செய்திகள்

செய்திகள்

செய்திகள்

வன்முறை அரசியல் கலாசாரத்தை மலையகத்திலிருந்து அகற்றுவோம் – மனோகணேசன் எம்.பி.

Estate Workersவேட்பு மனுக்கள் தாக்கல் செய்யும் இறுதி நாளன்று மலையகத்தில் வன்முறை கலாசாரம் தலைவிரித்தாயிருக்கிறது. இரண்டு பெரும் மலையக அமைச்சர்களின் கட்சியினர் தலவாக்கலையில் மோதிக்கொண்டுள்ளார்கள். மக்கள் பிரதிநிதிகளே முன்னின்று வன்முறை நடவடிக்கைகளுக்கு தலைமை தாங்கியுள்ளார்கள். மணித்தியாலக்கணக்கில் போக்குவரத்தை ஸ்தம்பிதம் அடையச்செய்து, கல்வீச்சுக்களை நடத்தி, வர்த்தக நிலையங்களை மூடச்செய்து வாக்களித்த நமது மக்களையே பீதிக்குள்ளாக்கிய தலைவர்களை பார்த்து முழு நாடுமே கைகொட்டி சிரிக்கின்றது. இத்தகைய அரசியல்வாதிகளுடனேயா நாமும் அரசியல் செய்கின்றோம் என நாங்களும் வெட்கித் தலைகுனிகின்றோம். பெப்ரவரி 14 ஆம் திகதி நடைபெறவிருக்கும் தேர்தலில் இந்த வன்முறை பாண்பாட்டாளர்களுக்கு மலையக மக்கள் தகுந்த பாடம் புகட்டவேண்டும் என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோகணேசன் எம்.பி. கோரியுள்ளார்.

தலவாக்கலை வன்முறை சம்பவங்கள் தொடர்பில் மனோ எம்.பி. விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; இத்தகைய வன்முறை சம்பவங்களை எதிர்நோக்கிய படியால் தான் எமது கட்சியினருக்கு வாகன பேரணிகளையும் அரசியல் பிரசாரத்தையும் வேட்புமனு இறுதி தினத்தன்று நடத்தவேண்டாம் என நாங்கள் அறிவுறுத்தல் வழங்கியிருந்தோம். நாம் எதிர்பார்த்தபடியே சட்டவிரோத ஆயுதங்களும் மதுவும் துணைவர வன்முறை நாடகம் அரங்கேறி இருக்கின்றது. 150 ஆண்டுகளாக உழைத்து, உழைத்து உருக்குலைந்து போயிருக்கும் அப்பாவி மலையகத் தோட்டத்தொழிலாளர்களின் வாழ்க்கையை உயர்த்தி நிறுத்திட வக்கற்றவர்கள் வன்முறையை தூண்டுகின்றார்கள். வாக்களித்து உங்களை பதவிகளில் அமர்த்திய எங்களுக்கு உதவி செய்யாவிட்டாலும் பரவாயில்லை உபத்திரவம் செய்யாமலாவது இருந்தால் போதும் என மலையக வாக்காளர்கள் கையெடுத்து கும்பிடும் நிலைமை உருவாகியுள்ளது.

மத்திய மாகாணசபை கலைக்கப்பட்ட மறுதினம் காலை முதல் நுவரெலியா மாவட்டம் முழுக்க எமது கட்சியினரின் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன. எமது சுவரொட்டிகளை தேடித்தேடி அவற்றின் மீது தமது சுவரொட்டிகளை மலையக மக்கள் முன்னணியினர் ஒட்டினார்கள். அதேபோல், ஹட்டன் வெலியோய தோட்டத்தில் துண்டுப் பிரசுரங்களை விநியோகித்த எமது ஆதரவாளர்கள் மீது இ.தொ.கா.வைச்சேர்ந்தவர்கள் தாக்குதல் நடத்த முயற்சி செய்தார்கள். எனது கவனத்திற்கு இச்சம்பவங்கள் கொண்டுவரப்பட்டன. மலையக மக்களின் நன்மை கருதி பொறுமையுடனும் ஜனநாயக உணர்வுடனும் நடந்துகொள்ளும்படி எனது கட்சியினருக்கும் வேட்பாளர்களுக்கும் நான் கூறியிருக்கின்றேன். இன்று ஒரே அரசாங்கத்தில் இருந்துகொண்டு ஒரே அரசாங்க கூட்டணியில் போட்டியிடுகின்றவர்கள் தங்களுக்குள்ளே மோதிக்கொள்கின்றார்கள். இது தொடர்பிலே அரசாங்க தலைமையிடம் முறையீடு செய்யப்போவதாக ஒரு தரப்பினர் கூறுகின்றார்கள். எங்கே முறையிட்டு என்ன பயன்?

மலையக கட்சிகள், வட,கிழக்கு தமிழ்க் கட்சிகள், முஸ்லிம் கட்சிகள் தங்களுக்குள்ளே முட்டிமோதி நாசமாக வேண்டும் என்பதுதானே அரசாங்கத்தின் திட்டம். மலையக மக்கள் அப்பாவிகள்தான் பொறுமைசாலிகள்தான், ஆனால் முட்டாள்கள் அல்ல என்பது தேர்தல் முடிவுகளின் மூலம் நிரூபணமாகும்.

இலங்கைத் தமிழர் படுகொலையை கண்டித்து சென்னை வரும் இந்திய பிரதமருக்கு கறுப்புக்கொடி

இலங்கையில் தமிழ் மக்கள் படுகொலை செய்யப்படுவதை தடுக்க இந்திய மத்திய அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்காமையை கண்டித்து எதிர்வரும் 7 ஆம் திகதி சென்னை வரும் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கறுப்புக் கொடி காட்ட தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழு தீர்மானித்துள்ளது. இது தொடர்பாக தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழுவின் அமைப்பாளர் பழ.நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;

“இலங்கையில் தொடர்ந்து தமிழர்கள் படுகொலை செய்யப்படுவதற்கு எதிராக ஒட்டுமொத்த தமிழகமும் கட்சி வேறுபாடின்றி எழுப்பிய குரலுக்கு இந்திய அரசு செவிசாய்க்கவில்லை. இலங்கையில் உடனடியாகப் போர் நிறுத்தம் செய்யப்படவேண்டுமென்றும் இந்திய அரசு இலங்கை அரசுக்கு ஆயுத உதவி வழங்கக்கூடாது என்றும் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தரப்பினரும் இணைந்து விடுத்த வேண்டுகோளையும் இந்திய அரசு பொருட்படுத்தவில்லை.

இந்த நிலைமையில் எதிர்வரும் 7 ஆம் திகதி சென்னைக்கு வர இருக்கும் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு தமிழர்களின் கடும் எதிர்ப்பைத் தெரிவிக்கும் வகையில் கறுப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடத்துவதென தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழு முடிவு செய்துள்ளது. தமிழர்களின் தன்மானம் காக்கும் இப்போராட்டத்தில் அனைத்துக் கட்சிகளும் தமிழ் அமைப்புகளும் தமிழ் உணர்வாளர்களும் திரளாகக் கலந்துகொள்ளும்படி வேண்டிக்கொள்கிறேன்’

இன்று கொழும்பு புறக்கோட்டையில் குண்டு வெடிப்பு

colo-bomb.jpgகொழும்பு புறக்கோட்டையில் அமைந்துள்ள சிகப்பு பள்ளிவாசலின் அருகில் இன்று இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவத்தில் மூன்று பேர் காயமடைந்துள்ளதாகவும், சுமார் 7 வாகனங்கள் சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இக்குண்டு வெடிப்புச் சம்பவம் இன்று சனிக்கிழமை மாலை 5.10 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவத்தில் காயமடைந்தவர்கள் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளிவாசலின் முன்னால் நிறுத்தப்பட்டிருந்த வாகனத்தில் இந்த நேரகுண்டு
வைக்கப்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது. இவ்வெடிப்புச் சம்பவம் தொடர்பாக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
colombo-bo.jpg

காஸாவில் இஸ்ரேல் நடத்தும் தாக்குதலை கண்டித்து அம்பாறை மாவட்டத்தில் பாரிய ஆர்ப்பாட்டங்கள்

israeli-aircraft.jpg
பாலஸ்தீனின் காஸா பகுதியில் இஸ்ரேல் நடத்திவரும் மிலேச்சத்தனமான வான் தாக்குதல்கள் மூலமான படுகொலைகளைக் கண்டித்து நேற்று வெள்ளிக்கிழமை அம்பாறை மாவட்டத்தில் பாரிய ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றன. நேற்று ஜும்ஆ தொழுகையின் பின் முஸ்லிம் பிரதேசங்களில் இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டங்களில் பெருந்தொகையான முஸ்லிம் மக்கள் உணர்வுபூர்வமாகக் கலந்துகொண்டனர்.

இஸ்ரேல் மீதும், உலக பொலிஸ்காரன் அமெரிக்கா மீதும் மிக உச்சக்கட்ட சீற்றம் கொண்டவர்களாக முஸ்லிம் மக்கள் இந்த ஆர்ப்பாட்டங்களில் தமது உணர்வலைகளை வெளிப்படுத்தினர். பாலஸ்தீன காஸாப் பகுதியில் இஸ்ரேல் மேற்கொள்ளும் மனிதாபிமானமற்ற கொடூர செயல்களையும் தாக்குதல்களையும் முஸ்லிம்கள் மத்தியில் உணர்வுபூர்வமாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நேற்று ஜும்ஆ தொழுகைக்கான குத்பா பிரசங்கங்கள் இடம்பெற்றன.

அதேவேளை, நேற்று ஜும்ஆ தொழுகையின் பின் காஸாவில் இஸ்ரேலின் மிலேச்சத்தனத்தால் உயிர்நீத்த மக்களுக்காக ஜனாஸாத் தொழுகை நிறைவேற்றப்பட்டது. நேற்று சுபஹு தொழுகையின் பின் பாலஸ்தீன காஸா மக்களின் இன்றைய இக்கட்டை நீக்கக்கோரிய விசேட துஆ பிரார்த்தனைகளும் பள்ளிவாசல்களில் இடம்பெற்றன.

நிந்தவூரில்…..

நிந்தவூரில் ஜும்ஆ பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபையின் ஏற்பாட்டில் இது தொடர்பாக இடம்பெற்ற பாரிய ஆர்ப்பாட்டத்தில் பெருந்தொகையான மக்கள் கலந்துகொண்டனர். நிந்தவூர் ஜும்ஆ பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபைத் தலைவர் மௌலவி ஏ.எல். இமாம் தலைமையில், ஜும்ஆ பள்ளிவாசல் முன்பாக காஸா மக்களுக்கு எதிராக இஸ்ரேல் இழைக்கும் மனிதாபிமானமற்ற காட்டுமிராண்டித்தன கொலைவெறியைக் கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. மேலும், மௌலவி இமாம் காஸா மக்களுக்காக விசேட துஆ பிரார்த்தனை நடத்தியதுடன், மரணித்த மக்களுக்காக ஜனாஸாத் தொழுகையையும் நடத்தினார்.

கல்முனைக் குடியில்

இத்தகைய பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று கல்முனைக்குடி ஜும்ஆ பள்ளிவாசல் முன்பாகவும் இடம்பெற்றது. கல்முனைக்குடி முஸ்லிம் ஜனாஸா நலன்புரிச் சங்கம் ஏற்பாடு செய்திருந்த இந்த ஆர்ப்பாட்டத்திலும் பெருந்தொகையான முஸ்லிம் மக்கள் கலந்துகொண்டனர். அமெரிக்க, இஸ்ரேல் எதிர்ப்பு சுலோக அட்டைகளை இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டோர் ஏந்தியிருந்ததுடன், உணர்ச்சிபூர்வமான கோஷங்களையும் எழுப்பினர். அத்துடன், இஸ்ரேல் தேசியக் கொடியும், இஸ்ரேல் பிரமதரின் கொடும்பாவியும் ஆர்ப்பாட்டக்காரர்களால் தீயிட்டுக் கொளுத்தப்பட்டன.

மேலும், அம்பாறை மாவட்டத்தின் வேறு முஸ்லிம் பிரதேசங்களிலும் இஸ்ரேலுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.

தகவல், ஊடக அமைச்சராக தொடர்ந்தும் அநுர யாப்பா

anura-priyatharsana.jpgமுதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பா, ஊடகத்துறை அமைச்சராகவும் தொடர்ந்தும் கடமையாற்றுவார் என தகவல் திணைக்களம் தெரிவிக்கிறது. தகவல் திணைக்களத்தின் தலைவர் அனுஷ பெல்பிட்ட வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பொன்றிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சராக ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்ட அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பா, 5ஆம் திகதி திங்கட்கிழமை கொழும்பு கோட்டையில மைந்துள்ள உலக வர்த்தக நிலையத்தின் 25ஆவது மாடியிலமைந்துள்ள அமைச்சு அலுவலகத்தில் தனது கடமையை பொறுப்பேற்பார். இந்நிகழ்வுக்கு அமைச்சர்களான நிமல் சிறிபால டி சில்வா, சுசில் பிரேம ஜயந்த, மைத்திரிபால சிறிசேன, ஜோன் செனவிரட்ன, டளஸ் அழகப்பெரும, லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன, கலாநிதி சரத் அமுனுகம, மனோ விஜேரட்ன உட்பட பலரும் கலந்துகொள்ளவுள்ளனர்.

முதலீடு ஊக்குவிப்பு அமைச்சராகவிருந்த கலாநிதி சரத் அமுனுகம பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சராக ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி பதவியேற்று குறுகிய காலத்துள் புலிகளின் கட்டமைப்புக்கள் இல்லாதொழிப்பு -அமைச்சர் மைத்திரிபால

maithripala.jpg
ஜனாதிபதி மஹிந்தராஜபக்ஷ பதவிக்கு வரும் போது நாட்டின் இறைமைக்குக் குந்தகம் ஏற்படுத்தும் வகையில் புலிகள் இயக்கத்தினர் கொண்டிருந்த சகல நிர்வாகக் கட்டமைப்பும் குறுகிய காலத்திற்குள் துடைத்தெறியப்ப ட்டிருப்பதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். பாதுகாப்புப் படையினர் புலிகள் இயக்கத்தினரை முழுமையாகத் தோற்கடிப்பதற்காக மேற்கொண்டுவரும் மனிதாபிமான நடவடிக்கைகளுக்கு நாட்டு மக்கள் இருதயபூர்வமாக ஆதரவு நல்கி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மத்திய மற்றும் வடமேல் மாகாண சபைகளுக்கான ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் முதலாவது பிரசார செய்தியாளர் மாநாடு கொழும்பு – 7லுள்ள மகாவலி நிலையத்தில் (01) நடைபெற்றது. இச்செய்தியாளர் மாநாட்டிற்குத் தலைமை தாங்கி உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.  இச் செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் மேலும் குறிப்பிடுகையில் :-

2005ம் ஆண்டில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாகப் பதவியேற்கும் போது இலங்கையின் இறைமைக்கு குந்தகம் ஏற்படுத்தும் வகையில் புலிகள் இயக்கத்தினர் தனியான நீதி, நிர்வாகக் கட்டமைப்பைக் கொண்டிருந்தனர். அவர்கள் வங்கிகளை நடத்தினர்.  நீதி மன்றங்களையும், பொலிஸ் துறையையும் கொண்டிருந்தனர். அவர்களது அனைத்து நீதி, நிர்வாகக் கட்டமைப்புக்களும் ஜனாதிபதி பதவிக்கு வந்த குறுகிய காலத்திற்குள் முற்றாகத் துடைத்தெறியப்பட்டிருக்கின்றன. போட்டு பிரிக்கப்பட்டிருந்தது. அப்படியிருந்த நாட்டையும் எமது ஜனாதிபதி தான் குறுகிய காலத்தில் ஒன்றுபடுத்தினார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அளித்துவரும் சிறந்த தலைமைத்துவத்தின் பயனாக பயங்கரவாதத்தை முற்றாக ஒழித்துக்கட்டக் கூடிய வாய்ப்பு கிடைக்கப் பெற்றிருக்கிறது. அதேநேரம் வரலாற்றுச் சிறப்புமிக்க பல வெற்றிகளையும் இக்காலப் பகுதியிலேயே இந்நாடு அடைந்தும் இருக்கிறது என்றார்.

கிலி’ வீழலாம். ஆனால் புலி வீழ மாட்டார்கள் – கவிஞர் வைரமுத்து

vairamuthu.jpg
இன்றைக்கு கிளிநொச்சி வீழ்ந்துவிட்டது என்ற செய்தி வருகிறது. நெஞ்சில் இடி விழுகிறது. ஒரு தமிழன், தமிழ் சகோதரி அங்கு அடிபடுகிற போது, எனக்கு குளிப்பதற்கோ, உண்பதற்கோ, சிரிப்பதற்கோ தோன்றவில்லை.

கிளிநொச்சி வீழலாம். கிலி’ வீழலாம். ஆனால் புலி வீழ மாட்டார்கள். அவனும் சேர்த்து தான் தமிழர். அவன் நம் ரத்தத்தின் நீட்சி. அவனை இழப்பதற்கு நாம் தயாராக முடியாது. 

நாங்கள் போர் நிறுத்தம் வேண்டும் என்று கேட்கிறோம். பிரணாப் முகர்ஜி இலங்கைக்கு செல்ல வேண்டும் என்று கேட்டுக்கொண்டோம். அங்கே போர்முனைக்கு செல்லுமாறு வேண்டிக்கொண்டோம். இன்னும் காலம் கடந்துவிடவில்லை.

இலங்கையில் போர்நிறுத்தத்தை எவ்வளவு வலியுறுத்துகிறோமோ அதைப் போல இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் போர் வந்துவிடக்கூடாது என்பதும் முக்கியம். பொருளாதார சீரழிவு வந்து கொண்டிருக்கும் நேரத்தில் இன்னொரு யுத்தத்தை உலகம் தாங்காது. பாகிஸ்தானில் தீவிரவாத முகாம்கள் ஒழிக்கப்படவேண்டும். போர் மூலம்தான் அது நிறைவேற்றப்பட வேண்டும் என்பதில் எனக்கு உடன்பாடில்லை என்றார்.

மாலைதீவு ஜனாதிபதி வருகை: விமான நிலையத்தில் செங்கம்பள வரவேற்பு

naseed-mahi.jpg
உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இலங்கை வந்த மாலைதீவு புதிய ஜனாதிபதி மொஹமட் அன்னி நஸீதை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று விமான நிலையத்தில் வரவேற்றார். கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை நேற்றுக் காலை விசேட விமானம் மூலம் வந்தடைந்த மாலைதீவு ஜனாதிபதிக்கு விமான நிலையத்தில் செங்கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. மாலைதீவு ஜனாதிபதியும், அவரது பாரியாரும் விமானத்திலிருந்து இறங்கியதும் சிறார்களால் மலர் மாலை அணிவிக்கப்பட்டதுடன், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் அவரது பாரியார் சிரந்தி ராஜபக்ஷவும் கைலாகு செய்து, ஆரத்தழுவி வரவேற்றனர்.

பாரம்பரிய முறையில் மங்கள வாத்தியங்களுடன் வரவேற்று அழைத்துச் செல்லப்பட்ட மாலைதீவு ஜனாதிபதி விமான நிலையத்தில் இராணுவத்தினரால் வழங்கப்பட்ட மரியாதை அணிவகுப்பையும் ஏற்றுக் கொண்டார். அதனைத் தொடர்ந்து விமான நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த விசேட பிரமுகர்களுக்கான புத்தகத்திலும் அவர் கையொப்பமிட்டார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ அழைப்பை ஏற்று இரண்டு நாள் விஜயத்தை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள மாலைதீவு ஜனாதிபதியுடன் அந்நாட்டு அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் உள்ளிட்ட 25 பேர் கொண்ட தூதுக்குழுவினரும் வருகை தந்துள்ளனர்.

மொஹமட் அன்னி நஸீத் ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் இலங்கைக்கான முதலாவது விஜயம் இதுவாகும். 2009 ஆம் ஆண்டு புத்தாண்டு பிறந்த பின்னர் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்ட முதலாவது ஜனாதிபதியாவார். நேற்றுப் பிற்பகல் வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகமவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

அதேவேளை, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும், மாலைதீவு ஜனாதிபதி மொஹமட் நஸீத்துக்கும் இடையிலான இரு தரப்பு சந்திப்பு நேற்றுப் பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது. இரு நாட்டு உறவுகளை மேலும் மேம்படுத்துதல் தொடர்பாகவும் பல்வேறு முக்கிய விடயங்கள் தொடர்பாகவும் இந்த சந்திப்பின் போது இரு நாட்டு தலைவர்கள் விரிவாக ஆராந்துள்ளனர்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று இரவு மாலைதீவு ஜனாதிபதிக்கு விசேட இரவு விருந்துபசாரமொன்றையும் வழங்கினார். இது ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்றது. நாளை வரை தங்கியிருக்கும் மாலைதீவு ஜனாதிபதி பிரதமர் ரத்னசிறி விக்ரமநாயக்க அமைச்சர் மஹிந்த யாப்பா அபேவர்தன உட்பட முக்கியஸ்தர்கள் பலரையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.

“மிட்டாய்’ காட்டி புத்தாண்டில் வாக்குக் கொள்ளைக்கு தயாராகிறது அரசு -ஐ.தே.க.

unp-logo1.jpg
உயர்நீதிமன்ற உத்தரவுக்கு அடிபணிய மறுக்கும் அரசாங்கம் 2009 ஆம் வருடத்திலும் நாட்டு மக்களை ஏமாற்றிவிட முயற்சிப்பதாகத் தெரிவித்திருக்கும் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி மிட்டாய்களை காட்டி பிறக்கும் புதிய வருடத்தில் வாக்குக் கொள்ளையொன்றுக்கு அரசு தயாராகி வருவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளது. எதிர்க்கட்சியின் பக்கம் மக்கள் அணிதிரள்வதைக் கண்டு அரசு அச்சம் கொண்ட நிலையிலேயே திடீரென மக்களை கனவுலகுக்கு அழைத்துச் செல்லும் நாடகத்தை அரங்கேற்றியிருப்பதாகவும் ஐக்கிய தேசியக் கட்சி குறிப்பிட்டிருக்கின்றது. எதிர்க்கட்சித் தலைவரின் உத்தியோக பூர்வ வாசஸ்தலமான கேம்ப்ரிட்ஜ் ரெரஸில் புதன்கிழமை இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் மாநாட்டில் ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடகப் பேச்சாளரான காலி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக்க மேற்கண்ட தகவல்களை வெளியிட்டார்.

செய்தியாளர் மாநாட்டில் அவர் மேலும் விளக்கமளிக்கையில் கூறியதாவது; அரசாங்கம் திடுதிப்பென்று “மினி பட்ஜட்’ போன்ற ஒன்றை அறிவித்துள்ளது. இதன் மூலம் பெரும் நிவாரணப் பொதியை நாட்டு மக்களுக்குப் பெற்றுக் கொடுத்திருப்பதாக கூப்பாடு போடுகின்றது. நேற்று முன்தினமிரவு அரச ஊடகங்கள் “பிரேக்கிங் நியூஸ்’ அடிக்கடி வெளியிட்டன. அவசர அமைச்சரவைக் கூட்டம் கூட்டப்பட்டதும் அனைவரும் எதிர்பார்த்தது படையினர் கிளிநொச்சியை பிடித்துவிட்டதோ அல்லது பிரபாகரன் கைது செய்யப்பட்டுவிட்டாரோ என்பதைத்தான். அந்தளவுக்கு போர் முனையின் வேகம் இருப்பதாக அரசு தென்னிலங்கை மக்கள் மத்தியில் பிரசாரம் செய்து வருவதால்தான் மக்கள் இப்படியான செய்தியை எதிர்பார்த்தனர். ஆனால் நடந்திருப்பது சிறிய மிட்டாய் பொதியை காட்டி மக்களை மீண்டுமொரு தடவை ஏமாற்றியிருப்பதுதான்.

உலக சந்தையில் எரிபொருட்களின் விலைகள் நாளாந்தம் குறைந்து கொண்டிருக்கும் நிலையில் அரசாங்கம் அதனைக் கண்டு கொள்ளவே தவறியுள்ளது. அரசின் கண்களைத் திறக்கும் வகையில் உயர்நீதிமன்றம் அண்மையில் பெற்றோலின் விலையை நூறு ரூபாவாக குறைக்குமாறு உத்தரவிட்டது. நீதிமன்றத்தின் உத்தரவுக்கு அடிபணிய மறுத்துவரும் அரசாங்கம் மக்களை தவறான திசைக்கு திருப்பிவிடும் ஒரு முயற்சியில் இறங்கியுள்ளது. பிறக்கும் 2009 ஆம் ஆண்டு ஒரு தேர்தல் ஆண்டாக எதிர்பார்க்கப்படுவதால் மேலும் பல தேர்தல் வாக்குறுதிகளையும் சின்ன சலுகைகளையும் நிறையவே அளிக்கத் தயாராகி வருகின்றது.

உயர்நீதிமன்றத்துடன் மோத முடியாத நிலையில் அரசு ஐக்கிய தேசியக் கட்சி மீது சேறுபூசும் நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது. இன்று அரசு வழங்க முன்வந்திருப்பது வெறும் கண்துடைப்பு நிவாரணங்களையே ஆகும். பெற்றோலுக்கு இரண்டு ரூபாவும் டீசல், மண்ணெண்ணெய் ஆகியவற்றுக்கு 10 ரூபாவும் குறைப்பதாகக் கூறி அதனை பெரிய சாதனையாக்க முயற்சிக்கின்றது. உலக சந்தை விலைக்கேற்ப இன்று பெற்றோல் ஒரு லீற்றர் 55 ரூபாவுக்கும் டீசல் 32 ரூபாவுக்கும் மண்ணெண்ணெய் 26 ரூபாவுக்கும் வழக்க முடியும். அதனை அரசு ஒருபோதும் செய்யப்போவதில்லை. சமையல் எரிவாயுவைக் கூட ஒரு சிலிண்டரை 550 ரூபாவுக்கு வழங்க முடியும். இன்று மசகு எண்ணெயின் உலக சந்தை விலை 109 டொலருக்கும் குறைவாகவே காணப்படுகின்றது. இந்த நிலையிலும் சமையல் எரிவாயுவின் விலை இன்று இரண்டு மடங்குக்கும் கூடுதலாக உள்ளது. அரசாங்கம் அழுகின்ற பிள்ளைக்கு மீட்டாய் காட்டி ஏமாற்றப்பார்க்கின்றது.

அரசிடம் நாம் கேட்பது நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றுங்கள் இல்லாவிட்டால் மக்கள் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லத் தயங்கமாட்டோம். மக்களின் அடிப்படை உரிமைகளை வென்று கொடுப்பதில் ஐக்கிய தேசியக் கட்சி உறுதியுடன் செயற்படும். எதிர்க்கட்சி பலமடைந்து மக்கள் சக்தியாக மாறி வருவதைக் கண்டு அச்சம் கொண்ட நிலையிலேயே அரசு அவசர அமைச்சரவைக் கூட்டத்தைக் கூட்டி நாட்டு மக்களை ஏமாற்றும் நாடகத்தை மேடையேற்றியுள்ளது எனவும் ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.

மீண்டும் பொலிஸ் பதிவு

check1.jpg
தலைநகர் கொழும்பு உட்பட மேல் மாகாணத்தில் தங்கியிருக்கும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த அனைவரும் எதிர்வரும் 4 ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை மீண்டும் பொலிஸ் பதிவிற்குட்படுத்தப்படவிருப்பதாக பொலிஸ் தலைமையகம் வியாழக்கிழமை அறிவித்திருக்கிறது. வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலிருந்து 2003 ஆம் ஆண்டுக்குப் பின்னர் மேல் மாகாணத்திற்கு வந்து நிரந்தரமாகவோ அல்லது தற்காலிகமாகவோ தங்கியிருப்பவர்களே நாளை ஞாயிற்றுக்கிழமை இவ்வாறு கணக்கெடுப்புக்கு உட்படுத்தப் படவிருப்பதாக பொலிஸ் தலைமையகத்தினால் விடுக்கப்பட்டிருக்கும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இதன் போது, இதற்கு முன்னர் பதியப்பட்டவர்கள் என அனைவரும் மீண்டும் பதிவு செய்து கொள்ள வேண்டுமென்றும் பொலிஸ் தலைமையகம் வலியுறுத்தியிருக்கிறது. எதிர்வரும் 4 ஆம் திகதி காலை 8 மணி முதல் மாலை 6 மணிவரை மேல் மாகாண பொலிஸ் பிரிவுகளில் இந்தப் பதிவு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன. எனவே, மேல் மாகாணத்தில் நிரந்தரமாகவோ அல்லது, தற்காலிகமாகவோ தங்கியிருக்கும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்தவர்கள், அருகிலுள்ள பொலிஸ் நிலையங்களால் கணக்கெடுப்புகள் மேற்கொள்ளப்படும் நிலையங்களுக்குச் சென்று தங்களைப் பதிவு செய்து கொள்ளுமாறு அனைவரிடமும் கேட்டுக் கொள்வதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்திருக்கிறது.

இதேநேரம், ஏற்கனவே பொலிஸாரால் நடத்தப்பட்ட கணக்கெடுப்பு நடவடிக்கைகளின் போது கலந்து கொண்ட நிலையங்களுக்கே இம்முறையும் சென்று, பதிவு செய்து கொள்ளுமாறும், பதிவு செய்து கொள்ள வருபவர்கள் அடையாளங்களை உறுதிப்படுத்தும் ஆவணங்களை உடன் எடுத்து வருமாறும் கோரப்பட்டுள்ளனர். அத்துடன் இந்தக் கணக்கெடுப்பு நடவடிக்கையானது மக்கள் பாதுகாப்புக் குழு பிரதிநிதிகளின் ஒத்துழைப்புடன் மேற்கொள்ளப்படவிருப்பதால், சகல பாதுகாப்பு குழு அங்கத்தவர்களும் மேற்குறித்த தினத்தில் உரிய நேரத்தில் சம்பந்தப்பட்ட நிலையங்களுக்கு வந்து இந்த நடவடிக்கைகளை சிக்கலின்றி நிறைவு செய்து கொள்ள அதிகப்பட்ச ஒத்துழைப்புகளை வழங்குமாறும் பொலிஸ் தலைமையகம் கேட்டுள்ளது.

இதேவேளை, ஏற்கனவே வடக்கு மாகாணத்திலிருந்து, மேல் மாகாணம் வந்து தங்கியிருப்பவர்கள் கடந்த செப்டெம்பர் மாதம் 21 ஆம் திகதியும், கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் கடந்த ஒக்டோபர் மாதம் 5 ஆம் திகதியும் தனித்தனியாக பொலிஸாரினால் பதிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இதன் போது, பதிவு செய்தவர்களும் எதிர்வரும் 4 ஆம் திகதி மீண்டும் கணக்கெடுப்பில் கலந்துகொண்டு பதிவு செய்து கொள்ளவேண்டுமென்றே பொலிஸ் தலைமையகம் சுட்டிக்காட்டியுள்ளது.