செய்திகள்

செய்திகள்

செய்திகள்

தனியார்மயமக்கலுக்கு தடை: தனியார் மருத்துவ கல்லூரி வைத்தியர்களுக்கு பயிற்சிக்கு அனுமதி மறுப்பு ! 

தனியார்மயமக்கலுக்கு தடை: தனியார் மருத்துவ கல்லூரி வைத்தியர்களுக்கு பயிற்சிக்கு அனுமதி மறுப்பு !

 

தனியார் மருத்துவக் கல்லூரிகளின் மருத்துவப் பயிற்சிக்காக சில அரச வைத்தியசாலைகளை வழங்குவதற்கு எடுக்கப்பட்ட தீர்மானத்தை இரத்துச்செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சுகாதார மற்றும் ஊடக அமைச்சு தெரிவித்துள்ளது.

சிலாபம் ஆதார வைத்தியசாலை, சீதுவ விஜய குமாரதுங்க ஞாபகார்த்த வைத்தியசாலை உள்ளிட்ட சில வைத்தியசாலைகளில் தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு மருத்துவப் பயிற்சிகளை வழங்குவதற்கு கடந்த அரசாங்க காலத்தில் தீர்மானிக்கப்பட்டது.

இந்நிலையில், கடந்த அரசாங்கத்தினால் எடுக்கப்பட்ட அமைச்சரவை தீர்மானம் இரத்து செய்யப்பட்டுள்ளதாக பிரதி அமைச்சர் டொக்டர் ஹன்சக விஜயமுனி குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் தனியார் மருத்துவக் கல்லூரிகளை நிறுவுவதற்கு அரசாங்கம் தற்போது எந்தத் தீர்மானத்தையும் எடுக்கவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தனியார் மயமாக்கல் தங்களுடைய முதல் தெரிவு இல்லை என்பதையும் நட்டத்தில் இயங்குகின்ற நிறுவனங்களையும் அதன் முகாமைத்துவம் மற்றும் விடயங்களை ஆராய்ந்து அவற்றை இலாபகரமாக இயங்க வைக்க முடியாமா என்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு அதன் பின்னரே இரண்டாவது கட்டமாக தனியாரிடம் ஒப்படைப்பது பற்றி முடிவெடுக்கப்படும் என அரசு அறிவித்து இருந்தது. தற்போது கைவிடப்பட்ட தொழிற்சாலைகளைக் கூட பொதுச்சேவைகள் – தனியார் இணைந்த முதலீடுகளுடாகவே மீளக்கட்டி எழுப்புவதற்கு அரசு திட்டமிட்டு வருகின்றது.

GovPay – கடைக்கோடி கிராமங்கள் வரை ஜனாதிபதி நிதியத்துடன் இணைக்கப்பட வேண்டும் !

GovPay – கடைக்கோடி கிராமங்கள் வரை ஜனாதிபதி நிதியத்துடன் இணைக்கப்பட வேண்டும் !

 

டிஜிட்டல் சமூகத்தை நோக்கி நாட்டை நகர்த்தும் வேலைத்திட்டத்தின் ஊடாக மூன்று பிரதான டிஜிட்டல் வசதிகள், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அதன்படி அரச டிஜிட்டல் கொடுப்பனவு தளமொன்றை உருவாக்குதல் (GovPay), ஜனாதிபதி நிதியத்தின் சேவைகளை பிரதேச செயலக மட்டத்திற்கு கொண்டுச் செல்லல், தூதரகங்களிலிருந்து பிறப்பு, திருமணம் மற்றும் இறப்பு (eBMD) சான்றிதழ்களை மென்பொருள் மூலம் பெற்றுக் கொள்ளல் என்பன மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள, அதேவேளை எதிர்காலத்தில் சகல அரச நிறுவனங்களையும் இதனுடன் இணைக்க எதிர்பார்க்கப்படுவதோடு ஏற்கெனவே 12 அரச மற்றும் தனியார் வங்கிகள் இதில் இணைந்துள்ளன.

குறித்த நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, ஜனாதிபதி நிதியத்தின் பணிகள் இதுவரை காலமும் கொழும்பில் இருந்தே செயற்படுகின்றன. அதனால் தூர பிரதேசங்களில் உள்ள பிரஜைகள் பல சிரமங்களை எதிர்நோக்க வேண்டியிருக்கிறது. இந்த நிலையை மாற்றுவதே நமது நோக்கம். டிஜிட்டல் மயமாக்கல் மூலமாக நகரமும் கிராமமும் ஒன்றிணைந்துள்ளதால், கிராமிய வறுமையை ஒழிப்பதற்கும், பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கும் டிஜிட்டல் மயமாக்கல் மிகவும் அவசியமானது எனவும் சுட்டிக்காட்டினார்.

இது தொடர்பில் கருத்து வெளியிட்ட வடமாகாண புத்திஜீவிகள் அமைப்பின் இணைப்பாளாளர் அருள்கோகிலன் 21ம் நூற்றாண்டில் இலங்கை டிஜிற்றல் யுகத்தில் எவ்வாறு கால் பதிக்ககும் என்பதை விளக்குவதுடன் ஜனாதிபதி அனுரா அந்த அமைச்சை தன்பொறுப்பில் எடுத்துக் கொண்டதன் மூலம் அதன் முக்கியத்தவத்தை கோடிட்டுக் காட்டுவதாகவும் தெரிவித்தார்.

இத்திட்டம் வெற்றியடைய வேண்டும் என்றும், டிஜிட்டல் அடையாள அட்டை இதன் முக்கிய திருப்புமுனையாக அமையும் என்றும் சுட்டிக்காட்டினார் ஜனாதிபதி அனுர

 ‘நல்லமா நல்லமா’ – ட்ரெட்ன்டிங்கில் சாமர சம்பத் 

‘நல்லமா நல்லமா’ – ட்ரெட்ன்டிங்கில் சாமர சம்பத்

 

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க யாழ்ப்பாணத்தில் வைத்து, மக்களிடம் ‘நல்லமா, நல்லமா’ எனக் கூறியதை நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க பாராளுமன்றத்தில் கிண்டலடித்த காணொலி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

நேற்று முன்தினம் இடம்பெற்ற பாராளுமன்ற அமர்வில், “நீங்கள் சம்பந்தப்பட்டுள்ள மோசடிகள் குறித்த கோப்புகள் எங்களிடம் உள்ளன, நாங்கள் அனைத்தையும் விசாரிப்போம்” என்று அமைச்சர் வித்யாரத்ன கூறினார்.

“சுதந்திர தின கொண்டாட்டத்தின் போது நீங்களும் அரசாங்க அமைச்சர்களும் பொது நிதியை வீணடித்து முந்திரி பருப்பை சாப்பிட்டது பற்றி தான் இப்போது மக்கள் பேசுகின்றனர். நீங்கள் என் மீது சட்ட நடவடிக்கை எடுக்கலாம். நான் பயப்படவில்லை” என்று எம்.பி. சாமர சம்பத் கூறினார்.

மேலும் , வடக்கு மக்களின் நல்வாழ்வு குறித்து விசாரிக்க ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவுக்கு எப்படி தைரியம் வந்தது… ?

“அரிசி இல்லை, உப்பு இல்லை, இப்படி அரசாங்கம் அடிப்படைத் தேவைகளை வழங்கத் தவறியபோது, வடக்கு மக்களிடம் எல்லாம் நன்றாக இருக்கிறதா என்று ஜனாதிபதி எப்படிக் கேட்க முடியும்..? இந்த அரசாங்கத்தின் உறுப்பினர்கள் எவ்வளவு அதிகமாகப் பேசுகிறார்களோ, அவ்வளவு அதிகமாக வாக்குகளை இழக்க நேரிடும் என்று தசநாயக்க கூறினார்.

நல்லமா நல்லமா என நளினத்துடன் சாமர சம்பத் தசநாயக்க கூறியது தற்போது பலராலும் பகிரப்பட்டு வருகின்றது.

59 இலங்கையர், ரஷ்ய இராணுவத்தில் உயிரிழப்பு! இன்னமும் 500 பேர் யுத்தத்தில் !

59 இலங்கையர், ரஷ்ய இராணுவத்தில் உயிரிழப்பு! இன்னமும் 500 பேர் யுத்தத்தில் !

 

ஜனவரி 20ஆம் திகதி வரையில் சேகரிக்கப்பட்ட தகவல்களின்படி ரஷ்ய இராணுவத்தில் 554 இலங்கையர்கள் இணைந்துள்ளனர். அவர்களில் 59 பேர் உக்ரைன் போர்முனையில் கொல்லப்பட்டுள்ளனர் என வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் பாராளுமன்றில் நேற்றுத் தெரிவித்தார்.

ரஷ்ய இராணுவத்தில் இணைக்கப்பட்ட இலங்கையர்களின் நிலை தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறீதரன் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இலங்கையர்கள் வலுக்கட்டாயமாக ரஷ்ய இராணுவத்தில் இணைக்கப்பட்டமை தொடர்பில் எந்தத் தகவலும் கிடைக்கப்பெறவில்லை என்றும் நாட்டிலுள்ள உறவினர்களுடன் அவர்கள் தொடர்பைப் பேணுவதற்குத் தேவையான வசதிகளை ஏற்படுத்தி கொடுக்குமாறு ரஷ்யாவில் உள்ள இலங்கைத் தூதரகத்திற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

ரஷ்ய இராணுவத்தில் இணைந்தவர்களில் பெரும்பாலானோர் முன்னாள் இராணுவ வீரர்கள் எனவும் அவர்கள் அதிக சம்பளம் தரப்படும் எனக் கூறி இணைக்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ரஷ்ய கூலிப்படை நிறுவனங்களுக்கு சட்டவிரோதமாக ஆட்சேர்ப்பு முகவர்களாக செயல்பட்டதற்காக ஓய்வுபெற்ற இரண்டு ஜெனரல்கள் மற்றும் ஆறு பேரை இலங்கை பொலிசார் கடந்த ஆண்டு கைது செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது

மேலும் இஸ்ரேல் இராணுவத்திலும் இலங்கை இந்திய முன்னாள் இராணுவத்தினர் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர். தனியார் மயமாக்கலின் மற்றுமொருகட்டமாக இராணுவத்தை வெளியேயிருந்து எடுக்கும் நவகாலனித்துவச் சிந்தனை எதிர்காலத்தில் மேலும் அதிகரிக்க உள்ளது. மேற்கு நாடுகள் தங்கள் நலனுக்காக தங்களுடைய படைகளை இறக்காமல் கூலிப்படைகளைக் களமிறக்கி யுத்தத்தை நடாத்தும் கைங்கரியம் வரும்காலங்களில் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. மேலும் பயிற்றப்பட்ட இந்தக் கூலிப் படைகள் நாட்டிற்குத் திரும்பி வருகின்ற போது அவர்கள் வன்முறையாளர்களாகவும் சர்வதேசத்தின் புலனாய்வு முகவர்களாகவும் சொந்த நாட்டிற்கு எதிராக சதி செய்பவர்களாகப் பயன்படுத்துவதற்கான வாய்ப்புகளும் அதிகம் உண்டு. இவை பற்றிய சட்டமூலங்கள் இயற்றப்படுவதுடன் இவர்கள் பற்றிய விபரங்களையும் அரசு உன்னிப்பாக அவதானிக்க வேண்டும்.

அர்ச்சுனா – கஜேந்திரகுமார் – தமிழ்தேசியம் ஆய்வாளர் வி சிவலிங்கத்துடனான நேர்காணல்

அர்ச்சுனா – கஜேந்திரகுமார் – தமிழ்தேசியம்

ஆய்வாளர் வி சிவலிங்கத்துடனான நேர்காணல்

 

 

தையிட்டி விகாரையை மையப்படுத்தி மேற்கொள்ளப்படும் அரசியல் நகர்வுகள்..? பா.உ அர்ச்சுனாவின் பாராளுமன்ற நடவடிக்கைகள் தொடர்பிலான அதிருப்தி, பா.உ கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் ஜனநாயக விரோத கட்சி நடைமுறை, சுகாஸ் போன்றோரின் உசுப்பேற்றும் அரசியல், மீண்டும் பாசிச பாதையில் பயணிக்க ஆரம்பித்துள்ள தமிழ்தேசியத்தின் எதிர்காலம் என்ன..? என பல விடயங்களை தேசம் ஜெயபாலனுடன் கலந்துரையாடுகிறார் மூத்த அரசியல் ஆய்வாளர் சிவலிங்கம்!

 

“யாழ் பல்கலையில் தேசியக் கொடியை இறக்கி கறுப்புக்கொடி ஏற்றியவர்கள் கைது செய்யப்பட வேண்டும்” மொட்டு பா உ சரத் வீரசேகர

“யாழ் பல்கலையில் தேசியக் கொடியை இறக்கி கறுப்புக்கொடி ஏற்றியவர்கள் கைது செய்யப்பட வேண்டும்” மொட்டு பா உ சரத் வீரசேகர

யாழ். பல்கலைக்கழகத்தில் தேசியக் கொடியை கீழே இறக்கி கறுப்புக் கொடியை ஏற்றிய சம்பவம் தொடர்பில் பல்கலைக்கழக நிர்வாகம் பொறுப்புக்கூற வேண்டும் எனவும் உரிய தரப்பினருக்கு எதிராக அரசாங்கம் கடுமையான சட்ட நடவடிக்கை முன்னெடுக்க வேண்டும் என பொதுஜன பெரமுனவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர வலியுறுத்தியுள்ளார். கொழும்பில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தேசியக் கொடியை கீழே இறக்கி அங்கு கறுப்புக்கொடியேற்றியமை நாட்டுக்கு மாத்திரமல்ல ஆங்கிலேயர்களிடமிருந்து நாட்டை மீட்க போராடிய இராணுவ வீரர்களுக்கு செய்யும் அகௌரவமாகும். வக்கிர குணம் உள்ளவர்களால் மாத்திரமே இவ்வாறு நடந்துகொள்ள முடியும்.

யாழ். பல்கலைக்கழகம் ஏனைய பல்கலைக்கழகங்களை போன்று இந்த நாட்டு மக்களின் வரிப்பணத்தில் இயங்கிக்கொண்டிருக்கிறது. எனவே இவ்வாறு நடந்துகொண்டவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இதற்கு அனுமதி அளித்தமை தொடர்பில் யாழ். பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் மற்றும் அதன் நிர்வாகம் பொறுப்புக்கூற வேண்டும். விடயத்துடன் தொடர்புடையவர்கள் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும் என்றார்.

தொடரும் தையிட்டி விகாரை அரசியல்: கட்ட விட்டு கூத்துப் போடும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி !

தொடரும் தையிட்டி விகாரை அரசியல்: கட்ட விட்டு கூத்துப் போடும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி !

 

தையிட்டி விகாரையை தற்போதுள்ள இடத்தில் கட்டியது சட்டவிரோதமானது என நயினாதீவு விகாராதிபதி தெரிவித்துள்ளார். விகாரைக்கு என்று ஒதுக்கப்பட்ட காணயில் விகாரை கட்டப்பட்டிருந்தால் அந்த விகாரை தன்னுடைய கட்டுப்பாட்டில் வந்துவிடும் என்பதால் இராணுவம் தற்போதுள்ள இடத்தில் விகாரையை வலிந்து கட்டியதாக நயினாதீவு விகாராதிபதி யூரியூப்பர் பவனீசனுக்கு வழங்கிய காணொலியில் தெரிவித்துள்ளார்.

விகாரை கட்ட ஆரம்பித்தது முதல் நயினாதீவு விகாராதிபதி அதற்குக் கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்து வந்தார். ஆனாலும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி உட்பட்ட தமிழ் தேசியத்தை உச்சத்தொனியில் பேசிய எவரும் அதற்கு எதிராக விகாராதிபதியோடு தோள் கொடுத்துப் போராட முன்வரவில்லை. மாறாக விகாரையின் அங்குரார்ப்பண வைபவத்துக்கு தமிழ் தேசியக் கட்சிகளுக்கும் அமைப்பு விடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தற்போது விகாரை கட்டி முடிக்கப்பட்ட நிலையில் அதனை இடிக்கக் கோரி இனக்கலவரம் ஒன்றை எதிர்பார்த்து நிற்கின்றது தமிழ் தேசியம். காணி உரிமையாளர்களை நிவாரணத்தை ஏற்றுக்கொள்ள வேண்டாம் என அழுத்தங்கள் வழங்கபடுகின்றது. அப்படி நிவாரணங்களை ஏற்றுக்கொள்ளும் காணி உரிமையாளர்களை துரோகிகளாகக் காட்டவும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றது. வல்வெட்டித்துறையில் ஜனாதிபதி அனுரவின் கூட்டத்திற்கு சென்ற மக்களைத் துரோகிகள் என்கின்றனர், பா உ அர்ச்சுனாவுக்கு வாக்களித்த மக்களை தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் சட்டத்தரணி கிட்டத்தட்ட துரோகி என்றே சொல்கின்றார். தமிழ் தேசியம் தற்போது துரோகிப்பட்டம் வழங்க ஆளில்லாமல் சொந்த மக்களுக்கே துரோகிப்பட்டம் வழங்குகின்றது.

காணி உரிமையாளர்கள் விரும்பாத எந்தவொரு தீர்வும் திணிக்கப்படாது என காணி உரிமைக்கான மக்கள் கூட்டமைப்பினருடன் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலில் ஆளுநர் நா.வேதநாயகன் உறுதியளித்துள்ளார்.

சந்திப்பில் கலந்து கொண்டிருந்த காணி உரிமைக்கான மக்கள் கூட்டமைப்பினர், ‘யாழ்ப்பாணத்தில் வலி. வடக்கில் முன்னைய ஜனாதிபதியின் காலத்தில் 243 ஏக்கர் காணி விடுவிக்கப்பட்டிருந்தது. அந்தக் காணியை விவசாயக் காணி என்று தவறாக அடையாளப்படுத்துகின்றனர். அது மக்களின் குடியிருப்புக் காணி. அந்தப் பகுதியிலுள்ள இராணுவ முகாமும் இன்னமும் அகற்றப்படவில்லை. மக்கள் குடியிருக்கவும் அனுமதிக்கப்படவில்லை. ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க கலந்து கொண்ட மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்திலும் வலி. வடக்கில் இன்னமும் மீள்குடியமர வேண்டியவர்களின் எண்ணிக்கை தொடர்பில் தவறான தகவல் வழங்கப்பட்டுள்ளது. எமது காணிகளில் பாதுகாப்புத் தரப்பினர் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர். இப்போதும் எமது காணிகளுக்குள் பாதுகாப்புத் தரப்பினர் புதிய கட்டடங்களை அமைக்கின்றனர். பலாலி வீதியில், இன்னமும் மூன்று கிலோ மீற்றர்கள் விடுவிக்கப்பட்டாலே மக்களுக்கு முழுமையான நன்மை கிடைக்கும். விமான நிலையத்துக்கு மேலதிகமாக காணிகள் சுவீகரிக்கப்படத் தேவையில்லை. ஏற்கனவே சுவீகரித்த காணிகளே போதுமானது’ என ஆளுநருக்கு சுட்டிக்காட்டினர்.

அதேபோன்று தையிட்டி திஸ்ஸவிகாரை சட்டவிரோதக் கட்டடம் எனவும் விகாரைக்கு உரியதான காணியை மாற்றுக் காணியாக வழங்கினாலும் அது தொடர்பிலும் சந்தேகம் இருப்பதாகவும் காணி உரிமையாளர்கள் தெரித்தனர்.

இதன்போது கருத்து வெளியிட்ட ஆளுநர், இடம்பெயர்ந்த மக்களின் வலி – வேதனை எனக்குத் தெரியும். காணி என்பது தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் உணர்வுபூர்வமான விடயம். மீள்குடியமர்வுக்கான நடவடிக்கைகள் தொடர்பில் தொடர்ந்து பேச்சுக்களை நடத்தி வருகின்றேன். அரசாங்கமும் அந்த விடயத்தில் நேரான சிந்தனையில்தான் உள்ளது. படிப்படியாக காணிகளை விடுவிக்க என்னாலான அனைத்து முயற்சிகளையும் எடுப்பேன். காணி உரிமையாளர்களின் கோரிக்கைக்கு மாறாக நான் நடந்து கொள்ளமாட்டேன். காணி உரிமையாளர்கள் விரும்பாத எந்தவொரு தீர்வையும் திணிப்பதற்கும் நான் தயாரில்லை. அதிகாரிகளும் சில இடங்களில் தவறிழைத்துள்ளனர் என்றார்.

மேலும், மாவட்டச் செயலராக 4 மாவட்டங்களில் பதவி வகித்தவன் என்ற அடிப்படையில் பாதுகாப்புத் தரப்பினர் வசம் உள்ள காணிகள் தொடர்பான விவரங்கள் தெரியும் என்றும் அதனடிப்படையில் இது தொடர்பில் ஏற்கனவே பாதுகாப்புத் தரப்பினருடன் பேச்சு நடத்தி வருவதாகவும் ஆளுநர் தெரிவித்தார்.

இதேவேளை தையிட்டியில் விகாரை அமைக்கப்பட்டுள்ள காணி உட்பட 14 ஏக்கர் காணிகள் திஸ்ஸ விகாரைக்குச் சொந்தமானவை . அந்தக் காணியை ஒருபோதும் எவருக்கும் கையளிக்க முடியாது . அதற்கான எந்தவொரு நடவடிக்கைக்கும் அனுமதிக்கமாட்டோம் என்று அகில இலங்கை பெளத்த மகா சம்மேளனம் யாழ்ப்பாணம் மாவட்டச் செயலருக்குத் ஏற்கனவே கடிதம் ஒன்றின் மூலமாக தெரியப்படுத்தியுள்ளது எனவும் அறிய முடிகிறது.

ஜனாதிபதியும் சி.ஐ.டியினரும் முட்டாள்கள், முடிந்தால் மௌளானாவை முதலில் விசாரியுங்கள் – பிள்ளையான்

ஜனாதிபதியும் சி.ஐ.டியினரும் முட்டாள்கள், முடிந்தால் மௌளானாவை முதலில் விசாரியுங்கள் – பிள்ளையான்

 

உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறி வெளிநாட்டில் நிரந்தர வதிவிட உரிமை கோரும் மௌலானாஇ ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை சுமத்துகிறார் என கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார். அரசாங்கம் முடிந்தால் மௌளானாவை நாடுகடுத்தி இலங்கைக்கு கொண்டு வந்து விசாரிக்க வேண்டும். இல்லையேல் சுவிஸ்க்குச் சென்று விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் தேசம்நெற்க்கு வழங்கிய செய்தியில் தெரிவித்து இருந்தார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் ஆறு வருடங்களிற்கு முன்னர் இடம்பெற்றது. ஏன் அவர் அந்தவேளை அது குறித்த விபரங்களை அம்பலப்படுத்தாமல் நான்கு வருடங்கள் காத்திருந்த பின்னர் ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவைக்கும் சனல் 4ற்க்கும் சென்றார்? என கேள்வியெழுப்பிய பிள்ளையான், தற்போதைய பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவி செனிவிரட்ண உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்றவேளை சி.ஐ.டியின் தலைவராக பணியாற்றினார். ஜனாதிபதியும் சி.ஐ.டியினரும் முட்டாள்கள். அவர்களுக்கு ஆயுதங்களை கைவிட்டவர்களிற்கும், ஐ.எஸ். மற்றும் முஸ்லிம் தீவிரவாதிகளின் நடவடிக்கைகளுக்கும் இடையிலான வித்தியாசத்தை புரிந்துகொள்ள முடியாதா? என தெரிவித்தார்.

இதேவேளை ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் தன்மீதான குற்றச்சாட்டு பற்றி மௌனம் களைத்துள்ள முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, ‘ ஈஸ்டர் தாக்குதல் பற்றிய ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையை தயவு செய்து படிக்குமாறும், சிஐடி அதிகாரிகள் அளித்த சாட்சியங்கள் உட்பட ‘அந்த அறிக்கையில் உள்ளதைத் தவிர வேறு தனக்குத் தெரியாது எனவும் தெரிவித்துள்ளார்.

மாவை மரணச்சடங்கில் சர்ச்சைக்குரிய பதாகை – விசாரணைகளை ஆரம்பித்த பொலிஸார் !

மாவை மரணச்சடங்கில் சர்ச்சைக்குரிய பதாகை – விசாரணைகளை ஆரம்பித்த பொலிஸார் !

 

மாவை சேனாதிராஜாவின் உடல் தகனம் செய்யப்பட்ட இடத்தில், காட்சிப்படுத்தப்பட்டிருந்த சர்ச்சைக்குரிய பாதாகை தொடர்பில் கே.கே. எஸ் பொலிஸார் விசாரணை நடத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மாவையின் இறுதி அஞ்சலியில் தடை விதிக்கப்பட்டோர் என்னும் வகையில் சில முக்கிய அரசியல்வாதிகள் உட்பட்டவர்களின் பெயர்கள் அடங்கிய பதாகை ஒன்று காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. குறித்த பதாகையில், மாவையின் மரணத்திற்கு காரணமான தமிழினத்தின் தமிழரசு துரோகிகள் என குறிப்பிடப்பட்டு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், சாணக்கியன், பதில் பொதுச்செயலாளர் சத்தியலிங்கம், பதில் தலைவர் சிவஞானம் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் உள்ளிட்ட மேலும் சிலரின் பெயர்கள் குறிப்பிடப்பட்டிருந்தன. இந்நிலையிலேயே , அது தொடர்பில் பொலிஸார் மாவையின் வீட்டாரிடம் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாக அறிய முடிகிறது

 

தமிழர் பகுதிகளில் தமிழர்கள் அல்லது தமிழ்மொழி தெரிந்தவர்களை நியமிக்கப்படுவார்கள் !

தமிழர் பகுதிகளில் தமிழர்கள் அல்லது தமிழ்மொழி தெரிந்தவர்களை நியமிக்கப்படுவார்கள் !

தமிழ் மக்கள் அதிகமாக வாழும் பிரதேசங்களில் தமிழ் மொழியறிவுடைய அரச உத்தியோகத்தர்களை நியமிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். தமிழ் மக்களுக்கு அவர்களது தாய் மொழியில் சேவையைப் பெற்றுக் கொள்ள முடியாத நிலைமை கவலைக்குரியதாகும் என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

இது தொடர்பில் மேலும் குறிப்பிட்ட அமைச்சர், கடந்த காலங்களில் கூட இந்த பிரச்சினைக்கு தீர்வு காணப்படவில்லை. எவ்வாறிருப்பினும் இது குறித்த புரிதல் எமக்கிருக்கிறது. எனவே தமிழ் மொழி பேசக்கூடிய மக்கள் வாழும் பிரதேசங்களில் முடிந்தவரை தமிழ் உத்தியோகத்தர்களை நியமிப்பதற்கு அல்லது சிங்கள உத்தியோகத்தர்களுக்கு தமிழ் பயிற்றுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். எமது முதலாவது 5 ஆண்டு ஆட்சி காலத்துக்குள் இதற்கான நடவடிக்கையை முன்னெடுக்க எதிர்பார்த்துள்ளோம். அரசாங்கம் என்ற ரீதியிலும் தனிப்பட்ட ரீதியிலும் தமிழ் மக்களின் பிரச்சினைகளை அறிந்தவர்கள் என்ற ரீதியில் விரைவில் உரிய தீர்வினை வழங்குவோம் என்றார்.