றும் இருந்தது.

இ. போ. ச. மக்கள் வாழ்க்கையுடன் பின்னிப் பிணைந்தது. ஒரு காலத்தில் எஸ். எஸ். சி. படித்த இளைஞர்கள் இ. போ. ச. நடத்துநர்களாக வருவதற்கு பிரயத்தனப்பட்டனர். ஏனெனில் அன்று அத்தொழிலுக்குப் பெரும் மவுசு இருந்தது. அவர்களுக்குப் பெண் கொடுப்பதற்குப் போட்டி போட்டுக் கொண்டு முன் வந்த காலமது.

இத்தகைய மக்களுக்கு நெருக்கமான இ. போ. ச., ச. தொ. ச. போன்றவற்றை ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சியாளர்கள் தனியாருக்கு விற்றனர். மக்கள் ஒரு போதும் இத்தகைய செயலை ஏற்றுக்கொள்ளப் போவதில்லை. இதனால்தான் இ. போ. ச. வை மீள ஸ்தாபிக்கும் உணர்வு மக்களிடம் எழுந்தது. அரசாங்கம் அதனை நிறைவேற்றியுள்ளது எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

மோசடிகள் இடம்பெற்றதாக கூறி தேர்தல் முடிவுகளை காலிதா ஷியா நிராகரிப்பு

w_n.jpgபங்களாதேஷில்  வெளியான தேர்தல் முடிவுகளை அந்நாட்டின் முன்னாள் பிரதமர் காலிதா ஷியா நிராகரித்துள்ளார். வாக்களிப்பின் போது நாடு பூராவுமுள்ள பல வாக்களிப்பு நிலையங்களில் ஒழுங்கீனங்களும் மோசடிகளும் இடம்பெற்றதாக உறுதிப்படுத்தும் தகவல்கள் தமக்கு கிடைத்திருப்பதாக செய்தியாளர்களிடம் ஷியா தெரிவித்துள்ளார். இத்தேர்தலில் ஷியாவின் அரசியல் எதிரியும் அவாமி லீக் கூட்டணியின் தலைவியுமான ஷேய்க் ஹசினா அமோக வெற்றி பெற்றிருந்த அதேவேளை இத் தேர்தல் சுதந்திரமானதும் நீதியானதுமான முறையில் நடத்தப்பட்டதாக ஊடகங்கள், தேர்தல் கண்காணிப்பாளர்கள் மற்றும் சர்வதேச சமூகம் என்பன பாராட்டியிருந்தன.

இரண்டு வருட இராணுவ ஆதரவுடனான ஆட்சிக்குப் பின்னர் இத் தேர்தல் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை தேர்தல் முடிவுகள் வெளியான பின்னர் இரு பிரதான அரசியல் கட்சிகளின் ஆதரவாளர்களுக்குமிடையில் இடம்பெற்ற மோதல்களில் ஒருவர் கொல்லப்பட்டதுடன் அதிகளவானோர் காயமடைந்ததாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இந்நிலையில் தேர்தல் முடிவுகள் வெளியான பின்னர் முதல் தடவையாக கருத்துத் தெரிவித்த ஷியா, தேர்தல் முடிவுகள் மக்களின் விருப்பத்தை பிரதிபலிக்கவில்லையெனத் தெரிவித்துள்ளனர்.

இதனால் இம்முடிவுகளை நிராகரிப்பதாகக் கூறியுள்ள ஷியா ஒழுங்கீனங்கள் நடைபெற்றமைக்கான விபரங்களை சேகரித்துக் கொண்டிருக்கிறோம். அடுத்த சில தினங்களில் இவற்றை ஊடகங்களுக்கும் அதிகாரிகளுக்கும் வழங்குவோமெனத் தெரிவித்துள்ளார். சுமார் 200 வாக்களிப்பு நிலையங்களில் மோசடிகள் இடம்பெற்றதாக ஷியாவின் கட்சி முறையிட்டுள்ளது. இத் தேர்தல் முடிவுகள் ஏற்றுக் கொள்ளப்படுகின்றனவா அல்லது வன்முறைகளை தோற்றுவிக்கின்றதா என்பதை அறிவதற்கு அடுத்த இரு தினங்களும் மிகவும் முக்கியமானவையென அவதானிகள் தெரிவிக்கின்றனர். பாராளுமன்றத்தில் 260 இற்கும் அதிகமான ஆசனங்களை மற்றைய முன்னாள் பிரதமரான ஷேய்க் ஹசினா வென்றிருப்பதாக தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ள போதும் இதுவரை உத்தியோக பூர்வமான இறுதி முடிவுகளை தேர்தல் ஆணையகம் வெளியிடவில்லை.

யுத்த முனைகளில் 3 ஆயிரம் படையினர் பலி 11,500 க்கும் மேற்பட்டவர்கள் காயம் – மங்கள சமரவீர எம்.பி.

mangala_saramaweera.jpgஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்தில் யுத்த முனைகளில் மூவாயிரத்திற்கும் மேற்பட்ட படையினர் கொல்லப்பட்டும் 11,500க்கும் மேற்பட்ட படையினர் காயமடைந்துமுள்ளதாக பாதுகாப்பு கண்காணிப்பகத்தின் பேச்சாளரும் எம்.பி.யுமான மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். மத்திய மற்றும் வடமேல் மாகாண சபைகளுக்கான தேர்தல் பெப்ரவரி மாதம் 14ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில் அந்தத் திகதிக்குள் விடுதலைப்புலிகளின் தலைவர் வே.பிரபாகரனை கைதுசெய்வோமென அமைச்சர் ஹெலிய ரம்புக்வெல கூறியதன் மூலம் இந்த யுத்தத்துடன் அவர் அரசியல் விளையாடுவதாகவும் மங்கள சமரவீர சாடியுள்ளார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில்; இந்த அரசாங்கம் முறையான விதத்தில் போர் செய்யாததால் மகிந்த ராஜபக்ஷவின் ஆட்சியில் 3000 க்கும் மேற்பட்ட படையினர் கொல்லப்பட்டும் 11,500 க்கும் மேற்பட்டோர் காயமடைந்து ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். புலிகள் தலைவர் பிரபாரகனை பெப்ரவரி மாதம் 7 ஆம் திகதிக்குள் கைது செய்யப்படுவாரென அமைச்சர் ரம்புக்வெல திங்கட்கிழமை நடைபெற்ற பொதுக் கூட்டமொன்றில் கூறியுள்ளார். அன்றைய தினமே மத்திய மற்றும் வடமேல் மாகாண சபைத் தேர்தல்கள் நடைபெறவுள்ளது.

வேட்பு மனுத்தாக்கல் செய்யப்பட்டு முடிந்ததும் தேர்தல்கள் ஆணையாளரே தேர்தலுக்கான திகதியை தீர்மானிப்பார். அப்படியிருக்கையில் தேர்தல் 7 ஆம் திகதி நடைபெறுமென இவரால் எப்படிக்கூற முடியும்? கிளிநொச்சியை கைப்பற்றுவதுடன் புலிகளின் தலைவரையும் கைது செய்வோமென இந்த அரசாங்கம் கூறிவந்த போதும் இது வரை அவர்களால் எதுவுமே செய்ய முடியவில்லை. தேர்தலில் வெற்றிபெறுவதற்கான அரசின் ஒரே கோஷம் யுத்தம்தான் எனினும் நாட்டு மக்கள் தற்போதைய யுத்தம் குறித்து நன்கு அறிந்துள்ளனர். யுத்தத்தில் ஏற்படும் இழப்புகள் குறித்த விபரங்களை வேறு எவரையும் விட அப்பாவிக் கிராம மக்கள் நன்கு அறிந்துள்ளதுடன் அவர்கள் தான் பெருமளவு சடலங்களையும் பெற்றுவருவதாகவும் தெரிவித்துள்ளார்.

யாழ். குடாவில் குறைந்த விலையில் கோதுமை மா, பால் மா

யாழ்ப்பாணத்தில் பால் மா மற்றும் கோதுமை மா கொழும்பைவிட குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுவதாக அத்தியாவசிய சேவைகள் பிரதி ஆணையாளர் தெரிவித்தார்.

உற்பத்தியாளர்களிடமிருந்து நேரடியாக பொருள்களைக் கொள்வனவு செய்து யாழ்ப்பாணத்திற்கு அனுப்புவதால், குறைந்த விலையில் பொருள்களை விற்பனை செய்ய முடிவதாகவும் அவர் தெரிவித்தார்.

பதற்றத்தைக் குறைப்பது குறித்து ஆராய்வு

w_n.jpgஇந்திய,  பாகிஸ்தான் இராணுவ உயர் அதிகாரிகள் இரு நாடுகளிடையேயும் மூண்டுள்ள பதற்ற நிலையைத் தணிக்கும் பொருட்டு தொடர்புகளை ஏற்படுத்திக் கொணடனர். கடந்த செவ்வாய்க்கிழமை இரண்டு நாடுகளின் இராணுவ உயரதிகாரிகள் தொலைபேசியில் இதுகுறித்து நீண்ட நேரம் கலந்தாலோசித்ததாக பாகிஸ்தான் ஊடகங்களை ஆதாரங்காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன.

மும்பைத் தாக்குதலுக்குப் பின்னர் ஏற்பட்ட போர்ப் பீதியால் இந்திய, பாகிஸ்தான் பிரஜைகளிடையே அச்சம் எழுந்தது. இரு நாடுகளும் பதிலுக்குப் பதில் காரசார மான அறிக்கைகளையும் வெளியிட்டன. இராணுவங்கள் எல்லைகளை நோக்கி நகர்த்தப்பட்டதால் இந்திய சென்ற பாகிஸ்தான் மக்களும் பாகிஸ்தானுக்கு வந்த இந்தியர் களும், அவசர அவசரமாகப் பயணங்களைப் பாதியில் நிறுத்திக் கொண்டு சொந்த நாடு திரும்பினர். அணு ஆயுதங்களையுடைய இரண்டு நாடுகளையும் சமாதானமுறையில் செல்லுமாறு சர்வதேச நாடுகள் தொடர்ந்து அழுத்தங்கள் வழங்கியுள்ள நிலையில் இராணுவ உயரதிகாரிகள் தொடர்புகளை ஏற்படுத்தியமை பதற்றத்தைத் தணிக்க உதவியுள்ளது.

படைகள் இரு எல்லைகளில் குவிக்கப்பட்டுள்ளதால் போரைத் தவிர்க்க முடியாத சூழல் ஏற்படலாம் என எச்சரித்துள்ள இராணுவ ஆய்வாளர்கள் படைகள் விலக்கப்படுவதன் அவசியத்தையும் வலியுறுத்தியுள்ளனர். தற்போது இரு நாடுகளின் இராணுவ அதிகாரிகளிடையே ஏற்பட்டுள்ள தொடர்புகள் பேச்சுவார்த்தைக்கு வழிவகுத்தால் படைவிலக்கல் பற்றி பேசப்படலாம்.