விளையாட்டுச் செய்திகள்

விளையாட்டுச் செய்திகள்

இலங்கை பிரீமியர் லீக் டி20 போட்டிகளிலிருந்து பிரபல கிரிக்கெட் வீரர் கிறிஸ் கெயில் விலகல் !

இலங்கை பிரீமியர் லீக் டி20 போட்டியில் இருந்து பிரபல கிரிக்கெட் வீரர் கிறிஸ் கெயில் விலகியுள்ளார். முன்னதாகவே இந்தப்போட்டிகள் ஆரம்பமாகும் என எதிர்பார்க்கப்பட்ட போதிலும் கூட கொரோனா தொற்றுக் காரணமாக பிற்போடப்பட்ட இப்போட்டிகள் இம்மாதம் 27 ஆம் ஆரம்பிக்கப்படவுள்ளன.

இந்நிலையில் LPL போட்டியிலிருந்து பிரபல கிரிக்கெட் வீரர் கிறிஸ் கெயில் விலகியுள்ளார். கண்டி டஸ்கர்ஸ் அணியில் இடம்பெற்றிருந்த கெயில், சொந்தக் காரணங்களால் விலகுவதாக அறிவித்துள்ளார்.

அண்மையில் நடைபெற்ற IPL போட்டியில் பங்கேற்ற கெயில், பஞ்சாப் அணிக்காக 7 ஆட்டங்களில் விளையாடி 288 ஓட்டங்களை எடுத்தார்.

உலக கோப்பை கால்பந்து தகுதி சுற்று : பிரேசில், அர்ஜென்டினா அணிகள் வெற்றி !

உலகக் கிண்ணக்  காற்பந்து தகுதிச்  சுற்று போட்டிகளில் பிரேஸில், ஆர்ஜென்டினா அணிகள் வெற்றி பெற்றன. 22ஆவது உலகக் கிண்ணக் காற்பந்துப்  போட்டி கத்தாரில் 2022ஆம் ஆண்டில் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதத்தில் நடைபெறவுள்ளது.

இதற்கான தென்அமெரிக்க கண்டத்துக்குரிய அணிகளுக்கான தகுதி சுற்று போட்டி பல்வேறு இடங்களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 10 அணிகளும் தங்களுக்குள் தலா 2 முறை மோத வேண்டும்.

லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் உலக கோப்பை போட்டிக்கு நேரடியாக தகுதி பெறும். 5ஆவது இடம் பிடிக்கும் அணி ‘பிளே-ஆப்’ சுற்று மூலம் வாய்ப்பை பெற முடியும்.

இந் நிலையில் உருகுவே தலைநகர் மோன்ட் வீடியோவில் நடந்த தகுதி சுற்று ஆட்டம் ஒன்றில் 5 முறை சம்பியனான பிரேஸில் அணி, 2 தடவை சம்பியனான உருகுவேயை எதிர்கொண்டது.குறித்த போட்டியில் பிரேஸில் அணி 2-0 என்ற கோல் கணக்கில் உருகுவேயை வீழ்த்தியது.

மற்றொரு போட்டியில்  முன்னாள் சம்பியனான ஆர்ஜென்டினா அணி, பெருவை அதன் சொந்த மண்ணில் சந்தித்தது. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் லயோனல் மெஸ்சி தலைமையிலான அர்ஜென்டினா 2-0 என்ற கோல் கணக்கில் பெருவை சாய்த்தது.

 

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிகளின் இறுதிப்போட்டி அணிகள் எவ்வாறு தெரிவு செய்யப்படும்? – வெளியிட்டது ஐ.சி.சி !

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) சார்பில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிகள் தொடர்ச்சியாக  நடைபெற்று வருகின்கிறது. இதன்படி ,மொத்தம் உள்ள 9 அணிகளும் உள்ளூர், வெளிநாடு அடிப்படையில் குறைந்தது 6 தொடர்களில் பங்கேற்க வேண்டும்.

இதில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் அடுத்த ஆண்டு ஜுன் மாதம் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறும் இறுதிப்போட்டியில் மோதும்.

இதுவரை நடந்த போட்டியின் அடிப்படையில் இந்தியா 360 புள்ளிகளுடன் முன்னிலையில் உள்ளது. ஆஸ்திரேலியா 296 புள்ளிகளுடனும், இங்கிலாந்து 292 புள்ளிகளுடனும், நியூசிலாந்து 180 புள்ளிகளுடனும், பாகிஸ்தான் 166 புள்ளிகளுடனும் அதற்கு அடுத்த நிலைகளில் உள்ளன.

கொரோனா வைரஸ் திடீரென ஏற்பட்டதால் பல்வேறு தொடர்கள் ரத்து செய்யப்பட்டன. டெஸ்ட் போட்டிகள் திட்டமிட்டபடி நடைபெறவில்லை. இதனால் இறுதிப் போட்டிக்குள் நுழையும் அணிகளை எப்படி தேர்வு செய்வது என்பது குறித்து ஐ.சி.சி. புதிய திட்டம் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி புள்ளிகளின் சதவீத அடிப்படையில் இறுதிப் போட்டிக்கான அணிகளை தேர்வு செய்வது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

சதவீத அடிப்படையில் ஆஸ்திரேலியா 82.2 சதவீதத்துடன் முதல் இடத்தில் உள்ளது. இந்தியா 75 சதவீதத்துடன் 2-வது இடத்திலும், இங்கிலாந்து 60.83 சதவீதத்துடன் 3-வது இடத்தில் உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்கான தகுதிச்சுற்று – பிரேசில் நட்சத்திர வீரா் நெய்மா் விலகல் !

உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்கான தகுதிச்சுற்றில் இருந்து பிரேசில் அணியின் நட்சத்திர வீரா் நெய்மா் காயம் காரணமாக விலகியுள்ளாா்.

2022 உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்கான தகுதிச்சுற்றில் பிரேசில் அணி, உருகுவே அணியுடன் அடுத்த வாரம் மோதுகிறது. இந்த நிலையில் பிரேசில் அணியின் நட்சத்திர வீரரான நெய்மா் தொடைப் பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக உருகுவேக்கு எதிரான தகுதிச்சுற்றில் இருந்து விலகியுள்ளாா். சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியில் பாரீஸ் செயின்ட் ஜொ்மைன் அணிக்காக விளையாடியபோது நெய்மருக்கு காயம் ஏற்பட்டது.

இதுதொடா்பாக பிரேசில் கால்பந்து சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘வரும் செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ள பிரேசில்-உருகுவே இடையிலான தென் அமெரிக்க தகுதிச்சுற்றில் நெய்மா் விளையாடமாட்டாா்’ என குறிப்பிட்டுள்ளது. இதையடுத்து பிரேசில் அணியில் நெய்மருக்குப் பதிலாக பெட்ரோ சோ்க்கப்பட்டுள்ளாா்.

பெட்ரோ 2018, செப்டம்பரில் பிரேசில் அணிக்காக தோ்வு செய்யப்பட்டாா். ஆனால், முழங்கால் பிரச்னை காரணமாக அறிமுக ஆட்டத்தில் விளையாடும் வாய்ப்பை இழந்தாா். அதன்பிறகு இப்போது பிரேசில் அணிக்கு அழைக்கப்பட்டுள்ளாா். பிரேசில் அணியின் பின்கள வீரரான மெனினோவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடா்ந்து, அவா் வெனிசுலா மற்றும் உருகுவே அணிகளுக்கு எதிரான உலகக் கோப்பை தகுதிச்சுற்று ஆட்டங்களிலிருந்து விலகியுள்ளாா்.

டெல்லியை வீழ்த்தி ஐந்தாவது தடவையாக ஐ.பி.எல் வெற்றிக்கிண்ணத்தை சுவீகரித்தது மும்பை – தொடரின் விருதுகள் பற்றிய முழுமையான விபரங்கள் இதோ !

ஐ.பி.எல்2020 இன் இறுதிப் போட்டி துபாயில் நேற்று நடைபெற்றது. இதில் நாணயச்சுழற்சியில் வென்ற டெல்லி கெப்பிட்டல்ஸ் துடுப்பாட்டத்தை தேர்வு செய்தது.
தொடக்க வீரர்களான மார்கஸ் ஸ்டோய்னிஸ் (0), தவன் (15), ரகானே (2) சொற்ப ஓட்டங்ககளில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர்.  அதன்பின் வந்த ஷ்ரேயாஸ் அய்யர் (65ஓட்டங்கள்), ரிஷ்ப் பண்ட் (56ஓட்டங்கள்) சிறப்பாக விளையாட டெல்லி கேப்பிட்டல்ஸ் 20 பந்துப்பரிமாற்றங்களில் 7 இலக்குகள் இழப்பிற்கு 156 ஓட்டங்கள் அடித்தது.
மும்பை இந்தியன்ஸ்க்கு 157 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது டெல்லி கேப்பிட்டல்ஸ்
பின்னர் 157 ஓட்டங்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை இந்தியன்ஸ் அணி களம் இறங்கியது. குயின்டான் டி காக், ரோகித் சர்மா ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். இருவரும் தொடக்கம் முதலே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
டி காக் 12 பந்தில 20 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். இந்த ஜோடி 4.1 பந்துப்பாரிமாற்றங்களில் 45 ஓட்டங்கள் விளாசியது. அடுத்து வந்த சூர்யகுமார் யாதவ் ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். ஆனால் 36 பந்தில் அரைசதம் விளாசி மறுமுனையில் சிறப்பாக விளையாடினார் ரோகித் சர்மா.
டெல்லியை வீழ்த்தி ஐந்தாவது முறையாக ஐபிஎல் கோப்பையை வென்றது மும்பை இந்தியன்ஸ்அடுத்து வந்த இஷான் கிஷனும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால் மும்பை அணி வெற்றியை நோக்கி சென்றது. 17.2ஆவது பந்துப்பரிமாற்றத்தில்  அன்ரிச் நோர்ஜே வீசிய பந்தில் ரோகித் சர்மா 68 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அப்போது மும்பை அணிக்கு 22 பந்தில் 20 ஓட்டங்கள் தேவைப்பட்டது. அடுத்து வந்த பொல்லார்ட் அடுத்தடுத்து இரண்டு பவுண்டரிகள் விளாசினார்.
ஆனால் 18-வது பந்துப்பரிமாற்றத்தில்  முதல் பந்தில் ஆட்டமிழந்தார். அடுத்து ஹர்திக் பாண்ட்யா களம் இறங்கினார். ஸ்கோர் சமமான நிலையில் ஹர்திக் பாண்ட்யா 3 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த குருணால் பாண்ட்யா ஒரு ஓட்டம் அடிக்க மும்பை இந்தியன்ஸ் 18.4 பந்துப்பரிமாற்றத்தில் 5 இலக்குகள் இழப்பிற்கு 157  ஓட்டங்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.
ஆட்ட நாயகன் விருது மும்பை அணியின் டிரெண்ட் போல்ட்டுக்கு வழங்கப்பட்டது. அவருக்கு 5 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது.
ஐபிஎல் கிரிக்கெட் - இறுதிப்போட்டியில் ஆட்ட நாயகன் விருது வென்ற டிரெண்ட் போல்ட்
இந்த வெற்றியின் மூலம் ஐ.பி.எல் கோப்பையை ஐந்தாவது முறையாக மும்பை இந்தியன்ஸ் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. இஷான் கிஷன் 19 பந்தில் 33 ரன்கள் எடுத்து ஆட்மிழக்காமல் இருந்தார்.
இந்த லீக் ஆட்டங்களில் அதிக ஓட்டங்கள் குவிக்கும் துடுப்பாட்ட வீரருக்கு செம்மஞ்சள் தொப்பியும், அதிக இலக்குகள் வீழ்த்தும் பந்து வீச்சாளருக்கு ஊதா  தொப்பியும் வழங்கப்படும்.
அதன்படி, கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் தலைவர் கே.எல் ராகுல் 14 போட்டிகளில் ஒரு சதம், 5 அரைசதங்களுடன் 670 ஓட்டங்கள் குவித்து செம்மஞ்சள் தொப்பியை கைப்பற்றியுள்ளார்.
17 போட்டிகளில் 30 இலக்குகள் வீழ்த்திய ரபாடா ஊதா தொப்பியை கைப்பற்றியுள்ளார்.
மேலும் விருது பெற்றவர்கள்:
வளர்ந்து வரும் வீரர்( எமர்ஜிங் பிளேயர்) – தேவ்தத் படிக்கல் (ஆர்.சி.பி)
ஃபேர் பிளே விருது – ரோகித் சர்மா (மும்பை)
கேம் சேஞ்சர் விருது – கேஎல் ராகுல் (பஞ்சாப்)
சூப்பர் ஸ்டிரைக்கர் விருது – பொல்லார்டு (மும்பை)
அதிக சிக்சர் அடித்த வீரருக்கான விருது – இஷான் கிஷண் – (மும்பை- 30 சிக்சர்)
பவர் பிளேயர் விருது – டிரெண்ட் போல்ட் (மும்பை)
மதிப்பு மிகுந்த வீரர் – ஜோப்ரா ஆர்ச்சர் (ராஜஸ்தான்)

“இறுதிப் போட்டிக்கு செல்ல முடியாததை உண்மையிலேயே அவமானம் என கருதுகிறேன்” – கேன் வில்லியம்சன் கவலை !

சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி பிளேஆஃப்ஸ் சுற்றுக்கு முன்னேறுமா? என்ற சந்தேகம் இருந்த நிலையில் ஆர்சிபி, டெல்லி கேப்பிட்டல்ஸ், மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகளை வெற்றி கொண்டு பிளேஆஃப்ஸ் சுற்றுக்கு முன்னேறியது.
எலிமினேட்டரில் கேன் வில்லியம்சனின் போராட்டத்தால் பெங்களுரை வீழ்த்தியது சன்ரைசர்ஸ் ஐதராபாத்.
நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் 189 ஓட்டங்கள் அடித்தது. பின்னர் 190 ஓட்டங்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் ஐதராபாத் அணி களம் இறங்கியது. அணி வீரர்களான வார்னர் (2), பிரியம் கார்க் (17), மணிஷ் பாண்டே (21) ஆகியோர் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர்.
அதன்பின் வந்த கேன் வில்லியம்சன் வெற்றிக்காக போராடினார். ஆனால் 45 பந்தில் 67 ஓட்டங்கள் எடுத்து வெளியேறினார். இதனால் ஐதராபாத் அணி 172 ரன்களே எடுத்து 17 ஓட்டங்களால் வெற்றியை கோட்டைவிட்டது. அத்துடன் இறுதிப் போட்டி வாய்ப்பை இழந்தது.
இந்நிலையில் இறுதிப் போட்டிக்கு முன்னேற முடியாதது அவமானம் என உணர்கிறேன் என்று கேன் வில்லியம்சன் தெரிவித்துள்ளார்.
மேலும் இதுகுறித்து கேன் வில்லியம்சன் கூறுகையில்
‘‘டெல்லி கேப்பிட்டல்ஸ் மிகவும் சிறந்த அணி. அவர்கள் விளையாடும் அவர்களுடைய ரிதத்தை காண முயற்சி செய்து கொண்டிருந்தார்கள். எங்களுக்கு எதிராக ஒன்றிணைந்து விளையாடும் வாய்ப்பை பெற்றனர். சிறப்பாக விளையாடினர்.
போட்டியின் 2-வது இன்னிங்சில் 190 ஓட்டங்கள் அடிப்பது கடினம். எங்களுக்கு தொடக்கத்திலேயே விக்கெட் வீழ்ந்துவிட்டது. இருந்தாலும் மிடில் ஆர்டர் ஓவர்களில் ஓரளவிற்கு பார்ட்னர்ஷிப்பை கட்டமைத்தோம். எங்களுக்கு இன்னும் கூடுதலாக வாய்ப்பு கிடைத்திருக்க வேண்டும்.
இறுதிப் போட்டிக்கு செல்ல முடியாததை உண்மையிலேயே அவமானம் என கருதுகிறேன். ஆனால், குறிப்பாக கடந்த மூன்று வாரங்களாக எங்கள் அணி வீரர்கள் விளையாடியதை பார்க்கும்போது பெருமையாக இருக்கிறது’’ என்றார்.

ஐ.பி.எல்2020 வெற்றியாளர்கள் யார் ..? நாளை மும்பையுடன் மோதுகிறது டெல்லி !

13ஆவது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு எமிரேட்சில் கடந்த செப்டம்பர் மாதம் 19ஆந் திகதி தொடங்கியது. தற்போது இந்த போட்டி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.
இதில் 8 அணிகள் பங்கேற்றன. லீக் சுற்றில் ஒவ்வொரு அணியும், மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோதின. கடந்த 3ஆம் திகதியுடன் லீக் ஆட்டங்கள் முடிவடைந்தன. இதன் முடிவில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் ஆகிய அணிகள் முறையே முதல் 4 இடங்களை பிடித்து பிளேஆப் சுற்றுக்கு முன்னேறின.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப், சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகள் முறையே 5 முதல் 8ஆவது இடங்களை பிடித்து வெளியேறின.
பிளேஆப் சுற்று 5ஆம் திகதி தொடங்கியது. ’குவாலிபையர்-1’ ஆட்டத்தில் மும்பை அணி 57 ஓட்டங்களால் டெல்லியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. வெள்ளிக்கிழமை நடந்த எலிமினேட்டர் ஆட்டத்தில் ஐதராபாத் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூரை வீழ்த்தி வெளியேற்றியது. நேற்று நடந்த ‘குவாலிபையர் 2’ ஆட்டத்தில் டெல்லி அணி 17 ஓட்டங்களால் ஐதராபாத்தை தோற்கடித்து இறுதி போட்டியில் நுழைந்தது.
இன்று ஓய்வு நாளாகும். இறுதிப்போட்டி நாளை 10ம் திகதி நடக்கிறது. துபாயில் இரவு 7.30 மணிக்கு நடைபெறும் இந்த ஆட்டத்தில் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி ஸ்ரேயாஷ் அய்யர் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதுகின்றன.
ஐபிஎல் கோப்பையை வெல்வது யார்? இறுதிப்போட்டியில் மும்பை-டெல்லி அணிகள் நாளை பலப்பரீட்சைமும்பை அணி 6ஆவது முறையாக இறுதிப் போட்டியில் ஆடுகிறது. இதில் 4 தடவை சாம்பியன் பட்டம் பெற்றது. 2013, 2015, 2017, 2019 ஆகிய ஆண்டுகளில் ஐ.பி.எல் கோப்பையை அந்த அணி கைப்பற்றியது.
2010-ம் ஆண்டு இறுதிப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்சிடம் தோற்றது. தற்போது மும்பை அணி 5ஆவது முறையாக ஐ.பி.எல். கோப்பையை கைப்பற்றும் ஆர்வத்தில் உள்ளது.
டெல்லி அணி முதல் முறையாக இறுதிப் போட்டியில் விளையாடுகிறது. ஐ.பி.எல் கோப்பையை முதல் முறையாக கைப்பற்றும் வேட்கையில் அந்த அணி இருக்கிறது. ஐ.பி.எல். கோப்பையை கைப்பற்றப் போவது மும்பையா? டெல்லியா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த சீசனில் மும்பை அணி 3 முறை டெல்லியை வீழ்த்தி இருந்தது. இதனால் அந்த அணி நம்பிக்கையுடன் இறுதிப்போட்டியில் விளையாடும். அதே நேரத்தில் டெல்லி அணி மும்பையை பழிதீர்க்க வேண்டும் என்ற ஆக்ரோஷத்தில் ஆடும். இரு அணியிலும் அதிரடியான வீரர்கள் உள்ளனர். இதனால் இறுதிப் போட்டி விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மும்பை அணியில் குயின்டன் டிகாக், இஷான்கிஷன் (483ஓட்டங்கள் ), சூர்யகுமார் யாதவ் (461ஓட்டங்கள்), ஹர்த்திக் பாண்ட்யா (278ஓட்டங்கள்), போல்லார்ட் (259ஓட்டங்கள்) போன்ற அதிரடி பேட்ஸ்மேன்களும், பும்ரா (27 இலக்குகள்), போல்ட் (22இலக்குகள்) போன்ற சிறந்த இலக்குகள் உள்ளனர்.
டெல்லி அணியின் தொடக்க ஆட்டக்காரர் தவான் மிகவும் நல்ல நிலையில் உள்ளார். அவர் 2 சதம், 4 அரை சதத்துடன் 603 ஓட்டங்கள் குவித்து இந்த தொடரில் 2-வது இடத்தில் உள்ளார். மேலும் கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் (454 ஓட்டங்கள்), ரிஷப் பண்ட் (287ஓட்டங்கள்), ஹெட்மயர் போன்ற சிறந்த துடுப்பாட்டவீரர்களும் , ரபடா (29 இலக்குகள்), நோர்கியா (20இலக்குகள்) போன்ற சிறந்த இலக்குகள் உள்ளனர். சகலதுறைவீரர் வரிசையில் ஸ்டோய்னிஸ் (352 ஓட்டங்கள், 12 இலக்குகள்) என சிறப்பான வீரர்களையும் கொண்டுள்ளது.
இரு அணிகளும் நாளை மோதுவது 28-வது ஆட்டமாகும். இதுவரை நடந்த 27 போட்டியில் மும்பை 15-ல் டெல்லி 12-ல் வெற்றி பெற்றுள்ளன.

“டிவில்லியர்ஸ் இந்த சீசனில் இல்லாமல் இருந்திருந்தால் பெங்களூர் அணியின் நிலைமை படுமோசமாகியருக்கும். தோல்விக்கான பொறுப்பை கோலி ஏற்று தலைமையிலிருந்து விலக வேண்டும்” – கவுதம் கம்பீர்

“டிவில்லியர்ஸ் இந்த சீசனில் இல்லாமல் இருந்திருந்தால் பெங்களூர் அணியின் நிலைமை படுமோசமாகியருக்கும். தோல்விக்கான பொறுப்பை கோலி ஏற்று தலைமையிலிருந்து விலக வேண்டும்” என இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தொடக்க ஆட்டக்காரரும், ஐ.பி.எல். கிரிக்கெட்டில் கொல்கத்தா அணிக்காக 2 முறை கோப்பையை பெற்றுத் தந்தவருமான கவுதம் கம்பீர் இணையதளம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

அந்தப்பேட்டியில் அவர் தொடர்ந்தும் கூறியதாவது::-

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் தலைவராக விராட் கோலி 8 ஆண்டுகள் பணியாற்றி விட்டார். ஆனால் இன்னும் ஒரு முறை கூட கோப்பையை வெல்லவில்லை. 8 ஆண்டு தலைமைத்துவம் என்பது என்பது ரொம்பவே அதிகம். பெங்களூர் அணி நிர்வாகம் தலைமைத்துவத்தை மாற்றுவதற்கு இதுவே சரியான தருணமாகும். கோப்பையை வெல்லாமல் எந்த தலைவராவது, எந்த வீரராவது ஒரே அணியில் இவ்வளவு காலம் நீடித்திருக்கிறார்களா? என்று சொல்லுங்கள் பார்ப்போம்.

Eight years is long time': Gautam Gambhir wants RCB to remove Virat Kohli  as skipper, Sports News | wionews.com

எனவே இதற்கான பொறுப்பை கோலி தான் எடுத்துக் கொள்ள வேண்டும். விராட் கோலியுடன் எனக்கு எந்த பகைமையும் கிடையாது. பெங்களூர் அணியால் கோப்பையை வெல்ல முடியாததற்கு நானே பொறுப்பு என்று அவர் திறந்த மனதுடன் சொல்ல வேண்டும். நீங்கள் தான் தலைவர். வெற்றியின் போது கிடைக்கும் பாராட்டுகளை ஏற்றுக்கொள்ளும் போது, தோல்வியால் எழும் விமர்சனங்களையும் ஏற்றுக்கொண்டாக வேண்டும்.

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் தலைவராக ஆர்.அஸ்வின் 2 ஆண்டுகள் இருந்தார். அவர் சோபிக்கவில்லை என்றதும் தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். நாம் டோனி, ரோகித் சர்மா குறித்து பேசுகிறோம். டோனி சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக 3 முறை கோப்பையை வென்று தந்திருக்கிறார். ரோகித் சர்மா, மும்பை இந்தியன்ஸ் அணிக்காக 4 தடவை கோப்பையை கைப்பற்றி இருக்கிறார். அதனால் தான் அவர்கள் நீண்ட காலமாக அந்தந்த அணிகளின் தலைவர்களாக தொடருகிறார்கள். ரோகித் சர்மா 8 ஆண்டுகளில் சாதிக்கவில்லை என்றால் நிச்சயம் கழற்றி விட்டிருப்பார்கள். ஒவ்வொரு வீரருக்கும், ஒவ்வொரு வகையிலான அளவுகோல் இருக்கக்கூடாது. தலைவராக இருப்பவர் களத்தில் சாதகமான முடிவுகளை கொண்டு வர வேண்டும். அது தான் முக்கியம்.

‘நாங்கள் பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றிருக்கிறோம். அதற்கு நாங்கள் தகுதியான அணி’ என்று நீங்கள் (பெங்களூர்) சொல்லலாம். என்னை பொறுத்தவரை பெங்களூர் அணி பிளே-ஆப் சுற்றுக்கு ஒரு போதும் தகுதியான அணி கிடையாது. டிவில்லியர்ஸ் இந்த சீசனில் இல்லாமல் இருந்திருந்தால் பெங்களூரு அணியின் நிலைமை எப்படி இருந்திருக்கும் என்பதை கற்பனை செய்து பாருங்கள். லீக் சுற்றில் கிடைத்த 7 வெற்றிகளில் அவரது அபாரமான பங்களிப்பால் 2-3 வெற்றிகள் கிடைத்தது. இல்லாவிட்டால் வெளியேறியிருக்கும். கடந்த ஆண்டை போலவே இந்த சீசனிலும் ஒருங்கிணைந்த அணியாக அவர்கள் செயல்படவில்லை.
என  கம்பீர் அந்தப்பட்டியில் கூறினார்.

சர்வதேச டென்னிசில் ஆயிரம் வெற்றிகளை குவித்து நடால் சாதனை !

பாரீஸ் மாஸ்டர்ஸ் சர்வதேச டென்னிஸ் போட்டி பிரான்சில் நடந்து வருகிறது. சமீபத்தில் பிரெஞ்ச் ஓபன் பட்டத்தை கைப்பற்றிய உலகின் 2-ம் நிலை வீரரான ரபெல் நடால்(ஸ்பெயின்) இந்த போட்டியில் பங்கேற்றுள்ளார்.

‘பை’ சலுகை மூலம் நேரடியாக 2-வது சுற்றில் களம் இறங்கிய நடால் நேற்று முன்தினம் இரவு நடந்த ஆட்டத்தில் 4-6, 7-6 (7-5), 6-4 என்ற செட் கணக்கில் சக நாட்டவரான பெலிசியானோ லோப்சை போராடி வீழ்த்தி 3-வது சுற்றுக்கு முன்னேறினார். நடால் சர்வதேச டென்னிசில் ருசித்த 1000-வது வெற்றி இதுவாகும். 2002-ம் ஆண்டில் முதலாவது வெற்றியை பெற்ற நடால் 18 ஆண்டுகளில் இந்த மைல்கல்லை எட்டியிருக்கிறார். இதுவரை 1,201 ஆட்டங்களில் ஆடியுள்ள நடால் அதில் 86 பட்டங்களுடன் ஆயிரம் வெற்றிகளும், 201 தோல்விகளும் கண்டுள்ளார்.

ஓபன் எரா (அமெச்சூர் வீரர்களுடன் தொழில்முறை வீரர்களும் பங்கேற்க அனுமதிக்கப்பட்ட 1968-ம் ஆண்டில் இருந்து) வரலாற்றில் ஆயிரம் வெற்றிகளை பெற்ற 4-வது வீரர் என்ற சிறப்பை அவர் பெற்றார். இந்த சாதனை பட்டியலில் முதல் 3 இடங்களில் அமெரிக்காவின் ஜிம்மி கானோர்ஸ் (1274 வெற்றி), சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் (1242), அமெரிக்காவின் இவான் லென்டில் (1068) ஆகியோர் உள்ளனர்.

34 வயதான நடால் கூறுகையில், ‘இந்த ஆயிரமாவது வெற்றி எனக்கு வயது ஆகி விட்டது என்பதை உணர்த்துகிறது. இச்சாதனையை அடைவது எளிதல்ல. மிக நீண்ட காலம் சிறப்பாக விளையாடினால் மட்டுமே முடியும். அந்த வகையில் மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது’ என்றார்.

“அடுத்த ஆண்டும் எம்.எஸ்.டோனி தான் சென்னையின் தலைவர்” – உறுதிப்படுத்தினார் சென்னை அணி உரிமையாளர் என் ஸ்ரீனிவாசன் !

அடுத்த ஆண்டும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எம்.எஸ் டோனி தான் தலைவராக வழிநடத்துவார் என்று அணியின் உரிமையாளர் என் ஸ்ரீனிவாசன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். கடந்த 10 ஆண்டுகளாக சிறப்பான செயல்பாடுகளை நிரூபித்துள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு இது ஒரு மோசமான ஆண்டு என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தோனியை தவிர வேற யாரு... அவர்தான் அடுத்த ஆண்டும் சிஎஸ்கே கேப்டன்... ஸ்ரீனிவாசன் சொல்லிட்டாரு!

மேலும் ருதுராஜ் கெய்க்வாட் இளம் விராட் கோலியை நினைவுபடுத்துவதாக பாப் டூ பிளசிஸ் தெரிவித்துள்ள கருத்தையும் ஸ்ரீனிவாசன் ஆமோதித்துள்ளார்.

ஐ.பி.எல் 2020 சீசனில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்று அந்த அணியின் தலைவர் டோனி எதிர்பார்க்கப்பட்டார். கடந்த ஒரு ஆண்டாக அவர் சர்வதேச போட்டிகளில் விளையாடாத நிலையில் கடந்த ஆகஸ்ட் 15ம் திகதி சர்வதேச போட்டிகளில் இருந்து தன்னுடைய ஓய்வை அறிவித்தார். இந்நிலையில் ஐ.பி.எல்லில் அவர் சிறப்பாக விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.  ஆனால் ரசிகர்களின் இந்த எதிர்பார்ப்பை தன்னுடைய மோசமான ஆட்டத்தின்மூலம் அந்த எதிர்பார்ப்பை பொய்யாக்கினார் டோனி.

அந்த அணி இறுதி போட்டிகளில் சிறப்பாக விளையாடி 12 புள்ளிகளுடன் 7வது இடத்தில் இறுதியாக நிலைபெற்றிருந்தது. ஆயினும் அந்த அணியின் தொடர் தோல்விகள் பிளே-ஆப் சுற்றிற்று அணி தகுதிபெறாததற்கு காரணமாக அமைந்தன. மோசமான ஆண்டு இந்நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் கடந்த 10 ஆண்டுகளாக சிறப்பான செயல்பாட்டினை நிரூபித்துவந்த நிலையில், இந்த ஆண்டு ஒரு மோசமான ஆண்டு என்பதை ஒப்புகொள்ள வேண்டும் என்று அணியின் உரிமையாளர் என் ஸ்ரீனிவாசன் தெரிவித்துள்ளார்.

அடுத்த ஆண்டு மீண்டும் சிறப்பாக வந்து ஐ.பி.எல்லை விளையாடுவோம் என்றும் அவர் கூறியுள்ளார்.

இதனிடையே அடுத்த ஆண்டும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை டோனி தான் தலைமையேற்று நடத்துவார் என்றும் ஸ்ரீனிவாசன் தெரிவித்துள்ளார். தோனி தன்னிடம் அனைத்து விஷயங்கள் குறித்தும் ஏற்கனவே ஆலோசனை மேற்கொண்டுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார். சிறப்பான ருதுராஜ் கெய்க்வாட் கொரோனா பாதிப்பிலிருந்து ருதுராஜ் மிகவும் தாமதமாக தேறியதாக தெரிவித்துள்ள ஸ்ரீனிவாசன், முன்னாள் தென்னாப்பிரிக்க வீரர் பாப் டூ பிளசிஸ் ருதுராஜை இளம் விராட் கோலி என்று தெரிவித்துள்ள விமர்சனத்தை ஆமோதித்துள்ளார். நீண்ட நாட்களுக்கு பிறகு சிறப்பான ஒரு வீரரை பார்ப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.