உள்நாட்டுச் செய்திகள்

உள்நாட்டுச் செய்திகள்

இலங்கையில் மிக வேகமாக பரவும் காச நோய் – ஒரே மாவட்டத்தில் 30 பேர் பலி!

2022ஆம் ஆண்டு இரத்தினபுரி மாவட்டத்தில் மட்டும் காசநோயால் பாதிக்கப்பட்ட 301 பேரில் 30 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மக்களின் அறியாமையாலும், நோயாளிகளுக்கு உரிய சிகிச்சை கிடைக்காததாலும், இந்த ஆண்டு முதல் சில மாதங்களிலும் இதே நிலையே காணப்படுகின்றது.

சமூகத்தில் 4,000 முதல் 5,000 வரை கண்டறியப்படாத காசநோயாளிகள் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நோய் பற்றீரியா மூலம் பரவுகிறது.

நோய்வாய்ப்பட்ட ஒருவர் இருமும் போது, பேசும்போது, ​​தும்மும்போது, ​​சிரிக்கும்போது, ​​அது காற்றின் மூலம் ஆரோக்கியமான ஒருவருக்குப் பரவுகிறது.

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்திற்கு இலங்கையின் தேசிய கிறிஸ்தவ பேரவை கடும் எதிர்ப்பு !

த்தை மாற்றுவதை நோக்கமாகக் கொண்ட முன்மொழியப்பட்ட பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்திற்கு இலங்கையின் தேசிய கிறிஸ்தவ பேரவை தனது கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.

பி.டி.ஏ என்ற பயங்கரவாத தடைச்சட்டம் ரத்து செய்யப்படும் என்றும், நாட்டின் அரசியலமைப்பு மற்றும் சர்வதேச மனித உரிமைகள் கடமைகளை மீறாத புதிய சட்டம் உருவாக்கப்படும் என்றும் அடுத்தடுத்து வந்த அரசாங்கங்கள் இலங்கை மக்களுக்கும் சர்வதேச சமூகத்திற்கும் வாக்குறுதி அளித்தன. எனினும், முன்மொழியப்பட்ட ஏடிஏ என்ற பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம், இந்த வாக்குறுதியை நிறைவேற்றத் தவறிவிட்டது. எனவே இந்த விடயத்தில் பொதுமக்களுக்கு பொறுப்புக்கூறலை தேசிய கிறிஸ்தவ சபை கோருகிறது.

ஏடிஏ என்ற புதிய சட்டமூலம், எதிர்ப்புக்கள், தொழிற்சங்க நடவடிக்கை, பயங்கரவாதச் செயல்கள் உள்ளிட்ட கருத்து வேறுபாடுகளை ஏற்படுத்தக்கூடிய செயற்பாடுகள் தொடர்பில், தெளிவற்ற வரையறைகளைக் கொண்டுள்ளது.

இந்த வரையறை எதிர்ப்பாளர்களை ‘பயங்கரவாதிகளாக’ ஆக்கக்கூடிய நிலையை ஏற்படுத்தியுள்ளது என்றும் இலங்கையின் தேசிய கிறிஸ்தவ பேரவை குறிப்பிட்டுள்ளது.

இராஜாங்க அமைச்சர் டயானா தாக்கல் செய்த மனுவை  விசாரிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு !

தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை பறிக்கும் வகையில் ஐக்கிய மக்கள் சக்தி எடுத்த தீர்மானத்தை இரத்து செய்யும் உத்தரவை பிறப்பிக்குமாறு கோரி இராஜாங்க அமைச்சர் டயானா கமகே தாக்கல் செய்த மனுவை  விசாரிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பிரியந்த ஜயவர்தன, குமுதுனி விக்கிரமசிங்க மற்றும் அச்சல வெங்கப்புலி ஆகிய மூவரடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு முன்னிலையில் இந்த மனு இன்று (03) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, இந்த மனு எதிர்வரும் ஜூன் 8ஆம் திகதி விசாரணைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் செயற்பட தமிழ் தலைவர்கள் தயாராக இல்லை – ஜனாதிபதி ரணில்

தமிழ் சமூகம் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதில் தமிழ் அரசியல் கட்சிகள் பின்னடிப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் கட்சியின் மே தினக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இவ்வாறு தெரிவித்துள்ளார்.

நாட்டின் நீண்டகாலமாக இருக்கும் இனப்பிரச்சினைக்கு தீர்வு காண இந்த ஆண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துவதில் இது மிகவும் முக்கியமானது எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

அனைத்து சமூகங்களையும் உள்ளடக்கிய நியாயமான, புதிய போட்டித்தன்மையுள்ள மற்றும் நிலையான பொருளாதாரத்தை கட்டியெழுப்புவது அவசியம் என்றும் கூறியுள்ளார்.

ஆகவே அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அழைப்பு விடுத்துள்ளார்.

அரசாங்க அனுமதியுடன் பயிற்சிக்காக வெளிநாடு சென்ற 400 வைத்தியர்கள் நாடு திரும்பவில்லை!

பயிற்சி பெறுவதற்காக வெளிநாடு சென்ற 67 விசேட வைத்திய நிபுணர்கள், நாட்டிற்கு மீள வருகை தரவில்லை என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

 

சுகாதார அமைச்சுடன் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்ட நிலையில் குறித்த வைத்திய நிபுணர்கள் வெளிநாடு சென்றுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், வைத்தியர் அசேல குணவர்தன குறிப்பிட்டுள்ளார்.

 

இதேவேளை, பயிற்சிக்காக வெளிநாடு சென்ற சுமார் 400 வைத்தியர்கள் இதுவரை நாடு திரும்பவில்லை என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

“தீர்வு தருவதாக ரணில் விக்கிரமசிங்க கூறி ஒருவருடமாகிறது. இன்னும் தீர்வு இல்லை” – மனோகணேசன் விசனம் !!

இந்த வருட இறுதிக்குள் இனப்பிரச்சினை தீர்வு”, “பொருளாதார வளர்ச்சிக்கு தேசிய இன ஐக்கியம் அவசியம்” என்கிறார் ஜனாதிபதி. இதையிட்டு மகிழ்ச்சியடைகிறோம். ஆனால், இக்கதையை நீங்கள் கடந்த சுதந்திர தினத்துக்கு முன்னிருந்து சொல்லி வருகிறீர்கள். பெப்ரவரி நான்காம் திகதியளவில் தீர்வு காண்போம் என்றும் கூறினீர்கள். இப்போதும் மீண்டும், மீண்டும் கூறுகிறீர்கள். இலங்கையில் வாழும் ஒட்டுமொத்த தமிழ் பேசும் மக்கள் தொடர்பான இனப்பிரச்சினை தொடர்பில், உங்களுடன் முழுமையாக ஒத்துழைக்க நாம் தயார். ஆனால், இனி நீங்கள் பேச்சை நிறுத்தி, செயலில் காட்டுங்கள். “வோக் யுவர் டோக் மிஸ்டர் பிரசிடென்ட்!”. (பேச்சின்படி நடந்து காட்டுங்கள்!) என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு விளித்து கூறியுள்ளார்.

 

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் மேதின செய்தி உரை தொடர்பில் மனோ கணேசன் கூறியுள்ளதாவது,

 

இலங்கையில் இன்று இருக்கும் பெரும்பான்மை கட்சி தலைவர்கள் மத்தியில், தேசிய இனப்பிரச்சனை தொடர்பில் காத்திரமான முயற்சிகளை எடுத்தவர், ரணில் விக்கிரமசிங்க. அதில் சந்தேகம் இல்லை. ஏனையோரை பற்றி சந்தேகங்கள் இருக்கின்றன.

 

எனினும் ஜனாதிபதியாக விக்கிரமசிங்க நியமனம் பெற்ற பின் பலமுறை இந்த கால அட்டவணைக்குள் இனப்பிரச்சினை தீர்வு என பலமுறை கூறிவிட்டார். தமிழ் மக்களுக்கும் இந்த வசனம் பரிச்சயமானதாகும்.

 

சர்வகட்சி மாநாட்டை நடத்தி முதற்கட்டமாக 13ஐ பற்றி பேசிய போது அதுவரை ஒளிந்திருந்த ஆமதுருக்கள் தெருவுக்கு வந்தார்கள். அத்துடன் அது நின்று போய் விட்டது. இன்று அரகல போராட்டத்துக்கு பிறகு, கடுமையான பொருளாதார வீழ்ச்சிக்கு பிறகு, சர்வதேச சமூகத்திடம் கையேந்தும் நிலைமை ஏற்பட்ட பிறகு, ஜனாதிபதி விக்கிரமசிங்க, இனப்பிரச்சினை தீர்வுபற்றி, தமிழ் கட்சிகளை அழைத்து பேச முன் சிங்கள கட்சிகளை அழைத்து நாட்டின் உண்மை நிலைமை பற்றி பேச வேண்டும். சிங்கள மக்களை விளித்து நேரடியாக கூற வேண்டும். இனிமேலும் இதை தள்ளி போட முடியாது என எடுத்து கூற வேண்டும். சர்வதேச சமூகமும்அதற்கு சாதகமாக நடந்துகொள்ளும் என நான் அறிகிறேன்.

 

தற்போது நிலைமையை பாருங்கள். “இந்த வருட இறுதிக்குள் இனப்பிரச்சினை தீர்வு”, “பொருளாதார வளர்ச்சிக்கு தேசிய இன ஐக்கியம் அவசியம்” என்றெல்லாம் கூறுவதற்கு முன், வடக்கு கிழக்கில் காணி பறிபோகிறது. தொல்பொருள் திணைக்களம், தொல்லை திணைக்களம் ஆகி விட்டது. சிவனை தூக்கி கடாசி விட்டு, ஆமதுருக்கள், இராணுவ துணையுடன், புத்தனை பிரதிஷ்டை செய்கிறர்கள். காவி உடையில் அரசியல் செய்யும் ஆமதுருக்களை கட்டுக்குள் கொண்டு வர வேண்டும். அதற்கு இது தான் வேளை. இல்லாவிட்டால் கடும் பதட்ட நிலைமை வடக்கு கிழக்கில் விரைவில் உருவாகும்.

 

மலைநாட்டில், வந்தவன், போனவன் எல்லாம் அடாத்தாக தோட்ட காணிகளை பிடிக்கிறான். ஆனால், 200 வருட வரலாற்றை தொட்டு விட்ட பெருந்தோட்ட மக்களுக்கு வாழ, பயிர் செய்ய காணி இல்லை. மலையக தமிழருக்காக நான் குரல் கொடுத்தால், என்னை “தேயிலை கொழுந்து பறிக்க வந்தவன்” என்கிறார்கள். “தோட்டகாட்டான்” என்கிறார்கள். இது மலைநாட்டு பெருந்தோட்ட பகுதிகளில் கடும் பதட்ட நிலைமையை மெதுவாக உருவாக்கி வருகிறது எனவும் மனோ கணேசன் கூறியுள்ளார்.

இரண்டு கோடி மக்கள் தொகையுடைய இலங்கையில் மூன்று கோடி தொலைபேசிகள் பாவனையில் !

இலங்கையில் கையடக்கத் தொலைபேசிகள் உட்பட மூன்று கோடியே பதின்மூன்று இலட்சத்து எண்பத்தி இரண்டாயிரம் (31,382,000) தொலைபேசிகளை மக்கள் பயன்படுத்துவதாக தெரியவந்துள்ளது.

இந்நாட்டின் மக்கள் தொகை சுமார் இரண்டு கோடியே இருபத்துதொரு இலட்சத்து எண்பத்தாயிரம் .

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள 2022 ஆண்டு அறிக்கையின்படி, நாட்டில் நூறு (100) பேருக்கு 12 என்ற வீதத்தில் லேண்ட்லைன் தொலைபேசிகள் பாவனையில் உள்ளதாகவும் மொபைல் போன்கள் 100 பேருக்கு 142 போன்கள் என்ற வீதத்தில் பாவனையில் உள்ளதாகவும் தெரிவிக்கப் படுகின்றது .

இணைய வசதிகள் நூறு பேருக்கு 97.7. என்ற அடிப்படையில் உள்ளது . கடந்த ஆண்டு (2022) டிஜிட்டல் தர வாழ்க்கைச் சுட்டெண்ணின் படி, இலங்கை 117 நாடுகளில் 89 வது இடத்தைப் பிடித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

“நாம் மேற்கத்திய நாடுகளின் கைப்பாவையாக மாறாமல் இருந்ததாலேயே வீழ்த்தப்பட்டோம்.” – மேதின உரையில் மகிந்த ராஜபக்ச!

“நாம் மேற்கத்திய நாடுகளின் கைப்பாவையாக மாறாமல் இருந்ததாலேயே வீழ்த்தப்பட்டோம்.” என முன்னாள் ஜனாதிபதியும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவருமான மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

 

கடந்த காலங்களில் பல விடயங்களை அனுபவித்த தாம் மனிதர்களை அடையாளம் காணக்கூடியதாக இருந்ததாகவும், சரியான நேரத்தில் மக்களுடன் இணைந்து சரியான தீர்மானத்தை எடுப்பேன். எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

 

பொது மே தின பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மஹிந்த ராஜபக்ஷ மேற்கண்டவாறு தெரிவித்தார்.

 

 

மே தினக் கூட்டத்தில் உரையாற்றிய முன்னாள் ஜனாதிபதி மேலும் கூறுகையில்;

 

“… நண்பர்களே, சிலர் எங்களை விமர்சிக்கிறார்கள். ஆனால் அது அவர்களின் அரசியல் பிரச்சாரம். தேவைப்படும்போது சரியான முடிவுகளை எடுப்போம் என்பதை நாங்கள் உங்களுக்கு நினைவூட்ட வேண்டும்.

நாம் பொருளாதாரத்தை திட்டமிடும்போது, ​​உழைக்கும் மக்களுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும். நாங்கள் செய்கிறோம்.. அன்றிலிருந்து இன்று வரை நீங்கள் ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் எங்களுடன் இருந்துகொண்டு நாட்டின் நலனுக்காக எங்களை ஆட்சிக்கு கொண்டுவர தேவையான தியாகங்களை செய்திருக்கிறீர்கள்…

உண்மையான தொழிலாளர் தலைவர்கள் குறுகிய அரசியல் இலாபங்களுக்காக உழைக்கவில்லை. அந்த நேரத்தில், தொழிலாளர் இயக்கம் நாட்டின் சுதந்திரத்திற்கு முக்கிய சக்தியாக இருந்தது. உங்களுக்கு நினைவிருக்கலாம். அன்றைய தொழிலாளர் தலைவர்கள், தொழிலாளர் இயக்கத்தை நாட்டை அராஜகத்திற்கு வழிநடத்தியதில்லை.

நாம் மேற்கத்திய ஏகாதிபத்தியங்களின் கைப்பாவையாக மாறாமல், உள்ளுர் சிந்தனையின்படி வேலை செய்யப் போனதால், பல்வேறு அரசு சாரா அமைப்புகளையும், அரசியல் அமைப்புகளையும் ஒன்று திரட்டி ஒரு சதி செய்யப்பட்டது. எங்களின் உடைமைகளை மட்டுமல்ல, உயிரையும் சேதப்படுத்த நினைத்தனர்.

மக்களுக்காக ஆட்சியை கைப்பற்றி மக்களுக்காக அதிகாரத்தை விட்டுக்கொடுக்கும் அரசியல் அனுபவம் எமக்கும் எமது கட்சிக்கும் இருக்கின்றது என்பதை இந்த நேரத்தில் ஞாபகப்படுத்த வேண்டும்.

 

மேலும், எந்த நேரத்திலும் யாரும் நினைத்துப் பார்க்க முடியாத வகையில், அமைப்பு பலத்துடன் எழ முடியும் என்பதை நிரூபித்துள்ளோம். எனவே, அரசியலை எவ்வளவு விமர்சித்தாலும் சேறு அரசியலில் வீழாதீர்கள்.

கடந்த காலங்களில் நாம் பல அனுபவங்களைப் பெற்றுள்ளோம். மக்கள் அங்கீகரித்தார்கள். நாம் இப்போது நாட்டை பலப்படுத்த வேண்டும். எதிர்கால சந்ததியினருக்கு சிறந்த நாட்டை உருவாக்குங்கள்.

பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் குறித்த பௌத்தமகாநாயக்கர்களின் கோரிக்கைக்கு பதிலளிக்காத அரசாங்கம் !

உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் குறித்த பௌத்தமகாநாயக்கர்கள் விடுத்த வேண்டுகோள்களிற்கு அரசாங்கம் இன்னமும் பதில் அளிக்கவில்லை என ஒமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார்

உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தில் இடம்பெற்றுள்ள அரசமைப்பிற்கு முரணாண சிலவிடயங்களை மாற்றவேண்டும் அல்லது புதிய சட்டமூலத்தை உருவாக்கவேண்டும் என பௌத்த மகாநாயக்கர்கள் உட்பட  பலதரப்பினர் ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்கவிடம் விடுத்த வேண்டுகோள்களிற்கு இதுவரை பதில் வழங்கப்படாதமை குறித்து ஒமல்பே சோபித தேரர் கவலை வெளியிட்டுள்ளார்.

ஜனாதிபதி பௌத்தமட பீடாதிபதிகளிற்கு இதுவரை பதில் அளிக்கவில்லை என தெரிவித்துள்ள ஒமல்பே சோபித தேரர்   பௌத்தமத பீடாதிபதிகள் மாத்திரமின்றி சிவில் சமூகத்தினர் உட்பட பல தரப்பினர் குறிப்பிட்ட சட்டமூலம் குறித்து கவலை வெளியிட்டுள்ளனர் ஜனாதிபதி உட்பட உரிய தரப்பினரிடம் அதனை தெரிவித்துள்ளனர் எனினும் இதற்கு அதிகாரிகள் பதிலளிக்காதது கவலையளிக்கும் விடயம் எனவும் ஓமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார்.

உத்தேச சட்டமூலம்  பொலிஸார் பயங்கரவாதத்திற்கு தங்கள் விருப்பத்தின்படி அர்த்தம் கொடுக்கும் நிலையை ஏற்படுத்தும் என தெரிவித்துள்ள ஒமல்பே சோபிததேரர் இதன் காரணமாக பொதுமக்களிற்கு பெரும் அசௌகரியங்கள் ஏற்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

2261வது நாட்கள் – வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கவனயீர்ப்பு போராட்டீம் !

2261வது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் இன்றும் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இராணுவத்திடம் சரணடைந்து காணாமல் ஆக்கப்பட்ட தமது பிள்ளைகளிற்கு நீதி கோரி குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது, மே நாளான இன்று அதற்கான எதிர்ப்பை வெளியிட்டும், சர்வதேசத்தின் கவனத்தை ஈர்க்கும் வகையிலும் கவனயீர்ப்பில் ஈடுபட்டனர்.

குறித்த போராட்டம் காலை 11 மணியளவில் கிளிநொச்சி மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகம் முன்பாக A9 வீதியில் முன்னெடுக்கப்பட்டது.