உள்நாட்டுச் செய்திகள்

உள்நாட்டுச் செய்திகள்

வணக்கத்துக்குரிய அத்துரலியே ரதன தேரர் பாராளுமன்ற உறுப்பினராக  பதவிப்பிரமாணம் !

அபே ஜன பல கட்சியில் இருந்து தேசிய பட்டியலில் பாராளுமன்றிற்கு தெரிவு செய்யப்பட்ட வணக்கத்துக்குரிய அத்துரலியே ரதன தேரர் பாராளுமன்ற உறுப்பினராக  பதவிப்பிரமாணம் செய்துக்கொண்டார்.

பாராளுமன்ற அமர்வு ஆரம்பத்தில் அவர் பாராளுமன்ற உறுப்பினராக பதவிப்பிரமாணம் செய்துக் கொண்டார்.

கடந்த பொதுத் தேர்தலில் அபே ஜனபல கட்சியினால் பெற்றுக் கொள்ளப்பட்ட தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்காக அத்துரலியே ரதன தேரரின் பெயர் தேசிய தேர்தல் ஆணைக்குழுவினால் கடந்த தினம் வர்த்தமானியில் வௌியிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

“வடக்கு கிழக்கு பிரதேசங்களில் மேற்கொள்ளப்படுகின்ற திட்டங்களுக்கான பெயர்கள் அனைத்தையும் தமிழிலேயே பயன்படுத்த வேண்டும்”  – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா

வடக்கு கிழக்கு பிரதேசங்களில் வெளியிடப்படுகின்ற வெளியீடுகள் அனைத்தும் குறித்த பிரதேச மக்களுக்கு விளங்கிக் கொள்ளும் வகையில் அமைய வேண்டும் என்றும் மத்திய அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படுகின்ற திட்டங்களுக்கான பெயர்கள் அனைத்தையும்; வடக்கு கிழக்கு பிரதேசத்தில் தமிழிலேயே பயன்படுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, அரசாங்க திணைக்களங்களின் பிரதேச அதிகாரிகள் தேவையற்ற அசௌகரியங்களை தவிர்க்கும் வகையில் செயற்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும் தமிழ் பிரதேசங்களில் தமிழ் மொழியை முழுமையாக செயற்படுத்துவதில் ஏதாவது நடைமுறைச் சிக்கல்கள் இருப்பின் தன்னுடைய கவனத்திற்கு கொண்டு வருமாறும் அதிகாரிகளைக் கேட்டுக் கொண்டுள்ளார்.

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் கிளிநொச்சி மாவட்ட இளைஞர்களுக்கு வழங்கப்பட்ட சான்றிதழ்கள் சிங்கள மொழியில் மாத்திரம் எழுதப்பட்டிருந்த நிலையில் ஏற்பட்ட அசௌகரியங்கள் தொடர்பாக சம்மந்தப்பட்ட தரப்புக்களுடன் நேற்று (04.01.2021) கலந்துரையாடப்பட்ட போதே கடற்றொழில் அமைச்சரினால் குறித்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் கிளிநொச்சி மாவட்டத்தில் நடத்தப்பட்ட வீட்டுத் தோட்டப் போட்டியில் வெற்றி பெற்றவவர்களுக்கான சான்றிதழ்கள், பிரதேச மக்கள் புரிந்து கொள்ளக்கூடிய மொழியில் தயாரிக்கப்பட்டு விரைவில் அனுப்பி வைக்கப்படும் எனவும் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் அதிகாரிகளினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த வெற்றியாளர்களுக்கான, சான்றிதழ்கள் வழங்கு நிகழ்வு நேற்று கிளிநொச்சி மாவட்டத்தில் இடம்பெற்ற நிலையில், சான்றிதழ்கள் சிங்கள மொழியில் மாத்திரம் அச்சிடப்பட்டிருந்தமையினால் எழுதப்பட்டிருந்த விடயங்களை புரிந்து கொள்ள முடியாக இளைஞர்கள் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மாவட்ட அதிகாரிகளுக்கு தமது அதிப்தியை வெளிப்படுத்தினர்.

அத்துடன், கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத் தலைவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் ஒருங்கிணைப்புச் செயலாளர்களான வை. தவநாதன் மற்றம் கோ. ருஷாங்கன் ஆகியோரின் கவனத்திற்கும் குறித்த விடயம் கொண்டு வரப்பட்ட நிலையில், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் இதுதொடர்பாக அவதானம் செலுத்தப்பட்டுள்ளது..

ஏற்கனவே, மேற்கொள்ளப்படுகின்ற வேலைத் திட்டங்கள் அனைத்திலும் தமிழ் மொழி முழுமையாக அமுல்ப்படுத்தப்பட வேண்டும் என்று கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் அரசாங்க அதிகாரிகளுக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கொரோனா வைரஸ் மருந்தினை பெறுவதற்கு அமைச்சரவை அனுமதி !

கொவக்ஸ் சர்வதேச திட்டத்தின் ஊடாக கொரோனா வைரஸ் மருந்தினை பெறுவதற்கு அமைச்சரவை அனுமதிவழங்கியுள்ளது.

கொவக்ஸ் சர்வதேச திட்டத்தின் ஊடாக மருந்தினை பெறுவதற்கு மருந்து உற்பத்தியாளர்களுடன் உடன்படிக்கையில் கைச்சாத்திடுவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

அனுமதிவழங்கப்பட்ட கொரோனா மருந்தினை உலகநாடுகள் மத்தியில் சமமாக விநியோகிப்பதற்காக உருவாக்கப்பட்டதே கொவக்ஸ் சர்வதேச திட்டம். இந்த திட்டத்தின் மூலம் மருந்தினை பெறுவதற்கு தகுதிவாய்ந்த நாடு இலங்கை என உலக சுகாதார ஸ்தாபனம் அனுமதிவழங்கியுள்ளது.

எரியுண்ட நிலையில் மீட்கப்பட்ட பௌத்த மதகுருவின் சடலம் – நால்வர் கைது !

ஹன்வெலவில் பௌத்தமதகுரு ஒருவரை கடத்திக்கொலை செய்த குற்றச்சாட்டின் அடிப்படையில் பெண்ணொருவர் உட்பட நால்வர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

ஜனவரி இரண்டாம் திகதி உடுவில தர்மசிறி தேரர் கடத்தப்பட்டுள்ளார் என  முறைப்பாடு கிடைத்தது என பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இதனை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட தேடுதலின் போது கொட்டதெனியாவ நாவன்ன மயானத்தில் பௌத்த மதகுருவின் எரியுண்ட நிலையில் காணப்பட்ட உடலை பொலிஸார் மீட்டுள்ளனர்.

பிரதேப்பரிசோதனையின் போது அது காணாமல்போன மதகுருவின் உடல் என்பது உறுதியாகியுள்ளது என பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இதனை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கொலைக்கு பயன்படுத்தப்பட்ட வாகனத்தையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.
சந்தேகநபர்களில் ஒருவருக்கும் பௌத்தமதகுருவிற்கும் இடையிலான தகராறே இந்த கொலைக்கு காரணம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

“இறுதிப்போரில் போர்க்குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் இடம்பெறவில்லையெனில் ஐ.நாவின் கூட்டு உடன்படிக்கையில் அன்று மஹிந்த கையெழுத்திட்டிருக்கக்கூடாது” – மங்கள சமரவீர காட்டம் !

“இறுதிப்போரில் போர்க்குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் இடம்பெறவில்லையெனில் ஐ.நாவின் கூட்டு உடன்படிக்கையில் அன்று மஹிந்த கையெழுத்திட்டிருக்கக்கூடாது” முன்னாள் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

இலங்கை இராணுவம் படுகொலைகளில் ஈடுபடவில்லை. போர்க்குற்றங்களை இழைக்கவில்லை. இதை ஐ.நா. மனித உரிமைகள் சபையில் உரிய சாட்சியங்களுடன் இந்த முறை நிரூபிப்போம். நாம் எதற்கும் அஞ்சமாட்டோம்’ என்று பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்தன மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர ஆகியோர் கருத்துக்களை வெளியிட்டுள்ளனர்.

இது தொடர்பில் கருத்துரைக்கும்போதே மங்கள சமரவீர மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

இறுதிப்போர் முடிவடைந்த கையுடன் போர்க்குற்றச்சாட்டுக்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சுயாதீன விசாரணை நடத்தப்படும் என்று அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச சர்வதேசத்துக்கு வாக்குறுதி வழங்கியிருந்தார். அது தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகமாக இருந்த பான் கீ – மூனிடம் இணைந்து ஆவணங்களில் மஹிந்த கைச்சாத்திட்டும் இருந்தார். போர்க்குற்றங்கள் தொடர்பான விவகாரத்துக்கு மஹிந்தவே முழுப்பொறுப்பு. இறுதிப்போரில் போர்க்குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் இடம்பெறவில்லையெனில் ஐ.நாவின் கூட்டு உடன்படிக்கையில் அன்று மஹிந்த கையெழுத்திட்டிருக்கக்கூடாது.

போர்க்குற்றங்கள் தொடர்பில் பேசுவதற்குப் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவுக்கு எந்தத் தகுதியும் கிடையாது. ஏனெனில், அவரும் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகிய நபராவர். பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர ஒவ்வொரு தடவையும் வாய்க்கு வந்த மாதிரி பேசுகின்றார். போர்க்குற்றங்கள் தொடர்பில் பேசுவதற்கு அவருக்கும் எந்த அருகதையும் கிடையாது. அவரின் பொறுப்பற்ற கருத்துக்கள் சர்வதேச அரங்கில் இலங்கையைத் தலைகுனிய வைக்கும் .

போர்க்குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் இலங்கை மீதான சர்வதேச விசாரணையைத் தவிர்க்கும் வகையிலேயே ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கு நல்லாட்சி அரசு இணை அனுசரணை வழங்கியிருந்தது. அதன் ஊடாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவையும், இராணுவ அதிகாரிகளையும் மின்சாரக் கதிரையில் இருந்து காப்பாற்றினோம்.

கோட்டாபய அரசு தற்போது கூறுவது போல் ஜெனிவாவில் இராணுவத்தினரையும் ராஜபக்ச குடும்பத்தினரையும் நல்லாட்சி அரசு காட்டிக்கொடுக்கவில்லை. அன்று பான் கீ – மூனுடன் இணைந்து மஹிந்த ராஜபக்சவே நாட்டைக் காட்டிக் கொடுத்தார்.

இலங்கை தொடர்பான ஐ.நா. மனித உரிமைகள் சபையின் தீர்மானத்தின் இணை அனுசரணையிலிருந்து கோட்டாபய அரசு விலகிக்கொண்டமை முற்றிலும் தவறானதாகும். இதனால் பாரிய விளைவுகளை இம்முறை ஜெனிவாவில் இந்த அரசு சந்திக்கப் போகின்றது.

இது பொருளாதார ரீதியில் மோசமான நிலைமையையும் இலங்கைக்குத் தோற்றுவிக்கக்கூடும். சர்வதேச மட்டத்தில் இலங்கை தனிப்படுத்தப்படுத்தப்படவும் கூடும். இராஜதந்திர மட்டத்தில் தீர்வு காணப்பட வேண்டிய விடயத்தை இன்று அரசு சர்வதேச அரங்கில் ஊதிப்பெருப்பித்துள்ளது – என்றார்.

இரண்டாவது நாளாகவும் தொடரும் யாழ்.பல்கலைக ஒழுக்காற்று நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்ட மாணவர்களின் உணவு தவிர்ப்பு போராட்டம் !

யாழ். பல்கலைக்கழகப் பேரவையினால் ஒழுக்காற்று நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்ட மாணவர்களில் ஒரு பகுதியினர் தங்களது தண்டனையை விலக்கிக் கொள்ள வேண்டும் என்று கோரி முன்னெடுக்கும் உணவு போராட்டம் இரண்டாவது நாளாகவும் தொடர்கின்றது.

இன்று காலை போராட்டம் இடம்பெறும் இடத்திற்கு வருகை தந்த யாழ்.பல்கலைக்கழக சமூகவியல் துறை, துறைத்தலைவர் ஜீவசுதன் மாணவர்களையும், ஊடகவியாளர்களையும் எச்சரிக்கும் தொணியில் கதைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

“கருணாவை தமிழ் தேசிய கூட்டமைப்புடன் இணைப்பது என்பது சாத்தியப்படாத ஒரு விடயம்” – சி.வி.கே சிவஞானம்

நேற்றைய தினம், கிளிநொச்சியில் ஊடகவியலாளர்களை சந்தித்த விநாயகமூர்த்தி முரளிதரன், தான் தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து செயற்படவுள்ளதாகவும் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவுடன் தனக்கு நெருங்கிய தொடர்பு காணப்படுவதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் “விநாயகமூர்த்தி முரளிதரன் எனப்படும் கருணாவை தமிழ் தேசிய கூட்டமைப்புடன் இணைப்பது என்பது சாத்தியப்படாத ஒரு விடயம்” என வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவர் சி.வி.கே சிவஞானம் தெரிவித்துள்ளார்.

இன்று (04.01.2021)) யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக கருத்து தெரிவித்த சிவஞானம், கருணா கூட்டமைப்புடன் இணைந்து செயற்பட விரும்புவதாக தெரிவித்தாரே தவிர கூட்டமைப்பு அவரை இணைத்துக் கொள்வது தொடர்பாக எந்த ஒரு தீர்மானமும் எடுக்கவில்லை அவரை கூட்டமைப்புடன் இணைப்பது என்பது சாத்தியப்படாத ஒரு விடயம் என கூறியுள்ளார்.

“அரசு சர்வாதிகார இராணுவ ஆட்சியை நோக்கிய போக்கினை உடனடியாக கைவிட வேண்டும்” – ரவூப் ஹக்கீம்

“அரசு சர்வாதிகார இராணுவ ஆட்சியை நோக்கிய போக்கினை உடனடியாக கைவிட வேண்டும்” என  ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

கொரோனா விடயங்களை கையாள்வதற்காக மாவட்ட ரீதியாக இராணுவ அதிகாரிகள் நியமிக்கப்பட்டமை தொடர்பாக கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

“ஆட்சி மாற்றம் இடம்பெற்றதன் பின்னரான சூழலில் நாட்டின் சிவில் நிர்வாகத் துறையில் முப்படைகளையும் சேர்ந்த முன்னாள் அதிகாரிகள் பலர் இணைத்துக் கொள்ளப்பட்டனர். நாட்டின் பாதுகாப்புத்துறை தவிர்ந்த வெளிவிவகாரம், சுகாதரத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் அவ்விதமான படை அதிகாரிகள் அமைச்சின் செயலாளர், பணிப்பாளர் என்று பல்வேறு பதவிகளில் அமர்த்தப்பட்டுள்ளனர்.

நாட்டின் ஜனாதிபதி படை அதிகாரிகளைப் பயன்படுத்தி அனைத்து விடயங்களையும் நடைமுறைச் சாத்தியமாக்கலாம் அல்லது அவர்களுடன் பணியாற்றுவது தனக்கு இலகுவானது என்று கருதமுடியும். அதற்காக, சிவில் நிர்வாகத்தில் மேலும் மேலும் படை அதிகாரிகளை இணைத்துக் கொள்கின்றமையாது நாட்டில் படைத்துறையை மையப்படுத்திய நிர்வாகமொன்று விரைவில் ஏற்படும் அபாயத்தினை உருவாக்குவதாகவுள்ளது.

விசேடமாக, கொரோனா நெருக்கடிகளிலிருந்து நாட்டை மீட்டெடுப்பதற்கான பொறுப்பு, முப்படைகளின் தளபதி தலைமயிலான தேசிய செயலணியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அதனை ஓரளவிற்கேனும் ஏற்றுக்கொண்டாலும் அதன்பின்னர் சுகாதார அமைச்சின் செயலாளராக முன்னாள் இராணுவ அதிகாரியை நியமித்தமை தற்போது மாவட்டந்தோறும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை கண்காணிப்பதற்காக இராணுவ அதிகாரிகளை நியமித்தமை பெரும் அச்சத்தினை ஏற்படுத்துவதாக உள்ளது.

எனவே இவ்விதமான சர்வாதிகார இராணுவ ஆட்சியை நோக்கிய போக்கினை உடனடியாக கைவிட வேண்டியது அவசியமாகும்” என்றார்.

“சுமந்திரன் பொய் கூறுவதை நிறுத்த வேண்டும்” – சி.வி.விக்னேஸ்வரன்

“சுமந்திரன் தனது திறமைகளைத் தமிழ் மக்களின் நன்மைகளுக்காக பயன்படுத்தாமல், அரசாங்கத்தின் நன்மைகளுக்காக பயன்படுத்தி வருவதே அவர் மீதான முரண்பாடுகளுக்கு காரணம்” என பாராளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.

ஐ. நா மனித உரிமைகள் சபையின் கூட்டத் தொடர் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தயாரித்து என்னால் நிராகரிக்கப்பட்ட வரைபுக்கு நான் தற்போது அனுமதி வழங்கியுள்ளதாக வவுனியாவில் செய்தியாளர்கள் மத்தியில் கூறியுள்ள தாக ஊடகங்களில் வெளிவந்த செய்திகளில் எதுவித உண்மையும் இல்லை என தமிழ் மக்கள் கூட்டனியின் செயலாளர் நாயகம் நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்

குறித்த விடயம் தொடர்பில் அவர் அறிக்கை ஒன்றினையும் வெளியிட்டுள்ளார் .

அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

ஐ. நா மனித உரிமைகள் சபையின் கூட்டத் தொடர் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தான் தயாரித்து என்னால் நிராகரிக்கப்பட்ட வரைபுக்கு நான் தற்போது அனுமதி வழங்கியுள்ளதாக வவுனியாவில் செய்தியாளர்கள் மத்தியில் கூறி இருப்பதாக ஊடகங்களில் படித்தேன்.

சுமந்திரனின் இந்த கூற்றில் எந்த உண்மையும் இல்லை. இது அப்பட்டமான பொய். இந்த வரைபை தான் தயாரிக்கவில்லை என்றும் வேறு யாரோ தான் தயாரித்துள்ளார்கள் என்பதை அறிந்ததும் நான் இணக்கம் தெரிவித்துள்ளதாக வேடிக்கையான கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

குற்றம் உள்ள நெஞ்சு குறுகுறுக்கும் என்பது போல இந்த கடித விவகாரம் தொடர்பில் சுமந்திரன் தெரிவித்துவரும் கருத்துக்கள் முன்னுக்குப் பின் முரணாக அமைகின்றன. சுமந்திரன் எனது பார்வைக்காக அனுப்பிய கடிதத்தை தான் வரையவில்லை என்றும் புலம்பெயர் அமைப்பு ஒன்றே வரைந்ததாகவும் கூறிவருகிறார்.

எது உண்மை எது பொய் என்பது எனக்கு தெரியாது. ஆனால், இந்த கடித்தை எனக்குத் தந்தது சுமந்திரனே. எனக்கு இந்த வரைபைத் தந்த சுமந்திரன் அதனைத் தயாரித்தது வேறு யாரோ என்று எதுவும் குறிப்பிட்டதாக எனக்கு ஞாபகமில்லை. “நாங்கள்” என்ற பதத்தைப் பாவித்ததாகவே எனக்கு நினைவு.

இந்த வரைபை படித்து பார்க்கின்ற எவருக்குமே இந்த வரைபின் நோக்கம் அரசாங்கத்துக்கு மனித உரிமைகள் சபையில் முன்னைய தீர்மானத்தினை நிறைவேற்றுவதற்கு மேலும் காலம் வழங்குவதே என்பது புலன் ஆகும். இதில் எந்த மயக்கமும் இருக்க முடியாது. சுமந்திரன் எனக்கு அனுப்பிய வரைபை நான் பகிரங்கப்படுத்தவில்லை. அதற்கு நான் அளித்த பதிலையே பகிரங்கப்படுத்தினேன். இவ்வாறு நான் பகிரங்கப்படுத்தியதனால் தான் அவரது கபடத்தனமான முயற்சி முறியடிக்கப்பட்டது.

நான் என் பதிலைப் பகிரங்கப்படுத்தியமை காரணமாக அரசாங்கம் நாம் என்ன செய்கின்றோம் என்று விழித்துக்கொண்டு விட்டது என்று நகைப்புக்கிடமான கருத்துக்களைக் கூறி வருகிறார். உண்மையில் சுமந்திரனின் வரைபு அரசாங்கத்தைக் காப்பாற்றும் ஒரு முயற்சி. இதில் அரசாங்கம் கோபப்பட என்ன இருக்கிறது என்று எனக்கு விளங்கவில்லை.

சுமந்திரனின் கருத்துடன் உடன்பட மறுத்து பெரும்பான்மையான புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் கூட்டாக ஒரு வரைபை தயாரித்து அனுப்பி இருந்தார்கள். அந்த வரைபில் சர்வதேச நீதிமன்றம் (நேரடியாக குறிப்பிடப்படாவிட்டாலும்), நீதிக்கான சர்வதேச நீதிமன்றம், சர்வதேச சுயாதீன விசாரணை போன்ற அடிப்படையான விடயங்கள் பிரஸ்தாபிக்கப்பட்டுள்ளன.

இந்த வரைபுக்கு நான் இணக்கம் தெரிவித்துள்ளேனே தவிர சுமந்திரனின் வரைபுக்கு அல்ல. அதேவேளை, மனித உரிமைகள் சபை ஆணையாளர் மற்றும் சபையின் உறுப்பு நாடுகளுக்கு அனுப்பும் பொருட்டு மிகவும் இறுக்கமான ஒரு வரைபை தயாரித்து ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் இணக்கம் பெறும் முயற்சியில் ஈடுபட்டுள்ளேன்.

இதேவேளை, வவுனியாவில் நேற்று நடைபெற்ற கூட்டத்தில் சுமந்திரன், கஜேந்திரகுமார் ஆகியோர் மனித உரிமைகள் சபை தொடர்பிலான பொதுவான வரைபு ஒன்றை தயாரிப்பதற்கு இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளதாக அறிகின்றேன். இது நல்ல விடயம். மூன்று கட்சிகளுக்கும் இடையே இது தொடர்பில் இணக்கப்பாடு ஏற்படுவதற்கு என்னால் ஆன ஒத்துழைப்பை வழங்குவேன். குறித்த வரைபு எது என்று இதுவரையில் தெரியாது.

ஆனால், அடிப்படை விடயங்களில் விட்டுக்கொடுப்பதற்கு நான் தயார் இல்லை. சர்வதேச குற்றவியல் நீதிமன்றம், நீதிக்கான சர்வதேச நீதிமன்றம் ஆகியவை சாத்தியம் இல்லை போன்ற கருத்துக்களை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன். இவை சாத்தியமோ? சாத்தியம் இல்லையோ? பாதிக்கப்பட்ட சமூகம் என்ற வகையில் கிடைக்கின்ற எல்லா வழிகளையும் நாம் முயற்சிக்க வேண்டும். சரிவராதுவிட்டால் பரவாயில்லை. வெற்றி தோல்விகள் என்னைப் பொதுவாகப் பாதிப்பதில்லை.

ஆனால், இவற்றுக்காக முயற்சிப்பது சர்வதேச ரீதியில் நீதிக்கான எமது போராட்டத்தை மேலும் முன்னெடுத்து செல்வதற்கு வலுவான ஒரு அடித்தளத்தை ஏற்படுத்தித் தரும் என்பது எனது நம்பிக்கை. அதேவேளை, நாம் கடும்போக்கு நிலையில் நின்றால், ஐ. நா மனித உரிமைகள் சபையின் பிடியில் இருந்து இலங்கை விடுபட்டுபோகும் என்ற அர்த்தம் அற்ற கருத்துக்களையும் நான் நிராகரிக்கின்றேன். நாம் கேட்பது எதுவுமே கடும்போக்கு அல்ல. அவை நீதியின் பாற்பட்ட நியாயமான கோரிக்கைகளே.

இறுதியாக, சுமந்திரன் பொய் கூறுவதை நிறுத்த வேண்டும் என்று அவரிடம் கோரிக்கை விடுக்கின்றேன். மூன்று நாட்களுக்கு முன்னர்தான் அவருக்கும் எனக்கும் இடையில் எந்தவித தனிப்பட்ட பிரச்சினை எதுவும் இல்லை என்றேன். அவருக்கு எனக்கெதிராக ஏதேனும் பிரச்சினை இருந்தால் அதைச் சொல்லட்டும். அதை விட்டு விட்டு பொய் கூற விழையக் கூடாது.

சுமந்திரன் தனது திறமைகளைத் தமிழ் மக்களின் நன்மைகளுக்காக பயன்படுத்தாமல், அரசாங்கங்களின் நன்மைகளுக்காக பயன்படுத்தி வருவதே எனக்கும் அவருக்கும் இடையிலான முரண்பாடுகளுக்கு காரணமாகும். விரைவில் அவர் இந்த நிலைமையில் இருந்து விடுபட்டு, தனது சொந்த மக்களுக்கு நடைபெற்றது இனப்படுகொலை தான் என்பதை புரிந்துகொண்டு பாதிக்கப்பட்ட மக்களுக்காக பாடுபடுவதற்கு முன்வருவார் என்று நம்புகிறேன்.

அரசாங்கம் தமிழர்களுக்கான தீர்வை புதிய அரசியல் யாப்பினுடாகத் தரும் என்ற நம்பிக்கையில் தொடர்ந்தும் செயற்படாமல் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பேரில் தன்னை ஆதரித்த மக்களுக்காகவும் தமிழ்த் தேசியத்துக்காகவும் உண்மையாக உழைக்க முன்வருமாறு அவரை அன்புடன் வேண்டுகின்றேன்” எனவும் அந்த அறிக்கையில்  குறிப்பிடப்பட்டுள்ளது.

“பேரினவாத செயற்பாடுகளுக்கு மத்தியில், பலமிழந்திருக்கும் சமூகங்களுக்கு ஒரே குரலான ஊடகங்களை அடக்கவே ‘உதயன்’ மீதான வழக்குத்தாக்கல் நிகழ்ந்துள்ளது” – இரா.சாணக்கியன் கண்டனம் !

“அடக்கு முறை, பௌத்த மேலாதிக்க, பேரினவாத செயற்பாடுகளுக்கு மத்தியில், பலமிழந்திருக்கும் சமூகங்களுக்கு ஒரே குரலாக ஊடகங்களே உள்ளன. இத்தகைய குரலை நசுக்கவே ‘உதயன்’ மீதான வழக்குத்தாக்கல் நிகழ்ந்துள்ளது.” என  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார்.

‘உதயன்’ மீதான யாழ். பொலிஸாரின் வழக்குத் தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“உதயன் பத்திரிகை வடபுல மக்களுக்காக மட்டுமன்றி தமிழ் பேசும் மக்களின் குரலாக மிக நீண்டகாலமாக உரிமைக் குரல் எழுப்பிவருகின்றது. தற்போது தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் ஒளிப்படத்தையும், அவரது சொற்களையும் வெளியிட்டமைக்காக ‘உதயன்’ பத்திரிகைக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளமை விசனிக்கத்தக்கதும், கவலை தரும் விடயமுமாகும்.

ஜனநாயகத்தின் நான்காவது தூண் என முக்கியத்துவம் பெற்றுள்ள ஊடகத்துறையின் பணிகளைக் கேள்விக்குறியாக்கும் வகையிலேயே இந்த விடயம் அமைந்துள்ளது. தமிழ்த் தேசியத்துக்கான தமிழ் ஊடகங்களின் பெரும்பங்களிப்புகளுக்கு மத்தியில், உதயனின் சேவை கடந்த காலங்களிலும், தற்போதும் சிறப்புற அமைந்துள்ளது. உதயனின் குரல் வளையை நசுக்கி, மௌனிக்கச் செய்யும் செயற்பாடாகவே இதனைக் கருத வேண்டியுள்ளது.

கடந்த காலங்களில் ஊடக அடக்கு முறையின் கீழ் பல தடவைகள் உதயன் அலுவலகம், தாக்கப்பட்டும், எரியூட்டப்பட்டும் நெருக்குதல்களை உதயன் சந்தித்து வந்தபோதிலும், நெஞ்சுரமும், தமிழ் பேசும் மக்களின் பேராதரவும் காரணமாக வீரியத்துடனேயே மீண்டெழுந்து வந்து அது மக்கள் குரலாக வீறுநடை போடுகின்றது.

எரிப்பு, துப்பாக்கிச் சூடுகள், தாக்குதல்கள் என்ற நிலைமாறி உதயனின் குரலை ஒடுக்கும் செயற்பாடுகள் புதிய வடிவம் பெற்றுள்ளமையே உதயன் மீதான வழக்குத் தாக்கலாகும். மக்களுக்குத் தகவல் வழங்குவது ஊடகங்களின் உரிமை எனும் அடிப்படையில் ஊடக தர்மத்துடன் செயற்பட்ட உதயன் மீதான வழக்கை அரசு மீளப்பெறவேண்டும்” – என்றார்.