உள்நாட்டுச் செய்திகள்

உள்நாட்டுச் செய்திகள்

யாழ்ப்பாணத்தில் முற்றுகையிடப்பட்ட விபச்சார விடுதிகள் – சுழற்சி முறையில் வருகை தரும் அழகிகள்!

யாழ்ப்பாணம்-இளவாலை காவல்துறை பிரிவிற்குட்பட்ட பெரியவிளான் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்து இரண்டு விபசார அழகிகள் சிக்கியுள்ளனர்.

 

குறித்த பகுதியில் இன்றையதினம் (18) மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே 42 மற்றும் 35 வயதுடைய இரு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

இந்த விடுதியை ஊர்காவற்துறை பகுதியைச் சேர்ந்த பெண்ணொருவரே பொறுப்பாக இருந்து நடாத்தி வருகின்றார் என தெரியவந்துள்ளது.

இந்த விடுதிக்கு யாழ்ப்பாணம், கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு பகுதிகளைச் சேர்ந்த அழகிகள் சுழற்சி முறையில் வருகை தருவதாகவும், இதனால் அங்கு கலாச்சார சீர்கேடு நடப்பதாகவும் சுட்டிக்காட்டப்படுகிறது.

அவர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்த இளவாலை காவல்துறையினர் அவர்களை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.

இலங்கையில் அதிகரிக்கும் கொலைகள் – பொலிஸ் மா அதிபர் தேஷ்பந்து தென்னகோன் எடுத்துள்ள நடவடிக்கை!

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல்களை ஒடுக்குவதற்கு புதிய நடவடிக்கையை ஆரம்பிக்க பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

 

பொலிஸ் மா அதிபர் தேஷ்பந்து தென்னகோன் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையின் கட்டளை அதிகாரி ஆகியோரின் நேரடி மேற்பார்வையின் கீழ் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.

 

தற்போது அதிக கொலைகள் இடம்பெறும் மேல் மற்றும் தென் மாகாணங்களில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

 

அதன்படி இப்பகுதிகளில் 20 ஆயுதம் தாங்கிய தாக்குதல் பொலிஸ் பட்டாலியன்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளன.

 

இதேவேளை, அனைத்து கிராமிய சேவை பிரிவுகளிலும் ஸ்தாபிக்கப்பட்ட சமூக பொலிஸ் பிரிவை மேலும் பலப்படுத்தி அதன் ஊடாக தேசிய பாதுகாப்பை ஏற்படுத்த வேண்டும் என பொலிஸ் மா அதிபர் தேஷ்பந்து தென்னகோன் தெரிவித்துள்ளார்.

 

நாட்டின் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்தும் பாரிய பொறுப்பு கிராம மட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு குழுக்களுக்கு உண்டு என பொலிஸ் மா அதிபர் குறிப்பிட்டுள்ளார்.

 

கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் சமூகப் பொலிஸ் பிரிவுகளை வலுப்படுத்தும் நோக்கில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே பொலிஸ் மா அதிபர் தேஷ்பந்து தென்னகோன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ஜனநாயக ஆட்சியை விட சர்வாதிகார ஆட்சியை விரும்பும் இலங்கையர்கள் – ஆய்வில் வெளியான தகவல் !

ஏதேச்சதிகாரத்தை மக்கள் விரும்புவது மாற்றுக்கொள்கைளிற்கான நிலையம் மேற்கொண்ட ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.

 

மாற்றுக்கொள்கைகளிற்கான நிலையம் மேற்கொண்ட ஜனநாயகம் மற்றும் நல்லிணக்கம் குறித்த கருத்துக்கணிப்பில் கலந்துகொண்டவர்களில் பத்தில் ஒருவர் ஏதேச்சதிகாரம்குறித்து விருப்பம் வெளியிட்டுள்ளனர்.

 

ஏனைய வகை ஆட்சி முறைகளை விட ஜனநாயக ஆட்சி முறையை அதிகளவானவர்கள் விரும்புகின்ற போதிலும் சமீபத்தைய ஆய்வின் மூலம் பத்தில் ஒரு இலங்கையர் சில சூழ்நிலைகளில் ஜனநாயக முறையை விட சர்வாதிகார ஆட்சிமுறை பொருத்தமானது என கருதுகின்றமை தெரியவந்துள்ளது.

2018 இல்; மைத்திரிபாலசிறிசேன ரணில்விக்கிரமசிங்க அரசாங்கத்தின் காலத்தில் அரசமைப்பு நெருக்கடி உருவானவேளை இதுபோன்றதொரு மனோநிலை காணப்பட்டது என மாற்றுக்கொள்கைகளிற்கான நிலையம் தெரிவித்துள்ளது.

 

ஜனநாயகத்திற்கான வலுவான ஆதரவு உள்ளபோதிலும் ஜனநாயக ஆட்சி மீதான விரக்தி அதிகரிக்கும்போது எதேச்சதிகார ஆட்சிக்கான ஆதரவு புத்துயிர் பெறுவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பது ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.

 

இதேவேளை நாடாளுமன்றம் மற்றும் அரசியல் கட்சிகள் மீதான நம்பிக்கை முன்னர் எப்போதையும் விட குறைவாக காணப்படுகின்றமையும் இந்த கருத்துக்கணிப்பின் மூலம் தெரியவந்துள்ளது.

 

கருத்துக்கணிப்பில் கலந்துகொண்டவர்களி;ல் 22 வீதமானவர்களே நாடாளுமன்றத்தின் மீது நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்-19 வீதமானவர்களே அரசியல் கட்சிகள் மீது நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.

 

ஜனநாயக கட்டமைப்புகளின் நம்பிக்கை தன்மைக்கு அவை குறித்த மக்களின் நம்பிக்கை மிகவும் முக்கியமானது என தெரிவித்துள்ள ஆய்வு சட்டமியற்றும் ஸ்தாபனங்கள் மற்றும் சட்டங்களை உருவாக்குபவர்களை உருவாக்கும் அரசியல் கட்சிகள் மீதான நம்பிக்கை இராணுவம் மற்றும் நீதிமன்றத்தின் மீதான நம்பிக்கையை விட குறைவாகவே உள்ளது எனவும் தெரிவித்துள்ளது.

 

2011 இல் 63 வீதமான மக்கள் நாடாளுமன்றத்தை நம்பினார்கள் 2022 இல் இது 24 வீதமாக காணப்படுகின்றது என தெரிவித்துள்ள ஆய்வு இந்த அரசியல் கட்சிகள் குறித்தே மக்கள் மத்தியில் மிகக்குறைந்தளவு நம்பிக்கை காணப்படுகின்றது எனவும் குறிப்பிட்டுள்ளனது.

2011 இல் அரசியல் கட்சிகளின் மீதான நம்பிக்கை 56 வீதமாக காணப்பட்டது 2024 இல் அது 19 வீதமாக குறைவடைந்துள்ளது என தெரிவித்துள்ள மாற்றுக்கொள்கைகளிற்கான நிலையம் இந்த முடிவுகள் இலங்கையின் ஜனநாயகம் எதிர்கொண்டுள்ள மிகப்பெரிய சவால்களை வெளிப்படுத்தியுள்ளன எனவும் குறிப்பிட்டுள்ளது.

இலங்கை பொலிஸ் மற்றும் சிறைச்சாலைகளால் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் சட்டவிரோத கொலைகள் மற்றும் சித்திரவதைகள் தொடர்பில் ஐ.நாவுக்கு அறிக்கை!

கைதிகளின் உரிமைகளுக்காக வாதிடும் இலங்கையின் முன்னணி அமைப்பு ஒன்று, இலங்கை பொலிஸ் மற்றும் சிறைச்சாலைகளால் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் சட்டவிரோத கொலைகள் மற்றும் சித்திரவதைகள் தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபைக்கு விசேட அறிக்கையொன்றை வழங்கியுள்ளது.

 

ஜெனிவாவில் நடைபெறும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தில் தனது அறிக்கையை சமர்ப்பித்துள்ளதாக கைதிகளின் உரிமைகளை பாதுகாக்கும் குழுவின் (CPRP) தலைவர் சுதேஷ் நந்திமால் சில்வா ஜெனீவாவில் இருந்து காணொளி மூலம் ஊடகங்களுக்கு அறிவித்துள்ளார்.

 

“இலங்கையில் நடத்தப்பட்ட மனிதாபிமானமற்ற கொலைகள், பொலிஸ் மற்றும் சிறைச்சாலையில் இடம்பெற்ற சட்டவிரோத கொலைகள் தொடர்பான உண்மைகளை நாங்கள் முன்வைத்தோம்.”

 

சித்திரவதை தொடர்பில் நீதிமன்றத்தினால் குற்றவாளியாகக் காணப்பட்ட ஒருவரை பொலிஸ் மா அதிபராக நியமித்தமை தொடர்பில் மேலும் இரண்டு அமைப்புகளுடன் இணைந்து அறிக்கை சமர்ப்பித்ததாக சுதேஷ் நந்திமால் சில்வா மேலும் வலியுறுத்தி

 

“கைதிகளின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான குழு, சமூகம் மற்றும் மத மையம் (CSR) மற்றும் பெக்ஸ் ரோமனா ஆகியவற்றுடன் இணைந்து ஆவணம் ஒன்றை உருவாக்கி மனித உரிமைகள் குறித்த ஐ.நா விசேட அறிக்கையாளரிடம் ஒப்படைத்தோம்.”

 

பதின்மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் சித்திரவதை செய்தமை மற்றும் இதற்கென அதிகாரி ஒருவருக்கு உத்தரவிட்டமை தொடர்பில் குற்றவாளியாக காணப்பட்ட தேசபந்து தென்னகோன், பாதிக்கப்பட்டவருக்கு தனது தனிப்பட்ட பணத்தில் இருந்து இழப்பீடு வழங்க வேண்டும் என கடந்த டிசம்பரில் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

 

வெளிநாட்டில் இருந்து இலங்கைக்கு வருபவர்கள் வலுக்கட்டாயமாக கடத்திச் செல்லப்படுவதாகவும் குற்றஞ்சாட்டும், கைதிகளின் உரிமைகளை பாதுகாக்கும் குழுவின் பணிப்பாளர் சபையின் தலைவர் சுதேஷ் நந்திமால் சில்வா ஜெனீவாவில் இருந்து வெளியிட்ட காணொளி கீழே இணைக்கப்பட்டுள்ளது.

நிறைவுக்கு வந்தது வெடுக்குநாறி ஆதிசிவன் ஆலயத்தில் கைது செய்யப்பட்ட 05 பேரின் உணவு தவிர்ப்பு போராட்டம் !

வவுனியா விளக்கமறியல் சிறைச்சாலையில் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்த வெடுக்குநாறி ஆதிசிவன் ஆலயத்தில் கைது செய்யப்பட்ட 05 பேரின் உணவு தவிர்ப்பு போராட்டம் இன்றுடன் நிறைவடைந்துள்ளது.

வெடுக்குநாறி மலை ஆதிசிவன் ஆலயத்தில் சிவராத்திரி வழிபாட்டில் ஈடுபட்டிருந்த போது கடந்த 8 ஆம் திகதி நெடுங்கேணி பொலிஸாரால் ஆலய பூசகர் உள்ளிட்ட 8 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர்.

 

அவர்களில் 05 பேர் கடந்த செவ்வாய்கிழமை முதல் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

 

இந்நிலையில், வெடுக்குநாறி மலையில் கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்கக் கோரியும், பொலிஸ் அராஜகத்தை கண்டித்தும் வவுனியாவில் ஆர்ப்பாட்ட பேரணி ஒன்று இடம்பெற்றிருந்தது.

 

ஆர்ப்பாட்டம் வவுனியா சிறைச்சாலை முன்றலில் நிறைவடைந்ததை தொடர்ந்து, வேலன் சுவாமி, அருட்தந்தை ரமேஸ், சட்டத்தரணி க.சுகாஸ், பாராளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன் ஆகியோர் கைது செய்யப்பட்டர்களின் உறவினர்களுடன் கலந்துரையாடி அவர்களின் இணக்கத்துடன் சிறைச்சாலைக்கு சென்று உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்த ஆலய பூசகர் மதிமுகராசா, எஸ்.தவபாலசிங்கம், கிந்துஜன், தமிழ்செல்வன், விநாயகமூர்த்தி ஆகிய 5 பேருடனும் கலந்துரையாடி அவர்களுக்கு நீராகாரம் கொடுத்து உணவு தவிர்ப்பு போராட்டத்தை நிறைவு செய்து வைத்தனர்.

 

இதன்போது, அவர்களின் விடுதலைக்காக தாம் வெளியில் ஒன்றுபட்டு தொடர் போராட்டங்களை முன்னெடுப்பதாக உணவு தவிர்ப்பு போராட்டத்தை முடிந்து வைத்தவர்கள் உறுதி மொழி வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மொழிப் பிரச்சினை, காணிப் பிரச்சினை போன்ற தமிழர்களின் பிரச்சினைகளுக்கு தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தீர்வு காணும் – வவுனியாவில் அனுரகுமார திஸ்ஸநாயக்க!

வடக்கு தமிழ்த் தலைவர்களுடன் ஏப்ரலில் பேச்சு வார்த்தைகளை முன்னெடுக்கவுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் தலைவரும், கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

எதிர்காலத்தில் அமையவுள்ள தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் வடக்கைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சர்கள் இடம்பெறுவார்கள் என்று கட்சியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

வவுனியா மாவட்ட மாநாட்டில் கருத்து தெரிவித்த போதே அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

 

அத்துடன், மொழிப் பிரச்சினை, காணிப் பிரச்சினை போன்ற தமிழர்களின் பிரச்சினைகளுக்கு தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தீர்வு காணும் எனவும் தமிழர்களின் அரசியல் உரிமைகளை உறுதி செய்யும் வகையில் அரசியலமைப்புத் திருத்தங்களை கொண்டு வரவுள்ளதாகவும் அனுரகுமார குறிப்பிட்டுள்ளார்.

 

மேலும்,சுதந்திரத்தின் பின்னர் ஏற்படுத்தப்பட்ட பிரிவினைகளை தொடர்ந்தும் பின்பற்றிக் கொண்டும், பரம்பரைபரம்பரையாக ஆட்சி அதிகாரத்தினை தக்கவைக்கும் கலாசாரத்தினையும் மாற்றுதற்கு தெற்கு மக்கள் தயாராகி விட்டார்கள்.

 

அவர்களுடன் நீங்களும் இணைந்துகொள்ளுங்கள். தமிழர்களின் பங்களிப்புடனான ஆட்சியையே நாம் எதிர்பார்க்கின்றோம் என தேசிய மக்கள் சக்தியின் தலைவரும், கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

யாழில். மாணவர்களுக்கு போதைப்பாக்கு விற்பனை – பெண் ஒருவர் கைது !

யாழில். மாணவர்களுக்கு போதைப்பாக்கு விற்பனை செய்த குற்றச்சாட்டில் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

 

அச்சுவேலி மற்றும் வல்லை பகுதிகளில் மாணவர்களை இலக்கு வைத்து போதைப் பாக்கு விற்பனையில் பெண்ணொருவர் ஈடுபட்டுள்ளார் என அச்சுவேலி பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையிலையே குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

 

பெண்ணை கைது செய்யும் போது , அவரது உடைமையில் இருந்து ஒன்றரை லீட்டர் கசிப்பு மற்றும் கஞ்சா கலந்த மாவா பாக்கு ஒரு தொகை என்பன கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வழிகாட்டுதலுக்கு அமைய வட – கிழக்கு மாகாணங்களில் தமிழ் பொலிஸ் பொலிஸ் அவசர தொலைபேசி இலக்கம் !

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்காக 107 என்ற பொலிஸ் அவசர தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் மற்றும் பொலிஸ்மா அதிபர் தேஷபந்து தென்னகோன் அகியோரின் தலைமையில் இந்த துரித இலக்கம் இன்று அறிமுகம் செய்யப்பட்டது.

24 மணித்தியாலங்களும் செயற்பாட்டில் இருக்கும் 107 என்ற துரித இலக்கத்திற்கு அழைப்பை ஏற்படுத்தி முறைப்பாடுகளை செய்ய முடியுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சேவை முற்றிலும் தமிழ் மொழியில் செயற்படுத்தப்படுவதாக பொலிஸ் ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வழிகாட்டுதலுக்கு அமைவாக இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

போரினால் நேரடியாக பாதிக்கப்பட்ட தரப்பினருடனான முறையாக ஒழுங்கமைக்கப்பட்ட சந்திப்புக்கள் இம்மாத இறுதியில் !

வட, கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் உள்ளடங்கலாக போரினால் நேரடியாக பாதிக்கப்பட்ட தரப்பினருடனான முறையாக ஒழுங்கமைக்கப்பட்ட சந்திப்புக்கள் இம்மாத இறுதியிலிருந்து ஆரம்பமாகும் என உண்மை மற்றும் நல்லிணக்கப் பொறிமுறையின் இடைக்கால செயலகத்தின் கொள்கைப் பிரிவுத் தலைவர் யுவி தங்கராஜா தெரிவித்துள்ளார்.

 

நாட்டில் உண்மை, ஒற்றுமை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை ஸ்தாபிக்கும் பணிகள் அரசாங்கத்தினால் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில், அதற்குரிய பூர்வாங்க நடவடிக்கைகளை ஒருங்கிணைக்கும் விதமாக கலாநிதி அசங்க குணவன்ச தலைமையில் இயங்கிவரும் உண்மை மற்றும் நல்லிணக்கப் பொறிமுறையின் இடைக்கால செயலகம் அண்மையில் வட, கிழக்கு மாகாணங்களுக்கு விஜயம் மேற்கொண்டு பல்வேறு தரப்பினருடனும் சந்திப்புக்களை நிகழ்த்தியிருந்தது.

 

இருப்பினும், இச்சந்திப்புக்களில் வடக்கு, கிழக்கிலுள்ள வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள், போர் விதவைகள், முன்னாள் போராளிகள் உள்ளடங்கலாக போரினால் நேரடியாக பாதிக்கப்பட்ட எந்தவொரு தரப்பினரும் உள்வாங்கப்படவில்லை என்ற விமர்சனம் பாதிக்கப்பட்ட தரப்பினரால் முன்வைக்கப்பட்டிருந்தது.

 

எனவே, பாதிக்கப்பட்ட தரப்பினருக்குரிய தீர்வினை வழங்கும் நோக்கில் இயங்குவதாகக் கூறும் உண்மை மற்றும் நல்லிணக்கப் பொறிமுறையின் இடைக்கால செயலகம் பாதிக்கப்பட்ட தரப்பினரை சந்திக்காதது ஏன் எனவும், செயலகத்தின் சந்திப்புக்களில் பங்கேற்றவர்கள் எந்த அடிப்படையில் தெரிவுசெய்யப்பட்டார்கள் எனவும் வினவியபோதே யுவி தங்கராஜா மேற்கண்டவாறு தெரிவித்தார்.

 

அண்மையில் தமது செயலக அதிகாரிகள் வட, கிழக்கு மாகாணங்களுக்கு விஜயம் மேற்கொண்டபோது மாவட்ட செயலாளர், பிரதேச செயலாளர், பல்கலைக்கழக சமூகம், சிவில் சமூகப் பிரதிநிதிகள், பெண்கள் அமைப்புக்களின் பிரதிநிதிகள் போன்ற வரையறுக்கப்பட்ட சில தரப்பினருடன் மாத்திரமே சந்திப்புக்களில் ஈடுபட்டதாகவும், பாதிக்கப்பட்ட தரப்பினருடனான பரந்துபட்ட சந்திப்புக்களில் இன்னமும் ஈடுபடவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

 

அதேவேளை, ‘உண்மை, ஒற்றுமை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு ஸ்தாபிக்கப்பட்டதன் பின்னர் அதில் முன்னிலையாகும் தரப்பினர் கையாளப்படவேண்டிய முறை உள்ளிட்ட ஒழுங்குவிதிகளை நாம் இப்போது தயாரித்து வருகின்றோம். அதேபோன்று வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் உள்ளடங்கலாக நாம் சந்திக்கவேண்டிய பாதிக்கப்பட்ட தரப்பினர் குறித்த தகவல்களைத் திரட்டி வருகின்றோம். அத்தகவல்களை மாவட்ட செயலகம், பிரதேச செயலகம், காணாமல்போனோர் பற்றிய அலுவலகம், அரச சார்பற்ற அமைப்புக்களின் செயலகம், மக்கள் பேரவை போன்ற கட்டமைப்புக்களின் ஊடாக சேகரிக்கின்றோம்’ என்றும் யுவி தங்கராஜா குறிப்பிட்டார்.

 

மேலும், பாதிக்கப்பட்ட தரப்பினருடன் தனிப்பட்ட ரீதியில் தொடர்புகளை பேணி வந்திருந்தாலும், முறையாக ஒழுங்கமைக்கப்பட்ட கட்டமைப்பு ரீதியிலான சந்திப்புக்கள் இம்மாத இறுதியில் அல்லது எதிர்வரும் ஏப்ரல் மாத தொடக்கத்தில் ஆரம்பமாகும் எனவும் அவர் உத்தரவாதம் அளித்தார்.

வட்டுக்கோட்டையில் இளைஞன் படுகொலை செய்யப்பட்ட விவகாரம் – விசாரணைகளை ஆரம்பித்தது மனித உரிமைகள் ஆணைக்குழு!

யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை இளம் குடும்பஸ்தர் கொலை தொடர்பில் கடற்படையினரின் செயற்பாடுகள் தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண பிராந்திய அலுவலகம் தனது விசாரணைகளை  வெள்ளிக்கிழமை (15) ஆரம்பித்துள்ளது.

வட்டுக்கோட்டை – மாவடி பகுதியைச் சேர்ந்த தவச்செல்வம் பவித்திரன் (வயது 23) என்ற குடும்பஸ்தர் குழு ஒன்றினால் கடத்தப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார்.

குறித்த சம்பவத்துடன் கடற்டையினரின் செயற்பாடுகள் தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண பிராந்திய அலுவலகம் ஊடகங்களில் வெளியாகிய செய்திகள் மற்றும் காணொளிகளின் அடிப்படையில் தனது சொந்தப் பிரேரணையாக எடுத்து குறித்த விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது,

கொலை செய்யப்பட்ட குடும்பஸ்தரும் அவரது மனைவியும் காரைநகரில் இருந்து வட்டுக்கோட்டை – மாவடியில் உள்ள வீட்டுக்கு சென்றுகொண்டிருந்தவேளை பொன்னாலை கடற்படை முகாமுக்கு அருகாமையில் இரண்டு கார்களில் ஆயுதங்களுடன் நின்ற சிலர் அவர்களை வழி மறித்தனர்.

இதன்போது இருவரும் தப்பித்து கடற்படை முகாமுக்குள் உள்நுழைந்தனர். இந்நிலையில் கடற்படையினர் அவர்களை வெளியே விரட்டினர். இதனால் அவர்கள் வெளியே வந்தவேளை, ஒரு காரில் மனைவியையும், அடுத்த காரில் குறித்த நபரையும் ஏற்றிக்கொண்டு குறித்த குழு அங்கிருந்து சென்றது.

பின்னர் மனைவியை சித்தங்கேணி சந்தியில் இறக்கி விட்டனர். அதன்பின்னர் மனைவி வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்வதற்கு சென்றுள்ளார்.

இந்நிலையில் குறித்த நபரை கடத்திச் சென்றவர்கள் அவர் மீது வாள்வெட்டு தாக்குதல் மேற்கொண்ட பின்னர் வட்டுக்கோட்டை பிரதேச வைத்தியசாலையினுள் காரில் சென்று, வைத்தியசாலையில் உள்ள மாமரத்துக்கு கீழே அவரை தூக்கி வீசிவிட்டு சென்றனர்.

இந்நிலையில் வைத்தியசாலையில் இருந்த சுகாதார பணியாளர்கள் இது குறித்து வைத்தியருக்கு தொலைபேசி மூலம் தெரியப்படுத்தினர்.

அவ்விடத்திற்கு வந்த வைத்தியர் நோயாளர் காவுவண்டி மூலம் அவரை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்றவேளை சில நிமிடங்களில் அவர் வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார்.

குறித்த குடும்பஸ்தரின் மரணம் சித்திரவதை செய்யப்பட்டு கூரிய ஆயுதங்களால் கொலை செய்யப்பட்டுள்ளார் என யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் வட்டுக்கோட்டை இளைஞனை கடத்தி கொலை செய்வதற்கு கடற்படையினரும் ஒரு வகையில் காரணம் என கொலை செய்யப்பட்டவரின் மனைவி குற்றம் சாட்டியுள்ள நிலையில், இளைஞனை கடத்துவதற்கு கடற்படையினர் உதவும் வீடியோ காட்சிகளும் வெளியாகியது.

குறித்த  காணொளியில், இளைஞனும் மனைவியும் தஞ்சம் கோரி முகாமுக்கு ஓடி வருவதும், அங்கு கடற்படையினர் அவர்களை தாக்குவதும், வன்முறை கும்பல் கடற்படையின் கண் முன்னே முகாம் பகுதியில் வைத்தே கணவன் மனைவியை கடத்தி செல்வதும் பதிவாகியுள்ளது.

கடற்படையினர் துப்பாக்கிகளுடன் கடத்தல் காரர்களுக்கு உதவி செய்வது காணொளியில் தெளிவாக பதிவாகியுள்ள நிலையில் கடத்தலுக்கு கடற்படையினர் உதவினார்கள் என்ற குற்றச்சாட்டை உயிரிழந்தவரின் மனைவி முன் வைத்துள்ள நிலையில் அது தொடர்பில் ஊடகங்களிலும் செய்திகள் வெளிவந்தது.

இந்நிலையில் வெள்ளிக்கிழமை குறித்த கடற்படை முகாமுக்கு சென்ற மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண பிராந்திய உத்தியோத்தர்கள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

குறித்த விடயம்  தொடர்பில் கருத்து தெரிவித்த இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண பிராந்திய இணைப்பாளர் ரி. கனகராஜ், ஊடகங்களில் வெளியாகிய செய்திகள் மற்றும் காணொளிகளின் அடிப்படையில் கடற்கரையினரின் செயற்பாடுகள் தொடர்பில் அறிக்கை கேட்டுள்ளோம்.

அதுமட்டுமல்லாது குறித்த இளைஞனின் கொலை தொடர்பில் பொலிசாரால்  மேற்கொள்ளப்படும்  விசாரணைகள் தொடர்பிலும் விரிவான அறிக்கை கேட்டுள்ளோம் என அவர் மேலும் தெரிவித்தார்.