உள்நாட்டுச் செய்திகள்

உள்நாட்டுச் செய்திகள்

“சமூக வலைத்தளங்களை பயன்படுத்தும் நபர்களை பதிவு செய்யும் திட்டம் விரைவில் ” –  அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல

முகநூல் உட்பட சமூக வலைத்தளங்களை பயன்படுத்தும் நபர்களை பதிவு செய்யும் வேலைத்திட்டம் ஒன்றை அமைச்சு மட்டத்தில் நடைமுறைப்படுத்த உள்ளதாக அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

சமூக வலைத்தளங்கள் தொடர்பாக ஏற்பட்டுள்ள முரண்பாடுகளை குறைக்கும் நோக்கில் முகநூல் உட்பட சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவோரை பதிவு செய்யும் முறை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்க உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

சமூக வலைத்தளங்கள் ஊடாக ஏற்படும் முரண்பாடுகளை கட்டுப்படுத்த வேண்டும் என்ற நிலைப்பாடு காணப்படுகிறது. இதன் காரணமாகவே முகநூல் உட்பட சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவோரை பதிவு செய்யும் வேலைத்திட்டத்தை தமது அமைச்சின் ஊடாக மேற்கொள்ள உள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

“இணைய வழி வகுப்புகளில் கைபேசிகளை பாவிப்பதன் மூலம் மாணவர்களின் கண் பாதிப்பு , மூளைச் சோர்வு ஏற்படும் அபாயம்” – யாழ்.போதனா வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் எச்சரிக்கை !

“இணைய வழி வகுப்புகளில் கைபேசிகளை பாவிப்பதன் மூலம் மாணவர்களின் கண் பாதிக்கப்படும் அபாயம்”  என யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் சி.யமுனாநந்தா தெரிவித்தார்.

தற்பொழுது கொரொனா அச்ச நில காரணமாக தனியார் கல்வி நிலையங்கள் செயற்படாத நிலையில் இணையவழி மூலம் அதிகளவிலான கல்வி செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுதல் தொடர்பில் கருத்துரைக்கும் போது மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

கொரோனா காலத்திற்கு பின்னர் இளம் பிள்ளைகளின் கல்வியில் பாரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது . குறிப்பாக பாடசாலை கல்வியானது இடையிட்டு நடைபெறுவதும் பாடசாலை கல்வி செயற்பாட்டுக்கு தொடர்ச்சியாக செல்ல முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது இது குழந்தைகளின் கல்வியில் பாதிப்பையும் தாக்கத்தினையும் ஏற்படுத்தும்.

ஆனால் கல்வி நடவடிக்கைகளை கூட்டுவதற்காக ஆசிரிய சமூகமும் கல்விச் சமூகமும் தற்போது இணையவழி மூலம் கல்விச் செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றார்கள் இது ஓரளவுக்கு ஆரோக்கியமானது என்றாலும் நேரடியாக கல்வி கற்பித்தலுக்கும் இணையவழி மூலம் கல்வி கற்பிப்பதற்கும் இடையில் வேறுபாடு உள்ளது.

அதாவது ஒரு ஆசிரியர் நேரடியாக கல்வி கற்பிப்பதிலும் கணினி மூலம் கல்வி கற்பிப்பதற்கும்வித்தியாசம் உண்டு . குறிப்பாக மாணவர்களை அருகில் வைத்து கற்பிக்கும்போது உடல் மொழி மூலமும் சில கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்ளக் கூடியதாக உள்ளது இணையவழி மூலம் ஏற்படுகிற போது அது இடம்பெறாது.

மேலும் கணணி திரைகளின் மூலம் கற்பிக்கப்படுகிற போது ஒரு குறிப்பிட்ட பகுதியினை மாத்திரமே மாணவர்கள் பார்த்துக்கொள்வார்கள் தொடர்ச்சியாக கணனித் திரையை பார்க்கும் போது மூளைச் சோர்வு நிலை ஏற்படுகின்றது . இதனால் அவர்களது கிரகிக்கின்ற தன்மை குறையலாம் இதனால் இணைய வழி வகுப்புகளைநேரடி கல்வியுடன் ஒப்பிடும்போது தரம் குறைந்ததாகவே காணப்படுகின்றது.

அடுத்ததாக தொடர்ச்சியாக இணைய வழிக் கல்வியில் ஈடுபடும் போது அவர்களுடைய கண்பார்வையில் பாதிப்பு ஏற்படலாம் குறித்த ஒரு பகுதியை மாத்திரம் தொடர்ச்சியாக நோக்கும்போது கட்புலன் பாதிப்பு ஏற்படும் . தலையிடி,கண் நோ ஏற்படும்இதனால் மாணவர்கள் சிரத்தையுடன் கல்வியை மேற்கொள்ள முடியாத நிலை காணப்படும் நீண்ட நாட்களுக்கு பிறகு கண் பார்வைக்கும் பாதிப்பை ஏற்படுத்தும்.

குறிப்பாக ஒவ்வொருவருடைய பொருளாதார வசதிகளுக்கு ஏற்ப இணையவழி வகுப்பிற்கு தொலைபேசிகளை பாவிப்பார்கள்.

அதிகளவிலான இணைய வழி வகுப்புகளில் கலந்து கொள்வோர் சிறிய தொலைபேசிகளை பாவிப்பதன் மூலம் அவர்களுடைய கண் பாதிக்கக் கூடிய நிலை காணப்படுகிறது இது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியது அவசியம்.

அத்தோடு இணைய வகுப்புகளின் போது கட்டாயமாக அடிக்கடி இடைவெளி விட்டு கண்களுக்கு ஓய்வு கொடுக்கவேண்டும் தொடர்ச்சியாக சில இணைய வழி வகுப்புகள் நடைபெறுவதை அவதானிக்கக்கூடியதாக உள்ளது. எனினும் இணையவழி வகுப்புகளின் போது இடைவெளி விட்டு கண்களுக்கு ஓய்வு கொடுத்து வகுப்புகளை தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட வேண்டியது முக்கியமான விடயமாகும். இணைய வழி மூல தொடர்புகளை ஏற்படுத்துவதன் மூலம் மனிதனுடன் மனிதன் தொடர்பு கொள்வதற்கான சந்தர்ப்பம் குறைகின்றது.

இது ஒருவித உளதாக்கத்தை ஏற்படுத்தலாம் குறிப்பாக மனச்சோர்வு நிலை ஏற்படக் கூடிய சாத்தியக் கூறுகள் காணப்படுகின்றன இதற்கு நாங்கள் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டிய தேவை உள்ளது.முக கவசம் போடுவது போல் கொரோனாவிற்காக மக்கள் மன கவசத்தையும் மக்கள் கையில் பற்ற வேண்டிய காலமிது எனவும் தெரிவித்தார்.

“கொரோனாவினால் உயிரிழந்த முஸ்லீம்களின் உடல்களை குளிரூட்டப்பட்ட கொள்கலன்களில் வைக்க யோசனை ” – சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம்

“கொரோனாவினால் உயிரிழந்த முஸ்லீம்களின் உடல்களை குளிரூட்டப்பட்ட கொள்கலன்களில் வைப்பது குறித்த யோசனையொன்று முன்வைக்கப்பட்டுள்ளது” என  சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மருத்துவர் அசேல குணவர்த்தன ஆங்கில இணையத்தளமொன்றிற்கு இதனை தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்றிற்குள்ளானவர்களின் உடல்களை நீண்டகாலம் ஏனையவர்களின் உடல்களுடன் பிரேத அறையில் வைத்திருக்க முடியாது என்பதாலேயே இந்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இறுதிசடங்குகள் முடிவடையும் வரை கொரோனாவினால் உயிரிழந்த முஸ்லீம்களின் உடல்களை குளிரூட்டப்பட்ட கொள்கலனில் வைத்திருப்பதற்கான யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஐந்து இடங்களில் இவ்வாறான குளிரூட்டப்பட்ட கொள்கலன்களை பயன்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ள அவர் நீர்கொழும்பு கண்டி மற்றும் கிழக்கு மாகாணம் மற்றும் கொழும்பில் குளிரூட்டப்பட்ட கொள்கலன்களை பயன்படுத்தலாம் என்ற யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

 

“வெறுப்பு வெறுப்பை தணிக்காது என்று புத்தபெருமான் கூறியுள்ளார். ஒரு கன்னத்தில் அரைந்தால் மறு கன்னத்தை திருப்பி காட்டுமாறு இயேசு கிறிஸ்து கூறியுள்ளார்” – குருணாகலில் பிரதமர் மகிந்த !

“வெறுப்பு வெறுப்பை தணிக்காது என்று புத்தபெருமான் கூறியுள்ளார். ஒரு கன்னத்தில் அரைந்தால் மறு கன்னத்தை திருப்பி காட்டுமாறு இயேசு கிறிஸ்து கூறியுள்ளார்” என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நேற்று(19.12.2020) குருநாகல் மறைமாவட்ட புனித பாத்திமா அன்னை தேவாலயத்தில் இடம்பெற்ற நத்தார் தின அரச நிகழ்வில் கலந்து கொண்டு தெரிவித்தார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

“இதற்கு முன்னர் அரச நத்தார் தின நிகழ்வுகள் யாழ்ப்பாணம், கொழும்பு, திருகோணமலை, மன்னார் போன்ற நகரங்களை மையமாகக் கொண்டே இடம்பெற்றது. எனினும், இம்முறை  நத்தார் தின அரச நிகழ்வுகளை குருநாகலில் கொண்டாடுகின்றோம்.

நத்தார் தின அரச நிகழ்வுகளை குருநாகலில் கொண்டாடுவதற்கு அனுமதியளித்தமை தொடர்பில் முதலில் ஆயர் சம்மேளனத்திற்கு மிகுந்த நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன்.

அதேபோன்று என்னை நாடாளுமன்றத்திற்கு தெரிவுசெய்த மாவட்டத்தின் கிறிஸ்தவ மக்களுக்கு இவ்வாறானதொரு வாய்ப்பு கிடைத்தமை குறித்தும் நான் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். கத்தோலிக்க மக்கள் போன்று கிறிஸ்தவ மக்களுடன் இணைந்து புத்தசாசன சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் ஏற்பாட்டில் இதுபோன்ற நத்தார் தின அரச நிகழ்வொன்றை நடத்துவதற்கு கிடைத்தமை குறித்து நான் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன்.

சமாதானத்தின் செய்தியை உலகிற்கு தெரியப்படுத்துவதையே நாம் அனைவரும் செய்கின்றோம். இவ்வாறு நாம் அனைவரும் இணைந்து நத்தார் பண்டிகையை கொண்டாடுவதன் மூலம் நாம் உலகிற்கு முன்னுதாரணமாக விளங்குகிறோம்.

இம்முறை நத்தார் பண்டிகையை கத்தோலிக்க மற்றும் கிறிஸ்தவ மக்களுக்கு வழமைப்போன்று கொண்டாட முடியாது. வேறு நாட்களில் நத்தார் தின பிரார்த்தனைகளின்போது பெருந்தொகையானோர் கலந்து கொள்வர். அதேபோன்று உற்றார் உறவினர்களுடன் ஒற்றுமையாக, நட்பை பரிமாறிக் கொள்ளக் கூடியதாகவிருந்தது.

எனினும், இன்று அவ்வாறு செய்ய முடியாது. இன்று முகக்கவசம் அணிவது காரணமாக அயலவர்களுடன் புன்னகைப்பதற்கேனும் வாய்ப்பின்றியுள்ளது. அந்த வெளி நிகழ்வுகள் இல்லாத போதிலும், எவ்வாறான தடைகள் காணப்படினும், பிரச்சினைகள் இருப்பினும் அயலவர்கள் மீது உங்களது இதயத்தில் உள்ள அன்பில் எவ்வித மாற்றமும் இல்லை என்பதை நான் அறிவேன்.

இவ்வாறான இக்கட்டான சூழ்நிலையின் போதே கத்தோலிக்கர்களாகிய உங்களுக்குள் காணப்படும் பக்தி, அன்பு மற்றும்நம்பிக்கை உணர்வு என்பன இந்நாட்டிற்கு முக்கியமானதாக அமைகின்றது.

இன்று நமக்கு மாத்திரமின்றி உலகிலுள்ள அனைத்து நாடுகளுக்கும் சுகாதார பரிந்துரைகளுக்கு முன்னுரிமை வழங்கியே அனைத்து பணிகளையும் மேற்கொள்ள வேண்டியுள்ளது.

உலக சுகாதார அமைப்பின் அறிவுறுத்தல்கள் மற்றும் பரிந்துரைகளுக்கு அமைய இலங்கை கத்தோலிக்க மக்கள் சுகாதார பரிந்துரைகளுக்கு அமைய செயற்படுவது தொடர்பில் நான் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். கத்தோலிக்க, கிறிஸ்தவ மக்கள் புத்திசாலித்தனம் மிகுந்தவர்கள். தூர நோக்குடையவர்கள்.

தங்களது மதத்தின் சம்பிரதாயங்கள், சடங்குகளுக்கு மேலாக பொது மனித இனம் பற்றி இந்த நெருக்கடியான தருணத்தில் சிந்திக்க கத்தோலிக்க மக்கள் தூண்டப்படுவார்கள் என்று நான் அறிவேன். கத்தோலிக்க மக்கள் முழு உலகிற்கும் கூறும் முக்கியமான நத்தார் செய்தியே இந்த பொது மனிதன் குறித்த உணர்வாகும்.

நமது நாட்டின் கிறிஸ்தவ மக்கள் மிகவும் கடினமான சூழ்நிலையிலும் மனிதத்துவத்தின் மீதான அன்பின் செய்தியை பாதுகாத்தனர். அதாவது 2019 ஏப்ரல் 21ஆம் திகதி, உங்களது பல முக்கியமான தேவாலயங்கள் போன்று கொழும்பின் முன்னணி ஹோட்டல்கள் மூன்றின் மீது நடத்தப்பட்ட தற்கொலை குண்டு தாக்குதல்களில் 250இற்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.500இற்கும் அதிகமானோர் காணமடைந்தனர். உயிரிழந்த மற்றும் காயமடைந்தவர்களில் பெரும்பாலானோர் இயேசு கிறிஸ்துவின் உயிர்ப்பை கொண்டாடுவதற்காக தேவாலயங்களில் கூடியிருந்த பக்தர்களாவர்.

இது ஆசியாவில் மாத்திரமின்றி, சர்வதேச மட்டத்திலும் சிவில் மக்களை இலக்குவைத்து நடத்தப்பட்ட கொடிய பயங்கரவாதத் தாக்குதலாகும். பேராயர் அதி வணக்கத்திற்குரிய கர்தினால் மெல்கம்  ரஞ்சித் ஆண்டகையின் கோரிக்கைக்கு அமைய அனைவரும் அமைதியாக செயற்பட்டு உலகின் பாராட்டை பெற்றோம்.

வெறுப்பு வெறுப்பை தணிக்காது என்று புத்தபெருமான் கூறியுள்ளார். ஒரு கன்னத்தில் அரைந்தால் மறு கன்னத்தை திருப்பி காட்டுமாறு இயேசு கிறிஸ்து தெரிவித்துள்ளார்.

கடந்த உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலின் போது பாதிக்கப்பட்ட அனைத்து மக்களுக்கும் முழுமையாக அரசாங்கத்தினால் நிறைவேற்ற வேண்டிய கடமைகளை நிறைவேற்றுமாறு நான் அறிவுறுத்தினேன். அதேபோன்று தாக்குதலுக்கு இலக்கான தேவாலயங்களின் அபிவிருத்தி நடவடிக்கைகளை துரிதப்படுத்துவதற்கும் நாம் தீர்மானித்துள்ளோம்.

கடந்த வாரம் பேராயர் அதி வணக்கத்திற்குரிய கர்தினால் மெல்கம்  ரஞ்சித் ஆண்டகையுடன் இடம்பெற்ற சந்திப்பின் போதே இத்தீர்மானம் எடுக்கப்பட்டது.

நத்தார் தின அரச நிகழ்வை முன்னிட்டு இப்பிரதேச தேவாலயங்கள் மற்றும் அறநெறி பாடசாலைகளை அபிவிருத்தி செய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்வதாக இச்சந்தர்ப்பத்தில் நான் கூற விரும்புகிறேன். எமக்கு மதச்சார்பற்ற நாடு தேவையில்லை.

அவ்வாறு மதம் வேண்டாம் என்பவர்களுக்கு கடந்த காலத்தில் சிறந்த பதில் கிடைத்தது. சமய ஒழுக்கவிதிகளுக்கு அமைய வாழும் சமூகமொன்றே எமக்கு வேண்டும். சமய விழுமியங்களுக்கு அமைய செயற்பட்டாலேயே அவ்வாறான சமூகமொன்றை உருவாக்க முடியும்.

அதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வதற்கு அரசாங்கம் என்ற வகையில் நாம் தயாராகவிருக்கின்றோம். பொறுப்புள்ள அரசாங்கம் என்ற வகையில் இந்நாட்டு மக்களை தேவாலயத்திற்கு, விகாரைக்கு, ஆலயத்திற்கு மிகுந்த நெருக்கமடைய செய்வதன் ஊடாக மதிப்பு நிறைந்த மக்கள் சமூகமொன்றை உருவாக்குவதே எமது முக்கிய நோக்கம். உங்கள் அனைவருக்கும் இனிய நத்தார் தின நல்வாழ்த்துக்கள்“ எனத் தெரிவித்துள்ளார்.

“எமது விடுதலையை துரிதப்படுத்தி, எமக்கான உடனடி உடல் நல மேம்பாட்டுக்கும் உதவி புரியுங்கள்” – கொழும்பு புதிய மகசின் சிறைச்சாலை தமிழ் அரசியல் கைதிகள் அவசர வேண்டுகோள் !

“எமது விடுதலையை துரிதப்படுத்தி, எமக்கான உடனடி உடல் நல மேம்பாட்டுக்கும் உதவி புரியுங்கள்” என  கொழும்பு புதிய மகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 48 தமிழ் அரசியல் கைதிகள் அவசர வேண்டுகோளை முன்வைத்துள்ளனர்.

கொரோனா வைரஸ் தொற்று உள்ளதாக சுகாதார அதிகாரிகளால் அடையாளப்படுத்தப்பட்டுள்ள நிலையில் அவர்கள் இந்த அவசர கோரிக்கையை ஊடகங்கள் வாயிலாக அரசியல் மற்றும் சமூகத் தலைவர்களிடம் முன்வைத்துள்ளனர்.

இது தொடர்பில் கொழும்பு புதிய மகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 48 தமிழ் அரசியல் கைதிகளும் அனுப்பிவைத்த ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-

“கொழும்பு புதிய மகசின் சிறைச்சாலையில் ஜி.எச். விடுதிகளில் 48 தமிழ் அரசியல் கைதிகள் தடுத்துவைக்கப்பட்டுள்ளோம். கொழும்பு நகரப் பகுதிகளிலும் சிறைச்சாலைகளிலும் அதிகரித்துக் கொண்டிருக்கும் கொரோனாத் தொற்று காரணமாக நாம் தடுத்துவைக்கப்பட்டுள்ள விடுதிகளிலேயே எமக்கான சுயதனிமைப்படுத்தலைக் கடைப்பிடித்து வந்தோம். எனினும், கடந்த இரண்டு வாரங்களாக அனைத்து அரசியல் கைதிகளுக்கும் கடும் காய்ச்சலுடன் உடல் உபாதைகள் ஏற்பட்டுள்ளன.

நேற்று எமது விடுதிகளைச் சேர்ந்த சிலருக்கு பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டது.

ஆகவே, மகசின் சிறையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள அனைத்து தமிழ் அரசியல் கைதிகளுக்கும் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது எனச் சிறைச்சாலையில் பொதுச் சுகாதாரப் பிரிவு கவனப்படுத்தியுள்ளது.

போதிய தொற்று நீக்கல் செயற்திட்டம் மற்றும் ஊட்டச்சத்தான உணவு பராமரிப்பு இன்மைகளுக்கு மத்தியில் நாம் தொடர்ந்து விடுதிகளிலேயே சுயதனிமைப்படுத்தல் முறையை மேற்கொண்டு வருகின்றோம்.

நீண்டகாலம் சிறைத்தடுப்பிலுள்ள எம்மவர்களுள் தொற்றா நோய்களால் பாதிக்கப்பட்டவர்களும் வயதானவர்களும் இருப்பதால் அரசியல் கைதிகள் மத்தியில் அச்ச உணர்வு ஏற்பட்டுள்ளது என்பதனைத் தெரியப்படுத்துகின்றோம்.

இவ்வேளையில் அரசியல் கைதிகளான எமது விடுதலையைத் துரிதப்படுத்துவதுடன், எமது உடனடி உடல் நல மேம்பாட்டுக்கும் உதவி புரியுமாறு சம்பந்தப்பட்டவர்களிடம் கோரி நிற்கின்றோம்” – என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

“விக்கினேஸ்வரனும் கஜேந்திரகுமாரும் பொய்யான, விஷமத்தனமான பிரசாரம் செய்கின்றனர்” – சுமந்திரன் காட்டம் !

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் எதிர்வரும் மார்ச் மாத அமர்வையொட்டி சர்வதேச சமூகத்தை ஐக்கியப்பட்டு அணுகுவதற்காகத் பாராளுமன்ற உறுப்பினரும் சட்டத்தரணியுமான  எம்.ஏ.சுமந்திரன் வரைவு ஒன்றின் உள்ளடக்கம் பற்றி தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவர் சி.வி.விக்னேஸ்வரன் , தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோருக்கு அறிக்கை அனுப்பியிருந்தார். இந்நிலையில் இருவருமே சுமந்திரனின் வரைவு அரசுக்கான கால அவகாசம் வழங்குதாக கூறி அதனை நிராகரிப்பதாக கூறியிருந்தனர்.

இந்நிலையில் “விக்கினேஸ்வரனும் கஜேந்திரகுமாரும் பொய்யான, விஷமத்தனமான பிரசாரம் செய்கின்றனர்” என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் எம்.பி. குற்றம் சுமத்தியுள்ளார்.

கொழும்பில் நேற்று(19.12.2020) நடைபெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுக் கூட்டத்தின் பின்னர் இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

“நான் அவர்களுக்குக் கொடுத்த ஆவணத்தில் இரண்டே இரண்டு விடயங்கள்தான் இருக்கின்றன.

ஒன்று –  இதுவரை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையில் நிறைவேற்றிய தீர்மானங்களால் எங்களுக்குப்  பெரிய நன்மையாக ஏதும் வந்து விடவில்லை. அதனால் இனிமேல் இதையே முன்கொண்டு நடத்துவதில் அர்த்தமில்லை. ஆகையினால் இதிலும் காட்டமான, தீவிரமான நடவடிக்கை அவசியம். அதற்கு உதாரணமாக – முன்மாதிரியாக சிரியாவிலும், மியன்மாரிலும் ஏற்படுத்தப்பட்ட பொறிமுறைகளை காட்டி ஒரு வித்தியாசமான நிலைப்பாட்டுக்கு நாங்கள் போக வேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இரண்டாவது – இந்த விவகாரம் ஒரு சர்வதேச அரங்கில் தொடர்ச்சியாக இருக்க வேண்டும். ஆகவே, ஐ.நா. மனித உரிமைகள் சபையில் ஒரு புதுக் தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும்.

இவை இரண்டும்தான் அதில் உண்டு. அதில் கால நீடிப்பு என்றோ, கால அவகாசம் என்றோ, அதே தீர்மானத்தை மீண்டும் நிறைவேற்றுவது என்றோ எதுவுமே இல்லை.

ஆனால், இவர்கள் இருவரும் நான் அப்படி ஒரு பிரேரணை வரைவைத்தான் முன்வைக்கின்றேன் என்று வேண்டுமென்றே விஷமத்தனமான, பொய்யான பிரசாரம் ஒன்றை முன்வைக்கின்றனர். அது தவறு என குறிப்பிட்டுள்ளார்.

“கொரொனாவுக்குப் ‘பாணி மருந்து’ கண்டு பிடித்துள்ளார் என ஓடித்திரியும் ‘பாணி தம்மிக’ இந்துக் கடவுளான காளியம்மன் பற்றிப் பேசுவதை உடன் நிறுத்த வேண்டும்” – மனோகணேசன் காட்டம் !

“கொரொனாவுக்குப் ‘பாணி மருந்து’ கண்டு பிடித்துள்ளார் என ஓடித்திரியும் ‘பாணி தம்மிக’ இந்துக் கடவுளான காளியம்மன் பற்றிப் பேசுவதை உடன் நிறுத்த வேண்டும்” என தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் தெரிவித்ததாவது:-

“நான் இந்த நாட்டு வைத்தியரின் பாணி மருந்தை இதுவரை குடிக்கவில்லை. இனிமேல் குடிக்கும் எண்ணமும் இல்லை.

எங்கள் வீட்டில் கொரோனா வைரஸ் நோய்த் தொற்று இதுவரை வராமைக்குக் காரணம், எங்கள் வீட்டு ‘சித்த வைத்திய’ பானங்கள்தான். இவை நாம் எப்போதும் பாரம்பரியமாக எங்கள் பூட்டன், பூட்டி காலத்திலிருந்து பின்பற்றி வரும் இயற்கை மருந்து பானங்கள்.

இங்கே எனது பிரச்சினை என்னவென்றால், இந்தப் ‘பாணி தம்மிக’ என்ற நாட்டு வைத்தியர், தனக்குத் துணையாக ‘காளியம்மனை’ அழைத்துள்ளதாகும். இவர் தனக்குக் காளியம்மன் அருள் பாலித்திருக்கின்றார் எனக் கூற, இவரை எதிர்ப்போர் காளியம்மனையும் சேர்த்து விமர்சிக்கின்றார்கள். இது நிறுத்தப்பட வேண்டும். காளியம்மன், பார்வதி தேவியின் ஓர் அவதாரம். பார்வதி, இந்துக்களின் மூத்த தாய்க் கடவுள்” – என்றார்.

“இலங்கை அரசுக்கு எதற்காக காலக்கேடு அளிக்க முன்வந்துள்ளீர்கள் ? ” – சுமந்திரனிடம் சீ.வி.விக்கினேஸ்வரன் கேள்வி !

“சிங்கள பௌத்தர்களின் ஆதிக்கமானது மேலும் வலுவடைந்து இலங்கையின் சிறுபான்மையினர் அனைவரையும் கீழடக்கும் காலம் விரைவில் வரவிருக்கின்றது என்ற பாதிக்கப்பட்ட சமூகத்தினரின் சட்ட ரீதியான ஏக்கத்தைக் கவனத்தில் எடுக்க வேண்டும்’ என நீதியரசர் க.வி.விக்னேஸ்வர் திரு.சுமந்திரன் அவர்களுக்கு கடிதம் ஒன்றிலேயே அவர்  அனுப்பி குறித்தவிடயத்தை அறிவித்துள்ளார்.

நீதியரசர் க.வி.விக்னேஸ்வரனால் திரு.சுமந்திரன் அவர்களுக்கு அனுப்பிய கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது ,

அன்புள்ள சுமந்திரன் அறிவது,

எனது பார்வைக்காக என்னிடம் கையளித்த ஆவணத்திற்கு நன்றி. அது ஐக்கிய நாடுகள் உயர் ஸ்தானிகருக்கும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை அங்கத்தவர்களுக்குமான கடிதத்தின் முதல் வரைவாகும்.

அதன் முதல் ஐந்து பக்கங்களிலும் நீங்கள் குறிப்பிட்டிருப்பவை அனைத்தும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையினர் முற்றிலும் அறிந்த விடயங்களே. அம்முதல் வரைவின் முன்னுரையில் நீங்கள் இருசாராரும் இயற்றிய மனித உரிமை மீறல்கள் பற்றிக் கூறியுள்ளீர்கள். நாங்கள் இவ்விடயத்தில் புறநிலை கூர் நோக்கர்களாக இருக்க வேண்டுமா? அல்லது சுயநிலை முறைப்பாட்டாளர்களாக மாறவேண்டுமா? என்பதில் எனக்கு மயக்கம் இருக்கின்றது.

எது எவ்வாறு இருப்பினும் உங்களால் பரிந்துரைக்கப்பட்ட ஒரேயொரு திடமான செயற்பாடானது இதுவரை காலமும் தோல்வியைத் தழுவிய கூட்டத் தீர்மானம் போன்ற பிறிதொரு கூட்டத் தீர்மானத்தை மீண்டும் கொண்டு வருவதாகும். அதுவும் இலங்கை அரசாங்கம் ஒற்றுமைக் கூட்டத் தீர்மானமானமாக முன்னர் கொண்டுவந்த தீர்மானத்தில் இருந்து பின்வாங்கிய பின்னர் இவ்வாறான ஒரு கருத்தை வெளியிட்டுள்ளீர்கள்.

மீண்டும் காலக்கேடு விதிப்பதால் தற்போதைய நிலை மாறும் என்று எவ்வாறு முடிவுக்கு வந்துள்ளீர்கள்? உண்மையில் மேலும் காலக்கெடு அளித்தால் இன்றைய அரசாங்கமானது தமிழ், முஸ்லீம் சமூகங்களை இனி இல்லை என்று ஆக்கி விடுவார்கள் என்பதை உணர்ந்தீர்களா? அது தான் தற்போது நடந்து கொண்டிருக்கின்றது. நீங்கள் உங்கள் முதல் வரைவில் மிகச் சரியாகப் பின்வருமாறு கூறியுள்ளீர்கள் .

‘தற்போது அவர்கள் குடியியல் பதவிகளுக்கு படையினரைத் தொடர்ந்து நியமித்து வருகின்றார்கள், தமிழ் மக்களின் காணிகளைக் கைப்பற்றி வருகின்றார்கள், தொல்லியல் மேலாண்மை என்ற பெயரில் கிழக்கிலங்கையில் காணிப் பங்கீட்டை நடாத்த பௌத்த மதவாளர்களை நியமித்துள்ளார்கள், பாதிக்கப்பட்ட குடும்பத்தவர்கள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள், பத்திரிகையாளர்கள் போன்றோரைக் கண்காணிக்கவும் பயமுறுத்தவும் நடவடிக்கைகள் எடுத்து வருகின்றார்கள். மேலும் முஸ்லீம் சமூகத்தவரின் மதம் சார்ந்த நல்லடக்கச் சடங்குகளைத் தடைபோட்டுத் தடுத்து வருகின்றார்கள்.

அத்துடன் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் மிக்க செல்வாக்குள்ள அங்கத்தவராக மாறிவரும் சீனாவானது 2020ம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் 9ந் திகதியன்று ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அடங்கிய உலக ஸ்தாபனங்களில் இலங்கைக்கு முழு ஆதரவை வழங்கியும் பாதுகாப்பையும் வழங்கப் போவதாக வெளிப்படையாக அறிவித்துள்ளது’

இவ்வாறெல்லாம் நடக்கின்றன என்று கூறும் நீங்கள் எதற்காக இலங்கைக்கு மேலும் காலக்கேடு அளிக்க முன்வந்துள்ளீர்கள்? “இலங்கை அரசுக்கு எதற்காக காலக்கேடு அளிக்க முன்வந்துள்ளீர்கள் ? ” – சுமந்திரனிடம் சீ.வி.விக்கினேஸ்வரன் கேள்வி !

நீங்களே உங்கள் பரிந்துரையொன்றில் காலக்கேடு அளிப்பதால் ஆவதொன்றில்லை என்ற கருத்தைப் பின்வருமாறு வெளியிட்டுள்ளீர்கள்.

‘தாமதமானது மேலும் நீடித்தால் சிங்கள பௌத்தர்களின் ஆதிக்கமானது மேலும் வலுவடைந்து இலங்கையின் சிறுபான்மையினர் அனைவரையும் கீழடக்கும் காலம் விரைவில் வரவிருக்கின்றது என்ற பாதிக்கப்பட்ட சமூகத்தினரின் சட்ட ரீதியான ஏக்கத்தைக் கவனத்தில் எடுக்க வேண்டும்’ என்று கூறியுள்ளீர்கள்.

இவற்றை எல்லாம் தெரிந்து கொண்டும் மேலும் காலக்கேடு இலங்கைக்கு வழங்க நீங்கள் முன்வருவது எனக்கு மலைப்பை ஏற்படுத்துகின்றது.

உங்கள் பரிந்துரையானது இனவழிப்பு செய்த ஒரு அரசாங்கத்திற்கு முன்னர் அளித்த சலுகைகளை சர்வதேச நாடுகள் மீண்டும் அளிக்க வேண்டும் என்ற தொனிப்படவே அமைந்துள்ளது. அதில் மனவருத்தத்திற்குரியது என்னவென்றால் இந்தக் கோரிக்கையை பாதிக்கப்பட்ட மக்கள் சார்பில் நீங்கள் முன்வைக்க முன்வந்துள்ளீர்கள். உங்கள் ஆவணத்தையும் பரிந்துரைகளையும் எவ்வாறு நாம் ஏற்க முடியும்? அவ்வாவணத்தை நாம் முற்றாக நிராகரிக்கின்றோம்.

ஐங்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவைத் தீர்மானத்தில் இருந்து தள்ளி நின்று அதற்கு எமது பகைமையை வெளிக்காட்டுவது சரியானதா என்ற கேள்வி உங்கள் மனதில் பூதாகாரமாக எழுந்துள்ளதை நான் அவதானிக்கக் கூடியதாக உள்ளது. ஆனால் ஐக்கிய நாடுகள் குற்றவியல் நீதிமன்றத்திற்கோ ஐக்கிய நாடுகள் நீதி மன்றத்திற்கோ இலங்கையைக் கொண்டு செல்ல தமிழர் தரப்பார் இதுவரையில் எந்த நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை. ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவைக் கூட்டுத் தீர்மானத்தை எதிர்க்க வேண்டும் என்றோ பேரவையை பகிஷ்கரியுங்கள் என்றோ நான் கூறவில்லை. நான் கூறுவது என்னவென்றால் பேரவையின் கூட்டுத்தீர்மானத்தை மேலும் பலப்படுத்த மேல் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்பதேயாகும்.

ஆகவே இன்றைய நிலையில் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையினரிடமோ ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையினரிடமோ இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கோ ஐக்கிய நாடுகளினால் விசேடமாக நியமிக்கப்பட்ட சர்வதேச குற்றவியல் தீர்ப்பு ஆயத்திற்கோ பாரப்படுத்துமாறு கோரிக்கை விடுக்க வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையிடம் நாம் கேட்கலாம்.

அதே நேரத்தில் சமாந்திரமாக நாம் இலங்கையை சர்வதேச நீதி மன்றின் முன் கூட்டிச் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். இது ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை முன்பான பொறிமுறைகளுக்கு அப்பாற்பட்ட ஒரு நடைமுறைச் சாத்தியமான செயற்பாடாகும். இவற்றைச் செய்ய முடியுமா முடியாதா? என்று மயங்கி நிற்கக் கூடாது. எமது மக்களின் பிரதிநிதிகள் என்ற முறையில் இவற்றைச் செய்வது எமது கடமையும் கடப்பாடாகவும் அமைகின்றது.

இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திடம் பாரப்படுத்த வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையிடம் கோரிக்கை விடும் அதே நேரம் ஐக்கிய நாடுகள் விசேட ஆய்வாளர் ஒருவரை நியமிக்க வேண்டும் என்றும் அந்தப் பேரவையிடம் கோரிக்கை விடலாம். அதாவது இலங்கையில் நடைபெறும் மனித உரிமை மீறல்கள், காணி அபகரிப்பு போன்றவற்றைக் கண்காணிக்கவும் ஆராயவும் இவ்வாறான ஒரு ஆய்வாளரை நியமிக்கக் கோரலாம். அத்துடன் ஒரு சுயாதீனமான விசாரணைப் பொறிமுறையொன்றையும் தாபித்து பொறுப்புக் கூறலையும் போர்க்குற்ற செயல்ப்பாடுகளையும் ஆராயுமாறு கோரலாம்.

இவற்றை முழுமனதுடன் நடைமுறைப் படுத்த நீங்கள் முன்வர வேண்டும் என்று கோரிக்கை விடுக்கின்றேன். இந்த அடிப்படையில் ஒரு கடிதத்தை வரைந்து தமிழ்க் கட்சிகள் எல்லோரும் சேர்ந்து கையெழுத்திட்டு அதனைப் பாரப்படுத்தலாம். நீங்களும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பும் இவற்றைச் செய்ய ஒத்துழைப்பீர்கள் என்று நம்புகின்றேன்.

நாம் ஒன்று சேர்ந்து இந்த நடவடிக்கைகளை எடுப்போமாக!

எனது கட்சி இதற்காக உங்களுக்கு முழு ஆதரவையும் நல்கும் என்ற நம்பிக்கை எனக்குண்டு. நன்றி.

அன்புடன்,
நாடாளுமன்ற உறுப்பினர்
நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன்

இறைச்சித் தொழிற்சாலை திறக்கப்படுமாயின் முதலாவது விலங்குக்கு பதிலாக எனது கழுத்தை அறுத்துக்கொள்ள முன்வருவேன் ! – முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா காட்டம் !

கட்டுநாயக்க பிரதேசத்தில் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்காக இறைச்சித் தொழிற்சாலை ஒன்றை ஆரம்பிக்க உள்ளதாக அரசாங்கம் அண்மையில் தெரிவித்திருந்தது. இலங்கையில் நிர்மாணிக்கப்படவுள்ள அந்த தொழிற்சாலையானது ஆசியாவின் மிகப் பெரிய இறைச்சித் தொழிற்சாலையாக இருக்கும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் அது தொடர்பாக முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா தனது அதிருப்தியை வெளியிட்டுள்ளார்.

கொழும்பில் நேற்றையதினம் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் தனது எதிர்ப்பினை வெளியிட்டார். அங்கு தொடர்ந்தும் பேசிய அவர்,

புத்த பகவான் வந்து சென்ற இலங்கையில் இப்படியானவற்றை செய்வது தவறு. எனது எதிர்ப்பை மீறி இறைச்சித் தொழிற்சாலை திறக்கப்படுமாயின் முதலாவது விலங்குக்கு பதிலாக எனது கழுத்தை அறுத்துக்கொள்ள முன்வருவேன் என்றார்.

“வவுனியா வடக்கில் மகாவலி அபிவிருத்தி அதிகாரசபையால் கிபிள் ஓயாத்திட்டத்துக்கு நீங்கள் அனுமதி கொடுத்தீர்களா ? ”- ஆளுநரிடம் சார்ள்ஸ்நிர்மலாநாதன் கேள்வி !

“கிபிள்ஓயா” திட்டம் என்ற பெயரில் வவுனியா வடக்கில் 2300 ஏக்கர் காடுகள் அழிக்கப்பட்டு, குடியேற்றம் செய்யப்பட்ட சிங்கள மக்களுக்கு விவசாய காணிகள் வழங்கப்படவுள்ள விடயம் தொடர்பாக வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம், ஆளுநர் எம்.சாள்ஸ் மற்றும் ஒருங்கிணைப்பு குழுவின் தலைவர் கு. திலீபன் ஆகியோரது இணைத்தலைமையில் நேற்று (18.12.2020) மாலை நடைபெற்றது.

இதன்போது கருத்து தெரிவித்த  பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன், “வவுனியா வடக்கில் மகாவலி அபிவிருத்தி அதிகாரசபையால் கிபிள் ஓயாத்திட்டம் என்ற அபிவிருத்தி திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளது. அதற்கு நீங்கள் அனுமதி கொடுத்துள்ளீர்களா ? என்று இணைத்தலைவரான ஆளுநரிடம் கேட்டிருந்தார்.

இதன்போது பதிலளித்த ஆளுநர், இல்லை என்று தெரிவித்தநிலையில் குறித்த திட்டத்திற்கான நிதி இன்னும் ஒதுக்கப்படவில்லை என்று மாவட்டசெயலகத்தின் உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

IMG 5548 1

இதன்போது குறுக்கிட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் குறித்த திட்டத்திற்காக வரவுசெலவுத்திட்டத்தில் 7ஆயிரம் மில்லியன் ரூபாய், நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என குறிப்பிட்டார்.

மேலும் இந்த திட்டத்தின் அறிக்கையில், வவுனியா மாவட்டத்தில் 2500 ஏக்கர் காடுகளை அழித்து விவசாய நிலங்கள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மாவட்ட ஒருங்கிணைப்பு குழு அனுமதி கொடுக்காமல் அதனை செய்யமுடியுமா? எனவே ஒருங்கிணைப்பு குழு அனுமதி அழிக்காமல் இதனைசெய்ய கூடாது என்று மத்திய அரசுக்கு அறிவிக்க வேண்டும் என அவர் கூறினார்.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த வவுனியா வடக்கு பிரதேச சபை தவிசாளர் இ.தணிகாசலம், இது தொடர்பான திட்ட அறிக்கை எமக்கும் வந்தது. நாம் சில ஆட்சேபனைகளை அனுப்பியிருந்தோம். அந்த திட்டத்தின்படி 62 அடி உயரத்திற்கு நீரைதேக்கி, நான்கு கிலோமீற்றர் நீளமான அணைக்கட்டும் அமைக்கப்படவுள்ளது. அதன் அணைக்கட்டு மற்றும் நீரேந்து பகுதி வவுனியா மாவட்டத்திலும் பயனாளர்கள் முல்லைத்தீவு மாவட்டத்தின் சம்பத்நுவர மற்றும் போகஸ்வெவ (சிங்கள குடியேற்றம் செய்த மக்கள்) பகுதிகளில் இருப்பதாகவும் தெரிவித்தார்.