உள்நாட்டுச் செய்திகள்

உள்நாட்டுச் செய்திகள்

“இணைய வழி சந்திப்பின் போது இலங்கை அரசு சிறுபான்மையினரான தமிழர்களுக்கு அதிகாரப்பகிர்வு அளிக்க வேண்டும் என்று பிரதமர் மோடி வலியுறுத்தினார் ” – இந்திய மத்திய வெளியுறவு அமைச்சகம்

இலங்கை அரசு சிறுபான்மையினரான தமிழர்களுக்கு அதிகாரப்பகிர்வு அளிக்க வேண்டும் என்று பிரதமர் மோடி வலியுறுத்தினார் என்றும் சமத்துவம், நீதி, அமைதி, கௌரவம் ஆகியவற்றை எதிர்பார்க்கும் தமிழர்களின் அவாவை நிறைவேற்ற வேண்டும் என்றும் அமைதி மற்றும் சமாதானத்துக்கான பேச்சை முன்னெடுக்க வேண்டும் என்றும் இந்தியா வலியுறுத்தியதாக இந்திய மத்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்தியா- இலங்கை நாடுகளுக்கு இடையேயான உச்சி மாநாடு கடந்த சனிக்கிழமை(26.09.2020)  காணொளி வாயிலாக நடைபெற்றது.இதன்போது இலங்கை பிரதமருடன் இந்திய பிரதமர் நடத்திய பேச்சின் போதே மேற்கண்டவாறு வலியுறுத்தியதாக இந்திய மத்திய வெளியுறவு அமைச்சக இந்தியப் பெருங்கடல் பிரிவு இணைச் செயலர் அமித் நரங் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்

இலங்கை நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றதற்காக ராஜபக்சவுக்கு மோடி வாழ்த்துக்களை கூறினார். மேலும், தனது அழைப்பை ஏற்று, இந்தியா – இலங்கை நாடுகளுக்கு இடையேயான மெய்நிகர் உச்சி மாநாடு நடத்த ஒப்புதல் தெரிவித்ததற்கு நன்றி தெரிவித்துக்கொள்வதாக பிரதமர் மோடி குறிப்பிட்டார்.

“ இந்த உச்சி மாநாட்டின் விளைவுகள் முக்கியத்துவம் வாய்ந்தவை. முன்னோக்கிச் செல்வது மற்றும் உறவுகளை மேலும் ஆழப்படுத்த மிகப்பெரிய திட்டத்தை வழிவகுக்க உதவும்”.

இருதலைவர்களும் மீனவர்கள் பிரச்சினை குறித்தும் விவாதித்தனர், இதில் இதுவரை இருந்து வரும் “ஆக்கப்பூர்வமான, மனிதநேயவாத அணுகுமுறையே கைகொடுக்கும்” என்று இருவரும் ஒப்புக் கொண்டதாக நரங் தெரிவித்தார்.

இந்தப் பேச்சுவார்த்தையின் போது இலங்கையுடனானபௌத்த உறவுகளை வளர்க்க பிரதமர் மோடி 15 மில்லியன் டொலர்கள் உதவி அறிவித்தார்.

பேச்சின் தொடக்கத்தில் பிரதமர் மோடி, “உங்கள் கட்சி தேர்தலில் மிகப்பெரிய வெற்றி பெற்றதையடுத்து இந்திய-இலங்கை உறவுகளில் புதிய அத்தியாயம் தொடங்க நல்ல வாய்ப்பு அமைந்துள்ளது. இருநாட்டு மக்களும் நம்மை புதிய நம்பிக்கையுடனும் எதிர்பார்ப்புகளுடன எதிர்நோக்குகின்றனர்” என்று மோடி கூறியதாக நரங் தெரிவித்தார்.

இலங்கைத் தமிழர்கள் விவகாரத்தில் இரு தலைவர்களும் சமாதானப் போக்கு குறித்து ஆலோசித்தனர் என்று கூறிய நரங், “பிரதமர் மோடி, தமிழர்களுக்கு சமத்துவம்,நீதி அமைதி, மற்றும் கௌரவம் கிடைக்க ஒருங்கிணைந்த இலங்கையில் சமாதானம் ஏற்பட அரசு பணியாற்ற வேண்டும்”

“அத்துடன் 13வது சட்டத்திருத்தம் தமிழர்களுக்கு அதிகாரம் வழங்க வேண்டும் என்கிறது. அதன் படி தமிழர்களுக்குஅதிகாரம் பகிரப்பட வேண்டும் என்பதை இந்தியா வலியுறுத்தியது.”என்று கூறியதாகத் தெரிவித்தார்.

இதேவேளை இந்த காணொளி உரையாடலில் பேசிய ஸ்ரீலங்கா பிரதமர் பிரதமர் மகிந்த ராஜபக்ச, ”கொரோனா காலத்தில் மற்ற நாடுகளுடன் பொதுநலத்துடன் செயல்படும் இந்தியாவிற்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

இலங்கையின் பிரதமாராக ஓகஸ்ட் 9-ஆம் திகதி பதவியேற்ற பின்னர் இந்தியாவுடன் முதல் மாநாட்டில் கலந்துகொள்கிறேன்.

இலங்கை கடற்பகுதியில் கடந்த சில நாள்களுக்கு முன்பு தீப்பிடித்து எரிந்த எம்.டி. நியூ டைமண்ட் கப்பலில் இந்திய கடற்படையினர் சிறப்பான முறையில் மீட்பு பணிகளை மேற்கொண்டு ஒத்துழைப்பு அளித்தனர்” என்று ராஜபக்ச கூறினார்.

கொரோனா அச்சுறுத்தலை வெற்றிகரமாக கட்டுப்படுத்தி பொருளாதாரத்தை மீண்டும் கட்டி எழுப்பிய உலக நாடுகளின் பட்டியலில் இலங்கைக்கு இரண்டாம் இடம் !

கொரோனா வைரஸ்  அச்சுறுத்தலை வெற்றிகரமாக கட்டுப்படுத்தி பொருளாதாரத்தை மீண்டும் கட்டி எழுப்பிய உலக நாடுகளின் பட்டியலில் இலங்கை இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது.

சீன முதன்மை புலனாய்வு ஆய்வு நிறுவனமான ´இகாயி´ நிறுவனம் நடத்திய ஆய்வில் இந்த விடயம் தெரியவந்துள்ளது. தொற்று நோயை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்தமை, பொருளாதாரத்தை மீண்டும் கட்டி எழுப்பியமை மற்றும் சர்வதேச உறவுகளை வலுப்படுத்தியமை உள்ளிட்ட விடயங்களை மையப்படுத்தி இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.

108 நாடுகளை மையப்படுத்தி மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வில் சீனாவுக்கு முதலிடம் வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி சீனா, இலங்கை, தென்கொரியா, மியன்மார், அவுஸ்திரேலியா, தாய்லாந்து, நியூசிலாந்து, வியட்நாம், கம்போடியா மற்றும் கானா ஆகிய நாடுகள் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளன.

பண்டையகாலத்து மீன் மற்றும் வாள் சின்னங்கள் பொறிக்கப்பட்ட நாணயக் குற்றிகள் கண்டுபிடிக்கப்பட்ட இடத்துக்கு நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் விஜயம் !

மன்னார் – நானாட்டான் வடக்கு வீதி என்னும் இடத்தில் மீன் மற்றும் வாள் சின்னங்கள் பொறிக்கப்பட்ட 1904 நாணயக் குற்றிகள், சட்டி ,பாணை ஓட்டுத் துண்டுகளும் அண்மையில் கண்டுப்பிடிக்கப்பட்டு முருங்கன் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டிருந்தது.

நாணயங்கள் கண்டுபிடிக்கப்பட்ட பகுதிக்கு நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் விஜயம் செய்ததுடன் ,யாழ்ப்பாண பல்கலைக்கழக சிரேஸ்ட பேராசிரியர் ப.புஷ்பரட்ணம் ,யாழ்ப்பாண கோட்டை புனர்நிர்மான உத்தியோகத்தர்ப.கபிலன் , யாழ்.கோட்டை அகழ்வாய்வு உத்தியோகத்தர் வி.மணிமாறன் , தொல்லியல்துறை மாணவர்கள் சிலருடனும்  கலந்துரையாடியுள்ளார்.

மேலும் வரலாற்று சின்னங்கள் பாதுகாக்கப்பட வேண்டும். அத்துடன் இவ் நாணயக்குற்றிகள் வரலாற்று நூல்களின் படி மீன் மற்றும் வாள் சின்னங்கள் பாண்டிய மன்னர்களுடைய முடியாட்சிக்கு உரியவையாக அறிய முடிகிறது எனவும் குறிப்பிட்டதுடன், இது தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.

இச்சந்திப்பில் நானாட்டான் பிரதேச சபை உப தவிசாளரும் கலந்துக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

ஸ்தம்பித்தது வடக்கு கிழக்கு – தமிழ்தேசிய கட்சிகளின் ஹர்த்தாலிற்கு வடக்கு – கிழக்கு மக்கள் பூரண ஆதரவு !

ஒன்றிணைந்த தமிழ் தேசிய கட்சிகளின் ஏற்பாட்டில் இன்றைய தினம் வடக்கு கிழக்கில் அழைப்பு விடுக்கப்பட்ட ஹர்த்தாலிற்கு யாழ்ப்பாணம் மக்கள் பூரண ஆதரவினை வழங்கியுள்ளார்கள்.

இன்றைய தினம் ஹர்த்தாலினாள் யாழ்ப்பாண நகரம் முற்றாக முடங்கியது. யாழ்ப்பாணத்தில் வர்த்தக நிலையங்கள்,பாடசாலைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன.

பொதுமக்கள் வீதிகளில் பயணிக்கவில்லை, அத்தியாவசிய சேவைகள் தவிர்ந்த அனைத்து சேவைகளும் இன்றைய தினம் ஸ்தம்பிதம் அடைந்துள்ளன.

10 தமிழ் கட்சிகள் மற்றும் பொது அமைப்புக்கள் ஒன்றிணைந்து தற்போதைய அரசினால் மேற்கொள்ளப்படும் தமிழ் மக்கள் மீதான அடாவடித்தனத்திற்கு ஜனநாயக ரீதியில் எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக இன்றைய தினம் வடக்கு கிழக்கில் பூரண கர்த்தாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

குறித்த அழைப்பிற்கு தமிழ் மக்கள் பூரண ஒத்துழைப்பினை வழங்கி தமது ஆதரவினை அளித்துள்ளார்கள், எனினும் நேற்றைய தினத்தில் இன்றைய ஹர்தாலுக்கு எதிராக போராட்டம் இடம்பெற்ற போதும், தமிழ் மக்கள் ஹர்தாலுக்கு பூரண ஆதரவினை வழங்கி உள்ளதை அவதானிக்க கூடியதாக உள்ளது.

“தியாகி திலீபன் நினைவேந்தலை நடத்த தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்ட 20 பேரில் யாரும் என்னை முன்னிலையாகும்படி கோரவில்லை” – எம்.ஏ.சுமந்திரன்

“தியாகி திலீபன் நினைவேந்தலை நடத்த தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்ட 20 பேரில் யாரும் என்னை முன்னிலையாகும்படி கோரவில்லை” என கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

தென்னிலங்கை ஊடகமொன்றிற்கு வழங்கிய செவ்வியிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

தியாகி திலீபன் நினைவேந்தலை நடத்தக் கூடாதென யாழ். நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதில் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்ட 20 பேரில் யாரும் என்னை முன்னிலையாகும்படி கோரவில்லை. வழக்கொன்றில் முன்னிலையாகுவதெனில் அந்த தரப்பினர் சட்டத்தரணியை அணுக வேண்டும் அப்படி அணுகாததால் நான் முன்னிலையாகவில்லை.

கடந்த முறை யாழ்.மாநகரசபை முதல்வர் ஆல்நோட் என்னை தொடர்பு கொண்டு முன்னிலையாகும் படி கேட்டுக் கொண்டார். அதனால் முன்னிலையானேன். நினைவேந்தலிற்கு நீதிமன்றம் அனுமதித்தது. அடுத்த முறையும் அனுமதித்தது.

இதே நீதிமன்றம் தான் நினைவேந்தலிற்கு அனுமதியளித்தது. அந்த வழக்கின் தீர்ப்பை மேற்கோள் காட்டியிருந்தாலே நினைவேந்தலிற்கு அனுமதிக்கப்பட்டிருக்கும்.

நீதிமன்றத்தில் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்ட பின்னரே, என்னை ஆல்நோட் அணுகினார். ஆனால், அனைத்தும் முடிந்த பின்னரே அவர் அணுகினார். அதனால் பலனிருக்கவில்லை.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை அனுஸ்டிக்க வேண்டுமென மக்கள் தன்னெழுச்சியாக விரும்பியிருந்தனர். மாறாக திலீபன் நினைவேந்தலை நடத்த வேண்டுமென்ற அதிகளவு உணர்வு தமிழ் மக்களிடம் இருப்பதாக தெரியவில்லை.

சில அரசியல் கட்சிகள் அதை ஒழங்கு செய்கிறார்கள். ஆனால், நினைவேந்தலை செய்யும் உரிமை தமக்கு இருப்பதாக மக்கள் உணர்கின்றார்கள். யாராவது நினைவேந்தலை ஒழுங்கமைத்தால் மக்கள் அதில் கலந்து கொள்வார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

“புலிகளின் ஆதரவாளர்களையாவது வளைத்துப் பிடித்து விடவேண்டும் என்ற நோக்கில் திலீபன் தொடர்பில் தமிழ் அரசியல் தலைவர்கள் நீலிக் கண்ணீர் வடிக்கின்றனர்” – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா

“காத்திரமான அரசியல் வேலைத் திட்டம் ஏதுமின்றி மக்கள் ஆதரவை இழந்துள்ள நிலையில் புலிகளின் ஆதரவாளர்களையாவது வளைத்துப் பிடித்து விடவேண்டும் என்ற நோக்கில் திலீபன் தொடர்பில் தமிழ் அரசியல் தலைவர்கள் நீலிக் கண்ணீர் வடிக்கின்றனர்” அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

தொலைக்காட்சி நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே, ஈழ விடுலைப் போராட்ட இயக்கங்களின் ஆரம்ப கால உறுப்பினரும் கடற்றொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா குறித்த கருத்தினை வெளியிட்டுள்ளார்.

இதுதொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “திலீபனை நினைவுகூருவது தொடர்பாக தற்போது பேசி வருகின்ற அரசியல் தலைவர்கள் சுயநல அரசியல் நோக்கங்களுக்காக பேசுகின்றார்களே தவிர, எவரும் உளப்பூரவமாக பேசவில்லை.

குறித்த அரசியல் தலைவர்களை இதுதொடர்பான பகிரங்க விவாத்திற்கு வருமாறு அழைக்கின்றேன். குறிப்பாக ரெலோ, ஈ.பி.ஆர்.எல்.எப், புளொட் போன்ற அமைப்புக்களை புலிகளின் தலைமை அழித்தபோது யாழ்ப்பாணத்தில் அதனை நேரடியாக திலீபன் வழிநடத்தியிருந்தார்.

அதேபோன்று, தமிழரசுக் கட்சித் தலைவர்களும் புலிகளின் தலைமையினால் அழிக்கப்பட்டிருக்கின்றார்கள். அதுமாத்திரமல்ல, தற்போது குறித்த அமைப்புக்களின் தலைவர்களாக திலீபனை நினைவுகூர வேண்டும் என்று கையொப்பம் இட்டவர்களும் புலித் தலைவர்களின் கொலைப் பட்டியலில் இருந்தவர்கள்தான்.

இவ்வாறானவர்களினால் உளப்பூர்வமாக திலீபனை நினைவு கூரமுடியாது. எனினும் காத்திரமான அரசியல் வேலைத் திட்டம் ஏதுமின்றி மக்கள் ஆதரவை இழந்துள்ள நிலையில் புலிகளின் ஆதரவாளர்களையாவது வளைத்துப் பிடித்து விடவேண்டும் என்ற நோக்கில் திலீபன் தொடர்பில் நீலிக் கண்ணீர் வடிக்கின்றனர்” என்று தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

”ராஜபக்ச அரசு கொடூர அரசு என்பது உலகறிந்த உண்மை . இந்த அரசு தமிழர்களை நாளுக்குநாள் வதைக்கின்றது” – சஜித் பிரேமதாஸ , அநுரகுமார திஸாநாயக்க காட்டம் !

“ஒவ்வொரு தினமும் உயிரிழந்த தமது உறவுகளை நினைவுகூர உரிமையுண்டு. அதை எவரும் பறிக்கவே முடியாது. அதேவேளை, ஓர் இனம் தமது உரிமைகளை வலியுறுத்தி அறவழியில் போராட இந்த நாட்டின் சட்டத்தில் இடம் உண்டு. அதையும் எவரும் தடுக்கவே முடியாது.” என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸ, ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க ஆகியோர் கூட்டாகத் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர்கள் மேலும் தெரிவித்துள்ளதாவது:-

“ராஜபக்ச அரசு கொடூர அரசு என்பது உலகறிந்த உண்மை. இந்த அரசின் அடாவடிகள் நாளுக்குநாள் அதிகரிக்கின்றன. அதிலும் தமிழர்களை இந்த அரசு மேலும் வதைக்கின்றது.

தமிழ் மக்களின் ஆணையுடன் நாடாளுமன்றத்துக்கு வந்துள்ள தமிழ்த் தலைவர்கள் தங்கள் இனத்தின் உரிமை சார்ந்த விடயங்களை நாடாளுமன்றத்தில் பேசுவதற்கு அனுமதி மறுக்கப்படுகின்றது. அதை நாம் மிகவும் வன்மையாகக் கண்டிக்கின்றோம். நாடாளுமன்றத்திலும் எமது கண்டனங்களை நேரில் தெரிவித்துள்ளோம்.

ஆயுதப் போரில், அறவழிப் போரில் உயிரிழந்த தமது உறவுகளை நினைவுகூரவும், அந்த உரிமை மறுக்கப்படுகின்றபோது அதற்கு எதிராக அறவழியில் போராடவும் தமிழர்களுக்கு உரிமையுண்டு. அதை இராணுவத்தைக்கொண்டு அல்லது பொலிஸாரைக் கொண்டு அல்லது நீதிமன்றத்தைக் கொண்டு தடுத்து நிறுத்தும் ஈனத்தனமான செயலை இந்த அரசு உடன் கைவிட வேண்டும்” – என்றார்கள்.

தடைகளையும் தாண்டி மட்டக்களப்பு  கல்லடி விஸ்ணு ஆலயத்தில் மட்டக்களப்பு இளைஞர்களால் தியாக தீபம் திலீபனுக்கு அஞ்சலி !

தியாகிதிலீபனின் நினைவு தினத்தை அனுஸ்டிக்க கூடாது என நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் யாழ்.சாவகச்சேரியில் தமிழ்தேசிய கட்சிகள் கூடி உண்ணாவிரத போராட்டம் ஒன்றை மேற்கொண்டு வருகின்றனர்.

திலிபனின் நினைவுதின அனுஸ்டிப்பை தடைசெய்ய பொலிஸாரும் கண்காணிப்புக்குழுவினரும் தடைசெய்ய மும்முரமாக செயற்பட்டு வருகின்ற போதிலுமு் கூட  இலங்கை அரசின் பல தடைகளையும் தாண்டி மட்டக்களப்பு  கல்லடி விஸ்ணு ஆலயத்தில் மட்டக்களப்பு இளைஞர்களால் தியாக தீபம் திலீபனுக்கு மலர்தூவி பிராத்தனை அஞ்சலி அனுஸ்டிப்புப்பு இடம்பெற்றுள்ளது.

1 38

”பொலிஸார் மற்றும் அரச புலனாய்வு பிரிவினரின் கெடுபிடிகளுக்கும் கண்காணிப்புகளுக்கும் மத்தியில் ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலய முன்றலில் உண்ணாநோன்பு போராட்டம் !

முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலய முன்றலிலும் தியாக தீபம் திலீபன் அவர்களின் நினைவேந்தலின் இறுதி நாளான இன்று (26.09.2020) அடையாள உண்ணாநோன்பு இடம்பெற்று வருகின்றது.

தமிழ் மக்களின் நினைவேந்தல் உரிமையை கோரி இந்த அடையாள உண்ணாவிரத போராட்டம் தியாக தீபம் திலீபன் அவர்களின் வழியில் இடம்பெற்று வருகின்றது.

பொலிஸார் மற்றும் அரச புலனாய்வு பிரிவினரின் கெடுபிடிகளுக்கும் கண்காணிப்புகளுக்கும் மத்தியில் உண்ணாநோன்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

unnamed 27

இந்த உண்ணாநோன்பு போராட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா , முன்னாள் வடக்கு மாகாண அமைச்சர் சத்தியலிங்கம் , கரைதுறைப்பற்று பிரதேச சபை தவிசாளர் பிரதேச சபை உறுப்பினர்கள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டுள்ளனர்.

புரட்டாதி சனி விரதம் இன்றைய நாளில் அனுஷ்டிக்க பட்டு வரும் நிலையில் ஆலயத்துக்கு அதிகளவான மக்கள் வருகைதருகின்ற நிலையில் இந்த உண்ணாநோன்பு முன்னெடுக்க பட்டு வருகின்றது.

தமிழ் தேசியக் கட்சிகளால் முன்னெடுக்கப்படும் அடையாள உணவு தவிர்ப்புப் போராட்டத்தில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களும் பங்கேற்பு !

தமிழ் மக்களுக்கு எதிராக கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ள அடக்குமுறைகளை அரசு நிறுத்த வேண்டும் என்று கோரி ஒன்றிணைந்த தமிழ் தேசியக் கட்சிகளால் முன்னெடுக்கப்படும் அடையாள உணவு தவிர்ப்புப் போராட்டத்தில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களும் இணைந்து கொண்டுள்ளனர்.

போராட்ட இடத்தில் கண்காணிப்புக் கடமையில் இருக்கும் பொலிஸார், மாணவர்களை போராட்ட இடத்துக்கு அனுமதியளிக்க மறுத்தனர். எனினும் மூத்த சட்டத்தரணி என்.சிறிகாந்தா பொலிஸாருக்கு விடயத்தை எடுத்துக் கூறியதன் அடிப்படையில் பின்னர் அனுமதித்தனர்.
உணவு தவிர்ப்புப் போராட்டத்தில் யாழ்.பல்கலை. மாணவர்களும் இணைவு | Muthalvan  News
சாவகச்சேரி சிவன் ஆலய முன்றலில் இன்று காலை 9 மணி தொடக்கம் இடம்பெற்று வரும் இந்தப் போராட்டத்தில் பலரும் பங்கேற்றுள்ளனர்.

தொண்டமனாறு செல்வச் சந்நிதி ஆலயத்தில் இந்தப் போராட்டத்தை நடத்த திட்டமிட்டிருந்த போதும் வல்வெட்டித்துறை பொலிஸாரால் நேற்று பருத்தித்துறை நீதிமன்றில் தடை உத்தரவு பெறப்பட்டது.

இந்த நிலையிலேயே அரசின் அடக்குமுறைகளுக்கு எதிரான அடையாள உணவு தவிர்ப்புப் போராட்டம் சாவகச்சேரி சிவன் ஆலய முன்றலில் இடம்பெற்று வருகிறது.