உள்நாட்டுச் செய்திகள்

உள்நாட்டுச் செய்திகள்

ஒரு பாராளுமன்ற உறுப்பினருக்கான அரச சலுகைகள்!

பாராளுமன்ற தேர்தல்கள் முடிவடைந்துள்ள நிலையில் பாராளுமன்றத்துக்கான பிரதிநிதிகளை தெரிவு செய்து அனுப்பிய பிரஜை என்னும் வகையில் நீங்கள் ஒரு பாராளுமன்ற உறுப்பினரின் சலுகைகள் பற்றி அறிந்து வைத்திருத்தல் அவசியமாகும்.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் பெறும் சலுகைகள் .

சம்பளம்

01) நாடாளுமன்ற உறுப்பினரின் சம்பளம் – ரூபா 54285/=

02) பிரதி அமைச்சர் – ரூபா 63500/=

03) இராஜாங்க / அமைச்சரவை அமைச்சர் – ரூபா 65000/=

04) சபாநாயகரின் சம்பளம் – ரூபா 68500/=

05) பிரதமர் – ரூபா 71500/=

சம்பளத்திற்கு மேலதிகமாக
அலுவலக கொடுப்பனவு –

ரூபா 100000/= (ஒரு இலட்சம்)
போக்குவரத்து கொடுப்பனவு – ரூபா 10000/=
தொலைபேசி கொடுப்பனவு – ரூபா 50000/= (அலுவலகம்)
மொபைல் தொலைபேசி கொடுப்பனவு – ரூபா 50000/=
இலவச அஞ்சல் கொடுப்பனவு ரூபா 350,000/= (மூன்றரை இலட்சம்)
டிரைவர் மற்றும் விருந்தோம்பல் கொடுப்பனவு ரூபா 45000/=
பாராளுமன்ற கூட்டங்களில் கலந்துகொள்வதற்கு ஒரு நாளைக்கு ரூபா 2500/= , ஒரு மாதத்தில் குறைந்தது 8 நாட்களுக்கு அமர்வு நடைபெறுகிறது, அதன்படி மாதத்திற்கு ரூபா 20000/= பெறப்படுகிறது.

கூட்டமில்லாத நாட்களில் குழு கூட்டங்களில் கலந்து கொள்வதற்கான கொடுப்பனவு ரூபா 2500/= (மாதாந்தம் 5 குழு நாட்கள் , அதன்படி மாதாந்தம் ரூபா 12,500/=)
ஒருங்கிணைப்பு செயலாளருக்கு 218 லிட்டர் எரிபொருளுக்கு ரூபா 17440/=
இராஜாங்க/ அமைச்சரவை அமைச்சு ஊழியர்களுக்கு 05 வாகனங்கள்
பிரதி அமைச்சு ஊழியர்களுக்கு 03 வாகனங்கள்.
கூடுதலாக, சொகுசு வாகனங்கள் வாங்குவதற்கு கட்டணமில்லா உரிமங்கள் கிடைக்கின்றன. ரூபா 30-40 லட்சத்திற்கு வாங்கிய வாகனங்களை ரூபா 25 மில்லியனுக்கு விற்கலாம்.

பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் பயங்கரவாத தாக்குதலில் கொல்லப்படும்போது ரூபா 50 லட்சம் இழப்பீடு வழங்கப்படும். மேலும், பாராளுமன்ற உறுப்பினரின் காப்பீட்டுத் தொகை ரூபா 20 லட்சம்.
கூடுதலாக, ஒரு ஆடம்பர உத்தியோகபூர்வ வீடு
காலை உணவு மற்றும் மதிய விஷேட உணவிற்கு பாராளுமன்றம் ரூபா 150/= மாத்திரமே அறவிடுகிறது.
ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு ஓய்வூதியம் கிடைக்கிறது.
கொழும்பில் உள்ள முன்னணி பாடசாலைகளில் குழந்தைகளுக்கு அனுமதி

V.I.P வெளிநாட்டு பயணம், உயர்மட்ட ஹோட்டல்களில் தங்குமிடம் மற்றும் பயணத்திற்கான சிறப்பு விஷேட சலுகைகள்
இவ்வாறு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட 225 பேரும் பொதுமக்களின் வரிப் பணத்தால் 05 ஆண்டுகளுக்கு பராமரிக்கப்படுகிறார்கள்.

புதிய பிரதமராக பதவியேற்றார் மஹிந்த ராஜபக்ஷ !

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 28வது பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் இன்று பதவியேற்றார். பதவியேற்பு நிகழ்வு ஜனாதிபதி கோட்டாப்ய ராஜபக்ஷ முன்னிலையில் களனி ரஜமஹா விகாரையில் இன்று முற்பகல் இடம்பெற்றது. அதற்கமைய மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் நான்காவது முறையாக இலங்கையின் பிரதமராக பதவியேற்றுள்ளார்.

கடந்த பொதுத்தேர்தலில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன நாடு முழுவதும் 145 ஆசனங்களை பெற்று அமோக வெற்றிப்பெற்றது. அதற்கமைவாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ குருநாகல் மாவட்டத்தில் போட்டியிட்டு 5 இலட்சத்து 27 ஆயிரத்து 364 விருப்ப வாக்குகளை பெற்றிருந்தார்.

இந்நிலையில் இன்று அவர் பிரதமராக சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.

சத்தியப்பிரமாணத்தின்போது உறுதிமொழி வழங்கிய பிரதமர் இலங்கை தேசத்திற்குள் இன்னொரு இராச்சியத்தை உருவாக்க நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ, இலங்கைக்குள்ளோ அல்லது அதற்கு வெளியிலோ ஒத்துழைப்பு வழங்குதல், உதவிகளை வழங்குதல், அனுசரணை வழங்குதல், நிதியுதவி வழங்குதல் உள்ளிட்ட எந்த விடயத்தையும் மேற்கொள்ள மாட்டேன் என தான் உறுதிமொழி வழங்குவதாக குறிப்பிட்டார். இலங்கை ஜனநாய சோசலிய குடியரசின் பிரதமராக அரசியலமைப்புக்கும், சட்டத்திற்கும் உட்பட்டு இலங்கை நாட்டுக்கு உண்மையாகவும், நேர்மையாகவும் செயற்பட்டு தாய்நாட்டுக்காக அர்ப்பணிப்புடன் செயற்படவுள்ளதாகவும் பிரதமர் உறுதி வழங்கினார்.

வெளியானது தமிழ்தேசிய கூட்டமைப்பு மற்றும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சி தேசியப்பட்டியல் வேட்பாளர் பெயர்கள்!

நடைபெற்று முடிந்த பாராளுமன்றத்தேர்தலின் முடிவுகளுடைய அடிப்படையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சி என்பவற்றுக்கு தேசியப்பட்டியல் ஆசனங்கள் ஒன்று வீதம் கிடைத்திருந்தது. இந்நிலையில் தேசியப்பட்டியல் சார்பாக இரண்டு கட்சிகளும் யாரை பாராளுமன்றம் அனுப்ப உள்ளனர் என்ற மிகப்பெரிய எதிர்பார்ப்பு தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட்ட நாள் முதல் காணப்பட்டு வந்தது. இந்த நிலையில் இண்டு கட்சிகளுடைய தேசியப்பட்டியல் வேட்பாளர் பெயர்களும் வெளியிடப்பட்டுள்ளன.

 

இந்நிலையில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் செல்வராசா கஜேந்திரன் தேசிய பட்டியலில் ஊடாக நாடாளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ளதாக கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் நேற்றையதினம்  அறிவித்திருந்தார்.

இந்த நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தேசியப்பட்டியல் வேட்பாளர் யார் என்பது தொடர்பாக இழுபறி நிலை காணப்பட்டு வந்த நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக அம்பாறை – நாவிதன்வெளி பிரதேச சபையின் தவிசாளர் தவராசா கலையரசன் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இதனை இலங்கை தமிழரசு கட்சியின் பொதுச் செயலாளர் துரைராஜசிங்கம் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் தொடர்பாக பல சுற்று பேச்சுவார்த்தைகளின் பின்னர் இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

2020 பாராளுமன்றத்தேர்தலில் தமிழ் மக்களால் ஆதரிக்கப்பட்டோரும் நிராகரிக்கப்பட்டோரும் !

இலங்கையில்  நடந்து முடிந்த 2020 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் போட்டியிட்ட அரசியல் கட்சிகள் சார்பில் 25 தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மக்களால் நேரடியாக தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

இலங்கை தமிழரசு கட்சி, ஐக்கிய மக்கள் சக்தி, ஈழ மக்கள் ஜனநாயக கட்சி, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆகிய கட்சிகளின் சார்பில் இவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்திலிருந்து ,

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி – அங்கஜன் ராமநாதன்

இலங்கை தமிழரசு கட்சி – சிவஞானம் சிறிதரன்,எம்.ஏ. சுமந்திரன், தர்மலிங்கம் சித்தார்த்தன்

அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் – கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

ஈழமக்கள் ஜனநாயக கட்சி – டக்ளஸ் தேவானந்தா

தமிழ் மக்கள் தேசிய கூட்டணி – சீ.வி. விக்னேஸ்வரன்.

திருகோணமலை.

இலங்கை தமிழரசு கட்சி – இரா.சம்பந்தன்.

வன்னி

இலங்கை தமிழரசு கட்சி – சார்ள்ஸ் நிர்மலநாதன், செல்வம் அடைக்கலநாதன், எஸ். ஜெயராஜலிங்கம்

ஈழமக்கள் ஜனநாயக கட்சி –  குலசிங்கம் திலீபன்

மட்டக்களப்பு.

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் – சிவநேசத்துரை சந்திரகாந்தன் (பிள்ளையான்)

இலங்கை தமிழரசு கட்சி – சாணாக்கிய ராகுல், கோவிந்தன் கருணாகரன்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன – எஸ். வியாழேந்திரன்,

கொழும்பு

ஐக்கிய மக்கள் சக்தி – மனோ கணேசன்.

கண்டி

ஐக்கிய மக்கள் சக்தி – வேலு குமார்

நுவரெலியா

ஐக்கிய மக்கள் சக்தி – பழனி திகம்பரம், வேலுச்சாமி ராதாகிருஷ்ணன், எம். உதயகுமார்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன – ஜீவன் தொண்டமான், மருதபாண்டி ராமேஸ்வரன்.

பதுளை

ஐக்கிய மக்கள் சக்தி – வடிவேல் சுரேஷ், அரவிந்தகுமார்

ஆகியோர் நடந்து முடிந்த பொதுத் தேர்தலில் மக்களால் நேரடியாக நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ள தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களாவர்.

இதே நேரத்தில் முன்னைய நாடாளுமன்றங்களில் இருந்த அதே நேரம் புதிய நாடாளுமன்றங்களில்  ஆசனங்களை இழந்த தமிழ் வேட்பாளர்களுடைய பெயர் விபரங்கள் வருமாறு …

01. யாழ். தேர்தல் மாவட்டம்

இலங்கை தமிழரசுக் கட்சி

  • தலைவர் – மாவை சேனாதிராசா
  • ஈஸ்வரபாதம் சரவணபவன்

ஐக்கிய தேசியக் கட்சி

  • விஜயகலா மகேஷ்வரன்

02. வன்னி மாவட்டம்

இலங்கை தமிழரசுக் கட்சி

  • சாந்தி ஶ்ரீஸ்கந்தராசா
  • எஸ். சிவமோகன்

தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி

  • சிவசக்தி ஆனந்தன்

03. திகாமடுல்ல மாவட்டம்

இலங்கை தமிழரசுக் கட்சி

  • கவிந்தன் கோடீஸ்வரன்

ஐக்கிய மக்கள் சக்தி (ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்)

  • மொஹமட் நசீர்
  • எம்.ஐ.எம்.மன்சூர்

தேசிய காங்கிரஸ்

  • எம்.மொஹமட் இஸ்மாயில்

அகில இலங்கை தமிழர் மகா சபை

  • விநாயகமூர்த்தி முரளிதரன்

04. மட்டக்களப்பு மாவட்டம்

இலங்கை தமிழரசுக் கட்சி

  • ஞானமுத்து ஶ்ரீநேசன்
  • சீனித்தம்பி யோகோஸ்வரன்

ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்

  • அலி ஸாஹிர் மௌலானா

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்

  • அப்துல்லாஹ் மஹ்ரூப்

இவர்களே தமிழ் மக்களால் நிராகரிக்கப்பட்ட வடக்கு – கிழக்கு தமிழர் பகுதிகளின் உறுப்பினர்களாகவுள்ளனர்.

 

ஐ.தே.க வை பாதுகாக்கும் செயலையே கடந்தகாலங்களில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு செய்தது ! – பேராசியர் ஜீ.எல்.பீரிஸ்

நாட்டில் புதிய நாடாளுமன்றத்தில் தமிழ் மக்களின் குரலாக, ஏக பிரதிநிதிகளாக வாதிடுவதற்கு உரிமையுள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பினால் இனி ஒருபோதும் தெரிவிக்க முடியாது என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது.

இதனை கொழும்பில் நேற்று (வெள்ளிக்கிழமை) ஊடக சந்திப்பில் உரையாற்றிய ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தவிசாளர் பேராசியர் ஜீ.எல்.பீரிஸ் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த பொது தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு 16 ஆசனங்களைப் பெற்றிருந்த நிலையில் இம்முறை 10 ஆசனங்களை மாத்திரமே கைப்பற்றியுள்ளது என்று சுட்டிக்காட்டியுள்ள அவர், தமிழ் மக்கள் இன்று தமிழ் தேசியக் கூட்டமைப்பு மீது மாத்திரம் நம்பிக்கை கொள்ளவில்லை என்று கூறியுள்ளார்.

மேலும், ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி முதலான கட்சிகளுக்கும் தமிழ் மக்களின் நம்பிக்கை கிடைத்துள்ளதாக பீரிஸ் இதன் போது தெரிவித்தார்.

மேலும்கடந்த நான்கரை ஆண்டுகளில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஐக்கிய தேசியக் கட்சியை பாதுகாக்கும் வகையில் ஐ.தே.க.வின் ஆட்சியை பாதுகாப்பதற்காக சட்டம் உள்ளிட்ட அரசியல் ஆலோசனைகளை கூட்டமைப்பே வழங்கி வந்தது என சுட்டிக்காட்டினார்.

அத்துடன் கடந்த நல்லாட்சி அரசாங்கத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை காணப்படவில்லை என குறிப்பிட்டுள்ள அவர், அந்த பெரும்பான்மைக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பே ஆதரவு வழங்கியதாகவும் சுட்டிக்காட்டினார்.

இதனைவிட, 13ஆவது திருத்தம் ஊடாக மாகாண சபைக்கு 36 அதிகார கட்டளைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு அவற்றை சரியாகப் பயன்படுத்தவில்லை என்றும் ஜீ.எல். பீரிஸ் இதன் போது கூறியுள்ளார்.

சசிகலா விடயம் தொடர்பில் இரா.சம்பந்தனுடன் கலந்தாலோசித்து முடிகளை மேற்கொள்ளுவோம் – மாவை சேனாதிராஜா

தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட தினத்தில் யாழ்வேட்பாளர் சசிகலா ரவிராஜ் அவர்களுடைய வாக்கு எண்ணல் தொடர்பாக மோசடிகள் இடம்பெற்றுள்ளதாக சசிகலா ரவிராஜ் அவர்களாலும் அவருடைய ஆதரவாளர்களாலும் பல விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்ற நிலையில் “சசிகலா விடயம் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுடன் கலந்தாலோசித்து முடிகளை மேற்கொள்ளுவோம்” என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

மாவை சேனாதிராஜாவின் இல்லத்தில் நேற்றைய தினம் நாடாளுமன்ற வேட்பாளர் சசிகலா ரவிராஜ் சந்திப்பொன்றை மேற்கொண்டார். அதன்பின்னர் மாவை சேனாதிராஜா கருத்துத் தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

தேர்தல் இறுதி முடிவுகள் அறிவிக்கும் நேரத்தில் நடைபெற்ற சம்பவங்கள் கவலையளிக்கின்றன. சசிகலா ரவிராஜ் கூறுவது போன்ற நிகழ்சிகள் நடைபெற்றிருந்தால் அது கட்சிக்கு அவமானத்தை ஏற்படுத்தக் கூடியவையாகும்.

இது தொடர்பில் என்ன முடிவை எடுப்பது என்பது தொடர்பில் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனுடன் கலந்தாலோசித்து தீர்மானிப்போம்.

தேசியப் பட்டியலில் சசிகலாவை உள்வாங்குவதா, இல்லையா என்பது தொடர்பில் இனிமேல்தான் ஆராய வேண்டும்.

தான் வெற்றிபெற்றுவிட்டதாக அங்கு கடைமையாற்றிய அலுவலகர்களே உத்தியோகப்பற்றற்ற முறையில் தெரிவித்து பாராட்டுக்களைத் தெரிவித்திருந்த நிலையில் முடிவுகள் நீண்ட இடைவெளியின் பின்னர் வெளியிடப்பட்டன.

இதன் மூலம் அநீதி இழைக்கப்பட்டுள்ளது எனக் சசிகலா குற்றச்சாட்டை முன்வைத்தார். இந்த விடயம் தொடர்பில் உரியவர்களுடன் கலந்தாலோசித்து இறுதி முடிவுக்கு வருவோம் என்று கூறியுள்ளார்.

புதிய பிரதமராக பதவியேற்கிறார் மஹிந்த ராஜபக்ஷ !

இலங்கையின் ஒன்பதாவது பாராளுமன்றின் புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ இன்று (08.08.2020) பதவிப் பிரமாணம் செய்துக் கொள்ளவுள்ளார்.

களனி ரஜமஹா விகாரையில் இன்று முற்பகல் 9.00 மணிக்கு மஹிந்த ராஜபக்ஷ புதிய பிரதமராக பதவிப் பிரமாணம் செய்துக் கொள்ளவுள்ளதாக ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.

இம்முறை பொதுத் தேர்தலில் குருணாகலை மாவட்டத்தில் போட்டியிட்ட மஹிந்த ராஜபக்ஷ இந்நாட்டில் அதிகப்படியான விருப்பு வாக்குகளை (5,27,364) பெற்று பாராளுமன்றத்திற்கு தெரிவானது மட்டுமன்றி இலங்கை வரலாற்றிலேயே அதிகூடிய விருப்பு வாக்குகளை பெற்றவர் என்ற சாதனையையும் பதிவு செய்துள்ளார்.

புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ பதவியேற்றதன் பின்னர் புதிய அமைச்சரவை திட்டமிடப்படவுள்ளததாக ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் மேலும் தெரிவித்தார்.

பெரமுனவின் தேர்தல் வெற்றி தேசத்தின் நம்பிக்கையை மீண்டும் கட்டியெழுப்பும் வெற்றியாகும் ! – பிரதமர் மஹிந்த ராஜபக்ச

இம்முறை தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பெற்ற மாபெரும் வெற்றி இந்நாட்டிற்கு கிடைத்த வெற்றி என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அறிக்கை ஒன்றை வௌியிட்டு அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அதில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

இம்முறை தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மாபெரும் வரலாற்று வெற்றியை பெற்றுள்ளது. எங்களை நம்பி, இந்த பாரிய வெற்றிக்காக வாக்களித்த அனைவருக்கும் எனது சார்பிலும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பிலும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த மாபெரும் வெற்றி நாட்டிற்கு கிடைத்த வெற்றி என்று நான் சொல்ல வேண்டும். கொவிட் – 19 தொற்று நோயால் உலகம் முழுவதும் செயலற்ற நிலையில் இருக்கும் நேரத்தில் இந்தத் தேர்தலை நடத்த தீர்மானித்தோம்.

இந்த நாட்டில் பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களில் 70 வீதத்திற்கும் அதிகமானோர் வாக்களிப்பு நிலையங்களுக்கு வந்து வாக்களித்தனர்.

நிலைமை எவ்வளவு கடினமாக இருந்தாலும் ஜனநாயக முறையில் ஜனநாயகத்திற்காக பணியாற்ற மக்கள் முன்வந்திருப்பது ஒரு நாடாக நாம் மகிழ்ச்சியடைய வேண்டிய விடயமாகும்.

மேலும், இதுபோன்ற ஒரு ஜனநாயக தீர்மானத்தை மேற்கொண்டு அதை ஒரு தொற்றுநோய் சூழ்நிலையில் செயல்படுத்த முன்வந்த ஒரு சில நாடுகள் மட்டுமே உலகில் உள்ளன.

அத்தகைய முடிவை எடுத்த நாடு இலங்கை. தங்கள் வாக்குகளை பதிவு செய்ய வந்த அனைத்து மக்களின் சுகாதார பாதுகாப்பிற்காக உலக சுகாதார பரிந்துரைகளை முழுமையாக நிறைவேற்றி இந்த தேர்தலை நடத்தி முடிப்பதற்கு தேர்தல் ஆணையம், சுகாதார சேவை, பாதுகாப்புப் படையினர் மற்றும் அரசாங்க அதிகாரிகளுக்கு முடியுமானதாயிற்று.

சவால்களின் மூலம் தான் உண்மையான வெற்றி பிறக்கிறது. போரை வெல்வது, கொவிட் -19 தொற்றுநோயை வென்றது மற்றும் இது போன்ற மிக வெற்றிகரமான தேர்தலை நடத்துவது நம் நாட்டின் பலத்தையும் மக்களின் பலத்தையும் உலகுக்குக் காண்பிக்கும்.

இந்த தேர்தல் வெற்றி தேசத்தின் நம்பிக்கையை மீண்டும் கட்டியெழுப்பும் வெற்றியாகும். இந்த தேர்தலின் வெற்றி, ஜனாதிபதியால் முன்வைக்கப்பட்ட சுபீட்சத்தின் நோக்கு வேலைத்திட்டத்தை இந்நாட்டில் செயற்படுத்துவதற்கு முடியும் என்பதை உலகுக்கு நிரூபிக்கிறது.

இந்த வெற்றியை முழு நாட்டிற்குமான வெற்றியாக மாற்ற நாங்கள் உறுதியாக இருக்கிறோம்.

இந்த தேர்தலில் வாக்களித்த அனைத்து மக்களுக்கும், தேர்தல் ஆணையம், பாதுகாப்புப் படையினர், அனைத்து அரச அதிகாரிகள், அனைத்து ஊடகங்கள், தேர்தல் கண்காணிப்பாளர்கள் மற்றும் தேர்தல்களை வெற்றிகரமாக மற்றும் அமைதியாக நடத்துவதற்கு உதவிய பொது மக்களுக்கு நன்றி கூறுகிறேன். என்றார்.

சி.வி. விக்னேஸ்வரன் மற்றும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோர் எம்மோடு இணைந்து செயற்பட வேண்டும் – எம்.ஏ.சுமந்திரன்

நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் யாழ். மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட சி.வி. விக்னேஸ்வரன் மற்றும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோர் எம்மோடு இணைந்து செயற்பட வேண்டுமென தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் அழைப்பு விடுத்துள்ளார்.

தேர்தலில் வெற்றி பெற்றதனை தொடர்ந்து நேற்றையறையதினம் இடம்பெற்ற விசேட ஊடக சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தள்ளார்.

சி.வி. விக்னேஸ்வரன் மற்றும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோர் எம்மோடு இணைந்து செயற்பட வேண்டும் இல்லையெனில் நாடாளுமன்றில் தாம் அவர்களோடு இணைந்து செயற்படவும் தயாராக இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

வெளியானது பொதுஜன பெரமுனவின் தேசிய பட்டியல் விபரம் – முன்னாள் வடக்கு மாகாண ஆளுனர் சுரேன்ராகவனும் உள்ளடக்கம்.ன்

நாடாளுமன்ற தேர்தல் நிறைவடைந்துள்ள நிலையில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தனது கட்சி சார்பில் தேசியப்பட்டியலின் ஊடாக நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளவர்களின் பெயர் விபரங்களை தேர்தல் ஆணைக்குழுவிற்கு இன்று கையளித்துள்ளது. இந்த பெயர்ப்பட்டியலில் முன்னாள் வடக்கு மாகாண ஆளுனர் சுரேன்ராகவன் அவர்களும் உள்ளடக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதன்படி ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய பட்டியல் விபரம் வருமாறு,

முன்னாள் அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ்

சாகர காரியவசம்

அஜித் நிவாட் கப்ரால்

ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி

ஜனாதிபதி சட்டத்தரணி ஜயந்த வீரசிங்க

மஞ்சுள திஸாநாயக்க

பேராசிரியர் ரஞ்சித் பண்டார

பேராசிரியர் சரித ஹேரத்

கெவிந்து குமாரதுங்க

மொஹமட் முசாமில்

பேராசிரியர் திஸ்ஸ விதாரன

பொறியியலாளர் யாமினி குணவர்தன

கலாநிதி சுரேன் ராகவன்

டிரான் அல்விஸ்

வைத்திய நிபுணர் சீதா ஹரம்பேபொல

ஜயந்த கெடுகொட

மார்ஜன் பலீல்

ஆகியோரே ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய பட்டியல் உறுப்பினர்களாக பெயரிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.