உள்நாட்டுச் செய்திகள்

உள்நாட்டுச் செய்திகள்

“நான் பொம்மையாக இருந்துவிட்டு அரசியலுக்குள் வரவில்லை. பல நெருப்பாறுகளைக் கடந்தே தமிழ் மக்களின் அரசியலுக்குள் வந்தவன்” – அமைச்சர் டக்கஸ் தேவானந்தா !

பொம்மையாக இருந்து அரசியலுக்கு வந்தவன் அல்ல – நெருப்பாறு கடந்தே அரசியலுக்கு வந்துள்ளேன் என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

நல்லூர் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இன்று(06.03.2021) நடைபெற்ற சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் சௌபாக்கியா வாரத்தினை அங்குரார்ப்பணம் செய்து, பயனாளிகளுக்கு உதவித்திட்ட காசோலைகளை வழங்கி வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் உரையாற்றுகையில்,

“சமுர்த்தி திட்டத்தை யாழ்ப்பாணத்திற்கு ஒரு நெருக்கடியான சூழலில் நானே கொண்டுவந்தேன். சமுர்த்தி செயற்பாடுகளுக்கும் அரசியல் தலைமைகளுக்கும் தொடர்புகள் இருக்கலாம். ஆனால் எவரும் தமது சுயநலன்களுக்காக இந்த வேலைத்திட்டத்தை நடத்த முற்படக்கூடாது.

யாழ். மாவட்ட மற்றும் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிகாரிகள், சமுர்த்தி உத்தியோகத்தர்கள் ஆகியோருக்கு யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத்தலைவரின் பெயரால் அவரின் இணைப்பாளர்கள் எனப்படுவோர் மிரட்டல் விடுப்பதாகவும், அழுத்தம் கொடுப்பதாகவும் பல முறைப்பாடுகள் எனது கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளன.

அவ்வாறான அநாகரீகமான செயற்பாடுகள் குறித்த ஒருங்கிணைப்பு குழுவின் இணைத்தலைவருக்கு தெரிந்து நடக்கின்றதா, தெரியாமல் நடக்கின்றதா என்பது தொடர்பாக அவருடன் கலந்துரையாடவுள்ளேன்.

அவருக்கு தெரியாமல் நடக்குமாக இருந்தால் – இவ்வாறான அநாகரிகமான செயலை அவர் கட்டுப்படுத்த வேண்டும்.

மாறாக அவருக்கு தெரிந்துதான் அரச அதிகாரிகளுக்கான மிரட்டலும், அழுத்தங்களும் அவரது இணைப்பாளர்களால் விடுக்கப்படுமானால் அது தொடர்பில் ஜனாதிபதியுடனும், பிரதமருடனும் பேசி முடிவொன்றைக் காண்பேன்.

யாழ்ப்பாணத்தில் மாத்திரமல்ல கிளிநொச்சி அதிகாரிகளிடமும் அழுத்தங்கள பிரயோகித்திருக்கின்றனர். எவ்வாறு செயற்பட வேண்டும் என்பதை யாழ். அரசாங்க அதிபரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுமாறு ஆலோசனை கூறியிருக்கின்றார்கள். ஆனால் சிரேஸ்ட அதிகாரியான கிளிநொச்சி அரச அதிபர் யாருடைய ஆலோசனையையும் கேட்கும் அவசியம் தனக்கு இல்லை என்று தகுந்த பதில் அளித்துள்ளார்.

யாழ், கிளிநொச்சி மக்களினால் தொடர்ச்சியாக தெரிவு செய்யப்பட்டு, சிரேஸ்ட நாடாளுமன்ற உறுப்பினராகவும், சிரேஸ்ட அமைச்சராகவும் இருக்கின்ற என்னை இந்த மக்களிடம் இருந்து சண்டித்தனத்தினால் பிரித்து விடமுடியாது.

நான் தூரத்தே இருந்து வேடிக்கை பார்த்துவிட்டு – அதாவது ஒரு பொம்மையாக இருந்துவிட்டு அரசியலுக்குள் வரவில்லை. பல நெருப்பாறுகளைக் கடந்தே தமிழ் மக்களின் அரசியலுக்குள் வந்தவன்”  என கூறியுள்ளார் அமைச்சர்.

“யுத்தத்தில் பல ஆயிரம் தமிழ் மக்கள் உயிரிழந்தமை உள்ளிட்ட அத்தனை அழிவுகளுக்கும் சம்பந்தன் பொறுப்பு கூறவேண்டும்” – ஆனந்தசங்கரி

“யுத்தத்தில் பல ஆயிரம் தமிழ் மக்கள் உயிரிழந்தமை உள்ளிட்ட அத்தனை அழிவுகளுக்கும் சம்பந்தன் பொறுப்பு கூறவேண்டும்” என தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கை ஒன்றிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கையில்,

“எத்தனை பொதுமக்கள் உயிரிழந்தாலும் பரவாயில்லை, விடுதலைபுலிகள் அழியவேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் செயற்பட்டார்.

அவர் நினைத்திருந்தால் விடுதலைப்புலிகளையும் ஜனநாயக அரசியலில் ஈடுப்படுத்தியிருக்க முடியும், அதற்கான சூழ்நிலையும் அப்போது காணப்பட்டது. ஆனால், சம்பந்தன் அதனை செய்யவில்லை.

இலங்கையில் யுத்தக் குற்றங்கள் தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்படுமாயின், சம்பந்தனிடமே முதலில் விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும்.

யுத்தம் இடம்பெற்ற காலத்தில் அரசாங்கத்துடனும், நடுநிலை நாடுகளுடனும் சமாதான பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்காது, தமிழ் தேசியக் கூட்டமைப்பு வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தது.

அந்த காலக்கட்டத்தில் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட சர்வக்கட்சி கூட்டங்களிலும் பங்கேற்காது, கூட்டமைப்பு செயற்பட்டமை பல பொதுமக்களின் பட்டினிச் சாவுக்கு காரணமாக அமைந்தது.

இவ்வாறு பல விடயங்களை செய்யத் தவறிய தமிழ் தேசியக் கூட்டமை தற்போது ஐக்கிய நாடுகள் மனிதவுரிமை பேரவைக்கு அறிக்கை சமர்பித்துள்ளதாகவும், அது சர்வதேச சமூகத்தை ஈர்க்கும் என தெரிவித்துள்ளமையானது நகைப்புக்குறிய விடயமாகும்” எனவும்  குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“பெண்களுக்கெதிராக இடம்பெறும் வன்முறைகள் தொடர்பில் பின்னணியை அறியாமல் பெண்கள் விமர்சிக்கப்படுவது முற்போக்கான செயற்பாடு அல்ல” – ஹிருணிகா பிரேமசந்திர

“பெண்களுக்கெதிராக இடம்பெறும் வன்முறைகள் தொடர்பில் பின்னணியை அறியாமல் பெண்கள் விமர்சிக்கப்படுவது முற்போக்கான செயற்பாடு அல்ல” என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திர தெரிவித்தார்.

இது தொடர்பில் இன்று சனிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், அண்மையில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்து வருகிறது. அத்தோடு கொடூரமான சம்பவங்கள் சமூக வலைத்தளங்களில் கேலிக்குள்ளாக்கப்படுகின்றன. பயணப்பொதிக்குள் சடலமாக பெண்னொருவர் மீட்க்கப்பட்டதைத் தொடர்ந்து அதனைக் கொண்டு நகைச்சுவை விடயங்கள் சமூக வலைத்தளங்களில் பகிரப்படுகின்றன. இவ்வாறு செயற்படுவது மிகவும் மோசமானதொரு விடயமாகும்.

இந்தியாவில் மருத்துவபீட மாணவியொருவர் பஸ்ஸில் பாலியல் பலாத்காரத்திற்குள்ளாக்கப்பட்டு கொல்லப்பட்டார். எனினும் அவரது தனிப்பட்ட விபரங்கள் உள்ளிட்டவற்றை அந்நாட்டு அரசாங்கம் பாதுகாத்தது. அவருடைய புகைப்படம் கூட வெளியிடப்படவில்லை. ஆனால் இலங்கையில் தலையற்ற குறித்த பெண்ணின் சடலம் எனக் கூறப்படும் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் அதிகளவாக பகிரப்படுகிறது. இவ்வாறு புகைப்படத்தை பகிரும் ஒவ்வொருவரும் தமது குடும்பத்தில் இவ்வாறானதொரு சம்பவம் இடம்பெற்றால் என்னாவாகும் என்று சிந்தித்து முற்போக்காக செயற்பட வேண்டும்.

இதே போன்று கடந்த வாரம் 9 மாத குழந்தையொன்றை இளம் தாயொருவர் தாக்கும் காணொளி சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டது. இது கவலைக்குரிய விடயமாகும். எவ்வாறிருப்பினும் பெரும்பாலான பெண்கள் குழந்தை பிரசவித்த பின்னர் சுமார் 3 மாத காலத்திற்கு மன உளைச்சலுக்கு உள்ளாகுவதற்கான வாய்ப்புக்கள் ஏற்படும். அவ்வாறானதொரு பின்னணியிலேயே குறித்த தாய் குழந்தையை தாக்கியுள்ளார். எனவே இது போன்ற சம்பவங்கள் பதிவாகும் போது அவர்களை விமர்சிக்காது, அவர்கள் தொடர்பில் கணிப்பிட்டு கருத்துக்களை வெளியிடாது பொறுப்புடன் செயற்படுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

மேலும் வடக்கில் தாயொருவர் வறுமையின் காரணமாக தன் 3 பிள்ளைகளுடன் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொள்ள முயற்சித்துள்ளார். அரசாங்கத்தினால் அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளமையே இவ்வாறான சம்பவங்கள் பதிவாகக் காரணமாகும். வெகு விரைவில் இலங்கை ஆஜன்டினா உள்ளிட்ட நாடுகளைப் போன்றதாகிவிடும் எனவும் தெரிவித்துள்ளார்.

“விசுவாசமாக செயற்பட்டதற்கு கட்சி தந்த பரிசினை நாம் சட்ட ரீதியாக அணுகுவோம்” – த.தே.ம.முன்னணியிலிருந்து நீக்கப்பட்டமை தொடர்பாக வ.பார்த்தீபன்!

“விசுவாசமாக செயற்பட்டதற்கு கட்சி தந்த பரிசினை நாம் சட்ட ரீதியாக அணுகுவோம்” என யாழ்.மாநகர சபை உறுப்பினர் வரதராஜன் பார்த்திபன் தெரிவித்துள்ளார்.

யாழ். மாநகர சபையில் அங்கம் வகிக்கும் மாநகர சபை முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணனுக்கு ஆதரவாக செயற்படும் 10 உறுப்பினர்களை பதவி வறிதாக்கபட்டுள்ளதாக தேர்தல் அலுவலகம் அறிவித்துள்ள நிலையில் அது தொடர்பில் யாழ்.மாநகர சபை உறுப்பினர் வரதராஜன் பார்த்திபனிடம் கேட்டபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக வரதராஜன் பார்த்திபன் மேலும் கூறியுள்ளதாவது,

“யாழ்ப்பாணம் மாநகர சபையில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சி சார்பாக 13 உறுப்பினர்கள் அங்கம் வகிக்கின்றோம். அதில் இதுவரை 10 உறுப்பினர்களை தாங்கள் நீக்கிவிட்டாதாகவும் அதன் அடிப்படையில் அவர்களின் மாநகரசபை உறுப்பினர் பதவியை வறிதாக்கும்படி யாழ்.தேர்தல்கள் அலுவலக்திற்கு அறிவிக்கப்பட்டிருக்கின்றது.

முதற்கட்டமாக மாநகர முதல்வர் மணிவண்ணன் உட்பட 4 உறுப்பினர்களையும் இரண்டாம் கட்டமாக நான், தனுஜன் ஜெனன், பத்மமுரளி ஜெயசீலன், சுபாஜின் ஆகியோரை நீக்குவதாக தேர்தல்கள் திணைக்களத்திற்கு அறிவித்திருக்கின்றனர். அதன் பிரகாரம் தேர்தல்கள் திணைக்களம் நேற்று எமக்கு உங்கள் மாநகர சபை உறுப்பினர் பதவிகள் வறிதாக்கப்பட்டுள்ளதாக அறிவித்திருக்கின்றனர்

கடந்த பல வருடங்களாக கட்சிக்காக விசுவமாக நடந்தமைக்கு கட்சி எமக்கு தந்துள்ள இப்பரிசினை நாம் சட்ட ரீதியாக அணுகுவதற்கு முடிவெடுத்துள்ளோம்.

கட்சியின் செயலாளர் எமக்கு அனுப்பிய கடிதத்தில், எங்கள் மீது சில குற்றச்சாட்டுக்களை முன்வைத்து அதன் அடிப்படையில் உங்களை எந்த ஒரு விசாரணையும் விளக்கமும் கோராமல் நீக்குவதாக அறிவித்திருந்தார்கள்.

எங்களை நீக்கியமைக்கு கூறிய பிரதான காரணம் கட்சிக்கு விசுவாசமின்னை, முன்னணியை அழிப்பதற்கு சதி செய்தமை, எமது அரசியல் இயக்கத்தின் கொள்கைகளை மீறியமை, எமது அரசியல் இயக்கத்திற்கு துரோகம் இழைத்தமை, குறித்த குற்றசாட்டுக்களின் அடிப்படையில் எம்மை கட்சியில் இருந்து நீக்குவது என்றால் முதலில் கட்சியில் இருந்து நீங்க வேண்டியது நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் அவர்களைத்தான்.

எமக்கு வழங்கிய குற்றச்சாட்டில் கட்சிக்கு விசுவாசமின்மை, கட்சிக்கு தூரோகம் இழைத்தமை, கட்சிக்குள் பிளவுகளை உருவாக்கியமை என்ற எம் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கள் வெறும் சொற்களாகவே இருக்கின்றன. அதற்கான ஆதாரங்களோ ஆவணங்களோ எதுவும் இல்லை.

ஆனால் இது தொடர்பில்  நான் அனுப்பிவைத்த 47 பக்க கடித்தில், உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் அவர்கள் கட்சியினைப் பிளவுபடுத்துகின்ற கருத்துருவாக்கங்களை எப்படி விதைத்தீர்கள், அதனை எப்படி வளர்த்தீர்கள், எப்படி ஒருவரை பயன்படுத்தி விட்டு தூக்கி போட்டீர்கள், கட்சிக்குள் எவ்வாறு நயவஞ்சமாக செயற்பட்டு அழித்தீர்கள். எப்படி சிறு சிறு குழுக்களை உருவாக்கினீர்கள் என்பதனை நடந்த சம்பங்களைக் கொண்டும் அவர் நடந்து கொண்ட முறைகளையும் வைத்துக் கொண்டு ஆதாரபூர்வமாகவும் ஆவணரீதியாகவும் அதனை உறுதி செய்து கடிதம் எழுதியுள்ளேன் .

இவ்வாறு கடிதம் அனுப்பப்பட்டு இன்று ஒரு கிழமை ஆன போதும் அதற்கான பதில் எதுவும் இதுவரை கிடைக்கவில்லை. கட்சியின் கொள்கைளினை நாம் இன்று நேசிக்கின்றோம். அதனை மக்களிடத்தில் கொண்டு செல்லுகின்றோம். ஆனால் ஒருவர் தேர்தல் அரசியலில் இருந்து விலத்தி நிற்கும் போது அவரை கெஞ்சி தேர்தல் அரசியலுக்கு கொண்டுவருவதும், அவரை கொண்டு பதவிகளை பிடித்த பின்னர் அவரை விலத்துவதும் அவருடன் கதைக்க வேண்டாம் அவருடன் தொடர்பு வைக்கவேண்டாம் என்று கூறுவதும் ஏற்புடையது அல்ல. அத்துடன் அது அறமும் இல்லை” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பொலிஸார் தாக்கியதில் ஒருவர் வைத்தியசாலையில் !

வவுனியாவில் புளியங்குளம் பொலிஸாரினால் தாக்கப்பட்ட ஒருவர், வவுனியா பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக  அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,  புளியங்குளம் – இராமனுர் பகுதியில் வசிக்கும் ஆறுமுகம் பாலகிருஸ்ணன் (வயது- 50) என்பவரின் வீட்டிற்கு, நேற்று முன்தினம் (வியாழக்கிழமை) மாலை சென்ற புளியங்குள பொலிஸார், இடியன் துப்பாக்கி இருக்கின்றதா? என விசாரித்து குறித்த நபரை கைது செய்து கொண்டு சென்றுள்ளார்கள்.

இவ்வாறு கைது செய்து அழைத்துச் சென்ற அவர் மீது பொலிஸார் தாக்குதல் நடத்தியதன் பின்னர், மீண்டும் நள்ளிரவு 12 மணியளவில் விடுதலை செய்துள்ளனர்.

இந்நிலையில் விடுதலை செய்யப்பட்ட குறித்த நபர்,  நேற்று (வெள்ளிக்கிழமை) வீட்டாரின் உதவியுடன் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

“மஹிந்த ராஜபக்ஷ ஐக்கியநாடுகள் சபைக்கு வழங்கிய வாக்குறுதியே அதன் கழுத்தை இறுக்கிக் கொண்டிருக்கின்றது” – லக்ஸ்மன் கிரியெல்ல

“மஹிந்த ராஜபக்ஷ ஐக்கியநாடுகள் சபைக்கு வழங்கிய வாக்குறுதியே அதன் கழுத்தை இறுக்கிக் கொண்டிருக்கின்றது” என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று(05.03.2021) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“சர்வதேசத்துடன் சுமுகமான தொடர்புகளைப் பேணினால் மாத்திரமே சர்வதேச நடவடிக்கைகளை வெற்றிகரமாக முன்னெடுக்க முடியும் என்பதை அரசு புரிந்துகொள்ள வேண்டும்.

போர்க்குற்றச்சாட்டு தொடர்பில் முதன் முதலில் பிரதமர் மஹிந்த ராஜபக்சவே ஐ.நா.விடம் உறுதியளித்தார். இலங்கையில் இறுதிக்கட்டப் போரின்போது மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றன என்று அப்போதைய ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ – மூன் நாட்டுக்கு வந்தபோது தெரிவித்தார். இதன்போது மஹிந்த ராஜபக்சவே அவருடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.

அந்த ஒப்பந்தத்துக்கு ஏற்பவே இலங்கையில் உள்நாட்டுப் போரின்போது இடம்பெற்ற மனித உரிமைகள் மீறல்கள் தொடர்பில் ஆராய்வதற்கு ஆணைக்குழுவொன்றை நியமித்து , குற்றவாளிகளுக்குத் தண்டனை வழங்குவதாக உறுதியளிக்கப்பட்டது.

எனினும், இலங்கை அதனைச் செய்யவில்லை. இவ்வாறு வழங்கப்பட்ட வாக்குறுதியே இன்று இலங்கையின் கழுத்தை இறுக்கிக் கொண்டிருக்கின்றது. அதன் காரணமாகவே 2011 – 2014 வரையான காலப்பகுதியில் இலங்கைக்கு எதிராக ஐ.நா. தீர்மானங்களை முன்வைத்தது.

அதன் பின்னர் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிகளுக்கு முகங்கொடுக்க முடியாததன் காரணமாகவே அன்று மஹிந்த ராஜபக்ச தேர்தலுக்குச் சென்றார்.

2015இல் நாம் ஆட்சியைக் கைப்பற்றிய பின்னர் சர்வதேசத்தைப் பகைத்துக் கொள்ளாமல் சுமுகமான உறவைப் பேணினோம். எம்மால் செய்யக் கூடியவற்றையும் , செய்ய முடியாதவற்றையும் தெளிவுபடுத்தினோம்.

போர்க்குற்றச்சாட்டு தொடர்பில் சர்வதேச விசாரணை முன்னெடுக்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டபோது, நாம் அதற்கு இணக்கம் தெரிவிக்கவில்லை.

உள்நாட்டு விசாரணைகளின் ஊடாக தீர்வைக் காண்பதாகக் கூறினோம். இதற்கான நடவடிக்கைகளை நாம் முன்னெடுத்தபோது அப்போதைய எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச அதற்கு எதிர்ப்புத் தெரிவித்தார். எவ்வாறிருப்பினும் பயங்கரவாதத்தை ஒழித்துப் பெற்றுக்கொண்ட வெற்றியை முறையாக சர்வதேசத்துக்குத் தெளிவுபடுத்த வேண்டியது அரசின் கடமையாகும்” – என்றார்.

யாழில் பாடசாலை ஆசிரியர் மீது வாள்வெட்டு தாக்குதல்! 

யாழ்ப்பாணம் மல்லாகம் பகுதியில் உடற்கல்வி ஆசிரியர் மீது வாள்வெட்டுத் தாககுதல் நடத்தப்பட்டதில் அவர் படுகாயமடைந்துள்ளார்.

நேற்றிரவு 9.30 மணியளவில் மல்லாகம் சந்தியை அண்மித்த பகுதியில் நண்பர்களுடன் அமர்ந்து ஆசிரியர் பேசசிக்கொண்டிருந்துள்ளார்.

இதன்போது மோட்டார் சைக்கிளில் வந்த மூவர் கொண்டகுழு ஆசிரியர் மீது வாள்வெட்டுத் தாக்குதலை நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளது.

சம்பவத்தில் படுகாயமடைந்த அவர் தெல்லிப்பளை ஆதாரவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

“தொழிலாளர் உரிமைகள் பறிபோவதை இ.தொ.கா வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது.” – செந்தில் தொண்டமான்

“தொழிலாளர் உரிமைகள் பறிபோவதை இ.தொ.கா வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது.” என்று பிரதமரின் பெருந்தோட்ட இணைப்புச் செயலாளர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 1,000 ரூபாவை வழங்க சம்பள நிர்ணய சபை ஊடாக தீர்மானிக்கப்பட்டுள்ள நிலையில், வேலை நாட்களைக் குறைக்க அனுமதிக்க முடியாதெனவும் அவர் கூறினார்.

பெருந்தோட்ட நிறுவனங்களின் சம்மேளனத்தின் ஊடகப் பேச்சாளர் ரொஷான் இராஜதுரையின் கருத்துக்கு பதிலளிக்கும் வகையில் செந்தில் தொண்டமான் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியுள்ளதாவது,

இவ்வாறான அச்சுறுத்தல்களுக்கு ஒருபோதும் அடிபணியப் போவதில்லை. முதலாளிமாரின் இவ்வாறான கடும்போக்கான செயற்பாடுகளே இன்று தொழிலாளர்களுக்கும், முகாமையாளர்களுக்குமிடையே மோதல்களை உருவாக்கியுள்ளன.

தற்போது இது தொடர்பான முறைப்பாடுகள் பிரதமர், ஜனாதிபதி வரை எடுத்துச் செல்லப்படுகின்றன. இவற்றுக்கு கம்பனிகளே காரணமாகும். எனவே, தொழிலாளர்களுக்குரிய முறையான வேலை நாட்களை வழங்க வேண்டியது கம்பனிகளின் பொறுப்பு. இல்லையெனில், வேலை வழங்காத நாட்களில் தோட்ட முகாமையாளர்கள் கொழும்பிலேயே இருந்து கொள்வது உகந்ததாக இருக்கும். கம்பனி பக்கம் தவறுகளை வைத்துக் கொண்டு அவற்றை தொழிலாளர் மீது திணிக்கக் கூடாது.

தொழிலாளர்களுக்கு வேலை நாட்கள் குறைப்பதை வேடிக்கை பார்க்க முடியாது. வருடத்தில் 300 நாட்கள் வேலை வழங்க முடியாதென்றால், தோட்டக் கம்பனிகளிடமிருந்து 300 நாட்கள் எவ்வாறு வேலையை பெற்றுக்கொள்ள வேண்டுமென்பது இலங்கைத் தொழிலாளர் காங்கிரசுக்கு தெரியும்.அத்தோடு தொழிலாளர் உரிமைகள் பறிபோவதை இ.தொ.கா வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது.” எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

“சட்டங்களை மாற்றியமைக்க முயற்சிக்கும் போது அரசாங்கம் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டும்.”- கரு ஜயசூரிய

“அரசாங்கம் சட்டங்களை உருவாக்கும் போது மிகவும் அவதானத்துடன் செயற்பட வேண்டும். இல்லாவிடின் அவை அவர்களுக்கு எதிராகவே திரும்புவதற்கான சாத்தியங்கள் உள்ளன” என முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

அவர் தனது ருவிட்டர் பக்கத்திலேயே இவ்வாறு பதிவேற்றியுள்ளார். குறித்த ருவிட்டர் பதிவில் கரு ஜயசூரிய மேலும் கூறியுள்ளதாவது,

“போலிச் செய்திகள் மற்றும் வெறுப்புணர்வுப்பேச்சுகள் போன்றவற்றைத் தடைசெய்வதற்கும் எதிர்கொள்வதற்கும் ஏற்றவகையில் வலுவான சட்டங்களை உருவாக்குவதற்கு அமைச்சரவை விரும்புகின்றது. மக்கள் கருத்துச்சுதந்திரத்திற்குப் பெரிதும் மதிப்பளிக்கிறார்கள்.

எனவே அதனைக் குறைப்பதற்கான அல்லது மாற்றியமைப்பதற்கான முயற்சிகளை முன்னெடுக்கும் போது, அரசாங்கம் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டும்.

ஏனெனின், மிகவும் நெருக்குதலான சட்டங்கள், அவற்றை உருவாக்கிய அரசாங்கங்களுக்கு எதிராகவே திரும்புவற்கான வாய்ப்புக்கள் உள்ளன” என  அவர் தனது

கொவிட்-19 தொற்றினால் மரணித்தவர்களின் சரீரங்களை ஓட்டமாவடி – இறக்காமம் பகுதிகளில் புதைக்க அனுமதி! 

கொவிட்-19 தொற்றினால் மரணித்தவர்களின் சரீரங்களை மட்டக்களப்பு – ஓட்டமாவடி, அம்பாறை – இறக்காமம் ஆகிய பகுதிகளில் அடக்கம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் அழகையா லதாகரன் இந்தத் தகவலை உறுதிப்படுத்தினார்.

நிபுணர் குழுவின் பரிந்துரையின் பிரகாரம் கொரோனாவால் மரணிப்போரின் சரீரங்களை புதைப்பதற்கு அரசாங்கம் அனுமதி வழங்கியிருந்ததுடன், அதற்கான சுகாதார வழிகாட்டல்களும் நேற்று வெளியாகியிருந்தது.

இந்நிலையில், மட்டக்களப்பு – ஓட்டமாவடி காகிதமநகர், மஜ்மா நகர் பகுதியில் தெரிவு செய்யப்பட்ட காணியில் குறித்த சரீரங்களை புதைக்கப்பதற்கான இன்று ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதற்கமைய, ஓட்டமாவடி – மஜ்மா நகரிலுள்ள காணியில் குழிகள் தோண்டப்பட்டுள்ளதுடன் சரீரங்களை இன்று புதைக்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.