செய்திகள்

செய்திகள்

செய்திகள்

பெற்றோல் விலையை ஏன் குறைக்க முடியாது? காரணம் தெரிவிக்க ஜனவரி 27 வரை அரசுக்கு உயர் நீதிமன்றம்

supreme_court.jpg
அடிப்படை உரிமைகள் மனு மீதான உயர்நீதிமன்றத்தின் எந்தவொரு தீர்மானத்திற்கும் அரசியலமைப்பின் 188 ஆவது சரத்தின் பிரகாரம் நிறைவேற்றதிகாரம் (ஜனாதிபதி) இணங்க வேண்டும் என்று நேற்று செவ்வாய்க்கிழமை உயர்நீதிமன்றம் தெரிவித்திருக்கும் அதேசமயம், பெற்றோலின் விலையை லீற்றர் 100 ரூபாவாக ஏன் குறைக்க முடியாதென்பதற்கான காரணத்தை தெரிவிப்பதற்கு ஜனவரி 27 வரை அரசாங்கத்துக்கு கால அவகாசம் வழங்கியுள்ளது. உயர்நீதிமன்றத்தில் நேற்று எரிபொருள் விலை மற்றும் ஹெட்ஜிங் தொடர்பான அண்மைய விடயங்கள் தொடர்பான வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்டபோது பிரதம நீதியரசர் சரத் என் சில்வா இந்த கருத்தை தெரிவித்துள்ளார்.

அமைச்சரவை அமைச்சர்கள் நீதிமன்றத்தின் தீர்ப்பை பரிசீலனைக்கெடுத்து பரந்துபட்ட அளவில் நுகர்வோருக்கு சலுகைகளை வழங்க நடவடிக்கைகளை எடுத்திருப்பதாகவும் டீசல், மண்ணெண்ணெயின் விலைகளை குறைத்திருப்பதுடன் பெற்றோல் விலையையும் குறைத்திருப்பதாகவும் திறைசேரியின் செயலாளருக்காக ஆஜரான பிரதி சொலிசிற்றர் ஜெனரல் எஸ். இராஜரெட்ணம் நீதிமன்றத்துக்கு தெரிவித்தார். அதேவேளை, நீதிமன்றத்தின் பணிப்புரைக்கமைய பெற்றோலியப் பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டதால் தமது வாடிக்கையாளருக்கு அதிகளவு இழப்பு ஏற்பட்டிருப்பதாகவும் ஏனெனில் சுங்கத்தீர்வை விலக்கை அளிக்க அரசாங்கம் தவறிவிட்டதால் இழப்பு ஏற்பட்டிருப்பதாகவும் லங்கா ஐ.ஓ.சி. நிறுவனத்தின் சார்பில் ஆஜரான சட்டத்தரணி நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

2008 டிசம்பர் 17 இல் விடுக்கப்பட்ட இடைக்கால உத்தரவை ஏன் அமுல்படுத்த முடியாது என்பதற்கான காரணத்தை திறைசேரி செயலாளர் தெரிவிக்க வேண்டுமென நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதுடன் நுகர்வோருக்கு சலுகைகளை வழங்க அரசாங்கம் விரும்பினால் அது தொடர்பாக நீதிமன்றத்திற்கு விபரங்களை சமர்ப்பிக்கவேண்டுமெனவும் நீதிமன்றம் பணித்துள்ளது.

லாவ் காஸ் தலைவர் டபிள்யூ.கே. எச் வேகல் பிட்டிய, ரவி கருணாநாயக்கா எம்.பி. மற்றும் இருவர் உட்பட மனுதாரர்கள் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் நீதிமன்ற உத்தரவு முழுமையாக அமுல்படுத்தப்படாவிடின் தமது மனுக்களை வாபஸ் பெற்றுக்கொள்வார்களென நீதிமன்றத்துக்கு தெரிவித்தனர். மனுக்கள் வாபஸ் பெற்றுக்கொள்ளப்பட்டால் வழக்கு முடிவுக்கு கொண்டுவரப்பட்டு விடும் என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இந்த விடயம் தொடர்பான இறுதித் தீர்மானத்திற்காக ஜனவரி 27 இல் விசாரணை இடம் பெறவுள்ளது.

பிரபாகரன் இந்தோனேஷியாவுக்கு தப்பியோடுவதற்கு திட்டம் – கருணா

murali.jpgபுலிகளின் தலைவர் பிரபாகரன் தற்கொலை செய்யமாட்டார். சிலவேளை இந்தோனேஷியாவுக்கு அல்லது கம்போடியாவுக்கு தப்பியோடலாமென தமிழ் மக்கள் விடுதலைப்புலிகளின் தலைவர் முரளிதரன் எம். பி. (கருணா) தெரிவித்துள்ளார். தமிழ் நாட்டில் வெளிவரும் மாலை மலர் பத்திரிகைகக்குக் கருத்துத் தெரிவித்துள்ள அவர்,

“பிரபாகரன் தப்பி ஓடப்பார்க்கிறார். நான் அவருடன் இருந்தவன். அவரை பற்றி எனக்கு நன்கு தெரியும். பிரபாகரன் இந்தோனேஷியாவுக்கோ கம்போடியாவுக்கோ தப்பி ஓட திட்டமிட்டு இருக்கிறார். தப்பி ஓடாவிட்டால் இராணுவத் தாக்குதலில் அவர் உயிர் இழக்க வேண்டிய நிலை ஏற்படும். அல்லது முசோலினி, சதாம் உசேன் போல இராணுவத்தினரிடம் பிடிபடுவார்” இவ்வாறு கருணா கூறியுள்ளார்.

ஷெல் தாக்குதலில் 3 சகோதரிகள் பலி; 30 பொதுமக்கள் படுகாயம்

vanni.jpgகிளிநொச்சி விசுவமடுப் பகுதியில் மக்கள் குடியிருப்புப் பகுதியில் நேற்றுக் காலை 9.30 மணியளவில் இடம்பெற்ற ஷெல் தாக்குதலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று சகோதரிகளும் வயோதிபர் ஒருவரும் கொல்லப்பட்டதுடன், 7 சிறுவர்கள் உட்பட 23 பேர் காயமடைந்தனர்.

முல்லைத்தீவில் புதுக்குடியிருப்பு ஆஸ்பத்திரி மீது நேற்றுக்காலை பத்து மணியளவில் மேற்கொள்ளப்பட்ட ஷெல் தாக்குதலில் பெண்ணொருவர் உட்பட இருவர் கொல்லப்பட்டதுடன், ஏழு பேர் படுகாயமடைந்தனர். இவை தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, நேற்றுக் காலை முதல் விசுவமடு பகுதியில் கடும் ஷெல் தாக்குதல் நடைபெற்றது. விசுவமடு மகாவித்தியாலயத்திற்கு அருகில் பொதுமக்கள் செறிந்து வாழும் குடியிருப்பு பகுதிகளில் தொடர்ந்து பல ஷெல்கள் வீழ்ந்து வெடித்தன.

இதனால், பல வீடுகள் முற்றாகச் சேதமடைந்தன. இதில் ஒரு வீட்டில் வீழ்ந்த ஷெல்லினால் அங்கிருந்த மூன்று சகோதரிகளும் மற்றொரு வீட்டில் வீழ்ந்த ஷெல்லினால் வயோதிபர் ஒருவரும் அந்த இடங்களிலேயே கொல்லப்பட்டனர். வேறு வேறு வீடுகளில் வீழ்ந்து வெடித்த ஷெல்களினால் ஏழு சிறுவர்கள் உட்பட 23 பேர் படுகாயமடைந்தனர். கொல்லப்பட்ட மூன்று சகோதரிகளதும் தாயாரும் படுகாயமடைந்த நிலையில் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தத் தாக்குதல்களில் சகோதரிகளான மயூரி (வயது 19), சுஜிதா (வயது 14), சுஜீவனா (வயது 16) ஆகியோரும் வயோதிபர் ஒருவரும் (பெயர் கிடைக்கவில்லை) கொல்லப்பட்டனர்.

வடக்கு அபிவிருத்தியை ஆராய இன்று 2ம் கட்ட முக்கிய பேச்சு

laksman-yaappa.jpgகிழக்கை விட துரிதமாக வடக்கை அபிவிருத்தி செய்வதே அரசாங்கத்தின் திட்டமாகும். இது தொடர்பான இரண்டாவது முக்கிய பேச்சுவார்த்தை ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் பெசில் ராஜபக்ஷ எம்.பி. தலைமையில் இன்று நடைபெறவுள்ளதாக தகவல், ஊடகத்துறை அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.

வடக்கை மீட்டு முழுமையாக அபிவிருத்தி செய்வதுடன், அம்மக்களுக்கான இயல்பு வாழ்க்கையை துரிதமாக பெற்றுக் கொடுப்பதில் அரசாங்கம் கூடுதல் கவனம் செலுத்துமென தெரிவித்த அமைச்சர், வடக்கின் துரித அபிவிருத்தி தொடர்பான முதலாவது கலந்துரையாடலில் வடக்கின் முக்கிய அரசியல் தலைவர்களுடன் இந்தியத் தூதுவரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்க அம்சமாகுமெனவும் தெரிவித்தார்.

அரசாங்கத்தின் அபிவிருத்தி மற்றும் தற்போதைய சூழ்நிலை தொடர்பாக ஊடகவியலாளர்களுக்கு தெளிவுப்படுத்தும் செய்தியாளர் மாநாடொன்று நேற்று தகவல் ஊடகத்துறை அமைச்சின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இம்மாநாட்டில் கலந்து கொண்டு விளக்கமளித்த அமைச்சர் தமதுரையில் மேலும் தெரிவித்ததாவது,

அரசாங்கத்தின் சகல நடவடிகைகளையும் விமர்சனத்துக்குள்ளாக்கி அரசியல் இலாபம் தேடும் முயற்சியில் சில சக்திகள் ஈடுபட்டு வருகின்றன. அண்மையில் பாராளுமன்றத்தில் உரையாற்றிய ஐ. தே. க. எம்.பி. ரவி கருணாநாயக்கா படையினர் கிளிநொச்சியைக் கைப்பற்றுவோமென மதவாச்சியையே கைப்பற்றப் போகின்றனர். அலிமங்கடவைக் கைப்பற்றுவோமென்று கூறி பாமன்கடையையே கைப்பற்றுவர் எனத் தெரிவித்தார். இன்று நடந்துள்ளது என்ன என்பதை சகலரும் அறிவர்.

வடக்கின் அபிவிருத்தி சம்பந்தமாக அரசாங்கம் அதிக கவனம் செலுத்தி வருகிறது. இது தொடர்பான பேச்சு வார்த்தைகள் இடம்பெற்று வருகின்றன. சிறந்த திட்டம் ஒன்று வகுக்கப்பட்டு அதனைத் துரிதமாக நடை முறைப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும். நேற்று முன்தினம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வெளிநாட்டு ஊடகவியலாளர்களைச் சந்தித்துள்ளார். இச்சந்திப்பின் போது படையினரின் மனிதாபிமான நட வடிக்கைகள் பொதுமக்களுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையிலேயே மேற்கொள்ளப்படுவதை உறுதி செய்துள்ளார். 1983ம் ஆண்டு கால கட்டத்திலுள்ள சில காட்சிப் படங்களை வைத்துக் கொண்டு சில சக்திகள் பொதுமக்கள் பாதுகாப்புக்குப் பங்கம் ஏற்படுவதாகப் பிரசாரங்களை மேற்கொள்ளுகின்றனர்.

வாகரையிலிருந்து 14,000 பொது மக்களைப் படையினர் எவ்வித பாதிப்புமில்லாதவாறு வெளிக்கொணர்ந்தமை குறிப்பிடத்தக்கது எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

இலங்கையில் சேவையை ஆரம்பித்தது இந்தியாவின் பார்தி எயார்ரெல் நிறுவனம்

airtel.jpgஇந்தியாவை தளமாக கொண்டியங்கும் பார்தி எயார்ரெல் தொலைத்தொடர்பு சேவை  திங்கட்கிழமை முதல் இலங்கையில் தனது சேவைகளை ஆரம்பித்துள்ளது.  இலங்கையில் தனது சேவைகளை விஸ்தரிப்பதற்காக கடந்த ஒருவருடத்திற்கு முன்னர் நூறு மில்லியன் அமெரிக்க டொலரினை முதலீடு செய்திருந்த எயார்ரெல் அடுத்து வரும் 3 வருடத்துக்குள் மேலும், நூறு மில்லியன் அமெரிக்க டொலரினை முதலீடு செய்யவுள்ளது.

நாட்டின் 60 சதவீதமான பகுதிகளில் தற்பொழுது எயார்ரெல்லின் சமிக்ஞை கிடைக்கப்பெறுவதுடன், இலங்கையில் பார்தி எயார்ரெல் லங்கா (தனியார்) வரையறுக்கப்பட்ட நிறுவனம் என்ற பெயருடன் இயங்குகின்றது.  இலங்கையில் தனது சேவைகளை ஆரம்பிப்பதன் மூலம் மகிழ்ச்சி அடைவதாகத் தெரிவித்த எயார்ரெல் குழுமத்தின் தலைமை முகாமைத்துவ பணிப்பாளர் சுனில் பார்தி மிட்டல் நாட்டின் வளர்ச்சியில் தாமும் பங்கு கொள்வதாகத் தெரிவித்தார்.

மேலும், இலங்கைச் சந்தையில் ஓர் முக்கிய இடத்தினை பெறுவதற்கு எயார்ரெல் கடுமையாக உழைக்குமெனவும் தொலைத்தொடர்பு மற்றும் கையடக்கத் தொலைபேசி ஊடான இணைய சேவை போன்றவற்றை மக்கள் மேலும், அதிக வசதிகளுடன் அனுபவிக்கலாமெனவும் அவர் தெரிவித்தார்.  அத்துடன் 88 மில்லியன் வாடிக்கையாளர்களை கொண்டிருப்பதன் அனுபவத்தின் மூலம் இலங்கையின் தொலைபேசி வலையமைப்பிலும் ஒரு சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தப்போவதாகவும் சுனில் பார்தி மிட்டல் மேலும் தெரிவித்தார்.

நாட்டில் தற்பொழுது 2.9 மில்லியன் நிலையான தொலைபேசி பாவனையாளர்களும் 7.9 மில்லியன் கையடக்கத் தொலைபேசி பாவனையாளர்களும் 2 இலட்சம் இணையத்தள பாவனையாளர்களும் உள்ளனர்.  எயார்ரெல்லின் வருகையை தொடர்ந்து நாட்டிலுள்ள ஏனைய கையடக்கத்தொலைபேசிச் சேவை வழங்குநர்கள் அழைப்புக்களுக்கான கட்டணங்களை குறைத்துள்ளதுடன் கழிவுகளை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஒரு இதயம்-இருவருக்கு புது வாழ்வு!

surgery.jpgகேரளாவிலிருந்து கர்நாடகத்திற்கு வந்திருந்த என்ஜீனியர் சாலை விபத்தில் சிக்கி மூளைச் சாவை சந்தித்தார். இதையடுத்து அவரது இதயம், பாதுகாப்பாக சென்னைக்குக் கொண்டு வரப்பட்டு அங்கு நோயாளிக்குப் பொருத்தப்பட்டது. மேலும் என்ஜீனியரின் இதய ரத்தக் குழாய்கள் தான்சானியாவைச் சேர்ந்தவருக்குப் பொருத்தப்பட்டது. கேரளாவைச் சேர்ந்த 28 வயது என்ஜீனியர் பெங்களூரில் பணியாற்றி வந்தார். வியாழக்கிழமை இரவு எச்.ஏ.எல். விமான நிலைய சாலையில் சாலை விபத்தில் அவர் படுகாயமடைந்தார். உடனடியாக அவரை மணிப்பால் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் அவர் மூளைச் சாவை சந்தித்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

இதையடுத்து அந்த என்ஜீனியரின் குடும்பத்தினரை மணிபால் மருத்துவமனை நிர்வாகம் தொடர்பு கொண்டு உறுப்பு தானத்தை அறிவுறுத்தியது. இதைத் தொடர்ந்து அவரது இதயம், கல்லீரல், சிறுநீரகங்கள் ஆகியவை எடுக்கப்பட்டு பதப்படுத்தப்பட்டன. அதைத் தொடர்ந்து பெங்களூரைச் சேர்ந்த 36 வயது நோயாளிக்கு கல்லீரல் பொருத்தப்பட்டது. பின்னர் 37 வயதுப் பெண்மணிக்கு ஒரு சிறுநீரகமும், பெங்களூர் கமாண்ட் மருத்துவமனைக்கு இன்னொரு சிறுநீரகமும் அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் இதயத்தைப் பொருத்துவதற்கு சரியான நபர் கிடைக்கவில்லை. இதையடுத்து மணிபால் மருத்துவமனை சென்னையைச் சேர்ந்த பிரபல இதயவியல் நிபுணர் டாக்டர் செரியனை தொடர்பு கொண்டு கேட்டபோது, அவரது பிரான்டியர் லைப்லைன் மருத்துவமனையில் நோயாளி ஒருவர் இருப்பது தெரிய வந்தது.

இதைத் தொடர்ந்து சென்னையைச் சேர்ந்த சஜாஸ் ஏர் சார்ட்டர் நிறுவனத்தின் விமான ஆம்புலன்ஸ் புக் செய்யப்பட்டு அது பெங்களூர் விரைந்தது. அந்த விமானம் மூலம் பெங்களூர் விரைந்த பிரான்டியர் மருத்துவமனை டாக்டர்கள், மூளைச் சாவை சந்தித்த என்ஜீனியரின் இதயத்தை அறுவைச் சிகிச்சை செய்து பத்திரமாக எடுத்தனர். பின்னர் மின்னல் வேகத்தில் அங்கிருந்து அதே விமானத்தில் சென்னை திரும்பினர். விமான நிலையத்திலிருந்து பிரான்டியர் லைப் லைன் மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் தடையின்றி விரைய வழி ஏற்படுத்தி சென்னை போலீஸாரும், பேருதவி புரிந்தனர்.

அங்கு இரு டாக்டர்கள் குழு தயார் நிலையில் இருந்தன. அவர்கள் விரைவாக செயல்பட்டு இதய மாற்று சிகிச்சையை வெற்றிகரமாக செய்து முடித்தனர். ஒரு குழு நோயாளியின் உடலிலிருந்து இதயத்தை எடுத்தது. இன்னொரு குழு உடனடியாக இதயத்தை பொருத்தியது. இரு அறுவைச் சிகிச்சைகளும் வெற்றிகரமாக இருந்ததாகவும், நோயாளி நலமுடன் இருப்பதாகவும் டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். கேரள என்ஜீனியரின் இதயத்தைப் பெற்று புது வாழ்வு பெற்ற நோயாளிக்கு 32 வயதாகிறது. அவர் காவல்துறையில் பணியாற்றி வருகிறார். கடந்த 3 மாதங்களில் நான்கு முறை பிரான்டியர் மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்றுள்ளார். டாக்டர் செரியனின் உதவியால் அவருக்குப் புது வாழ்வு கிடைத்துள்ளது.

வால்வுகளும் உதவின …

இதற்கிடையே லைப்லைன் மருத்துவமனையில் இதய ரத்த குழாய்கள் பாதிக்கப்பட்ட நிலையில் தான்சானியா நாட்டைச் சேர்ந்த ஒருவர் அனுமதிக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது. அதிர்ஷ்டவசமாக அவர் மிகச் சரியான நேரத்தில் அங்கிருந்தார். உடனடியாக செரியன் தலைமையிலான டாக்டர்கள் குழு, அந்த தான்சானியா நாட்டுக்காருக்கு அறுவை சிகிச்சை செய்தனர். பழுதடைந்திருந்த அவரது ரத்தக்குழாய்கள் அகற்றப்பட்டு, பெங்களூர் என்ஜினீயரின் ரத்தக்குழாய்கள் பொருத்தப்பட்டன.

பெங்களுரில் அறுவை சிகிச்சை செய்து, இதயத்தை தனி விமானத்தில் எடுத்து வந்து, சென்னை போலீஸ் காரருக்கும், தான்சானியா நாட்டுக்காரருக்கும் பொருத்த டாக்டர்கள் எடுத்துக்கொண்ட மொத்த நேரம் 2 மணி 40 நிமிடமே. இந்த மின்னல் வேக சிகிச்சை இந்திய மருத்துவ உலகில் புதிய சாதனையாக கருதப்படுகிறது.  இந்த மின்னல் வேக சிகிச்சை காரணமாக 2 உயிர்கள் மறுவாழ்வு பெற்றுள்ளன. இதுகுறித்து டாக்டர் செரியன் கூறுகையில், பெங்களூர் என்ஜினீயர் கொடுத்த இதயத்தால் சென்னையில் ஒரு போலீஸ்காரரும், தான்சானியா நாட்டுக்காரரும் மறுவாழ்வு பெற்றுள்ளனர்.

நிறைய மருத்துமனைகளில் சிறுநீரகத்தை மட்டும் எடுத்துவிட்டு இதயத்தை கைவிட்டு விடுகிறார்கள். இதயத்தையும் இப்படி எடுக்க அனுமதித்தால் ஏராளமான இதய நோயாளிகளுக்கு வாழ்வு கொடுக்க முடியும் என்றார்.

நன்றி; வன் இந்தியா

புலிகளின் முக்கிய இலக்குகளில் நேற்று விமானத் தாக்குதல்

mi24-1912.jpgபுலிகளின் இனங்காணப்பட்ட முக்கிய இலக்குகள் மீது இலங்கை விமானப் படையினர் நேற்றுக்காலை முதல் மாலை வரை 9 தடவைகள் விமானத் தாக்குதல்களை மேற்கொண்டதாக தேசிய பாதுகாப்பு தொடர்பான ஊடக மத்திய நிலையத்தின் அதிகாரியொருவர் தெரிவித்தார்.

இவ்விமானத் தாக்குதல்களின்போது புலிகள் இயக்கத்தின் முக்கிய தலைவர்கள் மற்றும் சிரேஷ்ட உறுப்பினர்கள் அடிக்கடி கூடும் முக்கிய இடங்கள் இரண்டும், இரண்டு பீரங்கி நிலைகள் மீதும் இத்தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

விமானப் படைக்குச் சொந்தமான எம்.ஐ – 24 மற்றும் ஜெட் ரக விமானங்களை பயன்படுத்தியே புலிகளின் இனங் காணப்பட்ட இந்த இலக்குகள் மீது ஒன்பது தடவைகள் விமானத் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகவும் அவர் கூறினார். முல்லைத்தீவு நோக்கி தரை வழியாக முன்னேறிவரும் படையினருக்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையிலேயே நேற்றுக்காலை முதல் மாலை வரை மேற்படி பகுதிகளில் எட்டு தடவைகள் விமானத் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன.

முல்லைத்தீவு நகருக்கு தெற்கே அமைந்துள்ள புலிகள் சந்திக்கும் முக்கிய இரகசிய இடமொன்றை இலக்குவைத்து நேற்றுக்காலை 9.10, 9.20, 11.30 மற்றும் மாலை 3.35 ஆகிய வேளைகளிலேயே விமானத் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன. இதேவேளை முல்லைத்தீவுக்கு அருகிலுள்ள புலிகள் சந்திக்கும் இன்னுமொரு முக்கிய இரகசிய இடம் மீதும் காலை 10.15 மணி, நண்பகல் 12.10, 1.45 மாலை 3.15 ஆகிய நேரங்களில் ஜெட் விமானங்கள் மூலம் தாக்குதல்களை மேற்கொண்டன.

அதனைத் தொடர்ந்து மாலை 4 மணியளவில் யாழ்ப்பாணம், சுண்டிக்குளம் களப்புக்கு அருகில் இனங்காணப்பட்ட புலிகளின் இரண்டு பீரங்கி நிலைகளையும் விமானப் படையினரின் ஜெட் விமானங்கள் தாக்கியழித்தன. விமானப் படையின் உளவுப் பிரிவினர் இலக்குகளை நன்கு இனங்கண்டதன் பின்னரே தாக்குதலை நடத்தியிருப்பதாக கூறிய ஊடக மத்திய நிலைய அதிகாரி மேற்கொள்ளப்பட்ட ஒன்பது தாக்குதல்களும் வெற்றியளித்திருப்பதனை விமான ஓட்டிகள் உறுதி செய்திருப்பதாகவும் குறிப்பிட்டார்.

இன்று கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் பொங்கல் விழாவில் கலைப்பிரிவில் முதலிடம் பெற்ற மாணவிக்கு கௌரவிப்பு

pongal-02.jpgஅண் மையில் வெளியான 2008 க.பொ.த.உயர்தரப்பரீட்சையில் கலைப்பிரிவில் தேசிய மட்டத்தில் முதலாவதாக வந்து சாதனை நிலைநாட்டிய கிண்ணியா முஸ்லிம் மகளிர் கல்லூரி மாணவி செய்னுலாப்தீன் பாஹிமா இன்று புதன்கிழமை காலை திருகோணமலையில் கிழக்கு மாகாணக்கல்வி அமைச்சு நடத்தவிருக்கும் பொங்கல் நிகழ்வில் பாராட்டிக் கௌரவிக்கப்படவுள்ளார்.

இன்றைய தினம் கடந்த வருடத்தில் வெளியான க.பொ.த.சாதாரணதரப் பரீட்சையில் தேசிய மட்டத்தில் முதலாவதாக வந்து சாதனை புரிந்த காரைதீவு விபுலானந்த மத்திய கல்லூரி மாணவி எஸ்.ஷாலினியும் பாராட்டப்பட்டு கௌரவிக்கப் படவிருப்பதாகக் தெரிவிக்கப்படுகின்றது. இளம் புத்தாக்குநர் கழகங்களுக்கு இடையே கிழக்கு மாகாண மட்டம், தேசிய மட்டம் ஆகியவற்றில் நடத்தப்பட்ட புத்தாக்கக் கண்டுபிடிப்புக்களில் மாகாண மற்றும் தேசியநிலையில் சிறந்தவை எனத் தெரிவு செய்யப்பட்ட புத்தாக்கங்களை கண்டுபிடித்த மாணவரும் இப்பொங்கல் நிகழ்வில் கௌரவிக்கப்படவிருப்பதாகத் தெரிகிறது. இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கிழக்கு மாகாணக் கல்வி அமைச்சர் விமலவீரா திஸநாயக்க கலந்துகொள்வார். மாகாணக் கல்வி அமைச்சின் மாநாட்டு மண்டபத்தில், கௌரவிப்பு நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன

ஐ.தே.க.வில் இருந்த காலப் பகுதியின் பாவங்களை போக்கவே ஜனாதிபதியை நாடி வந்துள்ளேன் – எஸ்.பியின் சகோதரர்

ballot-box.jpgஐக்கிய தேசியக் கட்சியில் சில காலம் நான் தொடர்புபட்டிருந்ததால் எனக்கு ஏற்பட்ட அந்தப் பாவத்தை சம நிலைப்படுத்துவதற்காகவே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை நாடினேன். நுவரெலியா மாவட்டத்தில் ஐ. ம. சு. கூட்டமைப்பு சார்பில் மத்திய மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடும் எனக்கு நிச்சயமாக வெற்றிகிடைக்கும் என மத்திய மாகாண சபைத் தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராகப் போட்டியிடும் எஸ். பி. திஸாநாயக்காவின் (ஐ. தே. க.) சகோதரரான முன்னாள் மத்திய மாகாண சபையின் சுகாதார அமைச்சர் சாலிய திஸாநாயக்க தெரிவித்தார்.

ஹங்குரன்கெத்தையில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசும்பொழுதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.  இக் கூட்டத்தில் சாலிய திஸாநாயக்க தொடர்ந்தும் கூறியதாவது :- மத்திய மாகாண சபைத் தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராகப் போட்டியிடும் எனது மூத்த சகோதரரான எஸ். பி. திஸாநாயக்க 15ஆம் திகதி ஐ. தே. கட்சியில் இருந்தும் விலகி மீண்டும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்து செயல்படவேண்டி ஏற்படும். நான் ஐ. தே. கட்சியில் இருந்த காலப் பகுதியில் எனக்குக் கிடைக்கப்பெற்ற அனைத்து வரப்பிரசாதங்களை ஒருபுறம் ஒதுக்கிவிட்டு நாட்டை சீரான வழியில் கட்டியெழுப்பத் துணிந்துள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் இணைந்தேன்.

அந்தக் கட்சியில் இருந்த காலப் பகுதியில் என்னை சூழ்ந்து கொண்ட பாவங்களுக்கு மன்னிப்பைத் தேடும் வகையிலும் அதனைச் சமநிலைப்படுத்துவதற்குமாக ஜனாதிபதியுடன் எனது இரு சகோதரளுடன் இணைந்துகொண்டேன். இவ்வாறு இணைந்ததெல்லாம்  இப்பிரதேசத்தைச் சேர்ந்த மக்களின் மேம்பாட்டுக்காகவே ஆகும் என அவர் மேலும் தெரிவித்தார்.

காஸா மீது முழு அளவிலான தாக்குதல்கள் ஆரம்பம்; இஸ்ரேலின் ரிசேர்வ் படையினரும் களத்தில்

gaza_war02.jpgகாஸாப் பள்ளத்தாக்கிலுள்ள ஹமாஸ் போராளிகளுக்கெதிரான நடவடிக்கைகளில் ரிசேர்வ் இராணுவத்தினரையும் ஈடுபடுத்தியுள்ள இஸ்ரேல் அங்கு முழு அளவிலான தாக்குதல்களை ஆரம்பித்துள்ளது. ஹமாஸ் ஆயுதக் கடத்தல்களை மேற்கொள்வதாகக் கருதப்படும் காஸா எகிப்து எல்லையிலுள்ள சுரங்கப் பாதையை தாக்கியழிப்பதற்கான நடவடிக்கைகளை இஸ்ரேலியப் படைகள் ஆரம்பித்துள்ளன.

போர்நிறுத்தத்திற்கான சர்வதேச அழைப்புக்களை நிராகரித்து 17 ஆவது நாளாகவும் இஸ்ரேல் தொடர்ந்து மேற்கொண்டு வரும் தாக்குதலில் பலியான பாலஸ்தீனர்களின் எண்ணிக்கை 900 ஐ எட்டியுள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் சந்தித்து பேச்சுக்களை நடத்திய இஸ்ரேலியப் பிரதமர் எஃகுட் ஒல்மேர்ட், பாதுகாப்பு அமைச்சர் எஃகுட் பராக் மற்றும் வெளியுறவு அமைச்சர் லிவ்னி ரிஸிபி ஆகியோர் ஹமாஸ் மீதான தாக்குதல்களை தீவிரப்படுத்துவதற்கு தீர்மானித்திருப்பதாக அந்நாட்டு வானொலிச் சேவையொன்று தெரிவித்துள்ளது.

இஸ்ரேல் மீது ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தும் ஹமாஸின் திறனை முற்றுமுழுதாக அழிப்பதென சபதமெடுத்துள்ள இஸ்ரேலிய தலைவர்கள் காஸாவில் தரைவழித் தாக்குதல்களைத் தீவிரப்படுத்தும் பொருட்டு ரிசேர்வ் இராணுவத்தினரை நடவடிக்கைகளில் ஈடுபடுத்த தீர்மானித்துள்ளனர். இந்நடவடிக்கை இஸ்ரேலிய இராணுவத்திற்கு பலத்த சேதங்களை உருவாக்குமெனக் கருதப்படுவதுடன் தப்பித்து செல்ல வழியின்றி சிறிய பரப்பளவைக் கொண்ட காஸாப் கரையோரப் பகுதியில் சிக்கியிருக்கும் 15 இலட்சம் பாலஸ்தீனர்களுக்கும் இந் நடவடிக்கை கடும் சேதங்களை உருவாக்குமென அஞ்சப்படுகிறது.

காஸாவின் தென்பகுதியில் ரிசேர்வ் இராணுவத்தினர் குவிக்கப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 15 கிலோமீற்றர் நீளமான எகிப்துடனான சுரங்கப் பாதையை தகர்ப்பதற்காக அங்கு தொடர் விமானத் தாக்குதல்களை நடத்திவரும் இஸ்ரேல் அதனை குண்டுவைத்து தகர்க்கும் முயற்சிகளிலும் ஈடுபட்டுள்ளது. இந்நிலையில் தமது தாக்குதல்கள் ஆரம்பிக்கப்பட்டமைக்கான இலக்கை அடைவதற்கு தாம் தீர்மானித்திருப்பதாகத் தெரிவித்துள்ள இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் அதே நேரத்தில் இராஜதந்திர முயற்சிகள் தொடர்பிலும் பரிசீலிக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

இத் தாக்குதல்களில் இதுவரை 890 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதுடன் 3,600 இற்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளதாக காஸா மருத்துவ அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இதேவேளை, 10 படையினர் உட்பட 13 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் தெரிவிக்கின்றது. நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை மட்டும் 40 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. காஸாவின் பிரதான மருத்துவமனை இடிந்து விழும் நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்படுவதுடன் அடிப்படை மருத்துவ உபகரணங்கள் மற்றும் மருத்துவர்களின் பற்றாக்குறை நிலவுவதாக மருத்துவ அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

மின்சாரம் அடிக்கடி துண்டிக்கப்படுவதால் டோர்ச் லைற்றின் உதவியுடனேயே சில சத்திர சிகிச்சைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளதுடன் ஷெல் தாக்குதல்களினால் 12 அம்புலன்ஸ் பணியாளர்களும் கொல்லப்பட்டிருப்பதாக தெரிவிக்கின்றனர்.