உள்நாட்டுச் செய்திகள்

உள்நாட்டுச் செய்திகள்

காணாமலாக்கப்பட்டோர் அலுவலகம் வேண்டாம் – ஐ.நா மனித உரிமைகள் அமர்வில் உறவுகள் வேணடுகோள் !

காணாமலாக்கப்பட்டோர் அலுவலகம் வேண்டாம் என நாங்கள் உறுதியாக உள்ள நிலையில் நடைமுறையில் நாம் நிரூபித்தவாறு ஓ.எம்.பியை மீண்டும் வலுப்படுத்த முயற்சிக்காதீர்கள் என ஐ.நா மனித உரிமைகள் பிரதான அமர்வில் வடக்கு, கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சங்கத்தின் செயலாளர் லீலாதேவி ஆனந்த நடராஜா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபையில் மனித உரிமை பேரவையில் நேற்று (30.09.2022) வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சார்பில் உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளர்.

 

அவர் மேலும் தெரிவிக்கையில், எமது நிலைப்பாட்டை நிரூபிப்பதற்காக வலுவான ஆதாரங்கள் மூலம் ஓ.எம்.பி ஆதாரங்களுடன் காணாமலாக்கப்பட்ட 5 நபர்களின் விவரங்கள், அவர்கள் ஒப்புக்கொண்டபடி ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் குறைந்தபட்சம் ஒரு வழக்குக்கு தீர்வு காண வேண்டும்.

ஆனால் மூன்று ஆண்டுகள் கடந்த பிறகும் ஒரு வழக்கைக் கூட இதுவரை நிரூபிக்க முடியவில்லை.

ஓ.எம்.பி உடனான எமது முரண்பாடு நீடித்து வரும் நிலையில் காணாமலாக்கப்பட்டவர்கள் பற்றிய அலுவலகம் என்றால் தாங்களாகவே காணாமல் போனவர்கள் என்று அர்த்தம் போதிப்பதா, ஆனால் எங்கள் உறவுகள் விடயத்தில் அவர்கள் சரணடைந்து எங்களால் முறையாக ஒப்படைக்கப்பட்ட பின்னர் விருப்பமின்றி காணாமல் போயுள்ளனர்.

கடந்த 13 ஆண்டுகளாக நிகழ்ச்சி நிரல் 2 இன் கீழ் தீர்மானங்கள் உள்ளன. ஆனால் கடந்த 13 ஆண்டுகளாக பலவந்தமாக காணாமலாக்கப்பட்டவர்கள் மற்றும் கட்டாயக் குடியேற்றத்தால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு எந்த ஒரு உறுதியான மாற்றமும் இல்லை.

இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கிற்கான ஒரு சிறப்பு அறிக்கையாளரை நிகழ்ச்சி நிரல் 4 இன் கீழ் இரண்டாவது தீர்மானத்தின் கோர் குழு நாடுகளை, குறிப்பாக ஐக்கிய இராச்சியம் மற்றும் கனடாவிடம் கேட்டுக்கொள்கின்றோம். எமக்கான நீதியை பெறுவதற்கு இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு அனுப்புமாறு கேட்டுக் கொள்கிறோம் என தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் சிறுவன் உள்ளிட்ட இருவர் கைது !

யாழ்ப்பாணம் மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் ஐஸ் போதைப்பொருளுடன் 15 வயது சிறுவன் உள்ளிட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மானிப்பாய் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் குறித்த இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். அதேவேளை , கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட செல்வபுரம் பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஊதுகாவற்துறை பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றுக்கு நிஜாம் பாக்கு கொண்டு சென்ற மாணவனை பொலிஸார் கடுமையாக எச்சரித்து விடுவித்துள்ளனர்.

70 சதவீத சம்பள உயர்வைக்கோரி இலங்கை தோட்ட சேவையாளர் சங்கத்தினர் போராட்டம் !

70 சதவீத சம்பள உயர்வைக்கோரி இலங்கை தோட்ட சேவையாளர் சங்கத்தினரால் இன்று (01) போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

தலவாக்கலை நகரில் நடைபெற்ற இப்போராட்டத்தில் நாடு தழுவிய ரீதியில் உள்ள இலங்கை தோட்ட சேவையாளர் சங்கத்தின் பிரதிநிதிகள் பங்கேற்றிருந்தனர்.

மேற்படி சங்கத்தின் தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர் உள்ளிட்டோரின் பங்கேற்புடன் தலவாக்கலை மல்லியப்பு கோவில் சந்தி பகுதியில் ஆரம்பமான பேரணி, தலவாக்கலை நகரை வந்தடைந்து, அங்கு பாரிய ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

சம்பள உயர்வு மற்றும் தொழில்சார் சலுகைகளை வலியுறுத்தும் பதாதைகளை தாங்கியவாறு சங்க உறுப்பினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

2019 ஆம் ஆண்டு கைச்சாத்திடப்பட்ட கூட்டு ஒப்பந்தம் நேற்றுடன் (30) காலாவதியானது, இந்நிலையில் தற்போதைய வாழ்க்கைச் சுமைக்கேற்ப 70 வீத சம்பள உயர்வு வேண்டுமென இலங்கை தோட்ட சேவையாளர் சங்கம் வலியுறுத்துகின்றது.

எனினும், 24 வீத சம்பள உயர்வை மூன்று கட்டங்களாக வழங்குவதற்கு முதலாளிமார் சம்மேளனம் முன்வந்துள்ளது. இதனை ஏற்க மறுத்தே, தமது கோரிக்கை ஏற்கப்பட வேண்டும் என வலியுறுத்தி போராட்டம் இடம்பெறுகின்றது.

தோட்டக் கம்பனிகளின் லாபம் மும்மடங்காக அதிகரித்துள்ள நிலையில், இந்த சம்பள உயர்வை வழங்கக்கூடியதாக இருக்கும் என போராட்டக்காரர்கள் சுட்டிக்காட்டினர்.

மலையக மக்கள் முன்னணி உட்பட மலையகத்திலுள்ள தொழிற்சங்கங்கள் பல இப்போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தமை குறிப்பிடதக்கது.

போராட்டக்களத்தை வழிநடத்தியவர்களை கைது செய்ய வேண்டும் – நாமல் ராஜபக்ஸ

போராட்டக்களத்தை வழிநடத்தியவர்களை கைது செய்து, அதற்கு ஒத்துழைப்பு வழங்கிய இளைஞர்களை சமூகமயப்படுத்தும் வேலைத்திட்டமொன்று அவசியம் என ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ தெரிவித்தார்.

பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ இந்நாட்களில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி மறுசீரமைப்பு கூட்டங்களில்  கலந்துகொள்வதுடன், வெலிமடை நுகதலாவையில் இன்று நடைபெற்ற செயற்றிட்டத்திலும் பங்கேற்றிருந்தார்.

நிகழ்வை பதிவு செய்வதற்கு ஊடகங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதுடன், கூட்டத்தின் பின்னர் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்தார்.

இதன்போது, போராட்டக்காரர்களுக்காக புனர்வாழ்வு பணியகங்களை அமைக்கும் திட்டம் உள்ளதா என கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு அவர் பின்வருமாறு பதிலளித்தார்,

அவ்வாறானதொரு யோசனை அரசாங்க தரப்பிலிருந்து முன்வைக்கப்படவில்லை. போராட்டக்களத்துடன் தொடர்புடைய அப்பாவி இளைஞர்களும் இருக்கிறார்கள் என்பதை நாம் உணர வேண்டும். அவர்களை சிறையில் அடைத்து , தடுத்து வைத்து குறைந்தபட்சம் வேலையொன்றையேனும் பெற்றுக்கொள்ள முடியாதவாறான சூழலை ஏற்படுத்துவது பிழையான விடயமாகும். எனது மனைவியின் வீட்டிற்கும் தீ வைத்தனர். எனது வீட்டிற்கும் தீ ​வைத்தனர். இதனை வழிநடத்தியவர்களுக்கு தண்டனை வழங்க வேண்டும். எனினும், வழிநடத்தியவர்கள் வெளியில் சுதந்திரமாக இருக்கும்போது, அதற்கு ஆதரவு வழங்கிய இளைஞர்களை கைது செய்து சிறையில் அடைப்பதும் தடுத்து வைப்பதும் பயனற்றது. வழிநடத்தியவர்களை கைது செய்ய வேண்டும். போராட்டத்திற்கு ஆதரவு வழங்கியவர்களை ஏதேனுமொரு வேலைத்திட்டத்தின் மூலம் சமூயமயப்படுத்த வேண்டும்.

“சுற்றுலா பயணிகளை மகிழ்விக்க களியாட்ட விடுதிகளோ, மதுபானங்களோ எவையும் இல்லை.”- சுற்றுலா இராஜாங்க அமைச்சர் டயனாகமகே கவலை !

“மக்கள் பணத்தை செலவழிப்பதற்கான வழிவகைகளை நான் உருவாக்குவேன்.” என சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் டயனாகமகே தெரிவித்துள்ளார்.

பகலில் வெளிநாட்டவர்களை ஆக்கிரமிப்பதற்கான கலாச்சார ரீதியாக கவரக்கூடிய விடயங்கள் இலங்கையில் காணப்படுகின்றன ஆனால் இரவுவாழ்க்கை என வரும்போது அதன் போட்டியாளர்களுடன் போட்டிபோட முடியாத நிலையில் இலங்கை உள்ளது என அவர் எக்கனமி நெக்ஸ்டிற்கு தெரிவித்துள்ளார்.

சிங்கப்பூர் தாய்லாந்து போன்ற நாடுகளில் காணப்படும் வீதியோர கடைகள் மற்றும் நள்ளிரவு களியாட்டம் போல இலங்கை சுற்றுலாப்பயணிகளிற்கும் உள்ளுர் மக்களிற்கும் இரவின் பின்னர் மேற்கொள்ளக்கூடிய செயற்பாட்டுகளிற்கான வாய்ப்பை வழங்கவில்லை  குறைந்தளவே வழங்குகின்றது.

சுற்றுலாப்பயணிகள் இரவில் பொருட்களை  கொள்வனவு செய்ய விரும்பினால் எந்த கடைகளும் திறந்திருப்பதில்லை. அவர்கள் நடனமாட விரும்பினால் இசையை ரசிக்க விரும்பினால் மது அருந்த விரும்பினால்  உணவருந்த விரும்பினால் இந்த நாட்டில் என்ன இருக்கின்றது.?

இலங்கை இரவில் மரணித்த தீவை போல காணப்படுகின்றது. களியாட்டங்களிற்கான வாய்ப்பு குறைவாக உள்ளதால் வெளிநாட்டு நாணய வருகை வீழ்ச்சியடைந்துள்ளது. பணத்தை செலவிடக்கூடிய நிலையில் உள்ள இலங்கையர்கள் தங்கள் பணத்தை செலவிட வெளிநாடுகளிற்கு செல்கின்றனா .?

அவர்கள் எங்கள் பணத்தை வெளிநாடுகளிற்கு கொடுக்கின்றனர் இதற்கு என்ன காரணம் இலங்கையில் அவர்கள் அனுபவிக்க எதுவுமில்லை.

என்னை விமர்சிப்பவர்கள் கசினோ மற்றும் விபச்சார கலாச்சாரத்தை அடிப்படையாக கொண்ட இரவு வாழ்க்கை பற்றி மாத்திரமே சிந்திப்பவர்கள் அவர்களால் பரந்துபட்ட அளவில் சிந்திக்க முடியாது. மக்கள் பணத்தை செலவழிப்பதற்கான வாழ்க்கையை அனுபவிப்பதற்கான வாய்ப்பை வழங்குவதை நோக்கமாக கொண்டதே தனது நோக்கம்.

பொருளாதாரம் தொடர்ந்து இயங்குவதை உறுதி செய்வதற்காகவே இதனை செய்ய விரும்புகின்றேன். கடைகள்  பொருட்கொள்வனவு  இசை போன்றன காணப்படவேண்டும்.

கலாச்சாரத்தையும் வரலாற்றையும் அபிவிருத்தியிலிருந்து பிரிக்கவேண்டும். எங்களிற்கு வரலாறு தேவை கலாச்சாரம் தேவை ஆனால் அதன் அர்த்தம் அத்துடன் நீங்கள் நிறுத்திக்கொள்ளவேண்டும்  நாட்டின் அபிவிருத்தியை தடுக்கவேண்டும் என்பதல்ல .

நாட்டை ஏதாவது ஒரு வழியில் அபிவிருத்தி செய்வதற்கான முயற்சிகள் இடம்பெற்ற போதெல்லாம் மக்கள் மத கலாச்சார விடயங்களை கையில் எடுத்துள்ளனர் அது இன்று எங்களை வங்குரோத்து நிலைக்கு தள்ளியுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்

வட மாகாணத்தில் எயிட்ஸ் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு !

இந்த வருடத்தின் ஆரம்பம் முதல் வட மாகாணத்தில் எயிட்ஸ் (AIDS) நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக பாலியல் நோய் மற்றும் HIV தடுப்புப் பிரிவின் விசேட வைத்திய அதிகாரி தக்சாயினி மகேந்திரநாதன் குறிப்பிட்டார்.

அதிகரித்த போதைப்பொருள் பாவனையும் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கான காரணங்களில் ஒன்றென வைத்திய அதிகாரி தக்சாயினி மகேந்திரநாதன் சுட்டிக்காட்டினார்.

இதனிடையே, மன்னார் மாவட்டத்தில் இதுவரையில் 11 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், நோயாளிகளுக்கான மருந்துகளை பெற்றுக்கொள்வதிலும் பல சவால்கள் நிலவுவதாக அவர் தெரிவித்தார்.

நாட்டில் நிலவும் நெருக்கடியினால், உரிய மருந்துகளுக்கு பதிலாக மாற்று மருந்துகளை பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதுடன், நோய் தொடர்பிலான முழுமையான விழப்புணர்வு நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு போதிய போக்குவரத்து வசதிகள் தேவைப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

எவ்வாறாயினும், உலக பெருந்தொற்றாகக் காணப்படும் HIV தொற்றை ஒழிப்பதற்கான திட்டங்களை உலகத் தலைவர்கள் முழுமையாக முன்னெடுக்கும் பட்சத்தில், 2030 ஆம் ஆண்டில் எயிட்ஸை முழுமையாக ஒழிக்க முடியும் என  ஐக்கிய நாடுகளின் இணைந்த திட்டம் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

“தமிழ் மக்களின் பூர்வீக காணிகளை அபகரிக்கின்ற செயல் அரங்கேற்றி வருகின்றது.” – எம்.ஏ.சுமந்திரன்

“தொல்பொருள் திணைக்களம் வடக்கிலும் கிழக்கிலும் உள்ள தமிழ் மக்களின் பூர்வீக காணிகளை அபகரிக்கின்ற செயல் அரங்கேற்றி வருகின்றது.” என ஜனாதிபதி சட்டத்தரணியுமான தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

திருகோணமலை மாவட்டத்தின் தென்னமரவாடி , திரியாய் போன்ற பகுதிகளில் தமிழ் விவசாயிகளின் பூர்வீக காணிகளில் விவசாயத்தில் ஈடுபட தொல் பொருள் திணைக்களம் தடுப்பதற்கு எதிராக திருகோணமலை மேல் நீதிமன்றத்தில் இடம் பெற்ற வழக்கிலே ஆஜராகிய பின் அவர் நடாத்திய ஊடக சந்திப்பிலே இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து குறித்த விடயம் தெர்டரபாக கருத்து தெரிவிக்கும் போது

தொல்பொருள் திணைக்களம் வடக்கிலும் கிழக்கிலும் உள்ள தமிழ் மக்களின் பூர்வீக காணிகளை அபகரிக்கின்ற செயல் அரங்கேற்றி வருகின்றது. அதன் ஒரு பிரதிபலிப்புத் தான் திருகோணமலை மாவட்டம் திரியாய் மற்றும் தென்னமரவாடி கிராமத்தில் தமிழ் மக்களின் பூர்வீக விவசாயக் காணிகளில் அவர்கள் விவசாயம் செய்வதற்கு தடுத்த ஒரு சம்பவம் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் இடம் பெற்றது.

அந்த வேளையில் நிலத்திற்கு உரித்தான விவசாயிகள் மேல் நீதி மன்றத்திலே வழக்கு தாக்கல் செய்து ஒரு இடைக்கால தடை உத்தரவினைப் பெற்றிருந்தார்கள். அந்த வழக்கை ஆதரித்து வாதாடியவர் சட்டத்தரணி கேசவன் சயந்தன் இடைக்கால உத்தரவை மேல் நீதி மன்றம் வழங்கி தொல் பொருள் திணைக்களம் விவாயிகளுக்கு இடையூறு கொடுக்க கூடாது. விவசாயிகள் தங்கள் நிலங்களில் விவசாயம் செய்ய உரித்துடையவர்கள் என கட்டளை பிறப்பித்திருந்தது.

அந்த வருடம் விவசாயிகள் தங்களுடைய விவசாய நிலங்களில் செய்கையை மேற்கொண்டு அறுவடை செய்யக் கூடியதாக இருந்தது. ஆனால் அதற்கு பிறகு தொடர்ச்சியாக விவசாயிகள் தடுக்கபட்டனர். வேறு பல அச்ருத்தல்களுக்கும் விவசாயம் செய்வதற்கான தடுப்புக்களும் மேற் கொள்ளப்பட்டு தங்களுடைய விவசாய நடவடிக்கைகளை இவ்வருடமும் மேற் கொள்ள முடியாதவர்களாக காணப்படுகின்றனர்.

இந்த பின்னனியிலே இறுதி விவாதத்திற்கு இன்று 30ம் திகதி மேல் நீதி மன்றத்திலே இந்த வழக்கு எடுக்கப்பட்டது. சட்டத்தரணி கேசவன் சயந்தனுடன் நானும் இந்த வழக்கிலே ஆஜராகி வாதாடி இருக்கின்றோம். மிக முக்கியமாக மாகாண மேல் நீதி மன்றுக்கு நிலம் சம்மந்தமான எழுத்தாணைகளை வழங்குகின்ற அதிகாரம் இல்லை என்ற வாதத்தை அரச தரப்பு முன் வைத்திருந்தது.

அரசியலமைப்பின் படி ஒன்பதாவது நிரலின் கீழ் காணி அதிகாரம் மாகாணத்திற்கென  வழங்கப்பட்டிருக்கின்றது. மாகாண நீதி மன்றம் எழுத்தாணை  வழங்குகின்ற போது எந்த ஒரு நபருக்கு எதிராகவும் மாகாண நிரலில் உள்ள விடயம் சம்மந்தமாக எழுத்தாணை வழங்க முடியும் என்று சொல்லபட்டிருக்கின்றது. அரசியல் அமைப்பில் உள்ள குறித்த விடயத்தை மன்றுக்கு நாம் சுற்றிக் காட்டியுள்ளோம்.

100 வருடங்களுக்கு முற்பட்ட காணி உறுதிகளை குறித்த காணி உரிமையாளர்கள் வசம் உள்ளது. அவற்றை நாம் வழக்கிலே காட்சிப் படுத்தி இருக்கின்றோம்.

ஆகையால் இது அரச காணி அல்ல தனியார் காணி இந்த காணியிலே தங்களுடைய விவசாயத்தை செய்வதற்கு அவர்களுக்கு உரித்துண்டு அதை தடுப்பதற்கு எவருக்கும் உரிதில்லை என்ற வாதங்கள் முன் வைக்கப்பட்டுள்ளது.

வழக்கினுடைய இறுதித் தீர்ப்பு எதிர்வரும் மார்கழி 02ம் திகதி என திகதியிடப்பட்டுள்ளது. அதற்கு முன்னதாக நவம்பர் மாதத்திலே இரு தரப்பினரும் எங்களுடைய வாதங்களுக்கு சார்பான எழுத்து மூல சமர்ப்பணங்களை செய்யலாம் என நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.

நிலங்கள் சம்மந்தமாக தொல்லியல் திணைக்களம் இது போல வெவ்வேறு சட்டங்களின் கீழ் இயங்கும் திணைக்களங்கள் மக்களுடைய காணிகளை அபகரிக்கின்ற செயற்பாடு வடக்கிலும் கிழக்கிலும் நீண்ட காலமாக இடம் பெற்று வருகின்றது. எனவே இந்த வழக்கின் தீர்ப்பு ஒரு முக்கியமான தீர்பாக அமையும் என நாங்கள் எதிர்பார்க்கின்றோம் என ஜனாதிபதி சட்டத்தரணியும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

“எதிர்த்தரப்பை ஒன்றிணைத்து அரசாங்கத்தை நிச்சயம் கவிழ்ப்போம்.” – லங்கா சுதந்திர கட்சி

“எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ, டலஸ் அழகபெரும, விமல் வீரவன்ச ஆகியோரை ஒன்றிணைத்து அரசாங்கத்தை நிச்சயம் கவிழ்ப்போம்.” என பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்தார்.

புதிய லங்கா சுதந்திர கட்சி காரியாலயத்தில் அரசியல்,சிவில் தரப்புடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண வேண்டுமாயின் அரசியல் கட்சிகள் பொது இணக்கப்பாட்டுடன் ஒன்றிணைய வேண்டும். பொதுஜன பெரமுனவை நாட்டு மக்கள் முழுமையாக வெறுக்கிறார்கள்.

ஆகவே அவ்வாறான நிலையில் பொதுஜன பெரமுனவுடன் ஒன்றிணைய பிரதான எதிர்க்கட்சிகள் இணக்கம் தெரிவிக்கவில்லை. ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கத்தை வீழ்த்த வேண்டுமாயின் பாராளுமன்றில் அங்கம் வகிக்கும் சகல அரசியல் கட்சிகளும் முதலில் ஒன்றுப்பட வேண்டும். எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ,டலஸ் அழகபெரும,விமல் வீரவன்ச ஆகியோரை ஒன்றிணைத்து அரசாங்கத்தை நிச்சயம் கவிழ்ப்போம்.

பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு கண்டு,நாட்டு மக்களின் நன்மதிப்பை ஜனாதிபதி பெற பொதுஜன பெரமுனவினர் ஒருபோதும் இடமளிக்கமாட்டார்கள்.

அத்துடன் பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கத்துக்கு நாட்டு மக்கள் அங்கிகாரம் வழங்க போவதுமில்லை,ஆகவே ஜனாதிபதி எதிர்வரும் மார்ச் மாதத்துக்கு பிறகு பாராளுமன்றத்தை கலைக்கும் அதிகாரத்தை அவர் முறையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்கவுடன் எதிர்வரும் நாட்களில் பேச்சுவார்த்தையில் ஈடுப்படவுள்ளோம்.ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தை கலைத்து பொதுத்தேர்தலை விரைவாக நடத்தாவிடின் அவரது அரசியல் எதிர்காலமும் கேள்விக்குள்ளாகும்.

முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ 2019ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலின் போது சகோதர பாசத்துக்கு முன்னுரிமை வழங்காமல்,அரசியல் ரீதியில் சிரேஷ்டத்துவத்துக்கு முன்னுரிமை வழங்கியிருந்தால் இன்று நாடு அரசியல் மற்றும் பொருளாதார ரீதியில் மோசமான நெருக்கடியை எதிர்கொண்டிருக்காது என்றார்.

தொடரும் பொருளாதார நெருக்கடி – முதியோர் இல்லங்களுக்கு வழங்கப்படும் உணவு 90% குறைந்ததது !

தற்போதைய பொருளாதார நெருக்கடி காரணமாக முதியோர் இல்லங்களுக்கு வழங்கப்படும் உணவு முன்பை விட 90% குறைந்துள்ளதாக தேசிய முதியோர் தலைமைச் செயலகம் தெரிவித்துள்ளது. தேசிய முதியோர் செயலகம் ஆறு முதியோர் இல்லங்களை நடத்தி வருவதாகவும் இதன் கட்டுப்பாட்டின் கீழ் முந்நூற்று நாற்பது முதியோர் இல்லங்கள் இயங்குவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலைமையின் அடிப்படையில் முதியோர் இல்லங்களுக்கு உலர் உணவு வழங்குமாறு உணவு ஆணையாளர் திணைக்களத்திடம் தேசிய முதியோர் தலைமைச் செயலகம் கோரிக்கை விடுத்துள்ளது. இதேவேளை அரச சார்பற்ற நிறுவனங்களின் உதவியுடன் முதியோர் இல்லங்களுக்கு உணவு வழங்க எதிர்பார்க்கப்படுவதாகவும் தேசிய முதியோர் தலைமைச் செயலகம் தெரிவித்துள்ளது.

300 ரூபாய் செலுத்தவில்லை என்பதற்காக மாணவியை தாக்கிய அதிபர் கைது !

நுவரெலியா கல்வி வலயத்துக்குட்பட்ட கொட்டகலை – போகாவத்த பிரதேச பாடசாலையொன்றில் தரம் பத்தில் கல்வி பயிலும் மாணவியொருவர், அதிபரின் தாக்குதலுக்கு இலக்காகி காயங்களுடன் கொட்டகலை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டப் பின்னர் மேலதிக சிகிச்சைக்காக டிக்கோயா வைத்தியசாலைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்தவிடயம் தொடர்பில் பாடசாலையின் அதிபர் திம்புள்ள பத்தனை பொலிஸாரால் கைது செய்யப்பட்டு இன்று அட்டன் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,பாடசாலையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஆசிரியர் தின நிகழ்வுக்காக தனது சகோதரன் 300 ரூபாய் செலுத்தவில்லை என தெரிவித்து, குறித்த அதிபர் மாணவியின் சகோதரனை தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார்.

இதனையடுத்து “சேர் எனது சகோதரனை தகாத வார்த்தைகளால் திட்ட வேண்டாம் என்றும் தனது தந்தை அருகில் வேலை செய்வதால் அவரிமிருந்து பணத்தை வாங்கி தருவதாக” குறித்த மாணவி தெரிவித்துள்ளார்.

இதனையடுத்தே அதிபர் குறித்த மாணவியை பிரம்பால் அமானுஷ்யமாக தாக்கியதாகவும் இதனையடுத்து பாடசாலைக்கு அருகில் வேலை செய்துக்கொண்டிருந்த மாணவியின் தந்தை, மகளின் அலறல் கேட்டு, பாடசாலைக்கு ஓடி மாணவியைக் காப்பாற்றியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

தாக்குதலுக்கு இலக்கான மாணவியுடன் தனக்கு 4 குழந்தைகள் இருப்பதாக தெரிவித்த அத்தந்தை பொருளாதார பிரச்சினையில் தான் இருப்பதுடன், தனது மனைவி வெளிநாட்டில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளதுடன், தனது மகள் தாக்கப்பட்டமை தொடர்பில் திம்புளபத்தனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடையும் செய்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் பாடசாலை அதிபரிடம் வினவியபோது, ஒழுக்கம் விடயமாகவே குறித்த மாணவியை சிறு தடியொன்றில் தாக்கியதாக அதிபர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையிலேயே மாணவியின் வாக்குமூலத்தின் பின் அதிபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடதக்கது.