உள்நாட்டுச் செய்திகள்

உள்நாட்டுச் செய்திகள்

பிரதமர் ஹரினி அமரசூரிய பிரான்ஸ்சில் சுற்றுப்பயணம்

பிரதமர் ஹரினி அமரசூரிய பிரான்ஸ்சில் சுற்றுப்பயணம்

ஏப்பிரல் 1 இல் பிரான்சில் நடைபெறவுள்ள யுனஸ்கோ சர்வதேச நிபுணர் மாநாட்டில் பிரதமர் ஹரிணி அமரசூரிய கலந்து கொள்கிறார். அவ் அமர்வில் இலங்கையின் புனித நகரான அநுராதபுரத்தின் பாரம்பரியம் , அதனுடைய வாழ்க்கை மற்றும் அதனைப் பாதுகாப்பதற்கான அணுகுமுறை என்ற தொனிப்பொருளில் உரையாற்றுகிறார். இவ் விஜயத்தின் போது பிரான்ஸ் அரசாங்கத்தின் உயர் அதிகாரிகளையும் சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தைகள் நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.

யாழ்ப்பல்கலைக்கழகத்தின் தில்லுமுல்லுகளும் திருகுதாளங்களும்

யாழ்ப்பல்கலைக்கழகத்தின் தில்லுமுல்லுகளும் திருகுதாளங்களும்..

பல்கலைக்கழகங்கள் உயர்கல்வியான பட்டப்படிப்பை வழங்கும் உயரிய கல்வி நிறுவனம். அதுமட்டுமல்லாமல் ஆய்வுகளை மேற்கொண்டு சமூகத்தின் தேவைக்கான அறிவியல் வழிகாட்டலை வழங்குகிறது. அப்படியான ஒரு நிறுவனம் வினைத்திறனற்று சரியாக இயங்காவிடில் அது சமூகத்திற்கு பெரும் கேடாகும். யாழ்ப்பாண பல்கலைக்கழகம் தொடர்பில் சமீப காலங்களில் பல்வேறு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. நாளுக்கு நாள் யாழ்ப்பாண பல்கலைக்கழகம் தொடர்பாக புதிய புதிய சர்ச்சைகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

மக்களின் வரிப்பணமான 16 கோடி 60 இலட்சத்தை பிணையாக கட்டி புலமைப்பரிசில் திட்டங்களின் கீழ் யாழ்ப்பாண பல்கலைக்கழகம் சார்பில் சென்ற கல்வியாளர்கள் நாடும் திரும்பவில்லை மற்றும் கட்டிய பிணைப்பணமும் மீள வசூலிக்கப்படவில்லை எனத் தெரிய வந்துள்ளது.
வழமையாகவே பல்கலைக்கழகங்கள் ஊடாக வெளிநாடுகளுக்கு புலமைப் பரிசில் பெற்றுச் செல்லும் கல்வியாளர்களும் மற்றும் கல்வித்துறை சாரா பல்கலைக்கழக ஊழியர்களும் குறிப்பிட்ட செயல்த்திட்டங்கள் முடிந்த பின்னர் பணிக்கு திரும்ப வேண்டும். அந்தவகையில் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த நூற்றுக்கு மேற்பட்டவர்கள் செயல்த்திட்டங்கள் முடிவடைந்த பின்னரும் நாடு திரும்பி கடமைக்கு சமூகமளிக்கவில்லை.

இந்த விடயத்தை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 2023 வருடாந்த அறிக்கையில் கணக்காளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார். அவருடைய அறிக்கையின் படி 80 கல்விமான்களும் 21 கல்வித்துறை சாரா அலுவலர்களும் என 101 பேர் புலமைப் பரிசில் செயல்த்திட்டங்களின் ஊடாக வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளனர். அவர்கள் யாரும் இதுவரை நாடு திரும்பவும் இல்லை. கடமைகளைப் பொறுப்பேற்கவும் இல்லை. 1980 தொடக்கம் 2023 வரையான காலப்பகுதியிலேயே இவ்வாறான புலமைப்பரிசில் நிகழ்ச்சித்திட்டங்களின் கீழ் வெளிநாடு சென்று , நாடு திரும்பாது உள்ளனர்.

இவ்வாறு சென்றவர்களுக்கு செலுத்திய பிணைப்பணம் 16 கோடி 62 இலட்சத்து 98 ஆயிரத்து 684 ரூபாய் மீள அறவிடப்படாமல் நிலுவையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை மீளப்பெற யாழ்ப் பல்கலைக்கழகம் எந்த பிரயத்தனமும் செய்யவில்லை. மேலும் திரும்பப் பெறப்பட்ட 6 கோடி 17 இலட்சத்திற்கு அதிகமான பிணைப்பணம் திறைசேரிக்கு திருப்பி அனுப்பப்படவில்லை என்றும் கணக்காளர் நாயகம் கண்டுபிடித்துள்ளார்.

பொதுமக்களின் வரிப்பணத்தில் இலவசமாக உயர்கல்வியை பெற்றுக் கொண்டவர்கள், நாட்டில் பணி புரியாமல் வெளிநாடுகளுக்கு புலம்பெயர்வது தொடர்பில் பல விமர்சனங்கள் எழுந்துள்ளன. அப்படியிருக்க அதே மக்களின் வரிப்பணத்தை பிணையாக வைத்து வெளிநாடு சென்றவர்கள் நாடு திரும்பாலும் குறைந்தபட்சம் பிணைப் பணத்தையாவது திரும்ப செலுத்தாமலும் இருப்பது மோசடி. இவ்வாறான ஊழலுக்கு யாழ்ப் பல்கலைக்கழகம் துணை போய்யுள்ளமை வெட்கக்கேடானது.

  • பரீட்சை முடிவுகளில் தாமதம்

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் அடுத்த திருகுதாளம் பரீட்சை முடிவுகள் மிகத் தாமதமாக வெளியிடப்பட்டு வந்திருக்கின்றது. இதனை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் அறிக்கை ஒன்று வெளிப்படுத்தியுள்ளது.

பொதுவாக பல்கலைக்கழகத்தில் நடாத்தப்படும் பரீட்சைப் பெறுபேறுகள் மூன்று மாதத்திற்குள்ளாக வெளியிடப்பட வேண்டும். ஆனால் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் 2019 முதல் 2023 காலப்பகுதிகளில் மொத்தமாக 11 பீடங்களில் பரீட்சை முடிவுகளில் நான்கு மாதங்கள் தொடக்கம் 27 மாதங்கள் வரை தாமதிக்கப்பட்டே வெளியிடப்பட்டதாகவும் மானியங்கள் ஆணைக்குழு அறிக்கை கூறுகின்றது.

மாணவர்களின் எதிர்காலத்தோடு விளையாடும் யாழ்ப்பல்கலைக்கழ நிர்வாகம் தொடர்பில் உரிய விசாரணைகளை முன்னெடுக்க வேண்டிய காலம் கனிந்து வருகின்றது. பரீட்சைகளை உரிய நேரத்தில் நடாத்தி பெறுபேறுகளை அறிவிப்பதையே பல்கலைக்கழகங்கள் தமது தலையாய பணியாக செய்ய வேண்டும் . பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் தமது தனிப்பட்ட சுயநலன்களுக்கு மாணவர் சமூகத்தை பிழையாக வழி நடத்துதல் தவிர்க்கப்பட வேண்டும். பெரும்பாலும் யாழ் பல்கலைக்கழகம் தற்போது மூவின சமூகங்களையும் பிரதிநிதித்துவப்படுத்துவதால் இன்னும் பொறுப்புடன் நடுநிலமையுடன் செயற்பட வேண்டும்.

  • யாழ்ப்பல்கலைக்கழகத்தில் தொடரும் பகிடிவதை

1998 ஆம் ஆண்டின் 20 ஆம் இலக்க கல்வி நிறுவனங்களில் பகிடிவதையையும் வேறுவகையான வன்செயல்களையும் தடை செய்தல் சட்டத்தின் மூலம் பகிடிவதை செய்வதானது இலங்கையில் மிகக் கடுமையான குற்றங்களில் ஒன்றாகவும், பிணை வழங்கப்படாத குற்றமாகவும் பிரகடனப்படுத்தியுள்ளது. இதன்படி பகிடிவதை செய்யும் அல்லது ஊக்குவிக்கும் எந்தவொரு நபரும் பிடியாணை இல்லாமல் கைது செய்யப்படலாம் எனவும் ஏற்பாடுகளை கொண்டுள்ளது.

பகிடிவதைக் குற்றத்திற்கு பிணை வழங்கப்படாது. அப்படியிருக்க யாழ்ப்பல்கலைக்கழக விஞ்ஞான பீட புதுமுக மாணவர் ஒருவர் மீது சில சிரேஷ்ட மாணவர்களால் பகிடிவதை என்ற சாட்டில் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தாக்குதலுக்குள்ளான நாத்தாண்டியா மாணவர் கேட்கும் திறனை இழந்துள்ளதாக பாதிக்கப்பட்ட மாணவனின் தந்தை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிற்கும், பொலிஸ்க்கும் மற்றும் யாழ்ப்பாண மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கும் முறைப்பாடு அளித்துள்ளார்.

சம்பவ தினம் அன்று விரிவுரைக்கு சென்று கொண்டிருந்த சம்பந்தப்பட்ட மாணவரை சில சிரேஷ்ட மாணவர்கள் வழிமறித்து , மோட்டார் சைக்கிளில் ஏற்றி தனியார் மாணவர் தங்கும் விடுத்திக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு வைத்து ஏனைய சில புதுமுக மாணவர்களையும் பகிடிவதை என்ற பெயரில் ஹெல்மெட்டாலும் மற்றும் பலவாறும் தாக்கியுள்ளனர். அப்போது நாத்தாண்டியாவைச் சேர்ந்த மாணவர் மயக்கமுற்று விழுந்துள்ளார்.

தாக்குதலில் காயமடைந்த மாணவனுக்கு வலி நிவாரணியான பனடோலைப் கொடுத்து வெளியோ போக விட்டுள்ளார்கள். கூகுள் வரைபட உதவியுடன் யாழ் பல்கலைக்கழக மாணவர் விடுதியை அடைந்த நாத்தாண்டியா மாணவர் அம்புலன்ஸ்ஸில் வைத்தியசாலை கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறார்.. இவ்வாறு உடல் மற்றும் உளரீதியாக மோசமாக பாதிப்படைந்துள்ள தனது மகனுக்கு பாதுகாப்பு அளிக்குமாறு தந்தை நீதி கேட்டு பொலிஸ் சென்றுள்ளமை யாழ்ப் பல்கலைக்கழகம் எவ்வளவு தூரம் மாணவர்களுக்கு ஆபத்தானதாக மாறியியுள்ளது என்பதை வெளிப்படுத்துகின்றது.

யாழ்ப்பல்கலைக்கழக கலைப்பீடாதிபதி பேராசிரியர் சிவசுப்பிரமணியம் ரகுராமே வன்முறையை கையிலெடுக்கின்ற போது , அவரைப் போன்ற பேராசிரியர்களால் வழிநடத்தப்படும் மாணவர்கள் வன்முறையாளர்களாக மாறுவதில் ஆச்சரியம் இல்லை. சமீபத்தில் பேராசிரியர் சி . ரகுராம் கலைப்பீடத்தில் மாணவர்கள் பயன்பாட்டுக்கு அமைத்திருந்த கல்லாசனங்களை உடைத்து எறிந்தமை குறிப்பிடத்தக்கது.

யாழ்ப்பல்கலைக்கழகத்தில் புதுமுகப் பெண் மாணவிகளை பகிடிவதையின் போது சிரேஷ்ட மாணவர்கள் தூசண வார்த்தைகள் கொண்டு வசைபாடுவது தொடர்பில் ஏற்கனவே முறைப்பாடுகள் வந்துள்ளன. ஆண்புதுமுக மாணவர்கள் உடலியல் ரீதியாக துன்புறுத்தப்படுவதும் அறிந்ததே. அதேநேரம் பகிடிவதையில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் 4 இரண்டாம் வருட மாணவர்களுக்கு வகுப்புத்தடை விதிக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட விடயத்தில் யாழ்ப் பல்கலைக்கழகம் விசாரணைகளை செய்யும் என்றும் விஞ்ஞான பீடாதிபதி பேராசிரியர் பு. ரவிரஜன் தெரிவித்துள்ளார். மேலும் சட்ட நடவடிக்கைகளுக்குப் யாழ்ப்பல்கலைக்கழகம் பூரண ஒத்துழைப்பு வழங்கும் என்றும் தெரிவித்துள்ளார். யாழ்ப்பல்கலைக்கழகம் கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரம் செய்கின்றது என சமூக வலைத்தளங்களில் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

யாழ்ப்பல்கலைக்கழகத்தில் பாலியல் சுரண்டல், பாலியல் இலஞ்சம் , ஊழல் , வன்முறை , போதைப்பொருள் கலாச்சாரத்துடன் பகிடிவதையும் சேர்ந்து பல்கலைக்கழக பெருமையை உலகறியச் செய்துள்ளது. விவகாரம் மானியங்கள் ஆணைக்குழு வரை சென்றுள்ளதால் யாழ்ப்பாண பல்கலைக்கழகம் தொடர்பில் தனியானவொரு சுயாதீனமான ஆணைக்குழு நியமிக்கப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். யாழ்ப்பல்கலைக்கழகம் கிளீன் செய்யப்பட வேண்டும் சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

யாழில் கேரளக் கஞ்சாவுடன் மூவர் கைது !

யாழில் கேரளக் கஞ்சாவுடன் மூவர் கைது !
நேற்றைய தினம்  சங்குப்பிட்டி பாலத்திற்கு அண்மைய பகுதியில் வைத்து 20 மில்லியன் பெறுமதியான 96 கிலோ 310 கிராம் கேரள கஞ்சா சோதனைகளின் போது கைப்பற்றப்பட்டுள்ளது. மீன்கள் ஏற்றிச் செல்லும் கூலர் ரக வாகனத்தில் கஞ்சா கடத்தப்படுவதாக பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து சாவகச்சேரி பொலிஸ் நிலைய அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கையினால் வவுனியாவைச் சேர்ந்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ரியூசன் வாத்திகள் பதிவுசெய்ய வேண்டும் !

ரியூசன் வாத்திகள் பதிவுசெய்ய வேண்டும் !

ஆசிரியர் கவுன்சில் மூலம் பதிவு எண்கள் வழங்கப்படும் ஆசிரியர்களே தனியார் வகுப்புக்களை நடத்தலாம். அதன்படி அரசாங்கம் தனியார் பயிற்சி வகுப்பு ஆசிரியர்களை பதிவு செய்யும் திட்டம் தொடர்பான முன்மொழிவுகளை அமைச்சரவையில் விரைவில் சமர்ப்பிக்கவுள்ளதாக அமைச்சரவை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதன்படி பதிவு செய்யாத ஆசிரியர்கள் தனியார் வகுப்புக்களை நடத்த முடியாது. இதன் மூலம் தனியார் பயற்சி வகுப்புகளை ஒழுங்குபடுத்த முடியும் என அரசாங்கம் எதிர்பார்க்கின்றது.

தனியார் கல்வி நிலையங்களை நடாத்தும் ஆசிரியர்கள் கிரிமனல் நடவடிக்கைகளிலும் பாலியல் தூஸ்பிரயோகங்களிலும் ஈடுபட்டு வருகின்றனர். முல்லைத்தீவில் தனியார் வகுப்புகளை நடத்தும் ஆசிரியர் தற்சுதன் பாலியல் குற்றச்செயல்களில் ஈடுபட்டமை தெரிந்ததே.

வெளிநாடுகளில் கைதாகும் பாதாள உலக குற்றவாளிகள் !

வெளிநாடுகளில் கைதாகும் பாதாள உலக குற்றவாளிகள் !

இலங்கையில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களுக்காக தேடப்பட்டு வந்த ‘ரோட்டும்ப அமில’ என்ற அமில சம்பத் ரஷ்யாவில் கைதானார். மிகுந்த அரசியல் செல்வாக்குடைய இக் குற்றவாளி , அநுர அரசு பதவியேற்றதைத் தொடர்ந்து ரஷ்யாவுக்கு தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது. இவர் விரைவில் இலங்கைக்கு நாடு கடத்தப்படலாம்.

பாதாள உலகக் குற்றவாளி அமில சம்பத் என்கிற 'ரோட்டும்ப அமிலா' ரஷ்யாவில் கைது!  - Ceylonmirror.net

அதேவேளை பிரான்சில் தலைமறைவாகியிருக்கும் புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் கொல்லப்பட்ட கணேமுல்லே சஞ்சீவவின் கூட்டாளியான ‘ நேவி தினேஷ்’ மூன்று பொலிஸ் அதிகாரிகளை குடும்பத்துடன் கொலை செய்யப் போவதாக மிரட்டல் விடுத்துள்ளார். கணேமுல்லே சஞ்சீவவின் இறப்பின் பின்னர் , சஞ்சீவ வழிநடத்திய பாதாள உலகக் குழுவுக்கு தலைமை தாங்கி நேவி தினேஷ் கொலை, போதைப் பொருள் கடத்தல் உள்ளிட்ட குற்றச் செயல்களில் ஈடுபட்டு வருகின்றார். தினேஷ்சின் தந்தை மற்றும் சகோதரர் போதைப்பொருட்களுடன் கம்பஹா பொலிஸார் கைது செய்யதைத் தொடர்ந்தே இவ் கொலை மிரட்டல்கள் தொலைபேசியூடாக விடுக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் பொடி லெசி உட்பட வேறும் சிலரும் இந்தியாவில் வைத்து கைது செய்யப்பட்டடனர். இலங்கையில் கிரிமினல் குற்றங்களில் ஈடுபட்டவர்கள் உலகின் எந்தப் பாகத்தில் ஒழிந்தாலும் அவர்களை நாடு கடத்துவதற்கு அரச அழுத்தங்களை வழங்கி வருகின்றது.

இதுவரை சிறையில் இருக்க வேண்டியவர்கள் வீதிகளில் சுதந்திரமாக நடமாடினார்கள். இப்போது சிறையிலிருக்க வேண்டியவர்கள் சிறைக்கு அனுப்பப்பட்டுக் கொண்டுள்ளனர். நாட்டில் உள்ள பல சிறைச்சாலைகள் நிரம்பி வழிகின்றது.

போராட்டக்காரர்களை விரட்டியடிக்கும் என்பிபியினர் – சஜித் காட்டம்! 

போராட்டக்காரர்களை விரட்டியடிக்கும் என்பிபியினர் – சஜித் காட்டம்!

வேலைநிறுத்தங்கள் மற்றும் போராட்டங்களின் சிற்பிகளாக இருந்தவர்கள் இன்று, ஆட்சிக்கு வந்த பிறகு போராட்டங்கள் மற்றும் வேலைநிறுத்தங்கள் தடை செய்யப்பட்டுள்ளன என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ குற்றம்சாட்டியுள்ளார். கல்வியமைச்சின் முன்னால் நடந்த ஆர்ப்பாட்டத்தில் அபிவிருத்தி அதிகாரிகள் தாக்கப்பட்டதை குறிப்பிட்ட சஜித் மக்கள் ஜனநாயக உரிமைக்காக குரல் கொடுப்பது குற்றமாகிவிட்டது என்கிறார்.

கேகாலை மாவட்ட உள்ளூராட்ச்சி சபை வேட்பாளர்களுடனான சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். மின்வெட்டுக்கு குரங்குகள் காரணம் என்றும் , அரிசித் தட்டுப்பாட்டுக்கு நாய் சோறு சாப்பிடுவது காரணம் என கதைகளை கூறி அரசாங்கம் மக்களை திசை திருப்புவதாகவும் குறிப்பிட்டார். வேலையில்லா பட்டதாரிகள் ஏமாற்றப்பட்டு விட்டனர். வரிச்சுமை அதிகரித்து விட்டது. சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து காட்டுச் சட்டம் நிலவுகிறது. பாதாளக் குழுக்கள், கொலைகாரர்கள் மற்றும் ஊழல்வாதிகளின் செல்வாக்கு சமூகத்தை ஆக்கிரமித்துள்ளது. என ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாஸ தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் மீது குற்றச்சாட்டுக்களை அடுக்கினார்.

விரைவில் வடமாகாண காணிகள் விடுவிக்கப்பட்டு மக்களிடம் கையளிக்கப்படும் – அமைச்சர் பிமல்

விரைவில் வடமாகாண காணிகள் விடுவிக்கப்பட்டு மக்களிடம் கையளிக்கப்படும் – அமைச்சர் பிமல்

 

“ மன்னார் மறிச்சுக்கட்டி முதல் காங்கேசன்துறை வரை மக்களுக்குச் சொந்தமான காணிகளை படையினர், நிறுவனங்கள் மற்றும் சில தனியார்கள் தமதாக்கிக் கொண்டுள்ளனர். இப்போது இது குறித்து ஆராய்ந்து முடிவு செய்யக் கூடிய சூழ்நிலை உருவாகியுள்ளது. ஆகவே காணிச் சொந்தக்காரர்களிடமே அவர்களது காணிகளை மீண்டும் ஒப்படைப்பதற்கு அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக போக்குவரத்து பெருந்தெருக்கள் , துறைமுக மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்யாயக்க தெரிவித்துள்ளார்.

கடந்த 29 ஆம் திகதி மன்னாரில் நடைபெற்ற தேசிய மக்கள் சக்தி கட்சியின் வேட்பாளர்கள் சந்திப்பில் கருத்து தெரிவித்த அமைச்சர் வடக்கில் மூன்று பெரிய கைத்தொழிற்பேட்டைகளை உருவாக்க முடிவு செய்துள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் வில்பத்து ஊடாகச் செல்லும் பாதையை விரைவில் திறப்பதாகவும் வாக்குறுதியளித்துள்ளார். அத்தோடு வடக்கில் தேசியப் பிரச்சினையொன்றுள்ளது என்பதை ஏற்றுக் கொண்ட அவர், மன்னார் மாவட்டத்தில் வாழும் தமிழ், சிங்கள மற்றும் முஸ்லிம் சமூகங்களை ஒருங்கிணைத்து அவர்களுடைய பிரச்சினைகளை தீர்க்கும் வேணவாவுடன் அரசு இருப்பதாகம் தெரிவித்தார்.

என்னதான் போராடினாலும் அரச வேலை தர முடியாது – அமைச்சர் லால் கந்தா !

என்னதான் போராடினாலும் அரச வேலை தர முடியாது – அமைச்சர் லால் கந்தா !

வேலை இல்லாதவர்களுக்கு அரசே வேலை வழங்கும் என்ற நாட்டின் இதுவரையான கொள்கையை நாங்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. அதேநேரம் அரசு தலையிட்டு வேலைவாய்ப்புக்களை உருவாக்க வேண்டும். இதனால் தான் அவர்கள் அரசே வேலை தர வேண்டும் என்று கோரி பேரணிகள் மற்றும் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுகிறார்கள். அப்படியே எல்லோரையும் அரச பணியில் சேர்க்க முடியாது என அமைச்சர் கே.டி. லால் காந்தா தெரிவித்துள்ளார்.

நிலைமை இவ்வாறிருக்க யாழ் பல்கலைக்கழகம் உட்பட்ட பல்கலைக்கழக மாணவர்கள் தங்களுக்கு இலவசக் கல்வியும் வேண்டும் அரச வேலையும் வேண்டும் ஆனால் 5ம் வகுப்பு மாணவர்கள் எழுதக் கூடிய புலமைப்பரிசில் பரீட்சை போட்டிப் பரீட்சையும் இல்லாமல் வேலை தர வேண்டும் என்று கோருகின்றனர்.

புத்தகப்பையின் எடையை குறைக்க கல்வியமைச்சு அறிவுறுத்தல் !

புத்தகப்பையின் எடையை குறைக்க கல்வியமைச்சு அறிவுறுத்தல் !

பள்ளிக்கூடங்களுக்கு பிள்ளைகள் எடுத்து வரும் பைகளின் எடையை குறைப்பதற்கான அறிவுறுத்தல்கள் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களுக்கு கல்வியமைச்சரின் பள்ளி சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்துப் பிரிவால் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இப்பிரிவின் இயக்குனர் கங்கா தில்ஹானியின் கூற்றுப்படி சில பள்ளிகளில் தேவையற்ற புத்தங்களை கொண்டுவரும்படி பிள்ளைகளை வருத்துவதாக தெரியவந்துள்ளது. அத்துடன் இது தொடர்பான புகார்கள் தமக்கு கிடைத்துள்ளதாகவும் கூறுகிறார். மேலும் சம்பந்தப்பட்ட பள்ளிக்கூடங்களுக்கு கண்காணிப்பு குழுக்களை அனுப்பி விசாரணைகள் நடந்து வருவதாகவும் கூறியுள்ளார்.

அந்தவகையில் உலக சுகாதார அமைப்பின் பரிந்துரைகளின்படி, பள்ளிப் புத்தகப்பையின் எடை பதினைந்து முதல் இருபது கிலோகிராம்களுக்கு குறைவாக இருக்க வேண்டும். அதன்படி முதலாம் ஆண்டு பள்ளிப் பிள்ளையின் பையின் எடை 2.6 கிலோகிராமும், இரண்டாம் ஆண்டுப் பிள்ளையின் பையின் எடை 3 கிலோகிராமும், ஐந்தாண்டுப் பிள்ளையின் பையின் எடை 4 கிலோகிராமும் இருக்க வேண்டும் எனக் கூறப்படுகிறது. 10 ஆம் ஆண்டுப் பிள்ளையின் பள்ளிப்பையின் எடை சுமார் 7 கிலோகிராமுமாக இருக்க வேண்டும் என்று கல்வியமைச்சின் சுகாதாரப்பிரிவு சுட்டிக்காட்டுகிறது.

போதைப்பொருள் மறுவாழ்வு மையத்தில் இளைஞன் மர்ம மரணம் !

போதைப்பொருள் மறுவாழ்வு மையத்தில் இளைஞன் மர்ம மரணம் !

மினுவாங்கொட பன்சில்கொடயில் இயங்கிய வந்த தனியார் போதைப் பொருள் மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்று வந்த 33 வயதான இளைஞன் சந்தேகத்திற்கிடமான வகையில் மருத்துவமனையில் இறந்துள்ளார். இறந்த இளைஞன் கைகளில் விலங்கும் கால்களில் இரும்புச் சங்கிலியும் அணிவித்து தாக்கியதாக கூறப்படுகிறது. பொலிஸார் விசாரணையை முன்னெடுத்து வருகின்றனர்.

வடக்கிலும் புனர்வாழ்வு மையங்களின் அவசியத்தை யாழ் பாராளுமன்ற உறுப்பினர் மருத்துவ கலாநிதி பவானந்தராஜா பாராளுமன்றத்தில் வலியுறுத்தி இருந்தமை குறிப்பிடத்தக்கது. யாழ் ப்பாணத்தில் சிலர் தனிப்பட்ட முறையில் இந்த இல்லங்களை நடத்துகின்றனர். அவர்கள் இவ்விடயங்களில் பயற்சி பெற்றவர்களா என்பதும் கேள்விக்குறியே. மேலும் வடக்கில் போதைப்பொருள் மற்றும் வன்முறையைக் கட்டுப்படுத்துவதற்கான தனிநபர் பிரேரணையை யாழ் பா உ ரஜீவன் கொண்டு வந்ததும் குறிப்பிடத்தக்கது.