உள்நாட்டுச் செய்திகள்

உள்நாட்டுச் செய்திகள்

இலங்கையின் சகல அதிகாரிகளையும் இராணுவம் கட்டுப்படுத்தும் நிலை ஏற்படும் ! – சுமந்திரன் காட்டம்.

இலங்கையில் இராணுவமயப்படுத்தல் பரவலடைய ஆரம்பித்துள்ளமை தொடர்பாக பலரும் தங்களுடைய அதிருப்தியயை வெளிப்படுத்தி வருகின்றனர்.இலங்கையில் இராணுவமயப்படுத்தலின் ஒரு பகுதியாக அண்மையில் மாவட்ட செயலகங்கள் மற்றும் பிரதேச செயலகங்களை பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டு வரப்பட்டிருந்தன.  இதனை கண்டித்து எம்.ஏ சுமந்திரன் அவர்கள் தன்னுடைய அதிருப்தியை வெளியிட்டுள்ளார்.

நாடு இராணுவ மயமாவதாக நான் கூறியபோது அதனை அரசும் அரசுடன் இணைந்த கட்சிகளும் மறுப்பு தெரிவித்தன. ஆனால் இப்போது மாவட்ட செயலகங்கள் மற்றும் பிரதேச செயலகங்களை பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டு செல்வதானது நாட்டின் நிர்வாகத்தை இராணுவத்திடம் தாரைவார்ப்பதற்கு சமானனது என எம்.ஏ. சுமந்திரன் எச்சரித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பாக மேலும் கருத்து தெரிவித்த அவர்,

நாட்டின் சிவில் நிர்வாகத்தை மேற்கொள்ளும் உள்நாட்டு அலுவல்கள் விடயங்கள் தற்போது பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டு செல்வதானது மிக மோசமான நிலையை ஏற்படுத்தும்.

அதேவேளை சகல அதிகாரிகளையும் இராணுவம் கட்டுப்படுத்தும் நிலை ஏற்படும் என்றும் சுமந்திரன் சுட்டிக்காட்டினார்.

ஒரு நாட்டின் சிவில் நிர்வாகங்களுடனேயே சர்வதேச நாடுகள் தொடர்பினை பேண விரும்பும் நிலையில் அந்தநிலை தற்போது கேள்விக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இதேநேரம் இவ்வாறு பாதுகாப்பு அமைச்சின் கீழ் சிவில் நிர்வாகத்தினை ஒப்படைக்கும் நடவடிக்கைக்கு அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் அத்தனை தமிழ் அமைச்சர்களும் பொறுப்பேற்க வேண்டும் என்றும் சுமந்திரன் குறிப்பிட்டார்.

எந்த தீர்வும் இல்லாமல் நகரும் காணாமலாக்கப்பட்டோருக்கான உறவினர் போராட்டம் – மேலும் ஒரு தாய் மரணம்!

கடந்த 2009ஆம் ஆண்டு யுத்தம் முடிவடைந்த பின்னர் இராணுவத்திடம் கையளித்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் மற்றும் யுத்த காலத்தின் போது வெள்ளை வான்களில் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்படடவர்கள் என பல்வேறு வகைகளிலும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தங்களுடைய உறவுகளை தேடி தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் கடந்த 2017ம் ஆண்டு மூன்றாம் மாதம் எட்டாம் திகதி ஆரம்பித்த கவனயீர்ப்பு போராட்டம் இன்று 1250 வது நாளாகவும் இடம்பெற்று வருகின்றது.

இந்நிலையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களது தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த மற்றுமொரு தாயார் நேற்று (10.08.2020) உயிரிழந்துள்ளார்.

முல்லைத்தீவு மாணிக்கபுரம் விசுவமடு பகுதியைச் சேர்ந்த 74 வயதுடைய மைக்கல் ஜேசு மேரி எனும் தாயாரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கடந்த 2009 ஆம் ஆண்டு மாத்தளன் பகுதியில் தனது மகனான மைக்கல் ஜோசப் என்பவர் காணாமலாக்கப்பட்ட நிலையில் தன்னுடைய மகனை தேடி தொடர்ச்சியாக முல்லைத்தீவில் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில் இவர் நேற்று சுகயீனம் காரணமாக உயிரிழந்துள்ளார்.

முல்லைத்தீவில் இந்த தாயாருடன் தமது உறவுகளை தேடிவந்த பல உறவுகள் உயிரிழந்த நிலையில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

கடமைகளை ஆரம்பித்தார் இவங்கையின் புதிய பிரதமர் !

நிறைவடைந்த பொதுத்தேர்தலில் குருநாகல் மாவட்டத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் போட்டியிட்ட மஹிந்த ராஜபக்ஷ, 5 இலட்சத்து 27 ஆயிரத்து 364 விருப்பு வாக்குகளை பெற்றிருந்தார்.அந்த வகையில், இலங்கை வரலாற்றில் வேட்பாளர் ஒருவர் பெற்றுக்கொண்ட அதிக விருப்பு வாக்குகளாக இது பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அதனடிப்படையில் நாட்டின் 14ஆவது பிரதமராக இவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை களனி ரஜமஹா விகாரையில் இடம்பெற்ற பதவியேற்பு நிகழ்வில்  ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் பிரதமராக சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.

இந்நிலையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உத்தியோகபூர்வமாக தனது கடமைகளை அலரிமாளிகையில் இன்று ஆரம்பித்துள்ளார்.

நுவரெலியா பம்பரக்கலை மத்திய பிரிவில் தீ விபத்து!

லிந்துலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பம்பரக்கலை மத்திய பிரிவில் நேற்றிரவு (10.08.2020)) 10 மணியளவில் ஏற்பட்ட தீ விபத்தினால், 24 தொழிலாளர் குடியிருப்புகள் முற்றாக தீக்கிரையாகியுள்ளன.

தீ விபத்து காரணமாக லயன் தொகுதியில் அமைந்திருந்த வீடுகள் முற்றாக சேதமடைந்ததுடன்,  இந்த வீடுகளில் குடியிருந்த 24 குடும்பங்களை சேர்ந்த 70 பேர் வரை பாதிக்கப்பட்டுள்ளனர்.

வீட்டில் இருந்தவா்கள் கூச்சலிட்டதை அடுத்து அயலவர்கள் ஓடி வந்து தீயை அணைக்க முற்பட்டபோதும்,  தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர முடியவில்லை. அதனையடுத்து லிந்துலை பொலிஸார் மற்றும் பொதுமக்கள் இணைந்து தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர நடவடிக்கை எடுத்ததுடன், சுமார் 03 மணித்தியாலயத்தின் பிறகு தீ கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டது.

இவர்களுக்கான நிவாரண உதவிகளை தோட்ட நிர்வாகமும், அக்கரப்பத்தனை பிரதேச சபை ஊடாகவும் வழங்கப்பட்டுள்ளது.

இத்தீ விபத்து மின்சார ஒழுக்கு காரணமாக ஏற்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் தெரிவிப்பதுடன், இது தொடர்பான விசாரணைகளையும் சேத விபரங்கள் தொடர்பாகவும் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கும் லிந்துலை பொலிஸார், நுவரெலியா பொலிஸ் கைரேகை அடையாளப்பிரிவுடன் இணைந்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.

புதிய அரசாங்கத்தின் அமைச்சராகிறார் முன்னாள் ஜனாதிபதி !

நாளைய தினம் கண்டியில் இலங்கையின் ஒன்பதாவது பாராளுமன்றத்துக்கான புதிய அமைச்சர்கள் பதவியேற்கவுள்ள நிலையில் புதிய அமைச்சர்களாக பதவியேற்கவுள்ளோர் யார் ? என்ற ஆவல் இலங்கை மக்களிடையே ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் புதிய அரசாங்கத்தின் அமைச்சரவையில்  ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு மூன்று அமைச்சு பொறுப்புக்களை வழங்க இணக்கம் வெளியிடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனடிப்படையில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, மகிந்த அமரவீர, நிமல் சிறிபால டி சில்வா ஆகியோருக்கு அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சு பதவிகள் வழங்கப்பட உள்ளன.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகரவுக்கு அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சு பதவியை வழங்குவதில்லை எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அவருக்கு ராஜாங்க அமைச்சு பதவி வழங்கப்படலாம் எனவும் கூறப்படுகிறது.

மக்கள் நலனுக்காக தற்போதைய சூழ்நிலையில் ஒற்றுமையாக செயற்பட முன்வாருங்கள்! – சித்தார்த்தன்.

நடைபெற்று முடிந்த பாராளுமன்றத்தேர்தல் முடிவுகளினுடைய அடிப்படையில் பாராளுமன்றில் தமிழர்தாயகம் என்ற கொள்கையோடு பயணிக்ககூடிய தமிழ்தலைமைகளுடைய எண்ணிக்கை பாரிய வீழ்ச்சி கண்டுள்ளது. இந்த நிலையானது  தமிழ் தலைமைகள் அனைவரும் ஒன்றிணைந்து பயணிக்கவேண்டிய சூழலை உருவாக்கியுள்ளது.

இந்த நிலையில் கஜேந்திரகுமார் அணியும் விக்னேஸ்வரன் அணியும் எம்முடன் ஒன்றாக இணையாது விட்டாலும் பரவாயில்லை தமிழ் மக்கள் நலன் சார்ந்து செயற்பட நாம் அனைவரும் ஒற்றுமையாக செயற்பட வேண்டும் என கஜேந்திரகுமார் ,  விக்னேஸ்வரன் ஆகியோருக்கு  அழைப்பு விடுத்துள்ளார் புளொட் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன்.

யாழ்ப்பாணம் கந்தரோடையில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று  மாலை இடம்பெற்ற ஊடகவியலளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.அவர் மேலும் தெரிவிக்கையில்,

நாம் ஒன்றிணையாது விட்டாலும் பரவாயில்லை ஒற்றுமையாக மனப்பூர்வமாக செயற்பட வேண்டும்.வார்த்தைகளால் மட்டும் அல்லாது மனபூர்வமாக ஒற்றுமையாக செயற்பட வேண்டும்.

நான் எமது கட்சியுடன் இணையுங்கள் என்று கூறவில்லை.மாறாக மக்கள் நலனுக்காக தற்போதைய சூழ்நிலையில் ஒற்றுமையாக செயற்பட முன்வாருங்கள் என்றே அழைப்பு விடுக்கின்றேன்.

இது நடைபெற வேண்டும். வெறுமனே மக்களுக்கு நான் ஒற்றுமையாக செயற்பட தயாராக இருக்கின்றேன் என ஒருவருக்கு ஒருவர் காட்டிக்கொள்ளாமல் உண்மையிலேயே ஒற்றுமையாக பயணிக்க வேண்டும் என்றார்.

புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை பதவியேற்பில் பங்கேற்குமாறு சிறையிலுள்ள பிள்ளையானுக்கு அழைப்பு !

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் கொலை தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டு விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளபிள்ளையான் என்ற சிவநேசத்துரை சந்திரகாந்தன் நடைபெற்று முடிந்த  நாடாளுமன்ற தேர்தலில் மட்டக்களப்பில் போட்டியிட்டு அத் தேர்தல் மாவட்டத்தில் அதிக விருப்பு வாக்குகளை பெற்று வெற்றிபெற்றார்.

இந்நிலையில் கண்டியில் நாளை நடைபெறும் புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை பதவியேற்பில் பங்கேற்குமாறும் அமைச்சுப்பதவியை பொறுப்பேற்குமாறும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவரும் முன்னாள் போராளியுமான பிள்ளையான் என்ற சிவநேசத்துரை சந்திரகாந்தனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

எனினும் பிள்ளையானுக்கு எந்த அமைச்சுப்பொறுப்பு வழங்கப்படும் என்றோ அமைச்சரவை அந்தஸ்து அல்லது அந்தஸ்தற்ற அமைச்சு வழங்கப்படுமா? என்பது குறித்து எதுவும் தெரியாது என்று பிள்ளையானுக்கு நெருக்கமான தரப்புக்கள் தெரிவித்துள்ளன.

தேர்தலுக்கு முன்னர் தமது கட்சிக்கு அமைச்சு பதவி வழங்கப்படும் என்று பொதுஜன பெரமுனவினால் உறுதியளிக்கப்பட்டிருந்ததாக பிள்ளையானின் தரப்புகள் சுட்டிக்காட்டியுள்ளன.

இதேவேளை பிள்ளையானுக்கு சட்டரீதியாக அனுமதி வழங்கி அவரை கண்டியில் நடைபெறும் அமைச்சரவை பதவியேற்பில் பங்கேற்க செய்வது தொடர்பில் நேற்று கொழும்பில கலந்துரையாடல்கள் இடம்பெற்றுள்ளன.

ஏற்கனவே பிள்ளையானுக்கு எதிராக சட்டமா அதிபர் மட்டக்களப்பு மேல்நீதிமன்றில் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்துள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

ஐக்கிய தேசிய கட்சியின் புதிய தலைமை யார்?

நடைபெற்று முடிந்த பாராளுமன்றத் தேர்தலினுடைய முடிவுகளின் படி ஐக்கிய தேசிய கட்சி இதுவரையிலும் கண்டிராத வரலாற்றுத்தோல்வியை சந்தித்திருந்தது.  இந்த நிலையில் ஐக்கிய தேசிய கட்சியினுள்ளே பல்வேறுபட்ட உட்குழப்பங்கள் ஏற்பட்டு வருகின்றன. இந்நிலையில்    25 வருடங்களுக்கு பின்னர் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங் கஐக்கிய தேசிய கட்சியின் தலைமைப்பதவியில் இருந்து விலகுவதற்கு தீர்மானித்துள்ளார்.

கட்சித் தலைமையகத்தில் நேற்று  இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் பின்னர் அவர் இந்த தீர்மானத்தை அறிவித்துள்ளார்.

புதிய தலைமைத்துவத்திற்காக நான்கு பேர்களின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகவும் எதிர்வரும் புதன்கிழமை அது தொடர்பில் இறுதி தீர்மானம் அறிவிக்கப்படும் எனவும் கட்சியின் பொதுச் செயலாளர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு மற்றும் கட்சியின் அதிகாரிகள் குழு நேற்று முற்பகல் சிறிகொத்த கட்சித் தலைமையகத்தில் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் கூடியது.

இதன் போது, தான் கட்சியின் தலைமைப் பதவியில் இருந்து விலகுவதாக ரணில் விக்கிரமசிங்க அறிவித்தார்.

எதிர்வரும் புதன்கிழமை புதிய தலைவர் நியமிக்கப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

தலைமைப்பதவியை பொறுப் பேற்க தயாராக உள்ளவர்கள் இருந்தால் பெயர்களை அறிவிக்குமாறு ரணில் விக்கிரமசிங்க இன்றைய கலந்துரையாடலில் கலந்து கொண்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களிடம் தெரிவித்துள்ளார்.

இதன்போது கட்சியின் பொதுச் செயலாளர் அகிலவிராஜ் காரியவசம், உப தலைவர் ரவி கருணாநாயக்க, வஜிர அபேவர்தன மற்றும் தயா கமகே ஆகியவர்கள் தலைவர் பதவிக்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களில் ஒருவர் எதிர்வரும் புதன்கிழமை கட்சியின் தலைவராக நியமிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

புதிய அரசாங்கம் இன, மத சிறுபான்மையினரை ஒடுக்கும் வகையிலான புதிய கொள்கைகளை அமுல்படுத்தும் – மீனாக்ஷி கங்குலி

இலங்கையில் கடந்த ஐந்தாம் திகதி நடைபெற்ற தேர்தல் முடிவுகளின் அடிப்படையில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பாரிய வெற்றியினைப் பெற்றுக்கொண்டது.  இதனைத் தொடர்ந்து அதன் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ பிரதமராக பதவியேற்றார்.
மேலும், புதிய அமைச்சரவையும் விரைவில் அறிவிக்கப்படவுள்ள நிலையில் சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகத்தால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் அரசாங்க கொள்கைகளை சவாலுக்கு உட்படுத்தும் துறைகள் மீதான அச்சுறுத்தல்கள் எதிர்காலத்தில் அதிகரிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசாங்க கொள்கைகளை சவாலுக்கு உட்படுத்தும் துறைகள் மீதான அச்சுறுத்தல்கள் எதிர்காலத்தில் அதிகரிக்கலாம் என சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. பொதுத்தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பெற்றுக்கொண்ட வெற்றியினைத் தொடர்ந்து குறித்த அமைப்பு இந்த எச்சரிக்கையினை விடுத்துள்ளது.

அதனடிப்படையில், சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் தென்னாசிய இயக்குநர் மீனாக்ஷி கங்குலி வெளியிட்டுள்ள அறிக்கையில்,
“புதிய அரசாங்கம் இன, மத சிறுபான்மையினரை ஒடுக்கும் வகையிலான புதிய கொள்கைகளை அமுல்படுத்துவதுடன் அதற்கான நீதி கோரும் அமைப்புகளின் மீது அடக்குமுறைகளைப் பிரயோகிக்கும்.
ஜனாதிபதி கோட்டாபய ரடாஜபக்ஷ 2019ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்ததில் இருந்து கடந்த 2005 முதல் 2015 வரையான காலப்பகுதியில் பல யுத்தக் குற்றங்களில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்ட ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரிகளை தனது அமைச்சரவையில் நியமிக்கிறார்.
அவரது, சகோதரர் மஹிந்த ராஜபக்ஷவும் தற்போது பாதுகாப்புச் செயலாளராக உள்ள கமால் குணரத்ன மற்றும் தற்போதைய இராணுவத் தளபதி சவேந்திர சில்வா ஆகியோரைப் போன்று மோசமான யுத்தக் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாக்கப்பட்டவர்.
நாட்டில் நீதி, பொறுப்புக்கூறல் மற்றும் சிவில் சமூகத்தின் பாதுகாப்பு ஆகியவற்றை வலியுறுத்தும் ஐக்கிய நாடுகள் சபையின் 30/1 தீர்மானத்தை ராஜபக்ஷ அரசாங்கம் வெளிப்படையாகவே நிராகரித்துள்ளது.
எவ்வாறாயினும் மனித உரிமைகள் கண்காணிப்பகம், இலங்கையில் ஒருமித்த தீர்வு ஒன்றை எட்டுவதற்கு அரசாங்கம் உடன்பட வேண்டும் என்பதுடன் சர்வதேச தரத்திலான பேச்சுரிமை மற்றும் ஒற்றுமை ஆகியவற்றை அரசாங்கம் மதிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டுடன் செயற்பட்டு வருகிறது.
எனினும், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கடத்த மஹிந்த ஆட்சிக் காலத்தில் நிலவிய அடக்குமுறை சூழலை நோக்கி வேகமாக நகர்த்துகிறார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் மக்களுக்கு சமஷ்டி ஆட்சி தேவையில்லை என்பதை மக்கள் வெளிப்படுத்தியுள்ளனர் – விமல் வீரவங்ச

வடக்கு தமிழ் மக்கள் சமஷ்டியை நிராகரித்து அன்றாட வாழ்வாதார சவால்களை வெற்றிக்கொள்வதற்கான வழியை கோருவதையே வடக்கு தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை குறிப்பிட்டளவு தமிழ் மக்கள் நிராகரித்துள்ளதாக  விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பெற்றுள்ள மகத்தான வெற்றி தொடர்பில் கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் கருத்து வெளியிடுகையில்,

எமக்கு சமஷ்டி ஆட்சியொன்று அவசியமில்லை. அன்றாட வாழ்வாதாரத்தை கொண்டு செல்வதற்கான சவால்களை வெற்றிக்கொள்வதே தேவையாகவுள்ளது என்பதை  இந்த  தேர்தல் முடிவுகள் மூலம் வடக்கு தமிழ் மக்கள் வெளிப்படுத்தியுள்ளனர். அதனால்தான் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு வடக்கில் ஒரு ஆசனத்தை பெற்றுக்கொடுத்துள்ளனர்.

சம்பிரதாயப்பூர்வ மக்கள் ஆணைக்கு பதிலாக புதிய மக்கள் ஆணையொன்று இதன்மூலம் உதயமாகும். இந்த புதிய மக்கள் ஆணையையும் அதன் கருப்பொருளையும் அனைவரும் ஒரு சவாலாக எடுத்துக்கொள்ள வேண்டும். அந்த சவாலை நாம் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்கிறோம். ஆறு பாராளுமன்ற உறுப்பினர்கள் எமக்கு கிடைக்கப்பெற்றுள்ளனர். எதிர்காலத்தில் அனைவரும் பொறுப்புடன் இந்த மக்கள் ஆணையின் உண்மையான அர்த்தத்தையும் பெறுமதியையும் புரிந்து பணியாற்ற வேண்டுமென நாட்டு மக்கள் எதிர்பார்க்கின்றனர் என்றார்.