உள்நாட்டுச் செய்திகள்

உள்நாட்டுச் செய்திகள்

“கொரோனா தடுப்பு வேலைத்திட்டம் வலுவடைந்துள்ளது” – வைத்தியசாலையிலிருந்து சுகாதாரதுறை அமைச்சர் !

கொழும்பு தேசிய தொற்று நோயியல் வைத்தியசாலையில் தான் சிகிச்சை பெற்று வருகின்றமையால், கொரோனாத்  தடுப்பூசி ஆரம்ப நிகழ்வில் தன்னால் பங்கேற்க முடியவில்லை எனச் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.

எனினும், தடுப்பூசியை வழங்கும் நடவடிக்கையை வெற்றிகரமாக முன்னெடுக்க முடிந்தது எனவும் அவர் கூறியுள்ளார்.

இந்தியாவால் வழங்கப்பட்ட கொரோனாத் தடுப்பூசியை முதலில் சுகாதாரப் பிரிவுக்கும், பாதுகாப்புப் பிரிவுக்கும் வழங்க கிடைத்தமையை எண்ணி தான் மகிழ்ச்சி அடைகின்றார் எனவும் பவித்ரா வன்னியாராச்சி குறிப்பிட்டுள்ளார்.

இந்தத் தடுப்பூசி திட்டத்தை ஆரம்பித்ததன் ஊடாக, கொரோனா தடுப்பு வேலைத்திட்டம் வலுவடைந்துள்ளது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

உலக சுகாதார ஸ்தாபனத்துடன் கலந்துரையாடல்களை நடத்தி, கொரோனாத் தடுப்பூசி வேலைத்திட்டத்தின் முக்கியத்துவத்தைத் தான் ஜனாதிபதிக்கு எடுத்துரைத்திருந்தார் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கொரோனாத் தொற்றாளராக அடையாளம் காணப்பட்ட பவித்ரா வன்னியாராச்சி, ஹிக்கடுவ பகுதியிலுள்ள தனிமைப்படுத்தல் நிலையமொன்றில் சிகிச்சை பெற்று வந்தார்.

அதைத் தொடர்ந்து, அவர் இரத்மலானை பாதுகாப்பு பல்கலைக்கழக வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்தார். பின்னர் அவர் அங்கிருந்து கொழும்பு தேசிய தொற்று நோயியல் வைத்தியசாலையில் மேலதிக சிகிச்சைகளுக்காக நேற்று முன்தினம் சேர்க்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

300 ஐ தாண்டிய கொரோனா உயிர்ப்பலி – மேலும் எட்டுப்பேர் பலி !

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 08 பேர் சற்று முன்னர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கமைய இலங்கையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 305 ஆக அதிகரித்துள்ளது.

“அமெரிக்காவோ, ஐ.நா வோ இலங்கையைக் கண்டித்தோ காட்டமான அறிக்கை விட்டோ சர்வதேச அரங்கில் எமது நாட்டை அடிபணியவைக்க முடியாது” – அமைச்சர் உதய கம்மன்பில

“அமெரிக்காவோ, ஐ.நா வோ இலங்கையைக் கண்டித்தோ காட்டமான அறிக்கை விட்டோ சர்வதேச அரங்கில் எமது நாட்டை அடிபணியவைக்க முடியாது” என அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

என்று அமைச்சரவை இணைப் பேச்சாளரும் அமைச்சருமான உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தமிழ் மக்களுக்கு எதிராகக் கட்டவிழ்த்து விடப்படும் அடக்குமுறைகளைக் கண்டித்து எதிர்வரும் 3ஆம் திகதி முதல் 6ஆம் திகதி வரை பெரும் கவனயீர்ப்புப் போராட்டம் நடத்தப்படவுள்ளது. இந்தப போராட்டத்தில் தமிழ் பேசும் அனைத்து மக்களும் திரண்டு, தமிழ் மக்களுக்கு எதிரான அடக்குமுறைகளை உலகுக்கு வெளிப்படுத்த வேண்டும் என்று வடக்கு, கிழக்கு சிவில் சமூக அமைப்புக்கள் அறைகூவல் விடுத்துள்ளன.

இது தொடர்பில் கருத்துரைக்கும்போதே அமைச்சர் உதய கம்மன்பில மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

ஜெனிவாவில் எதிர்வரும் மாதங்களில் நடைபெறவுள்ள ஐ.நா. மனித உரிமைகள் சபையின் 46ஆவது கூட்டத் தொடரில் இலங்கைக்கு நெருக்குவாரங்களை ஏற்படுத்தும் நோக்குடனே வடக்கு, கிழக்கிலுள்ள தமிழ் சிவில் சமூக அமைப்புக்கள் செயற்பட்டுக்கொண்டு வருகின்றன. அதற்கமையவே எதிர்வரும் 3ஆம் திகதி முதல் 6ஆம் திகதி வரை வடக்கு, கிழக்கில் கவனயீர்ப்புப் போராட்டங்களை நடத்துவதற்கு அந்த அமைப்புக்கள் உத்தேசித்துள்ளன.

அரசுக்கு எதிராகத் தமிழ் சிவில் சமூக அமைப்புக்கள் போராட்டங்கள் நடத்தியோ அல்லது இலங்கைக்கு எதிராக அமெரிக்கா அழுத்தங்கள் கொடுத்தோ அல்லது ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் இலங்கையைக் கண்டித்து காட்டமான அறிக்கை விட்டோ சர்வதேச அரங்கில் எமது நாட்டை அடிபணியவைக்க முடியாது.

நாட்டின் இறையாண்மையை மீறி எவரும் அரசை நோக்கிக் கைநீட்ட முடியாது. நாட்டு மக்கள் எமக்கு வழங்கிய ஆணைக்கு மதிப்பளித்தே நாம் செயற்படுகின்றோம்.

கடந்த நல்லாட்சி அரசு போல் நாட்டை சர்வதேசத்திடம் நாம் அடகுவைக்க மாட்டோம். அதைச் செய்வதற்கு மக்கள் எமக்கு ஆணை வழங்கவில்லை.

சர்வதேச நெருக்குவாரங்களிலிருந்து நாட்டைப் பாதுகாக்கவே மக்கள் எமக்கு ஆணை வழங்கினார்கள். அந்த ஆணையை எவரும் உதாசீனம் செய்ய முடியாது.

மக்களின் ஆணையே ஏற்றே இலங்கைக்கு எதிரான ஐ.நா. தீர்மானங்களின் இணை அனுசரணையிலிருந்து விலகினோம்.

‘ஒரே நாடு – ஒரே சட்டம்’ என்பதே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசின் கொள்கை.

சிங்களவர்கள், தமிழர்கள், முஸ்லிம்கள் என்று பிரித்துப் பார்க்காமல் தேசிய பிரச்சினைக்குப் பொதுவான ஓர் அரசியல் தீவையே எமது அரசு வழங்கும்.

நாட்டின் சட்ட திட்டங்களை மீறி போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடத்தி எதைச் சாதிக்கப் போகின்றீர்கள் எனத் தமிழ் சிவில் சமூக அமைப்புகளிடம் கேட்டுக்கொள்கின்றோம் – என்றார்.

“இலங்கை இம்முறை ஜெனிவாக் கூட்டத் தொடரில் சவாலை எதிர்கொள்ளப் போகின்றது” – ஐக்கிய மக்கள் சக்தி

“இலங்கை இம்முறை ஜெனிவாக் கூட்டத் தொடரில் சவாலை எதிர்கொள்ளப் போகின்றது” என பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திஸ்ஸ அத்தநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் ஆணையாளர் மிச்செல் பச்லெட் அம்மையார் வெளியிட்டுள்ள காட்டமான அறிக்கை தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் நிலைப்பாட்டைத் தெரிவிக்கும்போதே திஸ்ஸ அத்தநாயக்க மேற்கண்டவாறு பதிலளித்தார்.

அவர் மேலும் கூறியதாவது:-

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கையில் கூறப்பட்டுள்ள விடயங்களை நோக்குகையில், எதிர்வரும் ஜெனிவாக் கூட்டத்தொடரில் இலங்கை சவாலை எதிர்கொள்ளும் என்றே தோன்றுகின்றது.

ஆணையாளரின் அறிக்கையில் போரில் சம்பந்தப்பட்ட இருதரப்புக்கள் தொடர்பிலும் கூறப்பட்டுள்ளது. குறிப்பாக போர் முடிவடைந்து சுமார் 11 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், இன்னமும் முறையான பொறிமுறை ஒன்றினூடாகப் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கப்படாமை தொடர்பில் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அரசமைப்பின் 20 ஆவது திருத்தச் சட்டம் குறித்தும் மேற்படி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அரசமைப்பின் 19 ஆவது திருத்தச் சட்டத்தில் காணப்படும் குறைபாடுகளைத் திருத்தியமைக்குமாறே நாம் வலியுறுத்தினோம். எனினும், அரசு அதனை முழுமையாக இல்லாதொழித்து 20 ஆவது திருத்தச் சட்டத்தை நிறைவேற்றியது.

எனவே, ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கையை விரிவாகவும் ஆழமாகவும் ஆராயவேண்டியது அவசியமாகும். அதுமாத்திரமன்றி அதனை முழுமையாக ஆராய்ந்து எதிர்வரும் பெப்ரவரி மாதம் நடைபெறவுள்ள ஜெனிவாக் கூட்டத் தொடரின்போது அதற்கு முறையான பிரதிபலிப்பையும் வெளிக்காட்ட வேண்டிய தேவையிருக்கின்றது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையால் இலங்கை தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள இந்த அறிக்கையில் கூறப்பட்டிருக்கும் அனைத்து விடயங்களையும் ஏற்றுக்கொள்ளத் தேவையில்லை. ஆனால், அனைத்தையும் புறக்கணித்து விடவும் முடியாது. சர்வதேசத்தின் மத்தியில் ஏனைய நாடுகளின் உதவியின்றி எம்மால் தனித்துப் பயணிக்க முடியாது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.

எமது நாட்டின் மீது சர்வதேசத்தால் பல்வேறு அழுத்தங்கள் பிரயோகிக்கப்படலாம். எனினும், நாம் இவை அனைத்தையும் நடுநிலையுடன் ஆராய்ந்து, ஐ.நா. மனித உரிமைகள் சபையுடனும் கலந்தாலோசித்து, நேர்மறையான தீர்வொன்றை நோக்கிப் பயணிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதே புத்திசாலித்தனமான செயற்பாடாகும் ”  என்றார்.

ஆரம்பமானது கொரோனா தடுப்பூசி போடும் பணி – இலங்கையில் போடப்படும் தடுப்பூசியின் பக்கவிளைவுகள் இவை தான் !

இலங்கையில் கொவிட்-19 தடுப்பூசி வழங்கும் பணி இன்று உத்தியோகபூர்வமாக ஆரம்பமாகியுள்ள நிலையில் சுகாதார அமைச்சின் சுகாதார மேம்பாட்டுப் பணியகம் நோயாளர்கள் மற்றும் சுகாதார பணியாளர்கள் ஆகியோருக்கென பல வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.

வழிகாட்டுதல்களில் குறிப்பிடப்பட்டுள்ள அம்சங்களில் ஒன்று கொவிஷீல்ட் தடுப்பூசியால் நேரக்கூடிய பக்க விளைவுகள் ஆகும்.

இதன்படி பொதுவான பக்க விளைவுகளாக தொடும் போது வலி, வலி, சிவத்தல், தோலில் அரிப்பு ஆகியவை அடங்கும். ஊசி போடப்பட்ட இடத்தில் வீக்கம், கண்டல் காயம் ஆகியவையும் எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் களைப்பு, குமட்டல், காய்ச்சல் போன்ற உணர்வுகளும் பொதுவான பக்கவிளைவுகளில் அடங்கும். லேசான காய்ச்சல், மூட்டு வலி மற்றும் தசை வலி ஆகியனவும் பொதுவானவை.

தலை சுற்றல், பசியின்மை, வயிற்று வலி மற்றும் தோலின் மீது செந்நிறப் பொட்டுக்கள் போன்றவை அசாதாரணமான பக்க விளைவுகளாக இருக்கும் எனக் கூறப்பட்டுள்ளது.

“இலங்கையின் மனித உரிமை நிலவரம் குறித்த ஐ.நா மனித உரிமை பேரவையின் முக்கியத்துவம் வாய்ந்த அறிக்கையை நாங்கள் அவதானமாக ஆராய்கின்றோம்” – அமெரிக்கா

கடந்த 12 மாதங்களில் இலங்கையில் தண்டனையின்மையை ஆழப்படுத்துதல், அரசாங்கத்தின் ஒரு பகுதியாக அதிகரித்துவரும் இராணுவமயப்படுத்தல், இனவாத தேசியவாத கருத்துகள், சிவில் சமூகத்தினர் அச்சுறுத்தல் போன்ற போக்குகள் அதிகரித்துக் காணப்படுகின்றன என இலங்கையின் மனித உரிமை நிலவரம் குறித்து தெரிவிக்கும் ஐ.நா.வின் அறிக்கையை தீவிரமாக ஆராய்ந்து வருவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

குறிப்பிட்ட அறிக்கை ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை இலங்கை குறித்த கண்காணிப்பை வலுப்படுத்த வேண்டும், மனித உரிமை மீறல்களை தடுப்பதற்கான வலுவான தீர்மானம் அவசியம் எனக் குறிப்பிட்டுள்ளது.

இலங்கையின் தற்போதைய பாதை கடுமையான மனித உரிமை மீறல்களுக்கு வழிவகுத்த கொள்கைகளும் நடைமுறைகளும் மீண்டும் உருவாவதற்கு வழிவகுக்கின்றது எனவும் அந்த அறிக்கை தெரிவித்துள்ளது.

இலங்கையின் மனித உரிமை நிலவரம் குறித்த ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையின் முக்கியத்துவம் வாய்ந்த அறிக்கையை நாங்கள் அவதானமாக ஆராய்கின்றோம் என அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் பேச்சாளர் நெட் பிரைஸ் தெரிவித்துள்ளார்.

மனித உரிமைகளுக்கு இன்றே மதிப்பளிப்பதும், கடந்த கால விவகாரங்களைக் கையாள்வதற்கான உரிய நடவடிக்கைகளை எடுப்பதும் இலங்கையின் எதிர்காலத்திற்கு முக்கியமான விடயம் என அவர் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

“மாகாண பாடசாலைகளை தேசிய பாடசாலைகள் என்று தரமுயர்த்துவதாகக் கூறி அவற்றை மத்திய அரசு கையகப்படுத்துவது அதிகாரப்பகிர்வுக்கு முரணானதாகும்” – சீ.வி.கே.சிவஞானம்

“மாகாண பாடசாலைகளை தேசிய பாடசாலைகள் என்று தரமுயர்த்துவதாகக் கூறி அவற்றை மத்திய அரசு கையகப்படுத்துவது அதிகாரப்பகிர்வுக்கு முரணானதாகும்” என்று வடமாகாண அவைத் தலைவர் சீ.வி.கே.சிவஞானம், மாகாண ஆளுநர் திருமதி.பி.எஸ்.எம்.சார்ள்ஸுக்கு எடுத்துரைத்துள்ளார்.

இதுதொடர்பில் வடமாகாண ஆளுநருக்கு அவைத் தலைவர் சீ.வி.கே.சிவஞானம் எழுதியுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;

யாழ்ப்பாண மாவட்டத்தின் பத்து பிரதான பாடசாலைகள் தேசிய பாடசாலைகளாக மாற்றப்பட்டுள்ளன எனவும் அவை வடக்கு மாகாண சபை நிர்வாகத்தில் இருந்து மத்திய கல்வி அமைச்சின் கீழ் கொண்டுவரப்படுவதாகவும் கடந்த வாரம் ஊடகச் செய்திகளின் மூலமாக அறிய வந்துள்ளது.

குறித்துரைக்கப்பட்ட பாடசாலைகள் அல்லாத அரச பாடசாலைகள் அரசியலமைப்பு ரீதியாக மாகாண சபைகளுக்கு கையளிக்கப்பட்ட விடயம் என்ற ரீதியில் இந்தப் பத்துப் பாடசாலைகளும் இதுவரை மாகாண கல்வி அமைச்சின் கீழ் நிர்வகிக்கப்பட்டு வந்தவையாகும். அவற்றை மத்திய அரசு கையகப்படுத்துவது அதிகாரப்பகிர்வுக்கு முரணானதாகும்.

மக்களால் தெரிவு செய்யப்பட்ட வட மாகாண சபை இயங்கிய காலத்தில் இவ்வாறான முயற்சிகள் யாவும் இங்கே மறுதலிக்கப்பட்டமை சுட்டிக்காட்டப்பட வேண்டும். இந்த நிர்வாக அதிகார மாற்றத்தின் தர்க்கவியல் புரிந்து கொள்ளக் கூடியதாக இல்லை. அதாவது நிர்வாக குறைபாடுகள் காரணமாக இருப்பினும் அவை மாகாண சபையினால் சீர்திருத்தப்பட வேண்டும். அவ்வாறு செய்வது ஒரு பிரச்சினை அல்ல.

அவற்றை விட தேசியப் பாடசாலைகளுக்கு ஏதாவது மேலதிக வசதி வாய்ப்புக்கள் வழங்கப்படுவதாயின் அவற்றை மாகாண நிர்வாகத்தின் மூலம் வழங்க முடியும். அவற்றுக்காக ஏற்கனவே நடைமுறையில் இருந்த மாகாண சபை அதிகாரத்தை பிடுங்கி மத்திக்கு கொண்டு செல்லுதல் அதிகாரப்பகிர்வை முழுமையாக மீறும் செயற்பாடாகும்.

இந்நச் செயற்பாடு சமூகத்தில் தேசியப் பாடசாலைகள் ஏதோ தரமுயர்ந்தவை எனவும் ஏனையவை தரம் குறைந்தவை என்ற தோற்றப்பாட்டை ஏற்படுத்தி தேசியப் பாடசாலைகள் தவிர்ந்த ஏனைய பாடசாலைகள் மாணவர்களிடையே ஒரு தாழ்வு மனப்பான்மையை உருவாக்கும் என்பது மறுக்க முடியாது. இவ்வாறான பாகுபாடு ஆரோக்கியமானதல்ல.

மேலும் மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஒரு சபை இல்லாத சூழ் நிலையில் இவ்வாறு செய்வது ஜனநாயக விரோதமானது என்பதையும் இச் செயற்பாடு நிறுத்தப்படவேண்டும் என்பதையும் எமது தீர்க்கமான வேண்டுகோளாக பதிவு செய்து கொள்கிறேன்.

தற்போது வடக்கு மாகாண சபையின் சட்டரீதியான நிறைவேற்று அதிகாரி என்ற வகையில் இந்த விடயத்தில் பொருத்தமான நடவடிக்கை எடுக்கும்படி தங்களை வேண்டிக்கொள்கின்றேன் என தெரிவித்துள்ளார்.

“ஜெனிவாவில் நல்லதொரு தீர்வு கிடைத்தால் தான் இறந்த எமது மக்களின் ஆத்மா சாந்தியடையும்” – பிரசன்ன இந்திரகுமார்

“ஜெனிவாவில் நல்லதொரு தீர்வு கிடைத்தால் தான் இறந்த எமது மக்களின் ஆத்மா சாந்தியடையும்” என முன்னாள் கிழக்கு மாகாணசபையின் தவிசாளரும் தமிழீழ விடுதலை இயக்கத்தின் பிரதி தலைவருமான பிரசன்ன இந்திரகுமார் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் கொக்கட்டிச்சோலை படுகொலையின் 34வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு நேற்று (28.01.2021) நடைபெற்றது. குறித்த நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே பிரசன்ன இந்திரகுமார் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறியுள்ளதாவது,

“ஒவ்வொரு வருடமும் நாங்கள் எங்களுடைய உறவுகளுக்காக இவ்விடத்தில் அஞ்சலி செலுத்திக்கொண்டிருக்கின்றோம்.

எங்கள் மக்களுடைய படுகொலை என்பது சர்வதேசம் அறிந்த உண்மையாகும். ஆனால் இந்த நாட்டினுடைய இனவாத அரசியல் கட்சிகள், மாறி மாறி ஆட்சிக்கு வந்தபோதும் எங்களுடைய மக்களுக்கு நியாயமான தீர்வு கிடைக்கவில்லை.

மேலும் அவர்கள், எமது தலைவர்களை ஏமாற்றி மக்களின் வாக்குகளை பெற்று, ஆட்சி பீடம் ஏறியபோதும்கூட கடந்த ஆட்சியில் எங்களுடைய மக்களுக்கான நியாயம் கிடைக்கவில்லை.

தமிழர்களுக்கான அயல்நாடான இந்தியா, இவ்விடயத்தில் தீர்க்கமானதொரு தீர்வினை பெற்றுக்கொடுக்க வேண்டும்.  எதிர்வரும் மார்ச் மாதம் ஜெனிவாவில் நடைபெறவிருக்கின்ற மனித உரிமைகள் மாநாட்டின் கூட்டத் தொடரில், எமக்கு நல்லதொரு தீர்வு கிடைக்க வேண்டும்.

அப்பொழுதுதான் இறந்த எமது மக்களின் ஆத்மா சாந்தியடையும். இந்த அரசாங்கங்களை நம்பி நாம் ஏமாறுவதைவிட சர்வதேசத்தின் அழுத்தங்கள் ஊடாக எமது மக்களுக்கான நியாயம் கிடைக்க ஏற்பாடுகள் செய்ய வேண்டும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

யாழ்.உயர் குருதி அமுக்க சிகிச்சை நிலையம் திறப்பு !

யாழ் உயர் குருதி அமுக்க சிகிச்சை நிலையம் , யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் விக்டோரியா வீதியில் உள்ள புதிய கிளினிக் கட்டடத் தொகுதியில் இந்த சிகிச்சை நிலையம் இன்று (29.01.2021) வெள்ளிக்கிழமை நண்பகல் திறந்து வைக்கபட்டது.

IMG 20210129 WA0012

இருதய சிகிச்சை வல்லுநர் பூ.லக்ஸ்மன் இந்த சிகிச்சை நிலையத்தை சம்பிரதாய பூர்வமாகத் திறந்துவைத்தார்.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளர், மருத்துவர் த.சத்தியமூர்த்தி, சிகிச்சை நிலையத்தின் முதல் பணிப்பாளர், பொது மருத்துவ வல்லுநர், பேராசிரியர் தி.குமணன் மற்றும் துறைசார் மருத்துவ வல்லுநர்கள், மருத்துவர்கள் இந்த ஆரம்ப நிகழ்வில் பங்கேற்றனர்.

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவ பீட மருத்துவப் பிரிவு, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை இருதய சிகிச்சைப் பிரிவு, சிறுநீரக சிகிச்சைப் பிரிவு, அகஞ்சுரக்கும் தொகுதிப் பிரிவு ஆகியவை இணைந்து யாழ்ப்பாணம் உயர் குருதி அமுக்க சிகிச்சை பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த சிகிச்சை நிலையத்தின் முதல் பணிப்பாளராக யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவ பீட பேராசிரியர், பொது மருத்துவ வல்லுநர் திருநாவுக்கரசு குமணன் நியமிக்கப்பட்டுள்ளார்.

அதி தீவிரமான குருதி அமுக்கம், இளவயதில் குருதி அமுக்கம் போன்ற சிறப்புக் கவனிப்பு தேவையுள்ள நோயாளிகள் இந்த சிகிச்சை பிரிவினால் சிகிச்சையளிக்கப்படுவார்கள். அத்தோடு இந்த சிகிச்சை நிலையம் ஊடாக மக்களுக்கு உயர் குருதியமுக்கம் தொடர்பான விழிப்புணர்வு நடவடிக்கைகளையும் ஆராய்ச்சிப் பணிகளையும் முன்னெடுக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

“18 வயதுக்கு மேற்பட்டோர் இராணுவப் பயிற்சி பெற வேண்டும் என்ற கருத்தை வரவேற்கின்றேன்” – சி. வி விக்னேஸ்வரன்

18 வயதுக்கு மேற்பட்டோர் இராணுவப் பயிற்சி பெற வேண்டும் என்ற கருத்தை வரவேற்கின்றேன் என நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் வடக்கு மாகாண சபையின் முதலமைச்சருமான சி. வி விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

அமைச்சர்  அட்மிரல் சரத் வீரசேகர  இலங்கையில் கட்டாயமாக 18 வயதுக்கு மேற்பட்டோர் இராணுவப் பயிற்சி பெற வேண்டும் என்று கருத்து தெரிவித்திருந்தார். இந்நிலையில் இது தொடர்பாக வினவப்பட்ட வாராந்த கேள்வி பதில் அறிக்கையிலே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

வைஸ் அட்மிரல் கௌரவ சரத் வீரசேகர அவர்கள் இலங்கையில் கட்டாயமாக 18 வயதுக்கு மேற்பட்டோர் இராணுவப் பயிற்சி பெற வேண்டும் என்று கருத்து தெரிவித்திருந்தார்.

வட கிழக்கு தமிழர்களைப் பொறுத்த வரையில் நான் அந்தக் கருத்தை வரவேற்கின்றேன். ஆனால் 16 வயதிலிருந்து எமது சகல மாணவ மாணவியரும் இராணுவப் பயிற்சி பெற வேண்டும். அவர்களுக்கு தமிழ்ப் பேசும் அலுவலர்களே பயிற்சி கொடுக்க வேண்டும். ஆணைகள் தமிழிலேயே இருக்க வேண்டும். போதிய தமிழ்ப் பேசும் அலுவலர்கள் இராணுவத்தில் இல்லை என்றால் முன்னாள் தமிழ் போராளிகளுக்கு இந்தப் பணியை செய்யச் சொல்லி அவர்களுக்கு ஊதியமும் வழங்கலாம். எந்த விதத்திலும் சிங்களம் பேசுவோரோ? சிங்கள மொழியிலோ? எமது மாணவ மாணவியருக்குப் பயிற்சி அளிக்கப்படக் கூடாது.

பயிற்சியாளர்களுக்குத் தட்டுப்பாடு இருந்தால் தென்னிந்தியாவில் இருந்து தமிழ்ப் பயிற்சியாளர்களை வரவழைக்கலாம். எங்களுக்கு சிரேஷ்ட பள்ளி மாணவ இராணுவப் பயிற்சி 1950களில் றோயல் கல்லூரியில் வழங்கும் போது பயிற்சிகளும் ஆணைகளும் ஆங்கிலத்தில் இருந்தன. பல் இன மாணவர்களை ஆங்கில மொழி ஒன்று சேர்த்தது. எம்முள் சிங்களவர், தமிழர், பறங்கியர், முஸ்லீம்கள், மலாயர், என பலதரப்பட்ட மாணவர்கள் இருந்தார்கள். ஆனால் எப்பொழுது சிங்களத்தை நாடு முழுவதும் திணிக்க அரசியல்வாதிகள் முடிவெடுத்தார்களோ அப்பொழுதே எமது ஒற்றுமை, ஒன்றிணைந்த செயற்பாடு, நாட்டின் பற்றுதல் ஆகியன ஆட்டம் கண்டன.

காலாதி காலமாகத் தமிழ் மொழியைப் பேசி வந்த வடக்குக் கிழக்கும் தமது தனித்துவத்தை இழந்தன. 1958ம் ஆண்டில் றோயல் கல்லூரியின் இராணுவப் பயிற்சி பெற்ற மாணவப் படையின் அங்கத்தவராக காலி மைதானத்தில் சுதந்திர தின அணி வகுப்பில் பங்குபற்றியதன் பின்னர் சுதந்திர தின வைபவங்களைப் புறக்கணித்தே வருகின்றேன். காரணம் 1956ம் ஆண்டின் சிங்களம் மட்டும் சட்டம் தமிழ்ப் பேசும் மக்களின் சுதந்திரத்தைப் பறித்து விட்டது.

எமக்கு சிங்கள அரசியல்வாதிகளிடம் இருந்து விடுதலை கிடைத்து நாட்டு மக்கள் சம உரிமையுடன் ஒன்று சேர்ந்து வாழ வாய்ப்பளித்தால்த்தான் தமிழர்கள் சுதந்திர தினத்தைக் கொண்டாடலாம். கௌரவ சரத் வீரசேகர அவர்கள் தமிழ் மாணவ மாணவியர் தமிழர்கள் மூலமாகத் தமிழ் இராணுவப் பயிற்சி பெற இணங்குவாரானால் நான் அவரின் கருத்தை வரவேற்பேன். சிங்கள மொழி பேசும் அலுவலர்களை அனுப்ப நினைத்தால் எமது மாணவ மாணவியர் அல்லது 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் அனைவரும் பயிற்சிகளைப் புறக்கணிப்பார்கள் .

இராணுவப் பயிற்சி சுய கட்டுப்பாட்டையும் ஒழுக்கத்தையும் மேம்படுத்தும் என்பது உண்மைதான். ஆனால் இவ்வாறு பயிற்சி பெற்ற இலங்கையின் போர்ப் படையினரே கட்டுப்பாட்டை இழந்து ஒழுக்கத்தை மீறி மனித உரிமை மீறல்களிலும் இனப்படுகொலைகளிலும் ஈடுபட்டனர் என்பது உலகம் அறிந்த விடயம். கௌரவ சரத் வீரசேகர அவர்கள் எமது இளைஞர்கள் யுவதிகளைத் தமது இராணுவத்தின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரவே இவ்வாறான ஒரு கருத்தை வெளியிட்டுள்ளார் என்பதை நான் அறிவேன்.

சிங்கள அரசியல்வாதிகளும் படையினரும் இணைந்து எவ்வாறு வடகிழக்கைத் தம்முடைய முற்றும் முழுதுமான கட்டுப்பாட்டின் கீழ்க் கொண்டு வரவேண்டும், இங்குள்ள குடிப்பரம்பலை எப்படி மாற்ற வேண்டும். பிரச்சினைகளை ஏற்படுத்தி எமது இளைஞர் யுவதிகளை நாட்டிலிருந்து எவ்வாறு வெளியேற்ற வேண்டும் என்பது சம்பந்தமாக ஆழ ஆராய்ந்து, முடிவுக்கு வந்து தமது முடிவுகளை நடைமுறைப்படுத்தி வருகின்றார்கள். அதன் ஒரு அம்சமே குறித்த நாடாளுமன்ற உறுப்பினரின் கருத்துரை.

சிங்கள புத்திஜீவிகள் மற்றும் படையினரின் ஆழ்ந்த இன ரீதியான முடிவுகளை முறியடிக்க எமது புத்திஜீவிகள் இதுவரை என்ன செய்துள்ளார்கள்? குறித்த நாடாளுமன்ற உறுப்பினரின் கருத்தாவது எமது மக்கட் தலைவர்களை வரப்போகும் ஆபத்து பற்றி சிந்திக்கத் தூண்டுவதாக அமையும் என தெரிவித்துள்ளார்.